2016ஆம் ஆண்டு நம் மலேசியத் திருநாட்டில்
தமிழ்க்கல்வி தொடக்கப்பட்டு 200 அகவை நிறைவடைகிறது.
கடந்த 200 ஆண்டாக இந்நாட்டில் தமிழ்
மொழி, இனம், சமயம், பண்பாடு, கலை, இலக்கியம் ஆகிய அனைத்தும் இடையறாது வாழ்ந்து
கொண்டிருப்பதற்கும் வளர்ந்து கொண்டிருப்பதற்கும் தமிழ்க்கல்வியின் பங்களிப்பு மிக
மிக உன்னதமானது; உயர்வானது; அளப்பரியது
என்றால் அது மிகையாகாது.
மலேசியாவில் 200 ஆண்டு நிறைவை அடையும் தமிழ்க்கல்விக்கு மனமகிழ்ச்சியோடு
மகுடம் சூட்டி மாண்புறச் செய்ய வேண்டியது மலேசியத் தமிழரின் கடமை; அதனால் மலேசியத் தமிழருக்குப் பெருமை.
மலேசியாவில் தமிழ்க்கல்விக்கென்று தனி
வரலாறு உண்டு. மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளுக்கு நீண்ட
நெடிய பாரம்பரியம் உண்டு. மலேசியாவில் தமிழ்க்கல்வி கற்று வாழ்வில்
முன்னேறியவர்கள் பற்றி ஆயிரமாயிரம் வெற்றிக் கதைகள் உண்டு.
1816 மலேசியக் கல்வி வரலாற்றில் ஒரு
முக்கியமான ஆண்டு. அன்றைய காலத்தில் மலாயாவில் ஆட்சி நடத்திய பிரிட்டிசார்
அரசாங்கம் பினாங்கில் ஒரு பள்ளிக்கூடத்தைத் தொடங்கியது.
பினாங்கு பொதுப்பள்ளி அல்லது ஆங்கிலத்தில் Penang Free School என்பதுதான்
அந்தப் பள்ளி. ஆங்கிலம் வழி கல்வி கற்க இந்தப் பள்ளி உருவாக்கப்பட்டது. இந்தப் பள்ளியில் தான் முதன்முதலாக, நமது அன்னைமொழியாம் தமிழ்மொழிக்காக ஒரு தமிழ்
வகுப்பு தொடங்கப்பட்டது. 21.10.1816 நாளன்று அன்றைய Penang
Free School பள்ளியின் தலைவராக இருந்த சர் ரெவரண்டு அட்சிங்ஸ்
என்பவர் இந்தத் தமிழ் வகுப்பைத் தொடங்கியதாக வரலாறு கூறுகின்றது.
அன்று தொடங்கி இந்த 21.10.2016ஆம் ஆண்டு வரையில் நமது மலேசியத் திருநாட்டில்
தமிழ்ப்பள்ளிகள் இயங்கி வருகின்றன; தமிழ்க்கல்வி இடையறாது நடைபெற்று வருகின்றது
என்பது மகிழ்ச்சியும் பெருமையும் தருகின்ற செய்தியாகும்.
அன்று பினாங்கில் ஒற்றை வகுப்பறையில் தொடங்கிய தமிழ்க்கல்வி சரியாக 200
ஆண்டுகளைக் கடந்து இன்று அரச வேராக ஆழ ஊன்றி ஆல விழுதுகளாகப் பெருகி 524
பள்ளிகளில் தமிழ்க்கல்வி பயிலப்படுகிறது என்பது நாம் அடைந்திருக்கும் மிகப்பெரிய
சாதனை என்று சொன்னால் மிகையாகாது.
தமிழ்க்கல்வியின் சாதனை தமிழ்ப்பள்ளிகளோடு நின்றுவிட்டதா என்றால், இல்லை என்றுதான்
சொல்ல வேண்டும். இடைநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, ஆசிரியர் கல்விக்கழகம், பல்கலைக்கழகம்
வரையில் தமிழ்க்கல்வியைப் பயிலும் நிலை இன்று கைகூடி உள்ளது.
