Saturday, September 27, 2008

மக்கள் ஓசையைச் சிந்திக்கும் வேளையில்

மக்கள் ஓசையின் ஆசிரியர் திரு.எம்.இராஜன் அவர்களுக்கு எழுதப்பட்ட இந்த மடல் இங்கே திருத்தமிழ் அன்பர்களின் பார்வைக்காக வெளியிடப்படுகின்றது.

********************************
மலேசியத் தமிழ்ச் செய்தித்தாள்கள் பற்றி இரா.திருமாவளவன் கூறிய கருத்து தொடர்பில் என்னுடைய எண்ணங்களை இங்கே பதிவிட விரும்புகிறேன்.


முதலில், சில ஐயங்களுக்கு தெளிவு காண விழைகிறேன். அதாவது, இரா.திருமாவளவன் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவில் நாளிதழ்களைச் சுட்டிப் பேசிய கடுமையான பேச்சை மக்கள் ஓசை பெரிதுபடுத்தியது ஏன்?

முதல் நாள் "இரா.திருமாவளவன் பாய்ச்சல்" என்று செய்தி போட்டுவிட்டு, மறுநாள் முதல் பக்கத்தில் முதல் செய்தியாக அதுவும் மிகவும் எடுப்பாக "திருமாவளவனே நாவை அடக்கு" என்று மிகவும் காட்டமாகத் தலைப்பிட்டு இந்தச் செய்தியைப் பெரிதுபடுத்தியது ஏன்?

மக்கள் ஓசை இரா.திருமாவளனின் கருத்தை அடித்துப்போட மறுப்புச் செய்திகளை வெளியிட்டதா? அல்லது திருமாவளவன் என்ற ஒரு தமிழினத் தலைவனை அடித்து நொறுக்க செய்தி வெளியிட்டதா?

கிள்ளான் வாசகர் வட்டத் தலைவரின் அறிக்கைக்குப் பெரிய அழுத்தம் கொடுத்து வெளியிட்டு இந்தச் சிக்கலை பூதாகரமாக்கிய மக்கள் ஓசை மறுநாளே இரா.திருமாவளனின் "தமிழ் தமிழன் பற்றிப் பேசுவது என் பிறப்புக் கடமை" என்ற பதிலடியில் சுருண்டு படுத்துக்கொண்டது.

மறுநாள் மக்கள் ஓசையைத் தூக்கி நிறுத்த முயன்ற பினாங்கு மதியழகனும் தோற்றுப் போனார். கிள்ளான் நம்பியாரும், பினாங்கு மதியழகனும் இரா.திருமாவளவன் சொன்ன அடிப்படைக் கருத்தை விட்டுவிட்டு தமிழ் நாளிதழ்கள் அதைச் செய்தன இதைச் செய்தன என்று நீட்டி அளந்தவை எதுவுமே எடுபடவில்லை. காரணம், தமிழ் நாளிதழ்களின் சாதனைகள் பற்றி இரா.திருமாவளவன் கேள்வி எழுப்பவே இல்லை.

இதில் வேடிக்கை என்னவென்றால், நம்பியார், மதியழகன் இருவருமே ஊடகங்கள் நடிகைகளின் கவர்ச்சிப் படங்களைப் போடுகின்றன என்ற இரா.திருமாவளவனின் அடிப்படைக் குற்றச்சாட்டை வழிமொழிந்ததுள்ளது தான்.

மக்கள் ஒசையாகட்டும், நம்பியாராகட்டும், மதியழகனாகட்டும் இரா.திருமாவளவனைப் பற்றி பேசுவதற்கு முன்பாக, அவர் அவ்வாறு பேசியதற்கான பின்புலங்களை ஆராய்ந்திருக்க வேண்டும்; அடிப்படைகளை ஆய்ந்திருக்க வேண்டும்.

இரா.திருமாவளவன் கடந்த கால் நூற்றாண்டு காலமாகத் தமிழ் மொழிக்கும் இனத்திற்கும் தன்னையே ஈகப்படுத்திக்கொண்ட ஒரு தமிழினப் போராளி. அவர் தமிழையும் தமிழர் நலனையும் முன்னெடுக்கும் தமிழ் நெறிக் கழகம் என்ற ஒரு இயக்கத்தின் தேசியத் தலைவர். அவர் ஒரு கருத்தை முன்வைக்கும் போது இவ்வாறுதான் மிகவும் உறுதியாக இருக்க வேண்டும். அதனால்தான், தன்னுடைய மறுப்பறிக்கையிலும் "தெளிந்தும் தெரிந்தும்தான் அவ்வாறு பேசினேன்" என்று சொல்லியிருந்தார்.

மேலோட்டமாகப் பார்ப்பவர்களும் அல்லது தமிழ்ப் பற்றாளர்கள் போல் நடிப்பவர்களும் அல்லது தமிழ் மொழி இன உணர்வற்றவர்களும் இரா.திருமாவளவன் 'திமிர்' பிடித்தவர் என கருதலாம். ஆனால், கொள்கை உறுதியும் வினைத் தூய்மையும் வாய்மையும் உள்ள ஒரு மொழி இனத் தலைவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு இரா.திருமாவளனே சான்று.

எந்த ஒரு அச்சத்திற்கும், நயப்பிற்கும், புகழுக்கும், விளம்பர வெளிச்சத்திற்கும் அடிமையாகாமல் பொதுமக்கள் நலம்நாடி புதுக்கருத்தைத் துணிவோடு முன்வைக்கும் தலைவர்களே இந்த இனத்திற்குச் சரியான வழிகாட்டிகளாக இருக்க தகுதி உள்ளவர்கள். அந்தவகையில், இரா.திருமாவளவன் நெஞ்சுரம் கொண்ட தலைவராகவே எழுந்து நிற்கிறார்.

இதே வகையான பண்பு ஏற்கனவே பல தமிழினச் சான்றோர்களிடமும் தலைவர்களிடமும் வெளிப்பட்டிருக்கிறத்து. அவ்வளவு ஏன், அன்றைய எழுத்து இமயம் அமரர்.ஆதி.குமணனிடமும் இன்றைய எழுத்துச் சிகரம் எம்.இராஜனிடமும் பல நேரங்களில் இதே பண்பு வெளிப்பட்டிருப்பதை இங்கே நினைவுகூற விரும்புகிறேன்.

