Saturday, September 10, 2011

தமிழில் மின்னூல் தொழில்நுட்பம்


சிங்கப்பூரில் உலகத் தமிழாசிரியர் மாநாடு நடைபெறுகின்றது. அதன் இரண்டாம் நாளாகிய நேற்று (09.09.2011 - வெள்ளி) மலேசியக் கணிஞர் முத்து நெடுமாறன் 'தமிழில் மின்னூல்' என்னும் கட்டுரையை வழங்கினார். முரசு தமிழ் மென்பொருளை உருவாக்கியவருமாகிய முத்து நெடுமாறனின் கட்டுரை மாநாட்டுப் பேராளர்களை மிகவும் ஈர்த்தது.

இன்றைய தொழில்நுட்ப ஊழியில் 'மின்நூல்' மிகவும் புகழ்பெற்று வருகின்றது. காகிதத்தில் அச்சிடப்பட்ட நூல்கள் தற்போது மெல்ல மெல்ல மின்னூல்களாக மாறி வருகின்றன.

தமிழில் இவ்வகையான மின்னூல் தொழில்நுட்பம் இன்று சாத்தியமாகி இருக்கிறது என்பது தமிழ்மொழி அடைந்திருக்கும் அடுத்தக்கட்ட வளர்ச்சி எனச் சொல்லலாம்.

அச்சு நூல்களைவிட மின்னூல்களை உருவாக்குவது எளிது மட்டுமல்ல, மலிவும் என்பதோடு குறுகிய காலத்திலேயே உருவாக்கி வெளியிட முடியும். மின்வடிவில் அமைந்திருப்பதால் உயர்தரமாகவும் இருக்கும்.
அச்சு வடிவில் வெளியிடப்படும் புத்தகங்களில் எழுத்துகளோடு, படங்களையும் சேர்த்து வெளியிட முடியும். வண்ணங்களைச் சேர்த்து கவரும் வகையில் வடிவமைக்க முடியும். ஆனால், இந்த மின்னூலில் எழுத்து, படம், வண்ணம் ஆகியவற்றோடு ஒலியமைப்பு, இசை, நிலைப்படம், நிகழ்ப்படம் ஆகியவற்றையும் இணைத்து வளமாக்க முடியும்.

நூலைப் படிக்கும் நேரத்திலேயே வாசிக்கப்படும் செய்தி, கட்டுரை அல்லது கதை தொடர்பாக உள்ளுணர்த்து துய்க்க முடியும். குறிப்பாக, குழந்தைகளும் மாணவர்களும் மின்னூலை விரும்புவார்கள்; விரும்பிப் படிப்பார்கள் என்பது உண்மை. காரணம், இன்றைய குழந்தைகள் எண்ணிம இயல்பாளர்களாக (Digital Native) இருப்பதால், இதுபோன்ற புதிய தொழில்நுட்பம் அவர்களின் ஆர்வத்திற்கு உரம்சேர்ப்பதாக இருக்கும்.
ஆகவே, தமிழ்க் குழந்தைகள் மின்னூல் வழியாகத் தமிழ்மொழியைக் கற்கும் வாய்ப்புகளை உடனடியாக ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். மின்னூல் வழியாக ஊடாடும் (Interactive) முறையில் தமிழைக் கற்க வேண்டிய கட்டாயத்திற்கு இன்றைய தமிழ்க் குழந்தைகள் ஆளாகிவிட்டார்கள். இந்தச் சூழலை உணர்ந்து தமிழாசிரியர்கள் மின்னூல் வழியாகப் படிப்பதற்குரிய பாடங்கள், கதைகள், கட்டுரைகள், பயிற்சிகள் ஆகியவற்றை உருவாக்க முனைய வேண்டும். அதற்கு முதலாக, மின்னூல் போன்ற கையடக்கக் கருவித் தொழில்நுட்பம் பற்றி ஆசிரியர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
'குட்டன்பர்க்' உருவாக்கிய இயந்திரம் அச்சிடப்பட்ட நூல்களைப் பொதுமக்களுக்குக் கொண்டு சென்றது. அதன்பின் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய புரட்சியாக 'மின்னூல்' தொழில்நுட்பம் விளங்குகின்றது.

இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப தமிழில் மின்னூல்கள் வராவிடில் அடுத்த தலைமுறையினர்  தமிழ் நூல்களை வாசிப்பதும், தமிழை வாசிப்பதும் அரிதாகிவிடும் என்று முத்துநெடுமாறன் தமது கட்டுரைப் பகிர்வில் குறிப்பிட்டார்.

தமது உரையில் ஊடாக, தாம் தமிழில் உருவாக்கிய ஒரு மின்னூலைப் பற்றி செய்முறை விளக்கம் (Demonstration) அளித்தார். மாநாட்டுப் பேராளர்கள் அனைவரின் கருத்தையும் கவனத்தையும் பெரிதும் ஈர்க்கும் வகையில் இந்தப் படைப்பு அமைந்திருந்தது. கையடக்கக் கருவியில் தமிழைப் பயன்படுத்தி இப்படியும் ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்க முடியுமா? என்று அனைவருக்கும் பெரும் வியப்யை ஏற்படுத்தியது.

@சுப.நற்குணன்

Friday, September 09, 2011

மின்னஞ்சலின் புதிய புரட்சி:- குறுமடல்


http://shortmail.com/


யாகூ மெயில் (Yahoo Mail), கூகிள் மெயில் (gmail), ஓட்மெயில் (Hotmail) முதலான  மின்னஞ்சல் பரிணாமத்தில் தற்போது புதிதாக அறிமுகமாகிறது 'சார்ட்மெயில்' (Shortmail). இதனைத் தமிழில் 'குறுமடல்', 'குறுவஞ்சல்', 'குற்றஞ்சல்' என தற்போதைக்கு ஒரு பெயரைச் சொல்லிக்கொள்ளலாம். இதற்குரிய பொருத்தமான கலைச்சொல் இனி உருவாக்கப்படும் என நம்புவோம்.

'டுவிட்டர்' (Twitter), முகநூல் (Facebook) ஆகிய குமுக வலைத்தளங்களின் ஆதிக்கம் மின்னஞ்சலின் பயன்பாட்டை முடக்கிப்போடும் சூழல் உருவாகி வரும் காலக்கட்டத்தில், புதிய வரவாக புதிய வீச்சைத் தொடங்க வந்திருக்கிறது இந்தக் 'குறுமடல்'.
பெயருக்கு (Shortmail) ஏற்றாற்போல மின்னஞ்சல் செய்திகளைச் சுருக்கமாக அனுப்ப இந்த ஏந்து (வசதி) துணைசெய்கிறது. இதுவும் ஒருவகையில் மின்னஞ்சல் போன்றதுதான் என்றாலும், சில மாற்றங்களைக் கொண்டிருக்கிறது. அவையாவன:-

#1.ஒரு மடலை எழுதுவதற்கு 500 எழுத்துகளை மட்டுமே பயன்படுத்த முடியும். 500 எழுத்துகளுக்கு மேல் இருந்தால் நாம் எழுதும் மடல் திருப்பி அனுப்பட்டுவிடும்.

#2.மின்னஞ்சலில் விரிவான செய்திகளை எழுதுவதுபோல் அல்லாமல், சொல்ல வேண்டிய செய்தியை மட்டும் சுருக்கமாகவும் நேரடியாகவும் சொல்ல வேண்டும்.

#3.மின்னஞ்சலை எளிமையாக்க மட்டுமல்லாது, அதனைச் சிறந்த முறையில் நிருவகிக்கவும் இது உதவியாக இருக்கும்.

#4.இந்தக் 'குறுமடலை' அனுப்பும்போதே அது கமுக்கமானதா அல்லது பொதுப் பகிர்வுக்குரியதா என்பதை அனுப்புபவர் தீர்மானித்துக்கொள்ளலாம்.

#5.'டிவிட்டர்', முகநூலைப் போல எளிதாக செய்திகளைப் பகிரவும் கருத்துப் பரிமாற்றம் செய்யவும் உதவியாக உள்ளது.

#6.மின்னஞ்சலோடு சேர்த்து மற்ற ஆவணம், நிழற்படம் போன்றவற்றை இணைத்து அனுப்பும் ஏந்து(வசதி) இதில் கிடையாது. இதனால், நமது மின்னஞ்சல் பெட்டியில் வந்து குமியும் தேவையற்ற இணைப்புகளைத் தவிர்க்க முடியும். 

