Saturday, March 20, 2010

SPM, STPM மாணவர்களே PRA U, IPTA, BIASISWA விண்ணப்பித்து விட்டீர்களா?

அன்பார்ந்த எசுபிஎம் (SPM) , எசுதிபிஎம்(STPM) மாணவர்களே,

தேர்வு முடிவுகளைக் கையில் வைத்துக்கொண்டு என்ன செய்யலாம் என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்களா?

இதோ கீழ்க்காணும் சுட்டிகள் (Links) உங்களுக்குப் பயனாக அமையலாம். உங்களின் சிறந்த எதிர்காலத்தை உடனடியாக தேர்வு செய்யுங்கள்.

1.STPM மாணவர்களுக்கான உயர்க்கல்விக் கழக விண்ணப்பம்:-

2.SPM மாணவர்களுக்கான உயர்க்கல்விக் கழக விண்ணப்பம்:-

3.உயர்க்கல்விக் கழக விண்ணப்ங்களுக்கான முக்கிய தேதிகள்:-

4.SPM மாணவர்களுக்கான ஆசிரியர் பயிற்சி விண்ணப்பம்:-

5.கல்வி அமைச்சு - வெளிநாட்டுப் பல்கலைக்கழக் கூட்டுப் பயிற்சித் திட்டம்:-

6.பட்டத்திற்கு முந்தைய விளையாட்டுப் பள்ளி விண்ணப்பம்:-

7.தெலிகோம் மலேசியா கல்விக் கடனுதவி:-

8.பொதுச் சேவைத் துறை கல்விக் கடனுதவி:-

9.சைம் டார்பி நிறுவனக் கல்விக் கடனுதவி:-



10.தேசியப் பொருளகம் வழங்கும் கல்விக் கடனுதவி:-

11.பெட்ரோனாசு வழங்கும் கல்விக் கடனுதவி:-

12.தெனாகா நேசுனால் வழங்கும் கல்விக் கடனுதவி:-

13.சமூகக் கல்லூரிகளுக்கான விண்ணப்பம்:-

14.வேலை வாய்ப்புகள்:-

Thursday, March 18, 2010

தமிழ் எழுத்துச் சீர்மை: தமிழ்மணத்தின் நிலைப்பாடு


தமிழ் மொழியில் உள்ள வரிவடிவங்களில் இகர, ஈகார, உகர, ஊகார வடிவங்களில் சீர்மையை கொண்டு வரப் போவதாக தமிழறிஞர்கள் சிலர் பேசி வருகின்றனர். இவர்கள் மிகவும் சிறுபான்மையினர்; ஆனால், அதிகாரத்தில் உள்ளவர்கள். வரும் சூன் மாதம் கோவையில் நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டைப் பயன்படுத்தி அவர்கள் தங்கள் வேலைத்திட்டங்களைத் தமிழ்ச்சமுதாயத்தின் மேல் திணிக்க முனைகின்றனர்.

இவர்கள் அறிவித்துள்ள சீர்மை தமிழ் எழுத்துகளில் 72 எழுத்துக்களில் மாற்றத்தைக் கொண்டு வரும் என்றும், நான்கு புதிய வரி வடிவங்கள் தமிழுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிகிறது. வா.செ.குழந்தைசாமி வெளியிட்டுள்ள சீர்மைக் கட்டுரைகளில் இருந்து இதனை அறிய முடிகிறது. இது தமிழ்மொழிக்குக் கேடு விளைவிக்கக் கூடியதாகும். பல தமிழ் அறிஞர்கள் இந்த முயற்சிக்கு எதிரான தங்கள் ஆணித்தரமான கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.

இவர்களுடன் தமிழ்மணமும் தன்னை இணைத்துக் கொள்கிறது.

சுமார் 72 எழுத்துக்களுக்கு மாற்றம் என்பது சீர்மையோ, சீர்திருத்தமோ அல்ல. மிகப் பெரிய மாற்றம். குறுகிய கால இடைவெளியில் எக்காலத்திலும் தமிழ் மொழி இவ்வாறு மாற்றப்பட வில்லை. தந்தை பெரியார் ஒரு சில எழுத்துக்களை மட்டுமே அச்சுத் தொழிலுக்கு ஏற்றவாறு மாற்றினார். அதுவும் புதிய வரி வடிவங்கள் எதையும் பெரியார் புகுத்தவில்லை. வழக்கில் இருந்த வரி வடிங்களைக் கொண்டே சில எழுத்துக்களில் சீர்மையை பெரியார் கொண்டு வந்தார். ஆனால் இன்றைய இணையம், கணினி யுகத்தில் இத்தகைய எந்த மாற்றமும் தமிழுக்குத் தேவை இல்லை.

இன்று இணையத்தில் அதிகளவில் பயன்படுத்தப்படும் சில தெற்காசிய மொழிகளில் ஒன்றாக தமிழும் உள்ளது. கணினி பயன்பாட்டிலும் பலப் பிரச்சனைகளை களைந்து தமிழ் பயன்பாடு ஒரு சுமூகமான நிலையை எட்டி உள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் இந்தச் சீர்மை தேவை தானா என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. (முழுதும் படிக்க)

பின்குறிப்பு:-
எழுத்துச் சீர்மை தொடர்பில் தன்னுடைய நிலைப்பாட்டை
வெளிப்படையாகவும் உறுதியாகவும் அறிவித்துள்ள
தமிழ்மணம் திரட்டிக்கு மனமார்ந்த நன்றியும்
மனம்நிறைந்த பாராட்டும் உரித்தாகுக.
-சுப.நற்குணன்

Tuesday, March 16, 2010

தமிழை மீட்பதும் காப்பதும்தான் முதல் வேலை; சீர்மை என்ற பெயரில் சிதைப்பதல்ல: மலேசிய நாளிதழ் செய்தி

செந்தமிழ் அந்தணர், தமிழ்க்கடல் ஐயா.இரா.இளங்குமரனார் மலேசியா, சிங்கை ஆகிய நாடுகளுக்குக் வருகை மேற்கொண்டிருந்தார். பல ஊர்களில் தமிழ் எழுச்சிப் பேருரைகள் நிகழ்த்தி தமிழ் உணர்வைச் செழிக்கச்செய்த்தார். அவ்வகையில், எழுத்துச் சீர்த்திருத்தம் பற்றி ஒரு நிகழ்ச்சியில் ஐயா பேசிய உரைப்பொழிவு மலேசியாவின் முன்னணி நாளிதழ் 'மக்கள் ஓசை'யில் செய்தியாக வெளிவந்துள்ளது. 16-3-2010இல் வெளிவந்த அந்தச் செய்தியின் முழுவடிவம் கீழே தரப்பட்டுள்ளது. - சுப.ந

***************************


பாரிட் புந்தார், மார்சு 16, உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் தமிழ்த்தாயை மீட்பதும் காப்பதும்தான் நமது முதல் வேலை.எழுத்துச் சீர்மை என்ற பெயரில் சிதைப்பதல்ல நமது வேலை என்று மலேசியா வந்துள்ள தமிழகத் தமிழறிஞர் செந்தமிழ் அந்தணர் புலவர் மதுரை இரா.இளங்குமரனார் கூறினார்.

தமிழ் எழுத்துகளைச் சீர்த்திருத்தம் செய்ய வேண்டிய தேவை இல்லை. அப்படி தமிழ் எழுத்துகளைச் சீர்த்திருத்தம் செய்தால் தமிழ்மொழி சிதைந்து சின்னாபின்னப்பட்டுப் போகும் என்று புலவர் பெருமகனார் நினைவுறுத்தினார்.

உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் எனதுத் தாயை மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறேன்.அவளை சோதனை செய்த அந்த மருத்துவர் எனது தாயின் உயிரை மீட்பதில் கவனம் செலுத்தாமல்.என் தாயின் கை வலைந்திருக்கிறது அதை சரி செய்ய வேண்டும் என்கிறார்.

என்தாயின் உயிரை முதலில் மீட்டுத்தாருங்கள்.அவள் கையை சரி செய்வதா காலை சரி செய்வதா என்பது பற்றி பின்னர் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அந்த மருத்துவருக்கு நான் பதிலளிக்கிறேன்.நான் மட்டுமல்ல தாயின் மீது பற்று கொண்ட எந்த மகனும் அதைத்தான் செய்வான்.

அப்படித்தான் இன்று தமிழ்த்தாய் உயிர் மீட்புக்கும் வாழ்வுக்கும் செய்ய வேண்டிய பற்பல பணிகள் அப்படியே செயல் முடங்கிக் கிடக்கும் போது சிலர் தங்களின் தன்னலத்திற்காக எழுத்துச் சீர்மை என்ற பெயரில் தமிழ் எழுத்துக்களை சிதைக்க முற்படுகிறார்கள் என்று புலவர் இளங்குமரனார் எடுத்துரைத்தார்.

