Wednesday, January 27, 2010

எசுபிஎம்மில் 12 பாடங்கள்: கல்வி அமைச்சு சுற்றறிக்கை



மலேசியக் கல்விச் சான்றிதல் (எசுபிஎம்) தேர்வு தொடர்பான சிக்கல் இன்னும் ஓய்ந்தபாடாகத் தெரியவில்லை. கடந்த ஆறு மாதங்களாக இந்தச் சிக்கல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனால், பெற்றோர்களும் மாணவர்களும் பெரும் குழப்பத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.

சரியான வழிகாட்டுதலும் விளக்கமும் கிடைக்காத நிலையில் பெற்றோர்களும் மாணவர்களும் ஏன் ஆசிரியர்களும் கூட இவ்வாறு குழப்பத்திற்கு ஆட்பட்டுப் போவது இயல்பானதுதான்.

எசுபிஎம் தேர்வில் 10 பாடம்தான் எடுக்க வேண்டுமா? அல்லது தமிழையும் இலக்கியத்தையும் சேர்த்து 12 பாடம் எடுக்கலாமா? முடியுமா? என்ற குழப்பம் இனி தேவையில்லை.


மாணவர்கள் தாராளமாகப் 12 பாடங்களை எடுக்கலாம் என கல்வி அமைச்சு சுற்றறிக்கை வழி தெரிவித்துள்ளது. இந்தச் சுற்றறிக்கை 13-1-2010இல் வெளியிடப்பட்டதாகும்,

சுற்றறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் (சொடுக்கி) இந்தச் சுற்றறிக்கையைக் காண்க:

1. http://www.moe.gov.my/index.php?id=13&aid=541

2.http://apps2.moe.gov.my/lpm/images/pekeliling/Pekeliling%20Iktisas%20Bil%201_2010.pdf

இந்தச் சுற்றறிக்கையின்படி, மாணவர்கள் 12 பாடங்களை எடுப்பதற்கு இசைவு வழங்கப்பட்டுள்ளது.

*ஏற்கனவே, 10 பாடங்கள் மட்டுமே எடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், இப்போது கூடுதலாக 2 பாடங்களை எடுப்பதற்கு இசைவு வழங்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

**மேலும், மாணவர்கள் மொத்தமாகப் 12 பாடங்களை எடுக்க முடியும் எனவும் அதில் (தடித்த எழுத்துகளில்) குறிப்பிடப்பட்டுள்ளதைக் கவனிக்கவும்.

***அதோடு, கூடுதலான 2 பாடங்கள் உள்ளிட்ட மொத்தம் 12 பாடங்களின் தேர்ச்சி அடைவுநிலை சான்றிதழில் குறிக்கப்படும் எனவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, நமது மாணவர்களும் பெற்றோர்களும் எந்தவித குழப்பமோ ஐயமோ கொள்ளத் தேவையில்லை. மாணவர்கள் தாராளமாகப் 12 பாடங்களைத் தேர்வுக்கு எடுக்கலாம் – எடுக்க வேண்டும்.

எசுபிஎம் தேர்வில் மாணவர்கள் 12 பாடங்களை எடுக்கலாம் என்ற அரசாங்கத்தின் முடிவுக்கு எல்லாப் பள்ளிகளும் கண்டிப்பாகக் கட்டுப்பட வேண்டும்.

ஆகவே, தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் எடுப்பதற்கு இசைவு(அனுமதி) அளிக்காத பள்ளிகள் பற்றியும் அல்லது மாணவர்களைத் தடுக்கும் பள்ளிகள் பற்றியும் அல்லது மாணவர்களுக்குத் தடை விதிக்கும் பள்ளிகள் பற்றியும் கல்வி அமைச்சுக்குத் தெரியபடுத்த வேண்டும்.

இந்த விவகாரத்தில் கெடுபிடிகள் பண்ணும் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள் மீது உடனடியாகப் புகார் செய்யவேண்டும்.

Tuesday, January 26, 2010

தமிழைக் காக்க தைப்பூசத்தில் உண்ணாநோன்பு



எசு.பி.எம். தேர்வில் தமிழ், இலக்கியப் பாடங்கள் மற்ற பாடங்களுக்கு இணையாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்து தமிழ், தமிழ் இலக்கிய மீட்புக் குழுவினர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.


எதிர்வரும் தைப்பூச நாளன்று நாடெங்கிலும் கொண்டாடப்பட இருக்கும் தைப்பூச விழாக்களின்போது போராட்டவாதிகள் உண்ணாவிரதம் மேற்கொள்ளவிருக்கின்றனர்.


அண்மையில் தமிழ், தமிழ் இலக்கியம் குறித்துக் கல்வி அமைச்சரோடு நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்படுகிறது.


“இந்தப் போராட்டம் நாடெங்கிலும் தைப்பூச நாளன்று ஒரே நேரத்தில் நடைபெறும் என்று போராட்டக் குழுவின் தலைவர் ஆ.திருவேங்கடம் தெரிவித்தார். பத்துமலை தைப்பூச விழாவில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. (விரிவாக)
  • நன்றி:விடுதலைமலேசியாஇன்று

Saturday, January 23, 2010

எங்கூரு பொங்கல் கொண்டாட்டமும் கோளாறும் (2)


*இதன் முதற்பகுதியைப் படிக்க இங்கு சொடுக்கவும்.

தைத்திங்கள் பிறக்கும் பொழுதெல்லாம் பொங்லோடு சேர்ந்து சில புரட்டுகளும் நடைபெறுவது இயல்பாகிவிட்டது. இந்தக் கோளாறுகளை எல்லாம், கோளாறுகள் என்றே தெரியாமலே பலர் குளறுபடிகள் செய்கிறார்கள். இவர்களுக்கு இடையில், ஒரு குறிப்பிட்டக் கூட்டத்தார் மிகவும் தெளிவாகத் திட்டமிட்டு பொங்கலில் சில கோளாறுகளைச் செய்துவருகின்றனர்; பொங்கலன்று பிறக்கும் தமிழ்ப் புத்தாண்டில் நுண்ணரசியல் விளையாட்டு காட்டுகின்றனர்.

அவற்றை இனி ஒவ்வொன்றாகப் பார்ப்போமா?

கோளாறு 1:- பொங்கல் முதல்நாள், சூரியப் பொங்கல் எனப்படுகிறது. காலையில் கதிரவன் உதயமாகும் நேரத்தில் பொங்கல் வைக்கவேண்டும் என்பதுதான் காலாகாலமாகப் பின்பற்றப்படும் வழக்கம். அதுதான் இயற்கையானதும் இயல்பானதும்கூட. ஆனால் இன்றோ, பொங்கலுக்கு நல்ல நேரம் குறிக்கப்படுகிறது. அந்த நல்ல நேரத்தைத் தெரிந்துகொள்ள நமது மக்கள் பயபத்தியோடு காத்திருப்பதும், பிறகு சாமிக்குற்றம் வந்துவிடுமோ என்று அஞ்சி நடுங்கி நல்ல நேரப்படி பொங்கல் வைப்பதும் பாரிய நகைச்சுவை.

அப்படி குறித்துக் கொடுக்கப்படும் நேரம் எதுவாக இருக்கிறது தெரியுமா? சூரியன் நன்றாகக் கொளுந்துவிட்டு காயும் நேரமாக இருக்கும் அல்லது சூரியன் உச்சி மண்டைக்கு மேலே வரும் மதிய நேரமாக இருக்கும். மாலை நேரத்தில் பொங்கல் வைக்கும் நல்ல நேரம் குறித்துக்கொடுக்கபட்ட கதையும் உண்டு. அதற்கும் மேலே போய், காலையில் ஒரு நேரம் மாலையில் ஒரு நேரம் என்று ஒரே நாளில் இரண்டு நேரங்கள் குறித்துக் கொடுக்கிறார்கள். இதைவிட கொடுமை ஒன்றும் இவ்வாண்டு நடந்தது. பொங்கல் வைக்கும் நல்ல நேரம் இரவு 8.00 மணி என்று முதலில் ஒரு அறிவிப்பு செய்யப்பட்டதுதான் அது. அப்புறம், பொங்கல் அமாவாசையில் வருகிறது. அதனால், மறுநாள்தான் பொங்கல் வைக்க வேண்டும் என்று கூடவே இன்னொரு புரளி வேறு.

இப்படி பொங்கல் வைப்பதற்கு நல்ல நேரம் குறித்துக்கொடுக்கும் கோளாறு எப்படி ஏற்பட்டது? எப்போது ஏற்பட்டது? ஏன் ஏற்பட்டது? என்பதை விளக்கி எழுதினால், சோதிட மேதைகள், பத்திமான்கள், ஏன் ஊதுவத்தி வணிகர்கள் கூட வம்புக்கு வந்துவிடுவார்கள். அதனால், அதை எழுதாமல் விடுகிறேன்.


கோளாறு 2:- சூரியப் பொங்கலுக்கு மெனக்கெட்டு நேரம் குறித்து கொடுக்கின்ற சோதிடக் குருமார்கள், ஏனோ தெரியவில்லை மாட்டுப் பொங்கலுக்கும் மறுநாள் காணும்(கன்னிப்) பொங்கலுக்கும் நேரம் குறித்துக் கொடுப்பதில்லை. பொங்கலுக்கு முதல் நாள் போகிப் பண்டிகையில் இத்தனை மணிக்குதான் பழையத் தட்டுமுட்டு துணிமணிகளைக் கொளுத்த வேண்டும் என்றும் நேரம் குறித்துக் கொடுப்பதில்லை. மண்டையைக் குழப்பும் இந்தக் கோளாறுக்காக எங்கே போய் முட்டிக்கொள்வதோ தெரியவில்லை!

கோளாறு 3:- பொங்கலை அறுவடைத் திருநாள் என்றும் தமிழர் திருநாள், உழவர் திருநாள் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறோம். இப்போது புதிதாக ஒரு புராணப் புழுகை அள்ளிவிடத் தொடங்கி இருக்கிறார்கள். குறிப்பிட்ட கடவுளர் ஒருவர் சூரியனாகவே வடிவெடுத்தாராம். அதனால், பொங்கலன்று சூரியப் பகவானோடு அந்தக் கடவுளரையும் சேர்த்து வழிபட்டால் கோடானும் கோடி நன்மை உண்டாகுமாம். இப்படி, இயற்கை வழிபாட்டை ஒட்டிய பொங்கலின் பண்பாட்டுச் சிறப்பை மழுங்கடித்து அதில் மதச்சாயத்தைப் பூசியும் குறிப்பிட்ட ஒரு சமயத்திற்குச் சார்புபடுத்தியும் கோளாறு செய்யப் பார்க்கிறது ஒரு தரப்பு.