#7.'குறுமடல்' சேவையைப் பெறுவதும் பயன்படுத்துவதும் மிக எளிது. 'டிவிட்டர்' கணக்கு வைத்திருப்பவர்கள் அதன் மூலமாகவே பதிவு செய்துகொள்ளலாம்.

#8.இணையப்பேசி (iPhone), 'ஆண்டிராய்டு' (Android) வகை பேசிகளுக்கு ஏற்ற வடிவத்திலும் இது செயல்படுகின்றது.

'குறுமடல்' சேவைப் பெறவும் பயன்படுத்தவும் இங்கே சொடுக்கவும்.

@சுப.நற்குணன்

Thursday, September 08, 2011

சிங்கையில், உலகத் தமிழாசிரியர் மாநாடு

மாநாட்டு அரங்கம்
உலகத் தமிழாசிரியர் மாநாடு இன்று (08.09.2011)  வியாழக்கிழமை சிங்கப்பூரின் டவுண்டவுன் ஈசுட்டில் (Downtown East) தொடங்குகிறது.

இன்று தொடங்கி 10.09.2011 வரை மூன்று நாட்களுக்கு நடைபெறும் இந்த மாநாட்டைத் தென்கிழக்காசிய கல்வி ஆய்வுக் கழகத்தின் இயக்குநர் திரு.கே.கேசவபாணி காலை மணி 9:00க்குத் தொடக்கி வைக்கிறார்.

இது சிங்கப்பூர்த் தமிழாசிரியர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் 9-ஆவது மாநாடு ஆகும். இந்த மாநாட்டின் கருப்பொருள் 'உலகமயமாதலும் தமிழ்க் கற்றல் கற்பித்தலும்' என்பதாகும். 

மாநாட்டுப் பேராளர்கள்
ஏறக்குறைய 360 பேராளர்கள் இந்த மூன்று நாள் மாநாட்டில் கலந்துகொள்கின்றனர். அமெரிக்கா, கனடா, பிரான்சு, டென்மார்க்கு, இந்தியா, அசுத்திரேலியா, செர்மனி, இலங்கை, மொரிசியசு, மலேசியா, பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 130 பேராளர்களும், சிங்கையிலிருந்து 230 பேராளர்களும் மாநாட்டில் பங்கேற்கின்றனர். மாநாட்டில் கிட்டதட்ட 40 கட்டுரைகள் படைக்கப்படவுள்ளன. கற்றல் கற்பித்தல் தொடர்பான பயிலரங்குகளும் நடைபெற உள்ளன.

மலேசியப் பேராளர்கள்:- (இ-வ) புஸ்பராணி, கோவி.சந்திரன், அ.சு.பாஸ்கரன் (முகமை அமைப்பாளர்), சுப.நற்குணன், நடராஜா, தமிழரசி
மலேசியாவிலிருந்து கல்வி அமைச்சின் சார்பில் ஏறக்குறைய 60 பேராளர்கள் மாநாட்டில் கலந்துகொள்கின்றனர். மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் முகமை அமைப்பாளர் திரு.அ.சு.பாஸ்கரன் அவர்களின் தலைமையில் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ஆசிரியர் கல்விக் கழக விரிவுரையாளர்கள், இடைநிலைப்பள்ளி - தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
பேராளர்கள்

முதல் உலகத் தமிழாசிரியர் மாநாடு 1992ஆம் ஆண்டில் நடந்தது. இந்தியா,  மலேசியா, சிங்கப்பூர், மொரிசியசு, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இதுவரை 8 மாநாடுகள் நடைபெற்றுள்ளன. 

முகமை விருந்தினர்
"இந்த மாநாடு உலகத் தமிழாசிரியர்களை ஒருங்கிணைக்கின்றது. மேலும், தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில் சிங்கப்பூர் முன்னணி வகிக்கின்றது என்பதை மற்றவர்கள் உணர்ந்துகொள்ள இந்த மாநாடு வழிவகுக்கும்" என்று சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் தலைவர் சி.சாமிக்கண்ணு கூறினார்.

அறிவிப்பாளர்கள்:- மீனாட்சி, ஜெயதீசன் (சிங்கை ஆசிரியர்கள்)
@சுப.நற்குணன்
 

Wednesday, September 07, 2011

9ஆம் உலகத் தமிழாசிரியர் மாநாடு


மாநாடு தொடர்பான செய்திகள் வாசிக்க:-
Blog Widget by LinkWithin