Tuesday, January 15, 2008

பொங்கல் - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து

பொங்கல்-தமிழரின் அறிவாண்மை விழா (பகுதி 1)

"பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலக்
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றி மூத்த குடி"
- என்பது புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியரின் அரும்பாடலாகும்.

இந்தப் பாடல் கூறும் கருத்து யாதெனில், "முற்காலத்தில் பேரோசையுடன் ஆர்ப்பரித்து எழுந்த மாபெரும் வெள்ளம் இவ்வுலகத்தையே மூழ்கடித்தது. அவ்வெள்ளம் நீங்கியபோது முதலில் மலை தோன்றியது. அதனைத் தொடர்ந்து, அதன் கீழ்ப்பகுதியான மண் தோன்றுவதற்கு முன்பதாக இருந்த காலக்கட்டத்தில் தோன்றி, வீரம் மிகுந்து விளங்கிய குடி எம்முடைய குடியினர். அக்காலக்கட்டத்தில் பிற குடியினர் எவரும் தோன்றியிருக்கவில்லை. இத்தகைய சிறப்புப்பெற்ற எமது குடியினர் பொய்மையை நீக்கி புகழ்பெற்று, நாளுக்கு நாள் சிறப்படைவதில் வியப்பு என்ன இருக்கிறது?" என்பதாகும்.

இந்தப் பாடலில் தமிழரின் தொன்மையும் வரலாறும் வீரமும் சொல்லப்பட்டுள்ளன. இவற்றோடு, கவனிக்கப்பட வேண்டிய செய்தி என்னவெனில், தமிழர் வாழ்ந்த மூன்று திணைகள் அதாவது நிலப்பகுதிகள் சுட்டப்படுகின்றன. 'கல்தோன்றி' என்பது குறிஞ்சி நிலம் தோன்றியதையும், 'மண்தோன்றா' என்பது மருதநிலம் இன்னும் தோன்றாததையும் குறிக்கின்றன. 'கல்தோன்றி மண்தோன்றா' என்பதற்கு இடையில் மறைமுகமாக முல்லைநிலத்தை இப்பாடல் சுட்டிக்காட்டுகிறது. குறிஞ்சி என்பது மலையும் மலைசார்ந்த இடமுமாகும். முல்லை காடும் காடுசார்ந்த நிலமுமாகும். மருதமானது நாடும் நாடுசார்ந்த நிலமுமாகும். இந்த மூன்று நிலப்பரப்புகளோடு கடலும் கடல்சார்ந்த நிலமுமாகிய நெய்தல் நிலமும், வறட்சியான பாலை நிலமும் சேர்ந்த ஐந்து நிலப்பகுதிகளைத் தமிழ் இலக்கியங்கள் ஐந்திணை என்று குறிப்பிடுகின்றன.