ஆக, தான் சார்ந்த இனத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் சீரழிவுகளைப் பார்த்துப் பொங்கி எழுந்த இரா.திருமாவளவன் மீது என்ன தவறு இருக்கிறது?

கண்முண்ணே நடக்கின்ற குமுகாயக் கேடுகளையும் அந்தக் கேடுகளைச் செய்துவரும் ஊடகங்களையும் உரிமையோடு கேள்வி கேட்டதில் எங்கே இருக்கிறது தவறு?

சொந்த மொழியின் சொந்த இனத்தின் நன்மைக்காகக் குரல்கொடுத்திருக்கும் இரா.திருமாவளவனைக் கண்டிப்பது கண்டனத்திற்குரிய செயலாகும்; தன் கண்ணையே குத்திக்கொள்வதற்கு ஒப்பாகும்.

செய்தி ஊடகம் எப்படியும் செயல்படலாம் என்று இல்லாமல், ஓர் உறுதியான கொள்கையோடு செயல்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். ஓர் இனத்தின் சிந்தனைப் போக்கை வடிவமைக்கும் பொறுப்பில் இருக்கின்ற ஊடகங்கள் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும். தமிழ் மொழியை; தமிழ் இனத்தை சரியான இலக்கை நோக்கி நகர்த்திச் செல்லவேண்டிய செய்தித்தாள்கள் தொடக்கத்திலேயே குமுகாயத்தை 'காயடித்து' விடக்கூடாது.

ஊடகத்துறை என்பது வணிகத்தோடு தொடர்புடையதுதான். வணிக நோக்கம் கருதி ஒரு எல்லைக்குட்பட்ட நிலையில் சிலவற்றை வெளியிடுவதில் தவறில்லைதான். அதற்காக, அடி மடியிலே கைவைகின்ற கதையாக இரு இனத்தின் மொழியின் அடிப்படை மரபுகளில் கைவைக்கலாமா? மொழியின நலனை வணிகத்திற்காகவும் பணத்திற்காகவும் விட்டுக்கொடுக்கலாமா? சமுதாய நலனைப் பாதுகாக்கிறோம் என்று ஒரு பக்கம் கூவிக்கொண்டே மறுப்பக்கம் சமுதாயத்தின் அடித்தளங்களை ஆட்டிப்பார்க்கலாமா?

மற்றைய ஊடகங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து தமிழ் ஊடகங்கள் மாற நினைப்பது கடைந்தெடுத்த மடைமையாகும்; புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக் கொள்ளும் அறியாமையாகும். தமிழ் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு ஆகியவற்றுக்கு நிலையான மரபும், வரலாறும் உண்டு. எந்த நேரத்திலும் தமிழ் மரபுக்குக் கேடு ஏற்படாதவாறு தமிழ் ஊடகங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

நாட்டில் பெருமளவில் இருக்கின்ற குப்பை நாளிதழ்கள், வார, மாத இதழ்களுக்கு இடையில் சில நல்ல நாளிதழ், வார, மாத இதழ்களும் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

சில இதழ்கள் (ம.ஓசை அல்ல) தமிழ்மொழி, தமிழ்ச் சான்றோர் பற்றிய செய்திகளுக்கு முழுப்பக்கத்தையே ஒதுக்குகின்றன. சில இதழ்கள் (ம.ஓசை அல்ல) அடிப்பகுதியில் பக்கத்திற்குப் பக்கம் திருக்குறளைப் போடுகின்றன. சில இதழ்கள் (ம.ஓசை அல்ல) ஆங்காங்கே தமிழ், தமிழினம், தமிழ் மரபு சார்ந்த துணுக்குகளை அழகாக தருகின்றன. சில இதழ்கள் (ம.ஓசை அல்ல) நல்லதமிழ்ச் சொற்களை மிகப் பரவலாகப் பயன்படுத்துகின்றன. சில இதழ்கள் (ம.ஓசை அல்ல) பிறமொழிச் சொற்களுக்கு நிகரான நல்லதமிழ்ச் சொற்களைப் பட்டியல் போடுன்றன. சில இதழ்கள் (ம.ஓசை அல்ல) குழந்தைகளுக்கான நல்லதமிழ்ப் பெயர்களை வெளியிடுகின்றன. தமிழ்நெறி, உங்கள் குரல் போன்ற இதழ்கள் நல்லதமிழையே முழுமையாகப் பயன்படுத்துகின்றன.

ஆயினும் சில செய்தித்தாள்கள் இன்னமும் இரட்டை வேடம் போட்டு நடித்துக்கொண்டுதான் இருக்கின்றன. மக்கள் விரும்புகிறார்கள் என்று வாசகர் மீது பழியைப் போட்டுவிட்டு கண்ட கண்ட குப்பைகளையும் கண்ணறாவிகளையும் நமது செய்தி ஊடகங்கள் வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. வாசகர்களை மடையர்களாக ஆக்கிக்கொண்டுதான் இருக்கின்றன.

"எங்களுக்கு கொலை, வெட்டுக்குத்து, கற்பழிப்புச் செய்திகள் முதல் பக்கத்திலேயே வேண்டும்" என்றும்,

"எங்களுக்கு நடிகைகளின் கவர்ச்சிப் படங்கள் பெரிது பெரிதாக வேண்டும்" என்றும்,

"எங்களுக்குத் திரையுலக கிசு கிசு செய்திகள் அதிகமாக வேண்டும்" என்றும்

வாய்மொழியாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ அல்லது வாசகர் விழா நிகழ்ச்சிகளிலோ கேட்டுக்கொண்ட ஒரு வாசகரை மக்கள் ஓசை அடையாளம் காட்ட முடியுமா?

ஆனால், இந்தக் குப்பைகள் எல்லாம் வேண்டவே வேண்டாம் என காலம் காலமாகக் கதறிக்கொண்டிருக்கும் ஆயிரம் பேரை நாம் அடையாளம் காட்ட முடியும்.

ஆகவே, சமுதாய நலன் கருதி தட்டிக் கேட்பது தவறா? குமுகாயத்தைக் கெடுக்கும் கேடுகளைக் கண்டிப்பது தவறா? காசு கொடுத்து நாளிதழ் வாங்கும் எங்களின் மனக்குமுறலைக் கொட்டுவது தவறா?

