Tuesday, February 26, 2008

மெய்ப்பாடு என்பது என்ன?


உள்ளத்தில் ஏற்படும் உணர்வுகள் உடலின் வழியாக வெளிபட்டுத் தோன்றும். அவ்வாறு ஊணர்வுகள் வெளிப்படும் விதமே மெய்ப்பாடு எனப்படுகிறது. மெய்ப்பாடு எட்டு வகைப்படும் என தமிழர்கள் கண்டனர். இதனைத் தொல்காப்பியம் தெளிவுற விளக்குகின்றது. பின்னாளில் இதே மெய்ப்பாட்டை வடநாட்டவர் ஒன்பதாக்கிக் கொண்டனர். அதனை அவர்கள் நவரசம் என்று பெயரிட்டு அழைத்தனர்.

3000 ஆண்டுகளுக்கும் பழமையான தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் எட்டு வகை மெய்ப்பாடுகளைப் பற்றி பின்வருமாறு விளக்குகின்றது.

நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி உவகை யென்று

அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப.

இந்த எட்டுவகை மெய்ப்பாடுகள் எவ்வெவ்வாறான வழிகளில் வெளிப்பட்டுத் தோன்றும் என காண்போம்.

1.நகை:- இது எள்ளல், இளமை, பேதமை, மடன் எனும் நான்கின்வழி தோன்றும்.

2.அழுகை:- இது இளிவு, இழவு, அசைவு, வறுமை எனும் நான்கின்வழி தோன்றும்.

3.இளிவரல்:- மூப்பு, பிணி, வருத்தம், மென்மை எனும் நான்கின்வழி தோன்றும்.

4.மருட்கை:- இது புதுமை, சிறுமை, ஆக்கம் எனும் நான்கின்வழி தோன்றும்.

5.அச்சம்:- அணங்கு, விலங்கு, கள்வர், இறை எனும் நான்கின்வழி தோன்றும்.

6.பெருமிதம்:- இது கல்வி, தறுகண், இசைமை கொண்ட இவை நான்கின்வழி தோன்றும்.

7.வெகுளி:- உறுப்பறை, குடிகோள், அலை, கொலை எனும் நான்கின்வழி தோன்றும்.

8.உவகை:- செல்வம், புலன், புணர்வு, விளையாட்டு எனும் நான்கின்வழி தோன்றும்.

உள்ளத்து உணர்ச்சிகளை உற்றுநோக்கியும் உணர்ந்துபர்த்தும் கண்டுபிடித்திருக்கும் தமிழர்களின் அறிவுக்கூர்மையும் மனநுட்பமும் நம்மை வியக்கச் செய்கிறன்றன. இத்தகைய நுட்பமான உணர்வுகள் இயற்கையிலேயே அமையப் பெற்ற தமிழ் மக்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது.



Saturday, February 23, 2008

சென்ற நூற்றாண்டை வென்ற தமிழ்


தமிழ் மக்கள் தோன்றிய காலத்தைக் குறிப்பிடும் பொழுது "கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தக் குடி" எனக் கூறப்படுகிறது. இது கற்பாறைகளைக் கொண்ட குறிஞ்சி நிலம் தோன்றிய பின்னும், காலப்போக்கில் மணலும் மண்ணும் நிறைந்த மருதநிலம் தோன்றிய காலத்திற்கு முன்னும் இருந்த காலத்தைக் குறிப்பிடுவதாகும். அந்தப் பழங்காலத்திலேயே தமிழ்க்குடியினர் புவியில் வீரமரபோடு வாழ்ந்திருந்தனர் என அப்பாடல் குறிப்பிடுகின்றது.

உலக மொழி ஆய்வாளர்கள் உலகின் முதல் தாய்மொழி தமிழாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கு இப்போது வந்துள்ளனர். மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் போன்ற பேரறிஞர்கள் தமிழே உலகின் முதல் தாய்மொழி என நிறுவியும் உள்ளனர்.

