Showing posts with label எழுத்துச் சீர்மை. Show all posts
Showing posts with label எழுத்துச் சீர்மை. Show all posts

Thursday, November 07, 2013

ஆங்கில எழுத்துருவில் தமிழ்? எதிர்வினை #1

“ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதி 
தமிழின் தொப்புள் கொடியை அறுக்காதீர்”


ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? என்னும் சிந்தனையை எழுத்தாளர் செயமோகன் ‘தி இந்து’ பத்திரிகை வழியாக முன்வைத்துள்ளார்.

செயமோகன் என்றாலே விவரம் அறிந்த தமிழர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும். அதிலும், இவர் போன்றோர்க்குப் பாரிய விளம்பரம் கொடுத்து தூபம் போட்டுத் துதிபாடும் இந்து பத்திரிகையும் சேர்ந்துகொண்டால்  குமட்டலுக்குச் சொல்லவா வேண்டும்?

செயமோகன் சொன்ன கருத்து தற்காலச் சூழலுக்குப் பொருந்தாது; நடைமுறைக்குச் சாத்தியமாகாது; செயல்பாட்டுக்கு ஒவ்வாதது; செயற்படுத்துவதற்கு நாதியற்றது; தமிழுக்கு முற்றிலும் எதிரானது; வளமிக்க இலக்கண இலக்கியங்களோடு திகழும் உயர்தனிச் செம்மொழியாம் தமிழுக்குத் தேவையற்றது என்று எடுத்த எடுப்பிலேயே மறுசுழற்சிக் கூடைக்குள் வீசி எறிந்துவிட்டு நம் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். அந்த அளவுக்கு தகுதரமற்ற ஒரு கருத்தை முன்வைத்திருக்கிறார் செயமோகன்.

இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று சிற்றறிவிற்கு எட்டிவை இவைதாம்:

1)    வழக்கமான அவருடைய கவனஈர்ப்பு உத்தி.
2)    அரிப்பு ஏற்பட்டால் தமிழை எடுத்து சொறிந்து கொள்ளும் போக்கு.
3)  தமிழையும் தமிழனையும் அவ்வப்போது சீண்டிப் பார்த்து சுகம் காணும் வக்கிர மனநிலை.

எது எப்படி இருந்தாலும் கருத்துக்குக் கருத்து என்கின்ற விவாத நடைமுறையை மதித்து இந்த எதிர்வினையைப் பதிவு செய்கிறேன்.

ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? இதற்கு வலுசேர்க்க அவர் முன்வைத்துள்ள வாதங்களில் சில இதோ:

1)இளைய தலைமுறை தமிழில் வாசிப்பதில்லை.
2)தாய்மொழிக் கல்வி இரண்டாம் மொழியாகக் கற்கப்படும் சூழல் உருவாகி வருவதால் தமிழ்மொழியில் கவனம் காட்டுவதில்லை.
3)இரண்டாம் மொழியாகக் கற்றுக்கொண்ட தமிழ் மாணவர் கைகளுக்கும் கருத்துக்கும் பழக்கமற்றதாக ஆகிவிடுகிறது.
4)இணையம், முகநூல் (ஊச்ஞிஞுஞணிணிடு) போன்றவற்றுக்காகக் கணினியில் தட்டச்சு செய்பவர்கள் அனைவருமே ஆங்கில எழுத்துகளிலேயே தட்டச்சு செய்துகொண்டிருக்கிறார்கள்.
5)ஆரம்பப் பள்ளி முதலே ஆங்கில எழுத்துகளில் தமிழைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
6)மலாய் போன்ற பல மொழிகள் இன்று ஆங்கில எழுத்துருக்களிலேயே எழுதப்படுகின்றன. அந்த மக்கள் ஆங்கிலம் கற்பது எளிதாகிறது .
7)வருங்காலத்துக்காக நம் எழுத்துருக்களை மாற்றிக்கொண்டால் அதில் பிழையில்லை என்றே படுகிறது.

(எழுத்தாளர் செயமோகன் எழுதிய முழுக் கட்டுரையை இங்கு வாசிக்கவும்.)

இந்தக் கட்டுரை வெளிவந்து, மக்கள் அதுகுறித்து சிந்திக்கவும் எதிர்வினையாடவும் தொடங்குவதற்குள், தமிழர்கள் தம்முடைய சிந்தனையை எவ்வாறு எதிர்கொள்வார்கள் என்று செயமோகன் இன்னொரு கட்டுரையில் முந்திக்கொண்டு சொல்லியிருக்கிறார்.

1)இத்தகைய ஒரு கருத்து உடனடியாக ‘தமிழை அழிக்கச் சதி’ என்ற கூச்சல் மூலமே எதிர்கொள்ளப்படும்.
2)‘உலகிலேயே சிறந்த’ மொழியாகிய தமிழை ‘அன்னியசக்திகள்’ அழிக்கமுயல்கிறார்கள் என்ற ஒரு பாவனையிலேயே நம் மொழிவெறியர்கள் காலம்தள்ளுகிறார்கள்.
3)மொழியை ‘எதிரிகளிடமிருந்து’ பாதுகாக்க முடிந்தவரை எல்லா இடத்திலும் கடுமையாக வசைபாடி கொந்தளிப்பார்கள்.
4)தனக்கு ஒவ்வாத அல்லது புரியாத எந்த ஒரு தரப்பைக் கேள்விப்பட்டாலும் உடனடியாகப் பொங்கி கொந்தளித்துக் கொப்பளிக்கும் கூட்டம்.
5)பழங்குடிக் கும்பலுணர்ச்சியை மட்டுமே வெளிப்படுத்தக்கூடியவர்கள்.

(அக்கட்டுரையின் மூலத்தை இங்கு வாசிக்கவும்)

செயமோகன் முன்வைத்திருக்கும் சிந்தனை பல்வேறு எதிர்வினைகளுடன் தற்பொழுது களமாடிக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து என் எதிர்வினைகளை முன்வைக்கவே இதனை எழுத வேண்டியதாயிற்று.

முதலில், தம் சிந்தனைக்கு வலுசேர்க்க செயமோகன் வைத்துள்ள வாதங்கள் மீதான எதிர்வாதங்களை முன்வைக்கின்றேன்.

1)    இளைய தலைமுறை தமிழில் வாசிப்பதில்லை என்பதை தமிழின் குறைபாடாகக் காட்டியிருப்பது பெரும் புரட்டாகும். கடந்த கால் நூற்றாண்டுக் காலத்தில் தமிழ்வழிக் கல்வியில் ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவாக இன்றைய இளைய தலைமுறை தமிழை வாசிக்கவும் தமிழோடு வாழவும் தயங்குகின்றனர். இது தலைமுறை குறைபாடே அன்றி தமிழின் குறைபாடு அல்ல. எந்த ஒரு மொழியும் பயிலப்படாமல் போவதற்கு அந்த மொழி மட்டுமே காரணமாகிவிடாது. அந்த மொழிக்குரிய ஆளுமை, பொருளியல் மதிப்பு, பண்பாட்டுத் தேவை, வாழ்க்கைக்குப் பயன் ஆகியவையே முதன்மைக் காரணிகளாகும். இவற்றை ஒரு மொழியால் தானே உருவாக்கிக்கொள்ள முடியாது. அம்மொழி சார்ந்த அரசோ அல்லது மக்களால் மட்டுமே இவற்றைத் திட்டமிட்டுக் கட்டமைக்க முடியும்.

2)    தாய்மொழிக் கல்விக்கு முதன்மைக் கொடுப்பதோடு, தமிழ்வழிக் கல்விக்குப் பிற மாநிலங்களைப் போல் தமிழ்நாட்டில் கட்டாயச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். தமிழ்வழிக் கல்வி கற்றவர்களுக்கே அரசுப் பணிகளில் முதலிடம் கொடுக்கப்பட சட்டம் இயற்ற வேண்டும். பிற மாநிலங்களில் குடியேறிய தமிழர்கள் அவ்வந்த மாநில ஆட்சி மொழிகளை மதித்துக் கட்டுப்பட்டு வாழ்வதைப் போல, தமிழ்நாட்டில் குடியேறிய பிறமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டின் ஆட்சிமொழியாகிய தமிழை மதித்து ஏற்று, கற்று, கட்டுப்பட்டு வாழும் நிலை உருவாக்கப்பட வேண்டும்.

3)    இரண்டாம் மொழியாகக் கற்கப்படும் சூழலில் மாணவர்களின் கைகளுக்கும் கருத்துக்கும் பழக்கமற்றதாகிப் போய்விடும் என்பது கல்வி உளத்தியல் அடிப்படையில் சரியான கருத்தன்று. தாய்மொழிக் கல்வியை மிக எளிதாகக் கற்றுக்கொள்ளும் ஆற்றல் குழந்தைகளிடம் இயல்பாகவே அமைந்திருக்கிறது. மேலும், குழந்தைகள் தாய்மொழி வழியாகவே சிந்திப்பதால் சொந்த மொழியில் எழுதுவதும் பேசுவதும் மிக எளிதாக அமையும்.

4)    இணையம், முகநூலில் எழுதுபவர்கள் ஆங்கில எழுத்துருக்களில் தட்டச்சு செய்கின்றனர் எனும் கருத்தை பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன் சொல்லியிருந்தால் நம்பியிருக்கலாம். இன்றோ கணினியில் தமிழ் உள்ளீடு வந்துவிட்டது. கைபேசி, திறன்பேசி, திறன்கருவிகள், தட்டைக் கணினிகள் என எல்லாக் கையடக்கக் கருவிகளிலும் தமிழ் எந்தச் சிக்கலுமின்றிச் செயல்படுகிறது. தமிழ் 99, அஞ்சல் ஆகிய இரண்டு விசை முறைகளும் யுனிகோடு எழுத்துரு முறையும் தமிழை எழுத மிகவும் உதவியாக இருக்கின்றன. ஆயினும், இணையம், முகநூலில் தமிழில் எழுதாமல் போனதற்கு மாந்தத் தவறுகளே (Human Error) காரணமாக இருக்க முடியுமே தவிர, தமிழ்மொழியைக் குறைபடுத்திக் காட்டுவது மிக நுட்பமான திருகுதாளமாகும்.

5)    ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கில எழுத்துகளைக் கற்றுக்கொடுத்தால் குழந்தைகளுக்குச் சிக்கல் வராது என்பதெல்லாம் ஆய்வு செய்யப்படாமால் தெரிவிக்கும் பொத்தாம் பொதுவான கூற்று. சான்றாக, மலேசியாவில் ‘அம்மா’ எனப் படிக்கத் தொடங்கும் குழந்தை ஆங்கில எழுத்துருவில் ‘amma’ என்றும் அதே ஆங்கில எழுத்துருவைக் கொண்டு மலாயில் ‘emak’ என்றும் ஆங்கிலத்தில் ‘mom’, 'mummy', ‘mother’ என்றும் படிக்க வேண்டியிருக்கும். இப்படி ஒரே அம்மாவை, ஒரே சொல்லை, ஒரே எழுத்துருவில் வெவ்வேறாகப் படிப்பதும் ஒலிப்பதும் எழுதுவதும் புரிந்துகொள்வதும் குழந்தைகளுக்கு மிக எளிமையானது என்று சொல்லிவிட முடியுமா?

6)    மலாய் போன்ற மொழிகள் ஆங்கில எழுத்துருவில் எழுதப்படுவதால் ஆங்கிலம் கற்க எளிதாகிறது என்ற பொய்யைச் சொல்லி மலேசியாவுக்கு வெளியே இருப்பவர்களை வேண்டுமானால் செயமோகன் நம்பவைக்கலாம். ஆனால், மலேசியத் தெருவில் வந்து  மலாயை விற்று தமிழர்களை ஏமாற்ற முடியாது அவரால். மலேசியாவில் தமிழ்வழிக் கல்வி பயிலும் தமிழ் மாணவர்களே இன்று வரையில் ஆங்கிலத்தில் மேன்மைபெற்று விளங்குகின்றனர் என்று அவருக்குப் புள்ளி விவரங்களோடு அறிவிக்க முடியும். அறிவியலும், கணிதமும் ஆங்கிலத்தில் படிக்கவேண்டும் என்னும் கல்விக் கொள்கை சில ஆண்டுகளுக்கு முன் மலேசியாவில் அமுலாக்கப்பட்டது. 10 ஆன்டுகளுக்குப் பிறகு 2010ஆம் ஆண்டில் அக்கொள்கை தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டுக் கைவிடப்பட்டது. காரணம், தமிழ்ச் சீன மாணவர்களைக் காட்டிலும் மலாய்வழியில் பயிலும் மலாய்க் குழந்தைகளுக்கு ஆங்கிலத்தில் பயில்வது மிகக் கடினமாக உள்ளது என்பதால்தான். ஆங்கிலத்தில் ‘bus’, ‘postman’, ‘computer’ என்று படித்துவிட்டு பிறகு அதையே மலாயில் ‘bas’ ‘posmen’ ‘komputer’ என்று குழம்பி குழம்பி, மலேசியாவில் மலாய் மாணவர்கள் படித்துக் கொண்டிருப்பதை அறியாமல், செயமோகன் மலாய்மொழியை எடுத்துக் காட்டி தமிழக, அயலக மக்களை மயக்க முற்பட்டிருக்கிறார்.

