Wednesday, May 19, 2010

எழுத்துச் சீர்மை:- செம்மொழி மாநாட்டில் அறிவிப்பு கிடையாது


தமிழக அரசு தமிழ் எழுத்து மாற்றம் செய்யப் போவதாக 07.01.2010 நாளிட்ட மாலை மலர் செய்தித் தாளில் ஒரு செய்தி வெளியானது.

அந்தச் செய்தி: "சென்னை-7, தமிழ் மொழியை வளப்படுத்தும் வகையில் தமிழ் எழுத்துக்களில் சில சீர்திருத்தங்களை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. எந்தக் குழு அரசுக்கு சில பரிந்துரைகளை செய்துள்ளது."


இந்த செய்தி வெளிவந்து நான்கு மாதங்களுக்கு மேலாகியும் தமிழக அரசு எந்தவித மறுப்பும் வெளியிடாத நிலையில் கட்டாயம் இந்த எழுத்து மாற்றம் நடக்கும் எனக் கருதி உலகம் முழுவதுள்ள தமிழர்கள் இந்த முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

சென்னையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கூட்டம் நடந்தது. அதன் பின்னர், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் சார்பில் ஒரு மாநாடு நடத்தலாம் என கருத்து முன் வைக்கப்பட்டு, அதனை அமைப்புக் குழு விரிவாக விவாதித்து முடிவு செய்தது.


அதனைத் தொடர்ந்து, கடந்த 16.05.2010 அன்று புதுச்சேரியில் தமிழ் எழுத்து மாற்ற எதிர்ப்பு ஒரு நாள் மாநாடு நடத்தப்பட்டது. இம்மாநாட்டில், தமிழ் அறிஞர்கள், கணினி வல்லுநர்கள், தமிழ் இயக்கத்தினர் என அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில், கலந்துக் கொண்ட அனைவரின் அதாரவுடன் 'தமிழ் எழுத்து மாற்றத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்' உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இம்மாநாட்டின் செய்திகளை விரிவாக செய்தித்தாள்கள் வெளியிட்டன. குறிப்பாக தினமணி, தினகரன், இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட நாளிதழ்கள் செய்தி வெளியிட்டன.

இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தருமான ம.இராஜேந்திரன் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு பொருண்மைகளில் அளிக்கப்படவுள்ளன.​ இம்மாநாட்டில் எழுத்துச் சீர்திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று யாரும் தெரிவிக்கவில்லை.​ அறிஞர்கள் கூடி ஆய்வின் பொருள் பற்றி விவாதிக்கும் அரங்காகத் தான் செம்மொழி மாநாடு அமையும்." எனக் கூறியுள்ளார்.

இது புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் உள்ளிட்ட உலகம் முழுவதும் எழுத்து மாற்ற முயற்சிக்கு எதிராக குரல் கொடுத்தவர்களுக்கு கிடத்த வெற்றியாகும்.

இந்த அறிவிப்பை காலத்தே செய்த தமிழக அரசுக்கும், செம்மொழி மாநாட்டு குழுவினர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


தொடர்பான செய்திகள்:-

1.தமிழ் எழுத்து மாற்றம் எதிர்ப்பு மாநாடு: தினகரன் செய்தி
2.தமிழ் எழுத்து மாற்றம் எதிர்ப்பு மாநாடு: தீர்மானங்கள்
3.தமிழ் எழுத்து மாற்றம் குறித்து எந்த அறிவிப்பும் கிடையாது
4.தமிழ் எழுத்து வடிவ மாற்றம்: நம் வீட்டுக்கு நாமே தீ வைப்பதற்குச் சமம்
5.தமிழ் எழுத்து வடிவ மாற்றம்: மீண்டும் புதிய தமிழைப் படிக்க வேண்டும்
6.Scholars Oppose Reformation In Tamil Scripts


பி.கு:- எழுத்துச் சீர்திருத்தத்தைக் கண்டித்து 5.3.2010இல் மலேசியாவில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அக்கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது தொடர்பான செய்திகள் மலேசிய நாளிதழிலும் இணையத்திலும் விரிவாக வெளிவந்தன.

No comments:

Blog Widget by LinkWithin