Sunday, April 21, 2013

தமிழ் வாழ்வியல்; வரலாறு அறிய இலக்கியம் படிக்க வேண்டும்

தமிழர்தம் வாழ்வியலையும் வரலாற்றையும் அறிந்துகொள்ள நாம் தமிழ் இலக்கியம் பயில வேண்டும். மொழி, இன, பண்பாட்டு அறிவும் உணர்வும் கொண்டவர்களாக நாம் வாழ்வதற்கு நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச்சென்ற இலக்கியங்கள் உதவும் எனப் பாரிட் புந்தார் இரா.பாலு தெரிவித்தார். பாரிட் புந்தார் தமிழியல் நடுவத்தில் நடைபெற்ற எசுபிஎம் மாணவர்களுக்குத் தமிழ் இலக்கிய வழிகாட்டி நூல் வழங்கும் நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.

"நான் ஒரு சில வெளிநாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறேன். அங்குத் தமிழர்கள் தங்கள் கலை, பண்பாட்டோடு வாழ்வதைப் பார்த்தேன். நம்மைப் போலவே உடை உடுத்துகிறார்கள். நமது உணவுகளைச் சமைக்கிறார்கள். நம்மைப் போலவே வழிபாடு செய்கிறார்கள். அவர்களின் பெயர்கள் தமிழில் இருக்கின்றன. ஆனால், அவர்களுக்குத் தமிழ்ப் பேச தெரியவில்லை.  அவர்கள் வீட்டில் தமிழ் இல்லை; குழந்தைகளுக்குத் தமிழ் தெரியவில்லை. இதனைப் பார்க்கும்பொழுது மனம் வேதனையாக இருந்தது. அவர்களும்கூட தமிழ் தெரியவில்லையே; படிக்கவில்லையே; தமிழ்ப்படிக்க வழியில்லையே என்று வருத்தப்படுகிறார்கள். ஆனால், நம் மலேசிய நாட்டில் அப்படியில்லை. தமிழ்ப் படிக்க நல்ல வாய்ப்பு இருக்கிறது. தமிழ் இலக்கியம் படிக்க அரசாங்கம் வாய்ப்பு கொடுத்துள்ளது. தமிழில் நன்றாகப் பேச முடிகின்றது. அப்படி இருக்கையில் நம் மாணவர்கள் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். நமது தாய்மொழியை நாம் படிக்காவிட்டால் காலப்போக்கில் நாமும் மியான்மார், இந்தோனேசியா, மொரிசியசு நாட்டுத் தமிழர்கள் போல ஆகிவிடுவோம். பிறகு, நமது அடுத்த தலைமுறை சொந்த அடையாளத்தைத் தொலைத்துவிட்ட இனமாக ஆகிவிடும்" என்று அவர் மேலும் தமதுரையில் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய, தமிழியல் ஆய்வுக் களத் தலைவர் இர.திருச்செல்வம் "எசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடத்தில் வைக்கப்பட்டுள்ள மூன்று நூல்களும் மிக அருமையானவை. மலேசியக் கவிதைக் களஞ்சியத்திலிருந்து மிக அருமையான கவிதைகளைத் தொகுத்து தந்துள்ளார்கள். மேலும், ஒவ்வொரு கவிஞரின் வாழ்க்கைக் குறிப்பைப் அவர்களின் படத்துடன் பதிவுசெய்து ஆவணப்படுத்தியுள்ளார்கள். அந்தக் கவிதைகளைப் படித்தால் மாணவர்கள் மிக சிறந்த பண்புடனும் நெறியுடனும் திகழ முடியும். அதேபோல், தமிழில் எழுதப்பட்ட மிகச் சிறந்த காப்பியமான சிலப்பதிகாரத்தைப் பாடமாகப் படிப்பதன்வழி தமிழின் சுவையையும் தமிழ் நாடகத்தின் அமைப்பு, சிறப்பு ஆகியவற்றையும் அறிந்துகொள்ள முடியும். கலைஞர் மு.கருணாநிதியின் சிலப்பதிகார நாடகக் காப்பியத்தைப் படிப்பதோடு நின்றுவிடாமல் சிலப்பதிகார மூலக்கதையைப் படித்து உணரவேண்டும். தமிழ் இலக்கியம் படிப்பதால் மாணவர் மனங்கள் பண்படுவதோடு, இளம் வயதிலேயே நல்ல உணர்வுகளும் எண்ணங்களும் பதிவாகும். தமிழ்மொழ்யின் மீது பற்றுதல் ஏற்படும். பாரிட் புந்தார் வட்டாரத்தில் உள்ள மாணவர்களின் நலனுக்காக இந்த இலக்கிய வகுப்பை நடத்திவரும் ஆசிரியர் சுப.நற்குணன் அவர்களிடம் நீங்கள் அனைவரும் நிறைய படித்துக்கொள்ள முடியும். அவர் மிகச் சிறப்பாகப் பாடம் நடத்தக்கூடியவர். ஆகவே, மாணவர்கள் அனைவரும் நல்லமுறையில் பயின்று சிறந்த தேர்ச்சியைப் பெற வேண்டும்" என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் இலக்கிய வகுப்பில் பயிலும் 25 மாணவர்களுக்கு 'இலக்கியக்களம்' வழிகாட்டி நூல் வழங்கப்பட்டது. விக்னேசுவரன் தண்ணீர்மலை இந்த நூல்களை அன்பளிப்புச் செய்ததோடு மாணவர்களுக்கு எடுத்து வழங்கினார்.

தூய உள்ளத்தோடும் நல்ல எண்ணத்தோடும் மாணவர்களுக்கு நூல்களை அன்பளிப்புச் செய்த விக்னேசுவரன் தண்ணீர்மலை அவர்களுக்கு நன்றி தெரிவித்து பேசிய சுப.நற்குணன், "இவரைப் போன்ற நல்லோர்களை அடையாளங்கண்டு மதிக்க வேண்டும். தமிழ்மொழி நலனுக்காக மனமுவந்து நன்கொடைகள் வழங்கி உதவும் நல்ல உள்ளங்கள் நம்மிடையே பலர் உள்ளனர். அவர்களின்  உதவியச் சரியாகப் பயன்படுத்தி நல்ல தமிழ்ப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, மாணவர்களிடையே தமிழ்மொழி அறிவையும் தமிழ் இலக்கிய ஆர்வத்தையும் உருவாக்குவதற்கு முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். தமிழ் இலக்கியப் பாடத்தை நம் தமிழ் மாணவர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். இல்லையேல், எசுபிஎம் தேர்விலிருந்து தமிழ் இலக்கியம் நீக்கப்படலாம். இப்படி ஒரு கவலைக்கிடமான நிலைமை நம் தமிழுக்கு ஏற்படக்கூடாது; அதுவும் நாமே அன்த நிலையை ஏற்படுத்தக்கூடாது" என்றார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழியல் நடுவ இலக்கிய வகுப்பு மாணவர்கள், நடுவப் பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

 
@சுப.நற்குணன், திருத்தமிழ்

Wednesday, April 10, 2013

செர்சோனீசு தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் சாதனை

தமிழ்ப்பள்ளிகளின் புறவளர்ச்சிக்கு முன்னாள் மாணவர் சங்கம் சிறந்த பங்களிப்பை வழங்க முடியும் என்பதற்குச் செர்சோனீசு தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் நல்லதொரு முன்மாதிரியாக விளங்குகிறது என்று அச்சங்கத்தின் தலைவர் சுப.நற்குணன் தெரிவித்தார்.