கோளாறு 4:- பொங்கல் நாளில் அதாவது தை முதல் நாளில்தான் தமிழ்ப் புத்தாண்டாகிய திருவள்ளுவராண்டு பிறக்கிறது. இலக்கியத்திலும், வானியலிலும் இதற்குத் தக்க சான்று உண்டு. தமிழ்க்கடல் மறைமலை அடிகள், திரு.வி.க, பேராசிரியர் கா.நமசிவாயர், சிவனியப் பெரியார் சச்சிதானந்தர், நாவலர் சோமசுந்தர பாரதியார், உ.வே.சாமிநாத ஐயர், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் உள்ளிட்ட ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட அறிஞர் பெருமக்கள் ஒன்றுகூடி அய்வுசெய்து, தை முதலே தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்தனர். தமிழ்நாடு அரசும் இதனை ஏற்றுக்கொண்டு அரசாணை பிறப்பித்துள்ளது.

ஆயினும், தை முதல் நாளை இன்னமும் தமிழ்ப் புத்தாண்டாகச் சிலர் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட சமயஞ்சார்ந்த அமைப்புகளும் தலைவர்களும் இதனை ஏற்பதே இல்லை. அதற்கேற்றவாறு மக்களையும் தவறாக வழிநடத்துகின்றனர். இவர்கள் தைப்பொங்கல் வாழ்த்து மட்டுமே சொல்கிறார்கள். மறந்தும்கூட, தமிழ்ப் புத்தாண்டு என்று மூச்சுப் பரிவதே இல்லை.

சமய நாட்டமுள்ளவர்கள், தமிழ்ப் புத்தாண்டு என்னும் தமிழர்தம் வரலாற்று உண்மையை இருட்டடிப்பு செய்வதில் மிகவும் குறியாக இருக்கின்றனர்.

கோளாறு 5:- மலேசியாவில் வெளிவரும் இரு நாளிகைகள் பொங்கல் வாழ்த்தோடு தமிழ்ப் புத்தாண்டு என்றும் அறிவித்து செய்தி போடுகின்றன. ஆனால், சில ஏடுகளில் தமிழ்ப் புத்தாண்டு என்று ஒரு இடத்திலும்கூட வந்துவிடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்கிறார்கள். இவர்கள் இப்படியொரு வரலாற்று மறைப்பைச் செய்வதற்குச் சில பின்னணிகளும் அடிப்படைகளும் இருக்கின்றன. அதைப் பற்றியெல்லாம் இங்கு விரிவாகப் பேச விருப்பமில்லை.

கோளாறு 6:- நாட்டில் குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகளும், சமயம் சார்ந்த அமைப்புகளும், பொது இயக்கங்களும் கூட தமிழ்ப் புத்தாண்டைப் பற்றி கண்டுகொள்வதே இல்லை; வாழ்த்து சொல்லுவதும் இல்லை. அப்படி ஒன்று இருப்பதாகவே காட்டிக்கொள்வதும் இல்லை. இவர்களின் இந்த நடிப்பு இன்னும் எத்தனை காலத்திற்கு நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். (ஆனாலும், இவ்வாண்டு எதிர்க்கட்சிகளில் இருக்கும் நமது தலைவர்கள் வழங்கிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி நாளிகைகளில் வெளிவந்திருந்தன. மாற்றத்திற்கான ஒரு நல்ல தொடக்கமாக இந்தச் சொல்லலாம்.)


கோளாறு 7:- அரசியலாளர்கள் சிலர், சில செய்தியிதழ்கள் போலவே தமிழ் வானொலி தொலைக்காட்சி ஊடகங்களும் தமிழ்ப் புத்தாண்டைத் திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்கின்றன. அவ்வளவு ஏன். கண்ட கண்ட குப்பைகளையெல்லாம் உளறிக்கொட்டி கிளறிமூடும் தனியார் வானொலிகூட பொங்கல்! பொங்கல்! என்று முழங்கியதே தவிர தமிழ்ப் புத்தாண்டு என்று ஒருமுறைகூட சொல்லவில்லை. பெர்னாமா தொலைக்காட்சி அலைவரிசை மட்டுமே தன்னுடைய செய்தியில் தமிழ்ப் புத்தாண்டு பற்றி கொஞ்சமாகப் பேசியது.

இத்தனையையும் வைத்துப் பார்க்கும்போது, பொங்கலைத் தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்துவிடக் கூடாது, ‘தைப் பிறப்பே தமிழ்ப் புத்தாண்டு’ என்பது மக்கள் மனதில் பதிந்துவிடக் கூடாது என்பதில் சில தரப்பினர் மிக மிகக் கண்ணும் கருத்துமாக இருப்பதைக் காண முடிகிறது . எது எப்படியோ. ஒன்றுமட்டும் உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறது. இந்த நுண்ணரசியலுக்குப் பின்னணியில் யாரோ ஒரு தனியாள் அல்லது ஒரு இயக்கம் கண்டிப்பாக இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழ்ப் புத்தாண்டை இருட்டடிப்புச் செய்வதற்கான ஆதரவும் அதற்குரிய சதித்திட்டமும் வேறொரு நாட்டிலிருக்கும் ஆரிய வழித்தோன்றல்கள் வழியாக இவர்களுக்குக் கிடைக்கலாம்.



இத்தனைக் கோளாறுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டு பொங்கலும் தமிழ்ப் புத்தாண்டும் சதிராட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது.

பொங்கல் திருநாளைச் சமயம் கடந்த பண்பாட்டு விழாவாகவும், உலகத் தமிழருக்கு உரிய தமிழ்ப் புத்தாண்டாகவும் கொண்டாடுகின்ற காலம் மலரவேண்டும். அவ்வாறு மலரும் நாளே தமிழின விடுதலை நாளாக இருக்கும்; தமிழரின் விடிவுக்குரிய தொடக்கமாக அமையும்.

Wednesday, January 20, 2010

எங்கூரு பொங்கல் கொண்டாட்டமும் கோளாறும் (1)



எங்க ஊரு (மலேசியா) பொங்கல் இப்போதெல்லாம் கோலாகலமாக நடைபெறுகிறது. அப்படியானால், முன்பெல்லாம் இப்படி இல்லையோ என நீங்கள் கேட்கலாம். அதற்கு “ஆமாம்” என்பதே பதில்.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வழக்கம், இப்போது போல இருந்ததில்லை. ஆனால், இன்றோ வீட்டுக்கு வீடு பொங்கல் வைப்பது கட்டாயாமான ஒன்றாகிவிட்டது.

இன்றைய நிலையில் பொங்கல் கொண்டாட்டம் பல புதிய பரிணாமங்களைக் கண்டுவிட்டது. இற்றைநாள் பொங்கலில் பெருமைப்படத்தக்க பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவை என்னென்ன என்று கொஞ்சம் விரிவாகக் காண்போமா?

மலேசியாவில் பொங்கல் கொண்டாட்டங்கள்

1.இப்போது மலேசியத் தமிழர்கள் அனைவரும் வீட்டுக்கு வீடு பொங்கல் வைக்கின்றனர். இது பொங்கலுக்குக் கிடைத்திருக்கும் பெருமதியாகக் கொள்ளலாம்.


2.பொது இடங்களில் நூறு, இருநூறு, ஆயிரம் எனப் பெருந்திரளாக மக்கள் ஒன்றுகூடி பொங்கல் வைத்து சாதனை புரிகின்றனர். இதனால், மற்ற இனத்தாரின் கவனம் பொங்கல் மீது இப்போது விழுந்திருக்கிறது.

3.தமிழர்களோடு இணைந்து மலாய்க்காரர், சீனர் என மூவினத்தவரும் பொங்கலிடும் புதிய பண்பாடு அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்ந்து வருகின்றது.

4.நாட்டுப் பிரதமர் தொடங்கி மற்ற இனத்தைச் சார்ந்த அமைச்சர்கள், எதிர்கட்சித் தலைவர்கள் தீபாவளிக்கு மட்டுமே வாழ்த்துச் செய்தி வழங்கிய காலம் மாறி, இப்போது பொங்கலுக்கும் வாழ்த்துச் செய்தி தருகிறார்கள்.




5.மலேசியத் தமிழ் நாளிதழ்கள் பொங்கலை முன்னிட்டு சிறப்புப் பக்கங்கள், இணைப்புகள் வெளியிடுகின்றன. அதோடு, தங்கள் ஊழியர்களுக்கு ஒருநாள் விடுமுறையும் விடுகின்றனர். இது பொங்கலுக்குத் தரப்படும் மரியாதை எனவும் சொல்லலாம்.

6.நாட்டில் வெளிவரும் வார, மாத இதழ்கள் அனைத்தும் பொங்கல் சிறப்பிதழ் வெளியிட்டு பொங்கல் குதூகலத்தை அதிகப்படுத்துகின்றன.

7.ஒலி – ஒளி ஊடகங்கள் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளைப் படைக்கின்றன. அதுவும், சொந்த நிகழ்ச்சிகளாக உள்ளூர் நிகழ்ச்சிகளாக இருப்பது குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது.

8.தமிழ் சார்ந்த இயக்கங்கள் பொங்கல் விழா, தமிழர் திருநாள் முதலான பெயர்களில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்துகின்றன. கலை, இலக்கியப் போட்டிகளும் நடத்தப்பெற்று பரிசுகள் வழங்கப்படுகின்றன.

9.கோலாலம்பூரில் செயல்படும் தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பு ஆண்டுதோறும் தேசிய அளவில் தமிழர் திருநாள் விழாவை நடத்தி நாடு முழுவதும் தமிழ் உணர்வைப் பரவச் செய்கிறது.

10.பொங்கல் அன்றுதான் திருவள்ளுவர் நாளும் வருகின்றது. திருக்குறளைத் தமிழர் மறையாக ஏற்றுக்கொண்டு தமிழ் வாழ்வு வாழும் தமிழன்பர்கள் திருவள்ளுவர் நாளைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். கூட்டு வழிபாடு, திருவள்ளுவர் குருபூசை என்ற பெயர்களில் ஒன்றுகூடி அகவழிபாடு செய்கின்றனர்.

