Saturday, August 22, 2009

பறிபோவது இந்திய ஆய்வியல் துறையா? நமது இனத்தின் மானமா?



மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில் ஏற்பட்டுள்ள பனிப்போர் – பதவிப்போர் இன்று எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதுமட்டுமா? தமிழர்களின் அடிவயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கிறது!

அங்கே ஏற்பட்டுள்ள உட்பகையின் காரணமாக, இந்திய ஆய்வியல் துறையே பறிபோகும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. என்றுமே இல்லாத ஒன்றாக, இப்போது அத்துறைக்கு தமிழரல்லாத ஒருவர் தலைவராக நியமிக்கப்படுள்ளார். இதனினும் கொடுமை, ‘இந்திய ஆய்வியல் துறை’ என்ற பெயர் நீக்கப்பட்டு தென்னாசிய ஆய்வியல் துறை என்று மாற்றப்படவுள்ளதாகத் தகவல் கசிந்திருகின்றது.

இந்த நிலையில், “இந்திய ஆய்வியல் துறை நிலைநிறுத்தப்பட வேண்டும்; அதன் தலைவராக ஒரு தமிழரே நியமிக்கப்பட வேண்டும்” எனப் பொது இயக்கங்கள் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன. இந்த இழுபறிக்கு என்ன விடிவு? எதுதான் முடிவு?

சரி, அதற்கென்ன இப்போது என்கிறீர்களா?

மலேசியத் தமிழருக்கும் தமிழுக்கும் உரிமையாக இருக்கின்ற இந்திய ஆய்வியல் துறைக்கு வாழ்வா? சாவா? என்கிற விளிம்பில் நின்றுகொண்டு, அதன் வரலாற்றைச் சற்றுத் திரும்பிப் பார்க்கிறது இந்தப் பதிவு! இன்றைய இளையோருக்கு நேற்றை நிகழ்வுகளைத் தூசுதட்டித் தருகிறது இந்த இடுகை! தொடந்து படிக்க உங்களை அன்புடன் அழைக்கிறேன்.


மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென்று தனியாக ஒரு துறை செயல்படுவது என்பது பெரிய போராட்டத்தின் வழியாகக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இந்த வரலாற்றுச் சுவடுகள் மறைந்துபோனதால் தானோ என்னவோ, இன்றையத் தமிழர்களிடம் மொழிமானமும் இனமானமும் மழுங்கிப்போய்விட்டது போலும்!

சிங்கப்பூரில் செயல்பட்ட ஏழாம் கிங் எட்வர்டு (King Edward VII-1905) மருத்துவக் கல்லூரியும் இராபில்சு கல்லூரியும் (Raffles College-1929) இணைத்து, அத்தோபர் மாதம் 8ஆம் நாள் 1949ஆம் ஆண்டில் சிங்கையில் உருவாக்கப்பட்டதுதான் மலாயாப் பல்கலைக்கழகம்.

அதில், தமிழ்த்துறையை ஏற்படுத்துவதற்கு அன்றைய மலாயா, சிங்கைத் தமிழர்கள் எழுச்சியுடன் போராடினர். இந்தப் போராட்டத்தை அமரர் தமிழவேள் கோ.சாரங்கபாணி (கோ.சா) அவர்களின் ‘தமிழ் முரசு நாளேடு’ முன்னெடுத்து நடத்தியது. அதற்காக அன்றையத் தமிழர்கள் பெரும் அளவில் ஆதரவையும் நிதியையும் திரட்டிக் கொடுத்தனர்.

இதன் விளைவாக, 1956ஆம் ஆண்டில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வியல் துறை நிறுவப்பட்டது. பின்னர், 1959இல் மலாயாப் பல்கலைக்கழகம் கோலாலம்பூருக்கு இடம் மாறி வந்தது.

தொடக்கத்தில், தமிழ்த் துறை நிறுவப்பட்டபோது அதற்கு தகவுரைகள் (ஆலோசனை) வழங்க, இந்தியாவிலிருந்து நீலகண்ட சாத்திரியார் (Neelakanda Shasthri) மலாயா வந்தார். தமிழுக்காக உருவாக்கப்பட்ட துறையில் பயிற்றுமொழியாக ‘சமற்கிருதத்தை’ (Sanskrit) வைக்க வேண்டும் என அவர் பரிந்துரை செய்தார்.