இங்கு பேரா மாநில தமிழியல் ஆய்வுக் களம், பாரிட் புந்தார் தமிழ் வாழ்வியல் இயக்க, இணை ஏற்பாட்டில் பாரிட் புந்தார் தமிழியல் நடுவத்தில் நடைபெற்ற “தமிழரின் எழுச்சியும் வீழ்ச்சியும் ” என்ற தலைப்பிலான பொழிவு நிகழ்ச்சியில் செந்தமிழ் அந்தணர் மேற்கண்ட செய்தியை வலியுறுத்தினார்.

தற்போது தமிழ்நாட்டில் சிலர் தமிழ் எழுத்துகளைச் சீர்த்திருத்தம் செய்ய முனைந் திருக்கிறார்கள். அதன்படி இ, ஈ, உ, ஊ ஆகிய நான்கு எழுத்து வரிசைகளில் உள்ள 72 உயிர்மெய் எழுத்துகளை மாற்றி அமைக்க வேலை செய்கிறார்கள்.

இது தமிழுக்கு எழுச்சியூட்டும் செயலல்ல. மாறாக வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் செயலாகும்இந்தச் சீர்த்திருத்தால் தமிழ்மொழி பெரிய மாற்றத்திற்கு உள்ளாகும். நாளடைவில் தமிழ் சிதைந்துபோய் காலத்தால் அழிந்துபோகும் என்று புலவர் இரா.இளங்குமரனார் குறிப்பிட்டார்.

தமிழில் சீர்மை உண்டாகும், தமிழை எளிமையாகவும் விரைவாகவும் கற்கலாம் என்று எழுத்துச் சீர்த்திருத்தம் செய்பவர்கள் கூறுகிறார்கள். ஆனால், அதில் சிறிதுகூட உண்மையில்லை. இப்போது இருக்கும் தமிழ் எழுத்து வடிவமே படிப்பதற்கும் எழுதுவதற்கும் எளிதானது.

கருவிலிருககும் குழந்தைக்கே ஆங்கில வழி பள்ளியில் இடம் கிடைக்க முன்பதிவு செய்யும் அளவிற்கு தமிழ்ப் பெற்றோர்களின் மனநிலையை இன்று உருவாகி இருக்கிறது.தமிழ் வழி கல்வி என்பதும்,தமிழ் கற்றால்தான் வேலை என்பதும் பற்றி தமிழ்ப்பெற்றோர்கள் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை.

அத்தகைய சூழ்நிலையில் தமிழ்த்தாய் குற்றுயிரும் குலை உயிருமாக உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் போது சிலர் சீர்மை என்ற பெயரில் இவ்வாண்டு நடைபெறவுள்ள தமிழ் மாநாடு ஒன்றில் பரிந்துரைக்கப் போகும் இது போன்ற திட்டங்கள் தமிழை அழிக்கவும் சிதைக்கவும் மட்டுமே பயன்படும் என்று புலவர் பெருமகனார் எச்சரித்தார்.

அதுமட்டுமல்லாது, இப்போது நடப்பில் இருக்கும் எழுத்துகள் மிகவும் சிறந்த கட்டமைப்பைக் கொண்டது. வடமிருந்து இடப்பக்கமாக எழுதும் அமைப்பைக் கொண்டிருக்கிறது. ஆனால், சீர்த்திருத்தம் செய்யப்படும் உகர எழுத்து குறியீடுகளை தமிழ் எழுத்து மரபுக்கு மாறாக இடமிருந்து வலமாக எழுத வேண்டிய நிலைமை ஏற்படும். இப்படிப்பட்ட மாற்றங்கள் கண்டிப்பாகத் தமிழைச் சிதைந்த மொழியாக ஆக்கிவிடும்.

வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபினர் கட்டிக்காத்த - தமிழருக்குச் சொந்தமான மரபுகள் பல உண்டு. எழுத்து மரபு அதில் ஒன்று. மரபு கெட்டுப்போனால் தமிழ் மொழியும் தமிழ் இனமும் அடையாளம் இழந்துபோகும். மரபு திரிபின் பிறிது பிறிதாகும் என்று தொல்காப்பியம் கூறுவதை நினைவில் நிறுத்து நம்முடைய மரபுகளை அழியவிடாமல் பாதுகாப்பது நம்முடைய கடமையாகும் என்றவர் வலியுறுத்தினார்.

மேலும் பேசிய அவர் தமிழ் எழுத்துகள் குறித்த வரலாற்றுப் பின்னணிகளையும் தமிழ் எழுத்துகளை எழுதும் முறைகளில் இருக்கும் மனவியல் அணுகுமுறைகளையும் எழுத்துகளை எழுதிக்காட்டி விளக்கம் அளித்தார். தமிழில் எ, ஏ, ஒ, ஓ ஆகிய நான்கு எழுத்துகள் வீரமாமுனிவரால் சீர்த்திருத்தம் செய்யப்பெற்றது. அது மிகவும் சிறிய மாற்றம்தான்.

பிறகு, பகுத்தறிவு பகலவன் பெரியார் சில எழுத்துச் சீர்த்திருத்தங்களைக் கொண்டுவந்தார்.அவையும் ஏற்கனவே கல்வெட்டில் இருந்தவைதான்.பின்னர் ஓலைச்சுவடி வந்த போது பெரியார் பரிந்துரைக்கு முந்திய எழுத்துக்கள் இருந்தன.

அச்சுப்பணிகளையும் தட்டச்சுக்களையும் காரணம் காட்டி பெரியார் மீண்டும் பழைய எழுத்துககளையே முன் மொழிந்தார். அதனைத் தமிழறிஞர்கள் எதிர்த்தனர். இருந்தாலும், பிறகு பதின்மூன்று எழுத்துகளை மட்டும் சீர்த்திருத்தம் செய்தார்கள். இது தமிழ் எழுத்து வடிவங்களை மாற்றி அமைத்தாலும் பெரிய பாதகம் ஏற்பட்டு விடவில்லை.

ஆனால், இப்போது சிலர் மேற்கொண்டுள்ள எழுத்துச் சீர்த்திருத்தம் மிகவும் பாதகமானது. தமிழ் எழுத்துகளின் தனித்தன்மை முற்றிலுமாகச் சீரழிந்து போகும். தமிழின் அடையாளம் அற்றுப்போகும். ஆகவே இந்தப் புதிய எழுத்துச் சீர்த்திருத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாட்டில் இந்தச் சீர்த்திருத்ததைச் செய்ய முயலும் முனைவருக்கு தாம் கைப்பட கடிதம் எழுதியிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்த எழுத்துச் சீர்த்திருத்தம் குறித்து தனி நூல் ஒன்றை எழுதி முடித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

திருக்குறள் வழியில் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட என்பத்தொரு அகவையை அடைந்துள்ள புலவர் ஐயா இளங்குமரனார் வள்ளுவத்தை வாழ்விக்க வந்த தமிழ்ச்சான்றோராக விளங்குபவர். திருச்சிராப்பள்ளிக்கு மேற்கில் காவிரிக்கரையின் தென்புறம் அமைந்துள்ள உள்ள அல்லூர் என்னும் ஊரில் திருவள்ளுவர் தவச்சாலை அமைத்துப், பாவாணர் நூலகம் கண்டு, தவப் பள்ளியில் உறைந்திருப்பவர்.நூற்றுக்கணக்கான நூல்களை தமிழ்கூறும் நல்லுலகிற்குத் தந்திருப்பவர்.

தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்று திருக்குறள் உரைப்பொழிவுகள் வழங்கியும் திருமணங்களைத் தமிழ் வழியில் நடத்தியும் நல்லற மணமக்களை இல்லறப்படுத்தியும் தமிழ் மக்களைத் தமிழ்வழியில் வாழவைத்தும் தாமும் வாழ்வாங்கு வாழ்ந்துவரும் ஒப்பற்ற சான்றாளர் செந்தமிழ் அந்தணர் புலவர் ஐயா மதுரை இரா.இளங்குமரனார்.

இதே நிகழ்ச்சியில் புலவர் இரா.இளங்குமரானார் முன்னிலையில் நிகழ்ச்சி ஏற்பாட்டு அமைப்புக்களான பேரா தமிழியல் ஆய்வுக் களம்,பாரிட் புந்தார் தமிழ் வாழ்வியல் இயக்க பொறுப்பாளர்கள் ஏற்கனவே செய்திருந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் புதிதாக பரிந்துரைக்கப்படவுள்ள தமிழ் எழுத்துச் சீர்திருத்தற்கு கண்டனம் தெரிவித்தனர்.