11.பொங்கலன்று திறந்த இல்ல விருந்துகளும் இப்போது ஆங்காங்கு நடைபெறுகின்றன. தமிழ்ப் பண்பாட்டுச் சூழலை வெளிப்படுத்தும் வகையில் இவ்விருந்து நிகழ்ச்சிகள் நடக்கின்றன. முற்றிலும் மரக்கறி உணவுகள் பரிமாறப்படுகின்றன. விருந்தினர்கள் அனைவரும் தமிழ்ப் பண்பாட்டு உடையில் வந்து விருந்தோம்பலில் கலந்து சிறப்பிக்கின்றனர்.

12.நாட்டில் உள்ள பெரும்பாலான தமிழ்ப்பள்ளிகள் பொங்கலன்று சிறப்பு விடுமுறை எடுக்கின்றன. இது புதிய பண்பாடாக உருவாகி இருக்கிறது. முன்பெல்லாம் திருவிழா, தீமிதி, சித்திரைப் பௌர்ணமி என்று விடுமுறை எடுத்து வந்த தமிழ்ப்பள்ளிகள் இப்போது பொங்கலுக்கு விடுமுறை எடுத்துக்கொள்கின்றன.

13.சில தமிழ்ப்பள்ளிகளில் பொங்கல் விழா கொண்டாடப்படுகின்றன. ஆசிரியர்களும் மாணவர்களும் ஒன்றுசேர்ந்து பொங்கலிட்டு மகிழ்கின்றனர். தவிர, பொங்கல் தொடர்பாக பல போட்டிகளும் நடத்தப்படுகின்றன. நமது மாணவர் சமுதாயத்தில் தமிழ்ப் பண்பாட்டு உணர்வுகளை வளர்ப்பதற்காக தமிழ்ப்பள்ளிகளில் பொங்கல் விழா கொண்டாடப்படுவது மகிழ்ச்சிக்குரியது.

14.இதேபோல், இப்போதெல்லாம் கல்லூரி, பல்கலைக்கழகம், ஆசிரியர் பயிற்சிக் கழகம் முதலான உயர்க்கல்வி நிலையங்களில் பயிலும் நமது மாணவர்கள் ஒன்றுகூடி பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவதையும் காண முடிகிறது.


15.நாட்டில் உள்ள பல கிறித்துவ தமிழன்பர்கள் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். மதத்தால் கிறித்துவர்கள் ஆனாலும் இனத்தால் தமிழர்களே என்ற உனர்வோடு அவர்கள் தேவாலயங்களில் ஒன்றுகூடி பொங்கலிட்டு மகிழ்கின்றனர். பொங்கல் சமயத்திற்கு அப்பாற்பட்ட ஒரு பண்பாட்டு விழா என்பதற்கு இதுவோர் நல்ல சான்று.

16.இத்தனையும் போக, தை முதல் நாள் பொங்கல் மட்டுமல்ல; தமிழ்ப் புத்தாண்டும் கூட. எனவே, இந்தத் தமிழ்ப் புத்தாண்டை வரவேற்கும் வகையில் தமிழ் நாளேடுகளும் சில தமிழ் சார்ந்த பொது இயக்கங்களும் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடுகின்றன. தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்வதோடு நெஞ்சை நிமிர்த்தி ‘தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு’ என்று உரக்க அறிவித்துக்கொண்டிருக்கின்றன.

17.மலேசிய நண்பன், மக்கள் ஓசை ஆகிய இரு நாளேடுகளும் மலேசியத் திராவிடர் கழகம், மலேசியத் தமிழ்நெறிக் கழகம், தமிழியல் ஆய்வுக் களம், உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம், தமிழ் வாழ்வியல் இயக்கம் முதலான அமைப்புகளும் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக வலியுறுத்தி வருகின்றன.

18.தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு மலேசியாவில் தொடர்ந்து தமிழ் நாள்காட்டி வெளியிடப்பெறுகின்றது. தமிழியல் ஆய்வுக் களம் இந்த அரும்பணியைச் செய்து வருகின்றது. இப்போது பிறந்துள்ள திருவள்ளுவராண்டு 2041ஐ முன்னிட்டு முழுக்க முழுக்கத் தமிழை முன்படுத்திய நாள்காட்டி வெளியிடப்பட்டிருக்கிறது.

இப்படியாக, மலேசியாவில் பொங்கல் திருநாள் - தமிழ்ப் புத்தாண்டுக் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒருவகையில், இவையெல்லாம் தமிழ்ப் பண்பாட்டுச் செழுமையின் வெளிப்பாடுகளாக இருக்கின்றன.

அதற்காக, நமது மக்களிடையே தமிழ்ப் பண்பாட்டின் எச்சங்கள் இன்னும் ஆழமாக இருக்கின்றன; நமது மக்களிடையே தமிழ்ப் பண்பாட்டு உணர்வுகள் மேலோங்கி வருகின்றன என்றெல்லாம் மார்தட்டிக்கொள்ள முடியாது.

காரணம், மேலே சொன்ன அத்தனைக்கும் நேர்மாறான கோளாறுகள் இருக்கவே செய்கின்றன. அல்லது, திட்டமிட்டு சில கோளாறுகள் செய்யப்படுகின்றன. பொங்கல் பெயரில் நடக்கின்ற குளறுபடிகளை அடுத்த இடுகையில் எழுதுவேன்.

அதுவரை.. நீங்களும் கொஞ்சம் உங்கள் சிந்தனைக் குதிரையை ஓடவிடுங்களேன்..!

Thursday, January 14, 2010

பொங்கலோ பொங்கல்! தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்து!



திருத்தமிழ் வலைப்பதிவு வாசகர்களாகிய திருத்தமிழ் அன்பர்கள் அனைவருக்கும்



இனிய பொங்கல் திருநாள்;
தமிழ்ப் புத்தாண்டு 2041 நல்வாழ்த்து.


தமிழ் தமிழாக;
தமிழர் தமிழராக;
தமிழ்ப் புத்தாண்டு நன்நாளில்
உறுதி கொள்வோம் - உயர்வு பெறுவோம்.


அன்புடன்:- சுப.நற்குணன்



பொங்கல் சிறப்புக் கட்டுரை படிக்க இங்கு சொடுக்கவும்

Tuesday, January 12, 2010

நமது நாளிதழ்கள் பற்றி ஒரு செய்தி

தமிழர் நலன் கருதி, மலேசியத் தமிழ் நாளேடுகள் தவிர்க்க வேண்டிய செய்தி எது?

1.அரசியல் செய்திகள்
2.வன்முறைச் செய்திகள்
3தமிழகச் செய்திகள்
4.சோதிடச் செய்திகள்

இப்படி ஒரு தலைப்பில் திருத்தமிழ் ஒரு கருத்துக் கணிப்பை அண்மையில் மேற்கொண்டது. இதில், மேலே உள்ளது போல 4 தேர்வுகள் கொடுக்கப்பட்டிருந்தன.

அதன் இறுதி முடிவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பார்க்கவும்.



ஒரு வேளை இந்த முடிவை நமது நாளிகை ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனாலும், இதுதான் உண்மை.

மலேசிய வாசகர்கள் (57%), சோதிடச் செய்திகளில் நாட்டம் கொள்வதில்லை என்பது தெளிவாகிறது. சோதிடச் செய்திகளால் எந்தப் பயனும் இல்லை என வாசகர்கள் நம்புகிறார்கள் போலும். மேலும், இணைய வாசகர்களில் பெரும்பாலானோர் நல்ல தெளிவும் விழிப்புணர்வும் கொண்டவர்களாக இருக்கிறார்களோ என இந்த முடிவின்வழி ஒரு சிந்தனைப்பொறி தட்டுகிறது.

ஆனாலும் பாருங்கள். இந்த சோதிடச் செய்திகளுக்குத்தான் நமது நாளேடுகள் அதிகமான முகமைதரம் கொடுத்து வெளியிடுகின்றன. வாசகர்கள் விரும்பிக் கேட்கிறார்கள் – விழுந்து விழுந்து படிக்கிறார்கள் – விடிய விடிய வாசிக்கிறார்கள் என்று வாயில் நுரைதள்ள நாளிதழ் ஆசிரியர்கள் புலம்புகிறார்கள். அதனாலே சோதிடச் செய்திகளைப் பக்கம் பக்கமாக நாள்கணக்கில் வாரக்கணக்கில் போடுகிறார்கள்.

எத்தனை எத்தனை சோதிடச் செய்திகள் தெரியுமா? ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள், சித்திரைப் புத்தாண்டுப் பலன்கள், சனிப்பெயர்ச்சி, குருபெயர்ச்சி, இராசி பலன்கள், எண்கணிதம், சோதிடக் கேள்வி பதில் இப்படியாக ஏராளம்! ஏராளம்!

இவற்றுள் எந்தச் சோதிடப் பலன்தான் பலிக்குமோ தெரியவில்லை. அது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.



நல்ல வேளை தைப்பொங்கல் தமிழர் புத்தாண்டு என்பதாலும் அது அறிவாண்மைக்கு முகன்மை கொடுப்பதாலும் சோதிடம் முதலிய மூடநம்பிக்கைக்கு அப்பாற்பட்டு நிற்பதாலும் தைப்பொங்கல் பலன்கள் என்று எழுத முடியவில்லை. இல்லாவிட்டால், பொங்கல் பலன்கள் என்று புழுகிக் கொண்டிருப்பார்கள் நமது உலகமகா சோதிடப் பூசர்கள். (இன்னும் கொஞ்ச காலத்தில் பொங்கலுக்கும் சோதிடப் புராணம் பாடப்போகிறார்கள் என்பது வேறு விடயம்)

சோதிடச் செய்திக்கு அடுத்து, நமது நாளிதழ்கள் வன்முறைச் செய்திகளைத் தவிர்க்க வேண்டும் என 53% வாசகர்கள் வாக்களித்துள்ளனர்.

ஆனாலும் நமது நாளிதழ்களின் நிலைமை எப்படி இருக்கிறது தெரியுமா? வெட்டிக் கொலை – கழுத்து அறுத்து கொலை – தலை துண்டானது குடல் சரிந்து மரணம் – கை துண்டிக்கப்பட்டது – இரத்த வெள்ளத்தில் கிடந்தார் – நெற்றிப் பொட்டில் துப்பாக்கிச் சூடு – சிறுமி கொலையுண்டு அம்மணமாகக் கிடந்தாள் என்று கொட்டை எழுத்தில் வகை வகையாகத் தலைப்பிட்டு முதல் பக்கச் செய்தியாகப் போடுவார்கள்.