இந்தப் பரிந்துரைக்கு எதிராகப் போராட்டம் வெடித்தது. பெரும்பான்மைத் தமிழர்களிடமிருந்து மாபெரும் எதிர்ப்பு அலை கிளம்பியது. மீண்டும் ‘தமிழ் முரசு’ நாளிகையின் வழியாக அமரர் கோ.சாரங்கபாணி களமிறங்கினார். அதோடு, காராக்கு(Karak) அகில மலாயாத் தமிழர் சங்கம் முதலிய தமிழ் அமைப்புகள் கல்வி அமைச்சுக்கு நேரடியாகச் சென்று கோரிக்கை மனுவைக் கையளித்தன.
  • தமிழ் மக்களின் ஒன்றுபட்ட எழுச்சியின் வாயிலாக அரசாங்கத்தால் தமிழ் ஏற்றுக்கொள்ளப்பட்டது; பயிற்றுமொழியாகத் ‘தமிழ்’ அரியணையில் அமர்த்தப்பட்டது.


இந்த மகிழ்ச்சியான செய்தியைப் “பல்கலைக்கழகத்தில் தமிழுக்கே முதன்மை” என்று சிங்கை தமிழ் முரசு முதல் பக்கத்தில் வெளியிட்டது. இந்தச் செய்தியால் ஒட்டுமொத்தத் தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர்.

இதோடு போராட்டம் ஓய்ந்ததா என்றால், இல்லை! தமிழுக்காக உருவாக்கப்பட்ட துறையில் தமிழ் நூலகம் அமைப்பதற்கு இன்னொரு எழுச்சி இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. அதே தமிழ் முரசு மூலம் அமரர் கோ.சா ‘தமிழ் எங்கள் உயிர்’ எனும் முழக்கத்தோடு நிதி திரட்டும் இயக்கத்தைத் தொடங்கினார். இந்த நிதிக்கு ஒவ்வொரு தமிழரும் ஆளுக்கு ஒரு வெள்ளி தரவேண்டும் என வலியுறுத்தினார்.

அமரர் கோ.சா.வின் வேண்டுகையை ஏற்று மொழி உணர்வும் இன உணர்ச்சியும் கொண்ட மலாயாத் தமிழர்கள், நாடு முழுவதும் நிதியைத் திரட்டிக் கொடுத்தனர். இந்த முயச்சிக்கு ஆதரவாக அகில மலாயா தமிழர் சங்கம், தோட்டத் தொழிற்சங்கங்கள், தமிழாசிரியர்கள், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் நிதி வழங்கினர். இப்படியாகத் திரட்டப்பட்ட பெரும் நிதியைக் கொண்டு மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ் நூலகம் வெற்றியோடு உருவாக்கப்பட்டது.
*(இன்றும்கூட நம் நாட்டில் இயங்கும் மிகப்பெரிய நூலகம் என்ற சிறப்பைப் பெற்றது மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ் நூலகம்தான்.)

இத்தனைக்கும் இடையில், தமிழ்த்துறையில் படிப்பதற்கு மாணவர்களைச் சேர்க்கும் பணியும் நடந்தது. அன்று நாடுதழுவிய நிலையில் நடைபெற்ற தமிழர் திருநாள் விழாக்களில் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழ்த்துறையில் மாணவர்கள் குறையும் போதெல்லாம் தமிழர் சார்ந்த இயக்கங்களின் அன்றையத் தலைவர்கள் ‘பல்கலைக்கழத்தில் தமிழை ஒரு பாடமாகப் படிக்க வேண்டும்’ என்று ஊர்கள்தோறும், தோட்டங்கள் தோறும் இளைஞர்களுக்கு ஊக்கமூட்டி உற்சாகப்படுத்தினர்.

அன்று தொடங்கி இன்று வரையில் மலாயாப் பல்கலைகழகத்தில் ஆயிரக்கணக்கில் மாணவர்கள் சேர்ந்து தமிழை முதன்மைப் பாடமாக எடுத்துப் பயின்று பட்டதாரிகளாக உருவாகி இருக்கின்றனர். இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டங்கள் வரையில் தமிழிலேயே படிப்பதற்கான சூழல் மலாயாப் பல்கலைக்கழகத்தில் இன்று உருவாகி இருக்கிறது. மேலும், மொழியியல் புலம் என்ற மற்றொரு துறையிலும் தமிழ் பயிற்றுவிக்கப்படும் நிலைமையும் ஏற்பட்டிருக்கிறது.

