Saturday, December 27, 2008

திருவள்ளுவராண்டு 2040 தமிழ் நாள்காட்டி


எதிர்வரும் தைத்திங்கள் முதலாம் நாள் (ஆங்கிலம் 14-1-2009) திருவள்ளுவராண்டு 2040 பிறக்கவுள்ளது. ஆங்கிலப் புத்தாண்டை முன்படுத்தி நாள்காட்டிகள் வெளியிடப்படுகின்ற மரபைப் போல, தமிழருகே உரிய தமிழ்ப் புத்தாண்டை முன்னிறுத்தி தமிழ் நாள்காட்டி வெளிவந்துள்ளது. இந்தத் தமிழ் நாள்காட்டி மூன்றாவது ஆண்டாக மலேசியாவில் வெளிவருகிறது.

ஏற்கனவே, 2007, 2008 ஆகிய இரண்டு ஆண்டுகளில் வெளிவந்து தமிழர்களின் பாராட்டுகளையும் மக்கள் தொலைக்காட்சியின் வாழ்த்தையும் பெற்ற இந்த நாள்காட்டியைத் தமிழியல் ஆய்வுக் களம் பெருமையோடு வெளியிட்டுள்ளது. மலேசியத் தமிழறிஞர் இர.திருச்செல்வம் இந்த நாள்காட்டியை கட்டமைப்போடும் நேர்த்தியோடும் வடிவமைத்துள்ளார்.

தமிழ் நாள்காட்டி வரலாற்றில் தனிப்பெரும் சிறப்பாக இதுகாறும் கண்டிராத மாபெரும் முயற்சியாக, இந்த நாள்காட்டி முழுமையாகத் தமிழிலேயே வெளிவந்துள்ளது. தமிழ்க்கூறு நல்லுலகம் முதன்முறையாகக் கண்டிருக்கும் தனித்தமிழ் நாள்காட்டியென இதனைத் துணிந்து குறிப்பிடலாம்.

நாள்காட்டியின் உள்ளடக்கங்கள்

1)தேதியைக் குறிக்கும் எண்கள் தமிழ் எண்களாக உள்ளன. ஆங்கில எண்களுக்கு முதலாக சொல்லப்படும் அரபு எண்களுக்கே மூலமான தமிழ் எண்களை மீட்டெடுக்கும் உயரிய நோக்கத்தோடு இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. தமிழ் எண்களை அறியாதவர்களுக்கு உதவியாக (விவேகானந்தா நாள்காட்டி தமிழ் எண் அமைப்பில்) ஆங்கில எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

2)திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்றி மாதங்கள், கிழமைகள், நாட்கள் என அனைத்தும் தமிழ்ப்பெயர்களோடு அமைந்துள்ளன. மேலும், ஓரை(இராசி), நாள்மீன்(நட்சத்திரம்), பிறைநாள்(திதி) முதலானவையும் தமிழில் குறிக்கப்பட்டுள்ளன.

3)இதுவரையில் வந்துள்ள எந்தவொரு தமிழ் நாள்காட்டியிலும் இல்லாத அளவுக்கு 50க்கும் மேற்பட்ட தமிழ்ச் சான்றோர்கள், அறிஞர்கள், தலைவர்கள் ஆகியோரின் பிறந்த நாள், நினைவு நாள்களோடு தமிழ் அருளாளர்களின் குருபூசை நாட்களும் இந்த நாள்காட்டியில் குறிக்கப்பட்டுள்ளன.

4)மலேசியா, தமிழகம், தமிழீழம் உள்ளிட்ட 30 தமிழ்ப் பெரியோர்கள் - சான்றோர்கள் - தலைவர்களின் உருவப்படங்கள் நாள்காட்டியில் இடம்பெற்றுள்ளன.

5)தமிழர்களின் வரலாற்றில் மறைக்கப்பட்டு; மறக்கப்பட்டுவிட்ட வானியல்(சோதிடக்) கலையை இந்த நாள்காட்டி மீண்டும் வெளிப்படுத்தி காட்டியுள்ளது.


6)குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதற்கான எழுத்து அட்டவணை இந்த நாள்காட்டியில் வழங்கப்பட்டுள்ளது. கிரந்த எழுத்துகள் அறவே கலவாமல் முழுமையாகத் தமிழ் எழுத்துகளையே கொண்டிருக்கும் தமிழ் முன்னோர்கள் கண்ட பெயர் எழுத்து அட்டவணை இதுவாகும்.

7)ஐந்திரக் குறிப்பு, நாள்காட்டிப் பயன்படுத்தும் முறை, பிறைநாள்(திதி), ஓரை(இராசி) பற்றிய விளக்கங்கள் ஆகியவை இரண்டு பக்கங்களில் நாள்காட்டியின் பின்னிணைப்பாக இடம்பெற்றுள்ளன.


8)ஒவ்வொரு ஓரை(இராசி) பற்றிய படத்தோடு சமற்கிருதப் பெயர்களுக்கான தமிழ் வேர்ச்சொல் விளக்கமும் மிகச் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்வழி, சமற்கிருதப் பெயர்களுக்குத் தமிழே மூலமாக இருப்பதை அறிய முடிகிறது.

9)தமிழின வாழ்வியல் மூலவர்களான வள்ளுவர் வள்ளலார் ஆகிய இருவரின் உருவப்படத்தை முகப்பில் தாங்கி, முழு வண்ணத்தில் தரமாகவும் கவரும் வகையிலும் இந்நாள்காட்டி அமைந்திருக்கிறது.

10)கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளியிடப்பட்ட தமிழ் நாள்காட்டிக்குத் தமிழர்கள் வழங்கிய மாபெரும் ஆதரவினைக் கருத்திற்கொண்டும், இவ்வாண்டில் மேலும் பல்லாயிரம் தமிழர்கள் பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்திலும் ஒரு நாள்காட்டி ஐந்து மலேசிய வெள்ளி (RM5.00) விலையில் மட்டுமே விற்கப்படுகிறது.

தமிழை முன்னெடுக்கும் தமிழ் நாள்காட்டி

நாள்காட்டிகளில் வழக்கமாக இடம்பெறும் அனைத்து விவரங்களும் இந்தத் தமிழ் நாள்காட்டியிலும் இடம்பெற்றுள்ளன. மலேசியப் பொது விடுமுறைகள், பள்ளி விடுமுறைகள், சிறப்பு நாள்கள் என மலேசிய சூழலுக்கு ஏற்ப அமைந்துள்ளன. தமிழ்ப் புத்தாண்டாம் தை முதல் நாளில் தொடங்குகிற இந்த நாள்காட்டியில் ஆங்கில நாள்காட்டியும் உள்ளடங்கியுள்ளது.

உள்ளத்தில் தமிழ் உணர்வும் ஊக்கமும் கொண்டு தமிழ்நலத்திற்காக முன்னின்று செயலாற்றும் தமிழ் அன்பர்களும் ஆர்வலர்களும் இந்த நாள்காட்டியை வாங்கி ஆதரவு நல்குவதோடு பரப்பும் முயற்சியிலும் துணைநிற்கலாம். எந்த ஒரு வணிக நோக்கமும் கிஞ்சிற்றும் இல்லாமல் முழுக்க முழுக்க தமிழ் வளர்ச்சியை மட்டுமே இலக்காகக் கொண்டு வெளிடப்படும் இந்த நாள்காட்டி தமிழ் மக்களிடையே சென்று சேரவேண்டும்.

இந்த நாள்காட்டியை வாங்கும் ஒவ்வொரு தமிழன்பரும் தமிழ் மொழி வளர்ச்சிக்கு உதவுகின்றீர்கள்; தமிழ் எண்களை மீட்டு எடுக்கின்றீர்கள்; தமிழ்ச் சான்றோர், பெரியோர், தலைவர்களைப் போற்றுகின்றீர்கள்; தமிழ்ப் பண்பாட்டை பேணுகின்றீர்கள்; தமிழர் கண்ட வானியல் கலையை மதிக்கின்றீர்கள்; தமிழரின் இயற்கை அறிவாண்மையைப் போற்றுகின்றீர்கள்.

மேல் விளக்கத்திற்கும் தொடர்புக்கும்:-
தமிழியல் ஆய்வுக் களம் – Persatuan Pengajian Kesusasteraan Tamil
No.17, Lorong Merbah 2, Taman Merbah,
14300 Nibong Tebal, SPS, Pulau Pinang. Malaysia.

கைப்பேசி:- ம.தமிழ்ச்செல்வன் (6013-4392016) / சுப.நற்குணன் (6012-4643401)
மின்னஞ்சல்:- suba.nargunan@gmail.com
  • இவற்றையும் காண்க:-

Thursday, December 18, 2008

அறிவியல் கணிதம்:- ஏழு தெரிவுகளில் எது முடிவு?


அறிவியல், கணிதம் ஆகிய இரண்டு பாடங்களின் கற்றல் கற்பித்தலை நடத்துவதற்கு ஏழு அணுகுமுறைகள் அடையாளங் காணப்பட்டுள்ளன.

[பட விளக்கம்:‍- அறிவியல் கணிதப் பாட வட்டமேசை மாநாட்டில் துணை கல்வி அமைச்சர் மாண்புமிகு டத்தோ வீ கா சியோங், தலைமை கல்வி இயக்குநர் டத்தோ அலிமுடின்.]


மலேசியத் தொடக்கப் பள்ளிகளில் அறிவியல் - கணிதப் பாடமொழிச் சிக்கல் நாட்டு மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது. கடந்த 2003ஆம் ஆண்டுத் தொடங்கி அறிவியல் – கணிதப் பாடக் கற்றல் கற்பித்தல் ஆங்கிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதனை மீண்டும் தாய்மொழிக்கே மாற்றவேண்டும் என்ற குரல்களும் கோரிக்கைகளும் தற்போது உரக்க ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

இந்தச் சிக்கலுக்குச் சரியான தீர்வினைக் காணும் பொருட்டு, மலேசியக் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் கடந்த 16.12.2008ஆம் நாள் வட்டமேசை மாநாடு நடைபெற்றது. இவ்வகை கலந்தாய்வுக் கூட்டம் ஏற்கனவே நான்கு முறைகள் நடைபெற்று, இப்போது இறுதிக்கட்டக் கூட்டமாக இது அமைந்துள்ளது.

இந்தக் கூட்டத்தில் துணை கல்வி அமைச்சர், தலைமைக் கல்வி இயக்குநர், கல்வித்துறை உயர் அதிகாரிகள், உள்நாட்டு வெளிநாட்டு கல்வியியல் ஆய்வாளர்கள், தேசியப் பெற்றோர் ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்று நாடே மிகவும் எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்தது. ஆனால், இந்த வட்டமேசை மாநாட்டில் இறுதிமுடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இருந்தாலும், அறிவியல் – கணிதப் பாடக் கற்றல் கற்பித்தல் தொடர்பில் 7 அணுகுமுறைகள் அல்லது தெரிவுகள் இந்தக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளன.

அந்த 7 தெரிவுகள் பின்வருமாறு:-

தெரிவு 1:- தற்போது இருக்கும் *PPSMI எனப்படும் அணுகுமுறையை நிலைநிறுத்துதல். (*PPSMI: Pengajaran dan Pembelajaran Sains dan Matematik dalam Bahasa Inggeris – ஆங்கிலமொழியில் அறிவியல் கணிதப் பாடக் கற்றல் கற்பித்தல்)

தெரிவு 2:- அறிவியல் கணிதப் பாடங்களைத் தொடக்கப் பள்ளிகளில் மலாய் அல்லது தாய்மொழியில் கற்பித்தல்; இடைநிலைப்பள்ளிகளில் ஆங்கிலத்தில் கற்பிக்கும் (PPSMI) திட்டத்தைத் தொடருதல்.

தெரிவு 3:- நான்காம் ஆண்டு (4ஆம் வகுப்பு) முதற்கொண்டு இடைநிலைப் பள்ளி வரையில் அறிவியல் கணிதப் பாடங்களை முழுமையாக ஆங்கிலத்தில் கற்பித்தல்.

தெரிவு 4:- தொடக்கப் பள்ளிகளிலும் இடைநிலைப் பள்ளிகளிலும் முழுமையாக மலாய் அல்லது தாய்மொழியில் பயிற்றுவித்தல்.

தெரிவு 5:- அறிவியல் கணிதப் பாடங்களை எந்த மொழியில் பயிற்றுவிப்பது என்பதை அந்தந்தப் பள்ளிகளே முடிவு செய்தல்.

தெரிவு 6:- முதலாம் ஆண்டுமுதல் மூன்றாம் ஆண்டு வரை மலாய் அல்லது தாய்மொழியில் கற்பித்தல்; நான்காம் ஆண்டுமுதல் ஆறாம் ஆண்டு வரை இருமொழிகளில் (ஆங்கிலம் - தாய்மொழி) கற்பித்தல்; இடைநிலைப் பள்ளிகளில் முழுமையாக ஆங்கிலத்தில் கற்பித்தல்.

தெரிவு 7:- முதலாம் ஆண்டுமுதல் மூன்றாம் ஆண்டு வரை அறிவியல் பாடத்தை தவிர்த்துவிட்டு, மற்றுள்ள பாடங்களின் வாயிலாக அறிவியலை இணைத்துக் கற்பித்தல்.

ஏழு தெரிவுகளில் எது முடிவு?

இந்த 7 தெரிவுகள் அல்லது அணுகுமுறைகள் மலேசியக் கல்வி அமைச்சர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ இசாமுடின் துன் உசேன் வழியாக அமைச்சரவைக்குக் கொண்டுசெல்லப்பட உள்ளன. அதன்பிறகு, அறிவியல் கணிதப் பற்றிய இறுதி முடிவு செய்யப்படும். அதுவரையில், தற்போது நடப்பில் இருக்கும் திட்டம் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப்பள்ளிகளின் நிலைப்பாடு என்ன?

இதற்கிடையில், தமிழ்ப்பள்ளிகளைப் பொறுத்தவரையில் மேற்கண்ட 7 தெரிவுகளில் எது சிறப்பாக இருக்கும் என்பதை ஆழமாக ஆராய்ந்து பார்க்கவேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம்.

தற்போது, நாளிதழ்களிலும் மற்ற ஊடகங்களிலும் வருகின்ற செய்திகளின் அடிப்படையில், 'தெரிவு 2' அல்லது 'தெரிவு 6' பெரும்பான்மைத் தமிழர்களின் முதன்மைத் தேர்வாக அமையக்கூடும் என்பதைக் கணிக்க முடிகிறது.

காரணம், இவ்விரு தெரிவுகள் மட்டுமே தமிழ்ப்பள்ளி – தமிழ்க்கல்வி ஆகியவற்றுக்கு முழுமையான பாதுகாப்பையும் உறுதிபாட்டையும் வழங்குவதாக அமைந்திருக்கின்றன எனலாம்.