அந்தச் செய்தியோடு படம் போடுவார்கள் பாருங்கள்..! அடேயப்பா! இதில், தமிழ் நாளேடுகளை யாரும் மிஞ்ச முடியாது. விரல் துண்டிக்கப்பட்ட கையோடு உள்ள படம் – வெட்டப்பட்டு கை தனியாகத் தொங்கும் படம் – சவக்கிடங்கில் முகம் வீங்கிப் போய் இருக்கும் படம் – தலையில் இருபது தையல் போட்ட படம் – இறந்தவரின் உடலுக்குப் பக்கத்தில் பெண்கள் தலைவிரி கோலமாக கதறி அழும் படம் இப்படியாக அருவருக்கத்தக்க – பார்க்க சகிக்காத படங்களைப் போடுவார்கள். அதுவும் வண்ணத்தில் போட்டு அசத்துவார்கள்.

இதையெல்லாம் கேள்வி கேட்டால் (அப்படி கேட்காவிட்டாலும் யாரோ ஒருவர் பெயரில் ஞாயிற்றுக்கிழமை கேள்வியைப் போட்டு) பதில் கொடுப்பார்கள் பாருங்கள். நாம் என்னாதான் மூளையைப் போட்டு பிழிந்து எடுத்தாலும் அப்படி ஒரு நியாயத்தைக் கண்டுபிடிக்க முடியாது. அப்படி ஒரு பதிலைச் சொல்லி, வன்முறைச் செய்திகளைப் போடுவதை நியாயப்படுத்தி விடுவார்கள்.

தவிர, தமிழகச் செய்திகளையும் அரசியல் செய்திகளையும் நாளிதழ்கள் அளவுக்கு அதிகமாக வெளியிடுவதைக் குறைத்துக் கொள்வது மலேசியச் சூழலுக்கு நன்மையாக இருக்குமென தோன்றுகிறது.

மலாய், ஆங்கில, சீன நாளேடுகள் போன்று நமது நாளிதழ்கள் செய்தித்துறைக்குரிய நிபுணத்துவத்தோடும் நடுநிலையோடும் சமுதாய நலத்தோடும் செய்திகளை வெளியிட முன்வர வேண்டும். வாசகனின் தரத்தை உயர்த்தும் வகையில் செயல்பட வேண்டும். நாட்டு நடப்புகள், அரசியல் போராட்டங்கள், சமுதாயச் சிக்கல்கள் பற்றி சிந்தனைக்குரிய கட்டுரைகளையும் ஆய்வுச் செய்திகளையும் தரமான முறையில் வழங்க வேண்டும். இவையே பெரும்பான்மையான வாசகர்களின் விருப்பமாக இருக்கின்றது என்பதை நாளிகைகள் உணர வேண்டும்.

நாளிதழ் ஆசிரியர்கள் இதனை உணர மறுக்கும்போது வாசகர்கள் அவர்களுக்கு உணர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை.

அப்படியே இன்னொரு வழி இருந்தாலும், அது குறிப்பிட்ட நாளிதழை வாங்கிப் படிப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்வதாகத்தான் இருக்க முடியும்.

Sunday, January 10, 2010

தமிழ்ப்பள்ளிகள் நமது பிறப்புரிமை! நம்புங்கள்!



மலேசியாவில் 2010க்கான கல்வியாண்டு தொடங்கி ஒரு வாரம் ஓடிவிட்டது. வழமைபோலவே இவ்வாண்டிலும் தமிழ்ப் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

கிட்டதட்ட 20,000 மாணவர்கள் முதலாம் ஆண்டில் பதிவு செய்துள்ளார்கள் என்பது மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும். தமிழ்ப்பள்ளிகள் மீது நமது பெற்றோர்களின் கவனம் திரும்பியிருப்பது ஆக்கமான மனமாற்றம். தமிழ்ப்பள்ளியையும் தமிழ்க்கல்வியையும் நிலைப்படுத்துவதில் நமது பெற்றோர்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்பது புலனாகி இருக்கிறது.

தமிழ்ப்பள்ளிகள் வெறும் கல்வி நிறுவனங்கள் கிடையாது. மாறாக, மொழி, இனம், சமயம், கலை,பண்பாடு, வாழ்வியல், இலக்கியம் என அனைத்தையும் தழுவியிருக்கும் தமிழ்ப் பண்பாட்டு நடுவம் என்பதை நமது பெற்றோர்கள் உணரத் தொடங்கியிருகிறார்கள்.

தமிழ்ப்பள்ளிகள் இல்லாமல் போகுமானால், அதனால் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் பாரிய – பாதகமான விளைவுகளை எண்ணிப்பார்த்து நமது பெற்றோர்கள் தங்கள் தாய்மொழிக் கடமையைச் சரியான காலக்கட்டத்தில் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள் என்றால் மிகையாகாது.

நீண்ட காலப் பயணத்தில் தமிழ்மொழிக்கு எதிராக திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படும் அழிப்பு நடவடிக்கைகளுக்கு இதன்வழியாக நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க பெற்றோர்கள் அணிதிரண்டு தமிழ்ப்பள்ளிகளை முற்றுகையிட்டிருப்பது காலத்தால் செய்யப்பட வேண்டிய பணியாகும். அந்த நற்பணியை நமது பெற்றோர்கள் நன்றாகச் செய்திருக்கிறார்கள்.

இதற்காக, இவ்வாண்டில் தங்கள் குழந்தைகளைத் தமிழ்ப்பள்ளிகளில் (முதலாம் ஆண்டில்) பதிவு செய்திருக்கும் நாடு முழுவதிலும் உள்ள பெற்றோர்களுக்குப் பாராட்டுகளைச் சொல்லித்தான் ஆகவேண்டும்.


2010இல் தமிழ்ப்பள்ளியில் பதியும் மாணவர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்படும் என்று பலராலும் கணிக்கப்பட்டது. இதற்கு பின்வரும் சில காரணங்களும் சொல்லப்பட்டன:-

1)கணிதமும் அறிவியலும் மீண்டும் தாய்மொழிக்குத் திரும்புவதால்

2)எசு.பி.எம்.தேர்வில் தமிழையும் இலக்கியத்தையும் எடுத்துப் படிப்பதில் இழுபறியான சூழல் நிலவுவதால்

3)நாட்டின் மிக விரைவான வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ்ப்பள்ளிகள் செயல்படாததால்

4)தமிழ்ப்பள்ளி நிருவாகங்கள் மற்ற பள்ளிகளுக்கு இணையாக திறமையாக இல்லாததால்

5)தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலம் அமையாது என்பதால்

ஆனால், இவை அனைத்திலும் அடிப்படையே இல்லை என்பது இப்போது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது.

தமிழ்ப்பள்ளிகளுக்கு எதிராகத் திட்டமிட்டுப் பரப்பப்படும் பொய்யான – போலியான தகவல்களை நமது பெற்றோர்கள் அடித்து நொறுக்கிப் போட்டிருக்கிறார்கள்.

இனியும் இப்படியான தப்பான பரப்புரைகளைக் கேட்டு நம்பிக்கொண்டிருக்க பெரும்பாலான பெற்றோர்கள் அணியமாக(தயார்) இல்லை.

இதற்குத் தக்க சான்று ஒன்றைச் சொல்லலாம். படித்த பெற்றோர்களும், நிபுணத்துறை சார்ந்தவர்களும், பொருள்வளம் கொண்டவர்களும் இப்போது தமிழ்ப்பள்ளியில் தங்கள் குழந்தைகளைச் சேர்த்து வருகின்றனர் என்பதே அது.


தம்முடைய ஐந்து குழந்தைகளையும் தமிழ்ப்பள்ளியில் சேர்த்துள்ள முனைவர் டாக்டர் இரா.சிற்றறசு பற்றி அண்மையில் நாளிகையில் செய்தி வந்திருந்தது. தமிழ்ப்பள்ளியில் படித்து இன்று சிறந்த கல்விமானாக உயர்ந்துள்ள இவரும் இவருடைய துணைவியார் திருமதி.சாந்தியும் தமிழ்ப்பள்ளியில் படித்தவர்கள் என்பதாலும் உள்ளத்திலும் உயிரிலும் தமிழ் உணர்வு கலந்திருப்பதாலும் தமிழ்ப்பள்ளியில் படித்தால் வாழ்வில் உயரலாம் என்ற நம்பிக்கை இருப்பதாலும் தங்களின் 5 குழந்தைகளையும் தமிழ்ப்பள்ளியில் சேர்த்துள்ளனர். முனைவர் ஐயா இரா.சிற்றறசு போன்றவர்கள் நாட்டில் பலர் இருக்கிறார்கள் என்பது மறுப்பதற்கில்லை.

அதுமட்டுமல்லாது, நமது அரசியல் தலைவர்கள் சிலர் தங்கள் குழந்தைகளைத் தமிழ்ப்பள்ளியில் படிக்க வைத்திருப்பதானது, சமுதாயத்தில் பெரிய தாக்கத்தையும் பெற்றோரிடத்தில் மனமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது எனலாம். கூட்டரசு பிரதேசத் துணையமைச்சர் மாண்புமிகு டத்தோ மு.சரவணன் போன்றோர் தங்கள் பிள்ளையைத் தமிழ்ப்பள்ளியில் சேர்த்திருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

இதற்கிடையில், மற்ற பள்ளிகளில் சேர்க்கப்படும் நமது குழந்தைகள் பல மன உலைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்பதை பெற்றோர்கள் இப்போது உணரத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, தேவையில்லாத மற்ற மற்ற பாடங்களைப் படிக்க நமது குழந்தைகள் கட்டாயப்படுத்தப்படுவதைப் பெற்றோர்கள் அறிந்துள்ளனர்.

இதனைப் பற்றி அண்மையில் தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் மா.மனோகரன் மிகவும் கண்டித்துள்ளார். அதுமட்டுமல்லாது, இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு நமது பெற்றோர்கள் தமிழ்ப்பள்ளிகளையே தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் அறைகூவல் விடுத்துள்ளார்.