கடந்த 30-03-2013ஆம் நாள் காரிக்கிழமை, பேரா, கோலக் குராவ், செர்சோனீசு தோட்டத் தமிழ்ப்பள்ளியில் நடந்த முன்னாள் மாணவர் சங்கத்தின் முதலாம் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார்.

கடந்த 2011ஆம் ஆண்டில் 7 மாணவர்களுடன் தள்ளாடிக்கொண்டிருந்த செர்சோனீசு தோட்டத் தமிழ்ப்பள்ளி முடப்படக்கூடிய நெருக்கடிக்கு ஆளாகி இருந்தது. மூடப்படும் அபாயத்திலிருந்து பள்ளியைக் காப்பாற்ற வேண்டி, பள்ளி நிருவாகம், பெ.ஆ.சங்கம், பள்ளி மேலாளர் வாரியம் ஆகியவற்றுடன் இணைந்து முன்னாள் மாணவர் சங்கம் மும்முரமாகவும் முழுமூச்சாகவும் செயல்பட்டது. இதன் பயனாக, பள்ளியின் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

5-5-2012ஆம் நாள் முன்னாள் மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஒன்றுகூடல் நிகழ்ச்சியும் கல்விநிதி விருந்தோம்பலும் மிகப் பெரிய அளவில் ஏற்பாடு நடைபெற்றது. இப்பள்ளியில் பயின்ற ஏறக்குறைய 300 முன்னாள் மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் திரட்டப்பட்ட நிதிவளத்தைக் கொண்டு பள்ளியில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, மாணவர்களின் போக்குவரத்துக்கு உதவியாகப் பள்ளிப் பேருந்து வாங்குவதற்குத் திட்டம் வகுக்கப்பட்டது. அதற்காக, மு.மா.சங்கத் துணைத்தலைவர் இராம.பாலமுரளி தலைமையில் பள்ளிப் பேருந்து குழு அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் பயனாக, தற்பொழுது பள்ளிக்கென ஒரு பேருந்து வாங்கப்பட்டுள்ளது எனப் பலத்த கரவொலிக்கு இடையில் சுப.நற்குணன் அறிவித்தார். செர்சோனீசு பள்ளி வரலாற்றில் இதுவொரு மாபெரும் வெற்றி மட்டுமன்று புது வரலாறும்கூட என்றாரவர்.

மேலும் பேசுகையில், செர்சோனீசு தமிழ்ப்பள்ளியை கிரியான் மாவட்டத்திலும் பேரா மாநில அளவிலும் மிகச் சிறந்த தமிழ்ப்பள்ளியாக உருவாக்கிட மு.மா.சங்கம் பாடாற்றும் என்று தெரிவித்தார். அதற்கு, முன்னாள் மாணவர்கள் அனைவரும் உறுதியான ஆதரவினை வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய பள்ளி மேலாளர் வாரியக்குழுத் துணைத்தலைவர் திரு.இரா.பாலு, செர்சோனீசு தமிழ்ப்பள்ளி மு.மா.சங்கம் மிகச் சிறப்பான முறையில் செயல்படுகிறது என்றார். அதனுடைய பணிகளும் சேவைகளும் மற்றவர்களுக்கு நல்லதொரு முன்மாதிரியாக விளங்குகின்றது என்று புகழாரம் சூட்டினார்.

பள்ளியின் தலைமையாசிரியரும் மு.மா.சங்கத்தின் ஏடலுருமாகிய இர.முனுசாமி பேசுகையில், இந்த முன்னாள் மாணவர் சங்கம் அரிய செயல்களைச் சரியாகத் திட்டமிடுவதோடு அவற்றைச் சாதிப்பதிலும் முனைப்பாக இருக்கின்றது. மு.மா.சங்கக் குழுவினர் ஒவ்வொருவரும் பள்ளியின்மீது மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டு செயல்படுகின்றனர். இவர்களின் ஆதரவினால் பள்ளியில் பல மாற்றங்களும் முன்னேற்றங்களும் சீராக நடந்து வருகின்றன. குறிப்பாக, கடந்த ஆண்டில் வாக்குறுதி அளித்தது போல இவ்வாண்டில் பள்ளிக்குப் பேருந்து ஒன்றினை வாங்கி பெரும் சாதனை படைத்துள்ள மு.மா.சங்கத்திற்குத் தமது பாராட்டைத் தெரிவித்துக்கொண்டார்.

இந்த ஆண்டுப் பொதுக்கூட்டத்தில், மு.மா.சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். சங்கத்தின் நிதி வளத்தை அதிகரிப்பதற்காக சோமன் பாபு ஆயிரம் ரிங்கிட்டையும் செல்வம் ஶ்ரீ ஐந்நூறு ரிங்கிட்டையும் அன்பளிப்பு செய்தனர். மற்றொரு முன்னாள் மாணவராகிய யுவராஜ் நூறு ரிங்கிட் நன்கொடையளித்தார். சங்கத்தின் செயலாளர் இராஜேஸ்  ஒவ்வொரு மாதமும் 136.00 ரிங்கிட்டை மாத நன்கொடையாகப் பெற்றுத்தருவதாக உறுதியளித்தார். பள்ளியின் ஆசிரியர்களும் ஊழியர்களும் ஆளுக்குப் பத்து ரிங்கிடை ஒவ்வொரு மாதமும் நன்கொடையாக வழங்குவதாகத் தலைமையாசிரியர் தெரிவித்தார்.



இந்த ஆண்டுப் பொதுக்கூட்டத்தின் இறுதியில் பள்ளிக்காக வாங்கப்பட்டுள்ள பேருந்தின் வெள்ளோட்ட நிகழ்ச்சியும் சிறப்புடன் நடந்தது. பள்ளி மேலாளர் வாரியக்குழுவின் துணைத் தலைவர் திரு.இரா.பாலு பேருந்தை ஓட்டி வெள்ளோட்டம் விட்டார். வருகையளித்த உறுப்பினர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். செர்சோனீசு தோட்டத் தமிழ்ப்பள்ளி வரலாற்றில் இதுவொரு பெரும் சாதனை என அனைவரும் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டனர்.

                                                                                                                  @சுப.நற்குணன், திருத்தமிழ்

Saturday, March 30, 2013

செர்சோனீசு முன்னாள் மாணவர் சங்க ஆண்டுப் பொதுக்கூட்டம்

பேரா மாநிலத்தில் உள்ள கோலக் குராவ், செர்சோனீசு தோட்டத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தின் முதலாவது ஆண்டுப் பொதுக்கூட்டம் பின்வரும் வகையில் நடைபெற உள்ளது.