இவ்வாறு, பல தடைகளையும் போராட்டங்களையும் கடந்து வந்திருப்பதுதான் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை. காலந்தோறும் அதற்கு நெருக்கடிகள் ஏற்பட்டு வந்திருந்தாலும், தமிழ் மக்களின் ஒற்றுமையும் உணர்வும்தாம் அரணாக இருந்து அத்துறையை மீட்டுத் தந்திருக்கிறது; உயிரோடும் உயிர்ப்போடும் காத்து வந்திருக்கிறது என்றால் மிகையில்லை.

அரைநூற்றாண்டுக் கால வரலாற்றைப் பெற்றிருக்கும் நமது இந்திய ஆய்வியல் துறை, இன்று பல நெருக்கடிகளுக்கு இடையில் தவித்துக் கொண்டிருக்கிறது! சிக்கல்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டிருக்கிறது! இந்திய ஆய்வியல் துறை பறிபோகும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது!

அதனைக் காக்கவும் காப்பாற்றவும் திறனற்றவர்களா நாம்?
அதனைக் காக்கவும் காப்பாற்றவும் வழியற்றவர்களா நாம்?
அதனைக் காக்காவிட்டால் வரலாற்றுப் பழி ஆகாதா? பிழை ஆகாதா?
அதனைக் காப்பாற்றாவிட்டால் அடுத்தத் தலைமுறை நம்மைக் கேள்வி கேட்காதா? நமது முகத்தில் காறி உமிழாதா?

நமது முன்னோர்களின் வியர்வையிலும் செந்நீரிலும் உருவாக்கப்பட்ட.. உண்டியல் காசிலும் உழைத்தப் பணத்திலும் எழுப்பப்பட்ட.. ஒன்றுபட்ட உணர்வின் எழுச்சியிலும் மொழி – இன மான உணர்ச்சியிலும் நிறுவப்பட்ட.. நமது இதயங்களோடும் உணர்வுகளோடும் கலந்துவிட்ட.. இந்திய ஆய்வியல் துறை.. மிகக் குறைந்த ஆயுளோடு.. வரலாற்றுத் தடத்தின் ஈரம் காய்வதற்கு முன்பே.. நமது கண்முன்னாலேயே..

காணாமல் போகலாமா?

அப்படியே போனால்..!

பறிபோகப் போவது இந்திய ஆய்வியல் துறை மட்டுமல்ல!

ஒட்டுமொத்த மலேசியத் தமிழரின் மானமும்தான்!!

பி.கு:-இந்தச் செய்தியை மறுபதிவிட்டு பின்வரும் வலைப்பதிவுகள் வெளியிட்டுள்ளன. அவர்களுக்கு மனமார்ந்த நன்றி மொழிகின்றேன்.

-சுப.நற்குணன்

1.மலேசியாஇன்று.காம்

2.சந்ருவின் பக்கங்கள்

16 comments:

Sathis Kumar said...

இந்த அவமானம் ஒருபுறமிருக்க, கடந்த 50 ஆண்டுகளில் இந்திய ஆய்வியல் துறையில் பயின்று பட்டம் பெற்ற பெரும்பான்மையினர் வாயையே திறக்கக் காணோமே, கவனித்தீர்களா?

இதல்லவோ பெருத்த அவமானம்!

அ. நம்பி said...

//மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில் ஏற்பட்டுள்ள பனிப்போர் – பதவிப்போர்...//

//அங்கே ஏற்பட்டுள்ள உட்பகையின் காரணமாக...//

அவர்கள் படித்தவர்கள்; ஆனால் கல்லாதவர்கள்.

kavin said...