இந்த உண்மையை உலகம் ஏற்கும் காலம் நெருங்கிவந்துக் கொண்டிருக்கும் தருணத்தில் உலகின் உயர்தனிச் செம்மொழிகளில் ஒன்றாகத் தமிழை உலகமே ஏற்றுக்கொண்டுவிட்டது. மேலும், இலத்தின், கிரேக்கம், எகுபதியம், சமற்கிருதம் முதலான தொன்மொழிகளை விடவும் தமிழ் முந்தியது எனவும் கூறுவர். சென்ற நூற்றாண்டுகளில் தமிழின் தலைமையும் தொன்மையும் மற்றைய மொழிகளை விடவும் மேம்பட்டு இருந்ததற்கான சான்றுகளும் நிறைய உள்ளன.

1. முற்காலத்தில் சீன யாத்திரிகர் யுவாங் சுவாங் முதல் பிற்காலத்தில் ஜி.யு.போப், ரோபர்ட் கால்டுவெல் முதலான வேற்றுநாட்டினர்; வேற்று மதத்தினர்; வேற்று மொழியினர் ஆகிய பலரால் தமிழின் பண்பட்ட தன்மை போற்றிப் பாராட்டப்பட்டிருக்கிறது.

2. 1700 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்கள் மலாயாவை, கடாரத்தை (கெடா), சயாமை (தாய்லாந்து) கைப்பற்றி ஆட்சிசெய்துள்ளனர். முதலாம் குலோத்துங்க மன்னன் பர்மாவை (மியான்மார்) ஆண்ட செய்தியும், கரிகாலன் இலங்கையை கைப்பற்றி ஆண்ட செய்தியும் இலக்கியங்கள், கல்வெட்டுகள் வழியாக அறியப்படுகின்ற வரலாற்று உண்மைகளாகும்.

3. 1500 ஆண்டுகளுக்கு முன்னர் மலாக்காவை பரமேசுவரன் என்னும் மன்னனும் சிங்கப்பூரை நீல உத்தமன் என்னும் மன்னன் தம் துணைவியார் தாழைப் பூச்சூடி அரசியாருடன் ஆட்சிசெய்த வரலாற்றுப் பதிவுகள் உள்ளன.

4. 2000 ஆண்டுகளுக்கு முன் கிரேக்கர்கள் இந்தியாவைப் பற்றி எழுதியிருக்கும் வரலாற்றுக் குறிப்புகளில் பற்பல தமிழ்ப்பெயர்கள் காணப்படுகின்றன.

5. 2300 ஆண்டுகளுக்கு முந்தைய பிராமியக் கல்வெட்டுகள் தமிழ்மொழியில் எழுதப்பட்டுள்ளன. சிந்துநதிக்கரையில் (மொகஞ்சதாரோ அராப்பா) கண்டெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் பழந்தமிழில் எழுதப்பட்டுள்ளன. அவை இன்று அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளன.

6. 2400 ஆண்டுகளுக்கு முன்புள்ள வடமொழி இலக்கணப் பாணினி காலத்திலேயே தமிழில் "நற்றிணை" என்னும் நூல் தோன்றியிருக்கிறது.

7. 2800 ஆண்டுகளுக்கு முன்பு ரோமாபுரியை ஆண்ட ஏழாவது சாலமன் காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து தமிழ் வணிகர்கள் கப்பல்கள் வழியாக பண்டங்களைக் கொண்டுசென்று கிரேக்க நாட்டில் தமிழில் விலைபேசி விற்றுள்ளனர். அப்பொருள்கள் இன்றளவும் மேலை நாடுகளில் தமிழிலேயே குறிக்கப்படுகின்றன. அரிசி – "ரைஸ்", மயில் தோகை – "டோ கை", சந்தனம் – "சாண்டல்", தேக்கு – "டீக்கு", கட்டுமரம் – "கட்டமரன்", இஞ்சி – "ஜிஞ்சர்", ஓலை – "ஒல்லா", கயிறு – "காயர்" என வழங்கி வருகின்றன. இந்தச் சொற்கள் பிரெஞ்சு, ஆங்கில அகரமுதலிகளிலும் அவர்களின் சொற்களாகவே இடம்பெற்றுள்ளன.