மனித நாகரிகம் தொடங்கியது குறிஞ்சி நிலத்தில்தான். குறிஞ்சிநில மாந்தன் காட்டு விலங்குகளை வேட்டையாடியும், தீக்கல்லால் எழுப்பப்பட்ட தீயில் இறைச்சியைச் சுட்டு உண்டும் குகைகளில் வாழ்ந்து வந்தான். முல்லை நிலத்தில், காடுகளில் விளைந்த காய், கனி, கிழங்குகளை உண்டும், மலைகளில் ஓடிய அருவிநீரைப் பருகியும் மக்கள் நாடோடிகளாக வாழ்ந்து வந்தனர். நாளடைவில் குழுவாக, கூட்டமாக, குலமாக வாழவும் உணவுகளைச் சேமித்துவைத்தும், விலங்குகளைப் பழக்கி பயணம் போகவும் கற்றுக்கொண்டான். அதன் பிறகு, மருத நிலத்தில் குடியேறி நிலையான குடியிருப்புகளை அமைந்துக்கொண்டு ஆடுமாடுகளை வளர்த்தும், பயிர்தொழில் செய்தும் வாழ மக்கள் கற்றுக் கொண்டனர். இங்குதான் பழந்தமிழர் தம் வாழ்வியல் நெறிகள், பண்பாடுகள், கலைகள், விழாக்கள், இலக்கியங்கள் ஆகியவற்றைப் பெருமளவில் உருவாக்கி வளர்த்துக்கொண்டனர். இந்தப் பழங்காலம் முதற்கொண்டு தமிழ் மக்கள் கொண்டாடிவரும் பண்பாட்டுப் பெருவிழாதான் பொங்கல் திருநாள். மருத நில மக்களின் மன வளர்ச்சியின் எச்சமாகவும் பண்பாட்டு உணர்ச்சியின் உச்சமாகவும் பொங்கல் விழா விளங்குகிறது. முற்றிலும் இயற்கையோடு இயைந்த விழாவாகப் பழந்தமிழர்கள் பொங்கலைக் கொண்டாடியுள்ளனர். இதுதான் வாழ்வு, இதுதான் நாகரிகம், இதுதான் பண்பாடு என ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் வாழத்தொடங்கிய காலத்திலேயே, அன்புணர்ச்சிக்கும் அறிவாண்மைக்கும் பொருத்தமான ஓர் விழாவைத் தமிழர்கள் கொண்டாடியிருப்பது நம்மை வியக்கவைக்கிறது.

உயிர்கள் வாழ வேண்டுமானால் உணவு தேவை. அன்றைய காலத்தில் உணவுக்காக மக்கள் பயிர்த்தொழிலையே நம்பியிருந்தனர். இன்றும்கூட பயிர்த்தொழிலே உலகநாடுகளின் உயிர்த்தொழிலாக இருக்கின்றது. ஆயிரம் தொழில்கள் தோன்றினாலும் பயிர்த்தொழிலால் மட்டுமே உலகம் நிலைக்க முடியும். அதனால்தான், 'சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' என்று திருவள்ளுவர் தொடங்கி 'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்று மாபாவலன் பாரதி வரையில் பயிர்த்தொழிலை ஏற்றிப் போற்றியுள்ளனர்.

இந்தப், பயிர்த்தொழில் செழிக்கவேண்டுமானால் நீர் வளமும் நில வளமும் வேண்டும். இவை இரண்டும் வேண்டுமானால் மழை பொழிய வேண்டும். மழை பொழிவதற்கு நீர் நிலைகளிலிருந்து நீரையெடுத்து ஆவியாக்கக் கதிரவனின் துணை வேண்டும். மேலும், தாவர வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் கதிரவனின் ஒளி வேண்டும். மாந்தனுக்கு இயற்கையான மருத்துவ பாதுகாப்பையும் சூரிய ஒளி தருகிறது. இயற்கையின் இத்தனை கூறுகளையும் உணர்ந்திருந்த அன்றையத் தமிழர்கள் ஏற்படுத்திய பண்டிகையாகப் பொங்கல் நன்நாள் விளங்குகிறது. இயற்கையோடு இயைந்த தமிழர் தம் வாழ்வை நினைத்துப் பார்க்கையில் இன்றையத் தமிழர்களான நமக்குப் பெருமையாக இருக்கிறது. (பகுதி 2 பார்க்க..)

பொங்கல்-தமிழரின் அறிவாண்மை விழா (பகுதி2)