வந்திருந்த பொது அமைப்புகளின் பொறுப்பாளர்களும் தமிழ்ப் பெருமக்களும் முன்னிலையில் அவை அறிவிக்கப்பட்டு,அனைவரும் ஒன்றிணைந்து இந்த எழுத்துச் சீர்த்திருத்தத்திற்கு எதிராகக் கண்டனம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அதற்கு அடையாளமாக எழுத்துச் சீர்த்திருத்தத்தால் தமிழுக்கு ஏற்படப்போகும் விளைவுகள் தொடர்பாக சுப.சற்குணன் தொகுத்திருந்த இணையத்தில் வெளிவந்துள்ள ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு ஒன்று புலவர் இரா.இளங்குமரனாரிடம் தமிழியல் ஆய்வுக் களத்தின் தலைவர் இர.திருச்செல்வமும் வாழ்வியல் இயக்கத் தலைவர் க.முருகையனும் ஒப்படைத்தனர்.

தொடர்பான செய்திகள்:-

1.எழுத்துச் சீர்மை தேவைற்ற வேலை: புலவர் இரா.இளங்குமரனார்

2. எழுத்துச் சீர்மை: மலேசியத் தமிழர்களின் 4 கோரிக்கை

Sunday, March 14, 2010

திருந்தாப் பிறவியா தி.எச்.ஆர் ராகா?



மலேசியத் தனியார் தமிழ் வானொலி தி.எச்.ஆர் ராகா அண்மையில் அதன் அடையாள இசையையும் அடைமொழியையும் ‘செம்ம ஓட்டு; செம்ம ஈட்டு’ (Semma Hottu Semma Hittu) என்று மாற்றிவிட்டது. இதனால், அவ்வானொலி ஒட்டுமொத்தத் தமிழ் மக்களின் குறிப்பாகத் தமிழ்ப் பற்றாளர்களின் வன்மையான கண்டனத்திற்கு உள்ளானது.

பினாங்குப் பயனீட்டாளர் சங்கம், பொது இயக்கங்கள், தமிழ் அமைப்புகள், இளைஞர்கள் என பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்த வேளையில் காவல்துறையில் புகாரும் செய்யப்பட்டிருந்தது.

இதன் தொடர்பில், ஆகக் கடைசியாக கடந்த 12-3-2010இல் கோலாலம்பூரில் மலேசிய இந்திய இயக்கங்களின் ஒருங்கிணைப்புப் பேரவையின் ஏற்பாட்டில் பல இயக்கங்கள் ஒன்றுகூடி அந்தத் தனியார் வானொலியின் தமிழ் சீரழிப்பு வேலையைக் கண்டிக்கும் வகையில் மாபெரும் கண்டனக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்குப் பேரவையின் தலைவர் இராஜரத்தினம் தலைமையேற்று ராகா வானொலி தமிழ்மொழியைச் சிதைப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

கூட்டத்தில் கடும் கண்டனத்திற்கு உள்ளான சில விடயங்கள்:-

1)அறிவிப்பாளர்கள் அருவருக்கத்தக்க வகையில் பேசுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

2)நேயர்களிடம் இரட்டை பொருள்தரும் வகையில் பேசக்கூடாது.

3)செம்ம ஓட்டு செம்ம ஈட்டு என்ற அடைமொழியை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

4)தமிழைச் சிதைத்தும் சின்னபின்னப்படுத்தியும் வேடிக்கை காட்டும் வேலையைக் கைவிட வேண்டும்.

5)மலேசியத் தமிழர்கள் நல்ல தமிழில் பேசுபவர்கள்; பண்பாக நடப்பவர்கள் என்று ஒரு மரபு இருக்கிறது. ராகா வானொலி இந்த மரபைக் கெடுக்கக் கூடாது.

6)ஆயிரக் கணக்கான நேயர்கள் செவிமடுக்கும் வானொலியில் கொச்சை மொழியில் பேசுவதும் நிகழ்ச்சியை வழிநடத்துவதும் ஏற்புடையதல்ல.

7)பெரியவர், சிறியவர் என்ற பாகுபாடு இல்லாமல் பேசுவதும், இது எப்படி இருக்கு என்ற நிகழ்ச்சி வழி மனங்களைப் புண்படுத்துவதும் கூடாது.

8)”ரிங் அடிச்சா ரிங்கிட்” என்பது போல கலப்பு மொழியில் நிகழ்ச்சி தலைப்புகள் வைக்கப்படுவது மொழியை அழிக்கும் வேலையாகும்.


9)பொழுது போக்குதான் வாழ்க்கை என்பது போலவும், ‘எஞ்சோய்லா’ (Enjoy-lah) என்று கூறி சினிமாதான் இளையோர்களின் வாழ்க்கைமுறை என்பது போலவும் தோற்றத்தை ஏற்படுத்தி மாணவர்களையும் இளையோர்களையும் கெடுக்கும் போக்கைக் கைவிட வேண்டும்.

10)வானொலி நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக, புதுமையாக, சமூக வளர்ச்சிக்கு நல்லதாக இருக்க வேண்டுமே தவிர மொழியை அழிப்பதாக இருக்கக் கூடாது.

எவ்வளவுதான் தனிமனித உரிமைக்கு நாம் இடம் கொடுத்தாலும், சமுதாயத்திற்கு என்று உரிமை இல்லையா. அதனைத்தான் நாம் பொது ஒழுக்கம் என்கிறோம். ஆயிரக்கணக்கான நேயர்களிடம் பேசும் பொழுது அவர்களை மதிக்கும் வண்ணம் பேசுவது இயல்பு அதனைவிட்டு மது பான விடுதியில் (Pub culture) பேசுவது போல் நிகழ்ச்சியை நடத்துவது எவ்வகையில் சரியாகும். இதனைதான் சமூகம் விரும்புகிறது என்றால், அவ்வளவு மோசமான சமூகமா நமது சமூகம்? என்று கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

மேலும், கூட்டத்தில் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.


எத்தனை இயக்கங்கள் கண்டன குரல்களை எழுப்பியும், இவர்கள் கண்டுகொள்வதில்லை. தமிழால் உயர்ந்து தமிழை இழிவுபடுத்தும் போக்கு கண்டிக்கத்தக்கது, அதுமட்டுமன்றி மறுப்பு அறிக்கை வேறு. ஆங்கிலம் பேசுகின்ற நேயர்களை இழுக்கின்றார்களாம்! என்னையா வேடிக்கை இது ? ஆங்கிலம் பேசுகின்ற நேயர்களுக்காக தமிழை கொலை பண்ணலாமா ? ஆங்கில நேயர்களை இழுக்க வேண்டுமானால் ஆங்கிலத்தில் வானொலி நடத்திவிட்டுச் செல்லலாமே! ஏன் தமிழ்மொழியச் சிதைக்க வேண்டும்? எந்த மொழியாக இருந்தாலும் தூய்மையாகப் பேசுவதுதானே முறை!

அறிவுமயமான இந்திய சமூகத்தை உணர்ச்சிமயமான சிந்தனைகளில் மூழ்கடித்து, பொழுது போக்கு என்ற பெயரில் சமூகத்தை சீரழிப்பதை எந்த ஒரு மானமுள்ள மலேசியத் தமிழன் பார்த்துக்கொண்டிருக்க மாட்டான்.

இவ்வளவு பெருமை வாய்ந்த நம் மொழியை அறிந்தும் அறியாதது போல் மொழியை சிதைத்து, பண்பாட்டை கெடுத்து இளைய தலைமுறையினருக்கு தவறுதலாக வழகாட்டும் இவர்களின் போக்கு கண்டிக்கத்தக்கது.

“மொழி என்பது நமது மான ஆடை, அதில் ஓட்டை விழுந்தால் நமக்குதான் அவமானம்.”

இவ்வளவும் நடந்த பிறகு, சமுதாயப் பொறுப்பையும் தமிழ்மொழி நலனையும் கருதிற்கொண்டு தி.எச்.ஆர் ராகா வானொலி என்ன செய்திருக்க வேண்டும்?

தான் தெரிந்தோ தெரியாமலோ செய்துவிட்ட அத்துணை தவறுகளுக்கும் பொறுப்பேற்றுக்கொண்டு வருத்தம் தெரிவிப்பதோடு எல்லாத் தவறுகளையும் படிப்படியாகத் திருத்திக்கொள்வதாகக் கூறியிருக்க வேண்டும்; திருந்தியிருக்க வேண்டும்!

ஆனால் நடந்தது என்ன? செம்ம ஓட்டு; செம்ம ஈட்டு என்ற அடைமொழிக்குத் தற்காலிகமான நிறுத்தம் மட்டும்தான். இதனை அந்த வானொலியின் தலைமை நிருவாக அதிகாரி இரமேசு கூறியுள்ளார்.