எது எப்படி இருப்பினும், மாணவர்களின் கல்வி முன்னேற்றம் என்ற ஒன்றை மட்டும் முன்படுத்திச் சிந்திக்காமல், தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம், தமிழ்க்கல்வியின் வளர்ச்சி, தமிழ்மொழியின் வாழ்வு, சமுதாய நலன், பொருளியல் மேம்பாடு, வேலை வாய்ப்பு, முதலான பல்வேறு கோணங்களிலும் ஆழ்ந்து சிந்தித்து, நீண்டகால நன்மையை அளிக்கக்கூடிய வகையில் முடிவெடுப்பதே சாலச் சிறந்தது.

பி.கு:‍‍ இந்தச் செய்தியை மலேசியா இன்று வலைமனையில் காண்க.

Friday, December 12, 2008

தாய்மொழியில் படித்தால் மன இறுக்கம் குறையும்

"தாய்மொழியில் தொடக்கக் கல்வியைப் படித்தால் குழந்தைகளின் மன இறுக்கம் குறையும்" என்று இந்தியாவின் சந்திராயன் விண்கலத் திட்டத்தின் இயக்குநர் அறிவியலாளர் ம.அண்ணாதுரை கூறியுள்ளார்.


நெய்வேலி இந்திய பொறியாளர் கழகம், பொறியாளர் அறிவியலாளர் கழகம் மற்றும் கோவை அரசு தொழிற் நுட்ப கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் இந்திய இளைஞர்களுக்கான சந்திராயன்-1 என்ற சிறப்பு கலந்தாய்வு நிகழ்ச்சி நெய்வேலியில் நடந்தது.

இதில் சந்திராயன் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு பேசியதாவது:-

இந்தியாவின் சாதனையை உலகமே திரும்பி பார்க்கிறது. நமது நாடு 2020ல் வல்லரசு ஆகும் என அணு விஞ்ஞானி அப்துல் கலாம் கூறியுள்ளார். அவரது ஆசை அதற்கு முன்பே நிறைவேறும் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் சந்திராயன்-1.

நிலவுக்கு சென்ற எந்த நாடும் முதல் முயற்சியில் வெற்றி பெற்றது இல்லை ஆனால் இந்தியா தான் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றது.

நாம் விழித்து கொண்டதால் ஏற்பட்ட விளைவுதான் அது. தற்போது நமது இளைஞர்களுக்கு அடிப்படை கட்டமைப்பு பலமாக உள்ளது. அதனை பயன்படுத்திக் கொண்டு நாட்டையும் தங்களையும் உயர்த்தி கொள்ள வேண்டும்.

வேலைக்காக அமெரிக்கா செல்லும் நிலை மாறி சுற்றுலா செல்ல மட்டுமே அமெரிக்கா என்ற நிலைவரும். சந்திராயனின் வெற்றி முடிவல்ல துவக்கம் தான்.

பெட்ரோல் தங்கம் போன்றவை மட்டும் ஒரு நாட்டின் செல்வம் அல்ல. மனிதவளம் தான் நாட்டிற்கு மிகப் பெரிய செல்வம். நமக்கு அந்த செல்வம் அதிகமாக உள்ளது. நமது மாணவர்களும் இளைஞர்களும் அதிகமாக சாதிக்கும் திறன் கொண்டவர்கள்.

குழந்தைகள் தான் நம்பிக்கை நட்சத்திரங்கள் ஆவார்கள் அவர்களின் விருப்பப்படி விரும்பும் துறையில் படிக்க வையுங்கள். எந்த துறையை தேர்வு செய்தாலும் அதில் முதல் இடத்தை பெற வேண்டும். எல்லோரும் எல்லா துறைகளிலும் முதல் இடத்தை பிடித்தால் நாடு எளிதில் முன்னேறிவிடும்.

இந்தியாவை கொலம்பஸ் தேடிய போது கிடைத்தது தான் அமெரிக்கா, பல நாட்டினரின் உழைப்பால் உயர்ந்தது தான் அமெரிக்கா. இந்தியாவின் கல்பனா சாவ்லா, வில்லியம்ஸ் போன்றோர் அங்கு சென்று சாதித்ததை இங்குள்ள நம்மால் சாதிக்க முடியாதா? முடியும் என்பது தான் சந்திராயன்.

தாய் மொழியில் படித்தால் மன இருக்கம் குறையும். முதல் 5 வருடங்கள் குழந்தைகளைத் தமிழில் படிக்க வையுங்கள். அப்போது தான் உணர்தல் என்பது எளிதாக வரும்.

விரக்தி அடைந்த இளைஞர்கள் கூட்டம் தான் வன்முறையை நாடுகிறார்கள், எங்கோ,எதிலோ கிடைத்த ஏமாற்றம் தான் அவர்களை தவறான பாதைக்கு அழைத்து சென்று விடுகிறது. இது போன்ற செயல்கள் பலம் மிக்க நமது நாட்டை தடுமாற வைத்துவிடாது. இவ்வாறு அவர் பேசினார்.


  • நன்றி: செந்தமிழர்

பி.கு:‍‍ இந்தச் செய்தியை மலேசியா இன்று வலைமனையில் காண்க.

Monday, December 08, 2008

கணிதம், அறிவியல் தமிழிலா? ஆங்கில தமிழிலா?

(முக்கிய அறிவிப்பு:- இந்தக் கட்டுரை சற்று நீண்டிருக்கும். இருந்தாலும், தமிழ்ப்பள்ளி, தமிழ்க்கல்வி, தாய்மொழி ஆகியவற்றின் எதிர்கால நலன் கருதி தயவுகூர்ந்து பொறுமையுடன் படித்து முடிக்க திருத்தமிழ் அன்பர்களை வேண்டுகிறேன்.)



கணிதம், அறிவியல் ஆகிய இரு பாடங்கள் தமிழ்ப்பள்ளிகளில் ஆங்கிலத்தில் கற்பிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2003 தொடங்கி 2008 வரையில் ஆறு ஆண்டுகளாக இது நடைமுறையில் இருந்து வருகிறது.

இதனை மேலும் தொடருவதா? அல்லது மீண்டும் முன்பு இருந்ததைப் போல தமிழுக்கு திரும்புவதா? அல்லது ஆங்கிலம் தமிழ் என்ற இருமொழிகளில் மாற்றுவதா? என்ற விவாதங்கள் தற்சமயம் மிகச் சூடாக நடந்து வருகின்றன.

இதன் தொடர்பில், கடந்த 5.12.2008ஆம் நாள் தமிழ்ப்பள்ளி தேசிய நடவடிக்கை மன்றம் ஓர் ஆய்வுக் கூட்டத்தை நடத்தியுள்ளது. ம.இ.கா தேசியத் தலைவர் மதிப்புமிகு டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு அவர்களின் தலைமையில் இந்தக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதிப்புமிகு டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு, "கணிதம் அறிவியல் பாடங்களுக்கான பயிற்றுமொழியை முடிவு செய்வதற்கு எதிர்வரும் 14.12.2008ஆம் நாள் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு அதில் முடிவு செய்யப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்த மாபெரும் கூட்டத்தில் ம.இ.கா அரசியல் தலைவர்களோடு, தமிழ்ப்பள்ளி தொடர்புள்ள உயர் அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்கள், பெற்றோர்கள் ஆகிய தரப்பினர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தத் தீர்மானக் கூட்டத்தில் தங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என தமிழ், தமிழர், தமிழ்க்கல்வி சார்ந்த பொது இயக்கங்களும் கோரிக்கை எழுப்பி வருகின்றன.

அடுத்து வருகின்ற ஆண்டுகளில் தமிழ்ப்பள்ளிகளில் கணிதம் அறிவியல் ஆகிய பாடங்களின் நிலையோடு சேர்த்து ஒட்டுமொத்தத் தமிழ்ப்பள்ளிகளின் தலைவிதியை முடிவு செய்யும் மிக முக்கியமான கூட்டமாக இந்தத் தீர்மானக் கூட்டம் அமையவுள்ளது.

இதேபோல்தான் கடந்த 2002ஆம் ஆண்டில் ஒரு தீர்மானக் கூட்டம் நடந்தது. கூட்டம் நடந்த அரங்கத்திற்கு வெளியில் "கணிதமும் அறிவியலும் தொடர்ந்து தமிழிலேயே கற்பிக்கப்பட வேண்டும்' என்று பல பொது இயக்கங்கள் ஒன்றுகூடி முழங்கிய வேளையில், அரங்கத்திற்கு உள்ளே "கணிதமும் அறிவியலும் முழுமையாக ஆங்கிலத்தில் கற்பிக்கப்பட வேண்டும்" என முடிவு செய்யப்பட்டது.

பின்னர் அம்முடிவு ஒட்டுமொத்த சமுதாயத்தின் முடிவாக வெளியறிவிப்புச் செய்யப்பட்டு அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. அரசாங்கமும் அம்முடிவை தலைமேல் ஏற்று 2003 தொடங்கி இதனைச் செயல்படுத்தியது.

கடந்த ஆறு ஆண்டுகள் கணிதம் அறிவியல் பாடங்களை முழுமையாக ஆங்கிலத்தில் படித்த தமிழ்ப்பள்ளி மாணவர்களோடு சேர்த்து தேசியப்பள்ளி, சீனப்பள்ளி மாணவர்கள் இவ்வாண்டில் யு.பி.எஸ்.ஆர் தேர்வு எழுதினர். அதன் அடைவுநிலை பெரிதாக மகிழத்தக்க வகையில் அமையவில்லை என்பது கசப்பான உண்மை.

அப்படியானால், கணிதம் அறிவியல் பாடங்கள் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுவதால் பெரிய பயன் எதுவும் ஏற்படவில்லை என்பது உண்மையாகிறது. கூடவே, ஆங்கிலமும் புரியாமல் தமிழிலும் படிக்க முடியாமல் மாணவர்கள் சிரமப்படுகிறார்கள் என்பதும் தெளிவாகிறது.

கணிதம் அறிவியல் பாடங்களைக் கற்பிக்கும் திறன்பெறாமல் ஆசிரியர்கள் குறைவாக இருப்பது, அப்பாடங்களுக்கான கலைச்சொற்கள் புரிந்துகொள்ள முடியாத அளவுக்குச் சிரமமாக இருப்பது; கணித அறிவியல் கோட்பாடுகளைத் தெளிவாக விளங்கிக்கொள்ளாமல் இருப்பது; ஆங்கிலத்தில் கேள்விகளைப் படித்துப் புரிந்து அதற்கேற்ற சரியான விடையெழுத முடியால் இருப்பது ஆகியவை இந்தப் பின்னடைவிற்குக் காரணமாக இருக்கலாம்.

இவ்வாண்டுக்கான தேர்வுத் தாள்கள் ஆங்கிலம் தாய்மொழி என இருமொழிகளில் அச்சிடப்பட்டு இருந்தாலும் அதனால் மாணவர்கள் பெரும் பயனை அடையவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாய் தெரிகிறது.

தவிர, கணித அறிவியல் பாடங்களில் மாணவர்களுக்கு வீட்டில் வழிகாட்டவும் உதவிகள் செய்யவும் பெரும்பாலான பெற்றோர்களால் இயலாமல் போய்விட்டது என்பதையும் இங்கே ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

ஆகவே, கணிதமும் அறிவியலும் தமிழில் கற்பிக்கப்பட வேண்டும் அல்லது சீனப்பள்ளிகளைப் போன்று இருமொழிகளில் கற்பிக்கப்பட வேண்டும் என்ற பெரும்பாலாரின் கருத்தில் அடிப்படை உண்மையும் வலுவும் இருக்கிறது.


இதன்வழி, தமிழ் மாணவர்கள் மட்டுமின்றி தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்ச் சமுதாயமும் குறுகியகால நன்மைகளையும் நீண்ட காலத்திற்கான நன்மைகளையும் ஒருசேர அடையமுடியும் என்ற கருத்து ஆழ்ந்து எண்ணிப்பார்க்கத்தக்கது.

இந்த நிலையில், இப்போது மீண்டும் அதே 2003இன் பழைய வரலாறு திரும்பியுள்ளது. மீண்டும் ஒரு தீர்மானக் கூட்டம் நடைபெறவுள்ளது. மீண்டும் ஒருமுறை முடிவு செய்யப்பட உள்ளது.

மீண்டும் அதே பழைய முடிவு நிலைநிறுத்தப்படுமா? அல்லது தமிழுக்கு மாற்றப்படுமா? அல்லது இருமொழிகளில் கற்பிக்க முடிவு செய்யப்படுமா? என்ற கேள்விக்குறி எல்லாருடைய மனத்திலும் எழுந்துள்ளது.


வரலாற்றில் இடம்பெறப் போகும் இந்த முடிவைச் செய்யும்முன், கூட்டத்தில் கலந்துகொள்பவர்கள் அனைவரும் சிலவற்றை ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்: ஆய்வு நோக்கோடு சீர்தூக்கிப்பார்க்க வேண்டும். அவையாவன:-

1.தமிழ்ப்பள்ளிகள் இந்த நாட்டில் தொடர்ந்து நிலைபெற்றிருக்க வேண்டும்.

2.தமிழ்ப்பள்ளிகள் தனித்தன்மையோடும் தனி அடையாளத்தோடும் இருக்க வேண்டும்.

3.தமிழ்ப்பள்ளிகள் தமிழ் மக்களின் பண்பாட்டு நடுவமாகத் தொடர்ந்து செயல்பட வேண்டும்.

4.தமிழ்ப்பள்ளிகள் தமிழ்மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் முக்கிய இடமாக நிலைத்திருக்க வேண்டும்.

5.தமிழ்ப்பள்ளிகள் (523)துறைத்தலைவர்கள் (Head Of Department) நியமனம் பெறக்கூடிய இடங்களாக எதிர்காலத்திலும் இருந்திட வேண்டும்.

6.தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் பயிற்றுமொழியாக (Teaching & Learning Language) இருக்கவேண்டுமே தவிர ஒரு பாடமொழியாக (Subject) மட்டுமே ஆகிவிடக் கூடாது.

7.நமக்குப்பின் வரும் அடுத்த தலைமுறை தமிழ்ப்பள்ளிக்காவும் தமிழ்க்கல்விக்காகவும் போராட வேண்டிய நெருக்கடியை இன்று ஏற்படுத்திவிடக் கூடாது.

8.தமிழ்ப்பள்ளி, தமிழ்க்கல்வி சார்ந்த சமுதாயப் பணிகளுக்கும் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் இடையூறுகள் ஏற்பட்டுவிடக் கூடாது.

