Sunday, August 28, 2011

'மென்தமிழ் சொல்லாளர்' சொல் திருத்தி அறிமுக விழா


உலகமே கணினியின் துணையுடன் இயங்கிவரும் வேளையில், நம் தாய்மொழியாம் தமிழ் எவ்விதத்திலும் பிந்தங்கிவிடாமல் இருக்க கணினி இணையத் தொழில்நுட்பத்தில் பல முன்னேற்றங்கள் - கண்டுபிடிப்புகள் - ஆக்கங்கள் நடந்துவருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, தற்போது தமிழில் இதுவரை இல்லாத ‘சொல் திருத்தி’ (Spell Checker) மென்பொருள் வெளிவந்துள்ளது. ‘மென்தமிழ் - தமிழ்ச் சொல்லாளர்’ என்னும் இந்த அரிய மென்பொருளைத் தமிழுக்கு உருவாக்கிக் கொடுத்திருப்பவர் பேராசிரியர் தெய்வசுந்தரம் அவர்கள்.

மென்தமிழ்தமிழ்ச்சொல்லாளர் (Tamil Wordprocessor) என்ற தமிழ்மென்பொருள் தமிழுக்கு ஒரு புதிய வரவாக அமைந்துள்ளது. கணினிமொழியியல் (Computational Linguistics) , மொழித்தொழில்நுட்பம் (Language Technology) ஆகிய அறிவியல், தொழில்நுட்பத் துறைகளின் அடிப்படையில் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் எழுத்துருக்கள் (fonts) ஒருங்குறி உள்ளீட்டு முறையில் (Unicode) அமைந்துள்ளன. தமிழ் இணையம்99 உட்பட நான்குவகை விசைப்பலகைகள் இடம் பெற்றுள்ளன. தமிழ் ஆவணங்களைப் பதிப்பிக்கத் தேவையான அனைத்து பதிப்புவசதிகளும் இடம் பெற்றுள்ளன. இம்மென்பொருளில் சொற்பிழைதிருத்தி, சந்திவிதி விளக்கம், அகராதி பயன்பாடு ஆகிய பல இன்றியமையாத பயன்பாடுகள் நிறைந்துள்ளன.

மேலும், ஏறத்தாழ 45ஆயிரம் தற்காலத் தமிழ்ச் சொற்களைக் கொண்ட ஒரு தமிழ் – ஆங்கிலம், ஆங்கிலம் - தமிழ் அகரமுதலி, இணைச்சொல், எதிர்ச்சொல் அகராதி ஆகியவையும் இதில் அடங்கியுள்ளன.

வேர்ச்சொற்களில் மட்டுமல்லாது விகுதிகள் ஏற்ற சொற்களில் எழுத்துப் பிழைகள் இருந்தால் அதனையும் கண்டறிந்து இச்செயலி திருத்துகிறது. தவிர, தமிழில் ஏற்படும் ல, ள, ழ / ண,ன / ர, ற மயங்கொலிச்சொல் அகராதியும் இதில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மென்பொருள் பற்றிய அனைத்துத் தகவல்களும் நிகழ்ச்சி நிரலிகையில் காண்க:-

தமிழ் ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், தமிழாசிரியர்கள், மாணவர்கள் ஆகிய அனைவருக்கும் பெரிதும் பயன்படக்கூடிய மென்பொருளாக இது அமையும்.

***************அறிமுக நிகழ்ச்சி **************

இந்த ‘மெந்தமிழ் சொல்லாளர்’ அறிமுக நிகழ்ச்சியும் தமிழ்த் தகவல் தொழில்நுட்பக் கருத்தரங்கமும் ஒருசேர நடைபெற உள்ளது. ‘உத்தமம்’ எனப்படும் உலகத் தமிழர் தகவல் தொழிநுட்ப மன்றத்தின் சார்பில் சி.ம.இளந்தமிழ் இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்

நிகழ்ச்சி பற்றிய விவரங்கள் வருமாறு:

நாள்:- 04-09-2011 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம்:- காலை மணி 8.30

இடம்:- சோமா அரங்கம், விஸ்மா துன் சம்பந்தன், கோலாலும்பூர்.

மென்பொருள் விலை விவரம் - RM300 வெள்ளி (அறிமுக நிகழ்ச்சியின்போது RM200 வெள்ளிக்குக் கிடைக்கும்)

இந்நிகழ்ச்சிக்கு உங்கள் வருகையை உறுதிசெய்யத் தயதுசெய்து, நவராசன் 0173693737 என்ற தொலைப்பேசி எண்ணில் பெயரைப் பதிந்துகொள்ளுமாறு வேண்டுகிறோம்.