பொங்கல் விழாவில் சூரியனுக்குத் தனி இடம் தரப்பட்டு வழிபடப்படுகின்றது. உலகின் ஆதி சோதியாக விளங்கும் சூரியனைத் தமிழ் மக்கள் இறைமை உணர்வோடு போற்றினார்கள் என்பதற்கான நேரடியான சான்றைப் பொங்கல் விழாவில் காணமுடிகிறது. தமிழன் முதன் முதலில் ஞாயிறை(ஒளியை)தான் வணங்கியிருக்கிறான். ஞாயிறு எழுந்தால்தான் உலகில் எல்லாவகை இயக்கமும் செயலும் நடைபெறும். உலகின் நல்வாழ்வுக்குச் சூரியன் ஆதாரமாக இருப்பதால்தான், தை முதல் நாள் சூரியப் பொங்கல் என்று கொண்டாடப்பெறுகிறது. உலக இயக்கத்திற்கு மூலமாக இருக்கும் சூரியனுக்கு வணக்கஞ்செய்வதும் நன்றிசொல்வதும் தமிழரின் உயரிய பண்பாட்டின் அடையாளங்களாகும்.

சூரியனுக்கு அடுத்து பொங்கல் திருநாளில் சிறப்புப்பெறுவது உழவுத் தொழிலுக்கு இன்றியமையாது விளங்கும் மாடுதான். வயலில் ஏர் இழுப்பது, பரம்பு அடிப்பது, அறுவடை காலத்தில் சூடடிப்பது, களத்து நெல்லை களஞ்சியத்தில் சேர்ப்பது ஆகிய அனைத்துப் பணிகளையும் செய்வது மாடுதான். அதோடு, பாலையும் நெய்யையும் உணவாகக் கொடுத்து உடலை வளர்ப்பதும் மாடுதான். மாட்டுப் பொங்கலன்று மாடுகளைக் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, பொட்டிட்டு, மாலையிட்டு, பொங்கலிட்டு வணக்கம் செய்வது தமிழரின் உயிரிரக்கப் பண்பாட்டை வெளிப்படுத்திக் காட்டுகிறது. ஐந்தறிவு உயிர்களையும் தமிழர்கள் உயர்வாக மதித்துப் போற்றியுள்ளனர் என்பதற்கு இதனைவிட வேறு அடையாளம் வேண்டுமோ?

தைமாதத்தின் மூன்றாம் நாள் காணும் பொங்கல் என்றும் கன்னிப் பொங்கல் என்றும் வழங்கப்படுகிறது. இந்நாளில், ஒருவரை ஒருவர் கண்டும், உற்றார் உறவினர் வீடுகளுக்குச் சென்றும் கண்டு, கேட்டு, உண்டு, கலந்துரையாடி கொண்டாடுவர். கன்னிப் பெண்கள் ஒன்றாகக்கூடி பொங்கலிட்டு கடவுள் வழிபாடு செய்வர். இளைஞர்கள் தங்களின் வீரத்தை வெளிக்காட்ட காளைகளை விரட்டிப் பிடிப்பர். இதனைச் சல்லிக்கட்டு, ஏறு தழுவுதல், மஞ்சு விரட்டு என்று அழைப்பது வழக்கம். மொத்தத்தில் அனைவரையும் ஒன்றிணைத்து மனமகிழ்வை ஏற்படுத்தும் ஒற்றுமை விழாவாகப் பொங்கல் பெருநாள் இருந்துள்ளது. அதோடு, தமிழர்களின் வீர மரபைப் பேணிக்காக்கும் விழாவாகவும் இருந்துள்ளது.

உடல் உழைப்புக்கும் உழவுத் தொழிலுக்கும், அந்த உழவுக்கு உறுதுணையாக இருக்கும் கதிரவனுக்கும் மாடுகளுக்கும் மதிப்பளித்து நன்றிசெலுத்தும் உயர்ந்த நெறியைத் தம்முள்ளே கொண்டுள்ள இந்தப் பொங்கல் விழா, மதம் கடந்த நிலையில்தான் அன்றைய நாளில் கொண்டாடப்பட்டது. எனவேதான், பொங்கல் பண்பாடு சார்ந்த விழா எனப்படுகிறது. பொங்கல் விழா எந்தவொரு மதம் சார்ந்ததோ அல்லது சமயம் சார்ந்ததோ அன்று. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர், அவர் எந்தச் சமயம் சார்ந்தவராக இருந்தாலும் பொங்கலைக் கொண்டாடலாம். ஆகவே, பொங்கல் மதங்களைக் கடந்து மாந்த நேயத்தை முன்படுத்தும் முத்தமிழ் விழா என்பது அறியவேண்டிய ஒன்றாகும். பழந்தமிழரின் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற மாந்த நேயப் பண்பாட்டைப் பொங்கல் விழாவிலும் தெள்ளென காணமுடிகிறது.