8. 3000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழுக்கு இலக்கணம் சொல்லும் நூலான தொல்காப்பியம் தோன்றிவிட்டது. அதற்கும் முன்பே பல இலக்கண நூல்கள் இருந்த உண்மையைத் தொல்காப்பியமே கூறுகின்றது.

9. 3000ஆம், 5000ஆம், 9000ஆம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மக்களின் தாய்மண்ணாகிய குமரிக்கண்டத்தில் கடற்கோள்கள் (சுனாமி) ஏற்பட்டுள்ளன. இந்தக் குமரிக்கண்டத்தில் 49 நாடுகளும் 3 தமிழ்ச் சங்கங்களும் குமரி மலையும் பஃறுளி ஆறும் இருந்துள்ளன என்ற வரலாறுகள் கிடைத்துள்ளன.

இத்துணைச் சான்றுகளும் தமிழின் தொன்மையை வெள்ளிடை மலையாகக் காட்டுகின்றன. பழைமைச் சிறப்புடைய இனமாகிய தமிழினம் உலகில் வேறு எந்த இனத்திற்கும் குறைவுபட்ட இனமன்று. மாறாக, உலக மொழிகளுக்கும், பண்பாட்டுக்கும், நாகரிகத்திற்கும் முன்னோடியாக இருந்துள்ளது என்ற பெருமை கொண்டது தமிழினம்.

இந்த மொழிப் பெருமையையும் இனத்தின் பெருமையையும் வரலாற்றுச் சிறப்பினையும் உண்மையாகவே உணர்ந்துவிட்டால் உலகம் மதிக்கும் உன்னத இனமாகத் தமிழினம் உயர்வுபெறும்.

Saturday, February 09, 2008

ஊழிப் பேரறிஞர் ஞா.தேவநேயப் பாவாணர்


7-2-2008ஆம் நாள் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் 106ஆவது பிறந்தநாள். வாழ்ந்த காலம் முழுவதையும் தமிழுக்காக ஈகம் செய்து, தமிழ் தலைநிமிர தம்முடைய வாழ்க்கையை ஒப்படைத்துக்கொண்ட அந்த ஊழிப் பேரறிஞர் நினைவாக இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது.

கடந்த இருபதாம் நூற்றாண்டுத் தமிழறிஞர்களில் தனித்தன்மையானவர்; தலைமையானவர்; இன்னும் சொல்லப்போனால் தமிழுக்குப் பாடாற்ற எல்லாம் வல்ல இறைவனாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் எனலாம்.

23 உலகப் பெருமொழிகளில் இலக்கண இலக்கிய ஆராய்ச்சி அறிவும் 58 மொழிகளில் வேர்ச்சொல் ஆய்வறிவும் கொண்ட மாத்திறம் கொண்டவர்.

மொத்தம் 81 மொழிகளை அறிந்த பேரறிஞர் உலகத்திலேயே பாவாணர் ஒருவராகத்தான் இருக்க முடியும். அவர் நம்மினத்தில் பிறந்தவர்; ஒரு தமிழர் என்பது ஒட்டுமொத்த உலகத்தமிழர்களுக்கே பெருமையாகும்.

மேலை மொழிகளுக்கு மட்டுமே சொந்தாமாயிருந்த வேர்ச்சொல் ஆராய்ச்சி முறைமையக் கற்றித் தேர்ந்து தமிழில் வேர்ச்சொல் ஆய்வுகளை செய்ததவர். மேலைநாட்டவரே வியந்துநிற்கும் அளவுக்கு தமிழையும் மற்றைய உலக மொழிகளையும் நுணுகிநுணுகி ஆய்ந்தவர்.