நிகழ்ச்சியில் மென்பொருள் விளக்கக்காட்சி அங்கம் இடம் பெறுகிறது. மென்பொருளின் செயற்பாடுகள். பயன்கள் குறித்து விரிவாக விளக்கப்படும்.

பி.கு:- இதே நிகழ்ச்சி வடமலேசியா வட்டாரத்திலும் நடைபெறவுள்ளது.

*நாள்:- 05-09-2011 (திங்கட்கிழமை) *நேரம்:- மாலை மணி 4:30 *இடம்:- துவான்கு பைனூன் ஆசிரியர் பயிற்சிக் கழகம், புக்கிட் மெர்தாஜாம், பினாங்கு. (தொடர்புக்கு:- திரு.மணியரசன் 012-4411535)

@சுப.நற்குணன்

Tuesday, August 16, 2011

மலாயாப் பல்கலையில் கற்றல் கற்பித்தல் மாநாடு

ஆகத்து 12, 13 & 14, 2011 ஆகிய மூன்று நாட்களில், கோலாலம்பூர் மலாயாப் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு மாநாடு ஒன்று சத்தமில்லாமல் நடந்து முடிந்திருக்கிறது. மலேசியா, இந்தியா, இலங்கை, சிங்கை, கனடா முதலான நாடுகளிலிருந்து ஏறக்குறைய 200 பேர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

இப்படியொரு மாநாட்டை மலேசியாவில் நடத்திய பெருமை, மலாயாப் பல்கலை முனைவர் சு.குமரன் அவர்களையும், சென்னை கலைஞன் பதிப்பகத்தின் நிறுவனர் திரு.நந்தன் மாசிலாமணி ஆகிய இருவரையே சாரும்.

‘கற்றல் கற்பித்தலில் புதிய சிந்தனைகள் - பன்னாட்டு மாநாடு’

இதுதான் மாநாட்டிற்குச் சூட்டப்பட்டிருந்த பெயர். மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையும் தமிழகத்தின் கலைஞன் பதிப்பகமும் கூட்டாக இணைந்து இந்த மாநாட்டினை ஏற்பாடு செய்திருந்தனர்.

முழுக்க முழுக்க கல்வியாளர்களுக்காக கூட்டப்பட்ட மாநாடாக இஃது அமைந்திருந்தது. பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், உயர்க்கல்வி மாணவர்கள் என கல்வித்துறை சார்ந்தவர்கள் இதில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

மூன்று நாட்களாக நடந்த இந்த மாநாட்டில் மொத்தம் 105 கட்டுரைகள் படைக்கப்பட்டன. இவை தமிழிலும் ஆங்கிலத்திலும் அமைந்திருந்தன. தமிழில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் அனைத்தும் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலோடு தொடர்புள்ளவையாக இருந்தன.

மூன்று நட்களில் நான்கு பொது அமர்வுகள் இடம்பெற்றன. இவை மாநாட்டிற்கு முத்தாய்ப்பு அரங்கங்களாக அமைந்தன. அவையாவன:-

1)பேராசிரியர் செ.இரா செல்வக்குமார் (கனடா) - மின்வழிக் கல்வியிலொரு கூறாக விக்கி மென்கல நுட்பம் வழி தமிழில் அறிவியல், கணிதம், பயன்முக அறிவியல் பாடங்கள் கற்றல் கற்பித்தல்.

2)முத்து நெடுமாறன் (மலேசியா) - கையடக்கக் கருவிகளில் தமிழ் மின்னூல் உருவாக்கம்

3)விஜய இராஜேஸ்வரி (இலங்கை) - தமிழ்க் கற்றல் கற்பித்தலில் விக்கி (Wiki) தொழில்நுட்பம்

4)சுப.நற்குணன் (மலேசியா) - தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில் இணையத்தின் பங்களிப்பும் பயன்பாடும்

[படம்:- (இ-வ) சுப.நற்குணன், முத்தெழிலன், தமிழரசி, பேரா.செல்வா, பிரேமா, சிங்கை ஜெயந்தி, இலங்கை விஜய இராஜேஸ்வரி]

மாநாட்டின் தொடக்க விழாவில் மனிதவள அமைச்சர் டத்தோ டாக்டர் சுப்பிரமணியம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்த வேளையில், நிறைவு விழாவில் தான் ஸ்ரீ குமரன் அவர்கள் கலந்துகொண்டார்.

முனைவர் கிருஷ்ணன் மணியம் தம்முடைய கலகலப்பான அறிவிப்பால் மாநாட்டை வழிநடத்த, திருமதி தமிழரசி தமிழ் வாழ்த்து பாடினார்.