திருந்தாப் பிறவியா இந்தத் தி.எச்.ஆர்.ராகா? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

இது பற்றி அவர்கள் கருத்து கணிப்பு செய்கிறார்களாம்! அதன் முடிவுபடிதான் அடுத்த நடவடிக்கை எடுப்பார்களாம்!

இவர்கள் நடத்தவிருக்கும் இந்தக் கருத்துக் கணிப்பு உண்மையாக இருக்குமா? எங்கே? எப்போது? யாரிடம்? இவர்கள் கருத்து கேட்கப் போகிறார்கள்? அவர்களுடைய கருத்துக் கணிப்பு வெளிப்படையானதாக இருக்குமா?

சமுதாய நலனைவிட; தமிழ்மொழி நலனைவிட; இளையோர் நலனைவிட; மாணவர்கள் நலனைவிட இவர்களுக்கு வர்த்தக வளர்ச்சிதான் முக்கியம்! வணிக நலன்தான் முக்கியம்! பணம்தான் முக்கியம்! காசுதான் முக்கியம்! என்றால்...

உண்மையிலேயே.. திருந்தாப் பிறவிதான் தி.எச்.ஆர்.ராகா!!! என்ற முடிவை நாம் கட்டாயம் எடுக்கவேண்டும்: கூடவே அந்த வானொலியை முடக்கிப்போட வேண்டும்.


பி.கு:- ஒரு குறிப்பிட்ட நாளிதழ் தி.எச்.ஆர் ராகாவுக்கு ஊதுகுழலாகச் செயல்படுவதுபோல தெரிகிறது. இதனைப் பற்றி நன்கு ஆராய்ந்த பிறகு அந்த நாளிதழுக்கு ஆப்பு அடிப்பதைப் பற்றி சிந்திப்போம்.

தொடர்பான செய்திகள்:-

1. செம்ம ஓட்டு; செம்ம ஈட்டு! தமிழுக்கு வேட்டு!!

2.செம்ம ஓட்டு; செம்ம ஈட்டு! ராகாவுக்குச் செம்ம பாட்டு!!

Thursday, March 11, 2010

நித்தியானந்தா: காவி உடையில் ஒரு போலி


காவி அணிந்த இளம் துறவி நித்தியானந்தா கடைசியில் தானும் ஒரு போலிதான் என்று நிரூபித்துவிட்டார்!

வாழுங் கலை கற்பித்த இவர் ஓர் உண்மைத் துறவியாக வாழுங் கலையைக் கற்றுக் கொள்ளாமல் உலக இந்துக்களுக்கு மற்றுமோர் அவமானச் சின்னமாக நிலைத்துவிட்டார்.

திரைப்பட நடிகை ஒருத்தியோடு இவர் இருந்த அந்தரங்கக் காட்சிகள் இன்று அகில உலகக் காட்சிகளாகிவிட்டன.

இந்தியாவில் பல பெரிய நகரங்களிலும் மலேசியா, சிங்கப்பூர் உட்பட உலகின் பல நாடுகளில் நித்தியானத்தாவுக்குக் கிளைகள் உள்ளன. (விரிவாக)
  • நன்றி: விடுதலைமலேசியாஇன்று

Monday, March 08, 2010

எழுத்துச் சீர்மை: மலேசியத் தமிழர்களின் 4 கோரிக்கை


தமிழ்க்கடல் புலவர் இரா.இளங்குமரனார் எழுத்துச் சீர்மை குறித்து பேசிய உரைப்பொழிவின் ஒரு பகுதியை முன்னர் பதிவிட்டு இருந்தேன். அதனைப் படிக்க இங்கு சொடுக்கவும். கீழே வருவது அப்பொழிவின் தொடர்ச்சியாகும். –சுப.ந.

***************************

5-3-2010 வெள்ளிக்கிழமை பேரா மாநிலத்தில் உள்ள பாரிட் புந்தார் எனும் ஊரில் புலவர் ஐயாவின் பேருரை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ‘தமிழினத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்’ என்ற தலைப்பில் பேருரை நிகழ்த்திய புலவர் ஐயா மதுரை இரா.இளங்குமரனார், தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தம் தொடர்பாகவும் விரிவாகப் பேசினார். எழுத்துச் சீர்மை பற்றி அவர் பேசியதாவது;


சிலர் ஐ. ஔ ஆகிய இரண்டும் தேவையில்லை. ‘அய்’, அவ்’ என்று எழுதலாம் என்கிறார்கள்.

தமிழில் நெட்டெழுத்து ஏழு என்ற இலக்கணத்திற்கு ‘அய்’, அவ்’ ஆகிய இரண்டும் பொருந்துமா? எனச் சிந்தித்துப் பாருங்கள்.

ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஐ, ஔ ஆகிய ஏழும் ச, ரி, க, ம, ப, த, நி என்பதற்கு ஒத்த ஏழிசை எழுத்துகள். திவாகரன் நிகண்டில் பார்த்தால் இது தெரியும்.

மொழி சம்பந்தப்பட்ட வேலைகளை மொழி அறிஞர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மற்றவர்கள் வந்து அதில் தலையிடுவது முறையல்ல. இதனைக் குறித்து தந்தை பெரியாரே “இது மொழி அறிஞர்கள் செய்யவேண்டிய வேலை” என்று சொல்லியிருக்கிறார்.

மலேசியாவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் பாவாணரே குறிப்பிட்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அதன்படி முப்பது உலக மொழிகளை இலக்கிய இலக்கண மரபுகளோடு கற்றறிந்தவரும், தமிழ் வரலாறு நூலில் 73 மொழிகளை மேற்கோள் காட்டி எழுதியவருமாகிய பேரறிஞர் பாவாணர் எழுத்து வடிவத்தில் எந்தவித மாற்றமும் செய்யக்கூடாது; வடிவ மாற்றம் பெருந்தவறு! பெருந்தவறு! என்று கண்டித்து இருக்கிறார்.

“மாற்றரும் சிறப்பின் மரபு” என்பது தொல்காப்பியம். மரபை நாம் மாற்றக் கூடாது. தென்னை மரத்தை பனை மரமாக மாற்ற நினைக்கக்கூடாது. பனை மரத்தை புன்னை மரமாக மாற்றக்கூடாது. தென்னை தென்னையாக இருக்கட்டும்; பனை பனையாக இருக்கட்டும்; புன்னை புன்னையாக இருக்கட்டும்.

மூவரி அணில் மாற்றரும் சிறப்பு. கோடு வாழ் குரங்கு மாற்றரும் சிறப்பு. மாற்றினால் என்னவாகும். பிறிது பிறிதாகும். மரபுநிலை மயங்கக் கூறக்கூடாது.

எழுத்துக்கு மரபு உண்டு. மொழிக்கு மரபு உண்டு. மரபுநிலை மயங்கல் கூடாது. அவரவர் மனம்போன போக்கில் மாற்றிக்கொள்வது மொழியாக இருக்காது.

ஒரு காலத்தில் எ, ஒ ஆகிய இரண்டின் மேல் புள்ளி வைத்து எழுதினார்கள். ‘க’ மேல் புள்ளி வைத்தால் ‘க்’ ஆகி அரை மாத்திரையாகக் குறைகிறது. அதுபோல, ‘எ’ மேல் புள்ளி வைத்தால் குறிலாக இருந்தது; ‘ஒ’ மேல் புள்ளி வைத்தால் குறிலாக இருந்தது.

இதனை வீரமாமுனிவர் சிறு மாற்றம் செய்கிறார். மேலே இருந்த புள்ளியை நீக்கிவிட்டு, ‘எ’வின் கீழே சிறு கோடு இழுத்து ‘ஏ’ ஆக்குகிறார். ‘ஒ’வின் கீழே சுழித்து ‘ஓ’ ஆக்குகிறார். அது கொஞ்சம் இயல்பாக இருந்ததாலும் அன்றைய அச்சுக்கலை மேலையரிடம் இருந்த கரணியத்தாலும் இந்த மாற்றம் நடப்புக்கு வந்துவிட்டது. இந்த மாற்றமானது தமிழ் எழுத்து வடிவத்தை பெரிதுமாகச் சிதைக்கவில்லை.



ஆனால், இன்று அச்சு போடுவதற்கும், தட்டச்சு செய்வதற்கும், கணினியில் எழுதுவதற்கும் எந்தத் தடையும் இல்லை. இன்று இந்த அத்தனை தொழில்நுட்பத்திலும் தமிழர்கள் வல்லவர்களாக இருக்கிறார்கள். அப்படியிருக்க ஏன் இந்த எழுத்து மாற்றம்?