9.உலகின் பல நாடுகளில் தமிழ்ப்பள்ளிக்காகவும் தமிழ்க்கல்விக்காகவும் தமிழர் உரிமைக்காகவும் காலங்கடந்து தமிழர்கள் போராடிக்கொண்டிருக்கும் நிலைமை எதிர்காலத்தில் நமது குழந்தைகளுக்கு வரக்கூடாது.

10.உலக மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகிய தாய்மொழி உரிமையானது மலேசியத் தமிழர்களுக்கு இன்றும் இனி என்றும் நிலையாக இருந்திட வேண்டும்.

எனவே, வரும் 14.12.2008ஆம் நாள் நடைபெறவுள்ள தீர்மானக் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருக்கும் அனைத்துத் தரப்பினரும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளையும் தன்னலக் கருத்துகளையும் அறவே ஒதுக்கிவைத்துவிட்டு நல்ல முடிவை எடுக்க வேண்டும்!

பெரும்பான்மைத் தமிழ் மாணவர்கள் நலனையும் தமிழ்மொழியின் நலனையும் தமிழ்ப்பள்ளிகளின் நல்வாழ்வையும் நன்கு எண்ணிப்பார்த்து நல்ல முடிவை எடுக்க வேண்டும்!

நாளைய சமுதாயம் நம்மைப் பார்த்து கைநீட்டி கேள்வி கேட்கும்படியாக இல்லாமல், நெஞ்சை உயர்த்திப் பாராட்டும்படியாக நல்ல முடிவை எடுக்க வேண்டும்!

பி.கு:‍‍ இந்தச் செய்தியை மலேசியா இன்று வலைமனையில் காண்க.

Saturday, December 06, 2008

நாட்டுப்புறப் பாடல்(2) – சிறுவர் பாட்டு


"அச்சிக்கா புச்சிக்கா தண்ணித்தோம்பு
அம்மாகிட்ட சொல்லாத சின்ன பாப்பா
உன்னையும் என்னையும் பெத்தாங்க
சீனசட்டியில் போட்டு வருத்தாங்க"

இப்படி சிறுவயதில் பாடிய 'சிறுவர் பாடல்கள்' ஏராளம் ஏராளம். இளம் வயதில் பாடிப்பழகியப் பாட்டு என்பதால் இன்றும் நினைவைவிட்டு நீங்காமல் இருக்கிறது.

இதுபோன்ற பாடல்களைச் சிறுவர்கள் விளையாட்டுத்தனமாகவும் கூட்டமாகக் கூடி மகிழ்ச்சியாகவும் பாடுவர். இவை மனப்பாடமாக வைத்துப் பாடக்கூடியவையே தவிர ஏட்டில் எழுதிவைத்து பாடுகின்ற கவிதையன்று.

இப்படி எழுதிவைக்காத காரணத்தினாலே பல நாட்டுப்புறப் பாடல்கள் காணாமலே போய்விட்டன. இன்றைய சிறுவர்களுக்கும் இப்படியான சிறுவர் பாடல்கள் தெரிவதில்லை. பெற்றோர்களும் பிள்ளைகளுக்கு இப்படிப்பட்ட பாடல்களைச் சொல்லித் தருவதில்லை.

சிறுவர் பாடல்கள் நாட்டுப்புற மக்களால் வாய்மொழியாக உருவாக்கப்பட்டவை என்றாலும்கூட, சந்த நயத்தாலும் எதுகை மோனையாலும் ஒரு நல்ல கவிதைக்குரிய தன்மையோடு அமைந்திருப்பதைக் காணலாம். மேலும், சிற்றூர் அல்லது தோட்டப்புற மண்வாசனை அந்தப் பாடல்களில் அப்படியே படிந்துநின்று பழைய வரலாற்றையும் எடுத்துக்காட்டும்.

அதோ பாரு மாப்பிள
காசு கேட்டா குடுக்கல
உட்டான் பாரு வைத்துல
உழுந்தான் பாரு சேத்துல
தூக்கி உட்டான் மேடுல
'தெரிமா காசே' சொல்லல

என்ற ஒரு சிறுவர் பாட்டில் மலேசியத் தோட்டத்தின் மணமும் மலாய்மொழியின் மணமும் மிக அழகாக வீசுகிறதே பார்த்தீர்களா?

மலாயாத் தோட்டக்காட்டில் குடியேறிய அன்றையத் தமிழர்கள் தங்களின் தமிழ் இசையோடு இந்த நாட்டின் மலாய்மொழியை இணைத்து எவ்வளவு அழகாகப் பாடலை உருவாக்கி இருக்கிறார்கள். கூடவே, அருமையான நகைச்சுவை செய்தியையும் சொல்லி இப்பாடல் அனைவரையும் சிரிக்கவும் வைக்கிறது.

"கைவீசம்மா கைவீசு; கடைக்குப் போகலாம் கைவீசு"
"நிலா நிலா ஓடிவா; நில்லாமல் ஓடிவா"
"காக்கா காக்கா மைகொண்ட"
"டிங் டிங் கொய்யாக்கா எங்கடா போன"
"ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்திச்சு"

இப்படி இறவா புகழ்கொண்ட சிறுவர்கள் பாட்டுகள் பல உள்ளன.

ஞாயிற்றுக்கிழமை நகையைக் கானோம்
திங்கள் கிழமை திருடன் கிடைத்தான்
செவ்வாய்க் கிழமை செயிலுக்குப் போனான்
புதன் கிழமை புத்தி வந்தது
வியாழக் கிழமை விடுதலை ஆனான்
வெள்ளிக் கிழமை வீட்டுக்கு வந்தான்
சனிக்கிழமை சாப்பிட்டு படுத்தான்

என்ற சிறுவர் பாடலின்வழி, கிழமைப்பெயர்களை அறிமுகப்படுத்துவதோடு நல்லதொரு நன்னெறிப் பண்பையும் புகட்டுகின்ற அழகும் திறமும் நிறைந்த நாட்டுப்புறப் பாடல்கள் நிறைய உண்டு.

நாட்டுப்புறச் சிறுவர்கள் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று 'குத்து குத்து தாம்பாளம்' என்பது. சிறுவர்கள் வட்டமாக அமர்ந்து கைகளைத் தரையில் வைத்து ஆடும் விளையாட்டு இது. இந்த ஆட்டத்தை ஆடும்போது பாடப்படும் ஒரு சிறுவர் பாடலை பாடிப்பார்ப்போம்.. வாருங்கள்.

குத்து குத்து தாம்பாளம்
கோடாலி தாம்பாளம்
உங்க அப்பா பேர் என்னா?
'முங்கப்பூ"
முருங்கப்பூ தின்னுபுட்டு
பாம்பு கைய எடுப்பியா
எடுக்க மாட்டியா?

எடுக்காட்டி போனா
பீச்சாங் கைய எடுத்து
தலை மேல வச்சிக்கோ...

இந்தக் 'குத்து குத்து தாம்பாளம்' பாடல் பல ஊர்களில் பல வகையாகப் பாடப்படுகிறது. அப்படி, தெரிந்தவர்கள் நமக்குத் தெரிவிக்கலாமே..!

Monday, December 01, 2008

தமிழமுது 5 - பசி வந்தால் பறக்கும் பத்து

"பசி வந்திடப் பத்தும் பறக்கும்" என்பது நாம் அடிக்கடி உச்சரிக்கும் அல்லது கேட்கும் பழமொழி.

பசி மிகவும் கொடுமையானது. பசி வந்துவிட்டால் அதன் முன் எதுவும் நிற்க முடியாது. எவ்வளவு பெரிய அறிவையும் ஆற்றலையும் வீரத்தையும் ஏன், தவத்தையும் கூட பசி ஒரே நொடியில் வென்றுவிடும். பசிக் கொடுமை மிகவும் பொல்லாதது. எந்தச் சத்தியாலும் பசியை வெல்ல முடியாது.

இந்தக் கருத்தை உணர்த்துவதுதான் "பசி வந்திடப் பத்தும் பறக்கும்" என்ற பழமொழி.

இந்தப் பழமொழியில் வரும் 'பத்து' எவை?

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்
(நல்வழி பாடல் 26)

ஔவைக் கிழவி நம் கிழவி; அமிழ்தினும் இனிய சொற்கிழவி என்ற சிறப்புக்குரிய தமிழ் மூதாட்டி ஔவையார் இயற்றிய இந்த நல்வழிப் பாடலிலிருந்து பிறந்ததுதான் அந்தப் பழமொழி.

மானம் – குலப்பெருமை – கற்ற கல்வி – அழகிய தோற்றம் – பகுத்தறிந்து பார்க்கும் அறிவு – தானம் செய்வதால் வரும் புகழ் – தவம் மேற்கொள்ளும் ஆற்றல் – முன்னேற்றம் – விடாமுயற்சி – பெண்மீது கொள்ளும் காதல் உணர்ச்சி ஆகிய பத்தும் பசியால் வாடும் ஒருவனிடமிருந்து உடனே ஓடிவிடும் என்பதை அன்றே கண்டுபிடித்து பாடிவைத்துள்ளார் நம் ஔவைப்பாட்டி.

பாடல் என்னவோ பழங்காலத்தில் எழுதப்பட்டதுதான். ஆனால், அது இந்தக் காலத்திற்கும் இனிவரும் எந்தக் காலத்திற்கும் பொருந்துவதாக இருக்கிறது.
இதுவே தமிழ், தமிழ்ப் புலவோர், தமிழ்ச் செய்யுள் ஆகியவற்றுக்கு இருக்கும் தனிச்சிறப்பாகும்

Thursday, November 27, 2008

மாவீரர் நாளில் வீர வணக்கம்


உலக உருண்டையில் தமிழருக்குத் தனிநாடு காணும் உயிர்ப்போராட்டத்தில் வீரச்சாவடைந்த தமிழீழப் போராளிகளை நினைவுகூரும் வீரத்திருநாள் மாவீரர் நாள். தமிழ் – தமிழினம் – தமிழ்மண் – தமிழியல் ஆகிவற்றுக்காகப் போராடிப் போராடி தங்கள் இன்னுயிரை ஈகப்படுத்திய மாத்தமிழர் - மறத்தமிழர் அனைவருக்கும் வீரவணக்கம் செலுத்த இப்பதிவை இடுகிறேன்.

1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழிற்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.


ஏனைய நாடுகளில் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும், தமிழீழ மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும் பெரும் வேறுபாடுகள் உண்டு.

ஏனைய நாடுகளில் எல்லாம் விடுதலைக்குப் பின் அமைந்த அரசுகளால் விழாக்கள் எடுக்கப்படுகின்றனவே தவிர போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலங்களில் விழாக்கள் எடுக்கப்படுவதில்லை.

ஆனால், விடுதலைப் போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் எதிரியின் அச்சுறுத்தல்கள், தாக்குதல்களுக்கு இடையிலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையிலும் போராட்டத்தையும் நடத்திக் கொண்டு தமிழீழ மக்கள் மண்ணின் விடிவிற்காகத் தம் இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களை எழிற்சியோடு நினைவு கூர்ந்து வருகின்றனர். மாவீரர்களின் பெற்றோர்கள் குடும்பத்தினரை போற்றிச் சிறப்பிக்கப்படுகின்றனர்.


வீரச்சாவடையும் தமிழீழ மாவீரர்களது வித்துடல்கள் மாவீரர் துயிலும் இல்லங்களில் கல்லறைகளில் விதைக்கப்பட்டும், நடுகற்கள் நாட்டப்பட்டும் வழிபாடு இயற்றப்படுகின்றது. மாவீரர் நாளில் மாவீரரின் பெற்றோர், குடும்பத்தினர் மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டு அன்று தமிழீழ மக்களால் போற்றி மதிப்பளிக்கப்படுகின்றனர். உலகிலே எங்குமே மாவீரர் நாள் நிகழ்வுகள் போல மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள், அவர்களின் பெற்றோரும், குடும்பத்தினரும் போற்றப்பட்டு மதிப்பளிக்கப்படும் நிகழ்வுகள் நடைபெற்றதாகவோ, நடைபெறுவதாகவோ வரலாறுகள் இல்லை.


மாவீரர் எழுச்சி நாட்களின் நிகழ்வுகளும், நடைமுறை ஒழுங்குகளும்

1989ஆம் ஆண்டில் நவம்பர் 27ஆம் நாளை மாவீரர் நாளாகவும் 1990ஆம் ஆண்டில் இருந்து 1994ஆம் ஆண்டுவரை நவம்பர் 21ஆம் நாளிலிருந்து 27ஆம் நாள் வரை மாவீரர் எழுச்சியாகவும்(வாரமாகவும்) தமிழீழ மக்கள் எழுச்சி நிகழ்வாக நடைபெற்று வந்த தமிழீழ மாவீரர் எழுச்சி நாள் நிகழ்வுகள் 1995ஆம் ஆண்டிலிருந்து நவம்பர் 25ஆம் நாள் முதல் 27ஆம் நாள்வரை மூன்று நாட்களில் எழுச்சி நாட்களாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

"தமிழின மாவீரர்களுக்கு வீர வணக்கம் செய்குவோம்"

Wednesday, November 26, 2008

தமிழின மீட்பர் மேதகு வே.பிரபாகரன்

இன்று 26-11-2008 தமிழீழத் தலைவர் – தமிழினத் தளபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 54ஆம் பிறந்தநாள். தமிழ் ஈழத்தில் தமிழ்மண்ணை மீட்டெடுத்து தமிழ்க்கொடியை வானுயரப் பறக்கவிட்டு தமிழரின் தனிநாடு இதுவென அறிவிக்க மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்து நடாத்தும் அந்தத் தமிழின மீட்பர் – தமிழ் வீரகர் பிறந்தநாளை முன்னிட்டு இப்பதிவு இடப்பெறுகிறது.

பொங்கிடும் கடற்கரை ஒரத்திலே
மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே
மங்களம் தங்கிடும் நேரத்திலே
எம் மன்னவன் பிறந்தான் ஈழத்திலே (பொங்கிடும்)

பாசத்தில் எங்களின் தாயானான்
கவி பாடிடும் மாபெரும் பேரானான்
தேசத்தில் எங்கணும் நிலையானான்
விலை தேடியே வந்திடும் தலையானான் (பொங்கிடும்)


இன்னல்கள் கண்டுமே தான் கொதித்தான்
பல இளைஞரை சேர்த்துமே களம் குதித்தான்
தன்னின மானத்தை தான் மதித்தான்
பகை தாவியே வந்திட கால் மிதித்தான் (பொங்கிடும்)


இங்கொரு தாயகம் மூச்சென்றான்
தமிழ் ஈழமே எங்களின் பேச்சென்றான்
வந்திடும் படைகளை வீச்சென்றான்
புலி வாழ்ந்திடும் வரையினில் தூசென்றான் (பொங்கிடும்)


விடுதலைப் புலிகளின் பலமானான்
தமிழ் வீடுகள் யாவிலும் மலரானான்
படுகளம் மீதிலோர் புலியானான்
பிரபாகரன் எங்களின் உயிரானான் (பொங்கிடும்)

என்றுமே எங்களின் தளபதியே
நீ எங்களின் வானத்து வளர்மதியே
இன்று உனக்கு ஆயிரம் சோதனைகள்
தமிழ் ஈழத்தை வாங்குமுன் போதனைகள் (பொங்கிடும்)




தமிழீழத் தேசியத் தலைவரைப் பற்றி அறிந்துகொள்ள கீழே உள்ள சுட்டிகளைத் தட்டிப் படிக்கவும்.


