Saturday, September 10, 2011

தமிழில் மின்னூல் தொழில்நுட்பம்


சிங்கப்பூரில் உலகத் தமிழாசிரியர் மாநாடு நடைபெறுகின்றது. அதன் இரண்டாம் நாளாகிய நேற்று (09.09.2011 - வெள்ளி) மலேசியக் கணிஞர் முத்து நெடுமாறன் 'தமிழில் மின்னூல்' என்னும் கட்டுரையை வழங்கினார். முரசு தமிழ் மென்பொருளை உருவாக்கியவருமாகிய முத்து நெடுமாறனின் கட்டுரை மாநாட்டுப் பேராளர்களை மிகவும் ஈர்த்தது.

இன்றைய தொழில்நுட்ப ஊழியில் 'மின்நூல்' மிகவும் புகழ்பெற்று வருகின்றது. காகிதத்தில் அச்சிடப்பட்ட நூல்கள் தற்போது மெல்ல மெல்ல மின்னூல்களாக மாறி வருகின்றன.

தமிழில் இவ்வகையான மின்னூல் தொழில்நுட்பம் இன்று சாத்தியமாகி இருக்கிறது என்பது தமிழ்மொழி அடைந்திருக்கும் அடுத்தக்கட்ட வளர்ச்சி எனச் சொல்லலாம்.

அச்சு நூல்களைவிட மின்னூல்களை உருவாக்குவது எளிது மட்டுமல்ல, மலிவும் என்பதோடு குறுகிய காலத்திலேயே உருவாக்கி வெளியிட முடியும். மின்வடிவில் அமைந்திருப்பதால் உயர்தரமாகவும் இருக்கும்.
அச்சு வடிவில் வெளியிடப்படும் புத்தகங்களில் எழுத்துகளோடு, படங்களையும் சேர்த்து வெளியிட முடியும். வண்ணங்களைச் சேர்த்து கவரும் வகையில் வடிவமைக்க முடியும். ஆனால், இந்த மின்னூலில் எழுத்து, படம், வண்ணம் ஆகியவற்றோடு ஒலியமைப்பு, இசை, நிலைப்படம், நிகழ்ப்படம் ஆகியவற்றையும் இணைத்து வளமாக்க முடியும்.

நூலைப் படிக்கும் நேரத்திலேயே வாசிக்கப்படும் செய்தி, கட்டுரை அல்லது கதை தொடர்பாக உள்ளுணர்த்து துய்க்க முடியும். குறிப்பாக, குழந்தைகளும் மாணவர்களும் மின்னூலை விரும்புவார்கள்; விரும்பிப் படிப்பார்கள் என்பது உண்மை. காரணம், இன்றைய குழந்தைகள் எண்ணிம இயல்பாளர்களாக (Digital Native) இருப்பதால், இதுபோன்ற புதிய தொழில்நுட்பம் அவர்களின் ஆர்வத்திற்கு உரம்சேர்ப்பதாக இருக்கும்.
ஆகவே, தமிழ்க் குழந்தைகள் மின்னூல் வழியாகத் தமிழ்மொழியைக் கற்கும் வாய்ப்புகளை உடனடியாக ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். மின்னூல் வழியாக ஊடாடும் (Interactive) முறையில் தமிழைக் கற்க வேண்டிய கட்டாயத்திற்கு இன்றைய தமிழ்க் குழந்தைகள் ஆளாகிவிட்டார்கள். இந்தச் சூழலை உணர்ந்து தமிழாசிரியர்கள் மின்னூல் வழியாகப் படிப்பதற்குரிய பாடங்கள், கதைகள், கட்டுரைகள், பயிற்சிகள் ஆகியவற்றை உருவாக்க முனைய வேண்டும். அதற்கு முதலாக, மின்னூல் போன்ற கையடக்கக் கருவித் தொழில்நுட்பம் பற்றி ஆசிரியர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
'குட்டன்பர்க்' உருவாக்கிய இயந்திரம் அச்சிடப்பட்ட நூல்களைப் பொதுமக்களுக்குக் கொண்டு சென்றது. அதன்பின் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய புரட்சியாக 'மின்னூல்' தொழில்நுட்பம் விளங்குகின்றது.

இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப தமிழில் மின்னூல்கள் வராவிடில் அடுத்த தலைமுறையினர்  தமிழ் நூல்களை வாசிப்பதும், தமிழை வாசிப்பதும் அரிதாகிவிடும் என்று முத்துநெடுமாறன் தமது கட்டுரைப் பகிர்வில் குறிப்பிட்டார்.

தமது உரையில் ஊடாக, தாம் தமிழில் உருவாக்கிய ஒரு மின்னூலைப் பற்றி செய்முறை விளக்கம் (Demonstration) அளித்தார். மாநாட்டுப் பேராளர்கள் அனைவரின் கருத்தையும் கவனத்தையும் பெரிதும் ஈர்க்கும் வகையில் இந்தப் படைப்பு அமைந்திருந்தது. கையடக்கக் கருவியில் தமிழைப் பயன்படுத்தி இப்படியும் ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்க முடியுமா? என்று அனைவருக்கும் பெரும் வியப்யை ஏற்படுத்தியது.

@சுப.நற்குணன்

1 comment:

மணிவானதி said...

தமிழில் இதுபோன்ற மின்நூல் தொகுப்புகள் பல வெளிவரவேண்டும்.
திரு முத்துநெடுமாறன் அவர்களுக்கு எனது நன்றியும் வாழ்த்துக்களுகம். இவ் அற்புத நிகழ்வை வெளியிட்ட பேராசிரியர் சுப.நற்குணன் அவர்களுக்கும் நன்றி.

அன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்

Blog Widget by LinkWithin