நாள் : 30-03-2013 (காரிக்கிழமை)
நேரம் : மாலை மணி 5:00
இடம் : செர்சோனீசு தமிழ்ப்பள்ளிக்  கூட்ட அறை

இந்த ஆண்டுக் கூட்டத்தில் முன்னாள் மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுமென முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் என்னும் முறையில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த 2011இல், மூடப்படக்கூடிய நெருக்கடி நிலைக்கு ஆளாகி பின்னர் பள்ளி நிருவாகம், பெ.ஆ.சங்கம், பள்ளி மேலாளர் குழு, முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாலும் சீரிய நடவடிக்கையாலும் மூடப்படும் ஆபாயத்திலிருந்து பள்ளி காப்பாற்றப்பட்டது. பின்னர் 2012 மே திங்கள் 5ஆம் நாள் முன்னாள் மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் 'மீண்டும் பள்ளிக்குப் போகலாம்' எனும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்தது. அந்த நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்பட்ட நிதி வளத்தைக் கொண்டு பல்வேறு வளர்ச்சிட் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது செர்சோனீசு தோட்டத் தமிழ்ப்பள்ளி வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றது. பள்ளியை மீட்கவும் காக்கவும் முழுமூச்சாகச் செயல்பட்ட முன்னாள் மாணவர் சங்கம் நடத்தும் முதலாவது ஆண்டுப் பொதுக்கூட்டம் இதுவாகும்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் மேலும் ஒரு சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. பள்ளி மாணவர்களின் போக்குவரவுக்கு உதவியாக, மு.மா.சங்கம் 'பள்ளிப் பேருந்து' ஒன்றனை வாங்கியுள்ளது. இப்பள்ளிப் பேருந்தின் வெள்ளோட்ட நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறவுள்ளது.

ஆகவே, செர்சோனீசு தோட்டத் தமிழ்ப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்றுக்கொண்டு ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் கலந்து சிறப்பிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

மேல் விவரங்களுக்கும் தொடர்புக்கும்: தலைவர் சுப.நற்குணன் 012-4643401 / துணைத்தலைவர் இராம.பாலமுரளி 017-5573110.

@சுப.நற்குணன்

Monday, March 04, 2013

12-ஆவது தமிழ் இணைய மாநாடு - கோலாலம்பூர், மலேசியா

உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்) அமைப்பு 12ஆவது உலகத் தமிழ் இணைய மாநாட்டை மலேசியாவின் முதன்மைப் பல்கலைக்கழகமான மலாயாப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடத்துகிறது. மலாயாப் பல்கலைக்கழகத்தின் மொழி மொழியியல் புலம், தகவல் தொழில்நுட்ப நடுவம் ஆகியவற்றுடன் இணைந்து 'திதியான் டிஜிட்டல்' திட்டத்தின் ஆதரவுடனும் இம்மாநாடு நடைப்பெறுகிறது

கணினி, இணையம் ஆகியன தொடர்பாகத் தமிழின் பயன்பாடுகள் பற்றிய ஆய்வுகள் உலகெங்கும் தமிழர்களிடையே பரவும் வகையில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உத்தமம் அமைப்பு உலகத்தமிழ் மாநாடுகளை நடத்தி வருகிறது. உத்தமம் உலகத்தமிழர்களை இணையத்தின் வாயிலாக இணைப்பதில் வெற்றி கண்டுள்ளது.

இது வரை எட்டு மாநாடுகளை அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மனி, இந்தியா ஆகிய நாடுகளில் முன்னணிப் பல்கலைக் கழகங்களோடு இணைந்தும், தமிழகத்தில் மூன்று மாநாடுகளை தமிழக அரசின் முழு ஆதரவோடும் உத்தமம் நடத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. இந்த ஆண்டு மலேசியாவின் தலைநகரம் கோலாலம்பூரில் உள்ள மலாயாப் பல்கலைக் கழகத்தின் ஆய்வு மேலாண்மை கண்காணிப்பு நடுவத்தில், வரும் ஆகஸ்டு 15 முதல் 18 வரை “12ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2013” நடத்த உத்தமத்தின் செயற்குழு முடிவெடுத்துள்ளது.  உத்தமத்தின் தலைவர் சி. ம. இளந்தமிழ் அவர்கள், மாநாட்டின் உள்ளூர்க் குழுவுக்குத் தலைமை தாங்கவிருக்கிறார். உத்தமம் அமைப்பின் மேனாள் தலைவர் திரு மணி மு. மணிவண்ணன் அவர்கள் மாநாட்டின் பன்னாட்டுக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

முந்தைய இணைய மாநாடுகளைப் போலவே வரும் 2013 மாநாடும் கருத்தரங்கு, கண்காட்சி, மக்கள் கூடம் என்று மூன்று முனைகளில் செயல்படும். ஆய்வுக் கருத்தரங்கு மற்றும் பயிலரங்கு ஆகஸ்டு 15, 16, 17 ஆகிய மூன்று நாட்களில் நடக்கவிருக்கிறது.  கண்காட்சியும்  மக்கள் கூடமும் ஆகஸ்டு 16, 17, 18 ஆகிய மூன்று நாட்களில் நடக்கும். மாநாட்டுக்குப் பதிவு செய்த பேராளர்கள் மட்டுமே கருத்தரங்கு மற்றும் பயிலரங்கில் கலந்து கொள்ளலாம். கண்காட்சியிலும் மக்கள்கூடத்திலும் பொதுமக்கள் பார்வையாளர்களாகப் பங்கேற்கலாம்.

கருத்தரங்குகளில் பல்வேறு ஆய்வாளர்கள் கணினித்தமிழ் குறித்த தங்களின் ஆய்வுகளை ஏனைய ஆய்வாளர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்.  மாநாட்டின் கருத்தரங்கக் குழுவுக்கு  முனைவர் பத்ரி சேஷாத்திரிஅவர்கள் தலைமைப் பொறுப்பு ஏற்றுள்ளார்.  கருத்தரங்குக் குழு மாநாட்டுக்கான ஆய்வுக் கட்டுரைகளைத் தேர்வு செய்வதுடன், கருத்தரங்குகளைச் செவ்வனே நடத்தும் பொறுப்பையும் வகிக்கும். இவ்வாண்டின் கருத்தரங்கிற்கு “கையடக்கக் கணினிகளில் தமிழ்க் கணிமை”என்ற  தலைமைக் கருத்தை ஒட்டிய ஆய்வுக்கட்டுரைகளை வரவேற்கிறோம்.

இணைய மாநாடுகள் ஆய்வாளர்களின் கருத்துப் பரிமாற்றத்துக்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல், மக்கள் கூடத்தின் மூலம் கணித்தமிழ் நுட்பங்களைப் பரப்புதல், கணித்தமிழ் மென்பொருட்கள் மற்றும் கருவிகளைக் கண்காட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்தல் போன்ற பல்வேறு செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.  இவ்வாண்டு மாநாட்டின் மக்கள் கூடம் மூலம் கணித்தமிழ் நுட்பங்களை இத்துறையின் வல்லுநர்கள் மற்றும் மாணவர்களிடையே பரப்புதல், பயிலரங்குகள் நடத்திக் கணித்தமிழின் நுட்பங்களைப் பயிற்றுவித்தல், கணினி வழியாகக் கற்கும் மற்றும் கற்பிக்கும் பல்வேறு முறைகளை ஆசிரியர்களிடம் பரப்புதல் போன்ற முயற்சிகளை எடுக்கவிருக்கிறோம். கடந்த ஆண்டுகளை போலவே இவ்வாண்டும் கணித்தமிழ்ச் சங்கம் கண்காட்சி அரங்கம் ஏற்பாடுகளில் பெரும்பங்கு வகிக்கும்.