7)    வருங்காலத்தில் தமிழ் எழுத்துருக்கள் மாறவே மாறாது அல்லது மாறவே கூடாது என்ற வரட்டு நம்பிக்கை தேவையில்லை. காலச் சூழலுக்கு ஏற்ப மாற்றம் வரலாம். அப்படித்தான் கல்வெட்டுக் காலம் பின்னர் ஓலைச்சுவடிக் காலத்தில் எழுத்துருக்கள் மாறி வந்துள்ளன. வீரமாமுனிவரும் ஏகாரம் ஓகாரம் ஆகிய எழுத்துகளைத் திருத்தி அமைத்தார். அதன்பின்னர் பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் பெரும் எதிர்ப்புக்குப் பின்னர் ஏற்கப்பட்டது. காரணம், பெரியார் கொணர்ந்த எழுத்துச் சீர்திருத்தத்தில் பாதிப்புகளை விட பயன்கள் மிகுதியாக இருந்ததால் மக்கள் அதனை ஏற்க முன்வந்தனர். தமிழகத்திற்கு வெளியே குறிப்பாக, மலேசியாவிலும் அதற்குப் பெரும் எதிர்ப்புகள் இருந்தபோதிலும் அச்சுத்தொழில், தட்டச்சு, கணினி ஆகியவற்றுக்கு அந்தச் சீர்திருத்தம் இசைவாக இருந்ததால் இங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்பிறகு, வா.செ.குழந்தைசாமி உகர, ஊகார எழுத்துச் சீர்மையை முன்வைத்து மூக்குடைபட்டதை விரித்துச் சொல்லத் தேவையில்லை. வா.செ.குழந்தைசாமியின் எழுத்துச் சீர்மை தமிழ் எழுத்துருக்களில் பெரும் அழிம்புகளைச் செய்துவிடும் என்பதால் அது கடுமையான கண்டனத்திற்குப் பிறகு முடங்கிப்போனது.

ஆனால், தற்பொழுது செயமோகன் தமிழையே அடையாளமில்லாமல் அழித்துப்போடும் சீர்திருத்தை முன்மொழிந்திருக்கிறார்; தமிழின் ஒட்டுமொத்த வரலாற்றையே மறைத்துவிடும் மிக ஆபத்தான வரிவடிவ மாற்றத்தை முன்வைத்திருக்கிறார்; தமிழ்மொழியின் தொப்புள்கொடி உறவையே துண்டிக்கப்போகும் கொலை பாதகத்திற்கு நிகரான கொடுஞ்சிந்தனையை நாசுக்காக; நயவஞ்சமாகச் சொல்லியிருக்கிறார்.

தமிழுக்கு நன்மை விளையும், தமிழை எல்லாரும் படிப்பார்கள், வருங்காலத்தில் தமிழ் வாழும் என்றெல்லாம் இனிப்புகளைப் பூசி கொடும் நஞ்சை தங்கத்தட்டில் வைத்து தமிழர்கள் முன்னால் பந்தி வைத்திருக்கிறார்.

ஆங்கிலவழி படித்தவர்கள் இன்று பெருகிவிட்டனர், தமிழையும் அதன் தூய்மையையும் உண்மையாக நேசிப்பவர்கள் குறைந்துவிட்டனர். இந்திய நாட்டில் இந்தியையும் ஆங்கிலத்தையும் கற்கும் மக்கள் பெருகிவிட்டனர். தமிழ்வழிக் கல்வியை தெரிவுசெய்பவர்களும் ஆதரிப்பவர்களும் குறைந்துவிட்டனர். தமிழ்நாட்டில் பிறமொழிக்காரர்கள் ஆதிக்கம் பெருகிவிட்டது. தமிழர்களின் பலம் காயடிக்கப்பட்டு நசுக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிட்டது. இதையெல்லாம் நன்றாக புரிந்துகொண்டு அந்தச் சிறு சந்தில் நுழைந்துகொண்டு தமிழுக்கு எதிராகச் சிந்துபாடுவதைச் செயமோகன் நிறுத்திகொள்வது நல்லது.

தமிழ் வரலாற்றில் பெயர் பொறிப்பதற்குச் செயமோகன் இத்துணை மெனக்கெட்டு, தமிழைப் பலிகொடுக்கும் தீயச்செயலில் இறங்கக்கூடாது. தமிழில் எழுதி எழுதிப் பெயரும் புகழும் கிடைத்தது போதாது என்று தனக்கு வரலாற்றில் அழியாப் புகழைத் தேடிக்கொள்ள தாம் அண்டிப்பிழைத்த தமிழுக்கே இரண்டகம் செய்ய அவருடைய மனம் துணியக்கூடாது.

தமிழை ஒரு தொடர்பு ஊடகமாகவும் கருவியாகவும் மட்டுமே பாவித்து பிழைத்துக்கொண்டிருக்கும் செயமோகன் இப்படியெல்லாம் சிந்திக்கக்கூடாது என நம்மில் எவரும் தடைபோட முடியாது. அது அவருடைய மண்டை; அவருடைய மூளை; அவருடைய உரிமை. ஆனால், அதனைக் கொண்டுவந்து தமிழன் மண்டைக்குள் கொட்டி குழப்பம் செய்வதற்கும்; தமிழன் மூளையைச் சலவை செய்வதற்கும் அவருக்கு எந்த உரிமையும் கிடையாது.

தமிழைத் தாயாகவும் மூச்சாகவும்; தமிழை இனத்தின் உயிராகவும் உரிமையாகவும்; தமிழைப் பண்பாட்டுத் தளமாகவும்; தமிழை வரலாற்றுச் சுவடாகவும்; தமிழை வாழ்வியல் நெறியாகவும்; தமிழை இலக்கியத்தின் வேராகவும்; தமிழை இலக்கணத்தின் ஆவணமாகவும்; தமிழை மரபுப் பெட்டகமாகவும்; தமிழை அறிவாகவும்; தமிழை ஆலயமாகவும்; தமிழைக் காவியமாகவும்; தமிழைக் கலையாகவும்;  தமிழை ஞால முதன்மொழியாகவும்; தமிழை ஆரியத்திற்கு மூலமாகவும்; தமிழை உலகமொழிகளின் தாயாகவும் எண்ணி எண்ணி மதித்துப் போற்றும் தமிழர்கள் இன்னும் நிறைய இருக்கிறார்கள்.

உலகத் தமிழர்களில் பெரும்பாலோர் தமிழை இன்னும் தமிழாக அறியாமலே இருக்கின்றனர். தமிழைப் பற்றி முழுமையாகத் தமிழர்கள் அறிந்துகொள்வதற்கு முன்னாலேயே, ஆங்கில எழுத்துருவுக்குத் தமிழை மாற்றி, தாயைப் பார்க்கமலேயே, தந்தையைப் பார்க்காமலே, உடன்பிறந்தாரைப் பார்க்காமலே, உறவுகளைப் பார்க்காமலே குழந்தையைக் கருவிலேயே களைத்து அழிப்பதைப் போல தமிழர்களுக்கும் தமிழுக்கும் உள்ள தொப்புள்கொடி உறவை அறுத்தெறியாதீர் என செயமோகனுக்கு வேண்டுகை விடுகின்றேன்.

இது குறித்து எதிர்வினைகள்... தொடரும்...

@சுப.நற்குணன், திருத்தமிழ்


Wednesday, May 19, 2010

எழுத்துச் சீர்மை:- செம்மொழி மாநாட்டில் அறிவிப்பு கிடையாது


தமிழக அரசு தமிழ் எழுத்து மாற்றம் செய்யப் போவதாக 07.01.2010 நாளிட்ட மாலை மலர் செய்தித் தாளில் ஒரு செய்தி வெளியானது.

அந்தச் செய்தி: "சென்னை-7, தமிழ் மொழியை வளப்படுத்தும் வகையில் தமிழ் எழுத்துக்களில் சில சீர்திருத்தங்களை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. எந்தக் குழு அரசுக்கு சில பரிந்துரைகளை செய்துள்ளது."


இந்த செய்தி வெளிவந்து நான்கு மாதங்களுக்கு மேலாகியும் தமிழக அரசு எந்தவித மறுப்பும் வெளியிடாத நிலையில் கட்டாயம் இந்த எழுத்து மாற்றம் நடக்கும் எனக் கருதி உலகம் முழுவதுள்ள தமிழர்கள் இந்த முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

சென்னையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கூட்டம் நடந்தது. அதன் பின்னர், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் சார்பில் ஒரு மாநாடு நடத்தலாம் என கருத்து முன் வைக்கப்பட்டு, அதனை அமைப்புக் குழு விரிவாக விவாதித்து முடிவு செய்தது.


அதனைத் தொடர்ந்து, கடந்த 16.05.2010 அன்று புதுச்சேரியில் தமிழ் எழுத்து மாற்ற எதிர்ப்பு ஒரு நாள் மாநாடு நடத்தப்பட்டது. இம்மாநாட்டில், தமிழ் அறிஞர்கள், கணினி வல்லுநர்கள், தமிழ் இயக்கத்தினர் என அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில், கலந்துக் கொண்ட அனைவரின் அதாரவுடன் 'தமிழ் எழுத்து மாற்றத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்' உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இம்மாநாட்டின் செய்திகளை விரிவாக செய்தித்தாள்கள் வெளியிட்டன. குறிப்பாக தினமணி, தினகரன், இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட நாளிதழ்கள் செய்தி வெளியிட்டன.

இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தருமான ம.இராஜேந்திரன் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு பொருண்மைகளில் அளிக்கப்படவுள்ளன.​ இம்மாநாட்டில் எழுத்துச் சீர்திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று யாரும் தெரிவிக்கவில்லை.​ அறிஞர்கள் கூடி ஆய்வின் பொருள் பற்றி விவாதிக்கும் அரங்காகத் தான் செம்மொழி மாநாடு அமையும்." எனக் கூறியுள்ளார்.

இது புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் உள்ளிட்ட உலகம் முழுவதும் எழுத்து மாற்ற முயற்சிக்கு எதிராக குரல் கொடுத்தவர்களுக்கு கிடத்த வெற்றியாகும்.

இந்த அறிவிப்பை காலத்தே செய்த தமிழக அரசுக்கும், செம்மொழி மாநாட்டு குழுவினர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


தொடர்பான செய்திகள்:-

1.தமிழ் எழுத்து மாற்றம் எதிர்ப்பு மாநாடு: தினகரன் செய்தி
2.தமிழ் எழுத்து மாற்றம் எதிர்ப்பு மாநாடு: தீர்மானங்கள்
3.தமிழ் எழுத்து மாற்றம் குறித்து எந்த அறிவிப்பும் கிடையாது
4.தமிழ் எழுத்து வடிவ மாற்றம்: நம் வீட்டுக்கு நாமே தீ வைப்பதற்குச் சமம்
5.தமிழ் எழுத்து வடிவ மாற்றம்: மீண்டும் புதிய தமிழைப் படிக்க வேண்டும்
6.Scholars Oppose Reformation In Tamil Scripts


பி.கு:- எழுத்துச் சீர்திருத்தத்தைக் கண்டித்து 5.3.2010இல் மலேசியாவில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அக்கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது தொடர்பான செய்திகள் மலேசிய நாளிதழிலும் இணையத்திலும் விரிவாக வெளிவந்தன.

Wednesday, May 12, 2010

மே 16இல், தமிழ் எழுத்து மாற்றம் எதிர்ப்பு மாநாடு



தமிழ் எழுத்துக்களை மாற்றம் செய்ய இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இந்த மாற்றம் செய்யப்பட்டால் தமிழ் மொழிக்கு மிகப் பெரிய கேடு ஏற்படும் எனக் கருதப்படுகிறது.

எனவே, இந்த மாற்றத்தை கண்டித்து புதுச்சேரியில் எதிர்ப்பு மாநாடு நடைபெற உள்ளது.

நாள்: 16-05-2010 ஞாயிறு காலை 9.45 முதல் 6.00 மணிவரை
இடம்: வணிக அவை (பாரதி பூங்கா அருகில்) நிகழ்ச்சி அரங்கு, புதுச்சேரி-1,
காலை அமர்வு: காலை 10.00 முதல் 1.00 மணிவரை
உணவு இடைவேளை: பகல் 1.01 முதல் 2.00 வரை
பிற்பகல் அமர்வு: 2.01 மணிமுதல் முதல் மாலை 6.00 மணிவரை

நிகழ்ச்சியில் பங்கேற்போர் பட்டியல்:-

  1. புலவர். இரா.இளங்குமரனார், தமிழறிஞர்,

  2. திரு.இராம.கி, பொறியாளர், சென்னை, பொதுக்குழு உறுப்பினர்,

  3. உலகத்தகவல் தொழில் நுட்ப மையம்,

  4. பேராசிரியர்.செல்வக்குமார், மின்னனு மற்றும் கணிப்பொறி பொறியியல் துறை, வாட்டர்லூ பல்கலைக்கழகம், கனடா, (ஒலி/ஒளிப்பதிவு உரை)

  5. திரு. நாக.இளங்கோவன், சவுதி அரேபியா (ஒலி/ஒளிப்பதிவு உரை)

  6. திரு.மணி.மு.மணிவண்ணன், பொறியாளர், சென்னை,

  7. முனைவர். சொ. சங்கரபாண்டி, தமிழ்மணம், வாஷிங்டன் அமெரிக்கா (ஒலி/ஒளிப்பதிவு உரை)

  8. பேராசிரியர் மா.லெ. தங்கப்பா, புதுச்சேரி

  9. பேராசிரியர் நா.இளங்கோ, தாகூர் கலைக்கல்லூரி புதுச்சேரி.