காலுக்குத் தக்கபடிதான் மிதியடி இருக்க வேண்டுமே ஒழிய, மிதியடிக்குத் தக்க காலை வெட்ட முடியுமா?

இன்று தமிழ்நாட்டில் எழுத்துச் சீர்த்திருத்தம் பற்றி பேசுபவர்களுக்கு நான் கைப்பட கடிதம் எழுதி இருக்கிறேன். இந்தச் சீர்த்திருத்தம் தேவையில்லை என்பதை அவர்களிடம் வலியுறுத்தி இருக்கிறேன்.

அதுமட்டுமல்லாது, எழுத்துச் சீர்த்திருத்தம் சம்பந்தமாக தனி நூல் ஒன்றையும் எழுதி முடித்திருக்கிறேன். விரைவில் அந்த நூல் உங்கள் அனைவருடைய பார்வைக்கும் தருகிறேன். அதில் நிறைய வரலாற்றுச் சான்றுகளோடு எழுத்துச் சீர்மை தேவையில்லை என்பதைக் காட்டியிருக்கிறேன்.

நான் தமிழகம் திரும்பியது இந்தச் சிக்கல் குறித்து அடுத்த நடவடிக்கையை மேற்கொள்ளுவேன். நீங்களும் இங்கிருந்து தக்கனவற்றை முன்னெடுத்துச் செய்ய வேண்டும்.

இவ்வாறு, புலவர் ஐயா தம்முடைய உரைப்பொழிவில் பேசினார்.


தமிழகத்தில் சிலர் இ, ஈ. உ, ஊ வரிசை உயிர்மெய்களைச் சீர்மை செய்வதற்கு மேற்கொண்டிருக்கும் முயற்சியைக் கண்டித்து புலவர் ஐயா முன்னிலையில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை:-

1)தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தத்தை மலேசியத் தமிழர்கள் நாங்கள் அனைவரும் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

2)எழுத்துச் சீர்மை தமிழ்மொழிக்குக் கண்டிப்பாகத் தேவையில்லை என்பதை அறுதியிட்டுத் தெரிவிக்கின்றோம்.

3)எழுத்துச் சீர்மையை முன்னெடுக்கும் குழுவினர் உடனடியாக அதனைக் கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

4)தமிழக அரசு எந்த ஒரு எழுத்துச் சீர்த்திருத்தத்தையும் ஏற்றுக்கொண்டு அரசாணை பிறப்பிக்கக் கூடாது என தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் மு.கருணாநிதி அவர்களைத் தாழ்மையுடன் வேண்டுகிறோம்.

தவிர, எழுத்துச் சீர்மையைக் மறுத்தும் கண்டித்தும் எழுதப்பட்டு இணையக் கட்டுரைகளின் தொகுப்பு ஒன்றினை சுப.நற்குணன் அணியப்படுத்தியிருந்தார். அத்தொகுப்பு புலவர் ஐயாவின் பார்வைக்கும் அடுத்தக் கட்டப் பணிக்கும் பயன்படும் வண்ணம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Saturday, March 06, 2010

எழுத்துச் சீர்மை; தேவையற்ற வேலை: புலவர் இரா.இளங்குமரனார்

தமிழ்ப் பேரறிஞர், செந்தமிழ் அந்தணர், தமிழ்க்கடல் புலவர் ஐயா இரா.இளங்குமரனார் தற்போது மலேசியாவுக்கு வருகை மேற்கொண்டுள்ளார். மலேசியா முழுவதும் பல ஊர்களில் அவருடைய உரைப்பொழிவுகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வரிசையில் 5-3-2010 வெள்ளிக்கிழமை பேரா மாநிலத்தில் உள்ள பாரிட் புந்தார் எனும் ஊரில் புலவர் ஐயாவின் பேருரை நிகழ்ச்சி நடந்தது. பேரா மாநிலத் தமிழியல் ஆய்வுக் களமும், பாரிட் புந்தார் தமிழ் வாழ்வியல் இயக்கமும் கூட்டாக இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ‘தமிழினத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்’ என்ற தலைப்பில் அருமைப் பேருரை நிகழ்த்திய புலவர் ஐயா, தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தம் தொடர்பாகவும் ஆழமான செய்திகளைப் பேசினார். எழுத்துச் சீர்மை பற்றி அவர் பேசியதாவது;

இப்போது தமிழ்நாட்டில் சிலர் எழுத்துச் சீர்த்திருத்தம் செய்யப்போவதாக புறப்பட்டு உள்ளனர். அவர்கள் இ, ஈ, உ, ஊ ஆகிய எழுத்து வரிசைகளில் உள்ள 72 உயிர்மெய் எழுத்துகளில் சீர்மை தேவை என வலியுறுத்தி வருகிறார்கள்.

உண்மையில் சொல்ல வேண்டுமானால், இ, ஈ, உ, ஊ ஆகிய எழுத்து வரிசை மட்டுமல்ல தமிழுக்கு எந்தச் சீர்த்திருத்தமும் தேவையில்லை. தமிழ் எழுத்துகள் மிகவும் செப்பமாக இருக்கின்றன; படிக்கவும் எழுதவும் தட்டச்சவும் கணினியில் பதியவும் எளிமையாக இருக்கின்றன.


“எழுத்தெனப் படுப
அகர முதல னகர இறுவாய்
முப்பஃது என்ப”
என்று தொல்காப்பியம் சுட்டும்போது தமிழில் 247 எழுத்துகள் என சொல்லுவது பேதமைத்தனம்.

தமிழ் எழுத்துகளை இப்படி விரித்துக் காட்டி மருட்டுபவர்கள் ஆங்கில ரோமன் எழுத்துகளை உண்மையில் 26உடன் 4ஐ பெருக்கிக்கொள்ள வேண்டும். ரோமன் எழுத்துகளை 26 என்று சுருக்கிக் காட்டிவிட்டு தமிழ் எழுத்துகளை அதிகமாக்கிக் காட்டுவது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார்.

தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தம் என்பது சிலருடைய மூளைக் கோளாற்றின் வெளிப்பாடு.

மொழியைப் பரப்புவதற்கும் வளர்ப்பதற்கும் என்னென்ன வழிகள் இருக்கின்றனவோ அதனைப் பார்க்க வேண்டும். மொழியை ஒழிக்கும் வேலையைப் பார்க்கக் கூடாது.

குழந்தை கருவில் இருக்கும்போதே தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஆங்கிலவழிப் பள்ளியில் இலட்சங்களைக் கொடுத்து பதிவு செய்கிறார்கள்.

முதல் வகுப்புக்குப் போகும் குழந்தை எல்லாப் பாடங்களையும் தமிழ் படிக்க முடிகிறதா? தமிழ்க் கல்வி நாட்டில் நன்றாக இருக்கிறதா?

ஒரு பள்ளியில் தவறி விழுந்த குழந்தை “அம்மா” என்று கத்திவிட்டதற்காக கன்னத்தில் அறைகிறார்கள்; தலையைப் பிடித்து சுவரில் முட்டுகிறார்கள்; பள்ளியைச் சுற்றி முழங்காலிட்டு நடக்க வைக்கிறார்கள்.

இப்படிப்பட்ட ஒரு நாட்டில் தமிழைக் கற்பதற்குரிய வழிகளைக் காணமாட்டாமல், எழுத்தைச் சீர்த்திருத்தி தமிழை வளர்க்கப் போகிறோம் என்பது நகைப்புக்குரியதாகும்.

இறுதியாக ஒன்றைச் சொல்கிறேன். என்னைப் பெற்ற அம்மா மூச்சுவிட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாள். என் உயிர்; என் உடல்; என் வாழ்வு; என் வளம்; என் நலம்; என் தெய்வம்; என் மொழி எல்லாமே என் அம்மா. மருத்துவரிடம் காட்டுகிறேன். ஐயா என் அம்மாவைக் காப்பாற்றுங்கள் என்கிறேன். அதற்கு அந்த மருத்துவன் சொல்கிறான் “உன் அம்மாவைக் காப்பாற்றுவதற்கு முன் அவருடைய முதுகில் ஒரு எலும்பு வளைத்திருக்கிறது. அதை முதலில் சரி செய்கிறேன் என்றானாம்.

அப்படித்தான் இருக்கிறது தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழ் எழுத்தைச் சீர்த்திருத்தம் செய்கிறோம் என்று செயல்படுவது.

இவ்வாறு, புலவர் ஐயா தமது எழுச்சிமிகு உரையில் பேசினார்.



இதே நிகழ்ச்சியில், தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தத்தை மறுத்தும் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், எழுத்துச் சீர்மை தேவையில்லை என்பதை வலியுறுத்தும் வகையில் இணையத்தில் வெளிவந்த பலருடைய கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு (சுப.நற்குணன் தொகுத்தது) ஒன்றினைத் தமிழியல் ஆய்வுக் களத்தின் தலைவர் இர.திருச்செல்வனார் புலவர் ஐயாவிடம் வழங்கினார்.