இதனையெல்லாம் கவனத்தில் கொண்டு பார்க்கும்போது, தமிழ்ப்பள்ளிகளின் வாழ்வும் நீடுநிலவலும் (survival) மட்டுமே நமக்கு முழுமையான பாதுகாப்பையும் முன்னேற்றமான எதிர்காலத்தையும் வழங்கும் என்பதை நமது மக்கள் உணர்ந்துகொண்டு வருகின்றனர் என்பது தெரிகிறது.

இந்த உணர்வு படிப்படியாக இன்னும் வளருமானால், பன்முகத் தன்மையை ஏற்றுக்கொண்டு பல்லினச் சூழலில் ஒரே மலேசியாவை வளர்த்தெடுக்க விரும்பும் கனவு கண்டிப்பாகப் பலிக்கும். அப்படி பலிக்கின்ற நாளில், மலேசியர்கள் அனைவரும் அவரவர் மொழி, இன, சமய, பண்பாட்டு அடையாளத்தை இழந்துவிடாமல் ஒன்றுபட்டு வாழ்கின்ற சூழல் உலகத்தையே வியக்கச்செய்யலாம்.

மேற்கோள்:-
1.மலேசிய நண்பன் செய்தி (5 & 6-1-2010)
2.மலேசியாஇன்று இணையத்தளம்

Friday, January 08, 2010

மீண்டும் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்:- தமிழக அரசு அறிவிப்பு

தமிழ் வரிவடிவத்தில் உள்ள எழுத்துகளை மாற்றி அமைப்பது குறித்து தமிழக அரசு அதிகாரப்படியாக அறிவிப்பு செய்துள்ளது. மாலை மலர் இணையத்தளத்தில் (7.1.2010) வெளிவந்துள்ள செய்தி இது:-


*************************

சென்னை, ஜன 7
தமிழ் மொழியை வளப்படுத்தும் வகையில் தமிழ் எழுத்துக்களில் சில சீர்திருத்தங்களை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக தனிக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த குழு அரசுக்கு சில பரிந்துரைகளை செய்துள்ளது.

தமிழ் எழுத்துக்களில் எத்தகைய சீர் திருத்தங்களை நடைமுறைக்கு கொண்டு வருவது என்பது பற்றி அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இது தொடர்பாக அனைத்து தரப்பினரும் கருத்துக்கள் தெரிவிக்கலாம் என்று அறி விக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்ட பிறகு தமிழ் எழுத்துக்கள் சீர்திருத்தம் தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. பிறகு தமிழக அரசு தமிழ் எழுத்து சீர்திருத் தங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.

தமிழ் எழுத்துக்கள் ஏற்கனவே பல தடவை சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளன. முதலில் தமிழ் எழுத்துக்களின் வடிவங்கள் பனை ஓலைச் சுவடிகளில் எழுதுவதற்கு ஏற்ப மாற்றப்பட்டது.

18-ம் நூற்றாண்டில் இத்தாலி நாட்டைச்சேர்ந்த ஜோசப் என்ற அறிஞர் தமிழ் அகராதியை உருவாக்கினார். அது தமிழ் அச்சுக்கலைக்கு உதவியாக இருந்தது. எல்லாரும் அவர் செய்த தமிழ் எழுத்து சீர் திருத்தங்களை ஏற்றுக் கொண்டனர்.

1950-களில் திராவிடர் கழக நிறுவனர் ஈ.வெ.ரா. பெரியார் தமிழ் எழுத்துக்களில் ஏராளமான சீர்திருத்தம் செய்தார். இதன் பயனாக தட்டச்சு எந்திரங்களில் தமிழ் எழுத்துக்களை மிக எளிதாக பயன்படுத்த முடிந்தது.

எம்.ஜி.ஆர். தன் ஆட்சிக்காலத்தில் தமிழ் எழுத்துக்களில் சில சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். "லை, னை'' எழுத்துக்கள் பழக்கத்துக்கு வந்தன. முதலில் சிறிது எதிர்ப்பு தோன்றினாலும் நாளடைவில் இந்த எழுத்துக்கள் பழகிவிட்டன.

அது போல தமிழ் எழுத்துக்களை பயன்படுத்துவதில் சிரமத்தை குறைக்க தற்போது ஆலோசனை நடந்து வருகிறது. கணினிகளில் தமிழ் எழுத்துக்களை மிக, மிக சுலபமாக பயன்படுத்த இனி வரும் எழுத்து சீர் திருத்தம் உதவும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

இந்த சீர்திருத்தம் இணைய தளங்களில் தமிழ் பயன் பாட்டை அதிகரிக்கும் என்ற கருத்து நிலவுகிறது.
**********************************

தமிழ் வரிவடிவத்தில் செய்யப்படவுள்ள இந்த எழுத்து மாற்றம் குறித்து திருத்தமிழில் ஏற்கனவே எழுதி இருந்தேன். அவை:-

1.தமிழ் எழுத்து மாற்றம்:- சீர்திருத்தமா? சீரழிப்பா? (1)

2.தமிழ் எழுத்து மாற்றம்:- சீர்திருத்தமா? சீரழிப்பா? (2)

தமிழ் எழுத்துகளில் இப்போது செய்யப்படவுள்ள மாற்றங்கள் தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதாக பயனளிப்பதாக இல்லை. மாறாக, இந்த மாற்றத்தினால், தமிழ்மொழிக்குப் புதியதொரு நெருக்கடி ஏற்படப் போவது உண்மை.

இன்றைய நடைமுறையில் பயன்படுத்தப்படும் தமிழ் வரிவடிவம் மிகவும் செம்மையாகக் கட்டமைக்கப்பட்டுவிட்டது என்பதே உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் மக்களின் பொதுவான கருத்தாகும்.

மேலும், கணினி - இணையம் முதலான தொழில்நுட்பத் துறைகளிலும் தமிழ் எழுத்துகளின் பயன்பாட்டுக்கு உரிய நுட்பங்கள் வல்லுநர்களால் செயற்படுத்தப்பட்டுவிட்டன.
இந்தச் சூழலில், இப்போது செய்யப்படும் எழுத்து மாற்றமானது கண்டிப்பாகத் தமிழ்மொழியின் வளர்ச்சியையும் வேகத்தையும் மட்டுப்படுத்தும் அல்லது முடக்கிப்போடும்.

தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்துவதில் இருந்த பல்வேறு சிக்கல்கள் களையப்பட்டுவிட்ட இன்றைய சூழலில், இன்னும் சில சிரமங்கள் சிக்கல்கள் இருப்பதாகக் கூறி, தமிழ் எழுத்துகளை மாற்ற நினைப்பது புதிய வகையிலான பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.

அதுமட்டுமல்லாது, தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தும் புதிய வகை எழுத்து மாற்றத்தை, அயலகத் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளாமல் போனால் தமிழின் நிலைமை என்னவாகும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

தமிழர்கள் உலகம் முழுவதும் சிதறி இருந்தாலும் மொழியாலும் தமிழ் எழுத்தாலும் ஒன்றியிருக்கிறார்கள்; தொடர்பு கொண்டிருக்கிறார்கள்; கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

தமிழ் எழுத்துகளில் செய்யப்படும் மாற்றம் தமிழகத் தமிழர்களையும் அயலகத் தமிழர்களையும் அன்னியப்படுத்திவிடக்கூடும்.

தமிழ்மொழியிலிருந்து பிரிந்து இன்று கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு என பல மொழிகள் உருவாகி, மொழி வழியாகத் தனித்தனி இனமாகி பிறகு தமிழுக்கும் தமிழருக்கும் பகையாகி இருக்கின்ற பரிதாப நிலைமை போதாதா?

உலகத் தமிழர்களை நாடுவாரியாக சிறுபான்மை இனமாகப் பிரித்துப்போட்டு சிதறடிக்கும் சூழ்நிலை நமக்குத் தேவையா?


உலகத் தமிழர்கள் சிந்திப்பார்களா?

Thursday, January 07, 2010

தமிழ் எழுத்து மாற்றம்: சீர்திருத்தமா? சீரழிப்பா? (2)



தமிழ் எழுத்துகளில் இருக்கும் இகர, ஈகார, உகர, ஊகார எழுத்துகளில் மாற்றங்களைச் செய்வதற்கு சில தரப்பினர் முயன்று வருவது குறித்து கடந்த இடுகையில் எழுதி இருந்தேன். இந்த எழுத்து மாற்றத்தைச் செய்வதற்கு முன்மொழியப்படும் எழுத்து அமைப்பு பற்றியும் விளக்கி எழுதியிருந்தேன். மேலும், இந்த மாற்றத்தினால் தமிழ்மொழிக்குத் துளியளவு நன்மையும் கிடையாது என்பதையும் எழுதிருந்தேன். (அதனைப் படிக்க இங்கு சொடுக்கவும்)

இந்தத் தொடரில், தமிழ் எழுத்துகளை மாற்றி அமைக்கும் நோக்கத்தில் முன்னைக்கப்பட்டுள்ள இன்னுஞ்சில முன்மொழிவைப் (Suggestion) பற்றி அறிந்துகொள்ள உங்களை அழைக்கிறேன்.

இன்று தமிழ் எழுத்துச் சீர்த்திருத்த மேதைகளின் கண்களை அதிகம் உறுத்துவது உகர, ஊகார எழுத்துகள்தாம். அதனால், இவ்விரு வரிசை எழுத்துகளை மாற்றி அமைக்கவே முயற்(சூழ்ச்)சிகள் நடைபெற்று வருகின்றன.
அவற்றை எப்படி மாற்றி அமைக்கலாம் எனச் சீர்த்திருத்த மேதை ஒருவர் சொல்லியிருக்கும் எழுத்து வடிவங்கள் கீழே உள்ளன.

மாதிரி 1:-
இன்னொரு ஆய்வாளர், தமிழ் மற்ற மொழிகளுக்கு இணையாகச் செயல்பட வேண்டுமானால் கீழே உள்ளபடி தமிழ் எழுத்துகளை மாற்றி அமைக்கலாம் என முன்மொழிகிறார்.

மாதிரி 2:

இப்படியாக, ஆளாளுக்குத் தமிழ் எழுத்துகளை மாற்றி அமைக்க முனைந்தால், தமிழ் வரிவடிவத்தின் நிலைமை என்னவாகும் என்று எண்ணிப்பாருங்கள்?

நீண்ட காலத்தில் தமிழ்மொழிக்கு ஏற்படப்போகும் விளைவுகளை ஆராய்ந்து பாருங்கள்?