கீழ்க்கண்ட தலைப்புகளில் கட்டுரைகளை வரவேற்கிறோம்:
  • செல்பேசிகள் மற்றும் பலகைக் கணினிகளில் முக்கியமாக ஐ.ஓ.எஸ், ஆண்டிராய்டு மற்றும் விண்டோஸ் தளங்களில் தமிழைப் படித்தல், தமிழில் எழுதுதல்.
  • மின் நூல்கள், மின் இதழ்கள் ஆகியவற்றைக் கைக் கருவிகளில் கொண்டுவர உதவும் செயலிகள் மற்றும் தொழில்நுட்பம்.
  • ஐ.ஓ.எஸ், ஆண்டிராய்டு, விண்டோஸ் மற்றும் எச்.டி.எம்.எல் 5 குறுஞ்செயலிகள் (Apps).
  • திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கல்.
  • இயன்மொழிப் பகுப்பாய்வு பிழைதிருத்தி,  தமிழ் எழுத்துரு பகுப்பி, ஒலி உணர்தல், தேடல்பொறிகள் , இயந்திர மொழிமாற்றம், தகவல் அகழ்தல் போன்றவை.
  • தமிழ் இணையத்தின் தற்போதைய நிலை: வலைப்பதிவு, சமூக வலைத்தளங்கள், விக்கிப்பீடியா, குரல் வலை போன்றவை.
  • தமிழ் தரவுத்தளங்கள்.
  • கணினி வழி தமிழ் கற்றல் மற்றும் கற்பித்தல் குறித்தான ஆய்வுகள்
  • தமிழ்க் கணினி சொல்லாக்க ஆய்வுகள்.
  • கணினி வழி தமிழ்மொழி  பகுப்பாய்தல் மற்றும் கணினிக்கு தமிழ் மொழியறிவு ஊட்டல் பற்றிய ஆய்வுகள்.
கட்டுரைகள் மின்னஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்பப்படவேண்டும். ஆய்வுச் சுருக்கங்களும் இறுதிக் கட்டுரையும் திருத்தக்கூடிய வடிவத்தில் மட்டுமே அனுப்பப்படவேண்டும். இவை உரைக் கோப்புகளாக, எச்.டி.எம்.எல் வடிவில், மைக்ரோசாஃப்ட் வேர்ட் அல்லது ஓப்பன் ஆஃபீஸ் கோப்புகளாக இருக்கலாம். பி.டி.எஃப் அல்லது அதுபோன்ற திருத்தமுடியாத வடிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படா. கட்டுரைகள் ஆங்கிலத்திலோ, தமிழிலோ அல்லது இரு மொழிகளும் கலந்த வகையிலோ இருக்கலாம். தமிழில் அல்லது இருமொழியில் இருந்தால், யூனிகோட் குறியீட்டில் மட்டுமே இருக்கலாம். பிற குறியீடுகளைக் கொண்டு அனுப்பப்படும் கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

மாநாட்டு இதழ் ஒன்று அச்சு வடிவிலும் மின் வடிவிலும் வெளியிடப்படும். ஏற்றுக்கொள்ளப்பட்டு, மாநாட்டில் நேராகப் படிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள் மட்டுமே மாநாட்டு இதழில் சேர்த்துக்கொள்ளப்படும். கட்டுரைகள் அனுப்புவோர் நேராக மாநாட்டுக்கு வந்து கட்டுரைகளைப் படிக்க ஒப்புக்கொள்கிறார் என்று புரிந்துகொள்ளப்படும்.

(ஏ4 அளவில்) இரு பக்கங்களுக்கு மிகாது கட்டுரைச் சுருக்கங்களை நிகழ்ச்சிகள் குழுவுக்கு cpc@infitt.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். கட்டுரை வந்து சேர்ந்தது குறித்து உடனடியாக உங்களுக்கு மின்னஞ்சல் வாயிலாகத் தகவல் தெரிவிக்கப்படும். மேலும் கட்டுரைச் சுருக்கங்களை ti2013.infitt.org என்ற இணைய தளம் மூலமும் சமர்ப்பிக்கலாம். கட்டுரைச் சுருக்கங்களை  அனுப்பக் கடைசி தேதி மே 31, 2013 ஆகும்.

பேரா. மு. அனந்த கிருஷ்ணன் ஆய்வுக் கட்டுரைப் போட்டி:
மாநாட்டில் கலந்து கொள்ளும் ஆய்வாளர்களில் நான்கு (4) சிறந்த ஆய்வுக் கட்டுரைகளுக்கு பே.ரா. மு. அனந்த கிருஷ்ணன் விருது வழங்கப்படும்.
 
தமிழ் குறுஞ்செயலி உலகப் போட்டி:
கையடக்கக் கணினிகளின் தொழில்நுட்பம் வளர்ந்து கொடுப்பதற்கு ஈடாகத் தமிழிலும் குறுஞ்செயலிகள் (Applets or Apps) வளர வேண்டும் என்பதை உணர்ந்தும் மேலும் பல நிரலாளர்களைத் (programmers) கணினித்தமிழுக்கு ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், தமிழுக்கான சிறந்த குறுஞ்செயலிப் போட்டி ஒன்றை அறிவிக்கிறோம். ஆப்பிள் ஐ-ஓஎஸ், ஆண்டிராய்டு, விண்டோஸ்8 தளங்களுக்கான  குறுஞ்செயலிகள் போட்டியில் பங்கேற்கலாம். போட்டியைப் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு உத்தமத்தின் வலைத்தளம் ti2013.infitt.org அணுகவும்.  

மாநாடு குறித்த கூடுதல் விவரங்களுக்குக் கீழ்க்காணும் மின்முகவரிகளில் தொடர்பு கொள்ளவும்: ed@infitt.org மற்றும் chair@infitt.org

சி. ம. இளந்தமிழ்
தலைவர் உத்தமம், மலேசியா
செல்: 0060-12314390
chair@infitt.org


அ. இளங்கோவன்
செயல் இயக்குனர், உத்தமம், சென்னை, இந்தியா
செல்: 0091-98410 23223
ed@infitt.org

@நன்றி : உத்தமம் (infitt)



Thursday, February 21, 2013

கோலாலம்பூரில் "தை முதல் நாளே தமிழாண்டுத் தொடக்கம்" உலகப் பரந்துரை மாநாடு-3


எதிர்வரும் 24-2-2013இல் தை முதல்நாளே தமிழாண்டுத் தொடக்கம் எனும் உலகப் பரந்துரை மாநாடு மலேசியத் தலைநரான கோலாலும்பூர், தான்சிறீ சோமா அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைப்பெறவுள்ளது.

இம்மாநாட்டின் ஏற்பாடுளை மலேசியாவின் மூன்று தேசிய அமைப்புகளான மலேசியத் தமிழ் இலக்கியக்கழகம், மலேசியத் தமிழ் நற்பணிக்கழகம், மலேசியத் திராவிடர்க் கழகம் ஆகியன செய்து வருகின்றன். மேலும் மலேசிய நாட்டில் இயங்கிவரும் 15க்கும் மேற்பட்ட தமிழுணர்வுக் கொண்ட அமைப்புகள் இம்மாநாடு சிறக்கத் துணைபுரிந்து வருகின்றன. 

மலேசியத் தமிழ் இலக்கியக் கழகம் “தை முதல்நாளே தமிழாண்டுத் தொடக்கம்” எனும் தமிழ் மக்களின் நீண்டகாலப் போராட்டம் வெற்றி பெறும் வகையில் கருத்துப் பரப்புரைகளைச் செய்து துணை நிற்பது இங்குக் குறிப்பிடத் தக்கதாகும்.