* தலைவரின் வாழ்க்கைக் குறிப்பு

*தலைவரின் சிந்தனைகள்

*தலைவரின் நிழற்படங்கள்

*தலைவரின் உரைகள்


  • நன்றி: யாழ்.காம்(கவிதை)
  • நன்றி: பிரபாகரன்.காம்(செய்திகள்)

Tuesday, November 25, 2008

மலேசியத் தமிழர் எழுச்சி நாள் 11/25

ன்று 25 நவம்பர் 2008. கடந்த 2007இல் இதே நாள் உலகத்தின் ஒட்டுமொத்த பார்வையும் மலேசியத் தமிழர் மீது விழுந்த நாள்.

மலேசியா விடுதலை அடைந்த 50ஆவது ஆண்டின் நிறைவின்போது, மலேசியத் தமிழர்கள் தங்களின் உரிமைகளைக் கோரி கோலாலம்பூர் மாநகரே அதிரும்படியாக மாபெரும் அளவில் கவனஈர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்த வரலாற்று நாள்.

நாடு முழுவதிலுமிருந்து சிறியோர், இளையோர், மங்கையர், அன்னையர், பெரியோர் என தமிழ்க் குமுகாயத்தின் உறுப்பினர்கள் அனைவரையும் படிநிகர்த்து தமிழர்கள் பேரணியாகத் திரண்ட வெற்றிப் பெருநாள்.

புறநானூற்றுத் தமிழரின் வீரத்தை மலேசிய மண்ணில் விதைத்துப் போன வீரத் திருநாள்.

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வரலாறாகவும் இனிவரும் 50 ஆண்டுகளுக்கும் மறையாத வரலாறாகவும் இருக்கவல்ல அந்த நவம்பர் இருபது இப்போதும் எல்லாத் தமிழர் உள்ளங்களிலும் மிகவும் பசுமையாகவே இருக்கிறது – மிகவும் பாரமாகவே கணக்கிறது.

மலேசியத் தமிழர்களிடையே இதற்கு முன்னர் என்றுமே இல்லாத அளவுக்கு அரசியல் விழிப்புணர்வையும் – குமுக ஒற்றுமையுணர்வையும் – உரிமைக் காப்புணர்வையும் – இனவியல் வரலாற்றுணர்வையும் ஏற்படுத்திய அந்த நவம்பர் இருபத்து ஐந்து இன்றும்கூட எல்லாத் தமிழர் எண்ணங்களிலும் மிகவும் செழிப்பாகவே இருக்கிறது – மிகவும் சிக்கலாகவே தொடர்கிறது.

அந்த நவம்பர் இருபத்து ஐந்தை வரலாற்று நாளாக உருமாற்றிய உடன்பிறப்புகள் இன்றும் இனி என்றும் எல்லாத் தமிழர் இதயங்களிலும் நிறைந்திருப்பர் – இரத்த அணுக்களில் உறைந்திருப்பர்.

அந்த நவம்பர் இருபத்து ஐந்தும் அந்த இனிய உடன்பிறப்புகளும் தமிழரிடையே ஏற்படுத்திய மாபெரும் சிந்தனைப் புரட்சியை ஓராண்டுக்குப் பின்பு இன்று நன்றியோடு நினைத்துப் பார்ப்போம்!

அந்த நவம்பர் இருபத்து ஐந்தும் அந்த இனிய உடன்பிறப்புகளும் ஏற்றிவைத்த புரட்சிச் சுடரை அணையவிடாமல் பாதுகாப்போம்!

அந்த நவம்பர் இருபத்து ஐந்தும் அந்த இனிய உடன்பிறப்புகளும் தொடக்கிவைத்த உரிமைச் சமரை, இந்நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்ட நிலையில், அண்ணல் காந்தியடிகள் காட்டிய அறவழியில் தொடர்ந்து வழிநடத்துவோம்!

அதற்காகவே நமக்கு வீரத்திலகமிடுகிறார் புரட்சிப் பாவேந்தர் பாரதிதாசனார். இப்படி:-


சிறுத்தையே வெளியில் வா!..


பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!
எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!
நம்பினை பகலினை நள்ளிருள் என்றே
சிம்புட் பறவையே சிறகைவிரி! எழு!
சிங்க இளைஞனே திருப்புமுகம்! திறவிழி!
இங்குன் நாட்டுக் கிழிகழுதை ஆட்சியா?
கைவிரித் துவந்த கயவர், நம்மிடைப்
பொய்வி ரித்துநம் புலன்கள் மறைத்துத்
தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி
நமக்குள உரிமை தமக்கென் பார்எனில்,
வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே?
மொழிப்பற் றெங்கே? விழிப்புற் றெழுக!

இகழ்ச்சி நேர்ந்தால் இறப்போம் என்றும்
புகழ்ச்சி யேஎம் பூணாம் என்றும்
வையம் ஆண்ட வண்டமிழ் மரபே
கையி ருப்பைக் காட்ட எழுந்திரு!
குறிக்கும்உன் இளைஞர் கூட்டம் எங்கே?
மறிக்கொணாக் கடல்போல் மாப்பகை மேல்விடு!

நன்மொழிக்கு விடுதலை நல்கிட எழுந்திரு!
பொன்மொ ழிக்குநீ புதுமை ஏற்றுவாய்!
மக்களை ஒன்றுசேர்! வாழ்வை யுயர்த்துக!
கைக்குள திறமை காட்ட எழுந்திரு!
வாழ்க இளைஞனே, வாழ்க நின்கூட்டம்!
வாழ்க *திராவிட நாடு!
வாழ்கநின் வையத்து மாப்புகழ் நன்றே!

*மலையக என மாற்றிப் படிக்கவும்


Tuesday, November 18, 2008

கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனார்



இன்று 18-11-2008, இலக்கியச் செம்மல் கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாள். தமிழ்கூறு நல்லுலகை விட்டு அவர் பிரிந்துச் சென்று 72 ஆண்டுகள் ஆகின்றன. அவருடைய நினைவாக இக்கட்டுரை பதிவாகிறது.


**************
செக்கிழுத்தச் செம்மல் என்று புகழப்படும் வ.உ.சி எனும் சுருக்கப் பெயருக்குச் சொந்தக்காரர் வ.உ.சிதம்பரனார் உண்மையில் தமிழ் இலக்கியத்திலும் பெருஞ்செம்மல்.

தடைகளைக் கண்டு முடங்கி விடாமல் வீறுகொண்ட மனத்தினராய் கடைசி வரை வாழ்ந்த வ.உ.சியின் வாழ்க்கை இன்றையத் தமிழர்களுக்கு நல்ல பாடமாகும்.

திருநெல்வேலி ஒட்டப் பிடாரத்தில் உலகநாதர் பரமாயி அம்மையார் வாழ்விணையருக்கு 5-9-1872இல் மூத்த மகனாகப் பிறந்தார் சிதம்பரானார். 1894-இலேயே வழக்கறிஞராகத் தம்முடைய வாழ்க்கையைத் தொடங்கினார்.

இந்தியாவுக்குத் தொழில்புரிய வந்த ஆங்கிலேயன் நாட்டையே ஆள்வதற்கு முனைந்துவிட்ட காலம் அது. அப்போது ஆங்கிலேயனை எதிர்த்து நெஞ்சுரத்தோடு போராடிய முன்னோடிகளில் சிதம்பரனார் குறிப்பிடத்தக்கவர். ஆங்கிலேயனின் பொருள்களை புறக்கணிக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி மக்களிடையே முழங்கினார். அதற்காகவே சொந்தமாகச் சரக்குக் கப்பலை ஓடவிட்டார்.

தமிழர் வரலாற்றில், இராசேந்திரச் சோழனுக்குப் பின் கடலில் கப்பலை விட்டவர் வ.உ.சிதான். அதனாலேயே அவர் கப்பலோடியத் தமிழன் என்ற அழியாப் புகழுக்குச் சொந்தக்காரர் ஆனார். தமிழனால் முடியாதது எதுவும் இல்லை; தமிழன் நினைத்தால் சாதித்துக் காட்டுவான் என்பதற்குக் கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சி மிகச் சிறந்த முன்மாதிரி என்றால் மிகையன்று.

ஆங்கிலேயரின் சூழ்ச்சியால் வ.உ.சியின் கப்பல் நிறுவனம் முடக்கப்பட்டது. அவர்மீது வழக்குகள் போடப்பட்டு சிறைதண்டனையும் வழங்கப்பட்டது. சிறையில் இருந்தபோது, மாடுகள் இழுக்கின்ற செக்கை இழுக்கச் சொல்லி ஆங்கிலேயர்கள் கொடுமைபடுத்தினர். தோளிலும் உடலிலும் குருதிச் சொட்டச் சொட்ட அவரை அடித்து துன்புறுத்தித் செக்கிழுக்க வைத்தனர்.

சிறையிலிருந்து விடுதலையான பின்பு ஆங்கிலேயர்கள் அவரை விட்டபாடில்லை. அவருடைய சொத்துகள் அனைத்தையும் பறிமுதல் செய்துகொண்டனர். அவர் தொடர்ந்து வழக்கறிஞர் பணிசெய்வதற்கும் தடை போட்டனர்.

ஆங்கிலேயனில் வல்லாண்மையில் தனக்கு ஏற்பட்ட அத்தனை இடர்களையும் துயர்களையும் வ.உ.சி வரலாற்று நூலாக எழுதினார். இலக்கியத்தரம் மிகுந்த வரலாற்று நூலாக இது அமைந்தது.

தமிழ்மொழியின் மீது மிகுந்த பற்றும் புலமையும் கொண்டிருந்தார் வ.உ.சி. அவர் திருக்குறளுக்கு அகல விரிவுரை எழுதியுள்ளார். தொல்காப்பியத்திற்கும் விளக்கநூல் எழுதியுள்ளார். அவருடைய எழுத்துகள் அனைத்தும் புரட்சி சிந்தனைகளை ஏற்படுத்துவதாக இருந்தன. தமிழில் பல நூல்களையும் புதினங்களையும் எழுதியுள்ளார். சேம்சு ஆலன் என்னும் ஆங்கில நாவலாசிரியர் எழுதிய நூல்களை இவர் மொழிப்பெயர்த்து எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மெய்யாரம், மெய்யறிவு போன்ற இவருடைய படைப்புகள் காலத்தால் அழியாதன.

எழுத்தில் மட்டுமல்லாது, மேடைகள் தோறும் தம்முடைய உணர்ச்சிமிகு உரைகளால் தமிழர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியவர்.

பெரும் செல்வந்தராக இருந்தபோதும் மக்களின் துயரங்களைத் துடைத்தெறிய மக்களோடு நின்று போராடிய மாபெரும் போராட்ட உணர்வாளராக அவர் திகழ்ந்தார். அதனாலேயே, வாழ்நாள் முழுவதும் தாங்கமுடியாத துயரவாழ்க்கை வாழ்ந்தார்.

அடிமைப்பட்டிருந்த இந்தியாவையும் தாழ்ந்திருந்த தமிழர் குமுகாயத்தையும் மீட்டெடுக்க தன்னுடைய உடல், பொருள், ஆவி அத்தனையும் ஈகப்படுத்தி இறுதிவரையில் திண்ணிய மனத்தோடு போராடிய வ.உ.சிதமபரனார் 18-11-1936ஆம் நாள் தன்னுடைய இன்னுயிரைத் துறந்தார்.

தமிழுக்காகவும் தமிழருக்காகவும் போராடி உயிர்விட்ட வ.உ.சியின் புகழ் தமிழ் உள்ள அளவும் போற்றப்படும் என்பது திண்ணம். இன்றைய இளம் தலைமுறையினர் வ.உ.சி போன்ற தமிழ்ப் பெரியோர்களின் வரலாற்றைப் படித்து விழிப்புணர்வு பெற்று எழுச்சிகொள்ள வேண்டும். தமிழ் இனம் வாழ; தமிழ்மொழி வாழ நமது முன்னோர்கள் எப்படியெல்லாம் பாடுபட்டு போராடி இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

வாழ்க ஐயா வ.உ.சி அவர்தம் புகழ்!

Sunday, November 09, 2008

வீரமாமுனிவர் என்ற பெசுகி பாதிரியார்

இன்று 9-11-2008 தமிழ்ச் சான்றோர் வீரமாமுனிவர் அவர்களின் பிறந்த நாள். அன்னார் நினைவாக இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது
***********
*********

தமிழ் மொழியின் வரலாற்றுப் பாதையில் கிறித்தவர்களின் பணியைக் குறைத்து மதிப்பிட முடியாது. சமயப் பணி புரிவதற்காகவே ஐரோப்பிய நாடுகளிலிருந்து தமிழகம் வந்த மறைத்தொண்டர்கள் தமிழுக்கு ஆற்றியுள்ள பணி வியப்புக்குரியது.

தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாத இவர்கள் தமிழைப் பயின்று, அம் மொழிக்கே வளம் சேர்த்தனர். சமயப் பணியாற்ற வந்த அவர்கள் தமிழின் இனிமையில் மனத்தைப் பறிகொடுத்து தமிழ்ப்பணியையே முழுநேரப் பணியாகக் கொண்டனர். அவர்களுள் தமிழ் இலக்கிய உலகம் மறக்க முடியாத ஒருவர் வீரமாமுனிவர்.

இத்தாலியில் இவர் பிறந்தது 1680 நவம்பர் 9ஆம் நாள். கான்சுடாண் டைன்யுசேபியுசு சோசப்பு பெசுகி என்பது இவரது இயற்பெயர். இந்தியாவில் கிறித்துவ சமயப்பணி புரிவதற்காக வந்த முனிவர், 1711 மதுரை மறைப்பணிக் களத்துக்கு வந்தார்.

மதுரைப் பகுதியில் 1606 முதல் 1645 வரை பணியாற்றிய இராபர்ட் தெ நொபிலி அடிகளார் ஐரோப்பிய வாழ்க்கை முறைகைளைக் கைவிட்டு, தமிழ்ப்பண்பாட்டின் அடிப்படையில் வாழ்ந்தார். காவியுடை அணிந்து, சைவ உணவு உண்டு வாழ்ந்தார். வீர மாமுனிவரும் இவரது வாழ்க்கை முறையையே பின்பற்றினார்.