  10. திரு.சுப. நற்குணன் மலேசியா (இணைய வழி உரை)

  11. தென்மொழி திரு மா.பூங்குன்றன் சென்னை

  12. திரு,நா.மு.தமிழ்மணி செந்தமிழர் இயக்கம், புதுச்சேரி

  13. புலவர் க.தமிழமல்லன் புதுச்சேரி,

  14. திரு,சீனு அரிமாப்பாண்டியன் புதுச்சேரி

  15. திரு.தமிழ நம்பி, விழுப்புரம்

  16. பாவலர். அரங்க நடராசன் புதுச்சேரி

  17. திரு.விருபா. குமரேசன் சென்னை

  18. திரு.எழில் இளங்கோ விழுப்புரம்,

அனைவரையும் வருக என வரவேற்கும்:-

இரா.சுகுமாரன் ஒருங்கிணைப்பாளர், கோ.சுகுமாரன், பேராசிரியர் நா.இளங்கோ, க.அருணபாரதி, மகரந்தன், வெங்கடேஷ் - திரட்டி
ம.இளங்கோ வீரமோகன், ஓவியர் இராசராசன்
செயப்பிரகாஷ், கு.இராம்மூர்த்தி, மு.முத்துக்கண்ணு ,செந்தமிழன்
பிரேம்குமார். ச.அனந்தகுமார், இரா.முருகப்பன், ஊற்று கலாபன்
குணவதி மைந்தன்,சீனுவாசன் கடலூர், மோகனசுந்தரம் புதுவை.காம்

தொடர்புடைய இணைப்புகள்:-

1. மீண்டும் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்:- தமிழக அரசு அறிவிப்பு

2. தமிழை மீட்பதும் காப்பதும்தான் முதல் வேலை; சீர்மை என்ற பெயரில் சிதைப்பதல்ல: மலேசிய நாளிதழ் செய்தி

3. எழுத்துச் சீர்மை; தேவையற்ற வேலை: புலவர் இரா.இளங்குமரனார்

4.கணினியைக் காட்டி எழுத்துச் சீர்திருத்தம் பேசுவது ஒரு மோசடி வேலை - பொற்கோ

5. எழுத்துச்சீர்திருத்தம் தேவையா? - கருத்தரங்கம் - ஓர் அறிக்கை

6. தமிழ் எழுத்து மாற்றம்: சீர்திருத்தமா? சீரழிப்பா? (1/2)


தமிழ்மணம்:-1. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் - தமிழ்மணத்தின் நிலைப்பாடு


நாக.இளங்கோவன் அவர்களின்:-

1. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி 1

2. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி 2

3. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-3

4. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-4

5. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-5

6. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-6

7. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-7

8. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-8

9. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-

10.எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-10/12

11. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-11/12

12. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-12/12

திரு. செல்வா - தமிழ்வெளி:- எழுத்துச் சீர்திருத்தம் என்னும் சீரழிவுப் போக்கு

தொடர்புக்கு:-இரா.சுகுமாரன் (ஒருங்கிணைப்பாளர்)

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

தொடர்பு எண்: +91 94431 05825

Sunday, May 09, 2010

எழுத்துச் சீர்மை:- பதிவர்களுக்குத் திறந்த மடல்

அன்பார்ந்த தமிழ் வலைப்பதிவர்களே, நண்பர்களே, தமிழ் அன்பர்களே,

வணக்கம். தமிழ் எழுத்துகளைச் சீர்த்திருத்தம் செய்வது தொடர்பான செய்திகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இது குறித்து இந்தத் திறந்த மடலை எழுதுகின்றேன். எழுத்துச் சீர்மை விவகாரத்தைக் கவனமெடுத்துப் பார்க்கவும் சிந்திக்கவும் கொஞ்சம் நேரம் ஒதுக்குமாறு உங்களை அன்போடு வேண்டுகிறேன்.

எழுத்துச் சீர்மை யாரோ ஒரு சிலரோடு தொடர்புடைய விடயம். அவர்கள் அதைப் பார்த்துக்கொள்வார்கள். அதில் நாம் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்? அதில் தலையிடவோ கருத்துச் சொல்லவோ நமக்கென்ன தகுதி இருக்கிறது? என்று பதிவர்கள் யாரும் தயவு செய்து எண்ணிவிடலாகாது. என்னைப் பொறுத்தவரையில் இவ்வெண்ணம் மிகவும் தவறானது.

காரணம், தமிழ்மொழியை இணையத் தேரில் ஏற்றி கைவலிக்க; கால்வலிக்க; உடல்வலிக்க; முதுகுத்தண்டு வலிக்க; மெனக்கெட்டு உலகவலம் வரச்செய்து வளர்த்தெடுத்த பெருமை வலைப்பதிவர்களுக்கு உண்டு. வலைப்பதிவுகள் வாயிலாகத் தமிழை இணையத்தில் வாழவைத்ததில் வலைப்பதிவர்களுக்குப் பெரும் பங்குண்டு. உலகம் முழுவதும் பலகோடி பேரைத் தமிழ்ப்படிக்க வைத்து, எழுதவைத்து, சிந்திக்க வைத்து செயற்கரிய செயல் புரிந்தவர்கள் வலைப்பதிவர்கள் என்பதை யாரும் மறுக்கவே மறைக்கவோ முடியாது.

ஆகவே, எழுத்துச் சீர்திருத்தம் தொடர்பில் கருத்து சொல்லுவதற்கும்; அது குறித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கும்; எழுத்துச் சீர்மை தேவையில்லை எனக் கருதினால் அதனை எதிர்ப்பதற்கும்; கண்டிப்பதற்கும்; தடுத்து நிறுத்துவதற்கும் உலகமெங்கிலும் இருக்கும் வலைப்பதிவர்களுக்கு முழு உரிமை இருக்கிறது.

இந்த உரிமையைப் பயன்படுத்த வேண்டிய கட்டத்திற்கு வலைப்பதிவர்கள் இப்போது வந்தாக வேண்டும். ஏனெனில், எதிர்வரும் சூன் திங்கள் 23 – 27இல் தமிழகம், கோவையில் நடைபெறவுள்ள ‘தமிழ்ச் செம்மொழி மாநாட்டில்’ எழுத்துச் சீர்மை விவகாரம் தொடர்பில் ஆய்வுகள் நடைபெற உள்ளன. மாநாட்டின் இறுதியில் எதேனும் ஒரு முடிவு அறிவிக்கப்படலாம். அவ்வாறு வரும் அறிவிப்பு தமிழுக்கு எந்த வகையிலும் எதிர்ப்பானதாகவோ ஆபத்தானதாகவோ பாதகமானதாகவோ இருக்கக் கூடாது.

அதனை உறுதிப்படுத்தும் பொறுப்பு மொழி அறிஞர்களுக்கு ஆய்வாளர்களுக்கும் இருப்பது போன்றே, இணையக் களத்தில் இறங்கி தமிழை வளர்க்கும் வளப்படுத்தும் ஆயிரமாயிரம் தமிழ் வலைப்பதிவர்களுக்கும் இருக்கிறது என்பதை வலியுறுத்துகிறேன். இல்லையேல், எழுத்துச் சீர்மை எனும் சீரழிவுப் போக்கினால் இதுவரை எழுதப்பட்டுள்ள பல்லாயிரக் கணக்கான பதிவுகள் பயனற்றதாகப் போகும் பேரழிவைப் பதிவர் நண்பர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.


எனவே, எழுத்துச் சீர்மை தொடர்பில் ஒவ்வொரு வலைப்பதிவரும் தங்கள் கருத்தை வெளிப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கிறேன். வலைப்பதிவர்கள் தங்கள் நிலைப்பாட்டை தத்தம் வலைப்பதிவில் உடனடியாகப் பதிவிடுமாறு வேண்டுகையை முன்வைக்கிறேன்.



எழுத்துச் சீர்மையைத் தடுக்க விரும்பும் வலைப்பதிவர்கள், அதற்குரிய ‘வில்லைககளை’ அல்லது ‘சின்னங்களை’ தங்கள் வலைப்பதிவில் இணைத்து, எழுத்துச் சீர்மைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

அதற்கு முன், எழுத்துச் சீர்திருத்தம் குறித்து முழு விவரத்தை பதிவர் நண்பர்கள் அறிந்துகொள்ள வேண்டும். இது பற்றி இதுவரை நிகழ்ந்துள்ள வளர்ச்சிகளையும், நடந்துள்ள விவாதங்களையும் புரிந்துகொள்ள வேண்டும். எழுத்துச் சீர்மைக்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்காக, தொடர்ந்து படிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ் வரிவடிவத்தில் இ, ஈ, உ, ஊ ஆகிய நான்கு வரிசை எழுத்துகளில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று முன்மொழியப்பட்டுள்ளது. இந்தச் சீர்த்திருத்தம் நடைமுறைக்கு வந்தால் 72 எழுத்துகளின் வடிவத்தை மாற்றி அமைக்க வேண்டியிருக்கும். எழுத்துச் சீர்மை தொடர்பாக மாலை மலர் இணைய இதழில் வந்த செய்தியைப் படித்துப் பார்க்கவும்.

மாலை மலர் செய்தி:- http://thirutamil.blogspot.com/2010/01/blog-post_08.html

இந்தச் சீர்திருத்தம் நடைமுறைக்கு, தமிழ்மொழியில் 59% மாற்றம் ஏற்படும். தமிழ்மொழி பெரும் சிதைவுக்கு உள்ளாகும்; சீரழிவு ஏற்படும். தமிழ்க் கருவூலங்களாக இருக்கும் ஆயிரமாயிரம் நூல்களும் ஆவணக்களும் படிக்க முடியாமல் போகும். அல்லது பெருமளவு காலத்தையும் பணத்தையும் செலவிட்டு அவற்றை மறுபதிப்பு செய்யும் நிலை வரும். இது இயலாத சூழலில் தமிழ் ஒரு கற்கால மொழிபோல, கல்வெட்டு மொழிபோல மாறிப்போகும். இன்று கணினி – இணையத்தில் தமிழ்மொழி அடைந்துள்ள உச்சங்கள் அனைத்தும் ஒருநொடியில் சரிந்து போகும். தமிழ் இணையத்தளங்களும் ஆயிரக்கணக்கில் வலைப்பதிவுகளும் முடங்குப் போகும்.

ஆனால், எழுத்துச் சீர்மையால் ஏற்படப்போகும் எதிர்மறையான விளைவுகளை பற்றி சிறிதும் ஆராயாமல், சிலர் இதனை வலியுறுத்தியும் மிகத் தீவிரமாக பரப்புரை செய்தும் வருகின்றனர். ஏன் எழுத்துச் சீர்மை தேவை என்பதற்கு அவர்கள் கூறும் சில 'சாக்குகள்' பின்வருமாறு:-

1.தமிழை எளிதாகப் படிக்கலாம்
2.தமிழை விரைந்து கற்கலாம்
3.தமிழில் உள்ள எழுத்துக் குறியீடுகளைக் குறைக்கலாம்
4.வெளிநாட்டுகளில் வாழ்வும் தமிழ்க் குழந்தைகள் தமிழை விரும்பிப் படித்துவிடுவர்.
5.உலகில் மாற்றம் ஒன்றே நிலையானது என்பதால் தமிழ் காலத்திற்கு ஏற்ப மாறவேண்டும்.

இதில் வேடிக்கை என்னவெனில் மேலே சொல்லப்பட்ட காரணங்கள் எதிலும் துளிகூட உண்மையோ அல்லது அடிப்படையோ இல்லை. மேலும், இவை அனைத்தும் ஆய்வுநோக்கு கொண்டவையாகவும் இல்லை. அதுமட்டுமல்லாமல், இன்றைய கணினி தொழில்நுட்பக் காலத்தில் இவை அறிவுக்குப் பொருந்தமுடையதாகவும் இல்லை; ஏரணமுடையதாகவும் (Logic) இல்லை.

ஆகவேதான், இ, ஈ, உ, ஊ ஆகிய எழுத்துகளைச் சீரமைக்க வேண்டும் என்ற முன்மொழி,வானது உலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிஞர்கள், பற்றாளர்கள், தமிழ்க் கணிஞர்கள், தொழில்நுட்பர்கள் ஆகியோரின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. பலரும் இதனை எதிர்க்கின்றனர்; கண்டிக்கின்றனர். மதுரை இரா.இளங்குமரனார், தமிழண்ணல், பொற்கோ, மறைமலை இலக்குவனார், பேரா.இராமகி முதலியோர் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். அவற்றுள் சில கீழே தரப்பட்டுள்ளன:-


1.எழுத்துச் சீர்மை தேவையற்ற வேலை - மதுரை.இரா.இளங்குமரனார்

2.எழுத்துச் சீர்மை: மலேசியாவில் 4 தீர்மானங்கள்: கண்டனக் கூட்டம்

3.தமிழை மீட்பதும் காப்பதும்தான் முதல் வேலை; சீர்மை என்ற பெயரில் சிடைப்பதல்ல:- மலேசிய நாளிதழ் செய்தி

4.கண்டனக் கூட்டம்:-எழுத்துச் சீர்திருத்தம் தேவையா? விளக்கக் கூட்டம்

தவிர, 16-5-2010ஆம் நாள் புதுச்சேரியில் எழுத்துச் சீர்மையைக் கண்டித்து மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கண்டனக் கூட்டம்:- தமிழ் எழுத்து வடிவ மாற்றம் எதிர்ப்பு மாநாடு

கீழே உள்ள சுட்டிகளைச் சொடுக்கி எழுத்துச் சீர்மைக்கு எதிரான கண்டனங்களையும் விரிவான விளக்கங்களையும் படிக்கவும்

1.சுப.நற்குணன்:- தமிழ் எழுத்து மாற்றம்: சீர்திருத்தமா? சீரழிப்பா? பகுதி 1, பகுதி 2

2.முனைவர் மு.இளங்கோவன்:- தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவையா?