தமிழக அரசு, புதுவை அரசு, மலேசிய அரசு இன்னும் பிறநாடுகளிலிருந்து அவ்வந்த நாடுகளின் சார்பாகத் தமிழ் அறிஞர்கள் தமிழ் ஆய்வாளர்கள் இந்த உலகப் பரந்துரை மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.   


இம்மாநாட்டில் தமிழ்ப்புத்தாண்டுப் பொங்கலை ஒட்டிய சிறப்புத் தீர்மானங்களும், தமிழக மற்றும் உலக அரசுகளின் செயற்பாட்டுக்கான பொதுத் தீர்மானங்களும், ஈழத் தமிழர் நலன் குறித்து உலக அரசுகளுக்கான வேண்டுரைகளும் நிறைவேற்றப்படவுள்ளன.

இம்மாநாடு காலை 8.00 மணிக்குத் தொடங்கி பகல் 2.00 மணிக்கு முடிவுறும். இம்மாநாட்டில் தமிழ்மறை ஓதப்பட்டு நிகழ்ச்சிகள் முறையாகத் தொடங்கும்
  
இம்மாநாட்டின் கருப்பொருளை ஒட்டி தமிழறிஞர்கள் தத்தம் கருத்துரைகளைச் சான்றுகளுடன் நிறுவர். பல அரிய கருத்துகளைத் தாங்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க மாநாட்டு மலர் வெளியீடு செய்யப்பெறும்.

இம்மாநாட்டைக்குறித்து உலக முழுவதும் உள்ள தமிழ்ச்செய்தி ஊடகங்கள் அனைத்தும் தமிழர்களின் எழுச்சிக் குறித்து கருத்துப் பரப்புரைகளைச் செய்வதற்கும் தாளிகைகள், மாதிகைகள், ஏடுகள் ஆனைத்தும் தமிழ்ப்புத்தாண்டு பொங்கள் மலரை வெளிக்கொணர்வதற்கும் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.   

1921 ஆம் ஆண்டு தமிழகத்தில் தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் தலைமையில் 500க்கும் மேற்பட்ட தமிழ்ப்புலவர்கள் ஒன்றுக்கூடி திருவள்ளூவராண்டினை முடிவு செய்து தை முதல்நாளே தமிழாண்டுத் தொடக்கம் என அறிவிப்புச் செய்தனர்; இதனை உலகத் தமிழர்கள் ஏற்றுப் பின்பற்றவே வரலாற்றுச் சிறப்புமிக்க இம்மாநாடு நடைபெறுகின்றது.


இம்மாநாட்டில் தமிழர்கள் பெரும் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர்.

மிராக எழுதற்கும் து னி அடையாளம் பேணுதற்கும் 
"தை முதல்நாளே மிழாண்டுத் தொடக்கம்" என்தை உத்தின் செவிளில் அறைதற்கும் மிழர்கள் அனைரும் லையெதிளுவோம்.. வாரீர்..! வாரீர்..!!
 

Wednesday, February 20, 2013

கோலாலம்பூரில் உலகத் தாய்மொழி நாள்

அனைத்துலகத் தாய்மொழி நாள்  ஒவ்வோர் ஆண்டும் பிப்பிரவரி மாதம் 21 ஆம் தேதியில் கொண்டாடப்படுகிறது.

மலேசியாவில் நாளை (பிப்பிரவரி 21, 2013) கோலாலம்பூரில் மலாயா பல்கலைக்கழகத்தில் உலகத் தாய்மொழி நாள் கொண்டாடப்படவிருக்கிறது.

இவ்விழாவை மலேசிய செயல் கூட்டமைப்பின் (Gabungan Bertindak Malaysia) ஆதரவுடன் தமிழ் அறவாரியம் மலேசியா, லிம் லியன் கியோக் பண்பாட்டு மையம், கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் சீன அசெம்பிளி ஆல் மற்றும் மலாயா பல்கலைக்கழகத்தின் மேம்பாடு மையமும் கூட்டாக ஏற்பாடு செய்துள்ளன.

ஐநாவின் யுனெசுகோ பிப்பிரவரி 21 ஆம் தேதியை அனைத்துலக தாய்மொழி நாளாக 1999 ஆம் ஆண்டில் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து 2000 ஆண்டிலிருந்து அனைத்துலகத் தாய்மொழி நாள் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகத் தாய்மொழி நாள் வரலாறு

தங்களுடைய தாய்மொழியான வங்காள மொழியை வங்காளத்தின் (அன்றைய கிழக்கு பாக்கிசுதான்) தேசிய மொழியாக அறிவிக்கக் கோரி பிப்பிரவரி 1952 இல் கிழக்கு பாக்கிசுதான் முழுவதும் போராட்டம் நடந்தது. அப்போராட்டத்தில் பங்கேற்ற டாக்கா பல்கலைக்கழகத்தின் நான்கு மாணவர்கள் – அப்துல் சலாம், ரபிக் உடின், அப்துல் பர்காத், அப்துல் ஜபார் – போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இறுதியில், வங்காள தேசம் என்ற தனிநாடு 1971 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பிப்பிரவரி 21 ஆம் நாள்தான் அனைத்துலகத் தாய்மொழி நாளாக நினைவுக்கூரப்பட்டு வருகிறது.

நாளை நடைபெறவிருக்கும் அனைத்துலகத் தாய்மொழி நாள் நிகழ்ச்சியில் பல்லின கலை நிகழ்ச்சிகளோடு மலாயா பல்கலைக்கழத்தின் வருகை பேராசிரியர் டாக்டர் கே. கருணாகரன் “தாய்மொழியின் முக்கியத்துவம்” குறித்து உரையாற்றுவார்.

மேலும், இக்ராம் அமைப்பின் தலைமைச் செயலாளர் ஜைட் கமாருடின், தமிழ் அறவாரியத்தின் தலைவர் சி. பசுபதி, லிம் லியன் கியோக் மையத்தின் தலைவர் டாக்டர் தோ கின் வூன், ஜோஆஸ் பிரதிநிதி ராமன் பாதுயின் (சுக்கு கவும் செமாய்) மற்றும் தமிழ் அறவாரியத்தின் துணைத் தலைவர் சி.எம். திரவியம் ஆகியோரும் உரையாற்றுவார்கள்.

இந்நிகழ்ச்சி குறித்த விபரங்கள்:
இடம் : Dewan Kuliah Angsana, Faculty of Langugage and Linguistics, Perisiaran Bernas, University of Malaya.
நாள் : பிப்பிரவரி 21, 2013 (வியாழக்கிழமை)
நேரம் : மாலை மணி 6.00 லிருந்து இரவு மணி 8.30 வரையில்.

இந்நிகழச்சியில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

நன்றி:செம்பருத்தி.காம்

 தொடர்பான இடுகைகள்:-

பிப்பிரவரி 21 - அனைத்துலகத் தாய்மொழி நாள்

அனைத்துலகத் தாய்மொழி நாள் (21-2-2009)

 

Thursday, February 07, 2013

தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் சரிவு! ஏன்? என்ன செய்யலாம்?