இந்தச் சூழலில், தமிழ்மொழியில் புதிய எழுத்து மாற்றத்தை அறிமுகப்படுத்த விரும்பும் சிலர், மிகவும் நாசுக்காக சில வரலாறுக் காரணங்களை மேற்கோள் காட்டுகின்றனர். அவை:-

1)தமிழ் எழுத்துகள் பல நூற்றாண்டுகளாக மாற்றத்திற்கு உள்ளாகி வந்துள்ளன.

2)வீரமாமுனிவர் எகரத்திலும் ஒகரத்திலும் (எ, ஏ, ஒ, ஓ) மாற்றத்தைச் செய்திருக்கிறார்.

3)தந்தை பெரியார் காலத்தில் செய்யப்பட்ட எழுத்து மாற்றம் இன்று நடைமுறையில் பயன்படுத்தப்படுகிறது. (லை, ளை, றா, றொ, றோ, னா, னை, னொ, னோ, ணை, னொ, னோ)

மேலே சொல்லப்பட்டுள்ள எழுத்துச் சீர்திருத்தங்கள் தமிழ்மொழியில் ஒரு செப்பமான கட்டமைப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன. இனியும் எந்தவித சீரமைப்போ மாற்றமோ தேவையில்லாத அளவுக்கு இன்று தமிழ்மொழி வடிவம் பெற்றுவிட்டது எனலாம். தற்போது இருக்கும் தமிழ் வரிவடிவங்கள் தகவல்தொழில்நுட்ப உலகத்திலும் எந்தவித சிக்கலும் இல்லாமல் பயன்படுத்தப்படுகின்றன.

ஆக, இனியும் தமிழைச் சீர்த்திருத்த வேண்டிய தேவையும் அவசியமும் இருப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும், சிலர் எழுத்து மாற்றத்தை வலிந்து செய்ய விரும்புகிறார்கள் என்றால், அதில் ஏதோ சில மறைமுக நிகழ்ப்பு (Hidden Agenda) அல்லது கமுக்கத் திட்டம் இருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது.

அப்படி ஏதும் இருக்குமானால், அது கண்டிப்பாக கீழே கூறப்பட்டவையாகவோ அல்லது அவற்றுக்குத் தொடர்புடையதாகவோதான் இருக்க முடியும். அவை:-

1)நீண்ட காலத்தில் தமிழின் இருப்பை மழுங்கடித்தல்.

2)தமிழ்மொழியின் தனி அடையாளத்தைச் சிதைத்தல்.

3)தமிழ் நெடுங்கணக்கின் செவ்வியல் அமைப்பைச் சின்னபின்னப்படுத்துதல்.

4)தமிழ் வரிவடிவத்துக்கே உரிய தனி எழுத்தமைப்பை அழித்தொழித்தல்

5)தமிழ் எழுத்துகள் தனி எழுத்துகள் அல்ல. மாறாக வடமொழி எழுத்துகளிலிருந்து திருந்தவை என்ற ஒரு தோற்றத்தை எதிர்காலத்தில் பரப்புதல்.

6)பழைய தமிழ் கருவூலங்களை படிக்க முடியாமல் செய்தல்.

7)தமிழின் தொன்மையில் ஐயத்திற்குரிய பிறழ்ச்சிகள் எதிர்காலத்தில் உண்டாவதற்கு வழியமைத்துக் கொடுத்தல்.

8)தமிழ் இலக்கண, இலக்கிய, அறிவு, பண்பாட்டு, வரலாற்றுச் செல்வங்கள் எதிர்காலத் தலைமுறைக்குச் சென்று சேருவதைத் தடுத்தாட்கொள்ளுதல்.

9)தகவல்தொழில்நுட்பம், கணினி, இணையம் சார்ந்த துறையில் தமிழ்மொழி அடைந்துவரும் வேகமான முன்னேற்றங்களை முறித்துப்போடுதல்.

10)நாளைய மின்னணுவியல் ஊழியில் தமிழ்மொழிக்கு எந்தவொரு இடமும் கிடைத்துவிடக்கூடாது என்பதை உறுதிபடுத்துதல்.

இப்படி இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஆனால், இவற்றைப்பற்றி எல்லாம் சிறிதுகூட கவலையே படாத எழுத்துச் சீர்திருத்த மேதைகள் சிலர் தமிழ் எழுத்துகளை மாற்றியே ஆகவேண்டும் என்று பல வழிகளில் முயன்று வருவதாக அறியப்படுகிறது.

அதற்கு ஏற்றாற்போல, கணினி உலகம், தகவல் தொழில்நுட்பம், அறிவியல் பார்வை, தமிழ் கற்றல், தமிழ் வளர்ச்சி, எழுத்துச் சீர்மை என்று பல பூதாகரமான சொல்லாடல்களைப் பயன்படுத்தி ஆய்வுகள் என்ற பெயரில் நுனிப்புல் மேய்வுகளை வழங்கி தமிழ் மக்களைக் குழப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு உலகம் முழுவதும் உள்ள தமிழ் அமைப்புகள், தமிழ் நல்லறிஞர்கள், தமிழ்ப் பற்றாளர்கள் குரல் கொடுக்க வேண்டும் – கண்டனங்களைத் தெரிவிக்க வேண்டும்.

தமிழ் எழுத்து மாற்றம் தேவையற்றது என்பதைத் தக்க சான்றுகளோடு நிறுவ வேண்டும்.

தமிழ் வரிவடிவத்தை மாற்றுவதற்கு முன்னெடுக்கப்படும் எந்தவொரு நிகழ்ப்பையும் (Agenda) முறியடித்துப்போட வேண்டும்.

தொடர்பான செய்திகள்:-

Monday, January 04, 2010

தமிழ் எழுத்து மாற்றம்: சீர்திருத்தமா? சீரழிப்பா? (1)


தற்போது நடப்பில் இருக்கும் தமிழ் எழுத்துகளை மாற்றி அமைப்பதற்குச் சிலர் புறக்கதவு வழியாகத் தீவிரமாக முயன்று வருவதாகச் செய்திகள் அடிபடுகின்றன.

“இவ்வாண்டு சூன் 23-27 வரை தமிழகம், கோவையில் நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டில் இது குறித்த ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. கலைஞர் கருணாநிதி புதிய எழுத்துச் சீர்திருத்தம் பற்றி அறிவிப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் ஓசையின்றி நடக்கின்றன.” என்றெல்லாம் தகவல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வந்துகொண்டிருக்கின்றன.

செம்மொழி மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவில் முக்கியப் பொறுப்புகளை வகிக்கும் சிலர் தங்களின் ஆளுமையையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி தமிழ் எழுத்துகளில் புதிய மாற்றங்களைச் செய்ய முனைவதாகவும் கேள்விப்படுகிறோம்.

இவர்களின் இந்தத் தனிப்பட்ட நிகழ்ப்பு (Personal Agenda) பல ஆண்டுகளாகத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இருந்தாலும், நற்றமிழ் அறிஞர் பெருமக்கள் சிலருடைய கண்டிப்பான எதிர்ப்புகளினால் தமிழ் எழுத்தை மாற்றும் முயற்சி மண்ணைக் கௌவிக்கொண்டு இருக்கிறது.

ஆனால், இப்போது தமிழ் செம்மொழி மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவில் இவர்கள் இடபெற்றுவிட்ட நிலையில்..; தமிழக முதல்வருக்கு மிகவும் அணுக்கமானவர்கள் ஆகிவிட்ட நிலையில்.. வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல, மெல்ல மெல்ல தமிழ் எழுத்துச் சீர்த்திருத்த நிகழ்ப்பை மீண்டும் தூசுதட்டி கையில் எடுத்துள்ளனர்.

இதனை முன்கூட்டியே அறிந்துகொண்ட நல்லறிஞர்கள் இந்தப் புல்லறிவுத் திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கத் துணிந்துவிட்டனர். இந்தச் சிக்கல் இன்னும் பெரிதாக வெடிக்காவிட்டாலும் நீறு பூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டிருக்கிறது.

இது இம்மாட்டில் நிற்க, இந்தப் புதிய எழுத்து மாற்றம் என்பது என்ன? எதை மாற்றப் போகிறார்கள்? ஏன் மாற்றப் பார்க்கிறார்கள்? தமிழ் எழுத்து மாற்றம் தமிழைச் சீர்படுத்துமா? அல்லது சீரழிக்குமா? என்பதை ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

இன்று தமிழில் நாம் பயன்படுத்திவரும் 247 எழுத்துகளில், ஏற்கனவே பல காலக்கட்டங்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வீரமாமுனிவர் காலத்திலும் பின்னர் அண்மை நூற்றாண்டில், பெரியார் காலத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது வரலாறு.


ஆனால் இப்போது, சிலர் புதிதாகச் செய்ய விரும்பும் மாற்றங்கள் தமிழ் எழுத்து அமைப்பில் பூதாகரமான சிதைவை ஏற்படுத்துகின்றன என்று நற்றமிழ் அறிஞர்கள் கருதுகின்றனர். அதனைப் படிப்படியாகக் காண்போமா?

இப்போது சீர்த்திருத்தம் என்ற பெயரில் மாற்றப்பட வேண்டிய எழுத்துகளாக இகர - ஈகார, உகர – ஊகார எழுத்துகள் அடையாளங் காணப்பட்டுள்ளன.

காரணம், இவை நான்கும் வெவ்வேறு வடிவங்களில் இருக்கிறதாம். குறிப்பாக, உகர ஊகார எழுத்துகளை எழுதுவதற்கு நிறைய குறியீடுகளை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமாம்.

கவனிக்க:-

1)கு, டு, மு, ரு, ழு, ளு –இந்த 6 உகரங்களில் கீழ்நோக்கிச் சுழிக்க வேண்டும்.

2)ங, சு, பு, யு, வு –இந்த 5 எழுத்துகளில் கீழ்நோக்கி ஒரு கால் இட வேண்டும்.

3)ஞு, ணு, து, நு, லு, று, னு –இந்த 7 உகரங்களில் கீழே அரை சுற்றுவந்து மேல்நோக்கி கோடு ஏற்ற வேண்டும்.