புலவர் ஐயாவின் உரை தொடங்குவதற்கு முன்னதாக, ஏற்பாட்டுக்குழுச் செயலர் சுப.நற்குணன் எழுத்துச் சீர்மை தொடர்பான ஒளிக்காட்சித் தொகுப்பினைக் காட்டி விளக்கமளித்தார்.

இந்த அருமை நிகழ்ச்சியை தமிழ் வாழ்வியல் இயக்கத்தின் தலைவர் க.முருகையன் வழிநடத்தினார். எழுத்துச் சீர்மையால் தமிழுக்கு ஏற்படப்போகும் சிதைவுகளையும் விளைவுகளையும் தீர்மானமாக வாசித்துக் காட்டினார்.

மலேசியத் தமிழ்நெறிக் கழகப் பொறுப்பாளர்கள் அருள்முனைவனார், மாரியப்பனார், கு.மு.துரையனார் முதலியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள், மகளிர், மாணவர்கள் எனப் பல தரப்பினரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

பி.கு: எழுத்துச் சீர்மை குறித்த திருத்தமிழ் பதிவுகளைப் படிக்க இங்குச் சொடுக்கவும்

Thursday, March 04, 2010

புலவர் மதுரை இளங்குமரனார் மலேசியச் சுற்றுச்செலவு

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ் அறிஞர் பெருமக்களுள் தமிழ்க்கடல் மதுரை இரா. இளங்குமரனார் குறிப்பிடத் தகுந்தவர்.


தமிழ் இலக்கண இலக்கியங்களில் ஆழ்ந்த பயிற்சியுடைய ஐயா இரா.இளங்குமரனார் பள்ளி ஆசிரியராக விளங்கியவர். பின்னர் நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், உரையாளர் எனப் பல முகங்களைப் பெற்றுத் தமிழுக்கு ஆக்கமான பல பணிகளைச் செய்துள்ளார்.

இவர் எழுதிய நூல்கள் பல நூறாக விரியினும் இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், பாவாணர் வரலாறு, குண்டலகேசி, யாப்பருங்கலம், புறத்திரட்டு, திருக்குறள் தமிழ் மரபுரை, காக்கைபாடினியம், தேவநேயம் உள்ளிட்ட நூல்கள் இவர்தம் தமிழ்ப்பணிக்கு என்றும் நின்று அரண் சேர்க்கும்.

திருக்குறள் வழியில் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட புலவர் ஐயா இளங்குமர னார் வாழும் வள்ளுவராகவே விளங்குபவர். திருச்சிராப்பள்ளிக்கு மேற்கில் காவிரிக்கரையின் தென்புறம் அமைந்துள்ள உள்ள அல்லூர் என்னும் ஊரில் திருவள்ளுவர் தவச்சாலை அமைத்துப், பாவாணர் நூலகம் கண்டு, தவப் பள்ளியில் உறைந்திருப்பவர்.

எஞ்சியநாளெல்லாம் தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்று திருக்குறள் உரைப்பொழிவுகள் வழங்கியும் திருமணங்களைத் தமிழ்வழியில் நடத்தியும் நல்லற மணமக்களை இல்லறப்படுத்தியும் தமிழ் மக்களைத் தமிழ்வழியில் வாழவைத்தும் தாமும் வாழ்வாங்கு வாழ்ந்துவரும் ஒப்பற்ற சான்றாளர் செந்தமிழ் அந்தணர் புலவர் ஐயா மதுரை இரா.இளங்குமரனார்.

புலவர் ஐயா அவர்கள் தற்போது நமது மலேசியாவுக்கு வந்திருக்கிறார். நாடு முழுவதும் சுற்றுச்செலவு மேற்கொண்டு வருகிறார். அடுத்து வரும் இரண்டு வாரக் காலத்திற்கு நாடு முழுவதும் அவருடைய பொழிவுரை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அதன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவ்வந்த ஊர்களில் உள்ள தமிழன்பர் பெருமக்கள் திரளாகச் சென்று நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு புலவர் ஐயா அவர்களின் செறிவான பொழிவுகளைக் கேட்டு பயனடைய வேண்டும்.

1) 1-3-2010 (திங்கள்):- கிள்ளானில் “தமிழின வீழ்ச்சியும் எழுச்சியும்” ஏற்பாடு:- கிள்ளான் தமிழ் நெறிக் கழகம். (தமிழ்த்திரு.மாரியப்பனார் 012-3662286)

2) 3-3-2010 (அறிவன்):- பெட்டாலிங் செயாவில் “நடைமுறை வாழ்க்கைக்கு வள்ளுவம்” ஏற்பாடு:- பெட்டாலிங் செயா த.இ.மணிமன்றம் (தமிழ்த்திரு.சி.மஇளந்தமிழ் 012-3143910)

3) 4-3-2010 (வியாழன்):- தைப்பிங்கில் “கடவுள் வாழ்த்து” ஏற்பாடு:- தமிழியல் ஆய்வுக் களம் (தமிழ்த்திரு.முத்தரசன் 012-5610029)

4) 5-3-2010 (வெள்ளி):- பாரிட் புந்தாரில் “தமிழ் எழுத்துச் சீர்மை தேவையா?” ஏற்பாடு:- தமிழ் வாழ்வியல் இயக்கம் (தமிழ்த்திரு.க.முருகையன் 012-4287965)

5) 6-3-2010 (காரி):- கிள்ளானில் “சீவகாருண்ய ஒழுக்கம்”, ஏற்பாடு:- கிள்ளான் வள்ளலார் மன்றம் (தவத்திரு.கோபாலசாமி அடிகளார்)

6) 7-3-2010 (ஞாயிறு):- கோலாலம்பூர் பத்துமலையில் “மொழித்தூய்மை இனத்தின் காப்பு” காலை மணி 10.00க்கு, ஏற்பாடு:- மலேசியத் தமிழ் நெறிக் கழகம் (தமிழ்த்திரு.இரா.திருமாவளவன் 016-3262479)

7) 7-3-2010 (ஞாயிறு):- கோலாலம்பூர் சோமா அரங்கில், மாலை மணி 7.00க்கு, ஏற்பாடு:- தமிழ்ச்சங்கம் (தமிழ்த்திரு.அன்பழகன் 019-2362321)

8) 8-3-2010 (திங்கள்):- அசுட்ரோ வானவில் தொலைகாட்சி நேர்க்காணல்

9) 11.3.2010 (வியாழன்):- பாகாவ் நெகிரியில் “திருக்குறளும் உயர்தர தமிழரும்” ஏற்பாடு சிரம்பான் இந்தியர் சங்கம் (தமிழ்த்திரு.அருணாசலம் 012-3992574)

10) 12-3-2010 (வெள்ளி):- பந்திங்கில் (மேல் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்)

12) 13-3-2010 (காரி):- சொகூர் பாருவில், ஏற்பாடு:- தமிழ் நெறிக் கழகம் (தமிழ்த்திரு.துரை.இலக்குவன்)

13) 14-3-2010 (ஞாயிறு):- சிங்கை புறப்பாடு

14) 15-3-2010 (திங்கள்):- தமிழகப் புறப்பாடு

குறிப்பு:- மேலே நேரம் குறிப்பிடப்பட்ட நிகழ்ச்சிகளைத் தவிர்த்து மற்றவை மாலை மணி 7.00க்கு நடைபெறும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

தமிழ்க்கடல் ஐயா மதுரை இரா.இளங்குமரனாரின் மலையகப் பயணம் எல்லாவகையிலும் வெற்றிகரமாக அமைந்திடவும் இப்பயணத்தின் வழியாக மலேசியத் தமிழர்கள் புது நம்பிக்கையும் எழுச்சியும் பெறல் வேண்டும்.