மலேசியக் கல்வியாளர்கள் பலர் இந்த மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை படைத்தனர். அவர்களின் விவரம் பின்வருமாறு:-

1)கற்றல் கற்பித்தல் நடவடிக்கையில் இலக்கியக் கூறுகளின் வழி பண்பாடுமிக்க சமூகத்தை உருவாக்குதல் (முனைவர் கிருஷ்ணன் மணியம், மலாயாப் பல்கலை)

2)வலிமிகுமா? - வலிமிகாதா? ஒரு புதிய பார்வை (முனைவர் மோகனதாஸ் இராமசாமி)

3)மொழிக் கற்பித்தலில் கேட்டல் திறன் (கோ.மணிமாறன், துவான்கு பைனூன் ஆசிரியர் பயிற்சிக் கழகம்)

4)மலேசியச் சூழலில் தமிழரல்லாதவர்களுக்குத் தமிழ்ப் பயிற்றுவதில் எழும் வேற்றுமைச் சிக்கல்கள் (முனைவர் அருள்செல்வன் ராஜூ, சபா பல்கலைக்கழகம்)

5)மலேசியாவில் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில் புதிய சிந்தனைகள் (பன்னீர் செல்வம் அந்தோணி, சுல்தான் அப்துல் அலிம், ஆசிரியர் பயிற்சிக் கழகம்)

6)கற்றல் கற்பித்தலின் மேம்பாட்டில் மதிப்பீட்டின் பங்கு (இளங்குமரன் சிவாநந்தன், சுல்தான் இட்ரிஸ் கல்விக் கழகம்)

7)மன உளைச்சலைத் தவிர்ப்பதற்கு வகுப்பறை மேலாண்மையில் புதிய அணுகுமுறை (முனைவர் சேகர் நாராயணன், ஈப்போ ஆசிரியர் பயிற்சிக் கழகம்)

8)வலைத்தளத் தமிழகராதிகள் (மணியரசன் முனியாண்டி, துவான்கு பைனூன் ஆசிரியர் பயிற்சிக் கழகம்)

9)திருக்குறள் காட்டும் கற்றல் அறிவுநெறி (மோகன்குமார் செல்லையா, ஈப்போ, ஆசிரியர் பயிற்சிக் கழகம்)

10)வகுப்பறைக் கற்றல் கற்பித்தலில் சிக்கல்கள் களைவதில் செயலாய்வு அணுகுமுறை ஒரு தீர்வு (முனைவர் சாமிக்கண்ணு ஜெபமணி, சுல்தான் இட்ரிஸ் கல்விக் கழகம்)

தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில் புதிய சிந்தனைகளைப் பாய்ச்சி, தமிழ்க்கல்வியைச் செழிக்கச் செய்யும் ஆற்றலும் தகுதியும் வாய்ந்த கல்வியாளர்கள் மலேசியாவிலும் இருக்கின்றனர் என்பதை இந்த மாநாடு முரசறைந்து அறிவித்துள்ளது என்றால் மிகையாகாது.

@சுப.நற்குணன்


Thursday, August 11, 2011

தமிழ் விக்கிப்பீடியா பேரா.செல்வா - மலேசியா வருகிறார்


தமிழ்க்கணிமைத் துறையில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவர்களில் குரல்விட்டுச் சொல்லப்பட வேண்டிய ஒருவர் மதிப்புமிகு பேராசிரியர் செ.இரா.செல்வக்குமார் (C.R.Selvakumar).

தமிழ் விக்கிப்பீடியாவைச் செழிக்கச் செய்த - செழுமை செய்துகொண்டிருக்கும் முன்னோடிகளில் இவருக்கு என்றுமே சிறப்பிடம் உண்டு.

தமிழ்க்கூறு நல்லுலகம் காலத்திற்கும் நன்றியோடு நினைத்துப்பார்க்க வேண்டிய அளவுக்கு மிகப்பெரும் பங்களிப்பைத் தமிழுக்கு வழங்கியிருக்கும் கொடையாளர் இவர் எனில் மிகையன்று.

இப்படி இன்னும் அடுக்கிச் சொல்லும் அளவுக்குச் சிறப்பு வாய்ந்தோராகத் திகழும் பேரா.செல்வக்குமார் மலேசியா வருகின்றார். இவர் 11.08.2011 முதல் 21.08.2011 வரை மலேசியாவில் இருப்பார்.

ஆகத்துத் திங்கள் 12, 13, 14 ஆகிய மூன்று நாட்களுக்கு, மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள 'கற்றல் கற்பித்தல் பன்னாட்டு மாநாட்டில்' கலந்துகொண்டு, சிறப்புரை ஆற்றுவதோடு, விக்கிப்பீடியா, வின்னசரி ஆகியவற்றில் பங்களிப்பது குறித்து செய்முறை பயிற்சிகளும் வழங்கவிருக்கிறார்.