பெசுகி என்ற தம் பெயரை 'தைரியநாதர்' என்று மாற்றிக் கொண்டார். தைரியநாதர் என்பது வடமொழி என அறிந்தார். அவரின் தமிழ்ப்பற்று காரணமாக, அதுவே 'வீர மாமுனிவர்' என பின்னாளில் மாற்றம் பெற்றது. பெயராலும், பண்பாட்டாலும் தமிழராகவே வாழத் தொடங்கினார்.

வீரமாமுனிவரின் தமிழ்ப்பணிகள்

1.தமிழ் அச்சுக்கலைக்கு அடிகோலியவர் கிறித்தவ குருமார்களே. 1586 ஆம் ஆண்டில் தென்பாண்டி நாட்டு புன்னைக்காயில் என்னும் ஊரில் 'அடியார் வரலாறு' என்னும் நூல் அச்சிடப்பட்டது. ஆண்டிறீக்குப் பாதிரியார் தமிழில் தொகுத்து, மொழி பெயர்த்து வெளியிட்ட இந் நூல்தான் தமிழ் மண்ணில் அச்சிட்ட முதல் தமிழ் நூல்.

2.இந்தக் காலகட்டத்தில் வீர மாமுனிவர் தமிழ் எழுத்துச் சீரமைப்பை மேற்கொண்டார். இப்போது நாம் பயன்படுத்தும் 'ஏ' 'ஓ' போன்ற எழுத்துகள் வீரமாமுனிவர் உருவாக்கியவை. அதற்கு முன் 'எ' 'ஒ' ஆகிய எழுத்துகளின் மேல் புள்ளியிட்டு மெய்யெழுத்து போல எழுதப்பட்டது.

3.எழுத்துச் சீரமைப்பு, இலக்கணம், அகர முதலி, உரைநடை என இவர் தொடாத துறைகளே இல்லை. 'தேம்பாவணி' என்னும் பெருங்காப்பியமும், 'திருக்காவலூர் கலம்பகம்' முதலிய சிற்றிலக்கியங்களும் இவரால் பாடப்பட்டவை. கொடுந்தமிழ் இலக்கணம், செந்தமிழ் இலக்கணம், தொன்னூல் விளக்கம், திறவுகோல் (CLAVIS) முதலிய இலக்கண நூல்கள் அவர் பெயரை எப்போதும் கூறிக் கொண்டேயிருக்கும்.

4.திருக்குறளை இலத்தீன் மொழியில் பெயர்த்து மாபெரும் சாதனை நிகழ்த்தினார்.

5.தமிழில் கடினச் சொற்களுக்குப் பொருள் காண 'நிகண்டு'களையே நம்பிக் கொண்டிருந்த நிலையை மாற்றினார். 1732 ஆம் ஆண்டு இவர் தொகுத்த 'சதுரகராதி' முதல் தமிழ் அகர முதலி என்னும் பெருமை பெற்றது. இது பெயர் அகராதி, பொருள் அகராதி, தொகை அகராதி, தொடை அகராதி என நான்கு பகுப்புகளைக் கொண்டது.

6.இது தவிர, 'தமிழ் - இலத்தீன் அகராதி', போர்த்துகீசியம் - தமிழ் - இலத்தீன் அகராதி என்னும் வேறு இரண்டு அகராதிகளையும் தொகுத்தளித்தார். அவற்றுள் தமிழ் - இலத்தீன் அகராதியில் ஒன்பதாயிரம் தமிழ்ச் சொற்களுக்கு இலத்தீன் மொழியில் பொருள் விளக்கம் செய்துள்ளார். போர்த்துகீசியம் - தமிழ்- இலத்தீன் அகராதியில் 4400 போர்த்துகீசியச் சொற்களுக்குத் தமிழிலும், இலத்தீனிலும் உரை எழுதியுள்ளார். இந்த அகராதிகளின் துணையால் அயல்நாட்டினர் தமிழைக் கற்பதற்கும், தமிழர் பிற மொழிகளைக் கற்பதற்கும் கதவு திறக்கப்பட்டது.

7.வீர மாமுனிவர் மேல்நாட்டு மொழிகளைக் கற்றறிந்த பேரறிஞர். அம் மொழிகளைப் போலவே தமிழிலும் உரைநடை நூல்கள் வர வேண்டுமென்று விரும்பி பல உரைநடை நூல்களை எழுதினார்.

வீரமாமுனிவரைப் பற்றி தமிழ் அறிஞர்கள் கூற்று


''தமிழ் உரைநடைக்குத் தந்தை தத்துவ போதகரே என்பர். அது உண்மை எனினும், இவரால் அது வளம் பெற்று மிக்குயர்ந்தது'' என்று தவத்திரு. தனிநாயகம் அடிகளார் கூறுவதை யாரும் மறுக்க இயலாது.

''18 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த தமிழ்ப்புலவருள் வீரமாமுனிவரும் ஒருவர்'' என்று 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' எழுதிய அறிஞர் கால்டுவெல் எழுதியுள்ளார். திருக்குறளையும், திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர் சி.யு.போப்(G.U.Pope), இவரைத் 'தமிழறிஞருள் மிகச் சிறந்தவர்' என்று போற்றியுள்ளார்.

''திராவிட மொழியியல் வல்லுநர்களுக்கெல்லாம் மிகச் சிறந்த முன்னோடி வீர மாமுனிவரே'' என்று செக் நாட்டுத் தமிழறிஞர் 'கமல் சுவலமில்' பாராட்டியுள்ளார். எமிலியோ தேவி என்ற இத்தாலி அறிஞர், ''கீழ்த்திசை அறிஞருள் மிகவும் புகழ் பெற்றவர் வீர மாமுனிவர்'' என்று கூறியுள்ளார்.

இவ்வாறு அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரைப் பலரும் புகழ்ந்து போற்றியுள்ளனர்.

  • நன்றி:- உதயை.மு.வீரையன்

Saturday, November 08, 2008

தமிழ் சோறு போட வேண்டுமா? (பகுதி 3)

எத்தனை பேருக்குத் தமிழ் சோறு போடுகிறது தெரியுமா?


தமிழின் உலகளாவிய நிலை இருக்கட்டும். தமிழ் நாட்டளவில் அதன் நிலையும் இருக்கட்டும். நமது மலேசிய நாட்டிலேயே எத்தனை பேருக்குச் சோறு போட்டுக் கொண்டிருக்கிறது தமிழ்!

தேசிய மொழியாகவோ பெரும்பான்மை இனத்தவர் மொழியாகவோ இல்லாத இந்நாட்டில்கூட தமிழ் எண்ணற்றவருக்கு என்னென்னவோ தந்து கொண்டிருக்கிதே! அந்த உண்மை இவர்களுக்குத் தெரியவில்லையா? தெரிந்திருந்தும் தெரியாதது போல நடிக்கிறார்களா?

1.இங்கே ஆயிரக்கணக்கான தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்குச் சோறுபோட்டுக் கொண்டிருப்பது எது?

2.வானொலியிலும், தொலைக்காட்சியிலும் தமிழ்ப்பிரிவுகளில் பணிபுரிவோருக்குச் சோறு போட்டுக் கொண்டிருப்பது எந்த மொழி?

3.காவல்துறை, உளவுத்துறை, சட்டத்துறை, உள்துறை அமைச்சு, தகவல் அமைச்சு, கல்வி அமைச்சு ஆகியவற்றிற்கெல்லாம் தமிழை முதலாக வைத்துப் பணிபுரிபவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

4.பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் தமிழாலேயே பெரும் பணிகளில் அமர்ந்திருப்போர் இல்லையா?
5.தமிழில் நூல்கள் வெளியிடும் பதிப்பகங்கள் தமிழால் வாழவில்லையா?

6.ஏன் அந்தக் காலத்து துன் சம்பந்தன் முதல் இன்றைய டத்தோஸ்ரீ சாமிவேலு வரை பலர் அமைச்சர்களாக வழிவகுத்தது அவர்கள் அறிந்த தமிழன்றோ!

7.அன்றும் இன்றும் இந்நாட்டு அரசியலில் பெயர்போட்டுக் கொண்டிருக்கும் தமிழர்கள் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் அல்லரோ!

இவர்களுக்கெல்லாம் தமிழ் சோறுமட்டுமா போட்டுக் கொண்டிருக்கிறது? வாழ்வாங்கு வாழும் வையப் பெருவாழ்வையே அன்றோ தந்திருக்கிறது!

சோற்றுத் தமிழர்கள் சோற்று மொழியைத் தேடிக்கொள்ளட்டும். சோறு போடும் மொழியை மட்டும் கற்றவன் நன்றாகச் சோறு உண்ணலாம். ஆனால் அவன் யார்? அவன் அடையாளம் என்ன? அவன் பண்பாடு எது? பாரம்பரியம் யாது?

அவன் மொழியால் அடிமை, பண்பாட்டால் அடிமை. ஏனெனில், மொழி இனத்தின் உயிர், மொழி வாழ்ந்தாலே பண்பாடு வாழும், மொழியும் பண்பாடும் சமுதாயத்தின் இரண்டு கண்கள். ஒன்று போனால் அரைக்குருடு. இரண்டும் இழந்தால் முழுக்குருடு. முழுக்குருடனை யாரும் எதுவும் செய்யலாம். இத்தகையவன் உரிமை பெற்ற நாட்டில் வாழ்ந்தால்கூட அடிமைக்குச் சமமானவனே என்பதில் ஐயமேது?

குறுகிய காலத்தில் பல துறைகளில் பெரு முன்னேற்றம் அடைந்திருக்கும் சப்பானியர் தம் மொழி சோறு போடுமா என்று வினவவில்லை. நம் நாட்டில் எல்லா வகையிலும் உயர்ந்து நிற்கும் சீன மக்கள் தம்மொழி சோறு போடுமா என்று கேட்கவில்லை. இவர்கள் தங்கள் மொழிக்குத் தாங்களே சோறு போட்டு வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு வலிமையூட்டி வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், தமிழரில் பலரோ தம் தனிக்குணச் சிறப்பால், தாயை காக்கக் கூலி கேட்பார்போல, இன்று தமிழிடத்தில் சோறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழால் சோறு உண்பவர்களிலேயே பலருக்குத் தமிழின்பால் அன்பில்லை, மதிப்பில்லை, நன்றி கூட இல்லை; சோற்றுக்காகத் தமிழையே விற்கவும் துணிந்து விடுகிறார்கள். இந்த நிலையில் எல்லோருக்கும் சோறு போட்டால் இருக்கும் தமிழாவது இருக்குமா?

தமிழுக்காகவே தமிழ் வேண்டுவோர் தமிழுக்குப் போதும். சோற்றுக்காகவே மொழி வேண்டுவோர் சோறு போடும் மொழியே சொந்தமென்று போகட்டுமே!

1.தமிழ் சோறு போட வேண்டுமா? (பகுதி 1)
2.தமிழ் சோறு போட வேண்டுமா? (பகுதி 2)
3.தமிழ் சோறு போட வேண்டுமா? (பகுதி 3)

  • நன்றி: உங்கள் குரல் திங்களிதழ்

Monday, November 03, 2008

தமிழ் சோறு போட வேண்டுமா? (பகுதி 2)

தமிழ் சோறு போடுமா? என நாக்கில் நரம்பில்லாமல் பேசுபவர்கள், தமிழுக்கு உள்ள தனித்தன்மைகளை அறிவார்களா?


1.மொழியின் மற்றொரு பயன் அம்மொழியில் உள்ள நூல்களிலிருந்து கிடைப்பது. தமிழ் நூல்களில் இல்லாத படிப்பறிவுச் செல்வமும் பண்பாட்டு வளமும் வேறெம் மொழியில் உள்ளன? உயர்ந்த வாழ்க்கைக்கு உரிய நெறியும் அதன்படி ஒழுகும் முறைகளும் தமிழ் இலக்கியங்களிலும் அறிவு நூல்களிலும் கிடைக்குமளவுக்கு வேறெங்குக் கிடைக்கும்?

2.திருக்குறள் போன்ற அறிவு நூல் மனித வாழ்க்கையில் எத்துணைப் பெரும்பயனை உருவாக்கவல்லது! 99 மலர்களைப் பெயர்கூறி அடையாளம் காட்டும் கபிலரின் குறிஞ்சிப் பாட்டுப் போலொரு பழம் பாடல் தமிழிலன்றி வேறெம் மொழியில் உள்ளது? விவேக சிந்தாமணியின் விவேகம் கண்டால் வியக்காதவர் யார்?

3.தமிழின் சொல்வளம் என்பது வெறும் சொற்களின் எண்ணிக்கையா? அ•து ஓர் பழம் பெரும் இனத்தின் பல்லாயிரம் ஆண்டுப் பட்டறிவுப் பெட்டகம் அன்றோ!


4.பூ என்னும் ஒரு பொருளுக்கு அரும்பு, வீ, போது, முறுக்கு, மொட்டு, அலர், மலர் என அதன் ஒவ்வொரு பெயர் கொண்ட மொழி உலகில் எத்தனை உண்டு? கல்வியை முறையாகத் தமிழில் தொடங்கும் குழந்தை, பூ என்னும் ஒரு பொருளைத் தெரிந்து கொள்ளும்போதே அதன் பல நிலைகளையும் அவற்றுக்கான சொற்களையும் சேர்த்தே தெரிந்து கொள்கிறது! இப்படி ஒன்றை அறியும்போதே அதைப் பலவாகப் பகுத்தும் ஆய்ந்தும் பார்க்கப் பழகும் குழந்தையின் பகுத்தறியும் ஆய்வாற்றலும் எத்தகையதாக இருக்கும் எனச் சொல்லவும் வேண்டுமோ!

5.இதனால் அன்றோ தமிழர்கள் குறிப்பாகத் தமிழ் பயின்றவர்கள், அறிவியலிலும் கணிதத்திலும் அரும்திறம் பெற்றிலங்குகின்றனர்! உலகெங்கும் தலைசிறந்த மருத்துவர்களாகவும் கணினித் துறை வல்லுநர்களாகவும் திகழ்கின்றனர்.

6.ஒரு பழம் 75 காசு. 46 பழங்கள் எவ்வளவு என்றால், மற்றவர்கள் தாளில் எழுதிப் பெருக்கிக் கொண்டிருக்கிற அல்லது கணக்கியைத் (கல்குலேட்டரைத்) தேடிக் கொண்டிருக்கிற நேரத்தில், பெரிய அளவில் கல்வி இஆல்லாத, ஆனால் தமிழ் பயின்ற முதியவர்கள் "நாமுக்கா மூணு, அற முக்கா நாலரை ஆக முப்பத்து நாலு வெள்ளி ஐம்பது காசு (34.50)" என்று பட்டென்று கூறி விடுகின்றனரே! இந்தத் திறம் எங்கிருந்து கிடைத்தது. தமிழ் பயின்றதால் வந்த தனித்திறம் அன்றோ இது.