வேர்ச்சொல்லாய்வுத் துறையில் கொண்டிருந்த தன்னிகரற்ற பேராற்றலால் உலக மொழி ஆய்வாளர்களையும் வரலாற்று அறிஞர்களையும் கலங்கடித்தவர்.

தமிழ் திரவிடத்திற்குத் தாய், தமிழ் ஆரியத்திற்கு மூலம், உலக முதல்மொழியும்(தமிழ்) முதல் மாந்தனும்(தமிழன்) தோன்றிய இடம் மறைந்த குமரிக்கண்டம் எனவாகிய முப்பெரும் உண்மைகளை எந்த வரலாற்று ஆசிரியரும் மறுக்கவியலாத அளவுக்கு மொழியியல் சான்றுகளுடன் நிறுவிக்காட்டியவர்.

உலகத்தின் முதல் தாய்மொழியாகிய தமிழ்மொழியே பல்வேறு காலங்களில் பல்வேறு மாறுதல்களை அடைந்து பல்வேறு மொழிக் குடும்பங்களாக மாறிப் பிரிந்து இருக்கிறது என்றும் உலக மக்கள் யாவரும் தமிழ்மொழியால் உறவினர்கள் ஆகின்றனர் என்றும் அறுதியிட்டுச் சொன்னவர்.

50 ஆண்டுகள் தொடர்ந்து மொழியாராய்ச்சி செய்து 35க்கும் மேற்பட்ட அரிதிலும் அரிதான ஆய்வியல் நூல்களை தமிழுக்கும் தமிழருக்கும் வழங்கியவர்.

7-2-1902இல் மண்ணுலகில் வந்துதித்த பாவாணர் என்னும் ஊழிப் பேரறிஞர் 1981 ஆம் ஆண்டு சனவரி 15 ஆம் நாள் இரவு 12:30க்கு தேவநேயர் இறைவனடி சேர்ந்தார். பாவாணரைப் போன்ற பேரறிஞர் ஒருவரைப் பெற்றதற்காக தமிழ்க்கூறு நல்லுலகம் என்றுமே பெருமையடையலாம்.

பாவாணரின் கண்டுபிடிப்புகளை உலகம் மதித்து ஏற்கும் பொற்காலம் கண்டிப்பாக மலரும். உலக உருண்டையின் மிகநீண்ட வரலாற்றில் பெரும்பகுதியைத் தமிழ்மொழி தன்னுள் கொண்டிருக்கும் உண்மை கண்டிப்பாக வெளிப்படும். அதுவரையில் பாவாணரின் புகழ் உலகத்தில் நிலவும்; அதன்பின்னர் உலகத்தின் உச்சியில் பாவாணரின் புகழ் மிளிரும்.

பாவாணர் இணைய இணைப்பு :


Friday, February 08, 2008

பல சமயத்தார் போற்றும் பைந்தமிழ்


உலகப் பெருமொழிகள் ஒவ்வொன்றும் ஏதேனும் ஒரு சமயத்தைச் சார்ந்திருக்கின்றன. மொழிக்கும் வேறு சமயம் வேறாக இருந்தாலும், மாந்தவியல் தொடர்பின் காரணமாகவும், புவியியல் தொடர்பின் காரணமாகவும், பழங்காலத் தொடர்பின் காரணமாகவும் சில மொழிகளுக்கும் சமயங்களுக்கும் ஆழமான உறவு ஏற்பட்டுவிட்டதைக் காணமுடிகிறது.