இப்படியாக உகர எழுத்துகள் ஒரு சீர்மையில் இல்லாமல், பல்வகைப்பட்டு இருக்கின்றனவாம். ஊகாரமும் இப்படியேதானாம். ஆகவேதான், இவற்றைச் சீரமைத்து ஒரே அமைப்பில் எழுத வேண்டுமாம். அதற்காகக் கீழே உள்ளது போன்ற குறியீடுகளை பயன்படுத்த வேண்டுமாம்.

மேலே படத்தில் காட்டப்பட்ட குறியீடுகளைப் பயன்படுத்தினால், அதிகமான எழுத்து வடிவங்களை நினைவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் போகுமாம். குழந்தைகள் வெகு எளிதாகத் தமிழ் எழுத்துகளைப் படித்துக்கொள்வார்களாம். தமிழ் எழுத்துகளை எழுதப் பயன்படும் குறியீடுகளின் எண்ணிக்கையைக் குறைத்துவிடலாமாம்.

எப்படி என்கிறீர்களா? இதோ இப்படித்தானாம்.

(மாற்றி அமைக்கப்பட்ட இகர, ஈகார உகர, ஊகாரங்கள்)


இந்தப் புதிய மாற்றத்தினால், தமிழ்மொழிக்குப் பெரிதாக ஏதும் பயனுண்டா என்று கேட்டால் இல்லை! இல்லை! இல்லை! என்பதே பதில். ஆனால், இதனால் மேலே சொன்னது போன்ற சில நன்மைகள் உண்டு என்று சிலர் வாதிடுகின்றனர். அவர்களுடைய வாதங்கள் ஏற்புடையதாகத் இல்லை என்பது மட்டுமல்ல அறிவுடைமையானதும் அல்ல.

அவர்களின் வாதங்களுக்கு நாம் சில எதிர்வாதங்களை வைக்க முடியும்.

1)அதிகமான எழுத்து வடிவங்களை நினைவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் போகும்.

=>இத்தனை காலமும் அடிப்படை எழுத்துகளாக தமிழில் 30 மட்டுமே இருந்தாலும், நெடுங்கணக்கில் உள்ள 247 எழுத்துகளையும், அவற்றுக்குரிய வடிவங்களையும் பல்லாயிரம் கோடி தமிழ் மக்கள் எந்தவொரு சிறு சிக்கலும் இன்றி படித்தும் எழுதியும் நினைவில் வைத்தும் வந்திருக்கிறோமே எப்படி?

=>பிற்பட்ட காலத்து மக்களே இவற்றைப் படிக்கவும் எழுதவும் நினைவில் வைத்துக்கொள்ளவும் முடிந்திருக்கிறது என்றால், அறிவும் ஆற்றலும் நுட்பமும் நிரம்ப இருக்கும் தற்கால மக்களாலும் எதிர்கால மக்களாலும் முடியாதா என்ன?

2)குழந்தைகள் வெகு எளிதாகத் தமிழ் எழுத்துகளைப் படித்துக்கொள்வார்கள்.

=>எளிதாகப் படித்துக்கொள்ளுதல் என்பது கற்பித்தலையும் கற்றலையும் சார்ந்ததே அன்றி எழுத்துகளைச் சார்ந்திருப்பது அல்ல. அப்படிப் பார்த்தால், தமிழைவிட அதிகமான எழுத்துகளை வைத்திருக்கும் சீனர்களும், கொரியர்களும், சப்பானியர்களும் கல்வியில் தமிழர்களை விடவும் பின்தங்கி இருக்க வேண்டும் அல்லவா?

=>சீனர்களும் கொரியர்களும் சப்பனியர்களும், தமிழறிஞர்கள் என்று சொல்லிக்கொண்டு தமிழைச் சீர்படுத்த துடியாய் துடிப்பவர்களைவிட பல மடங்கு துடிதுடித்து அவர்கள் மொழியைத் திருத்தியிருக்க வேண்டுமல்லவா?

3)தமிழ் எழுத்துகளை எழுதப் பயன்படும் குறியீடுகளின் எண்ணிக்கையைக் குறைத்துவிடலாம்.

=>இற்றைக் காலத் தொழிநுட்பத்தின் குழந்தையாகிய கணினியிலும் கைப்பேசியிலும் தமிழ்க் எழுத்துகளை எழுதுவதில் பாரிய சிக்கல் ஏதுமில்லை என்ற சூழலில் எழுத்துக் குறியீடுகளைக் குறைக்க வேண்டியதன் தேவையும் அவசியமும் என்ன?

=>குறியீடுகளைக் குறைப்பதனால் தமிழ்மொழியில் ஏற்படப் போகும் ஆக்கங்கள் – வளர்ச்சிகள் என்னென்ன?

=>குறியீடுகளைக் குறைக்கிறோம் என்று சொல்லி, தமிழ் எழுத்துகளின் தனித்த அடையாளத்தைச் சிதைப்பது முறைதானா?

=>எழுத்துகளை மாற்றி அமைத்துவிட்டால் அதனை மக்கள் உடனே புரிந்துகொண்டு சரளமாகப் படித்துவிடவோ அல்லது எழுதிவிடவோ முடியுமா?

=>எழுத்துகளை மாற்றி அமைத்துவிட்ட பிறகு, பழைய எழுத்து முறையில் எழுதப்பட்ட அறிவுக் களஞ்சியங்களைப் படிப்பது எப்படி?

=>கணினி, கைப்பேசி தொழில்நுட்பத்திற்கு ஏற்ப புதிய எழுத்து வடிவங்களைச் செய்வது யார்? எப்படி? எப்போது?

இப்படியாக பல கேள்விகளுக்கு எழுத்துச் சீர்திருத்த மேதைகள் இன்னும் பதில்கள் சொல்லியப்பாடில்லை. ஆனால், பாத்திரமே இல்லாமல் பாலைக் காய்ச்சத் துடிக்கிறார்கள்.

இப்போதைக்கு இந்த மட்டில் நிறுத்தலாம் என எண்ணுகிறேன். தமிழ் எழுத்து மாற்றம் குறித்து என்னுடைய புரிதலை இங்கு நினைக்கிறேன். இதில், மேலும் தெளிவு வேண்டின் விளக்குவதற்கு அணியமாக(தயார்) உள்ளேன். இதில், மாற்றுக் கருத்துகள் உடையவர்கள் தெரிவிக்க வேண்டுகிறேன்.

இதுபற்றி எழுத இன்னும் செய்திகள் கிடக்கின்றன. அவை நமக்கு வயிற்று எரிச்சலை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, வாய்விட்டுச் சிரிக்க வைக்கின்றன. ஆய்வு என்ற பெயரில் அப்படியெல்லாம் எழுதியிருக்கிறார்கள்.

அதைப்பற்றி, அடுத்த இடுகையில் இன்னும் தொடர்வேன்.

தொடர்பான இடுகை:-

Sunday, January 03, 2010

செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டேன்:- துணை முதல்வர்


இந்தியாவில் நடைபெறவிருக்கும் பரவசி மாநாட்டிலும் செம்மொழி மாநாட்டிலும் கலந்துகொள்ளுமாறு மலேசியா, பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த அழைப்புகளை ஏற்றுக்கொள்ள அவர் மறுத்து விட்டார்.

“ஈழத்தமிழர்களுக்கு துரோகமிழைத்த இந்தியாவின் பரவசி மாநாட்டையும் கருணாநிதியின் செம்மொழி மாநாட்டையும் நான் புறக்கணிக்கின்றேன்”, என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி கூறினார்.


ஈழத் தமிழர்களின் போராட்டத்தை அழிப்பதற்கு இந்தியா இதர நாடுகளுடன் சேர்ந்துகொண்டு செய்த துரோகத்தை எந்த தமிழனும் மன்னிக்க மாட்டான்.

“தமிழீழ போராட்டத்தை அடக்குமுறையின் மூலம் ஒடுக்க சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளோடு ஒன்றாக இணைந்து இந்தியா மாபெரும் துரோகம் புரிந்துள்ளது. ஈழ தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை ஒடுக்குவதில் இந்தியா ஆற்றிய பெரும் பங்கை எந்த ஒரு உலகத்தமிழனும் மன்னிக்க மாட்டான்.

இலங்கையில் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலையை ஆதரித்த இந்திய அரசு ஏற்பாடு செய்யும் இந்த மாநாட்டில் நான் கலந்துக்கொண்டால், இந்திய அரசின் செயல்பாடுகளுக்கு நானும் உடந்தையாக இருந்ததாக ஆகிவிடும். ஆகவே இந்த பரவசி மாநாட்டை நான் புறக்கணிக்கிறேன்”, என்றார் இராமசாமி.

செம்மொழி மாநாட்டிலும் கலந்துகொள்ளப் போவதில்லை

தமிழ் நாட்டில் நடத்தப்படவிருக்கும் செம்மொழி மாநாட்டிலும் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.


“தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்திருக்கும் செம்மொழி மாநாட்டிலும் நான் கலந்துக்கொள்ளப் போவதில்லை; காரணம், இந்திய நடுவண் அரசு செய்த துரோகத்திற்கு உடந்தையாக இருந்தவர் இந்த தமிழக முதல்வர்”, என்றார் இராமசாமி.

கருணாநிதி ஏற்பாடு செய்யும் இந்த செம்மொழி மாநாட்டினால் உலக தமிழர்களுக்கு எந்தவோர் பலனும் ஏற்படப்போவதில்லை என்று அவர் மேலும் கூறினார்.

இன்று இது போன்ற மாநாடு அவசியமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். “பக்கத்து நாட்டில் தமிழர்கள் துடிக்க, துடிக்க படுகொலை செய்யப்பட பொது, தமிழுணர்வோடு எதுவும் செய்யாமல் இருந்துவிட்டு, இன்றும் அகதிகள் முகாமில் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த செம்மொழி மாநாடு அவசியமான ஒன்றா?”, என்று அவர் வினவினார்.

“கருணாநிதி நடத்தும் இந்த செம்மொழி மாநாட்டில் கலந்துக்கொண்டால், தமிழர்களின் வாழ்வுரிமை போராட்டத்தை மறந்து விடுவது போன்றதாகி விடும், ஆகையால், செம்மொழி மாநாட்டை புறக்கணிக்கிறேன்”, என்றாரவர்.

உலக தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்கிறார்

செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ள மறுத்து விட்ட பினாங்கு மாநில துணை முதல்வர் கோவையில் நடபெறவிருக்கும் உலக தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்ளப்போவதாக கூறினார்.