7.மொழியின் இன்னொரு பயன் அதன் இலக்கணத்தாலும் மொழி மரபாலும் உருவாகும் மனப்போக்கு, உறவினரை, மை வைபு (my wife), மை சன் (my son) என்னுடைய மனைவி, என்னுடைய மகன் என்று குறிப்பது ஆங்கிலத்திலும் மற்ற பல மொழிகளிலும் மரபாக இருக்கிறது. தமிழ் இலக்கணமோ, உறவினர்கள் உடைமைப் பொருள்கள் அல்லர்; அவர்களை எனக்கு மனைவி, எனக்கு மகன் என்று முறைப்பொருளில்தான் குறிப்பிட வேண்டும். "உடைய" என்னும் சொல்லைக் கொண்டு உடைமைப் பொருளாகக் குறிக்கக் கூடாது என்கிறது.


8.தமிழ் இலக்கணம் தருக்க முறையிலானது. அறிவியல் அடிப்படையிலானது; எனவே அதைக் கற்பவன் பகுத்தறிவுத் திறம் பெறுகிறான். எதையும் முறையாகச் சிந்திக்கின்ற, செய்கின்ற ஆற்றல் பெறுகிறான். தமிழின் பொருளிலக்கணம் இயற்கையோடு ஒட்டிய வாழ்க்கையைக் கற்பிக்கிறது. யாப்பிலக்கணம் கற்பவன் இசையறிவும் கற்பனை வளமும் பெறுகிறான். தமிழ் இலக்கியங்கள் பல்துறை சார்ந்த அறிவைக் கற்பவனுக்கு வழங்குகின்றன.

9.பொதுவாகத் தமிழ் இலக்கண இலக்கியங்களை முறையாகப் பயில்பவன், பகுத்தறிவுக் கூர்மை அடைகிறான். பண்பாடு கொண்டவனாகிறான். இசை, கணிதம், அறிவியல், மருத்துவம், ஆன்மிகம் என மனித வாழ்க்கைக்குத் தேவையான எண்ணற்ற துறைகளில் அடிப்படை அறிவு பெறுகிறான்.

10.தமிழ் இனியது; மெல்லியது. அதுபோலவே தமிழை முறையாகப் பயின்றோர் இனிமையான, மென்மையான, மேன்மையான இயல்புகள் கொண்ட பண்பாளர்களாக விளங்குபவர் என்பது கண்ணெதிரே எண்ணற்ற சான்றுகள் கொண்ட உண்மையன்றோ! இப்படி மொழியால் ஏற்படக்கூடிய பயன்கள் அனைத்தையும் செம்மையாகவும் சிறப்பாகவும் வழங்கி வருவதன்றோ; தமிழ், மொழி, மொழியால் விளையக்கூடிய பயன்களைத்தான் விளைக்கும்.

அதை விடுத்து, அது சோறுபோடுமா என்று குருட்டு வினாத் தொடுப்பவர்களை என்னவென்று சொல்வது? கண் பார்த்தற்குரியது. செவி கேட்டற்குரியது. கண்ணால் கேட்க முடியுமா என்று வினவுவதும் தமிழ் சோறு போடுமா என்று கேட்பதும் ஒரே தன்மையிலான பேதைமையன்றோ!

>>3-ஆம் பகுதி விரைவில் வரும்...

Thursday, October 30, 2008

தமிழ் சோறு போட வேண்டுமா? (பகுதி 1)


(மலேசியாவில் நல்லதமிழை முன்னெடுக்கும் ஏடாகிய 'உங்கள் குரல்' திங்களிதழில் அதன் ஆசிரியர் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது அவர்கள் எழுதிய கட்டுரை)


தமிழ் சோறு போடுமா? இப்போதெல்லாம் இப்படி வினவுவது தமிழரில் பலருக்குப் புது மரபாகி(Trend) விட்டது.

தங்களை முற்போக்குச் சிந்தனையாளர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கின்ற சிலர், தங்களின் 'முன்போக்கை' வெளிப்படுத்தும் முயற்சியில், வாயினிக்க எழுப்பும் வழக்கமான வினா இது. இவர்கள் சோறு உண்பது மட்டுமே வாழ்க்கை என்றும், எது சோறு போடுமென்று தோன்றுகிறதோ அதை மட்டுமே செய்வதுதான் வெற்றிக்கு வழி என்றும் கருதுபவர்கள்.

இன்னும் கொஞ்சம் நாளில் இவர்கள், சமயம் சோறு போடுமா? பண்பாடு சோறு போடுமா? உண்மை சோறு போடுமா? ஒழுக்கம் சோறு போடுமா? என்று வரிசையாக வினாக்களை எழுப்பி இவற்றுள் எதுவுமே சோறு போடாது என்றும், எனவே இவையெல்லாம் தேவையில்லை என்றும் கூறத் தொடங்கினாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

இந்தச் சோற்றுப் பட்டாளத்தை நோக்கி நாமும் சில வினாக்களை எழுப்பலாம்.

1.தமிழ் என்பது மொழி. மொழியின் முதற்பயன் நம் கருத்தைப் புரிந்து கொள்ளுமாறு வெளிப்படுத்தவும் பிறர் கருத்தை நாம் சரியாகப் புரிந்து கொள்ளவும் கருவியாக இருப்பது. இந்தப் பணியைச் சரியாகவும் திறம்படவும் செய்வதில் வேறு எந்த மொழியையும் விடத் தமிழ் தாழ்ந்ததன்று.

2.இன்று அனைத்துலக மொழியாக முதனிலை பெற்றுள்ள ஆங்கிலத்தையும் மிஞ்சிய கருத்துக் தெளிவு கொண்டது தமிழ். எடுத்துக் காட்டுகள் எத்தனையோ உள. ஆங்கில வாக்கியத்தில் "யூ" (You) என்னும் சொல் ஒருவரைக் குறிக்கிறதா பலரைக் குறிக்கிறதா என்பதை நாம் புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் ஆங்கிலத்தில் ஒருவருக்கும் பலருக்கும் அந்த ஒரே சொல்தான் பயனீட்டில் உண்டு. தமிழில் நீ என்றும் நீங்கள் என்றும் தனித்தனி சொல் உண்டு. அ•றிணையான 'அவை'க்கும் உயர்திணையான 'அவர்'களுக்கும் ஆங்கிலத்தில் 'தேய்' (They) என்னும் ஒரே சொல்தான். மாமாவும் 'அங்கிள்'தான் சிற்றப்பாவும் 'அங்கிள்'தான். அத்தையும் 'ஆண்டி'தான். சிற்றன்னையும் 'ஆண்டி'தான்.

3.மலேசியாவில் நடந்த முதலாவது தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் மறைந்த பேராசிரியர் தனிநாயக அடிகள் ஒரு வினா எழுப்பினார். "நீ உன் தந்தைக்கு எத்தனையாவது பிள்ளை?" என்றும் வினாவை ஆங்கிலத்தில் ஒரே வாக்கியத்தில் கூற இயலுமா என்றார். இன்று வரை முடியும் என்று யாரும் முன்வந்து விளக்கக் காணோம்.

4.இன்றைய அறிவியலுக்குத் தேவையான பல சொற்கள் தமிழில் இல்லையே என அலுத்துக் கொள்கிறார்கள் சிலர். அன்றைய அறிவியல் ஆக்கங்களுக்கான சொற்கள் எல்லாம் ஆங்கிலத்தில் மட்டும் முன்னரே இருந்தனவா என்ன? ஆய்வுகளும் கண்டு பிடிப்புகளும் ஆங்கிலத்திலேயே செய்யப்படுவதால் அவற்றுக்கான புதிய சொற்களும் அதிலேயே உருவாக்கப்படுகின்றன.

5.பாதிக்குமேல் பிறமொழிச் சொற்களை வைத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் ஆங்கிலத்தில் புதிய சொற்களை உருவாக்க முடியும்போது தன்காலிலேயே நிற்கவல்ல தமிழில் அதைச் செய்ய முடியும். அப்படிச் செய்யாமலிருப்பது தமிழரின் குறையே அன்றித் தமிழின் குறையன்று.

1.தமிழ் சோறு போட வேண்டுமா? (பகுதி 1)

Sunday, October 26, 2008

திருத்தமிழின் தீபாவளி வாழ்த்து


Friday, October 24, 2008

குழந்தையின் கல்லறையில் கோட்டை எழுப்பாதீர்


முக்கிய அறிவிப்பு:-
இந்தக் கட்டுரை பெற்றோராக இருப்பவர்களுக்கும் அறிவுப் புகட்டும் ஆசிரியர்களுக்கும் மட்டுமே..!

****************************
“டேய் மார்ட்டினைப் பார்த்தியாடா அவன் 95 மார்க்கு வாங்கியிருக்கான். இத்தனைக்கும் அவனோட அப்பா, அம்மா ரெண்டு பேருமே நல்லா படிச்சவங்க இல்ல. அவ்வளவா வசதிவேறு இல்லாதவங்க. கிராமத்துல இருந்து வந்தவன். பள்ளிக் கூடத்திற்கு நல்ல சாப்பாடு கூட அவன் கொண்டுவர்றதில்லை. யாரோ அவனோட மாமா அவனை படிக்க வைக்கிறாராம். அப்படியிருந்தும் அந்தப் பையன் நல்லா படிக்கிறான். நல்லா படிச்ச எங்களுக்கு பொறந்துட்டு ஏண்டா எங்க மானத்தை வாங்குற? அடுத்த முறை அவனை விட நீ ஒரு மார்க்காவது கூட வாங்கனும் இல்லாட்டி செமத்தியா அடி விழும்” என்று அந்தப் பிஞ்சின் நெஞ்சில் தாழ்வு மனப்பான்மையையும் சக மாணவனைப் பற்றியான பொறாமை எனும் நஞ்சையும் கலக்கின்றனர் பெற்றோர்கள்...

தொடர்ந்து படிக்க இங்கே சொடுக்கவும்

நன்றி: வே.மதிமாறன் வலைப்பதிவு

Friday, October 17, 2008

தமிழ்நெறி – தமிழ்மீட்புத் திங்களிதழ்


தமிழைக் காக்கவும் தமிழ்த்தேசியத்தை வென்றெடுக்கவும் மலேசியாவில் வெளிவரும் ஒரே திங்களிதழ் தமிழ்நெறி.

தமிழர் ஒவ்வொருவரும் கட்டாயம் வாங்கிப்படிக்க வேண்டிய திங்களிதழ் தமிழ்நெறி!

தமிழ்நெறி அத்தோபர் திங்களிதழ் வந்துவிட்டது! அதன் உள்ளடக்கங்கள்...


1.அறிவியலையும் கணிதத்தையும் மீண்டும் தாய்மொழியில் பயிற்றுவிக்க வேண்டும்.
2.மனித வளர்ச்சியும் விருத்தியும் தொடர்பான கோட்பாடுகள்.
3.வீழ்ச்சியுறும் தமிழினத்தில் எழுச்சி வேண்டும்.
4.'மக்கள் ஓசை' திருமாவளவனைச் சீண்டியது தமிழ் இனமான உணர்வாளர்களைச் சீண்டியதாகும்.
5.பாலகோபாலன் நம்பியார் இப்படிச் செய்யலாமா?
6.நடிகை தொப்புளில் ஓடுகிறது நாளிதழ்
7.பூச்சார் பூச் பூச் பூக்கா! நாக்கா!
8.தமிழர்களுக்குத் தமிழ்மொழி தாய்ப்பாலுக்கு நிகரானது
9.யாருக்கும் தமிழர்கள் அஞ்சத் தேவையில்லை!
10.புரட்சித் துறவி வள்ளலார்.

இன்னும், சொல்லும் பொருளும், தமிழ்நெறிக் கல்வி, தமிழ்நெறித் தெளிவு, சிறுகதை, தமிழ்க் கலைச்சொற்கள், இலக்கணம், பண்டார் பாரு செந்தூல் இடநிலைப்பள்ளி மாணவர்களின் தமிழ்நெறிக் கலந்துரயாடல்

என பல சூடான, சுவையான, இனமான உணர்வூட்டும் கட்டுரைகள்; செய்திகள்; துணுக்குகளைத் தாங்கி மலர்ந்துள்ளது. தவறாமல் உடனே வாங்கவும்..!

மேல்விளக்கம் பெற:- தமிழ்நெறி, Lot 274, Kampong Bendahara Baru, Jalan Sungai Tua, 68100 Batu Caves, Selangor. தொ.பேசி:- 03-61874103

Thursday, October 09, 2008

களவைக் கற்கலாமா? (தமிழமுது 4)

நாம் அடிக்கடி கேட்கும் அல்லது பயன்படுத்தும் பழமொழிகளில் "களவும் கற்று மற" என்ற ஒரு பழமொழி உண்டு.

களவு என்றால் திருட்டு. அப்படியானால், இந்தப் பழமொழியின் பொருள் திருட்டையும் கற்றுக்கொண்டு பிறகு மறந்துவிட வேண்டும் என்றாகும். களவை எதற்குக் கற்க வேண்டும்; கற்ற பிறகு எதற்காக மறக்க வேண்டும்?

'களவும் கற்று மற' என்பது தவறு.
'களவும் கத்தும் மற' என்பதே சரி.

களவு கத்து(சூது) இரண்டையும் நாடக்கூடாது என்பதே இதன் பொருள். பேச்சு வழக்கில் பிழையாகிப் போய்விட்ட இந்தப் பழமொழியை இனிச் சரியாகப் பயன்படுத்துவோம்.

நாட்டுபுறப் பாடல்(1): தாலாட்டுப் பாட்டு

மிழர்களின் வாய்மொழி இலக்கியமாக சிறப்புப் பெற்றவை நாட்டுப்புறப் பாடல்கள். ஏட்டிலும் எழுத்திலும் எழுதிவைக்காத கரணியத்தால், இன்று நாட்டுப்புறப் பாடல்கள் மெல்ல மறைந்து வருகின்றன.

தமிழரின் வாழ்வோடு இணைந்து இயங்கிய நாட்டுப்புறப் பாடல்கள் அழிந்துவிட்டால் கூடவே, தமிழர்களின் வரலாற்று, பண்பாட்டு, பாரம்பரிய, கலை, வாழ்வியல் தடங்களும் சுவடுகள் தெரியாமல் அழிந்து போய்விடும்.