பாலர் பள்ளித் தொடங்கி முனைவர் பட்டம் வரையில் தமிழ்க்கல்வியைப் படிக்கும்
வாய்ப்பையும் உரிமையையும் மலேசியத் தமிழர்களாகிய நாம் பெற்று இருக்கிறோம் என்பதைச்
சொல்லும் பொழுதே நாவெல்லாம் இனிக்கிறது; மனமெல்லாம் மணக்கிறது.
இந்தியா, தமிழ்நாட்டு, இலங்கை முதலான தமிழின் தாய்நிலத்திற்கு வெளியே கடல் கடந்த ஒரு நாட்டில் கடந்த 200
ஆண்டுகளாகத் தமிழ்மொழியும் தமிழ்க்கல்வியும் நீடித்து வருவதும் நிலைபெற்று
வாழ்வதும் கல்வி மொழியாக விளங்குவதும் போற்றுதலுக்கு உரிய மரபு; கொண்டாடப்பட
வேண்டிய மாண்பு என்றால் அது மிகையாகாது.
மலேசியத் தமிழர்கள் வரலாற்றில்
தமிழ்ப்பள்ளிகளுக்குத் தனிச்சிறப்பிடம் உண்டு என்றால் மிகையாகாது.
பல்லாயிரக்கணக்கில் பட்டதாரிகள், கல்வியாளர்கள்,
நிபுணர்கள், தொழிலதிபர்கள், வணிகர்கள், விளையாட்டாளர்கள், தலைவர்கள்,
அரசியல்வாதிகள், அனைத்துலக நிலையிலான சாதனையாளர்கள் என
வெற்றியாளர்கள் பலர் தமிழ்ப்பள்ளிகளிலிருந்து உருவாகி வந்திருக்கின்றனர். அன்று
தமிழ்நாட்டிலிருந்து ஒப்பந்தத் தொழிலாளர்களாக மலாயாவுக்கு வந்த பலர் இன்று
முதலாளிகளாகவும் திறன்மிக்க தொழிலாளர்களாவும் உருவாகுவதற்குத் தமிழ்ப்பள்ளிகள்
பங்காற்றியுள்ளன. அதுமட்டுமல்லாமல்
தமிழர்களின் கலை, இலக்கியம், பண்பாட்டு, சமய வளர்ச்சிக்கும் தமிழ்ப்பள்ளிகளின் பங்களிப்பு நிறைவாகவே
இருக்கின்றது.
1816
முதல் 2016 வரையில் 200 ஆண்டுகளில் பல்வேறு
இடர்கள், நெருக்கடிகள், அரசியல் பூசல்கள், பொருளியல் வெல்விளிகள், சமுதாயச் சிக்கல்கள், சிந்தனைப் போராட்டங்கள், ஏற்றத் தாழ்வுகள் எனப் பற்பல
பரிணாமங்களைக் கடந்து மலேசியாவில் தமிழ்க்கல்வி வெற்றிக் கண்டிருக்கும் இந்தத்
தருணத்தில், மலேசியத் தமிழர்கள் அனைவரும் பெருமைகொள்ள வேண்டும். அதே
வேளையில், மலேசியாவில் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்காகப்
பாடுபட்ட அரசியல், சமூக, பொது இயக்க, தோட்டத் தொழிற்சங்க, தன்னார்வ முன்னோடிகளையும்
மூத்த தலைவர்களையும் இந்தத் தருணத்தில் நன்றியோடு நினைத்துப் பார்க்கவேண்டும்.
மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடர்ந்து
நிலைக்கவும் அதனுடன் தமிழ்மொழி
நிலைபெற்று வாழ வேண்டும். இதன்வழி மலேசியத் தமிழர்களின் கலை, இலக்கியம், பண்பாடு,
வரலாறு, வாழ்வியல், விழுமியங்கள் ஆகிய அனைத்தும் காக்கப்பட வேண்டும். அனைத்திற்கும் மேலாக மலேசியாவில்
தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்க்கல்வியும் அடுத்துவரும் நூற்றாண்டுகளுக்கு முன்னெடுத்துச்
செல்லப்பட வேண்டும்.
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்க்கல்வி!
@சுப.நற்குணன்
No comments:
Post a Comment