எத்தனையோ முறை எத்தனையோ பேர் முறையாக, அமைதியாக, நாசுக்காகச் சொல்லிப் பார்த்தோம். கேட்டார்களா ஊடகக்காரர்கள்? இப்போது, இரா.திருமாவளவன் ஒரே போடாகப் போட்ட பின்பு மக்கள் ஓசை அவருக்கெதிராக சீறிப் பாய்கிறது. பண்பாடாக பேச வேண்டும்; மேடை நாகரிகத்தோடு கருத்துச் சொல்ல வேண்டும் என்று புத்திமதி சொல்கிறது.

பண்பாடாக, நாகரிகமாக சொன்ன போதெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குபோல ஆகிய கதையெல்லாம் எங்களுக்குத் தெரியாத என்ன? எங்களின் கேல்விகளுக்கு உறுதியான எந்தப் பதிலையும் சொல்லாம் மழுப்பிய கதையெல்லாம் மறக்கக் கூடியதா என்ன?

இதற்கெல்லாம், முத்தாய்ப்பாக இரா.திருமாவளவன் பேச்சு அமைந்துள்ளது. செய்தி ஊடகங்களுக்கு நன்றாக உறைக்கும்படி பேசியிருக்கிறார். இருந்துங்கூட பாருங்கள், மக்கள் ஓசையைத் தவிர வேறு எந்த நாளிதழுக்கும் உறைக்கவேயில்லை. வழக்கம் போல், எருமை மேல் மழை பெய்தது போல இதைப் பற்றி கண்டுகொள்ளாமலேயே இருந்து விட்டனர்.

மக்கள் ஓசை இரா.திருமாவளனின் பேச்சுக்கு தக்க மறுமொழி கூறியிருக்க வேண்டும். அல்லது மற்ற நாளிதழ்கள் போல் மழுங்கித்தனமாக இருந்திருக்க வேண்டும். இப்படி, உணர்ச்சிகரமாக அணுகி இருக்கக் கூடாது. அறிவார்ந்த நிலையில் இரா.திருமாவளவனுக்குப் பதில் சொல்லியிருக்க வேண்டும். நம்பியாரின் கண்டன அறிக்கையை வெளியிட்டு மக்கள் ஓசை தன்னுடைய 'தமிழ் எதிர்ப்பு' கொள்கையைப் பறைசாற்றியிருக்கக் கூடாது.

தமிழ் மொழி சார்ந்த பல சிக்கல்கள் நாட்டில் தோன்றிய போதெல்லாம் மக்கள் ஓசை தமிழுக்கு ஆதரவாக இல்லாமல் தமிழ்ப் பகைவருக்கும் தமிழைப் பழிப்பவருக்கும் ஆதரவாக இருந்துள்ளது. இதற்குப் பல சான்றுகள் உள்ளன. தமிழ்ப் பற்றாளர்கள் இதனை கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த நிலைமை இப்படியே தொடர்ந்தால் மக்கள் ஓசை தமிழ் மக்களின் பகைமையைத் தேடிக்கொள்ளும் என்பது திண்ணம்.


இக்கண்,
சுப.நற்குணன்,
பேரா.

Thursday, September 25, 2008

தமிழும் சமயமும் நமதிரு விழிகள்

Sunday, September 21, 2008

தமிழ்நெறி - தமிழ்த்தேசிய இதழ்

மலேசியத் தமிழ் இதழியல் துறையில், மறுவரவு மேற்கொண்டு மீண்டும் வந்துள்ளது 'தமிழ்நெறி' என்னும் தமிழ்த் தேசிய மாதிகை (மாத இதழ்). "தமிழைக் காப்போம் தமிழ்த் தேசியத்தை வென்றெடுப்போம்" என்ற முழக்கத்தோடு இந்தச் செப்தெம்பர் திங்களில் தமிழ்நெறி இதழ் வெளிவந்துள்ளது. தமிழ்நெறிச் சிந்தனைகளைத் தாங்கி தமிழ் மீட்புக்காகவும் காப்புக்காகவும் குரல்கொடுக்கும் ஏடாக வெளிவந்துள்ள 'தமிழ்நெறி' இதழை ஒவ்வொரு மலேசியத் தமிழனும் மனதார வாழ்த்தி வரவேற்க வேண்டும்.
தமிழ் மொழியின நலன் தொடர்பிலான பல அரிய செய்திகளையும் கட்டுரைகளையும் இந்த இதழ் தாங்கிவந்துள்ளது. அறிஞர் அண்ணா, பெரியார், மாவீரன் திலிபன் ஆகியோர் பற்றிய சிறப்புக் கட்டுரைகள், மாணவர்களுக்கான தமிழ்நெறிக் கல்வி, தமிழ்நெறித் தெளிவு வினாவிடை பகுதி, உளவியல் கட்டுரை, ஈழத்துக் கட்டுரை என பல்வேறு அரிய செய்திகளை உள்ளடக்கி மிகவும் தரமான தாள்களில் கவரும்படியாக இவ்விதழ் வெளிவந்துள்ளது. "தமிழ்நெறியின் வேலை விழிப்புணர்வு ஏற்படுத்துவதே. இது கருத்துப்பரப்பும் அறிவுசான்ற இதழ். எனவே, தமிழ், தமிழர் தொடர்பான அரிய செய்திகளைத் தேவையான கருத்துகளைத் தமிழ் மக்களுக்குச் கொண்டுபோய்ச் சேர்த்து, அவர்களை விழிப்படையச் செய்யும் பணியே தமிழ்நெறிப்பணி" என்று இதழின் பொறுப்பாசிரியரும் மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் தலைவருமாகிய இரா.திருமாவளவன் அவர்கள் தலையங்கத்தில் எழுதியிருப்பது பலித்திட வேண்டும் என்பதே தமிழ் உணர்வாளர்களின் அவா.

மலேசியத் தமிழர்க்குத் 'தமிழ்நெறி' புதிய இதழல்ல. கிட்டதட்ட 14ஆண்டுகளுக்கு முன்பே 1994 ஏப்பிரல் திங்கள் மலேசியாவில் தமிழ்த் தேசியத்தை உயர்த்திப்பிடிக்கும் நோக்கில் புயலென புரப்பட்ட எழுச்சிமிக்க ஏடுதான் 'தமிழ்நெறி'. மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் தோற்றுநர் பாவலர் அ.பு.திருமாலனாரின் அறிய சிந்தனையில் கருவாகி கழகத்தின் உயிர்த்தொண்டர்களின் அயராத உழைப்பில் உருவாகி மலேசிய மண்ணில் தமிழ் முரசு கொட்டிய வரலாற்றுச் சிறப்பு இந்தத் 'தமிழ்நெறி' இதழுக்கு உண்டு.