3.நாக.இளங்கோவன்:- எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் (இது 12 பகுதிகளைக் கொண்டது. அனைத்தும் படிக்க இங்கு சொடுக்கவும்)

4.பேராசிரியர் செல்வா:- எழுத்துச் சீர்திருத்தம் எனும் சீரழிவுப் போக்கு

5.பேராசிரியர் சந்திரசேகரன் பெரியண்ணன்:- Tamil Script Reform: Its Vacuity Next to The Chinese Script

6.மணி.மு.மணிவண்ணன்: எழுத்துச் சீர்திருத்தம் - ஒரு கோணல் பார்வை

7.ரவிசங்கர்:- எழுத்துச் சீர்திருத்தம்

8.செந்தழல் ரவி:- டைம் மிசினும் எழுத்துச் சீர்திருத்தமும்

எழுத்துச் சீர்மையால் தமிழுக்கு ஏற்படவுள்ள நெருக்கடி நிலையை நன்கு ஆராய்ந்து பார்த்து தமிழ்மணம் திரட்டி தன்னுடைய ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தி இருந்தது. எழுத்துச் சீர்மை தேவையில்லை எனும் தன்னுடைய நிலைப்பாட்டைத் தமிழ்மணம் திரட்டி உறுதியாகவும் வெளிப்படையாகவும் அறிவித்துள்ளது. கீழ்க்கண்ட சுட்டியில் அதனைப் படிக்கலாம். தமிழ்மணத்தின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல கருத்துகள் பின்னூட்டங்களாக இடம்பெற்றுள்ளதைக் கண்டிப்பாக படிக்கவும்.

தமிழ்மணம் நிலைப்பாடு:- http://blog.thamizmanam.com/archives/202

கணினி–இணைய நிரலிகளை எழுதுவதற்கும் இன்னபிற செயற்பாடுகளுக்கும் எழுத்துச் சீர்மை தேவை என்ற வாதங்களை அரிஞர் பெருமக்கள் பலர் உறுதியான சான்றுகளோடு முறித்துப்போட்டு தெளிவுகளைச் சொல்லியிருப்பதைப் படித்து உணர்ந்துகொள்வது நல்லது.

எழுத்துச் சீர்மையால் ஏற்படவுள்ள மாற்றங்களையும் அதனுடைய மறுபக்கங்களையும் விவாதிக்கும் நோக்கத்தில் “தமிழ் எழுத்துச் சீர்மை” எனும் புதிய வலைப்பதிவு ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்த பல்வேறு கருத்தாடல்கள் அதில் படிக்கக் கிடைக்கும். அவற்றையும் ஒரு ஓட்டமாக நோட்டமிடவும்.

தமிழ் எழுத்துச் சீர்மை: மாற்றமும் மறுபக்கமும் வலைப்பதிவு

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

எனும் வள்ளுவப் பெருந்தகையின் அறிவுரையைப் பின்பற்றி, வலைப்பதிவு நண்பர்கள் ஒரு நிலைப்பாட்டுக்கு வர வேண்டும். அந்த நிலைப்பாட்டை ஒவ்வொருவரும் மேலே சொன்னது போல ஏதேனும் ஒரு வழியில் – ஒரு வகையில் கண்டிப்பாகப் பதிவுசெய்ய வேண்டும். அதனை உடனடியாகச் செய்ய வேண்டும் என உலகின் பல்வேறு மூலைகளிலிருந்து தன்னலம் கருதாமல்; எந்த ஈட்டத்தையும் நினையாமல்; காலநேரம் பாராமல் வலைப்பதிவு எழுதி தமிழை வளர்த்துக் கொண்டிருக்கும் – வாழ்வித்துக் கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் பதிவர் நண்பர்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

நனிநன்றியுடன்:-






Thursday, March 18, 2010

தமிழ் எழுத்துச் சீர்மை: தமிழ்மணத்தின் நிலைப்பாடு


தமிழ் மொழியில் உள்ள வரிவடிவங்களில் இகர, ஈகார, உகர, ஊகார வடிவங்களில் சீர்மையை கொண்டு வரப் போவதாக தமிழறிஞர்கள் சிலர் பேசி வருகின்றனர். இவர்கள் மிகவும் சிறுபான்மையினர்; ஆனால், அதிகாரத்தில் உள்ளவர்கள். வரும் சூன் மாதம் கோவையில் நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டைப் பயன்படுத்தி அவர்கள் தங்கள் வேலைத்திட்டங்களைத் தமிழ்ச்சமுதாயத்தின் மேல் திணிக்க முனைகின்றனர்.

இவர்கள் அறிவித்துள்ள சீர்மை தமிழ் எழுத்துகளில் 72 எழுத்துக்களில் மாற்றத்தைக் கொண்டு வரும் என்றும், நான்கு புதிய வரி வடிவங்கள் தமிழுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிகிறது. வா.செ.குழந்தைசாமி வெளியிட்டுள்ள சீர்மைக் கட்டுரைகளில் இருந்து இதனை அறிய முடிகிறது. இது தமிழ்மொழிக்குக் கேடு விளைவிக்கக் கூடியதாகும். பல தமிழ் அறிஞர்கள் இந்த முயற்சிக்கு எதிரான தங்கள் ஆணித்தரமான கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.

இவர்களுடன் தமிழ்மணமும் தன்னை இணைத்துக் கொள்கிறது.

சுமார் 72 எழுத்துக்களுக்கு மாற்றம் என்பது சீர்மையோ, சீர்திருத்தமோ அல்ல. மிகப் பெரிய மாற்றம். குறுகிய கால இடைவெளியில் எக்காலத்திலும் தமிழ் மொழி இவ்வாறு மாற்றப்பட வில்லை. தந்தை பெரியார் ஒரு சில எழுத்துக்களை மட்டுமே அச்சுத் தொழிலுக்கு ஏற்றவாறு மாற்றினார். அதுவும் புதிய வரி வடிவங்கள் எதையும் பெரியார் புகுத்தவில்லை. வழக்கில் இருந்த வரி வடிங்களைக் கொண்டே சில எழுத்துக்களில் சீர்மையை பெரியார் கொண்டு வந்தார். ஆனால் இன்றைய இணையம், கணினி யுகத்தில் இத்தகைய எந்த மாற்றமும் தமிழுக்குத் தேவை இல்லை.

இன்று இணையத்தில் அதிகளவில் பயன்படுத்தப்படும் சில தெற்காசிய மொழிகளில் ஒன்றாக தமிழும் உள்ளது. கணினி பயன்பாட்டிலும் பலப் பிரச்சனைகளை களைந்து தமிழ் பயன்பாடு ஒரு சுமூகமான நிலையை எட்டி உள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் இந்தச் சீர்மை தேவை தானா என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. (முழுதும் படிக்க)

பின்குறிப்பு:-
எழுத்துச் சீர்மை தொடர்பில் தன்னுடைய நிலைப்பாட்டை
வெளிப்படையாகவும் உறுதியாகவும் அறிவித்துள்ள
தமிழ்மணம் திரட்டிக்கு மனமார்ந்த நன்றியும்
மனம்நிறைந்த பாராட்டும் உரித்தாகுக.
-சுப.நற்குணன்

Tuesday, March 16, 2010

தமிழை மீட்பதும் காப்பதும்தான் முதல் வேலை; சீர்மை என்ற பெயரில் சிதைப்பதல்ல: மலேசிய நாளிதழ் செய்தி

செந்தமிழ் அந்தணர், தமிழ்க்கடல் ஐயா.இரா.இளங்குமரனார் மலேசியா, சிங்கை ஆகிய நாடுகளுக்குக் வருகை மேற்கொண்டிருந்தார். பல ஊர்களில் தமிழ் எழுச்சிப் பேருரைகள் நிகழ்த்தி தமிழ் உணர்வைச் செழிக்கச்செய்த்தார். அவ்வகையில், எழுத்துச் சீர்த்திருத்தம் பற்றி ஒரு நிகழ்ச்சியில் ஐயா பேசிய உரைப்பொழிவு மலேசியாவின் முன்னணி நாளிதழ் 'மக்கள் ஓசை'யில் செய்தியாக வெளிவந்துள்ளது. 16-3-2010இல் வெளிவந்த அந்தச் செய்தியின் முழுவடிவம் கீழே தரப்பட்டுள்ளது. - சுப.ந

***************************


பாரிட் புந்தார், மார்சு 16, உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் தமிழ்த்தாயை மீட்பதும் காப்பதும்தான் நமது முதல் வேலை.எழுத்துச் சீர்மை என்ற பெயரில் சிதைப்பதல்ல நமது வேலை என்று மலேசியா வந்துள்ள தமிழகத் தமிழறிஞர் செந்தமிழ் அந்தணர் புலவர் மதுரை இரா.இளங்குமரனார் கூறினார்.

தமிழ் எழுத்துகளைச் சீர்த்திருத்தம் செய்ய வேண்டிய தேவை இல்லை. அப்படி தமிழ் எழுத்துகளைச் சீர்த்திருத்தம் செய்தால் தமிழ்மொழி சிதைந்து சின்னாபின்னப்பட்டுப் போகும் என்று புலவர் பெருமகனார் நினைவுறுத்தினார்.

உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் எனதுத் தாயை மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறேன்.அவளை சோதனை செய்த அந்த மருத்துவர் எனது தாயின் உயிரை மீட்பதில் கவனம் செலுத்தாமல்.என் தாயின் கை வலைந்திருக்கிறது அதை சரி செய்ய வேண்டும் என்கிறார்.

என்தாயின் உயிரை முதலில் மீட்டுத்தாருங்கள்.அவள் கையை சரி செய்வதா காலை சரி செய்வதா என்பது பற்றி பின்னர் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அந்த மருத்துவருக்கு நான் பதிலளிக்கிறேன்.நான் மட்டுமல்ல தாயின் மீது பற்று கொண்ட எந்த மகனும் அதைத்தான் செய்வான்.

அப்படித்தான் இன்று தமிழ்த்தாய் உயிர் மீட்புக்கும் வாழ்வுக்கும் செய்ய வேண்டிய பற்பல பணிகள் அப்படியே செயல் முடங்கிக் கிடக்கும் போது சிலர் தங்களின் தன்னலத்திற்காக எழுத்துச் சீர்மை என்ற பெயரில் தமிழ் எழுத்துக்களை சிதைக்க முற்படுகிறார்கள் என்று புலவர் இளங்குமரனார் எடுத்துரைத்தார்.

இங்கு பேரா மாநில தமிழியல் ஆய்வுக் களம், பாரிட் புந்தார் தமிழ் வாழ்வியல் இயக்க, இணை ஏற்பாட்டில் பாரிட் புந்தார் தமிழியல் நடுவத்தில் நடைபெற்ற “தமிழரின் எழுச்சியும் வீழ்ச்சியும் ” என்ற தலைப்பிலான பொழிவு நிகழ்ச்சியில் செந்தமிழ் அந்தணர் மேற்கண்ட செய்தியை வலியுறுத்தினார்.

தற்போது தமிழ்நாட்டில் சிலர் தமிழ் எழுத்துகளைச் சீர்த்திருத்தம் செய்ய முனைந் திருக்கிறார்கள். அதன்படி இ, ஈ, உ, ஊ ஆகிய நான்கு எழுத்து வரிசைகளில் உள்ள 72 உயிர்மெய் எழுத்துகளை மாற்றி அமைக்க வேலை செய்கிறார்கள்.

இது தமிழுக்கு எழுச்சியூட்டும் செயலல்ல. மாறாக வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் செயலாகும்இந்தச் சீர்த்திருத்தால் தமிழ்மொழி பெரிய மாற்றத்திற்கு உள்ளாகும். நாளடைவில் தமிழ் சிதைந்துபோய் காலத்தால் அழிந்துபோகும் என்று புலவர் இரா.இளங்குமரனார் குறிப்பிட்டார்.

தமிழில் சீர்மை உண்டாகும், தமிழை எளிமையாகவும் விரைவாகவும் கற்கலாம் என்று எழுத்துச் சீர்த்திருத்தம் செய்பவர்கள் கூறுகிறார்கள். ஆனால், அதில் சிறிதுகூட உண்மையில்லை. இப்போது இருக்கும் தமிழ் எழுத்து வடிவமே படிப்பதற்கும் எழுதுவதற்கும் எளிதானது.