புலவர் ஐயா, நிலையான நலத்துடனும் நீடித்த வாழ்நாளுடனும் இன்றுபோல என்றும் வாழ்வாங்கு வாழ்ந்து தமிழுக்கும் தமிழருக்கும் வலுவும் வளமும் உட்டிட எல்லாம் வல்ல இயற்கை செம்பொருளாம் இறைமைத் திருவருள் துணைநிற்க வேண்டுவோமாக!
  • (புலவர் ஐயா அவர்களைப் பற்றிய குறிப்பு முனைவர் மு.இளங்கோவன் வலைப்பதிவிலிருந்து எடுத்தாளப்பட்டது. - நன்றி)

Monday, March 01, 2010

செம்மொழி மாநாட்டுக்கு முன் செய்யத்தக்கன


எதிர்வரும் சூன் திங்களில் தமிழகம், கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கவிருக்கிறது. இம்மாநாட்டின் வழியாக தமிழுக்கு எத்தகைய நன்மைகள் நடக்கும் என்பது தெரியவில்லை. இம்மாநாட்டின் மூலமாகத் தமிழ்மொழிக்கு ஏற்படவுள்ள ஆக்கங்கள் ஒருபுறம் இருக்கட்டும். அதற்கு முன்பாக தமிழுக்கு உருப்படியாகச் செய்ய வேண்டிய பணிகள் பல இருக்கின்றன. மாநாடு நடத்த முண்டியடிப்பவர்கள் இந்த உருப்படிகளை முதலில் செய்ய வேண்டும். உண்மையிலேயே தமிழுக்கு ஆக்கமாகச் எதையேனும் செய்ய விரும்புபவர்கள் உடனடியாக கீழே உள்ள 10 பணிகளை செய்து முடிப்பதே காலத்தால் தமிழுக்குச் செய்யும் அரும்பணியாக அமையும். -சுப.ந


********************************

அடுத்த கொண்டாட்டத்துக்குத் தயாராகிவிட்டது தமிழகம்! கோவை மாநகரில் ஜூன் மாதம் நான்கு நாட்களும் தமிழ் மழை பொழியப்போகிறது. ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு நடத்துவதற்குத்தான் முதல்வர் கருணாநிதி முதலில் திட்டமிட்டார். அது முடியாமல் போனதால், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைக் கொண்டாடி முடிப்பதில் தீவிரமாகிவிட்டார். அரசியல் எல்லைகளைக் கடந்து சிந்திக்கும் தமிழறிஞர்கள் மத்தியில், இதுபோன்ற கொண்டாட்டங்களுக்கு முக்கியத்துவம் கிடைப்பதில்லை.

'தமிழ் வாழ்க வென்பதிலும் தமிழ் வாழாது
தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ் வாழாது
குமிழ்ச் சிரிப்பைப் பெருஞ் சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்டும்
கொக்கரிப்புப் பேச்சாலுந் தமிழ் வாழாதே!
அமிழ்கின்ற நெஞ்செல்லாம்; குருதியெல்லாம்
ஆர்த்தெழும் உள் உணர்வெல்லாம் குளிருமாறே
இமிழ் கடல் சூழ் உலகமெல்லாம் விழாக் கொண்டாடி
ஏற்றமிகச் செய்வதிலும் தமிழ் வாழாதே!'

என்று பாடினார் பாவலரேறு பெருஞ்சித்திரனார். எத்தனையோ நூற்றாண்டுகளைக் கடந்தும் வந்திருக்கிற தமிழ், இன்னும் தொய்வில்லாமல் தொடர வேண்டுமானால், ஆக்கபூர்வமாகச் சில காரியங்களில் தமிழக அரசு கவனம் செலுத்தியாக வேண்டும்.

1. தமிழுக்கு ஆசனம்!

இன்று பள்ளிகளில் தமிழ் முழுமையான பயிற்றுமொழியாக இல்லை. தமிழைப் படிக்காமல் ஒருவன் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்து உயர் கல்லூரிப் படிப்பை முடித்து அரசு வேலையை வாங்கிவிட முடியும். வேறு எந்த மாநிலத்திலும் அவர்களின் மாநில மொழியைப் படிக்காமல் இருக்க முடியாது. ஆனால், தமிழகத்தில்தான் ஆங்கிலம் பாட மொழியாகவும் இரண்டாவது மொழியாக ஹிந்தி, பிரெஞ்சு, தெலுங்கு, மலையாளம் ஆகியவற்றுடன் தமிழும் இருக்கும் நிலை தொடர்கிறது. விரும்பினால் தமிழைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், கட்டாயம் இல்லை என்ற நிலையில், யார் தமிழைச் சீந்துவார்? உயர் கல்வியைத் தமிழில் படிக்கப் புத்தகங்கள் இல்லை என்று மாணவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், போதிய மாணவர்கள் முன்வராதபோது புத்தகம் தயாரித்து என்ன செய்ய என்று கேட்கிறது அரசு. இவர்களது கண்ணாமூச்சியில் தமிழ் மூச்சுத் திணருகிறது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அனைத்துப் பாடப் புத்தகங்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. அவற்றில் பல புத்தகங்களை அடுத்தடுத்து அச்சடிக்கவே இல்லை. அதேபோல் நீதிமன்றத்தில், கோயில்களில் தமிழ் கொலுவிருக்கவில்லை. இப்படி அனைத்து நிலைகளிலும் தமிழ் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது!

2. தெருவில் தமிழ் இல்லை!

'தமிழ் நாட்டுத் தெருவில் தமிழ்தான் இல்லை' என்று கவலைப்பட்டார் பாரதிதாசன். வணிக நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள் எனப் பெரியவை அனைத்தும் ஆங்கிலத்தில் தனது பெயரை அறிவிக்கின்றன. அதைத் தாண்டினால் தேநீர்க் கடைகள் 'ஸ்நாக்ஸ் ஷாப்'களாக மட்டுமே தங்களை அடையாளப்படுத்தி வருகின்றன. அனைத்துக் கடைகளிலும் தமிழில்தான் பெயர்ப் பலகைவைக்க வேண்டும் என்று உத்தரவு இருக்கிறது. ஆனாலும், கடைப்பிடிப்பார் இல்லை. வணிகர் சங்கங்களும் இந்தக் கொள்கையை ஆதரித்த பிறகும் ஆங்கில மணம் குறையவில்லை!

3. தமிழைத் தகுதி ஆக்க வேண்டும்!

தமிழை ஒரு பாடமாக எடுத்துப் படித்தவர்களைத்தான் பத்து, பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்களாக மாநிலத்தில் முதலாவதாகத் தேர்ந்தெடுப்பார்கள். அவர்களுக்கு நிதி உதவி மற்றும் சலுகை தரப்படும். அது போன்ற ஏற்பாடுகள் கல்வியில் வேலைவாய்ப்பில் வழங்கப்பட வேண்டும். எந்தப் பட்டப் படிப்பாக இருந்தாலும், தமிழை ஒரு பாடமாகப் படித்தாக வேண்டும். தமிழ் வழி படித்தவர்களுக்குச் சிறப்பு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். தமிழ் வழி பயிற்றுவிக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு அரசாங்கத்தின் மற்ற சலுகைகள் கிடைப்பதில் முன்னுரிமை வழங்க வேண்டும். பொதுமக்களை ஈர்க்கும்வகையில் தமிழை வலுவாக்க வேண்டும்!

4. முழுமையான வரலாறு என்ன?

தமிழ், தமிழன், தமிழ்நாடு மூன்றுக்கும் முழுமையான அதிகாரப்பூர்வ வரலாறு இன்று வரை இல்லை. தமிழ் வளர்ச்சித் துறை, சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை இணைந்து பல்லாண்டுகளாக தமிழ்நாட்டு வரலாற்றை எழுதி வருகிறார்கள். இதுவரை ஐந்து தொகுதிகள்தான் வந்துள்ளன. இந்த வேகத்தில் போனால், தமிழக வரலாறு வந்து முடிய பல ஆண்டுகள் ஆகும். அதேபோல், தமிழில் உள்ள சொற்கள் அனைத்துக்கும் வேர்ச் சொல் என்ன என்பதைக் கண்டுபிடித்து 'செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி' தொகுக்கும் வேலை கருணாநிதி முதல்வராக இருந்தபோது 1974-ல் தொடங்கப்பட்டது. அதுவும் இன்று வரை முழுதும் வெளிவரவில்லை. தொல்பொருள் ஆய்வுத் துறைக்கு நாகசாமி, நடனகாசிநாதனுக்குப் பிறகு ஆர்வமானவர் அமர்த்தப்படவில்லை. தமிழ் வளர்ச்சித் துறைச் செயலாளர் பதவியில் அவ்வை நடராஜனுக்குப் பிறகு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்தான் அமர்த்தப்பட்டார்கள். அருங்காட்சியகம் 'பிடிக்காதவரை' நியமிக்கும் இடமாக ஆகிவிட்டது. தமிழுக்கு ஆக்கப்பூர்வமான வேலைகள் பார்க்கும் நிறுவனங்களை முறையாக கவனிக்க வெண்டும்!

5. செம்மொழி ஆகி என்ன பயன்?