தமிழ்ப்பள்ளி என்பது ஒரு கழகம் (institution) இங்கிருந்துதான் தமிழ், தமிழர் சம்பந்தப்பட்ட அனைத்து சமாச்சாரங்களும் உருவாக்கப்பட்டு வியாபித்து ஆலமரமாய் உருவெடுக்கின்றன. தமிழன்  இந்நாட்டின் ஓர் அங்கமாய் விளங்க, தொடர்ந்து ஒரு சமுதாயமாக இருக்க, அரசாங்கம் தமிழனை இந்நாட்டில் உள்ள மூவினங்களில் ஓரினமாய் அங்கீகரிக்க அதன் வழி அந்த இனத்திற்கு வேண்டிய சலுகைகளை தொடர்ந்து ஒதுக்கிட தமிழ்ப் பள்ளிகளின் நிலைத்தன்மை இந்த நாட்டில் அவசியமாகின்றது.

தமிழ்ப் பேசும் கூட்டம் இருந்தால்தான், தமிழன் என்ற ஒரு இனம் அடையாளம் காணப்படும்; அதற்குறிய அங்கீகாரமும் கிடைக்கும். தமிழ்ப் பேசும் மக்களை உருவாக்கும் தளம் தமிழ்ப்பள்ளிக்கூடங்கள். ஆகவே தமிழ்ப் பள்ளிகள் அழிந்தால், தமிழ்ப் பேசுபவர்கள் குறைவார்கள், தமிழின் பயன்பாடு குறையும், தமிழை அரசாங்கம் ஒரு தேவையானா மொழியாக கருதாமல் புறந்தள்ளும். அதானால், தமிழை எங்கெல்லாம் அரசாங்கம் இதுகாறும் பயன் படுத்தி வந்ததோ (உதாரணம்: வானொலி தொலைக்காட்சி, அரசு வெளியீடுகள்) அங்கெல்லாம் அதன் பயன்பாட்டை சிறுது சிறிதாக குறைத்து இறுதியில் அது முற்றிலுமாக நீக்கப்பட்டு விடும்.

தமிழ்ப்பள்ளியிலிருந்து விளையும் பயிற்கள் எங்கெல்லாம் ஊடுருவுகின்றன என்பதனைக் காண்போம் :

•    தமிழ் ஆசிரியார்களாக உருவாகி தமிழ்ப்பள்ளிகளுக்கே உரமாகிறார்கள். இதனால் 9 ஆயிரம் தமிழ் ஆசிரியர்கள், 523 தலைமை ஆசிரியர்களின் வாழ்வாதாரமாக தமிழ்ப்பள்ளிகள் விளங்குகின்றன.

  • •    தமிழ்ப்பாடம் இடைநிலப்பள்ளியில் தொடர்ந்து ஒரு பாடமாக இருக்க மாணவர்களை அனுப்பும் ஊட்டிகளாக (feeder) தமிழ்ப்பள்ளிகள் விளங்குகின்றன. பின்பு இம்மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் தமிழில் பட்டதாரியாவதற்கும் தமிழ்ப் பள்ளிகளே காரணமாக அமைகின்றன.

•    தமிழை திறனாக படிப்பதாலும் பேசுவதாலும், தமிழ் சார்ந்த அமைப்புகளிலும், நிறுவனங்களிலும் வேலை செய்ய வாய்ப்புகளும் அதன் வழி வாழ்வாதாரமும் கிடைக்கின்றன. உதாரணம் : மின்னல் எப் எம், டிஎச்ஆர் ராகா வானொலி, அஸ்ட்ரோ வானவில்.

  • •    தமிழ்ப் பத்திரிக்கை துறைக்கு, ஆசிரியர்கள்,  நிருபர்கள், பிழை திருத்துபவர்கள் இவர்களை உற்பத்தி செய்யும் முதல் கட்ட தொழிற்சாலை தமிழ்ப் பள்ளிகளாகும். தமிழ்ப் பள்ளிகள் இல்லயென்றால் இத்துறைதான் முதலில் காணாமல் போகும்.

நூல் எப்படி சிதறிய முத்துக்களை ஒன்றிணைத்து கோர்வையாய் ஒரு மாலையாய் உருவாக்குகின்றதோ அதே போல் தமிழ் என்னும் நூலானது, தமிழ்ச் சார்ந்த அனைத்திலும் ஊடுறுவி தமிழனை ஒரு இனமாய் ஒரு சமூகமாய் அடையாளங் காட்டுகிறது. தமிழ்ப்பள்ளிகள் இல்லையேல் தமிழனின் அடையாளங்கள் யாவும் கோர்க்கப்படாத காரணத்தினால் சிதறி, நாளடைவில் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.


  • மாணவர் சரிவு

இந்த ஆண்டு தமிழ்ப் பள்ளிகளுக்கு செல்லும் ஒன்றாம் ஆண்டின் மாணவர்களின் என்ணிக்கை முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் சரிவைக் கண்டுள்ளது என்பதனை நாம் அறிவோம். தொடர்ந்து இந்த நிலைமை நீடிக்குமானால் தமிழ்ப் பள்ளிகள் இந்த நாட்டில் அதிக நாட்கள் நீடிக்க மாட்டா என்ற உண்மையும் நம்மை சுடுகின்றது. இது குறித்து தனி மனிதர்கள் வழியும்  சமூக அமைப்புகள் வழியும்  பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கணிசமான இந்திய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஏன் தமிழ்பள்ளிகளுக்கு அனுப்புவதினின்றும் தவிர்க்கிறார்கள் என்பதற்கு பல காரணங்களுண்டு…

  • 1.    தேசிய பள்ளிகளில் கணிதமும், அறிவியலும் மலாய்  மொழியில் பயிற்றுவிப்பதால் அவர்கள் இடைநிலைப் பள்ளிக்கு போகும் பொழுது அவ்விரு பாடங்களும் தொடர்ந்து மலாய் மொழியில் இருப்பதாலும் அது தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு  சுலபமாக இருக்கும் என்ற எண்ணம்.
  •  2.    தமிழ்ப் பள்ளிகளில் பயில்வதனால் பொருளாதார  பலன் இல்லை.
  •  3.    தமிழரல்லாதவர்கள் பெரும்பாலும் வேற்று மொழி பள்ளிகளுக்கே தங்கள் பிள்ளைகளை அனுப்ப விரும்புகிறார்கள். குறிப்பாக வட இந்தியர்கள் மலையாளிகள் தெலுங்கர்கள் (தோட்டபுற மக்களைத் தவிர) ஆங்கிலம் போதனா மொழியாக இருந்த காலந்தொட்டே தமிழ்ப்பள்ளிகளை தவிர்த்து வந்துள்ளனர்.
  •  4.    சில பெற்றோர்களுக்கு இனப்பற்றும் மொழிப்பற்றும் குறைவாக இருப்பதனால்.
  •  5.    தமிழ்ப்பள்ளிகளின் தரத்தின் மீது பெற்றேர்களுக்கு நம்பிக்கை இன்மை.
இந்த மேற்கூறிய காரணங்களுக்காக எறக்குறைய 70 ஆயிரம் இந்திய  மாணவர்கள் மற்ற மொழி பள்ளிகளில் பயிலும் நிலைமை உருவாகியுள்ளது. தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை தற்பொழுது 1 லட்சமாக இருக்கிறது.

அறிவியலும் கணிதமும் மலாய் மொழியில் போதிப்பதனால் தமிழ்ப் பிள்ளைகள் மலாய் பள்ளிக்கு செல்கிறார்கள் என்ற கூற்றில் உண்மை இருந்தாலும், இதே பிரச்சனை சீன பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கும் பொருந்தும் என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். அவ்வின மக்களில் 97 விடுக்காட்டினர் சீனப்பள்ளிக்களுக்குத்தான் அனுப்புகிறார்கள் என்று ஆய்வு கூறுகின்றது.