கருவிலிருககும் குழந்தைக்கே ஆங்கில வழி பள்ளியில் இடம் கிடைக்க முன்பதிவு செய்யும் அளவிற்கு தமிழ்ப் பெற்றோர்களின் மனநிலையை இன்று உருவாகி இருக்கிறது.தமிழ் வழி கல்வி என்பதும்,தமிழ் கற்றால்தான் வேலை என்பதும் பற்றி தமிழ்ப்பெற்றோர்கள் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை.

அத்தகைய சூழ்நிலையில் தமிழ்த்தாய் குற்றுயிரும் குலை உயிருமாக உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் போது சிலர் சீர்மை என்ற பெயரில் இவ்வாண்டு நடைபெறவுள்ள தமிழ் மாநாடு ஒன்றில் பரிந்துரைக்கப் போகும் இது போன்ற திட்டங்கள் தமிழை அழிக்கவும் சிதைக்கவும் மட்டுமே பயன்படும் என்று புலவர் பெருமகனார் எச்சரித்தார்.

அதுமட்டுமல்லாது, இப்போது நடப்பில் இருக்கும் எழுத்துகள் மிகவும் சிறந்த கட்டமைப்பைக் கொண்டது. வடமிருந்து இடப்பக்கமாக எழுதும் அமைப்பைக் கொண்டிருக்கிறது. ஆனால், சீர்த்திருத்தம் செய்யப்படும் உகர எழுத்து குறியீடுகளை தமிழ் எழுத்து மரபுக்கு மாறாக இடமிருந்து வலமாக எழுத வேண்டிய நிலைமை ஏற்படும். இப்படிப்பட்ட மாற்றங்கள் கண்டிப்பாகத் தமிழைச் சிதைந்த மொழியாக ஆக்கிவிடும்.

வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபினர் கட்டிக்காத்த - தமிழருக்குச் சொந்தமான மரபுகள் பல உண்டு. எழுத்து மரபு அதில் ஒன்று. மரபு கெட்டுப்போனால் தமிழ் மொழியும் தமிழ் இனமும் அடையாளம் இழந்துபோகும். மரபு திரிபின் பிறிது பிறிதாகும் என்று தொல்காப்பியம் கூறுவதை நினைவில் நிறுத்து நம்முடைய மரபுகளை அழியவிடாமல் பாதுகாப்பது நம்முடைய கடமையாகும் என்றவர் வலியுறுத்தினார்.

மேலும் பேசிய அவர் தமிழ் எழுத்துகள் குறித்த வரலாற்றுப் பின்னணிகளையும் தமிழ் எழுத்துகளை எழுதும் முறைகளில் இருக்கும் மனவியல் அணுகுமுறைகளையும் எழுத்துகளை எழுதிக்காட்டி விளக்கம் அளித்தார். தமிழில் எ, ஏ, ஒ, ஓ ஆகிய நான்கு எழுத்துகள் வீரமாமுனிவரால் சீர்த்திருத்தம் செய்யப்பெற்றது. அது மிகவும் சிறிய மாற்றம்தான்.

பிறகு, பகுத்தறிவு பகலவன் பெரியார் சில எழுத்துச் சீர்த்திருத்தங்களைக் கொண்டுவந்தார்.அவையும் ஏற்கனவே கல்வெட்டில் இருந்தவைதான்.பின்னர் ஓலைச்சுவடி வந்த போது பெரியார் பரிந்துரைக்கு முந்திய எழுத்துக்கள் இருந்தன.

அச்சுப்பணிகளையும் தட்டச்சுக்களையும் காரணம் காட்டி பெரியார் மீண்டும் பழைய எழுத்துககளையே முன் மொழிந்தார். அதனைத் தமிழறிஞர்கள் எதிர்த்தனர். இருந்தாலும், பிறகு பதின்மூன்று எழுத்துகளை மட்டும் சீர்த்திருத்தம் செய்தார்கள். இது தமிழ் எழுத்து வடிவங்களை மாற்றி அமைத்தாலும் பெரிய பாதகம் ஏற்பட்டு விடவில்லை.

ஆனால், இப்போது சிலர் மேற்கொண்டுள்ள எழுத்துச் சீர்த்திருத்தம் மிகவும் பாதகமானது. தமிழ் எழுத்துகளின் தனித்தன்மை முற்றிலுமாகச் சீரழிந்து போகும். தமிழின் அடையாளம் அற்றுப்போகும். ஆகவே இந்தப் புதிய எழுத்துச் சீர்த்திருத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாட்டில் இந்தச் சீர்த்திருத்ததைச் செய்ய முயலும் முனைவருக்கு தாம் கைப்பட கடிதம் எழுதியிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்த எழுத்துச் சீர்த்திருத்தம் குறித்து தனி நூல் ஒன்றை எழுதி முடித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

திருக்குறள் வழியில் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட என்பத்தொரு அகவையை அடைந்துள்ள புலவர் ஐயா இளங்குமரனார் வள்ளுவத்தை வாழ்விக்க வந்த தமிழ்ச்சான்றோராக விளங்குபவர். திருச்சிராப்பள்ளிக்கு மேற்கில் காவிரிக்கரையின் தென்புறம் அமைந்துள்ள உள்ள அல்லூர் என்னும் ஊரில் திருவள்ளுவர் தவச்சாலை அமைத்துப், பாவாணர் நூலகம் கண்டு, தவப் பள்ளியில் உறைந்திருப்பவர்.நூற்றுக்கணக்கான நூல்களை தமிழ்கூறும் நல்லுலகிற்குத் தந்திருப்பவர்.

தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்று திருக்குறள் உரைப்பொழிவுகள் வழங்கியும் திருமணங்களைத் தமிழ் வழியில் நடத்தியும் நல்லற மணமக்களை இல்லறப்படுத்தியும் தமிழ் மக்களைத் தமிழ்வழியில் வாழவைத்தும் தாமும் வாழ்வாங்கு வாழ்ந்துவரும் ஒப்பற்ற சான்றாளர் செந்தமிழ் அந்தணர் புலவர் ஐயா மதுரை இரா.இளங்குமரனார்.

இதே நிகழ்ச்சியில் புலவர் இரா.இளங்குமரானார் முன்னிலையில் நிகழ்ச்சி ஏற்பாட்டு அமைப்புக்களான பேரா தமிழியல் ஆய்வுக் களம்,பாரிட் புந்தார் தமிழ் வாழ்வியல் இயக்க பொறுப்பாளர்கள் ஏற்கனவே செய்திருந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் புதிதாக பரிந்துரைக்கப்படவுள்ள தமிழ் எழுத்துச் சீர்திருத்தற்கு கண்டனம் தெரிவித்தனர்.

வந்திருந்த பொது அமைப்புகளின் பொறுப்பாளர்களும் தமிழ்ப் பெருமக்களும் முன்னிலையில் அவை அறிவிக்கப்பட்டு,அனைவரும் ஒன்றிணைந்து இந்த எழுத்துச் சீர்த்திருத்தத்திற்கு எதிராகக் கண்டனம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அதற்கு அடையாளமாக எழுத்துச் சீர்த்திருத்தத்தால் தமிழுக்கு ஏற்படப்போகும் விளைவுகள் தொடர்பாக சுப.சற்குணன் தொகுத்திருந்த இணையத்தில் வெளிவந்துள்ள ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு ஒன்று புலவர் இரா.இளங்குமரனாரிடம் தமிழியல் ஆய்வுக் களத்தின் தலைவர் இர.திருச்செல்வமும் வாழ்வியல் இயக்கத் தலைவர் க.முருகையனும் ஒப்படைத்தனர்.

தொடர்பான செய்திகள்:-

1.எழுத்துச் சீர்மை தேவைற்ற வேலை: புலவர் இரா.இளங்குமரனார்

2. எழுத்துச் சீர்மை: மலேசியத் தமிழர்களின் 4 கோரிக்கை

Monday, March 08, 2010

எழுத்துச் சீர்மை: மலேசியத் தமிழர்களின் 4 கோரிக்கை


தமிழ்க்கடல் புலவர் இரா.இளங்குமரனார் எழுத்துச் சீர்மை குறித்து பேசிய உரைப்பொழிவின் ஒரு பகுதியை முன்னர் பதிவிட்டு இருந்தேன். அதனைப் படிக்க இங்கு சொடுக்கவும். கீழே வருவது அப்பொழிவின் தொடர்ச்சியாகும். –சுப.ந.

***************************

5-3-2010 வெள்ளிக்கிழமை பேரா மாநிலத்தில் உள்ள பாரிட் புந்தார் எனும் ஊரில் புலவர் ஐயாவின் பேருரை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ‘தமிழினத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்’ என்ற தலைப்பில் பேருரை நிகழ்த்திய புலவர் ஐயா மதுரை இரா.இளங்குமரனார், தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தம் தொடர்பாகவும் விரிவாகப் பேசினார். எழுத்துச் சீர்மை பற்றி அவர் பேசியதாவது;


சிலர் ஐ. ஔ ஆகிய இரண்டும் தேவையில்லை. ‘அய்’, அவ்’ என்று எழுதலாம் என்கிறார்கள்.

தமிழில் நெட்டெழுத்து ஏழு என்ற இலக்கணத்திற்கு ‘அய்’, அவ்’ ஆகிய இரண்டும் பொருந்துமா? எனச் சிந்தித்துப் பாருங்கள்.

ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஐ, ஔ ஆகிய ஏழும் ச, ரி, க, ம, ப, த, நி என்பதற்கு ஒத்த ஏழிசை எழுத்துகள். திவாகரன் நிகண்டில் பார்த்தால் இது தெரியும்.

மொழி சம்பந்தப்பட்ட வேலைகளை மொழி அறிஞர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மற்றவர்கள் வந்து அதில் தலையிடுவது முறையல்ல. இதனைக் குறித்து தந்தை பெரியாரே “இது மொழி அறிஞர்கள் செய்யவேண்டிய வேலை” என்று சொல்லியிருக்கிறார்.

மலேசியாவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் பாவாணரே குறிப்பிட்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அதன்படி முப்பது உலக மொழிகளை இலக்கிய இலக்கண மரபுகளோடு கற்றறிந்தவரும், தமிழ் வரலாறு நூலில் 73 மொழிகளை மேற்கோள் காட்டி எழுதியவருமாகிய பேரறிஞர் பாவாணர் எழுத்து வடிவத்தில் எந்தவித மாற்றமும் செய்யக்கூடாது; வடிவ மாற்றம் பெருந்தவறு! பெருந்தவறு! என்று கண்டித்து இருக்கிறார்.

“மாற்றரும் சிறப்பின் மரபு” என்பது தொல்காப்பியம். மரபை நாம் மாற்றக் கூடாது. தென்னை மரத்தை பனை மரமாக மாற்ற நினைக்கக்கூடாது. பனை மரத்தை புன்னை மரமாக மாற்றக்கூடாது. தென்னை தென்னையாக இருக்கட்டும்; பனை பனையாக இருக்கட்டும்; புன்னை புன்னையாக இருக்கட்டும்.

மூவரி அணில் மாற்றரும் சிறப்பு. கோடு வாழ் குரங்கு மாற்றரும் சிறப்பு. மாற்றினால் என்னவாகும். பிறிது பிறிதாகும். மரபுநிலை மயங்கக் கூறக்கூடாது.

எழுத்துக்கு மரபு உண்டு. மொழிக்கு மரபு உண்டு. மரபுநிலை மயங்கல் கூடாது. அவரவர் மனம்போன போக்கில் மாற்றிக்கொள்வது மொழியாக இருக்காது.

ஒரு காலத்தில் எ, ஒ ஆகிய இரண்டின் மேல் புள்ளி வைத்து எழுதினார்கள். ‘க’ மேல் புள்ளி வைத்தால் ‘க்’ ஆகி அரை மாத்திரையாகக் குறைகிறது. அதுபோல, ‘எ’ மேல் புள்ளி வைத்தால் குறிலாக இருந்தது; ‘ஒ’ மேல் புள்ளி வைத்தால் குறிலாக இருந்தது.

இதனை வீரமாமுனிவர் சிறு மாற்றம் செய்கிறார். மேலே இருந்த புள்ளியை நீக்கிவிட்டு, ‘எ’வின் கீழே சிறு கோடு இழுத்து ‘ஏ’ ஆக்குகிறார். ‘ஒ’வின் கீழே சுழித்து ‘ஓ’ ஆக்குகிறார். அது கொஞ்சம் இயல்பாக இருந்ததாலும் அன்றைய அச்சுக்கலை மேலையரிடம் இருந்த கரணியத்தாலும் இந்த மாற்றம் நடப்புக்கு வந்துவிட்டது. இந்த மாற்றமானது தமிழ் எழுத்து வடிவத்தை பெரிதுமாகச் சிதைக்கவில்லை.



ஆனால், இன்று அச்சு போடுவதற்கும், தட்டச்சு செய்வதற்கும், கணினியில் எழுதுவதற்கும் எந்தத் தடையும் இல்லை. இன்று இந்த அத்தனை தொழில்நுட்பத்திலும் தமிழர்கள் வல்லவர்களாக இருக்கிறார்கள். அப்படியிருக்க ஏன் இந்த எழுத்து மாற்றம்?