தமிழுக்குச் செம்மொழித் தகுதி முதல்வர் கருணாநிதியின் முயற்சியால் கிடைத்தது. மத்திய அரசு அதனை மனமுவந்து செய்துகொடுத்தது. தமிழ் வளர்ச்சித் துறை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தொல்பொருள் ஆய்வுத் துறை, அகரமுதலித் திட்ட இயக்ககம், திராவிட மொழிப் பல்கலைக்கழகம், ஆசியவியல் நிறுவனம் போன்றவை செய்யாத எதை இந்த நிறுவனம் செய்ய இருக்கிறது என்று அறிவிக்கப்படவில்லை. கடந்த 20 ஆண்டுகளில் இந்த நிறுவனங்கள் 100 கோடி ரூபாயைச் செலவு செய்துள்ளன. அவர்கள்விட்ட எதை இது செய்யப்போகிறது? கருணாநிதி பாடல் குறுந்தகடும், தொல்காப்பியத்தை பாகவதர்களைவைத்துப் பாடவைப்பதும் இதன் வேலையாக இருந்தால், மக்களுக்கு என்ன பயன்? ஏற்கெனவே, தொல்பொருள் ஆய்வுத் துறை இருக்கும்போது, அதே காரியம் செய்பவர்களுக்கு செம்மொழி நிறுவனம் பணம் ஒதுக்க வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது. இதற்கான விதிமுறைகளை வகுக்கக்கூட மத்திய அரசு தடையாக இருந்துள்ள நிலைமைதான் நடந்துள்ளது!

6. தமிழ்ப் பள்ளிகள்!

ஒவ்வொரு நாடும் தங்களது மொழியை வளர்க்கச் சிறப்புப் பள்ளிகளை நடத்திவருகின்றன. அதுபோன்று தமிழுக்கும் அமைத்தாக வேண்டும்.அனைவரும் தமிழ் படிக்க முடியாதுதான். ஆனால், தமிழ் மொழியின் வளம், சொல்லும் திறம், இலக்கியச் செழுமை, அதில் உள்ள கற்பனை ஆகியவற்றை அனைவரும் அறிந்துகொள்ள வசதியாக, தமிழ்ப் பள்ளிகளை அரசாங்கம் அமைக்க வேண்டும். இதில் ஆர்வமுடைய அனைவரும் சேரலாம். படிக்கலாம். பட்டங்களோ, தேர்வுகளோ இல்லை என்பது மாதிரி திட்டமிடலாம். இது நம்மவர்கள் மட்டுமல்ல, தமிழ் படிக்க வேண்டும் என்று நினைக்கும் மற்ற மொழிக்காரர்களுக்கும் சொல்லித்தர வாய்ப்பாக அமையும். வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் சிலவற்றில் தமிழ் மொழி கற்பிக்கும் வகுப்புகள் நடத்தப் பட்டு வருகின்றன. ஆனால், நாம் அதைச் செய்யவில்லை!

7. அதீத கற்பனை அவசியம் இல்லை!

மத்திய ஆட்சி மொழியாக தமிழை ஆக்க வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் 15 மொழிகளை அட்டவணை மொழிகளாகச் சொல்கிறது. இந்த 15 மொழிகளையும் ஆட்சி மொழிகள் ஆக்க வேண்டும் என்பது பல நாள் கோரிக்கை. 'அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக ஆக்கி விட்டால், அனைத்துக்கும் மூத்த மொழியான தமிழை இந்தியாவின் ஆட்சி மொழி ஆக்க வேண்டும்' என்று பலத்த கைத்தட்டலுக்கு மத்தி யில் சொல்வார்கள். ஆனால், தமிழகத்தில் இருக்கும் மத்திய அரசு அலுவலகங்களிலும் ஹிந்தியும் ஆங்கிலமும் மட்டும்தான் இருக்கிறது. ஏற்கெனவே தமிழ், ஹிந்தி, ஆங்கிலத்தில் இருந்த பெயர்ப் பலகைகளில் தற்போது தமிழ் நீக்கப்பட்டுள்ளது. மாநில எல்லைக்கு உட்பட்ட மத்திய அரசு அலுவலகங்களின் பயன்பாடுகளில் தமிழுக்குத் தரப்பட வேண்டிய இடத்தைப் பெறுவதுதான் முதன்மையானதாக இருக்க வேண்டும்!

8. உலகத்தை ஒன்றாக்கும் மொழி!

பரந்து விரிந்த இந்த பூமிப் பரப்பில் 233 நாடுகளில் தமிழன் வாழ்கிறான். இங்குள்ள 6 கோடிப் பேரைத் தாண்டி, மீதி 4 கோடிப் பேர் இருக்கிறார்கள். இலங்கை, கனடா, அமெரிக்க ஐக்கிய மாநிலம், சிங்கப்பூர், மலேசியா, தென்னாப்பிரிக்கா, சுவிஸ், பிஜி, மியான்மர் ஆகிய நாடுகளில் அதிகம் வசிக்கிறார்கள். இவர்களுக்கும் தாய்த் தமிழகத்துக்கும் அதிகளவு ஒட்டும் இல்லை... உறவும் இல்லை. அங்கும் பல அமைப்புகள் உள்ளன. இங்கும் இருக்கின்றன. இவற்றுக்கு மத்தியில் தொடர்புகள் இல்லை. சென்னையில் இருக்கும் பிரெஞ்ச் இன்ஸ்டிட்யூட், பிரிட்டனுடன் தொடர்புவைத்து இயங்கி வருகிறது. இதுபோன்று அனைத்து நாட்டுத் தமிழர்களையும் இணைக்கும் ஒருங்கிணைப்பு மையம் அமைக்க வேண்டும்!

9. அனைத்து அறிவும் ஒரே இடத்தில்!

100 கோடி செலவில் மிகப் பிரமாண்டமான நூலகம் சென்னை கோட்டூர்புரத்தில் தயாராகி வருகிறது. மிகப் பெரிய முயற்சி. ஆவணக் காப்பகம், கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சென்னை இலக்கிய சங்கம், கன்னிமரா நூலகம் என்று பல்வேறு காலகட்டங்களில் இது போல் ஆரம்பிக்கப்பட்ட அமைப்புகள் சென்னையில் பிரிந்து பிரிந்துகிடக்கின்றன. இவையும் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் பிரமாண்டமானவைதான். அவற்றையும் தனியாகக் கவனிப்பாரற்று ஒதுக்கி விடாமல், இதனுடன் இணைத்தால் உலகளவில் குறிப்பிடத்தக்க நூலகமாக கோட்டூர்புரத்தில் அமைவது பெருமைக்குரியதாகும். தமிழ் மொழி தனது செல்வங்கள் அத்தனையையும் ஒரே இடத்தில் வைத்திருக்கிறது என்ற பெயர் கம்பீரமாக எழும்!

10.கண் கலங்கும் கணினித் தமிழ்!

ஓலைச்சுவடி காலத்து தமிழ் இன்றைய கணினி யுகத்திலும் அதையும் உள்வாங்கி வளர்ந்துகொண்டு இருக் கிறது. ஆனால், அதன் புத்தெழுச்சிக்கும் இருப்புக்கும் இன்னும் செய்ய வேண்டியவை எவ்வளவோ உள்ளன. ஆங்கிலத்தில் சொன்னால் குரலைப் பதிந்துகொண்டு அதை எழுத்தாக மாற்றிக்கொள்ளும் வல்லமை கணிணியில் வந்து விட்டது. கணிணியை வைத்துக்கொண்டு ஆங்கிலத் தில் அடைந்துள்ள எல்லைகளை இன்னும் தமிழ் நெருங்கவில்லை. யூனிகோட் குறியீட்டு முறை தான் அனைத்து உலக மொழிகளுக்குமான பொதுவான குறியீட்டு முறை. ஒவ்வொரு மென் பொருள் தயாரிப்பாளரும் வெவ்வேறு குறியீட்டு முறையைத் தமிழில் பயன்படுத்துவதால் ஒருவர் சேகரித்த தகவல் இன்னொருவரால் படிக்க முடியவில்லை. இந்த அடிப்படையில் தமிழ் மொழிக்கு 313 எழுத்துக் குறியீடுகள் தேவை. ஆனால், யூனிகோட் கன்சார்டியம் 128 இடங்களை தான் தந்துள்ளது. எனவே யூனிகோடில் தமிழுக்கு முழுமையான இடஒதுக்கீடு வழங்க வேண்டும். தமிழில் கீ-போர்டு இன்னும் வரவில்லை. எனவே, கணினியைப் பொறுத்தவரை அடிப்படையில் இருந்து ஆரம்பிக்க வேண்டியுள்ளது.

'தமிழ் தழைக்க இதுபோன்ற ஆக்கப்பூர்வமான வேலைகளைச் செய்துவிட்டு வெற்றி மாநாடாகக் கொண்டாடுவதுதான் சிறப்பானதாக இருக்கும்' என்பது பலதரப்பட்டவர் கருத்து!


  • நன்றி: ஆனந்த விகடன்

Blog Widget by LinkWithin