அன்பார்ந்த திருத்த‌மிழ் சிற்ப்பிக்கு,

ஐயா தங்களின் இந்த பதிவு சரியான நெரத்தில் வெளிச்சத்திர்க்கு வந்தமைக்கு நன்றி பாராட்டுகிறேன்.
ஒரு காரியத்தை செய்வதர்க்கு முன்பு மொழி‍‍‍‍ இன போராட்டத்தின் ஆவனங்களை பூரட்டி பார்க்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அன்பர்களை வேண்டுகிறேன்.......
இல்லையேல் நமது நாட்டில் எத்தனையோ தமிழ் சார்ந்த இயக்கங்கள் இருக்கின்றன என்பது அவர்களுக்கு தெரியாதா? தெரியாமல் இருந்து விட்டார்களா? பொது இயக்கங்களோடு கலந்து கருத்துபெற்று செய்ய வேண்டியதை செவ்வென்ன செய்திருக்கலாம். இவ்வளவு (ஒரு வரலாற்று அழிவு, மொழி உரிமை பறிப்பு) செய்ய துணிந்த அவர்களுக்கு , ஒரு சாதரன ஆலோசனை கூட்டம் நடத்த முடியாதா??? காலம் தாழ்த்தாமல் செய்யவேண்டியதை உடனே செய்ய வினையுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுகோள்கிறேன்.....சம்பந்தபட்ட அன்பர்கள் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.....
ஐயா நற்குணன் அவர்களே,
தங்களின் இந்த பதிவு;ஆய்வு, மலாயா பல்கலைகழக தமிழ் மாணவர்களுக்கு பரப்ப பட வேண்டும். கண்டிப்பாக உடனே இதை செய்ய் இந்த இடுகையெய் படித்த அனைவரும் தெரிந்த அன்பர்களுக்கு பரப்பவேண்டும்....

நன்றே செய் !!! அதனை இன்றே செய் !!!!

நன்றி.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் ஒற்றன்,

//ஆய்வியல் துறையில் பயின்று பட்டம் பெற்ற பெரும்பான்மையினர் வாயையே திறக்கக் காணோமே, கவனித்தீர்களா?//

உண்மைதான். ஆனால், மலாயாப் பல்கலைக்கழகம் மீது ஆழ்ந்த அன்பும் பற்றுதலும் நன்றியுணர்ச்சியும் கொண்டுள்ள அன்பர்கள் அமைதியாக - எந்த விளம்பரமும் இல்லாமல் செய்யவேண்டியதை முறையாகச் செய்திருக்கிறார்கள் என்ற தகவலை இங்குப் பதிவு செய்ய விழைகிறேன்.

நம்மிடையே நல்லோர்கள்; உணர்வாளர்கள் இன்னமும் இருக்கிறார்கள். இவர்களால்தான் இந்த இனமும் மொழியும் வாழ்கிறது.. இனியும் வாழும்!!

அந்த நல்லோர்களை வணங்குவோம்! வாழ்த்துவோம்!

உங்கள் வருகைக்கு நன்றி!

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் நம்பி,

நீண்ட காலத்திற்குப் பின்னர் உங்களை இங்கு காண்கிறேன்.

வருகைக்கு நன்றி.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் கவின்,

புதிதாக உங்களைக் காண்கிறேன். உங்களை அன்போடு வரவேற்கிறேன்.

தொடர்ந்து வருக!
உங்கள் கருத்துகளைத் தருக!

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

வணக்கம் சுப.ந அவர்களே...
எப்பொழுதுமே தமிழருக்கும் தமிழுக்கும் சோதனைகள் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.மீட்டெடுப்பது நமது கடமை.... அதனைச் சார்ந்த அனைவரும் முன்வரவேண்டும்......

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் முனைவர் சே.கல்பனா அவர்களே,

உங்கள் மறுமொழி கண்டதில் மகிழ்ச்சி. எங்கள் அரசாங்கம் தமிழருக்கும் தமிழுக்கும் பல உரிமைகளையும் சலுகைகளையும் வழங்கியிருக்கிறது.

இருந்தும், அதனைக் காத்துக்கொள்வதில்தான் பல குளறுபடிகள்.. நெருக்கடிகள்.. உட்பகைகள்.. உள்வீழ்ச்சிகள்..!

இருப்பினும் ஒருகை பார்ப்பதற்கும்; தமிழர் துயரினில் ஒருதுளி தீர்த்திடவும் உழைப்பதற்கு உணர்வாளர்கள் இன்னும் இருக்கிறார்கள். இதுவே இப்போதைக்கு எங்களுக்கு இருக்கும் நிறைவு..!

மீண்டும் வருக!

கோவி.மதிவரன் said...