காலுக்குத் தக்கபடிதான் மிதியடி இருக்க வேண்டுமே ஒழிய, மிதியடிக்குத் தக்க காலை வெட்ட முடியுமா?

இன்று தமிழ்நாட்டில் எழுத்துச் சீர்த்திருத்தம் பற்றி பேசுபவர்களுக்கு நான் கைப்பட கடிதம் எழுதி இருக்கிறேன். இந்தச் சீர்த்திருத்தம் தேவையில்லை என்பதை அவர்களிடம் வலியுறுத்தி இருக்கிறேன்.

அதுமட்டுமல்லாது, எழுத்துச் சீர்த்திருத்தம் சம்பந்தமாக தனி நூல் ஒன்றையும் எழுதி முடித்திருக்கிறேன். விரைவில் அந்த நூல் உங்கள் அனைவருடைய பார்வைக்கும் தருகிறேன். அதில் நிறைய வரலாற்றுச் சான்றுகளோடு எழுத்துச் சீர்மை தேவையில்லை என்பதைக் காட்டியிருக்கிறேன்.

நான் தமிழகம் திரும்பியது இந்தச் சிக்கல் குறித்து அடுத்த நடவடிக்கையை மேற்கொள்ளுவேன். நீங்களும் இங்கிருந்து தக்கனவற்றை முன்னெடுத்துச் செய்ய வேண்டும்.

இவ்வாறு, புலவர் ஐயா தம்முடைய உரைப்பொழிவில் பேசினார்.


தமிழகத்தில் சிலர் இ, ஈ. உ, ஊ வரிசை உயிர்மெய்களைச் சீர்மை செய்வதற்கு மேற்கொண்டிருக்கும் முயற்சியைக் கண்டித்து புலவர் ஐயா முன்னிலையில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை:-

1)தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தத்தை மலேசியத் தமிழர்கள் நாங்கள் அனைவரும் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

2)எழுத்துச் சீர்மை தமிழ்மொழிக்குக் கண்டிப்பாகத் தேவையில்லை என்பதை அறுதியிட்டுத் தெரிவிக்கின்றோம்.

3)எழுத்துச் சீர்மையை முன்னெடுக்கும் குழுவினர் உடனடியாக அதனைக் கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

4)தமிழக அரசு எந்த ஒரு எழுத்துச் சீர்த்திருத்தத்தையும் ஏற்றுக்கொண்டு அரசாணை பிறப்பிக்கக் கூடாது என தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் மு.கருணாநிதி அவர்களைத் தாழ்மையுடன் வேண்டுகிறோம்.

தவிர, எழுத்துச் சீர்மையைக் மறுத்தும் கண்டித்தும் எழுதப்பட்டு இணையக் கட்டுரைகளின் தொகுப்பு ஒன்றினை சுப.நற்குணன் அணியப்படுத்தியிருந்தார். அத்தொகுப்பு புலவர் ஐயாவின் பார்வைக்கும் அடுத்தக் கட்டப் பணிக்கும் பயன்படும் வண்ணம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Saturday, March 06, 2010

எழுத்துச் சீர்மை; தேவையற்ற வேலை: புலவர் இரா.இளங்குமரனார்

தமிழ்ப் பேரறிஞர், செந்தமிழ் அந்தணர், தமிழ்க்கடல் புலவர் ஐயா இரா.இளங்குமரனார் தற்போது மலேசியாவுக்கு வருகை மேற்கொண்டுள்ளார். மலேசியா முழுவதும் பல ஊர்களில் அவருடைய உரைப்பொழிவுகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வரிசையில் 5-3-2010 வெள்ளிக்கிழமை பேரா மாநிலத்தில் உள்ள பாரிட் புந்தார் எனும் ஊரில் புலவர் ஐயாவின் பேருரை நிகழ்ச்சி நடந்தது. பேரா மாநிலத் தமிழியல் ஆய்வுக் களமும், பாரிட் புந்தார் தமிழ் வாழ்வியல் இயக்கமும் கூட்டாக இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ‘தமிழினத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்’ என்ற தலைப்பில் அருமைப் பேருரை நிகழ்த்திய புலவர் ஐயா, தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தம் தொடர்பாகவும் ஆழமான செய்திகளைப் பேசினார். எழுத்துச் சீர்மை பற்றி அவர் பேசியதாவது;

இப்போது தமிழ்நாட்டில் சிலர் எழுத்துச் சீர்த்திருத்தம் செய்யப்போவதாக புறப்பட்டு உள்ளனர். அவர்கள் இ, ஈ, உ, ஊ ஆகிய எழுத்து வரிசைகளில் உள்ள 72 உயிர்மெய் எழுத்துகளில் சீர்மை தேவை என வலியுறுத்தி வருகிறார்கள்.

உண்மையில் சொல்ல வேண்டுமானால், இ, ஈ, உ, ஊ ஆகிய எழுத்து வரிசை மட்டுமல்ல தமிழுக்கு எந்தச் சீர்த்திருத்தமும் தேவையில்லை. தமிழ் எழுத்துகள் மிகவும் செப்பமாக இருக்கின்றன; படிக்கவும் எழுதவும் தட்டச்சவும் கணினியில் பதியவும் எளிமையாக இருக்கின்றன.


“எழுத்தெனப் படுப
அகர முதல னகர இறுவாய்
முப்பஃது என்ப”
என்று தொல்காப்பியம் சுட்டும்போது தமிழில் 247 எழுத்துகள் என சொல்லுவது பேதமைத்தனம்.

தமிழ் எழுத்துகளை இப்படி விரித்துக் காட்டி மருட்டுபவர்கள் ஆங்கில ரோமன் எழுத்துகளை உண்மையில் 26உடன் 4ஐ பெருக்கிக்கொள்ள வேண்டும். ரோமன் எழுத்துகளை 26 என்று சுருக்கிக் காட்டிவிட்டு தமிழ் எழுத்துகளை அதிகமாக்கிக் காட்டுவது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார்.

தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தம் என்பது சிலருடைய மூளைக் கோளாற்றின் வெளிப்பாடு.

மொழியைப் பரப்புவதற்கும் வளர்ப்பதற்கும் என்னென்ன வழிகள் இருக்கின்றனவோ அதனைப் பார்க்க வேண்டும். மொழியை ஒழிக்கும் வேலையைப் பார்க்கக் கூடாது.

குழந்தை கருவில் இருக்கும்போதே தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஆங்கிலவழிப் பள்ளியில் இலட்சங்களைக் கொடுத்து பதிவு செய்கிறார்கள்.

முதல் வகுப்புக்குப் போகும் குழந்தை எல்லாப் பாடங்களையும் தமிழ் படிக்க முடிகிறதா? தமிழ்க் கல்வி நாட்டில் நன்றாக இருக்கிறதா?

ஒரு பள்ளியில் தவறி விழுந்த குழந்தை “அம்மா” என்று கத்திவிட்டதற்காக கன்னத்தில் அறைகிறார்கள்; தலையைப் பிடித்து சுவரில் முட்டுகிறார்கள்; பள்ளியைச் சுற்றி முழங்காலிட்டு நடக்க வைக்கிறார்கள்.

இப்படிப்பட்ட ஒரு நாட்டில் தமிழைக் கற்பதற்குரிய வழிகளைக் காணமாட்டாமல், எழுத்தைச் சீர்த்திருத்தி தமிழை வளர்க்கப் போகிறோம் என்பது நகைப்புக்குரியதாகும்.

இறுதியாக ஒன்றைச் சொல்கிறேன். என்னைப் பெற்ற அம்மா மூச்சுவிட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாள். என் உயிர்; என் உடல்; என் வாழ்வு; என் வளம்; என் நலம்; என் தெய்வம்; என் மொழி எல்லாமே என் அம்மா. மருத்துவரிடம் காட்டுகிறேன். ஐயா என் அம்மாவைக் காப்பாற்றுங்கள் என்கிறேன். அதற்கு அந்த மருத்துவன் சொல்கிறான் “உன் அம்மாவைக் காப்பாற்றுவதற்கு முன் அவருடைய முதுகில் ஒரு எலும்பு வளைத்திருக்கிறது. அதை முதலில் சரி செய்கிறேன் என்றானாம்.

அப்படித்தான் இருக்கிறது தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழ் எழுத்தைச் சீர்த்திருத்தம் செய்கிறோம் என்று செயல்படுவது.

இவ்வாறு, புலவர் ஐயா தமது எழுச்சிமிகு உரையில் பேசினார்.



இதே நிகழ்ச்சியில், தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தத்தை மறுத்தும் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், எழுத்துச் சீர்மை தேவையில்லை என்பதை வலியுறுத்தும் வகையில் இணையத்தில் வெளிவந்த பலருடைய கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு (சுப.நற்குணன் தொகுத்தது) ஒன்றினைத் தமிழியல் ஆய்வுக் களத்தின் தலைவர் இர.திருச்செல்வனார் புலவர் ஐயாவிடம் வழங்கினார்.

புலவர் ஐயாவின் உரை தொடங்குவதற்கு முன்னதாக, ஏற்பாட்டுக்குழுச் செயலர் சுப.நற்குணன் எழுத்துச் சீர்மை தொடர்பான ஒளிக்காட்சித் தொகுப்பினைக் காட்டி விளக்கமளித்தார்.

இந்த அருமை நிகழ்ச்சியை தமிழ் வாழ்வியல் இயக்கத்தின் தலைவர் க.முருகையன் வழிநடத்தினார். எழுத்துச் சீர்மையால் தமிழுக்கு ஏற்படப்போகும் சிதைவுகளையும் விளைவுகளையும் தீர்மானமாக வாசித்துக் காட்டினார்.

மலேசியத் தமிழ்நெறிக் கழகப் பொறுப்பாளர்கள் அருள்முனைவனார், மாரியப்பனார், கு.மு.துரையனார் முதலியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள், மகளிர், மாணவர்கள் எனப் பல தரப்பினரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

பி.கு: எழுத்துச் சீர்மை குறித்த திருத்தமிழ் பதிவுகளைப் படிக்க இங்குச் சொடுக்கவும்

Thursday, February 04, 2010

தமிழைச் சீரழிக்கும் எழுத்துச் சீர்திருத்தம்


தமிழ் எழுத்துச் சீர்மை என்ற பெயரில் தமிழ் எழுத்துகளை மாற்றி அமைப்பதற்கான முயற்சி மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. எதிர்வரும் சூன் திங்களில் தமிழகத்தில் நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டில் அதற்கான அதிகாரப்படியான அறிவிப்பு செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.




இப்புதிய எழுத்துச் சீர்மையால் பல்வேறு நன்மைகள் விளையும் எனவும், தமிழுக்கு ஆக்கங்கள் ஏற்படும் எனவும் போலியான பரப்புரைகளும் புனைந்துரைகளும் தமிழக ஏடுகளில் - தமிழகத் தொலைக்காட்சிகளில் - இணைய ஊடகத்தில் பரப்படுகின்றன.

இதற்கிடையில், இந்த எழுத்துச் சீர்மை தேவையற்றது - இதனால் தமிழுக்கு யாதொரு பயனும் இல்லை - இது தமிழுக்கு மாபெரும் ஊறு விளைவிக்கும் என்ற எதிர்ப்புக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கிவிட்டன - சீரழிவிலிருந்து தமிழைக் காக்கும் குரல்கள் உலகம் முழுவதும் கேட்கத் தொடங்கிவிட்டன.


இதன் தொடர்பில், தமிழகத்தின் அறிஞரும் - மறைமலையடிகள், பாவாணர், பெருஞ்சித்திரனார், வ.சுப.மாணிக்கம் வழியில் தமிழ் பயின்றவரும் - பாரதிதாசன் பரம்பரை என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவரும் - முன்னணி வலைப்பதிவரும் ஆகிய முனைவர் ஐயா.மு.இளங்கோவனார் தம்முடைய கருத்தை வெளியிட்டு இருக்கிறார். அதில் ஒருபகுதி பின்வருமாறு:-

//சில அறிஞர்கள் இ,ஈ,உ,ஊ எழுத்துகளில் மாற்றம் வேண்டும் எனவும் அவ்வாறு மாற்றினால் 4 x 18 = 72 எழுத்துகளில் சீர்மை காணப்படும் எனவும் வாதிடுகின்றனர். ஆனால், இதைச் சீர்மை என ஏற்றுக்கொள்ள முடியாது.

இது முற்றாக மாற்றம் ஆகும். இந்த இடத்தில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். நாம் எழுதும் சொற்களில் இவ்வகை எழுத்துகள்தான் (அதாவது கி,கீ,மு,மூ) அதிகம் புழங்குகின்றன. இவ்வாறு வரும் 72 எழுத்துகளைப் புதிய குறியீடுகளால் எழுதத் தொடங்கினால் கற்றவர்களால் தமிழைப் படிப்பதே இயலாததாகிவிடும். புதியவர்கள் எப்படித் தமிழ் கற்பார்கள்?

ஆகவே, சீர்மைக்கும் மாற்றத்திற்கும் அறிஞர்கள் வேறுபாடு உணர வேண்டும்.

இவ்வாறு முப்பதாண்டுக் காலம் எழுத்துத்திருத்தம் வலியுறுத்திவரும் அறிஞர்கள் எதிர்வரும் செம்மொழி மாநாட்டில் தங்கள் விருப்பத்தை நடைமுறைப்படுத்தி வெற்றி பெறவேண்டும் என்று நினைக்கின்றனர்.