ஆனால், வெளிவந்த சில மாதங்களில் பல்வேறு இடர்களின் காரணமாக தமிழ்நெறி நின்று போனது. பின்னர், பத்தாண்டுகள் கழித்து 2004 மே திங்களில் 'தமிழ்நெறி' மீண்டும் புத்துயிர் பெற்று புதிய வடிவில் புதிய தோற்றத்தில் வெளிவந்தது. தமிழ் உணர்வையும் தமிழர் உணர்ச்சியையும் முன்னெடுக்கும் ஒரு இதழை வாங்கி அதனை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவும் உணர்வும் கெட்டுப்போன தமிழர்களிடையே, பெயர்போட முடியாமல் மீண்டும் தடைபட்டது 'தமிழ்நெறி'.

ஆயினும், உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லாத அளவுக்குக் காலந்தோறும் பல்வேறு தடைகளையும், இடர்களையும், இருட்டடிப்புகளையும், மறைப்புகளையும் தாண்டி இன்றளவும் நிலைபெற்று தனித்தன்மையோடு வாழ்ந்து வரும் தமிழ்மொழி போல, 'தமிழ்நெறி' இதழும் பல்வேறு சிக்கல்களை கடந்து இப்போது மறுபடியும் புதுவடிவம் பெற்றுள்ளது. எந்தத் தடைக்கும் அஞ்சாமல், வந்த தடங்கல்கள் அனைத்தையும் வென்று மீண்டும் வெளிவந்துள்ள 'தமிழ்நெறியின்' நெஞ்சுரத்திற்குத் தமிழர்கள் தலைதாழ்த்தி வணக்கம் செய்யவேண்டும்.


இவ்விதழ் இந்நாட்டில் பலமிக்க ஓர் இதழாக உருவெடுக்க வேண்டும். அதற்குண்டான அனைத்து வினைப்பாடுகளையும் ஆழ ஆராய்ந்து ஆசிரியர் குழுவினர் செயல்பட வேண்டும். தமிழின்; தமிழர்களின் நலன்பேணும் செய்திகளைத் தாங்கிவருவதோடு நின்றுவிடாமல், களத்தில் இறங்கி சரியான இலக்கை நோக்கி தமிழரை வழிநடத்த வேண்டும். தமிழ்ப்பற்றாளர்கள் ஊணர்வாளர்கள் அனைவரையும் தமிழ்நெறி எட்டிப்பிடிக்க ஏற்பாடுகளைச் செய்தாக வேண்டும். நாடு முழுவதும், 'தமிழ்நெறி' அறிமுக விழா, வாசகர் விழா போன்ற நிகழ்ச்சிகளை நடத்தித் தமிழ்நெறியைப் பரவச் செய்ய வேண்டும். ஆண்டுக் கட்டண உறுப்பினர்களைப் பெருக்குவதற்கான வழிவகைகளை காணவேண்டும். நாடு முழுவதும் உள்ள தமிழ் சார்ந்த இயக்கங்களின் ஆதரவை நாடி ஒவ்வொரு ஊரிலும் வட்டாரத்திலும் தமிழ்நெறி உறுப்பினர்களை உருவாக்க வேண்டும். தமிழ்ப்பள்ளிகள், தமிழ் ஆசிரியர்கள், மாணவர்களை இலக்காகக் கொண்டு தக்க திட்டங்களைத் தீட்டி முன்னேற வேண்டும். இடைநிலைப்பள்ளிகள், உயர்க்கல்விக் கூடங்கள் ஆகியவற்றுக்குள் தமிழ்நெறி ஊடுறுவும் வழிகளையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

இத்தனைக் கருத்துகளும் 'தமிழ்நெறி' ஆசிரியர் குழுவினருக்குத் தெரியாதவை அல்ல. இருந்தாலும், தமிழ்நெறி தமிழரின் உயிர்நெறியாக உருவாக வேண்டும் என்ற எண்ணத்தால்தான் இத்தனைக் கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.

இவ்விதழின் வெற்றியில் மலேசியத் தமிழரின் பங்கு, குறிப்பாகத் தமிழ்ப்பற்றாளர், உணர்வாளர் என்று முழங்கிக்கொள்வோரின் பங்கு மிக அளப்பரியதாகும். அதோடு, தமிழால் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் ஆசிரியர்கள், அதிகாரிகள், அரசுப் பணியாளர்கள் என பல்வேறு தரப்பினரும் இவ்விதழை பலமிக்க இதழாக வளர்த்தெடுக்க உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.

காரணம், தமிழை முன்னெடுப்பது ஒன்றே இந்த நாட்டில் தமிழர்களின் நூற்றாண்டு வரலாற்றைக் காப்பதற்கான வழியும்; தமிழர்களின் அடுத்த நூற்றாண்டின் வாழ்வை, வளர்ச்சியை உருவாக்குவதற்கான வாய்ப்பும் ஆகும். தமிழ் இல்லையேல் தமிழர்க்கு எதுவே நிலைக்காது என்பதை மேற்குறிப்பிட்டவர்கள் நன்றாக உணர்ந்துகொள்ள வேண்டும். எனவே, ஒவ்வொருவரும் தமிழ்நெறியை வாங்கி ஆதரவு செய்ய வேண்டியதும் இன்னும் பலரை வாங்க ஊக்குவிப்பதும் பிறந்த இனத்துக்குச் செய்யும் கடமையாகும்.

தமிழ்நெறி இதழ் பற்றிய முக்கிய விவரங்கள்:-

1.இதழின் விலை ம.ரி.3.00 மட்டுமே
2.தமிழ்நெறி உறுப்பினர் கட்டணம் ம.ரி20.00 (6 மாதங்களுக்கு)
3.தமிழ்நெறி முகவரி: Lot, 274, Kampong Bendahara Baru, jalan Sungai Tua, 68100 Batu Caves, Selangor.
4.தொலைபேசி: 03-61874103 தொலைப்படி: 03-61874099


தமிழ்நெறி இதழை வாங்குவோம்!
தமிழைக் காப்போம்!
தமிழ்த் தேசியத்தை வென்றெடுப்போம்!

Wednesday, September 17, 2008

தமிழ்ச் செம்மொழி நாள்



இன்று 17.09.2008. நான்கு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் (17.09.2004) இந்திய நடுவண் அரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்தது. வரலாற்றுச் சிறப்புக்குரிய அந்த நாளை முன்னிட்டு இக்கட்டுரை இடம்பெறுகிறது.

