Friday, July 13, 2012

தமிழ்க்கணினி வல்லுநர் ஆண்டோ பீட்டர் மறைவு

கணினி, இணையம், அச்சுத்துறை சார்ந்த பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் ஆண்டோ பீட்டர். மென்பொருள் தயாரிப்பு, இணையப் பக்கம் வடிவமைப்பில் ஈடுபட்டவர். கணித்தமிழ் வளர்ச்சியின் முன்னோடியும், சி.எஸ்.சி, சாப்டுவியூ நிறுவனத்தின்  நிறுவனரும், கணித்தமிழ்ச்சங்கத்தை நிறுவிப் பணிபுரிந்தவரும், பல கணினி நூல்களின் ஆசிரியருமான மா.ஆண்டோபீட்டர் 12.07.2012 வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் காலமானார். இவரின் மறைவு தமிழ் இணையத்துறைக்குப் பேரிழப்பு.

 தமிழ்க் கணினி குறித்த விழிப்புணர்வைத் தமிழர்களிடையே அதிகப்படுத்தியவர் ஆண்டோ பீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் முதன்முதலாகப் பல்லூடகக் கல்வியை அறிமுகப் படுத்திய இவர் இளைஞர்கள் வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்காக 500க்கும் மேற்பட்ட இலவச கருத்தரங்குகளை நடத்தியுள்ளார்.

கணினி, தமிழ் தொடர்பான பல்வேறு மாநாடுகளில் கலந்து கொண்டிருப்பதுடன் 26 ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார்.

முதல் தமிழ் இணைய இதழ் தொடங்கியவர்

அச்சு வடிவில் வந்து கொண்டிருக்கும் இதழ்களில் இருக்கும் படங்கள், செய்திகள் மற்றும் அனைத்துவிதமான படைப்புகளையும் இணைய தளங்களில் அச்சு இதழ்களைப் போன்று பகுதிகளாகவும், பக்கங்களாகவும் அனைவரும் பார்க்கவும் படிக்கவும் உருவாக்கப்பட்ட இணைய இதழ்களில் முதல் தமிழ் இணைய இதழான "தமிழ் சினிமா" எனும் பெயரில் முதல் தமிழ் இணைய இதழைத் தொடங்கியவர்.  

தமிழ்நாட்டில் இணைய இதழ்கள் குறித்த அறிமுகமில்லாத நிலையில், 31-01-1997 இல் தொடங்கப்பட்ட தமிழ் சினிமா இதழுக்கு அச்சிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் அதிக அளவு விளம்பரம் செய்யப்பட்டது. தமிழ் இணைய இதழ்களில் முதன் முதலாக அதிக அளவில் விளம்பரம் செய்யப்பட்டு தொடங்கப்பட்ட இதழ் தமிழ் சினிமா என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கணினித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் தமிழ் மரபு அறக் கட்டளையின் செயலாளராகவும் இருந்துவந்த இவர் இந்திய அரசு, தமிழ்நாடு அரசு அமைத்துள்ள சில குழுக்களில் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

பெற்ற விருதுகளும் பாராட்டுகளும்
 
‘தமிழும் கணிப்பொறியும்’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு - 2004. நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் சிறந்த எழுத்தாளருக்கான விருது 2007.

ஸ்ரீராம் நிறுவனத்தின் ‘பாரதி இலக்கியச் செல்வர் விருது’, தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் ‘பெரியார் விருது’.

குடும்பம்

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் 26.04.1967 இல் பிறந்த இவர் பெற்றோர் : மார்சீலீன் பர்னாந்து, ராசாத்தி பர்னாந்து. வாழ்க்கைத் துணைவி : ஸ்டெல்லா. பிள்ளைகள் : அமுதன் (மகன்), அமுதினி (மகள்).

அரும்பெறல் தமிழ்க் கணிஞராக நற்பணிகள் ஆற்றி இன்று நம்மைவிட்டு மீளாத்துயிலில் ஆழ்ந்துவிட்ட மா.ஆண்டோபீட்டர் அவர்களின் ஆதன் அமைதிபெற இறைமைத் திருவருளை வேண்டுவோம்.

மலேசியத் தமிழ்க் கணினி ஆர்வலர்கள் சார்பில் அன்னாரின் அன்புக் குடும்பத்தாருக்கு ஆழந்த இரங்களை தெரிவிக்க்கின்றோம்.


@சுப.நற்குணன், திருத்தமிழ்.



Blog Widget by LinkWithin