இவர்களை உலகெங்கும் பரவி வாழும் தமிழறிஞர்களில் பெரும் பிரிவினர் இணையம் வழியாகக் கண்டிக்கத் தொடங்கியுள்ளனர். // விரிவாகப் படிக்க இங்கு சொடுக்கவும்.

எழுத்துச் சீர்மை குறித்து திருத்தமிழ் வலைப்பதில் வந்த செய்திகள் இவை:-

Friday, January 08, 2010

மீண்டும் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்:- தமிழக அரசு அறிவிப்பு

தமிழ் வரிவடிவத்தில் உள்ள எழுத்துகளை மாற்றி அமைப்பது குறித்து தமிழக அரசு அதிகாரப்படியாக அறிவிப்பு செய்துள்ளது. மாலை மலர் இணையத்தளத்தில் (7.1.2010) வெளிவந்துள்ள செய்தி இது:-


*************************

சென்னை, ஜன 7
தமிழ் மொழியை வளப்படுத்தும் வகையில் தமிழ் எழுத்துக்களில் சில சீர்திருத்தங்களை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக தனிக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த குழு அரசுக்கு சில பரிந்துரைகளை செய்துள்ளது.

தமிழ் எழுத்துக்களில் எத்தகைய சீர் திருத்தங்களை நடைமுறைக்கு கொண்டு வருவது என்பது பற்றி அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இது தொடர்பாக அனைத்து தரப்பினரும் கருத்துக்கள் தெரிவிக்கலாம் என்று அறி விக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்ட பிறகு தமிழ் எழுத்துக்கள் சீர்திருத்தம் தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. பிறகு தமிழக அரசு தமிழ் எழுத்து சீர்திருத் தங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.

தமிழ் எழுத்துக்கள் ஏற்கனவே பல தடவை சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளன. முதலில் தமிழ் எழுத்துக்களின் வடிவங்கள் பனை ஓலைச் சுவடிகளில் எழுதுவதற்கு ஏற்ப மாற்றப்பட்டது.

18-ம் நூற்றாண்டில் இத்தாலி நாட்டைச்சேர்ந்த ஜோசப் என்ற அறிஞர் தமிழ் அகராதியை உருவாக்கினார். அது தமிழ் அச்சுக்கலைக்கு உதவியாக இருந்தது. எல்லாரும் அவர் செய்த தமிழ் எழுத்து சீர் திருத்தங்களை ஏற்றுக் கொண்டனர்.

1950-களில் திராவிடர் கழக நிறுவனர் ஈ.வெ.ரா. பெரியார் தமிழ் எழுத்துக்களில் ஏராளமான சீர்திருத்தம் செய்தார். இதன் பயனாக தட்டச்சு எந்திரங்களில் தமிழ் எழுத்துக்களை மிக எளிதாக பயன்படுத்த முடிந்தது.

எம்.ஜி.ஆர். தன் ஆட்சிக்காலத்தில் தமிழ் எழுத்துக்களில் சில சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். "லை, னை'' எழுத்துக்கள் பழக்கத்துக்கு வந்தன. முதலில் சிறிது எதிர்ப்பு தோன்றினாலும் நாளடைவில் இந்த எழுத்துக்கள் பழகிவிட்டன.

அது போல தமிழ் எழுத்துக்களை பயன்படுத்துவதில் சிரமத்தை குறைக்க தற்போது ஆலோசனை நடந்து வருகிறது. கணினிகளில் தமிழ் எழுத்துக்களை மிக, மிக சுலபமாக பயன்படுத்த இனி வரும் எழுத்து சீர் திருத்தம் உதவும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

இந்த சீர்திருத்தம் இணைய தளங்களில் தமிழ் பயன் பாட்டை அதிகரிக்கும் என்ற கருத்து நிலவுகிறது.
**********************************

தமிழ் வரிவடிவத்தில் செய்யப்படவுள்ள இந்த எழுத்து மாற்றம் குறித்து திருத்தமிழில் ஏற்கனவே எழுதி இருந்தேன். அவை:-

1.தமிழ் எழுத்து மாற்றம்:- சீர்திருத்தமா? சீரழிப்பா? (1)

2.தமிழ் எழுத்து மாற்றம்:- சீர்திருத்தமா? சீரழிப்பா? (2)

தமிழ் எழுத்துகளில் இப்போது செய்யப்படவுள்ள மாற்றங்கள் தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதாக பயனளிப்பதாக இல்லை. மாறாக, இந்த மாற்றத்தினால், தமிழ்மொழிக்குப் புதியதொரு நெருக்கடி ஏற்படப் போவது உண்மை.

இன்றைய நடைமுறையில் பயன்படுத்தப்படும் தமிழ் வரிவடிவம் மிகவும் செம்மையாகக் கட்டமைக்கப்பட்டுவிட்டது என்பதே உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் மக்களின் பொதுவான கருத்தாகும்.

மேலும், கணினி - இணையம் முதலான தொழில்நுட்பத் துறைகளிலும் தமிழ் எழுத்துகளின் பயன்பாட்டுக்கு உரிய நுட்பங்கள் வல்லுநர்களால் செயற்படுத்தப்பட்டுவிட்டன.
இந்தச் சூழலில், இப்போது செய்யப்படும் எழுத்து மாற்றமானது கண்டிப்பாகத் தமிழ்மொழியின் வளர்ச்சியையும் வேகத்தையும் மட்டுப்படுத்தும் அல்லது முடக்கிப்போடும்.

தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்துவதில் இருந்த பல்வேறு சிக்கல்கள் களையப்பட்டுவிட்ட இன்றைய சூழலில், இன்னும் சில சிரமங்கள் சிக்கல்கள் இருப்பதாகக் கூறி, தமிழ் எழுத்துகளை மாற்ற நினைப்பது புதிய வகையிலான பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.

அதுமட்டுமல்லாது, தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தும் புதிய வகை எழுத்து மாற்றத்தை, அயலகத் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளாமல் போனால் தமிழின் நிலைமை என்னவாகும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

தமிழர்கள் உலகம் முழுவதும் சிதறி இருந்தாலும் மொழியாலும் தமிழ் எழுத்தாலும் ஒன்றியிருக்கிறார்கள்; தொடர்பு கொண்டிருக்கிறார்கள்; கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

தமிழ் எழுத்துகளில் செய்யப்படும் மாற்றம் தமிழகத் தமிழர்களையும் அயலகத் தமிழர்களையும் அன்னியப்படுத்திவிடக்கூடும்.

தமிழ்மொழியிலிருந்து பிரிந்து இன்று கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு என பல மொழிகள் உருவாகி, மொழி வழியாகத் தனித்தனி இனமாகி பிறகு தமிழுக்கும் தமிழருக்கும் பகையாகி இருக்கின்ற பரிதாப நிலைமை போதாதா?

உலகத் தமிழர்களை நாடுவாரியாக சிறுபான்மை இனமாகப் பிரித்துப்போட்டு சிதறடிக்கும் சூழ்நிலை நமக்குத் தேவையா?


உலகத் தமிழர்கள் சிந்திப்பார்களா?

Thursday, January 07, 2010

தமிழ் எழுத்து மாற்றம்: சீர்திருத்தமா? சீரழிப்பா? (2)



தமிழ் எழுத்துகளில் இருக்கும் இகர, ஈகார, உகர, ஊகார எழுத்துகளில் மாற்றங்களைச் செய்வதற்கு சில தரப்பினர் முயன்று வருவது குறித்து கடந்த இடுகையில் எழுதி இருந்தேன். இந்த எழுத்து மாற்றத்தைச் செய்வதற்கு முன்மொழியப்படும் எழுத்து அமைப்பு பற்றியும் விளக்கி எழுதியிருந்தேன். மேலும், இந்த மாற்றத்தினால் தமிழ்மொழிக்குத் துளியளவு நன்மையும் கிடையாது என்பதையும் எழுதிருந்தேன். (அதனைப் படிக்க இங்கு சொடுக்கவும்)

இந்தத் தொடரில், தமிழ் எழுத்துகளை மாற்றி அமைக்கும் நோக்கத்தில் முன்னைக்கப்பட்டுள்ள இன்னுஞ்சில முன்மொழிவைப் (Suggestion) பற்றி அறிந்துகொள்ள உங்களை அழைக்கிறேன்.

இன்று தமிழ் எழுத்துச் சீர்த்திருத்த மேதைகளின் கண்களை அதிகம் உறுத்துவது உகர, ஊகார எழுத்துகள்தாம். அதனால், இவ்விரு வரிசை எழுத்துகளை மாற்றி அமைக்கவே முயற்(சூழ்ச்)சிகள் நடைபெற்று வருகின்றன.
அவற்றை எப்படி மாற்றி அமைக்கலாம் எனச் சீர்த்திருத்த மேதை ஒருவர் சொல்லியிருக்கும் எழுத்து வடிவங்கள் கீழே உள்ளன.

மாதிரி 1:-
இன்னொரு ஆய்வாளர், தமிழ் மற்ற மொழிகளுக்கு இணையாகச் செயல்பட வேண்டுமானால் கீழே உள்ளபடி தமிழ் எழுத்துகளை மாற்றி அமைக்கலாம் என முன்மொழிகிறார்.

மாதிரி 2:

இப்படியாக, ஆளாளுக்குத் தமிழ் எழுத்துகளை மாற்றி அமைக்க முனைந்தால், தமிழ் வரிவடிவத்தின் நிலைமை என்னவாகும் என்று எண்ணிப்பாருங்கள்?

நீண்ட காலத்தில் தமிழ்மொழிக்கு ஏற்படப்போகும் விளைவுகளை ஆராய்ந்து பாருங்கள்?

இந்தச் சூழலில், தமிழ்மொழியில் புதிய எழுத்து மாற்றத்தை அறிமுகப்படுத்த விரும்பும் சிலர், மிகவும் நாசுக்காக சில வரலாறுக் காரணங்களை மேற்கோள் காட்டுகின்றனர். அவை:-

1)தமிழ் எழுத்துகள் பல நூற்றாண்டுகளாக மாற்றத்திற்கு உள்ளாகி வந்துள்ளன.

2)வீரமாமுனிவர் எகரத்திலும் ஒகரத்திலும் (எ, ஏ, ஒ, ஓ) மாற்றத்தைச் செய்திருக்கிறார்.

3)தந்தை பெரியார் காலத்தில் செய்யப்பட்ட எழுத்து மாற்றம் இன்று நடைமுறையில் பயன்படுத்தப்படுகிறது. (லை, ளை, றா, றொ, றோ, னா, னை, னொ, னோ, ணை, னொ, னோ)

மேலே சொல்லப்பட்டுள்ள எழுத்துச் சீர்திருத்தங்கள் தமிழ்மொழியில் ஒரு செப்பமான கட்டமைப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன. இனியும் எந்தவித சீரமைப்போ மாற்றமோ தேவையில்லாத அளவுக்கு இன்று தமிழ்மொழி வடிவம் பெற்றுவிட்டது எனலாம். தற்போது இருக்கும் தமிழ் வரிவடிவங்கள் தகவல்தொழில்நுட்ப உலகத்திலும் எந்தவித சிக்கலும் இல்லாமல் பயன்படுத்தப்படுகின்றன.

ஆக, இனியும் தமிழைச் சீர்த்திருத்த வேண்டிய தேவையும் அவசியமும் இருப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும், சிலர் எழுத்து மாற்றத்தை வலிந்து செய்ய விரும்புகிறார்கள் என்றால், அதில் ஏதோ சில மறைமுக நிகழ்ப்பு (Hidden Agenda) அல்லது கமுக்கத் திட்டம் இருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது.

அப்படி ஏதும் இருக்குமானால், அது கண்டிப்பாக கீழே கூறப்பட்டவையாகவோ அல்லது அவற்றுக்குத் தொடர்புடையதாகவோதான் இருக்க முடியும். அவை:-

1)நீண்ட காலத்தில் தமிழின் இருப்பை மழுங்கடித்தல்.

2)தமிழ்மொழியின் தனி அடையாளத்தைச் சிதைத்தல்.

3)தமிழ் நெடுங்கணக்கின் செவ்வியல் அமைப்பைச் சின்னபின்னப்படுத்துதல்.

4)தமிழ் வரிவடிவத்துக்கே உரிய தனி எழுத்தமைப்பை அழித்தொழித்தல்

5)தமிழ் எழுத்துகள் தனி எழுத்துகள் அல்ல. மாறாக வடமொழி எழுத்துகளிலிருந்து திருந்தவை என்ற ஒரு தோற்றத்தை எதிர்காலத்தில் பரப்புதல்.

6)பழைய தமிழ் கருவூலங்களை படிக்க முடியாமல் செய்தல்.

7)தமிழின் தொன்மையில் ஐயத்திற்குரிய பிறழ்ச்சிகள் எதிர்காலத்தில் உண்டாவதற்கு வழியமைத்துக் கொடுத்தல்.

8)தமிழ் இலக்கண, இலக்கிய, அறிவு, பண்பாட்டு, வரலாற்றுச் செல்வங்கள் எதிர்காலத் தலைமுறைக்குச் சென்று சேருவதைத் தடுத்தாட்கொள்ளுதல்.