********************************************

செம்மொழி என்றால் அனைத்து வகையாலும் செம்மையாக அமைந்த மொழி என்று பொருள்படும். இதனை ஆங்கிலத்தில் Classical Language என்பர். செம்மொழி என்பது மிகத் தொன்மையும் நீண்ட நெடிய வரலாறுப் பின்னணியும் கொண்டதாக இருக்கும் என்பது பொதுவான கருத்து. அந்த வகையில், உலகின் உலகின் தொன்மை மொழிகளாக ஆறு மொழிகளை ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் 'யுனெசுக்கோ' அறிவித்துள்ளது. அவை, தமிழ், சமற்கிருதம், சீனம், இலத்தீனம், கிரேக்கம், இப்ரூ ஆகியன.

இவற்றுள், சமற்கிருதம் பேச்சு மொழியாக இல்லை; 'மந்திரங்கள்' என்ற உருவில் மட்டுமே இருக்கிறது. இலத்தீன், இப்ரூ மொழிகள் வழக்கொழிந்துவிட்டது. இசுரேலிய அரசு ஏசுபிரான் பேசிய இப்ரூ மொழிக்கு மீண்டும் உயிரூட்டி வருகிறது. கிரேக்க மொழியும் கிட்டதட்ட அழிவின் எல்லையைத் தொட்டுவிட்டு இப்போது மறுவாழ்வு பெற்று வருகிறது. சீன மொழியோ பட எழுத்து அமைப்பில் அமைந்தது. ஆதலால், மாந்த உள்ளுணர்வுகளை சீன மொழியால் மிகத் துள்ளியமாக வெளிப்படுத்த முடியாது என்பது மொழியறிஞர்கள் கருத்து.

ஆனால், சிறந்த இலக்கிய வளம், செம்மாந்த இலக்கண அரண், செறிவான விழுமியம், பொதுமை மரபு, உயரிய சிந்தனை, பாரிய சொல்வளம், வரலாற்றுப் பின்னணி, தனித்தியங்கும் மாண்பு, அழிவில்லா வாழ்வு, காலத்திற்கேற்ற புதுமை என பல வகையிலும் சிறப்புபெற்றிருக்கும் ஒரே மொழி...

அன்று தாம் வாழ்ந்த காலத்தில் பிறமொழிகளோடு வளமாக வாழ்ந்து; இன்று தன்னோடு வாழ்ந்த மொழிகள் பல அழிந்த பின்பும்கூட இன்னும் வளத்தோடு வாழுகின்ற ஒரே மொழி... நம்முடைய தமிழ்மொழிதான்!

தமிழ்ச் செம்மொழியின் தகுதிகள்

ஒரு மொழியைச் செம்மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டுமெனில் அதற்கு பதினொரு (11) தகுதிப்பாடுகள் இருக்க வேண்டும் என்று மொழியியல் வல்லுநர்கள் வரையறை செய்துள்ளனர். இந்தப் 11 தகுதிப்பாடுகளையும் உருவாக்கியவர்கள் மேலை நாட்டு மொழி அறிஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் பழம்பெரும் மொழிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள எந்த ஒரு மொழிக்கும் செம்மொழிக்குரிய 11 தகுதிகளும் முழுமையாக இல்லை. சமற்கிருதத்திற்கு 7 தகுதிகளும், இலத்தின், கிரேக்க மொழிகளுக்கு 8 தகுதிகளும் மட்டுமே உள்ளன என்பது அறிஞர்கள் கூற்று.


ஆனால், என்ன ஒரு வியப்பு என்றால், நம் அன்னைத் தமிழுக்கு மட்டுமே செம்மொழித் தகுதிப்பாடுகள் பதினொன்றும் முழுமையாக உள்ளது. மேல்நாட்டு வல்லுநர்கள் வகுத்த மொழித் தகுதிப்பாட்டுக்கு நம்முடைய தமிழ்மொழி முற்றும் முழுவதுமாக ஒத்துப் போவது மிகப்பெரிய வரலாற்று உண்மையாகும்.

இனி, தமிழ்ச் செம்மொழிக்கு இருக்கின்ற அந்தப் 11 தகுதிகளைக் காண்போம்:-

1.தொன்மை (Antiquity)
2.தனித்தன்மை (Individuality)
3.பொதுமைப் பண்பு (Common Characters)
4.நடுவு நிலைமை (Neutrality)
5.தாய்மைத் தன்மை (Parental Kinship)
6.பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு (Finding expression in the culture art and life experiences of the civilized society)
7.பிறமொழிக் கலப்பில்லாத் தனித்தன்மை (Ability to function independently without any impact or influence of any other language and literature)
8.இலக்கிய வளம் (Literary prowess)
9.உயர்சிந்தனை (Noble ideas and ideals)
10.கலை, இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு (Originality in artistic and literary expressions)
11.மொழிக் கோட்பாடு (Linguitik principles)

இப்படி 11 தகுதிகளும் முழுமையாக பெற்றுள்ள தமிழ் மொழியைத் தாய்மொழியாகப் பெற்றதற்காக ஒவ்வொரு தமிழரும் பெருமையும் பீடும் கொள்ள வேண்டும். மொழியின் பெருமையை; வரலாற்றை; பாரம்பரியத்தை அறிந்து உணர்ந்துகொண்டால் தமிழர்கள் உலக இனங்களுக்கு இணையாக நிமிர்ந்து நிற்க முடியும் என்பது திண்ணம்.

தனித்த விழுமியங்களோடு உலகில் உய்வதற்கும் வாழ்வில் உயர்வதற்கும் தமிழர்களுக்குப் பெரும் தன்னம்பிக்கையத் தரவல்லது தமிழ்மொழி ஒன்றே. தமிழை முன்னெடுத்தால் ஒழிய தமிழர் வாழ்வு வளம் பெறாது. தமிழே தமிழரின் முகவரி என்பதை ஒவ்வொரு தமிழரும் உணர்ந்து தெளிய வேண்டும்.

தந்தைப் பெரியார்


இன்று 17.9.2008, பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியாரின் 130ஆம் ஆண்டு நினைவு நாள். அன்னாரின் நினைவாக இந்தக் இடுகை இடம்பெறுகிறது.