மலேசியாவில் வாழும் இனமானமுள்ள தமிழர்கள், உலக தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் பெரும் திரளாக கலந்துக்கொண்டு உலக தமிழினத்தின் ஒற்றுமையைப் புலப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

“மலேசிய தமிழர்களான நாம், ஈழத் தமிழ் மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தில் கொண்டுள்ள கரிசனையை வெளிப்படுத்தும் அதேவேளை, ஈழத்து விடுதலை போரை கசப்பான முடிவுக்குக் கொண்டு சென்ற இந்தியாவின் துரோகத்தைக் கண்டிப்பாக மறக்கவோ, மன்னிக்கவோ கூடாது”, என்பதை இராமசாமி வலியுறுத்தினார்.

Friday, January 01, 2010

2010இல் தமிழ் எழுத்தைச் சீரழிக்க முயற்சியா?


தலைப்பைப் பார்த்ததும் பலருக்கும் பகீரென்று ஆகியிருக்கும். இப்படி ஒரு செய்தியை மின்னஞ்சல் வழியாக அறிய நேர்ந்தபோது எனக்கும் அப்படித்தான் இருந்தது.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவையில் 2010 சூன் 23 முதல் 27 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாநாடு குறித்து உலகத் தமிழ் அறிஞர்களிடையே பலவகைப்பட்ட கருத்துகள் நிலவி வருகின்றன. அதன் பின்னணியில் நிழலாடுகின்ற அரசியலைப் பற்றியெல்லாம் இங்கு நான் எழுத வரவில்லை.

ஆனால், இந்த மாநாட்டில் அறிஞர் பெருமக்களைக் கூட்டி, தமிழக முதல்வர் அவர்களின் தலைமையில் தமிழ் எழுத்துகளில் சீர்திருத்தம் செய்யப்பட உள்ளதாகச் செய்திகள் கசிந்துள்ளன. இது குறித்த மின்மடல்கள் தற்போது உலா வந்துகொண்டிருக்கின்றன. அப்படியான மின்மடல்கள் சில எனக்கும் வந்திருந்தன.



தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தம் பற்றி அதிகாரப்படியான அறிவிப்பு செய்யவதற்கான ஏற்பாடுகள் மிக மும்முரமாக நடைபெறுவதாக அந்த மின்மடல்கள் தெரிவிக்கின்றன.

தமிழுக்கு நல்லது செய்வது போல நயவஞ்சகமாகத் தமிழ்மொழியின் எழுத்துகளில் சீரமைப்பு செய்து தமிழை மெல்ல சீரழிப்பதற்குச் சிலர் தீவிரமாக செயல்படுவதாக எனக்கு வந்த மின்மடல்கள் எச்சரிக்கை செய்கின்றன.

தமிழுக்கு எதிராக முளைக்கின்ற எந்தவொரு கீழறுப்புச் செயலையும் முறித்துப்போட்டுத் தமிழைத் தமிழாக வாழவைக்கும் பொறுப்பும் கடப்பட்டும் தமிழக அறிஞர்களுக்கு எந்த அளவுக்கு இருக்கிறதோ, அதற்குச் சற்றும் குறையாத கடமையுணர்வும் காப்புணர்வும் உலகத் தமிழர்களுக்கும் இருக்கிறது.

எனவே, தமிழைத் தற்காக்கவும் மீட்டெடுக்கவும் உலகமெங்குமுள்ள தமிழ் அறிஞர்களும் பற்றாளர்களும் உணர்வாளர்களும் ஏன் ஓட்டுமொத்தத் தமிழர்களுமே அணிதிரண்டு குரல்கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது.

இந்த உணர்வின் உந்துதலினால், எனக்கு வந்த ஒரு மின்மடலை இங்கே எல்லாருடைய பார்வைக்காகவும் சிந்தனைக்காகவும் வெளியிடுகின்றேன்.

"நெருப்பில்லாமல் புகையாது" என்பதால் இந்த விடயம் குறித்து பதிவிட துணிந்தேன். இதன் தொடர்பிலான செய்தி அறிந்தவர்கள் மேலதிக தகவல்களை வழங்குமாறு வேண்டுகிறேன்.

தமிழ் எழுத்துகளில் செய்யப்படவுள்ள சீர்த்திருத்தங்கள் பற்றிய விவரங்கள் கிழே இணைப்புகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை அமைதியாகப் படித்துப் பார்த்து உடனே செயல்படுமாறு தமிழுறவு தந்த உரிமையில் கேட்டுக்கொள்கிறேன். -(சுப.ந)

**************************
அன்புடையீர்,வணக்கம்.

இது ஒரு அவசர மடல்.

தமிழ் அறிஞர்களாக நம்பப்படும் சிலர், தமிழ் எழுத்துக்களில் இகர-ஈகார-உகர-ஊகார உயிர்மெய் வரிசைகளில் உள்ள எழுத்துக்கள் அனைத்தையும் சீர்திருத்தம் என்ற பெயரில் படுகொலை செய்ய பலகாலமும் முயன்று வந்திருக்கின்றனர்.

நானும் இதனைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டு மடற்குழுக்களில் வாளாவிருந்து விட்டேன்.

அவர்கள் கருணாநிதியின் ஆட்சி காலத்திற்குள் அவரை வசப்படுத்தி எப்படியும் செய்து விட முனைந்து வருகிறார்கள். அவர்களின் முயற்சிக்குப் பன்னாட்டு அறிஞர்களின் ஆதரவையும் நரித்தனமாகப் பெற்று வருகிறார்கள்.

சிங்கப்பூர் அறிஞர்கள் ஆதரவு நல்கி விட்டார்கள். தமிழக அறிஞர்களுக்கு முதுகில் இருப்பது எலும்பல்ல - நீளமான புல்; ஆதாலால் செந்நாப்புலவன் எல்லாரும் வாயைத் திறந்து அவர்களின் நலனைக் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை.

ஆகவே, பன்னாடு தழுவிய எதிர்ப்புக் குரல் இதற்கு எழுப்பப் பட வேண்டும். தற்போது செம்மொழி நடத்த இருக்கும் செம்மொழி மாநாட்டில் எழுத்துச் சீர்திருத்தத்திற்கு ஆதரவு திரட்டி தீர்மானம் போட முயற்சிகள் எடுத்து வருகிறார்கள்.

இதற்கு, பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனை எதிர்த்து பலர் மறுப்புக் கட்டுரைகள் படைக்கிறார்கள். இந்தப் புதிய எழுத்துச் சீர்திருத்தம் தமிழின் தனி அடையாளத்தை அழித்துவிடும் என்பதே பலருடைய எண்ணமாக இருக்கிறது.

எனவே, தாங்களும் தங்கள் நாடு, மாநிலம் சார்பில் ஒரு எதிர்ப்புக் கட்டுரையைப் படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கருணாநிதி தனக்காக நடத்தும் செம்மொழி மாநாட்டில் எப்படி கலந்து கொள்வது என்று யானறிந்த பல தமிழாளர்கள் கருத்து கொண்டு பங்கு பற்றத் தயங்குகிறார்கள். எனக்கும் அவ்வச்சம் நீங்க நாள்களாயின.

ஆதலின், இவ்வளவு காலத்தாழ்வான அஞ்சல். நடப்பது ஒரு தமிழ் மாநாடு. அது எனது பணத்தில் 6 கோடி தமிழ் மக்களின் வரிப்பணத்தில் நடக்கிறது. என் வரிப்பணத்திலேயே என் இனத்தைப் படுகொலை செய்ய எல்லா உதவியையும் அரசாங்கங்கள் செய்தது போல, என் வரிப்பணத்திலேயே என் மொழியையும் படுகொலை செய்ய வலிமையான முயற்சிகள் நடக்கின்றன.

யார் நடத்துகிறார்கள் என்பதனைப் பார்க்க இதுவல்ல நேரம். களத்தில் இறங்கி கருத்துக்களோடு மோதி அவர்களின் எண்ணங்களை முறித்துப் போடவேண்டும்.

நண்பர்களே, http://www.ulakathamizhchemmozhi.org/ என்ற இந்தத் தளத்தில் கட்டுரையாளராக, எழுத்துச் சீர்திருத்த மறுப்புக் கட்டுரையாளராக ஒரு பதிவினை இட்டு வையுங்கள்.

தற்போதைக்குச் செய்ய வேண்டியது இதுதான். 31-சனவரிக்குள் தங்கள் கருத்துக்களைக் கூட்டி சுருக்கம் அனுப்புங்கள். 31-மார்ச்சு வரை இறுதிக் கட்டுரையை அனுப்ப காலம் இருக்கிறது.

கீழே கொடுத்துள்ள சுட்டிகளில் மொழிப்படுகொலைக் கட்டுரைகள் இருக்கின்றன. அவற்றை ஓர்ந்து பார்த்து தாங்களோ, தங்களின் சங்கத்தைச் சார்ந்தவர்களோ, அல்லது தாங்கள் அறிந்த சிந்தனையாளர் அல்லது அறிஞருக்கு இதனைச் சொல்லி கட்டுரை படைக்கச் சொல்லி அவர்களை மாநாட்டில் பங்கு பற்ற வையுங்கள்.

(தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தம் என்ற பெயரில் தமிழுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மாபெரும் சீரழிப்பு எப்படி இருக்கும் என்பது பற்றி முழு விவரங்கள் அறிய கீழ்க்காணும் இணைப்புகளைச் சொடுக்கவும்.)

(சீர்த்திருத்தம் செய்யப்பட்ட புதிய தமிழ் எழுத்துகளின் மாதிரி)

1)தமிழ் வரிவடிவச் சீரமைப்பு --- http://infitt.org/ti2000/papers/papersA.pdf (2000ஆம் ஆண்டு தமிழ் இணைய மாநாட்டில் படிக்கப் பட்டது)


2)தமிழ் எழுத்துச் சீரமைப்பு --- http://www.infitt.org/ti2003/papers/54_vckulan.pdf (2003ஆம் ஆண்டு தமிழ் இணைய மாநாட்டில் படிக்கப் பட்டது)

3)தமிழ் எழுத்து வடிவ மாற்றங்கள் --- http://infitt.org/ti2000/papers/papersA.pdf (2000ஆம் ஆண்டு தமிழ் இணைய மாநாட்டில் படிக்கப் பட்டது)


***************************
தமிழா ஒன்றுபடு - தமிழால் ஒன்றுபடு - தமிழுக்காக ஒன்றுபடு

Blog Widget by LinkWithin