9)தகவல்தொழில்நுட்பம், கணினி, இணையம் சார்ந்த துறையில் தமிழ்மொழி அடைந்துவரும் வேகமான முன்னேற்றங்களை முறித்துப்போடுதல்.

10)நாளைய மின்னணுவியல் ஊழியில் தமிழ்மொழிக்கு எந்தவொரு இடமும் கிடைத்துவிடக்கூடாது என்பதை உறுதிபடுத்துதல்.

இப்படி இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஆனால், இவற்றைப்பற்றி எல்லாம் சிறிதுகூட கவலையே படாத எழுத்துச் சீர்திருத்த மேதைகள் சிலர் தமிழ் எழுத்துகளை மாற்றியே ஆகவேண்டும் என்று பல வழிகளில் முயன்று வருவதாக அறியப்படுகிறது.

அதற்கு ஏற்றாற்போல, கணினி உலகம், தகவல் தொழில்நுட்பம், அறிவியல் பார்வை, தமிழ் கற்றல், தமிழ் வளர்ச்சி, எழுத்துச் சீர்மை என்று பல பூதாகரமான சொல்லாடல்களைப் பயன்படுத்தி ஆய்வுகள் என்ற பெயரில் நுனிப்புல் மேய்வுகளை வழங்கி தமிழ் மக்களைக் குழப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு உலகம் முழுவதும் உள்ள தமிழ் அமைப்புகள், தமிழ் நல்லறிஞர்கள், தமிழ்ப் பற்றாளர்கள் குரல் கொடுக்க வேண்டும் – கண்டனங்களைத் தெரிவிக்க வேண்டும்.

தமிழ் எழுத்து மாற்றம் தேவையற்றது என்பதைத் தக்க சான்றுகளோடு நிறுவ வேண்டும்.

தமிழ் வரிவடிவத்தை மாற்றுவதற்கு முன்னெடுக்கப்படும் எந்தவொரு நிகழ்ப்பையும் (Agenda) முறியடித்துப்போட வேண்டும்.

தொடர்பான செய்திகள்:-

Monday, January 04, 2010

தமிழ் எழுத்து மாற்றம்: சீர்திருத்தமா? சீரழிப்பா? (1)


தற்போது நடப்பில் இருக்கும் தமிழ் எழுத்துகளை மாற்றி அமைப்பதற்குச் சிலர் புறக்கதவு வழியாகத் தீவிரமாக முயன்று வருவதாகச் செய்திகள் அடிபடுகின்றன.

“இவ்வாண்டு சூன் 23-27 வரை தமிழகம், கோவையில் நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டில் இது குறித்த ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. கலைஞர் கருணாநிதி புதிய எழுத்துச் சீர்திருத்தம் பற்றி அறிவிப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் ஓசையின்றி நடக்கின்றன.” என்றெல்லாம் தகவல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வந்துகொண்டிருக்கின்றன.

செம்மொழி மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவில் முக்கியப் பொறுப்புகளை வகிக்கும் சிலர் தங்களின் ஆளுமையையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி தமிழ் எழுத்துகளில் புதிய மாற்றங்களைச் செய்ய முனைவதாகவும் கேள்விப்படுகிறோம்.

இவர்களின் இந்தத் தனிப்பட்ட நிகழ்ப்பு (Personal Agenda) பல ஆண்டுகளாகத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இருந்தாலும், நற்றமிழ் அறிஞர் பெருமக்கள் சிலருடைய கண்டிப்பான எதிர்ப்புகளினால் தமிழ் எழுத்தை மாற்றும் முயற்சி மண்ணைக் கௌவிக்கொண்டு இருக்கிறது.

ஆனால், இப்போது தமிழ் செம்மொழி மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவில் இவர்கள் இடபெற்றுவிட்ட நிலையில்..; தமிழக முதல்வருக்கு மிகவும் அணுக்கமானவர்கள் ஆகிவிட்ட நிலையில்.. வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல, மெல்ல மெல்ல தமிழ் எழுத்துச் சீர்த்திருத்த நிகழ்ப்பை மீண்டும் தூசுதட்டி கையில் எடுத்துள்ளனர்.

இதனை முன்கூட்டியே அறிந்துகொண்ட நல்லறிஞர்கள் இந்தப் புல்லறிவுத் திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கத் துணிந்துவிட்டனர். இந்தச் சிக்கல் இன்னும் பெரிதாக வெடிக்காவிட்டாலும் நீறு பூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டிருக்கிறது.

இது இம்மாட்டில் நிற்க, இந்தப் புதிய எழுத்து மாற்றம் என்பது என்ன? எதை மாற்றப் போகிறார்கள்? ஏன் மாற்றப் பார்க்கிறார்கள்? தமிழ் எழுத்து மாற்றம் தமிழைச் சீர்படுத்துமா? அல்லது சீரழிக்குமா? என்பதை ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

இன்று தமிழில் நாம் பயன்படுத்திவரும் 247 எழுத்துகளில், ஏற்கனவே பல காலக்கட்டங்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வீரமாமுனிவர் காலத்திலும் பின்னர் அண்மை நூற்றாண்டில், பெரியார் காலத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது வரலாறு.


ஆனால் இப்போது, சிலர் புதிதாகச் செய்ய விரும்பும் மாற்றங்கள் தமிழ் எழுத்து அமைப்பில் பூதாகரமான சிதைவை ஏற்படுத்துகின்றன என்று நற்றமிழ் அறிஞர்கள் கருதுகின்றனர். அதனைப் படிப்படியாகக் காண்போமா?

இப்போது சீர்த்திருத்தம் என்ற பெயரில் மாற்றப்பட வேண்டிய எழுத்துகளாக இகர - ஈகார, உகர – ஊகார எழுத்துகள் அடையாளங் காணப்பட்டுள்ளன.

காரணம், இவை நான்கும் வெவ்வேறு வடிவங்களில் இருக்கிறதாம். குறிப்பாக, உகர ஊகார எழுத்துகளை எழுதுவதற்கு நிறைய குறியீடுகளை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமாம்.

கவனிக்க:-

1)கு, டு, மு, ரு, ழு, ளு –இந்த 6 உகரங்களில் கீழ்நோக்கிச் சுழிக்க வேண்டும்.

2)ங, சு, பு, யு, வு –இந்த 5 எழுத்துகளில் கீழ்நோக்கி ஒரு கால் இட வேண்டும்.

3)ஞு, ணு, து, நு, லு, று, னு –இந்த 7 உகரங்களில் கீழே அரை சுற்றுவந்து மேல்நோக்கி கோடு ஏற்ற வேண்டும்.

இப்படியாக உகர எழுத்துகள் ஒரு சீர்மையில் இல்லாமல், பல்வகைப்பட்டு இருக்கின்றனவாம். ஊகாரமும் இப்படியேதானாம். ஆகவேதான், இவற்றைச் சீரமைத்து ஒரே அமைப்பில் எழுத வேண்டுமாம். அதற்காகக் கீழே உள்ளது போன்ற குறியீடுகளை பயன்படுத்த வேண்டுமாம்.

மேலே படத்தில் காட்டப்பட்ட குறியீடுகளைப் பயன்படுத்தினால், அதிகமான எழுத்து வடிவங்களை நினைவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் போகுமாம். குழந்தைகள் வெகு எளிதாகத் தமிழ் எழுத்துகளைப் படித்துக்கொள்வார்களாம். தமிழ் எழுத்துகளை எழுதப் பயன்படும் குறியீடுகளின் எண்ணிக்கையைக் குறைத்துவிடலாமாம்.

எப்படி என்கிறீர்களா? இதோ இப்படித்தானாம்.

(மாற்றி அமைக்கப்பட்ட இகர, ஈகார உகர, ஊகாரங்கள்)


இந்தப் புதிய மாற்றத்தினால், தமிழ்மொழிக்குப் பெரிதாக ஏதும் பயனுண்டா என்று கேட்டால் இல்லை! இல்லை! இல்லை! என்பதே பதில். ஆனால், இதனால் மேலே சொன்னது போன்ற சில நன்மைகள் உண்டு என்று சிலர் வாதிடுகின்றனர். அவர்களுடைய வாதங்கள் ஏற்புடையதாகத் இல்லை என்பது மட்டுமல்ல அறிவுடைமையானதும் அல்ல.

அவர்களின் வாதங்களுக்கு நாம் சில எதிர்வாதங்களை வைக்க முடியும்.

1)அதிகமான எழுத்து வடிவங்களை நினைவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் போகும்.

=>இத்தனை காலமும் அடிப்படை எழுத்துகளாக தமிழில் 30 மட்டுமே இருந்தாலும், நெடுங்கணக்கில் உள்ள 247 எழுத்துகளையும், அவற்றுக்குரிய வடிவங்களையும் பல்லாயிரம் கோடி தமிழ் மக்கள் எந்தவொரு சிறு சிக்கலும் இன்றி படித்தும் எழுதியும் நினைவில் வைத்தும் வந்திருக்கிறோமே எப்படி?

=>பிற்பட்ட காலத்து மக்களே இவற்றைப் படிக்கவும் எழுதவும் நினைவில் வைத்துக்கொள்ளவும் முடிந்திருக்கிறது என்றால், அறிவும் ஆற்றலும் நுட்பமும் நிரம்ப இருக்கும் தற்கால மக்களாலும் எதிர்கால மக்களாலும் முடியாதா என்ன?

2)குழந்தைகள் வெகு எளிதாகத் தமிழ் எழுத்துகளைப் படித்துக்கொள்வார்கள்.

=>எளிதாகப் படித்துக்கொள்ளுதல் என்பது கற்பித்தலையும் கற்றலையும் சார்ந்ததே அன்றி எழுத்துகளைச் சார்ந்திருப்பது அல்ல. அப்படிப் பார்த்தால், தமிழைவிட அதிகமான எழுத்துகளை வைத்திருக்கும் சீனர்களும், கொரியர்களும், சப்பானியர்களும் கல்வியில் தமிழர்களை விடவும் பின்தங்கி இருக்க வேண்டும் அல்லவா?

=>சீனர்களும் கொரியர்களும் சப்பனியர்களும், தமிழறிஞர்கள் என்று சொல்லிக்கொண்டு தமிழைச் சீர்படுத்த துடியாய் துடிப்பவர்களைவிட பல மடங்கு துடிதுடித்து அவர்கள் மொழியைத் திருத்தியிருக்க வேண்டுமல்லவா?

3)தமிழ் எழுத்துகளை எழுதப் பயன்படும் குறியீடுகளின் எண்ணிக்கையைக் குறைத்துவிடலாம்.

=>இற்றைக் காலத் தொழிநுட்பத்தின் குழந்தையாகிய கணினியிலும் கைப்பேசியிலும் தமிழ்க் எழுத்துகளை எழுதுவதில் பாரிய சிக்கல் ஏதுமில்லை என்ற சூழலில் எழுத்துக் குறியீடுகளைக் குறைக்க வேண்டியதன் தேவையும் அவசியமும் என்ன?

=>குறியீடுகளைக் குறைப்பதனால் தமிழ்மொழியில் ஏற்படப் போகும் ஆக்கங்கள் – வளர்ச்சிகள் என்னென்ன?

=>குறியீடுகளைக் குறைக்கிறோம் என்று சொல்லி, தமிழ் எழுத்துகளின் தனித்த அடையாளத்தைச் சிதைப்பது முறைதானா?

=>எழுத்துகளை மாற்றி அமைத்துவிட்டால் அதனை மக்கள் உடனே புரிந்துகொண்டு சரளமாகப் படித்துவிடவோ அல்லது எழுதிவிடவோ முடியுமா?

=>எழுத்துகளை மாற்றி அமைத்துவிட்ட பிறகு, பழைய எழுத்து முறையில் எழுதப்பட்ட அறிவுக் களஞ்சியங்களைப் படிப்பது எப்படி?

=>கணினி, கைப்பேசி தொழில்நுட்பத்திற்கு ஏற்ப புதிய எழுத்து வடிவங்களைச் செய்வது யார்? எப்படி? எப்போது?

இப்படியாக பல கேள்விகளுக்கு எழுத்துச் சீர்திருத்த மேதைகள் இன்னும் பதில்கள் சொல்லியப்பாடில்லை. ஆனால், பாத்திரமே இல்லாமல் பாலைக் காய்ச்சத் துடிக்கிறார்கள்.

இப்போதைக்கு இந்த மட்டில் நிறுத்தலாம் என எண்ணுகிறேன். தமிழ் எழுத்து மாற்றம் குறித்து என்னுடைய புரிதலை இங்கு நினைக்கிறேன். இதில், மேலும் தெளிவு வேண்டின் விளக்குவதற்கு அணியமாக(தயார்) உள்ளேன். இதில், மாற்றுக் கருத்துகள் உடையவர்கள் தெரிவிக்க வேண்டுகிறேன்.

இதுபற்றி எழுத இன்னும் செய்திகள் கிடக்கின்றன. அவை நமக்கு வயிற்று எரிச்சலை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, வாய்விட்டுச் சிரிக்க வைக்கின்றன. ஆய்வு என்ற பெயரில் அப்படியெல்லாம் எழுதியிருக்கிறார்கள்.

அதைப்பற்றி, அடுத்த இடுகையில் இன்னும் தொடர்வேன்.

தொடர்பான இடுகை:-

Blog Widget by LinkWithin