****************************************************

"தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக் குகையில் சிறுத்தை எழும்
அவர்தாம் பெரியார்"


என்று சொன்னவர் பாவேந்தர் பாரதிதாசனார். சொந்த மண்ணிலேயே அடிமைப்பட்டு விலங்குகளைப் போல் நடத்தப்பட்ட பாமரத் தமிழரைத் தட்டி எழுப்பி; இழிவுகளை நீக்கி; விழிப்புணர்வு ஊட்டி; அறிவுப் புகட்டி; விடுதலையைக் காட்டி; வெற்றியை ஈட்டித் தந்த மாபெரும் போராட்ட வீரர்தாம் தந்தைப் பெரியார்.

ஈ.வெ.இராமசாமி என்ற இயற்பெயரைக் கொண்ட தந்தைப் பெரியார் 17.09.1879ஆம் ஆண்டில் பிறந்தவர். தம்முடைய சீர்திருத்தக் கருத்துகளால் மூடத்தனத்தில் மூழ்கிக் கிடந்த மக்களை திருத்தியவர்; பொதுவுடைமைச் சிந்தனைகளை விதைத்தவர்; தீண்டாமைக் கொள்கையை ஒழித்தவர்; கடவுளின் பெயரால் நடக்கும் மடத்தனங்களையும் அடிமைப்படுத்தங்களையும் அகற்றியவர்.

அவர் சொன்ன கருத்துகள்.. பேசிய உரைகள்.. எழுதிய எழுத்துகள் ஆயிரமாயிரம். ஒரு தலைமுறைக்குட்பட்ட ஓர் இனத்தின் சிந்தனைப் போக்கையே மாற்றியமைத்த பெரும் புரட்சியாளர். தமிழினத்தின் வாழ்வுரிமையை நிலைநாட்டியவர்.

அப்படி இருந்த போதிலும், தந்தைப் பெரியார் தம்முடைய கருத்துகளை எந்தக் காலத்திலும் எவர் மீதும் திணித்தது கிடையாது. அதனை தன்னுடைய விடுதலை ஏட்டில் (8.10.1951) அவரே கூறுகிறார் இப்படி:-


நான் சொல்வன எல்லாம் எனது சொந்த அபிப்பிராயங்கள்தாம் என்று சொல்வதோடு, நான் ஒரு சாதாரண மனிதன்தான். நான் எவ்விதத் தன்மையும் பொருந்திய ஒரு தீர்க்கதரிசியல்லன். ஆகையால், தனி மனிதன் என்கின்ற முறையில்தான் என்னுடைய அபிப்பிராயங்களையும் நான் பார்த்தும் ஆராய்ச்சி செய்தும் அனுபவத்தில் அறிந்ததுமானவைகளைத்தான் அதிலும் எனக்குச் சரி என்று பட்டதைத்தான் உரைக்கின்றேன்.

ஒரு பெரியார் உரைத்துவிட்டார் என நீங்கள் கருதி அப்படியே அவைகளைக் கேட்டு நம்பிவிடுவீர்களானால், அப்பொழுது நீங்கள் யாவரும் அடிமைகளே! நான் உரைப்பதை நீங்கள் நம்பாவிட்டால், பாவம் என்றாவது, தோஷம் என்றாவது அல்லது நரகத்துக்குத்தான் போவீர்கள் என்றாவது சொல்லிப் பயமுறுத்தவில்லை. யார் உரைப்பதையும் நாம் கேட்டு, வேத வாக்கு என அப்படியே நம்பிவிட்டதனால்தான் நாம் இன்று அடிமைகளாக இருக்கின்றோம்.

ஆகவே, நான் உரைப்பவைகளை ஆராய்ந்து பாருங்கள்! உங்களுக்கு அவைகள் உண்மையென்று தோன்றினால் அவைகளை ஒப்புக் கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் தள்ளி விடுங்கள். உண்மையெனப் புலப்படுமாகில், அவைகளை உண்மையென ஒப்புக் கொள்வ-தில் மட்டும் பிரயோசனம் இல்லை; அவைகளை அனுஷ்டானத்தில் கொண்டு வந்து அதன்படி நடக்க முயற்சியுங்கள். எனது சொநத் அனுபவங்களை நானறிந்து உங்களுக்கு உரைப்பதுதான் என்னுடைய விடுதலை. அவைகளை ஆராய்ந்து அறிவது, அதன்படி நடப்பதுதான் உங்கள் விடுதலை.
  • குறிப்பு: பெரியார் பயன்படுத்திய வடச்சொற்கள் அப்படியே இடம்பெற்றுள்ளன.

Monday, September 15, 2008

பேரறிஞர் அண்ணா

இன்று 15.09.2008 பேரறிஞர் அண்ணா அவர்களின் 100ஆவது ஆண்டு பிறந்தநாள். அண்ணா என்கிற அந்த மாபெரும் தமிழினத் தலைவரின் நூற்றாண்டு விழா நினைவாக இக்கட்டுரை இடம்பெறுகிறது.



*****************************************************







தமிழ்க்கூறும் நல்லுலகம் "அறிஞர் அண்ணா" என்று அன்பொழுக அழைக்கும், காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை (சி.என்.அண்ணாதுரை) போற்றத்தக்க அரசியலாளராக இருந்த அதே வேளையில், அடிப்படையில் நல்ல தமிழ் அறிஞராக விளங்கினார்.

தமிழ்த்தாயின் தலைமக்களுள் ஒருவரகாவும் தமிழினத்தின் தனித்தலைவராகவும் இருந்து தமிழருக்குச் சரியான இலக்கையும் வழித்தடத்தையும் காட்டியவர் அண்ணா. தமிழ் மொழி – தமிழ் இனம் – என்று சிந்தனை – சொல் – செயல் என மூவகையாலும் எந்நேரமும் தமிழ்! தமிழ்! என வாழ்ந்திட்டவர் அண்ணா.



அண்ணாவின் வரலாறு



அறிஞர் அண்ணா 15.09.1909ஆம் நாளன்று காஞ்சிபுரம் நகரில் நடராசன் – பங்காரு அம்மாள் என்னும் வாழ்விணையருக்குப் பிறந்தார். கல்வியில் பேரார்வம் கொண்ட அண்ணா அரசியல், பொருளியல் என இரு துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர். பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்திலேயே தம்முடைய தமிழ் அறிவினாலும் பேச்சு ஆற்றலினாலும் இளைஞர்களைக் கட்டிப்போட்டவர். ஆங்கிலத்திலும் அண்ணா பெரும் புலமை பெற்று விளங்கினார். 'யேல்' பல்கலைக்கழகம் இவருக்குச் 'சப்பெல்லோ சிப்' எனப்படும் உயரிய அறிஞருக்குரிய பட்டத்தை அளித்துச் சிறப்பித்து உள்ளது. தமிழ்நாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1968ஆம் ஆண்டில் அண்ணாவுக்கு இலக்கிய முனைவர் (Doctor of Literature) பட்டத்தை வழங்கி அணி சேர்த்தது.