பொங்கல் திருநாள் தைத்திங்கள் முதல்நாளில் வருவதால், தை முதல்நாளே தமிழாண்டுப் பிறப்பு என்றும் சொல்லப்படுகிறது. தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாகவும் கொண்டாடப்படுகிறது. இதற்குக் காரணம், தை முதல் நாளில்தான் சூரியன் தட்சிணாயத்திலிருந்து அதாவது தென் திசையிலிருந்து உத்தராயணத்துக்கு அதாவது வடதிசைக்கு மாறுகிறது. மேலும், தமிழர்கள் ஓராண்டை ஆறு பருவங்களாகப் பிரித்து வைத்தனர். அவை, இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனிக் காலம் எனப்படும். தமிழர் இளவேனில் காலத்தையே ஆண்டின் தொடக்கமாகக் கொண்டனர். இந்த இளவேனிற் காலமும் தைத்திங்களில்தான் தொடங்குகிறது. தைப்பிறப்பே தமிழாண்டின் தொடக்கம் என்பதற்கான சான்றுகள் நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, கலித்தொகை முதலான தமிழ் இலக்கியங்களில் உள்ளன. இதிலிருந்து, தமிழர்கள் மிகப் பழங்காலத்திலேயே வானியல் கலையிலும் கணக்கியல் கலையிலும் தெளிவுபெற்றிருந்தனர் என்பது நமக்குத் தெரியவருகிறது. இந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டுதான், 1921ஆம் ஆண்டில் தனித்தமிழ் தந்தை மறைமலை அடிகளார் தலைமையில் பல்வேறு சமயங்களையும் சேர்ந்த ஐந்நூறு தமிழறிஞர்கள் ஒன்றுகூடி தைமுதல் நாளில் திருவள்ளுவர் பெயரில் தமிழுக்குத் தொடராண்டைத் தொடங்கினர்.

மொத்தத்தில், உழைப்பை மதித்தல், உழவுத் தொழிலுக்கு மதிப்பளித்தல், நன்றியுணர்வு, மாந்த நேயம், ஆன்ம நேயம் முதலான தமிழரின் உச்சமான பண்பாட்டு நெறிகளைப் பொங்கல் விழா வெளிப்படுத்திக் காட்டுகிறது. தமிழர்கள் வீர மரபுவழித் தோன்றல்கள் என்பதையும் பொங்கல் விழா விளக்குகிறது. அது மட்டுமல்லாமல், தமிழர் இயற்கை அறிவு, அறிவியல் நுட்பம், வானியல் கலை, கணக்கியல் முதலானவற்றில் பழங்காலத்திலேயே ஆழ்ந்த அறிவும் தெளிவும் பெற்றிருந்தனர் என்ற உண்மையை உலகத்திற்கு உணர்த்துகிறது. ஆக, மதம் கடந்த பெருநாளாகவும், பண்பாட்டு நெறிகளைப் பேணும் பண்பாட்டு விழாவாகவும், தமிழரின் ஒற்றுமையுணர்வை வளர்க்கும் பழம்பெரும் தமிழ்விழாவாகவும் சிறப்புப் பெற்றுள்ள பொங்கல் திருநாளைத் தமிழர்கள் வெகு சிறப்பாகக் கொண்டாட வேண்டும்; அதன் உண்மைப் பொருளறிந்து போற்ற வேண்டும். (முற்றும்)
Blog Widget by LinkWithin