ஆகவே, தமிழர் மண்ணிசையாகிய நாட்டுப்புறப் பாடலை மீட்டெடுக்க வேண்டிய முகமையான கடமை தமிழர்க்கு உண்டு. அத்தகு மீட்டெடுப்பு பணிக்குத் துணையாக இந்த நாட்டுப்புறப் பாடல் கட்டுரைத் தொடர் அமையுமானால் அடியேன் மிகவும் பெருமையடைவேன்.

இந்தக் கட்டுரைத் தொடர், திருத்தமிழ் வலைப்பதிவில் அவ்வப்போது இடம்பெறும். ஆகவே, திருத்தமிழ் அன்பர்கள் தவறாமல் படிக்குமாறும் பரப்புமாறும் அன்புடன் வேண்டுகிறேன்.

*******************

நாட்டுப்புறப் பாடல் வரிசையில் முதலாக 'தாலாட்டுப் பாட்டு' பற்றி தெரிந்து கொள்வோம்.

தாலாட்டுப் பாட்டு என்பது குழந்தையைத் தொட்டிலில் போட்டு தூங்க வைக்கும் போது பாடப்படுவது. மிகப் பழங்காலம் தொடங்கி இந்தத் தாலாட்டுப் பாட்டு தமிழரிடையே இருந்து வந்துள்ளது. படிப்பறிவு இல்லாத சிற்றூர்(கிராம) தாய்மார்கள் தாங்களாகவே சொற்களை அடுக்கியும் இட்டுக்கட்டியும் பாடுவது 'தாலாட்டுப் பாட்டு'. தாலாட்டுப் பாட்டிலே குழந்தைக்கு அன்பைக் காட்டும் வேளையில் தேவையான கருத்துகளும் சொல்லப்படும்.

தாலாட்டுப் பாட்டு பற்றிய குறிப்பு முத்தொள்ளாயிரம் என்னும் இலக்கியத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:-

இரியல் மகளி ரிலைஞெமலு ளீன்ற
வரியிளஞ் செங்காற் குருவி – அரையிரவின்
ஊமன்பா ராட்ட வுறங்கிற்றே செம்பியன்றன்
நாமம்பா ராட்டாதார் நாடு (முத்தொள்ளாயிரம்-77)

அதாவது, "போர் தொடங்கிவிட்டது. பெண்கள் அனைவரும் ஊருக்கு வெளியே உள்ள சோலைகளில் போய் மறைந்து கொண்டார்கள். அவர்களுடன் கருவுற்ற மகளிரும் உடன் தங்கி இருந்தார்கள். அங்கே, அவர்கள் ஈன்றெடுத்த குழந்தைகள் இலைகள், சருகுகளின் மேல் கிடந்து அழுகின்றன. அச்சமயத்தில், (ஊமன் பாராட்ட உறங்கிற்றுக் குழவி) தாலாட்டுப் பாடல் கேட்டு குழந்தைகள் தூங்கிவிட்டன" என்கிறது அந்தப் பாடல்.

தால் + ஆட்டு என்பதே தாலாட்டு என்றாகும். தால் என்றால் நாக்கு. தால் + ஆட்டு என்றால் நாவை அசைத்துப் பாடுவது எனப் பொருளாகும். "ஆராரோ... ஆரிரரோ..." என்றுதான் தாலாட்டுப் பாட்டு தொடங்கும். "ஆராரோ... ஆரிரரோ..." ஓசை பாடலில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். இந்த இனிய ஓசையைக் கேட்டுக்கொண்டே குழந்தை தூங்கிவிடும்.

வாருங்கள் நாமும் ஒருமுறை தாலாட்டுப் பாடுவோம்!

ஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
மானே மரகதமே - என் கண்ணே
மாசிலாக் கண்மணியே!

ஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
அப்பா வருவாரே – என் கண்ணே
ஆசமுத்தம் தருவாரே!

ஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
மாமன் வருவாரே – என் கண்ணே
மாங்கனிகள் தருவாரே!

ஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
அத்த வந்தாக்கா – என் கண்ணே
அல்லிப்பூ தருவாளே!

Sunday, October 05, 2008

திருவருட்பேரொளி வள்ளலார்

இன்று அத்தோபர் 5ஆம் நாள், திருவருட்பேரொளி வள்ளல் பெருமானாரின் அருள்வருகைத் திருநாள்.
வள்ளற் பெருமான்
திருவருள் பெருமைக்கு வந்தனம்! வந்தனம்!

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
*************************************


Thursday, October 02, 2008

அண்ணல் காந்தியடிகள் தமிழ்ப்பற்று

இன்று 2.10.2008 அண்ணல் காந்தியடிகளின் 139ஆம் பிறந்த நாள். அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்து வெற்றிகண்ட, உலகின் முதல் மாமனிதரான அண்ணலின் நினைவாக இக்கட்டுரை இடம்பெறுகிறது.

*************************************************


இவ்வுலகில் கோடானுகோடி ஆத்மாக்கள் இருக்க ஒரே ஒருவர் மட்டுமே 'மகாத்துமா' என போற்றப்படுகிறார். அவர்தான் இந்திய நாட்டின் விடுதலைத் தந்தையும், 'அகிம்சை' எனப்படும் அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்து, உலகத்தின் பார்வையைத் தம் பக்கம் திருப்பிய அமைதிப் போராளி மகாத்மா காந்தி அவர்கள். இவருடைய இயற்பெயர் மோகன்தாசு காந்தி. இவர் 2.10.1869 அன்று இந்திய நாட்டின் குசராத்து மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார்.

மகாத்மா காந்தி என்றாலே அவருடைய அறவழிப் போராட்டமும், 'அகிம்சையும்', அமைதிப் போரும், எளிமையும், இரக்க குணமும்தான் எல்லாருடைய கண்முன்னால் நிலழாடும். இத்தனை உயர்பண்புகளும் காந்தியிடம் உருவாகுவதற்குப் பல காரணியங்கள் இருக்கலாம். அவற்றுள் மிக முக்கியமாகத் தமிழும், திருக்குறளும், தமிழ்நாடும் பெரும் பங்காற்றியுள்ளன என்றால் நம்மில் பலருக்கு பெரும் வியப்பாக இருக்கலாம்.

காந்தி உருசிய நாட்டு அறிஞர் 'லியோ டால்சுடாய்' மீது ஆழ்ந்த பற்று கொண்டவர். ஒருமுறை 'லியோ டால்சுடாய்' எழுதிய ஒரு கட்டுரையில் திருக்குறளின் இன்னா செய்யாமை அதிகாரத்திலிருந்து 'இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்துவிடல்' என்ற குறட்பாவைப் பற்றி எழுதியிருந்தார்.

லியோ டால்சுடாய் மேற்கோள் காட்டிய குறட்பா காந்தியின் உள்ளத்தைத் தொட்டு, அவர் ஆன்மா(ஆத்மா)வில் கலந்தது. மிக உயர்வான கருத்தைச் சொல்லும் இப்படி ஒரு நூல் இந்தியாவில் உள்ளது என்பதை அறியாமல் இருந்த காந்தி மிகவும் வருந்தினார். திருக்குறள் நூலை எப்படியாவது படித்துவிட விரும்பினார். பெரும் முயற்சி மேற்கொண்டு திருக்குறளைத் தேடினார். திருக்குறள் தமிழ்மொழியில் எழுதப்பட்ட ஒரு அறநூல் என்பதை கண்டறிந்தார்.

ஆனால், தமிழ் தெரியாத காந்தி திருக்குறளைப் படிக்க முடியாமல் மொழிப்பெயர்ப்பு நூல்களைப் படித்து திருக்குறள் கருத்துகளில் மனதைப் பறிகொடுத்தார். திருக்குறளை அதன் மூலமொழியான தமிழிலேயே படிக்க வேண்டும் என்று காந்தி ஆசைப்பட்டார். அதனால், தமிழ்மொழியைப் படித்தார்.

"திருக்குறளை அதன் மூலத்திலேயே படிப்பதற்காகவே, யான் தமிழ் கற்றேன்" என்று இதனை அவரே பதிவு செய்திருக்கிறார்.

கோட்டு சூட்டுடன் இருந்த காந்தியை வெள்ளாடைத் துறவிபோல மாற்றிய பெருமையும் தாய்த் தமிகழத்திற்கே உரியதாகும். அந்த வரலாற்று நிகழ்வு 1921இல் மதுரையில் நடந்தது. அரை நிருவாணமாகவும் கிழிந்த ஆடைகளுடனும் தன் இந்திய நாட்டு உடன்பிறப்புகள் இருப்பதைப் பார்த்த காந்தியின் மனம் தன் வழக்கமான குஜராத்தி பாணி உடையை துறந்து அரை நிருவாண கோலத்திற்கு மாறியது.

மேலும், தமிழ், தமிழ் நாடு, தமிழ் மக்கள் தொடர்பாகக் காந்தி செய்துள்ள பணிகளும் எழுதியுள்ள குறிப்புகளும் சில:-

1.தமிழை நன்றாகக் கற்றுக்கொண்ட காந்தி 'இந்தியன் ஒபினியன்' என்ற இதழை தமிழிலும் நடத்தினார். அன்றைய தமிழகத்தின் செய்திகள் மற்றும் தலைசிறந்த பெரியோர்களைப் பற்றி இந்தியன் ஒபினியனில் எழுதிவந்தார்.

2.தமிழைக் கற்பதிலும், தமிழ்ப் பண்பாடு இலக்கியங்களை அறிந்து கொள்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அண்ணல் காந்தி தம் துணைவியார் கசுதூரிபாவையும், மகன் மணிலாலையும் தமிழகம் அனுப்பினார்.

3.தமது மூன்றாவது மகனான தேவதாசுக்கு இலட்சுமி என்ற தமிழ்பெண்ணை மணமுடித்து வைத்தார்.

4.திருக்குறள் மீது அளவற்ற மரியாதை கொண்ட காந்தி, "திருவள்ளுவ மாமுனிவரை இன்னும் வட இந்தியர்கள் தெரிந்து கொள்ளவில்லையே...." என்ற ஆதங்கத்தையும் தெரிவித்துள்ளார்.

5.ஒளவையின் ஆத்திச்சூடி, கவிச்சக்ரவர்த்தி கம்பனின் இராமாயணம், மாணிக்கவாசகரின் திருவாசகம் போன்றவைகளைத் தமிழாசிரியர்கள் துணைகொண்டு படித்தார். அதோடு, அவை பற்றி பொதுக்கூட்டங்களில் மேற்கோள் காட்டி பேசியுமுள்ளார்.

6.அவரது சேவாகிராமத்திலும், சபர்மதி ஆசிரமத்தலும் நடந்த வழிபாடுகளிலும் பூசைகளிலும் திருவாசகப்பாடல் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

7.சபர்மதி ஆசிரமத்தில் தமிழ் பள்ளிகூடம் ஒன்றையும் காந்திநடத்தினார்.

8.மதுரைமீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து வழிபட்டபோது, 'எனதுநீண்டநாள் ஆசை நிறைவேறியது' என நெஞ்சுருக எழுதிவைத்தார் மகாத்மா.


9.தமிழகத்தில் திலகருக்கு இணையாக நாட்டுபற்று உணர்வை; எழுச்சியை உருவாக்கிய வ.உ.சிதம்பரனார் பற்றியும், சிறைமீண்டு சிதம்பரனார் செய்து வந்த தொண்டுகள் பற்றியும் மிக உயர்ந்த எண்ணம் கொண்டிருந்த காந்தி, தென்னாப்பிரிக்காவிலிருந்து நிதிதிரட்டி தென்நாட்டு திலகருக்கு அனுப்பி உதவியிருக்கிறார்.

10.தென்ஆப்பிரிக்கச் சத்யாகிரகம் அங்கு குடியேறிவாழ்ந்த இந்தியர்களுக்காக ஆரம்பிக்கபட்டதென்றும், போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் தமிழர்களே மிகுதியானவர்கள் என்றும் காந்தியடிகள் தமது சொற்பொழிவுகளிலும், கட்டுரைகளிலும் பலமுறை பதிவுசெய்துள்ளார்.

11.தென்ஆப்பிரிக்க போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு முதன்முதலில் 27 வயது இளைஞராகக் காந்தி 1896ல் தமிழகத்தில் பரப்புரை செய்தார். அப்போது பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் "தமிழர்கள் ஒரு சிறு அவமதிப்பையும் சகித்து கொள்ளாத இனத்தினர்" என்று பேசியுள்ளார்.


12.தென்ஆப்பிரிக்கவிடுதலை போராட்டத்திற்கு இறைவனால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டவர்கள் தான் தமிழர்கள்.....எந்தவித பலனையும் எதிர்பாராமல் பணியாற்றிய அந்த எளிய தமிழர்கள் தான் எனக்கு உணர்வூட்டினார்கள். அவர்களெல்லாம் தியாகம் செய்ய எங்களுக்குப் புகழ்கிடைத்தது என்று எழுதியுள்ளார்.

13.காந்தியை முதன்முதலாக உலகத்திற்கு "மகாத்மா" என்று அடைமொழியிட்டு அறிவித்தவர் 'சுதேசமித்ரன்' இதழ் ஆசிரியர் ஜீ.சுப்பிரமணிய ஐயர்தான்!

14.காந்தியை 'தேசத்தந்தை' என்று இந்தியாவிற்குத் தெரிவித்தவர்கள் தமிழக மாணவர்கள் தாம்!

15.காந்தி வாழ்க்கை வரலாற்றுச் செய்திகள் வெளியாகியது இந்தியமொழிகளிலேயே முதன்முதலில் தமிழில் தான்!

16.காந்தியடிகள் பற்றிய ஆவணப்படத்தை உருவாக்குவதற்கு அகிலமெல்லாம் சுற்றி, மூன்றாண்டுகள் முழுமுச்சாய் தவமிருந்து பதிவுசெய்தவர் தமிழரான ஏ.கே.செட்டியார்.தான்!

அண்ணல் காந்தியடிகளைப் போற்றி மதிக்கின்ற தமிழ் மக்கள், அந்த மகாத்மாவே போற்றிய தாய்தமிழை அறிந்து; புரிந்து; தெளிந்து உயிரினும் மேலாகப் போற்றிட வேண்டும்.

Saturday, September 27, 2008

மக்கள் ஓசையைச் சிந்திக்கும் வேளையில்

மக்கள் ஓசையின் ஆசிரியர் திரு.எம்.இராஜன் அவர்களுக்கு எழுதப்பட்ட இந்த மடல் இங்கே திருத்தமிழ் அன்பர்களின் பார்வைக்காக வெளியிடப்படுகின்றது.

********************************
மலேசியத் தமிழ்ச் செய்தித்தாள்கள் பற்றி இரா.திருமாவளவன் கூறிய கருத்து தொடர்பில் என்னுடைய எண்ணங்களை இங்கே பதிவிட விரும்புகிறேன்.