1967இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் ஆறாவது முதல்வராக அரியணையில் அமர்ந்தார் அண்ணா. தம்முடைய நேர்மைத் திறத்தாலும் கொள்கை உரத்தாலும் 'தென்னாட்டுக் காந்தி' என்ற பெரும் சிறப்பினையும் பெற்றார். குறுகிய காலமே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்தாலும் தமிழ்நாட்டின் அரசியல் போக்கையே புரட்டிப்போட்டார்; அரசியல் மேடைகளைத் தமிழ் வளர்க்கும் அரங்கமாக மாற்றிக்காட்டினார். தமிழ் உள்ளத்தோடும் உணர்வோடும் ஆட்சிக்கு வந்ததால் தம் ஆட்சிக் காலத்தில் என்றுமில்லாத அளவுக்குத் தமிழை முன்படுத்திய ஆட்சியை வழங்கினார்.

அண்ணாவின் மலேசிய வருகை


1965ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா மலேசியாவுக்கு வருகை புரிந்தார். அவரை வரவேற்க மலேசியத் தமிழர்கள் கடலலையென திரண்டனர். மலேசியத் தமிழ் நாளிதழ்கள் அண்ணாவை வரவேற்றுச் சிறப்பு மலர்களை வெளியிட்டன. தமிழர் அகத்திலும் முகத்திலும் மகிழ்ச்சியும் பூரிப்பும் நிறைந்து இருந்தன. மெர்டேக்கா அரங்கில் கூடியிருந்த 15,000க்கும் மேற்பட்ட மலேசியத் தமிழர்கள் முன்னிலையில் "உலகமெங்கிலும் தமிழர்கள் இருக்கிறார்கள்; ஆனால் மலேசியாவில்தான் வாழ்கிறார்கள்" என்று அண்ணா பேசிய பேச்சு வரலாற்றுச் சிறப்புமிக்கது. அண்ணா மலேசியாவுக்கு வந்ததன் நினைவாக பேரா மாநிலத்தில் ஒரு *பாலத்திற்கு அவருடைய திருப்பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிக்கத்தக்க வரலாறு.



அண்ணாவின் பொன்மொழிகள்


இப்படியெல்லாம் பெருஞ்சிறப்புகளைக் கொண்ட அண்ணா அவர்களின் திருவாய்மொழிகள் புகழ்பெற்ற பொன்மொழிகளாக இன்றும் நிலைபெற்றுள்ளன. அவற்றுள் சில:-

1.கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு
2.மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு
3.கத்தியைத் தீட்டாதே உன்றன் புத்தியைத் தீட்டு. வன்முறை இருபக்கமும் கூர் உள்ள கத்தி ஆகும்.
4.எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.
5.சட்டம் ஒரு இருட்டறை – அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு
6.மக்களின் மதியைக் கெடுக்கும் ஏடுகள் நமக்குத் தேவையில்லை; தமிழரைத் தட்டி எழுப்பும் தன்மான இலக்கியங்கள் தேவை; தன்னம்பிக்கை ஊட்டி மதிப்பைப் பெருக்கும் நூல்கள் தேவை. 7.அறிவாலும் ஆற்றலாலும் ஆகாத காரியம் இல்லை. அறிவும் ஆற்றலும் சேர்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம்.
8.நல்ல வரலாறுகளைப் படித்தால்தான் இளம் உள்ளத்திலே புது முறுக்கு ஏற்படும்.
9.இளைஞர்களுக்குப் பகுத்தறிவும் சுயமரியாதையும் தேவை.
10.இளைஞர்கள் உரிமைப் போர்ப்படையின் ஈட்டி முனைகள்.
11.நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.


அண்ணாவின் மறைவு

அறிஞர் அண்ணா வாழ்ந்தது அறுபது ஆண்டுகள்தாம் என்றாலும், உலகத் தமிழர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட தலைவராக விளங்கினார். 03.02.1969ஆம் நாளன்று அண்ணா இவ்வுலகை விட்டு மறைந்தது தமிக்கூறும் நல்லுலகத்திற்கு ஈடு செய்யவியலாத மாபெரும் இழப்பாகும். அவரின் இழப்பை எண்ணி தமிழகமே அழுதது. அப்போது மலேசியாவில் மாபெரும் இரங்கல் கூட்டங்கள் ஆங்காங்கே ஏற்பாடு செய்யப்பட்டது. பேரா மமநிலத்தில் நடந்த ஒரு இரங்கல் கூட்டத்தில் மலேசியப் பாவலரேறு சா.சி.சு.குறிஞ்சிக்குமரனார் இரங்கற்பா வாசித்தார். அவரால் முழுமையாகப் படிக்க முடியவில்லை. கட்டுக்கடங்காத அழுகையும் கண்ணீரும் அவரை கட்டிப்போட்டன. அவரைக் கண்ட கூட்டத்தினர் அனைவரும் தேம்பித் தேம்பி அழுதனர். அண்ணாவின் மறைவில் மலேசியத் தமிழரின் வாழ்வும் ஒருகணம் இருண்டு போனது.

அண்ணாவுக்கு இந்திய அரசின் அங்கீகாரம்:-

பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது உருவம் பொறித்த நாணயத்தை இந்திய நடுவண் அரசு இன்று (15.09.2008) வெளியிடுகிறது. தமிழக முன்னாள் முதல்வரும் திராவிட இயக்க நிறுவனர்களில் ஒருவருமான மறைந்த பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழா இன்று தொடங்குகிறது. அவரது நினைவாக அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிட நடுவண் அரசு முடிவு செய்துள்ளது. அரசியல், நாடகம், சினிமா, தமிழ் இலக்கியம் ஆகிய துறைகளில் பேரறிஞர் அண்ணா ஆற்றிய அரும்பணிகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த நாணயம் வெளியிடப்படுகிறது.

*அண்ணாவின் பெயர் சூட்டப்பட்ட பாலம் படத்தை வழங்கி உதவிய திரு.க.முருகையன், பாரிட் புந்தார் அவர்களுக்கு நன்றி.