தமிழ்ப் பள்ளிகளில் தேசிய மொழியில் நல்ல தேர்ச்சி இருந்தால் அவர்கள் இடைநிலைப்பள்ளிகளில் இந்த இடையூறுகளை சுலபமாக எதிர்கொள்வார்கள் என்பதும் நிரூபிக்கப்பட்ட  உண்மை.  இதை ஒன்றையே முதற்காரணமாகக் கொண்டு தமிழ்ப் பிள்ளைகள் தமிழ்ப் பள்ளிகளுக்களுக்கு அனுப்பாதது மிகவும் தவறு. அதோடு, தமிழ் மொழி  மலாய் மொழியைவிட கடினமான மொழி. நம் மாணவர்கள் தமிழ்ப் பாடத்தில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தால் அவர்களுக்கு மற்ற மொழிகள் சுலபமாக வரும். ஆகவே தமிழ்ப்பள்ளியிலிருந்து போகக் கூடியவர்கள் தமிழில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தால் அவர்களால் எந்த மொழியிலும் எந்த பாடத்தையும் சுலபமாக படிக்கும் ஆற்றல் ஏற்படும்.

இந்த சிந்தனை மாற்றம் இந்தியப் பெற்றொர்களுக்கு ஏற்பட்டால் அதனால் குறந்தது 35 ஆயிரம் இந்திய மாணவர்களையாவது  நாம் தமிழ்ப் பள்ளிகளின் பால் ஈர்க்கமுடியும் . அதனால் ஏறக்குறைய 3000 தமிழ் ஆசிரியர்கள் பணியிலமர்த்தப்படுவார்கள்.

தமிழ்ப்பள்ளிகளில் பயில்வதானால் பொருளாதார பயன்கள் எதுவும்  இல்லை என்று கூறுவது அறியாமையால் வருவது என்பது என் கருத்து. தமிழ்ப்பள்ளியில் பயிலுவதோ வெறும் 6 ஆண்டுகள் மட்டுமே, அதுவும் எண் எழுத்து வாசித்தல் என்னும் அடிப்படை கல்வி மட்டுமே கற்று, உடல்  முதிர்ச்சி, மனப்பக்குவம்  அடையாத வயதில் எந்த விதமான பொருளாதர பயனையும்  நாம் எதிர்பார்க்க முடியாது.

 
இது தமிழ்ப் பள்ளிகளுக்கு மட்டும் பொருந்தக்கூடியது அல்ல, ஒரு மாணவன் எந்த மொழிப்பள்ளியில் பயின்றாலும் ஆரம்ப கல்வியின் மூலம் அவனுடைய பொருளாதாரம் உயராது. இந்த அறியாமையால்தான் இந்தியப் பெற்றோர்களில் சிலர் தங்களின் பிள்ளகளை சீனப்பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள். சீனமொழிப்படித்தால் எப்படியாவது நம் பிள்ளை முன்னுக்கு வந்துவிடுவான் என்று நம்புகின்ற பெற்றோரை இன்றும் காணலாம்.

1.    1950 களில் மலாயாப் பல்கலைகழகத்தில் இந்தியப் பிரிவு ஆரம்பிக்கப்பட்ட பொழுது , அங்கு பயிற்று மொழியாக சமஸ்கிருதத்தை கொணர வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. அப்பொழுது சிங்கப்பூரிலிருந்து வெளி வந்த தமிழ் முரசு பத்திரிகையின் ஆசிரியர் தமிழவேள் கோ சாரங்கபாணி அவர்களின் விடாமுயற்சியாலும், கடும் உழைப்பாலும், நடத்திய ஆர்பாட்டங்களாலும் அப்போதைய அரசாங்கம் தமிழ்ச் சமுதாயத்தின் வேண்டுகோளை ஏற்று தமிழை பயிற்று மொழியாக்கிற்று. அன்று  தமிழ்வேள் கோ.சாரங்கபாணி அந்த முயற்சியை மேற்கொண்டிராவிட்டால் இன்று தமிழே மலாயாப் பல்கலைகழகத்தில் இல்லாமல் போய் தமிழ்ப் பட்டதாரிகளும் உருவாகாமலேயே போயிருப்பார்கள். அது எத்தனை பெரிய இழப்பாக இருந்திருக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள்.

எப்படி அண்ணன் கோ.சாரங்கபாணி 60 வருடங்களுக்கு முன்னால் தமிழுக்காக போராடினார்களோ அதே வழியில் நாம் சென்று போராட வேண்டும். மாநிலங்கள் தோறும், ஜில்லாக்கள் தோறும், தோட்டங்கள் தோறும், தமிழ் சார்ந்த இயக்கங்கள், தமிழர் இளைஞர் மணிமன்றங்கள், அரசியல் சார்புடைய இயக்கங்கள், அரசு சாரா இயக்கங்கள் ஒன்று சேர்ந்து அந்த அந்த இடத்திலுள்ள பெற்றோர்களை அழைத்து அவர்களுக்கு தமிழ்ப் பள்ளிக்கூடங்களின் அவசியத்தை உணர்த்தி, அங்கு அவர்கள் பிள்ளைகளை அனுப்ப உத்தரவாதம் பெறவேண்டும்.

முதலில் அங்குள்ள பகுதிகளில் எத்தனை தமிழ்ப் குடும்பங்கள் இருக்கின்றன, அதில் எத்தனை பிள்ளைகள் அடுத்த வருடம் பாலர் பள்ளிக்கும், ஒன்றாம் வகுப்புக்கும் போகும் வயதுடையவர்கள் என்ற புள்ளி விவரங்களை துல்லியமாக எடுக்கவேண்டும். அதன் பின் அங்குள்ள தமிழ்ப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் துணை கொண்டு ஒரு பொதுக்கூட்டமோ விருந்தோ வைத்து எல்லா பெற்றோர்களையும் அழைத்து அங்கேயே பதிவினை நடத்தவேண்டும்.

இதற்கு தலைமை ஆசிரியர்களும் ஒத்துழைப்பு நல்கவேண்டும். இந்த வேலையை அரசாங்கம்தான்  செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. தமிழ் மொழி என்பது தமிழர்களால் மட்டுமே கட்டிக்காக்கப்படவேண்டிய ஒரு சொத்து. அதனின் வாழ்வும் சாவும் தமிழர் கையில்தான் உள்ளது. இதுதான் நிதர்சனமான உண்மை, இதனை அனைத்து தமிழர்களும் முதலில் உணரவேண்டும். ஆகவே இந்தாட்டில் தமிழ் நிலைக்க வேண்டுமா இல்லையா என்பதனை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.

2.    தமிழ் பள்ளிக்கூடங்களை தேசிய பள்ளிகளுக்கு இணையாக தரத்தில் உயர்தப்படவேண்டும். தமிழர்கள் தமிழ்ப்பள்ளிகளுக்கு தங்கள் பிள்ளைகளை தமிழின் மேல் உள்ள பற்றால் மட்டும் அனுப்புகின்றார்கள் என்ற நிலை மாறி, தமிழ்ப் பள்ளிகளிலும் கற்றல் கற்பித்தல் சிறப்பாக உள்ளது ஆகவே என் பிள்ளையை தமிழ்ப் பள்ளிக்குத்தான் அனுப்புவேன் என்று ஒவ்வொரு பெற்றோரும் சொல்லும் காலம் வரவேண்டும்.  ! சீனப்பள்ளிகளுக்கு அனுப்பும் பெற்றோரின் மனம் மாற சரியான ஆயுதமும் இதுதான்.