விவிலியம் எழுதப்பெற்ற இலத்தின்மொழி கிறித்துவத்திற்குத் தொடர்பான மொழியாக இருக்கின்றது. புத்தர் பேசிய பாலிமொழி புத்த சமயத்தோடு பிணைந்துள்ளது. அரபுமொழி இசுலாத்தின் மொழியாக ஆகியுள்ளது. அதுபோல், சமற்கிருதம் இந்துமதத்தின் மொழியாக வழங்குகிறது. மேற்குறித்த அத்தனை மொழிகளைப்போல் அல்லாமல், தமிழ்மொழி மட்டும் மாறுபட்டும் தனிச்சிறப்புப் பெற்றும் விளங்குகிறது. குறிப்பிட்ட எந்தவொரு மதத்தையும் அல்லது சமயத்தையும் சாராமல், அனைத்து சமயங்களுக்கும் பொதுவான மொழியாகவும் எல்லா மதத்தையும் அரவணைத்துப் போற்றும் மொழியாகவும் உலகப் பெருநெறிகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளும் மொழியாகவும் தமிழ்மொழி விளங்கிவருவது வியப்பளிக்கும் செய்தியாகும்.

பல சமயத்தைச் சார்ந்தோர் தங்கள் சமயத்தைப் போற்றிய அதே அளவீட்டில் ஒரு மொழியைப் போற்றியுள்ளார்கள் என்றால் அது தமிழ்மொழியாக மட்டும்தான் இருக்கமுடியும். இந்த மாபெரும் உண்மை தமிழ் இலக்கியங்களில் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அதற்கான சில சான்றுகள் பின்வருமாறு:-

1.வான்புகழ் கொண்ட தமிழர் மறையாம் திருக்குறள் எந்தவொரு சமயத்தையும் சாராமல் மிகமிகப் பொதுமையான முறையில் எழுதப்பெற்ற முந்துதமிழ் நூலாக விளங்குகிறது. திருக்குறள் தமிழ் எந்தவொரு சமயமதத்திற்கும் உட்பட்டு இயங்கவில்லை. உலகம் முழுவதற்கும் ஏற்றதாகிய திருவள்ளுவர் காட்டும் கடவுள்நெறி தமிழ்மொழியில் குறட்பாக்களாகப் பாடப்பெற்றுள்ளது.

2.வள்ளுவரின் கடவுள்நெறிக்கு இணையாக பொதுமையாக வைத்துச் சொல்லப்படும் தகுதியைக் கொண்டது சிலப்பதிகாரம். நெஞ்சை அள்ளும் இந்தச் சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகள். இவர் ஒரு சமயத்துறவியாவார். இதுபோலவே, சீவகச் சிந்தாமணியை அருளிய திருத்தக்க தேவரும் சமணரே ஆவார். வளையாபதியும் குண்டலகேசியும் கூட சமணக் காப்பியங்களே.

3.சிலம்போடு சேர்த்து இரட்டைக் காப்பியமாகப் போற்றப்படும் மணிமேகலை நூலை ஆக்கியவர் சாத்தனார். இவர் புத்த சமயத்தைச் சேர்ந்தவர்.

4.ஐஞ்சிறு காப்பிய நூல்களான சூளாமணி, உதயணன்காதை, நீலகேசி, நாககுமார காவியம், யசோதர காவியம் ஆகியவற்றை பாடியோரும் பௌளத்தரும் சமணருமே ஆவர்.

5.கம்பர் பாடிய கம்பராமாயணமும் வில்லிப்புத்தூரார் பாடிய மகாபாரதமும் வைணவ சமயத்தை வலியுறுத்தும் காபியங்கள். திருமால் பெருமை பாடும் நாலாயிரத் திவ்விய பிரபந்தங்களும் வைணவ வழிவந்த நூல்களே.

6.சிவ நெறியை போற்றவும் தமிழ்மொழியை அடிமை விலங்கிலிருந்து மீட்கவும் சேக்கிழார் பாடிய பெரிய புராணம் சைவ சமயக் காப்பியம். அதோடு, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், சுந்தரர் ஆகிய நால்வர் அருளிய தேவார திருவாசகத் திருப்பாடல்களும் பன்னிரு திருமுறைகளும் சைவ சமயம் சார்ந்தவை.