மானமுள்ள தமிழர் தமிழவேள் கோ.சா அவர்கள் அன்று மலாயப் பல்கலைக்கழக தமிழ்ப்ப்பிரிவைக் காத்தார். மான.... தமிழ்க்கல்விமான்கள் இன்று தமிழ்த்துறை அழிவிற்கு வித்திடுகின்றனர். இம்மலைநாட்டில் அரசாங்க ஆதரவில் இயங்கும் நமது மொழியின் காப்பகமாக இருக்க வேண்டிய ஆய்வியல் துறைக்கு இப்படியொரு இழிநிலையை எண்ணி உள்ளம் குமுறுகின்றேன். கற்ற கல்வியினால் என்ன பயன் ? நமது மொழி அழிவதற்கு நாமே கரணியமாக அமையலாமா? பேராசிரியர்களே சிந்தியுங்கள் ... செயல்படுங்கள்

தமிழே தமிழரின் முகவரி

Admin said...

உங்கள் தமிழ்ப்பணியைப் பாராட்டுகின்றேன்....

உங்கள் இந்த இடுகையை இங்கே http://shanthru.blogspot.com/2009/08/blog-post_2624.html இணைத்து இருக்கின்றேன்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் கோவி.மதிவரன்,

//கற்ற கல்வியினால் என்ன பயன் ? நமது மொழி அழிவதற்கு நாமே கரணியமாக அமையலாமா? பேராசிரியர்களே சிந்தியுங்கள் ... செயல்படுங்கள்//

பேராசிரியர்கள் மட்டுமல்ல..
இந்த இனத்தில் பிறந்த தலைவர்கள், தொண்டர்கள், இளைஞர்கள், மகளிர், அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், பாவலர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் என சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களும் கட்டாயமாகச் சிந்திக்க வேண்டிய செய்தி!!

சுப.நற்குணன்,மலேசியா. said...

இனிய நண்பர் சந்ரு,

இந்தச் செய்தியை இன்னும் பலருக்கும் கொண்டு சேர்த்து, தமிழ்ப்பணிக்கு துணைசெய்திருக்கும் தங்களின் நற்பணிக்கு நன்றி மொழிகின்றேன்.

இனியத் தமிழை இணைந்து வளர்ப்போம்!

Tamilvanan said...

‘இந்திய ஆய்வியல் துறை’

//“இந்திய ஆய்வியல் துறை நிலைநிறுத்தப்பட வேண்டும்; அதன் தலைவராக ஒரு தமிழரே நியமிக்கப்பட வேண்டும்”//

அதன் தலைவராக ஒரு தமிழரே நியமிக்கப்பட வேண்டும். இதனை நிலைனிறுத்தும் வரையில் நமது போரட்டம் ஓயக்கூடாது. மேலும் இந்திய ஆய்வியல் துறை என்பதனை மாற்றி தமி்ழியல் ஆய்வு துறையாக உருவாக்கப்பட வேண்டும்.

Anonymous said...

மலாயாப் பல்கலைகழகம் பற்றிய நல்ல தொகுப்பு இது. நிறைய விசயத்தை அடுக்கி சொல்லப்பட்டுள்ளது. என் போன்ற இளைஞர்களுக்கு மிக பயனான கட்டுரை. வரலாறை அறிந்துகொண்டேன்.

இந்திய ஆய்வியல் துறை கல்விமான்கள் இனம் மானம் இல்லாதவர்கள் என்பது தெரிகிறது. தமிழ் மீதும் அவர்களுக்கு எந்த அக்கரையும் இல்லை என நன்கு தெரிகிறது.

மகா சுயநலவாதிகளாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். படித்தவர்கள் இவர்களுக்கும் எங்கள் கம்பத்தில் அடித்துக்கொள்ளும் காட்டுமிராண்டி குடிகார இளைஞர்களுக்கும் சின்ன வித்தியாசம் கூட இல்லை. படித்தவர்களா இவர்கள்? நமது இந்தியர்களின் உரிமையக் காவுகொடுத்த மொழியின கொலை பாதகர்கள் என்று சொன்னால் தகும்.

இப்படிக்கு,
பல்கலைக்கழகம் போகாத மேதை,
மொழி நலமும் இன நலமும் உள்ள தமிழன் நான்.

Anonymous said...