3.    தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு படிப்போடு ஓரளவு பண்பாடும் வளர வாய்ப்புள்ளது என்பதனை நம் பெற்றோர்கள் உணரவேண்டும். பல்லின மக்கள் படிக்கும் தேசிய பள்ளிகளில் இந்த பண்பாட்டுக் கல்வி போதனை குறைவாகவே கிடைக்கும். பெரும்பாலான  நம் தமிழ் ஆசிரியார்களிடம் அற்பணிப்பு உணர்வும் , இன உணர்வும் இருப்பதனால் தமிழ் மாணவர்கள் தமிழ்ப்பள்ளிகளில் ஒரு பாதுகாப்பான சூழ்நிலையில் கல்வி பயிலும் சூழல் உள்ளது.

4.    தமிழ்ப் பள்ளிகளின் தரம் உயர மாணவர்களின் சேர்க்கையில் கலப்பு இருக்க வேண்டும், அதாவது கீழ்மட்ட மக்களும் நடுத்தர மக்களுமே பெரும்பாலும் சென்றுகொண்டிருக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கு மேல் குடியைச் சேர்ந்த தமிழ்ப் பிள்ளகளும் அங்கு சென்று பயிலவேண்டும்.

டாக்டர்கள், எஞ்சீனியர்கள் வியாபரிகள் முதலாளிகள் இவர்களின் பிள்ளைகளும் அங்கு சென்று பயில்வார்களேயானால் , அங்கு ஒரு நல்ல  மாணவர் கலப்பு உருவாகும். நல்ல சூழ்நிலயில் இருந்து வரும் பிள்ளகளுடன் , வசதி குறைந்த மாணவர்களும் சேர்ந்து படிப்பதால் , பின்னவர்களுக்கு முன்னவர்களின் நற்பண்புகளும் பழக்க வழக்கங்களும் பரவும் வாய்ப்பு உள்ளது. இதை துணிந்து இந்த வசதி படைத்தவர்கள் தமிழ்ப் பள்ளிகளின் வளர்சிக்காகவும் , தர உயர்வுக்காகவும் செய்ய வேண்டும்.

5.    கணிதமும் அறிவியலும் ஆங்கிலத்தில் இருந்த பொழுது அதிகமான மேல் மேல்குடி மக்கள் அவர்களின் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பினார்கள் என்பது ஆய்வில் தெரிய வரும் உண்மை. மீண்டும் அந்த மொழி மாற்றம் ஏற்படுமேயானால் பழையபடி  தமிழ்  மாணவர் எண்ணிக்கை கூடுமென்பது திண்ணம். இதனை கல்வியாளர்களும் அரசியல் வாதிகளும், தமிழ்ப் பற்றாளர்களும் நன்கு சிந்திக்க வேண்டும்.

உணர்ச்சிவசப்படாமல், தமிழ் பள்ளிகளும் தமிழ் மாணவர்களும் மேலோங்க இந்த மொழி மாற்றம் அவசியமென்று நான் கருதுகிறேன். துன் மகாதீர் செய்த உறுப்படியான சில  காரியங்களில் இந்த கணித அறிவியல் பாடங்களை ஆங்கில மொழியில் பயிற்றுவிக்க ஆவணம் செய்ததும் ஒன்று. இவ்விரு பாடங்களும் ஆங்கிலத்தில் போதிக்கப்பட்ட பொழுது தமிழ் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி மற்ற மொழிப் பயன்ற மாணவர்களை விட சிறப்பாக இருந்தது என்பது ஆய்வில் தெரிந்த உண்மை.

இந்த முறை நமது மாணவர்களின் ஆங்கிலத் திறனை வளர்த்ததோடு மட்டுமில்லாமல், அவர்கள் இடைநிலைப்பள்ளிகளில் இந்த 2 பாடங்களில் நன்கு தேர்ச்சிபெற உதவியுள்ளது. தாய்மொழிப் பற்றாளர்கள் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவிப்பார்கள் என்பதனை அறிந்துள்ளேன். இருந்தாலும் நடைமுறைக்கு ஏற்ப சிந்தித்தோமானால் இது ஒரு சிறந்த வழி என்று எனக்குப் படுகிறது.

தாய் மொழியில் கணிதம் அறிவியல் பாடங்களைக் கற்றால் அவை மாணவர்கள் மனதில் நன்கு பதியும் என்பது உண்மை என்ற போதிலும், இந்த பாடங்கள் தொடர்ந்து தாய்மொழியிலேயே இடைநிலை, மேல்நிலை பள்ளிகள் என்று பல்கலைக்கழகம் வரை தொடர்ந்து இருந்தால் மேலும் சிறப்பாக அமையும். ஆனால் மலேசியாவில் அப்படி செயல் படுத்த சாத்தியமில்லை. அப்படியிருக்கும் பொழுது 13 வயதில் வேற்று மொழியில் படித்துத்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும் பட்சத்தில் அதனை 9 வயதிலிருந்தே ஆங்கிலத்தில் பயின்றால் விளையும் நன்மைகளை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இதனால் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை, தரம், வளர்ச்சி ஆகியவை  உறுதிசெய்யப்படும். ஆகவே கணிதமும் அறிவியலும் மீண்டும் ஆங்கிலத்தில் கொண்டு வர முயற்சி செய்யப்பட வேண்டும்.

6. தமிழாசிரியர்களின் மனப்போக்கும் காலதிற்கேற்றார் போல் மாறவேண்டும். அதிகமான தலைமை ஆசிரியர்கள் தியாக உணர்வோடு தமிழ்ப்பள்ளிகளை நிர்வகித்து வந்தாலும் கூட, கணிசமான எண்ணிக்கையுடைய தலைமை ஆசிரியர்கள் இன்னமும் தலைமை ஆசிரியர் வேலையை மற்ற அரசாங்க வேலையைப் போன்றே எண்ணுகின்றார்கள்.


அவர்கள் தலைமையில் ஒரு சமுதாயத்தின் தலை எழுத்தை மாற்றக்கூடிய பொறுப்பு இருக்கின்றது என்பதனை அவர்கள் உணரவேண்டும். மாணவர்கள் சேர்க்கையில் அதிக ஈடுபாடு காட்டுதல், கற்றல் கற்பித்தல் தரத்தை உயர்த்த  பாடுபடுதல், பள்ளி கட்டொழுங்கை மேம்படுத்துதல், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாளர் வாரியம் இவற்றுடன் சுமூக உறவு இவைகளெல்லாம் பள்ளியின் தரத்தை உயர்த்த வழி வகுக்கும்.

மலேசிய திருநாட்டில் தமிழ் நிலைத்தோங்க இவற்றை செய்வோமா தமிழர்களே ! நம் மொழி, நமது பள்ளி,  நாம்தான் பொறுப்பு!

கட்டுரையாளர்: கோவிந்தசாமி அண்ணாமலை
தஞ்சோங் மாலிம்

நன்றி:- செம்பருத்தி
 
Blog Widget by LinkWithin