7.கிறித்துவ நெறிசார்ந்த தேம்பாவணி எனும் நூலை வீரமாமுனிவர் எனும் கிறித்துவப் பாதிரியார் வரைந்தார். அழகுத் தமிழில் ஏசுகாவியம் பாடிய கிருட்டிணப் பிள்ளை ஒரு கிறித்துவர்.

8.இசுலாமியக் கருத்துகளைச் சீறாப்புராணம் வழி தமிழில் வழங்கியவர் முகமதியச் சமயத்தவரான உமறுப் புலவர்.

இப்படி உலகின் முகாமையான சமயங்களைச் சார்ந்தவர்கள் பலரும் பெருமதிப்புடன் ஏற்றுக்கொண்ட மொழி தமிழாகும். தமிழ்ப் புலவோர்களும் சான்றோர்களும் தங்களின் சமயம் எதுவாக இருந்தாலும் அதற்கு நிகராகத் தமிழை ஏற்றுக்கொண்டு போற்றிவளர்த்துள்ளனர். சமய வேற்றுமைகளைக் கொண்டிருந்தாலும் தமிழால் ஒற்றுமையைப் பேணிவந்துள்ளனர்.

உலகம் யாவையும்... (தமிழமுது 1)

கடவுள்நெறியைப் போற்றி வாழ்ந்தவர்கள் தமிழர். தமிழரின் கடவுள் கொள்கையை பறைசாற்றும் அகப்புறச் சான்றுகள் மிக ஏராளம். தமிழரின் மறைநூலாகிய திருக்குறள் இறைமையை ஏற்றுப்போற்றும் நூலாக மிளிர்கிறது. திருவள்ளுவர் 'கடவுள் வாழ்த்து' அதிகாரத்தில் பத்துக் குறட்பாக்களில் இறைவனின் அருங்குணத்தையும் அருட்கொடையையும் ஆழ்ந்து விளக்கியுள்ளார். சிலப்பதிகாரம் பாடிய இளங்கோவடிகள் சூரியன், சந்திரன், மழை முதலான இயற்கைப் பொருளாக எல்லாம்வல்ல இறைமையை உணர்த்திப் பாடியுள்ளார். இவ்வாறாக, தமிழ் இலக்கியங்கள் பலவும் பரம்பொருளை வாழ்த்தி வணங்குகின்றன. அவ்வழியில், கவிச்சக்கரவர்த்தி கம்பரும் கடவுளின் பெருமையைப் பாடியுள்ளார். அந்தக் 'கடவுள் வாழ்த்துப்' பாடல் இதோ:-

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி வாவிளை யாட்டுடை யார்அவர்
தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே! (கம்பர்)

உலகங்கள் அனைத்தையும் தன்னந்தனியராக இருந்து படைத்தலும், தம் படைப்புகளாகிய ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான எல்லா உயிர்களையும் பரிவோடு காத்தலும், காத்தவற்றை அழித்தலும் ஆகிய முத்தொழில்களையும் ஒரு விளையாட்டாகவே செய்து கொண்டிருப்பவரான அந்த இறைவனே, எல்லா உலகங்களுக்கும் தலைவர் ஆவார். அந்தக் கடவுளிடமே நாங்கள் சரணடைவோம் என்பதாக இப்பாடல் கூறுகின்றது.

'உலகம் யாவையும்' என்ற அன்றைய கம்பரின் தொடர் இன்றைய அறிவியலை விளக்குவதாக உள்ளது. நாம் வாழும் உலகத்தையும் தாண்டி வேறு உலகங்கள் இருக்கக்கூடும் என்று இன்றைய ஆய்வாளர்கள் ஊகிக்கின்றனர். ஆனால், தமிழர்களோ அன்றே இந்த உண்மையை உணர்ந்துவிட்டனர் என்பதற்கு இப்பாடல் நற்சான்று. இறைவன் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலைத் தனியராகவே செய்கிறார் என்ற தமிழரின் கோட்பாட்டைக் கம்பரும் இப்பாடலில் வழிமொழிகிறார். (அமுது ஊறும்...)
Blog Widget by LinkWithin