Thursday, September 11, 2008

மாபாவலர் பாரதியார்

இன்று 11.9.2008ஆம் நாள் மாபாவலர் பாரதியாரின் 126ஆம் ஆண்டு நினைவுநாள். அதனை முன்னிட்டு இந்தக் கட்டுரை இடம்பெறுகின்றது.

**********************************

கடந்த 126 ஆண்டுகளுக்கு முன்னர் ஓர் ஓப்புயர்வற்ற பாவலரை.. சிந்தனையாளரை.. சீர்திருத்தவாளரை.. புரட்சியாளரைச் சுப்பிரமணிய பாரதி என்னும் பெயரில் தமிழ்நாடு இந்த உலகிற்கே உவந்து அளித்தது. 1882 ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் 11 ஆம் நாள் எட்டயபுரத்தில் சின்னச்சாமி ஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் மகவாகப் பிறந்தார் பாரதியார்.

அப்போது, அந்தக் குழந்தை பின்னாளில் உலகமே போற்றும் மாபாவலனாக (மகாகவியாக) உருவாகும் என பெற்றாரும் உற்றாரும் மற்றாரும் அறிந்திருக்கவில்லை. ஆனால், 39 ஆண்டுகள் மட்டுமே இம்மண்ணில் வாழ்ந்த அந்தத் தமிழ்ப்பாவலர் தம்முடையப் பாட்டுத் திறத்தாலே தமிழர் உள்ளமெல்லாம் நாட்டு உணர்வையும் தமிழ் உணர்ச்சியையும் மிக ஆழமாகப் பதித்துச் சென்றுவிட்டார்.

அந்தப் பாரதி "மெல்லத் தமிழ் இனிச் சாகும்" என்று ஒரு கருத்தைச் சொன்னதாக பலரும் பேசி வருகின்றனர். இது எந்த அளவுக்கு உண்மை?

"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்" என்றும்,

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்" என்றும்,

"வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே" என்றும்,

"சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!"


என்றெல்லாம் தமிழ்மொழியை ஏற்றியும் போற்றியும் பாரதி பாடியிருப்பதை நாம் அறிவோம். அப்படிப்பட்ட பாரதியாரே தம்முடைய ஒரு பாடலில் "மெல்லத் தமிழினிச் சாகும்" என்று பாடியிருக்கிறார் என்கின்ற கூற்று உண்மையா?

தமிழ் சேமமுற வேண்டும் தமிழ் செழித்திட வேண்டும் தமிழ் உலகமெலாம் பரவ வேண்டும் என்றெல்லாம் தமிழுக்கு உரமூட்டி தமிழருக்கு உணர்வூட்டிய பாரதி "மெல்லத் தமிழ் இனிச் சாகும்" என்ற நம்பிக்கையின்மையை கருத்தைச் சொல்லியிருப்பாரா?

"மெல்லத் தமிழ் இனிச் சாகும்" என்ற முடிவினை அறிவிக்கும் அளவுக்குப் பாரதியாருக்கு என்ன வகையில் நெருக்கடி ஏற்பட்டிருக்கும்? அல்லது தமிழுக்குத்தான் என்ன வகையில் நெருக்கடி ஏற்பட்டிருக்கும்?

"மெல்லத் தமிழ் இனிச் சாகும்" என்று பாரதி சொன்னதாகச் சொல்லப்படும் அந்த வரிகள் வருகின்ற பாடல் இதுதான்.

"கன்னிப் பருவத்திலே அந்நாள் - என்றன்
காதில் விழுந்த திசைமொழி எல்லாம்
என்னென்னவோ பெயருண்டு - பின்னர்
யாவும் அழிவுற்று இறந்தன கண்டீர்!


தந்தை அருள் வலியாலும் - முன்பு
சான்ற புலவர் தவ வலியாலும்
இந்தக் கணமட்டும் காலன் - என்னை
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி இருந்தான்


இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
ஏது செய்வேன்? எனதாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு
கூறத் தகாதவன் கூறினான் கண்டீர்!


"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை


சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"


என்றந்தப் பேதை யுரைத்தான் - ஆ!
இந்த வசை எனக்கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!


தந்தை அருள் வலியாலும் - இன்று
சார்ந்த புலவர் தவ வலியாலும்
இந்தப் பெரும்பழி தீரும் - புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்."


புதிய எழுச்சி.. புதிய சாதனை.. புதிய வரலாறு படைக்க வேண்டித் தன் மக்களை; தமிழரைப் பார்த்து தமிழ்த்தாயே கேட்பதாக அமைந்த இந்தப் பாடலில்தான் "மெல்லத் தமிழினிச் சாகும்" என்ற வரி வருகின்றது.

தமிழ் இறந்துபோகும்.. தமிழ் அழிந்துபோகும்.. தமிழ் செத்துப்போகும் என்ற பொருளில் பாரதியார் எழுதவே இல்லை. மாறாக, சில பேதைகள்.. சில அறிவிலிகள்.. சில மூடர்கள் "தமிழ் இனிச் சாகும்" என்று புலம்பிக் கொண்டிருக்கின்றனர் என்றுதான் பாரதி சொல்லியிருக்கிறார்.

தமிழ் வழக்கிறந்து; வாழ்விழந்து போகும் என்று சொல்லும் சிலரைப் பார்த்து பாரதி 'பேதைகள்' என்று மிகக் கடுமையாக உரைக்கின்றாரே தவிர, பாரதி ஒருபோதும் தமிழுக்கு எதிராக நம்பிக்கையின்மையை விதைக்கவில்லை என்பது தெளிவு.

"தமிழ் இனி மெல்ல செத்துப்போய் ஆங்கிலம் போன்ற மேற்குமொழிகள் ஓங்கி நிற்கும் என்று பேதை ஒருவன் உரைக்கின்றான். அப்படியொரு பழி எனக்கு ஏற்படலாமா தமிழா? எழுந்திரு.. எட்டுதிக்கும் ஓடு! உலகில் கிடைக்கும் அறிவுச்செல்வங்கள் அனைத்தையும் கொண்டுவந்து தமிழுக்கு உரமேற்று" என்று மிக உரத்தத் தொனியில் தமிழருக்கெல்லாம் தன்னம்பிக்கையை ஊட்டுகிறார் மாபாவலன் பாரதி.

Blog Widget by LinkWithin