பேரா.செல்வகுமார் அவர்களின் பணிகள்:-

*தமிழ்நாட்டில் பிறந்த இவர், தற்போது கனடாவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் மின், கணினி இயல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.

*தமிழ் விக்கிப்பீடியாவில் அதிக பங்களிப்புகள் செய்த முதல் 5-6 பேர்களில் ஒருவராக கடந்த 5 ஆண்டுகளாக இருந்து வருகின்றார் பேரா.செல்வா அவர்கள். இதுவரையில், விக்கிப்பீடியாவில் ஏறத்தாழ 700-800 கட்டுரைகள் தொடங்கி எழுதியுள்ளார். தமிழ் விக்சனரியிலும் பல்லாயிரக்கணக்கான சொற்கள் சேர பல வழிகளிலும் உதவி உள்ளார்.

*தமிழில் கலைச்சொற்கள் ஆக்குவதிலும் அறிவியல் பயன்முக அறிவியல் படைப்புகள் செய்வதிலும் மிகுந்த ஆர்வம் உடையவர் இவர்.

படம்:- தமிழ் இணைய முன்னோடிகள் (இ-வ) பேரா.செல்வா, நாக இளங்கோவன், பாலா பிள்ளை, கல்யாண், மணிவண்ணன், எ. இளங்கோவன், நா.கண்ணன், முத்து நெடுமாறன் , இராம.கி ஐயா, பேரா.நாகராசன் (உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவை. சூன் 26, 2010).

*தமிழ்க் கணிமை வரலாற்றில் திசுக்கி (TSCII) உருவாக்கத்தில் பங்கு கொண்டவர்களில் இவரும் ஒருவர். அதில், சில புதுமையான முன்வைப்புகள் கொடுத்திருந்தார். இப்பொழுது, தொடர்ந்து ஒருங்குறி நிறுவனத்தில் உறுப்பினராக இருந்து கணித்தமிழுக்கு அரிய பணிகள் ஆற்றிவருகின்றார்.

*மதுரைத் திட்டம் தொடங்கும் முன்னே நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தை முதன்முதலாக மின்வடிவில் செய்தபோது அக்குழுவில் ஒருவராகப் பங்களித்துள்ளார்.

*தமிழ் மன்றம் என்னும் கூகுள் குழுமம் ஒன்றை நடத்தி வருகின்றார். அதில் பல புகழ்பெற்ற பேராசிரியர்களும் தமிழ் ஆர்வலர்களும் பங்கு கொள்கின்றார்கள்.

*தமிழ்வெளி என்னும் பெயரில் வலைப்பதிவு ஒன்றினைச் சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கிறார்.

* முகநூலில் தமிழ்மொழி மொழிபெயர்ப்புகள் செய்ததில் இவருக்கும் பெரும் பங்குண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இவர் உருவாக்கிய முகநூல் தமிழ் மொழிப்பெயர்ப்பு கணித்திரை படிவு ஒன்றைக் கீழே காண்க:-


பேரா.செல்வா அவர்களைப் பற்றிய பிற விவரங்களை அறிய கீழ்க்காணும் தொடுப்புகளைச் சொடுக்குக:-

http://ece.uwaterloo.ca/~selvakum/biop.html

http://tawp.in/r/7rv


பேரா.செல்வா அவர்களின் மலேசிய வருகை, இங்குள்ள கணினி ஆர்வலர்களுக்கும் தமிழ்ப் பற்றாளர்களுக்கும், விக்கிப்பீடியா பயனாளர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியைக் கொடுப்பதாக அமைந்துள்ளது.

மலேசியாவில் இருக்கும் காலத்தில் இங்குள்ள தமிழ்க்கணினி ஆர்வலர்கள், வலைப்பதிவர்கள், முகநூல் அன்பர்கள், தமிழ்ப் பற்றாளர்கள் ஆகியோரைச் சந்தித்துப் பேசவும் கருத்தாடவும் இவர் விருப்பம் கொண்டிருக்கிறார்.

அதற்கு ஏதுவாக, பெட்டாலிங் ஜெயா தாமரை உணவகம், பாரிட் புந்தார் தமிழியல் நடுவம் போன்ற இடங்களில் சிறப்புச் சந்திப்புக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யும் எண்ணம் இருக்கின்றது. மற்ற ஊர்களில் இவ்வாறான சந்திப்புக் கூட்டங்களை நடத்த விரும்பும் அன்பர்கள் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்.

மின்னஞ்சல்:- suba.nargunan@gmail.com
கைப்பேசி:- 012-4643401

@சுப.நற்குணன்

Blog Widget by LinkWithin