மலாயப்பல்கலைக்கழகத்தில் பயின்றுக் கொண்டிருக்கும் மாணவி நான்.தமிழனுக்கு எதிரி எங்கும் இல்லை.தமிழன் என்ற முறையில் தாங்கள் அனைவரும் ஏதும் செய்யாவிடிலும் பர்வாயில்லை.ஆனால் இப்படி உங்களது வார்த்தைகளால் கேவலப்படுத்தாதீர்கள்..துறைக்குளாரேயே அடித்துக்கொள்கிறார்கள் என வெளியே இருக்கும் நீங்கள்தான் இன்னும் தமிழனை அசிங்கப் படுத்தி அவமானத்திற்குள்ளாக்குகிறீர்கள். அசிங்கமாய், அவமானமாய் இருக்கிறது. அப்படியே பிரச்சனை என்றாலும் அதை இப்படியா தமிழனே நாளிதழ்களிலும் இணயத்திலும் வெளியிட்டு இன்னும் கேவலப்படுத்துவது. முதலில் நீங்கள் எல்லம் கற்றவர்களா அல்லது படித்தவர்களா என்பதை சிந்தியுங்கள். சரித்திரத்தைப் பற்றி எண்ணி எண்ணி பெருமூச்சு விடுவதை விட்டு சற்று மனிதாபிமானத்தோடு நடந்துக்கொள்ளுங்கள். கோபத்தில் எழுதவில்லை.ஆதங்கத்தில் எழுதுகிறேன்.நன்றி

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் மாணவி அவர்களே,

உங்கள் வருகைக்கும் துணிவான மறுமொழிக்கும் நன்றி. பாராட்டுகள். இளைய சமுதாயம் உங்களைப் போல இப்படி கருத்தாட முன்வர வேண்டும்.

//வெளியே இருக்கும் நீங்கள்தான் இன்னும் தமிழனை அசிங்கப் படுத்தி அவமானத்திற்குள்ளாக்குகிறீர்கள். அசிங்கமாய், அவமானமாய் இருக்கிறது. அப்படியே பிரச்சனை என்றாலும் அதை இப்படியா தமிழனே நாளிதழ்களிலும் இணயத்திலும் வெளியிட்டு இன்னும் கேவலப்படுத்துவது.//

நீங்கள் எப்போது படிக்க சென்றீர்கள் என யாம் அறியோம். ஆனால், இந்தச் சிக்கல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக புகைந்து புகைந்து பூதாகரமாகிய செய்தி உங்களுக்குத் தெரியுமா?

நமது நாளிதழ் / இணையத்தள ஆசிரியர் இதனைப் பற்றி ஏற்கனவே நன்றாக அறிந்திருந்தும் இதுவரை ஒரு வரிச் செய்திகூட எழுதாமல் இருந்த செய்தி உங்களுக்குத் தெரியுமா?

தமிழனை.. தமிழ்த் துறையை அசிங்கப்படுத்தக் கூடாது என்ற நோக்கம் எங்களுக்கும் இருந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஆனால், வெள்ளம் கரையை மீறி வந்துவிட்டது..!

கத்தரிக்காய் முற்றி கடைத்தெருவுக்கு வந்துவிட்டது..!

முழுப் பூசணியை இனி மறைக்க முடியாத அளவுக்கு சிக்கல் வலுத்துவிட்டது..!

யானை கொழுத்து மண்ணை வாரிப் போட்டுக்கொண்டது..!

இத்தனையும் உங்களுக்குத் தெரியுமா?

அது சரி..! உங்கள் பேராசிரியர்களுக்காக.. விரிவுரையாளர்களுக்காக.. வருத்தப்படும் நீங்கள்,

தமிழ் அசிங்கப்பட்டதற்கும்.. தமிழ்த்துறை அவமானப்பட்டதற்கும்.. கொஞ்சமாவது வருத்தப்பட்டால் நல்லது.

//சரித்திரத்தைப் பற்றி எண்ணி எண்ணி பெருமூச்சு விடுவதை விட்டு சற்று மனிதாபிமானத்தோடு நடந்துக்கொள்ளுங்கள்.//

சரித்திரம் தெரியாமல் போனதாலும் எதிர்காலம் புரியாமல் போனதாலும் தான் சிலர் மனிதாபிமானம் இல்லாமல்.. மொழியின மானம் இல்லாமல் நடந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

நானும் சீற்றத்தில் எழுதவில்லை. நீங்கள் சிந்திக்க எழுதுகிறேன்.

Blog Widget by LinkWithin