முதலில், சில ஐயங்களுக்கு தெளிவு காண விழைகிறேன். அதாவது, இரா.திருமாவளவன் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவில் நாளிதழ்களைச் சுட்டிப் பேசிய கடுமையான பேச்சை மக்கள் ஓசை பெரிதுபடுத்தியது ஏன்?

முதல் நாள் "இரா.திருமாவளவன் பாய்ச்சல்" என்று செய்தி போட்டுவிட்டு, மறுநாள் முதல் பக்கத்தில் முதல் செய்தியாக அதுவும் மிகவும் எடுப்பாக "திருமாவளவனே நாவை அடக்கு" என்று மிகவும் காட்டமாகத் தலைப்பிட்டு இந்தச் செய்தியைப் பெரிதுபடுத்தியது ஏன்?

மக்கள் ஓசை இரா.திருமாவளனின் கருத்தை அடித்துப்போட மறுப்புச் செய்திகளை வெளியிட்டதா? அல்லது திருமாவளவன் என்ற ஒரு தமிழினத் தலைவனை அடித்து நொறுக்க செய்தி வெளியிட்டதா?

கிள்ளான் வாசகர் வட்டத் தலைவரின் அறிக்கைக்குப் பெரிய அழுத்தம் கொடுத்து வெளியிட்டு இந்தச் சிக்கலை பூதாகரமாக்கிய மக்கள் ஓசை மறுநாளே இரா.திருமாவளனின் "தமிழ் தமிழன் பற்றிப் பேசுவது என் பிறப்புக் கடமை" என்ற பதிலடியில் சுருண்டு படுத்துக்கொண்டது.

மறுநாள் மக்கள் ஓசையைத் தூக்கி நிறுத்த முயன்ற பினாங்கு மதியழகனும் தோற்றுப் போனார். கிள்ளான் நம்பியாரும், பினாங்கு மதியழகனும் இரா.திருமாவளவன் சொன்ன அடிப்படைக் கருத்தை விட்டுவிட்டு தமிழ் நாளிதழ்கள் அதைச் செய்தன இதைச் செய்தன என்று நீட்டி அளந்தவை எதுவுமே எடுபடவில்லை. காரணம், தமிழ் நாளிதழ்களின் சாதனைகள் பற்றி இரா.திருமாவளவன் கேள்வி எழுப்பவே இல்லை.

இதில் வேடிக்கை என்னவென்றால், நம்பியார், மதியழகன் இருவருமே ஊடகங்கள் நடிகைகளின் கவர்ச்சிப் படங்களைப் போடுகின்றன என்ற இரா.திருமாவளவனின் அடிப்படைக் குற்றச்சாட்டை வழிமொழிந்ததுள்ளது தான்.

மக்கள் ஒசையாகட்டும், நம்பியாராகட்டும், மதியழகனாகட்டும் இரா.திருமாவளவனைப் பற்றி பேசுவதற்கு முன்பாக, அவர் அவ்வாறு பேசியதற்கான பின்புலங்களை ஆராய்ந்திருக்க வேண்டும்; அடிப்படைகளை ஆய்ந்திருக்க வேண்டும்.

இரா.திருமாவளவன் கடந்த கால் நூற்றாண்டு காலமாகத் தமிழ் மொழிக்கும் இனத்திற்கும் தன்னையே ஈகப்படுத்திக்கொண்ட ஒரு தமிழினப் போராளி. அவர் தமிழையும் தமிழர் நலனையும் முன்னெடுக்கும் தமிழ் நெறிக் கழகம் என்ற ஒரு இயக்கத்தின் தேசியத் தலைவர். அவர் ஒரு கருத்தை முன்வைக்கும் போது இவ்வாறுதான் மிகவும் உறுதியாக இருக்க வேண்டும். அதனால்தான், தன்னுடைய மறுப்பறிக்கையிலும் "தெளிந்தும் தெரிந்தும்தான் அவ்வாறு பேசினேன்" என்று சொல்லியிருந்தார்.

மேலோட்டமாகப் பார்ப்பவர்களும் அல்லது தமிழ்ப் பற்றாளர்கள் போல் நடிப்பவர்களும் அல்லது தமிழ் மொழி இன உணர்வற்றவர்களும் இரா.திருமாவளவன் 'திமிர்' பிடித்தவர் என கருதலாம். ஆனால், கொள்கை உறுதியும் வினைத் தூய்மையும் வாய்மையும் உள்ள ஒரு மொழி இனத் தலைவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு இரா.திருமாவளனே சான்று.

எந்த ஒரு அச்சத்திற்கும், நயப்பிற்கும், புகழுக்கும், விளம்பர வெளிச்சத்திற்கும் அடிமையாகாமல் பொதுமக்கள் நலம்நாடி புதுக்கருத்தைத் துணிவோடு முன்வைக்கும் தலைவர்களே இந்த இனத்திற்குச் சரியான வழிகாட்டிகளாக இருக்க தகுதி உள்ளவர்கள். அந்தவகையில், இரா.திருமாவளவன் நெஞ்சுரம் கொண்ட தலைவராகவே எழுந்து நிற்கிறார்.

இதே வகையான பண்பு ஏற்கனவே பல தமிழினச் சான்றோர்களிடமும் தலைவர்களிடமும் வெளிப்பட்டிருக்கிறத்து. அவ்வளவு ஏன், அன்றைய எழுத்து இமயம் அமரர்.ஆதி.குமணனிடமும் இன்றைய எழுத்துச் சிகரம் எம்.இராஜனிடமும் பல நேரங்களில் இதே பண்பு வெளிப்பட்டிருப்பதை இங்கே நினைவுகூற விரும்புகிறேன்.

ஆக, தான் சார்ந்த இனத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் சீரழிவுகளைப் பார்த்துப் பொங்கி எழுந்த இரா.திருமாவளவன் மீது என்ன தவறு இருக்கிறது?

கண்முண்ணே நடக்கின்ற குமுகாயக் கேடுகளையும் அந்தக் கேடுகளைச் செய்துவரும் ஊடகங்களையும் உரிமையோடு கேள்வி கேட்டதில் எங்கே இருக்கிறது தவறு?

சொந்த மொழியின் சொந்த இனத்தின் நன்மைக்காகக் குரல்கொடுத்திருக்கும் இரா.திருமாவளவனைக் கண்டிப்பது கண்டனத்திற்குரிய செயலாகும்; தன் கண்ணையே குத்திக்கொள்வதற்கு ஒப்பாகும்.

செய்தி ஊடகம் எப்படியும் செயல்படலாம் என்று இல்லாமல், ஓர் உறுதியான கொள்கையோடு செயல்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். ஓர் இனத்தின் சிந்தனைப் போக்கை வடிவமைக்கும் பொறுப்பில் இருக்கின்ற ஊடகங்கள் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும். தமிழ் மொழியை; தமிழ் இனத்தை சரியான இலக்கை நோக்கி நகர்த்திச் செல்லவேண்டிய செய்தித்தாள்கள் தொடக்கத்திலேயே குமுகாயத்தை 'காயடித்து' விடக்கூடாது.

ஊடகத்துறை என்பது வணிகத்தோடு தொடர்புடையதுதான். வணிக நோக்கம் கருதி ஒரு எல்லைக்குட்பட்ட நிலையில் சிலவற்றை வெளியிடுவதில் தவறில்லைதான். அதற்காக, அடி மடியிலே கைவைகின்ற கதையாக இரு இனத்தின் மொழியின் அடிப்படை மரபுகளில் கைவைக்கலாமா? மொழியின நலனை வணிகத்திற்காகவும் பணத்திற்காகவும் விட்டுக்கொடுக்கலாமா? சமுதாய நலனைப் பாதுகாக்கிறோம் என்று ஒரு பக்கம் கூவிக்கொண்டே மறுப்பக்கம் சமுதாயத்தின் அடித்தளங்களை ஆட்டிப்பார்க்கலாமா?

மற்றைய ஊடகங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து தமிழ் ஊடகங்கள் மாற நினைப்பது கடைந்தெடுத்த மடைமையாகும்; புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக் கொள்ளும் அறியாமையாகும். தமிழ் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு ஆகியவற்றுக்கு நிலையான மரபும், வரலாறும் உண்டு. எந்த நேரத்திலும் தமிழ் மரபுக்குக் கேடு ஏற்படாதவாறு தமிழ் ஊடகங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

நாட்டில் பெருமளவில் இருக்கின்ற குப்பை நாளிதழ்கள், வார, மாத இதழ்களுக்கு இடையில் சில நல்ல நாளிதழ், வார, மாத இதழ்களும் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

சில இதழ்கள் (ம.ஓசை அல்ல) தமிழ்மொழி, தமிழ்ச் சான்றோர் பற்றிய செய்திகளுக்கு முழுப்பக்கத்தையே ஒதுக்குகின்றன. சில இதழ்கள் (ம.ஓசை அல்ல) அடிப்பகுதியில் பக்கத்திற்குப் பக்கம் திருக்குறளைப் போடுகின்றன. சில இதழ்கள் (ம.ஓசை அல்ல) ஆங்காங்கே தமிழ், தமிழினம், தமிழ் மரபு சார்ந்த துணுக்குகளை அழகாக தருகின்றன. சில இதழ்கள் (ம.ஓசை அல்ல) நல்லதமிழ்ச் சொற்களை மிகப் பரவலாகப் பயன்படுத்துகின்றன. சில இதழ்கள் (ம.ஓசை அல்ல) பிறமொழிச் சொற்களுக்கு நிகரான நல்லதமிழ்ச் சொற்களைப் பட்டியல் போடுன்றன. சில இதழ்கள் (ம.ஓசை அல்ல) குழந்தைகளுக்கான நல்லதமிழ்ப் பெயர்களை வெளியிடுகின்றன. தமிழ்நெறி, உங்கள் குரல் போன்ற இதழ்கள் நல்லதமிழையே முழுமையாகப் பயன்படுத்துகின்றன.

ஆயினும் சில செய்தித்தாள்கள் இன்னமும் இரட்டை வேடம் போட்டு நடித்துக்கொண்டுதான் இருக்கின்றன. மக்கள் விரும்புகிறார்கள் என்று வாசகர் மீது பழியைப் போட்டுவிட்டு கண்ட கண்ட குப்பைகளையும் கண்ணறாவிகளையும் நமது செய்தி ஊடகங்கள் வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. வாசகர்களை மடையர்களாக ஆக்கிக்கொண்டுதான் இருக்கின்றன.

"எங்களுக்கு கொலை, வெட்டுக்குத்து, கற்பழிப்புச் செய்திகள் முதல் பக்கத்திலேயே வேண்டும்" என்றும்,

"எங்களுக்கு நடிகைகளின் கவர்ச்சிப் படங்கள் பெரிது பெரிதாக வேண்டும்" என்றும்,

"எங்களுக்குத் திரையுலக கிசு கிசு செய்திகள் அதிகமாக வேண்டும்" என்றும்

வாய்மொழியாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ அல்லது வாசகர் விழா நிகழ்ச்சிகளிலோ கேட்டுக்கொண்ட ஒரு வாசகரை மக்கள் ஓசை அடையாளம் காட்ட முடியுமா?

ஆனால், இந்தக் குப்பைகள் எல்லாம் வேண்டவே வேண்டாம் என காலம் காலமாகக் கதறிக்கொண்டிருக்கும் ஆயிரம் பேரை நாம் அடையாளம் காட்ட முடியும்.

ஆகவே, சமுதாய நலன் கருதி தட்டிக் கேட்பது தவறா? குமுகாயத்தைக் கெடுக்கும் கேடுகளைக் கண்டிப்பது தவறா? காசு கொடுத்து நாளிதழ் வாங்கும் எங்களின் மனக்குமுறலைக் கொட்டுவது தவறா?

எத்தனையோ முறை எத்தனையோ பேர் முறையாக, அமைதியாக, நாசுக்காகச் சொல்லிப் பார்த்தோம். கேட்டார்களா ஊடகக்காரர்கள்? இப்போது, இரா.திருமாவளவன் ஒரே போடாகப் போட்ட பின்பு மக்கள் ஓசை அவருக்கெதிராக சீறிப் பாய்கிறது. பண்பாடாக பேச வேண்டும்; மேடை நாகரிகத்தோடு கருத்துச் சொல்ல வேண்டும் என்று புத்திமதி சொல்கிறது.

பண்பாடாக, நாகரிகமாக சொன்ன போதெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குபோல ஆகிய கதையெல்லாம் எங்களுக்குத் தெரியாத என்ன? எங்களின் கேல்விகளுக்கு உறுதியான எந்தப் பதிலையும் சொல்லாம் மழுப்பிய கதையெல்லாம் மறக்கக் கூடியதா என்ன?

இதற்கெல்லாம், முத்தாய்ப்பாக இரா.திருமாவளவன் பேச்சு அமைந்துள்ளது. செய்தி ஊடகங்களுக்கு நன்றாக உறைக்கும்படி பேசியிருக்கிறார். இருந்துங்கூட பாருங்கள், மக்கள் ஓசையைத் தவிர வேறு எந்த நாளிதழுக்கும் உறைக்கவேயில்லை. வழக்கம் போல், எருமை மேல் மழை பெய்தது போல இதைப் பற்றி கண்டுகொள்ளாமலேயே இருந்து விட்டனர்.

மக்கள் ஓசை இரா.திருமாவளனின் பேச்சுக்கு தக்க மறுமொழி கூறியிருக்க வேண்டும். அல்லது மற்ற நாளிதழ்கள் போல் மழுங்கித்தனமாக இருந்திருக்க வேண்டும். இப்படி, உணர்ச்சிகரமாக அணுகி இருக்கக் கூடாது. அறிவார்ந்த நிலையில் இரா.திருமாவளவனுக்குப் பதில் சொல்லியிருக்க வேண்டும். நம்பியாரின் கண்டன அறிக்கையை வெளியிட்டு மக்கள் ஓசை தன்னுடைய 'தமிழ் எதிர்ப்பு' கொள்கையைப் பறைசாற்றியிருக்கக் கூடாது.

தமிழ் மொழி சார்ந்த பல சிக்கல்கள் நாட்டில் தோன்றிய போதெல்லாம் மக்கள் ஓசை தமிழுக்கு ஆதரவாக இல்லாமல் தமிழ்ப் பகைவருக்கும் தமிழைப் பழிப்பவருக்கும் ஆதரவாக இருந்துள்ளது. இதற்குப் பல சான்றுகள் உள்ளன. தமிழ்ப் பற்றாளர்கள் இதனை கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த நிலைமை இப்படியே தொடர்ந்தால் மக்கள் ஓசை தமிழ் மக்களின் பகைமையைத் தேடிக்கொள்ளும் என்பது திண்ணம்.


இக்கண்,
சுப.நற்குணன்,
பேரா.

Blog Widget by LinkWithin