Saturday, August 04, 2007

அறிஞர் போற்றிய அருந்தமிழ்


1. டாக்டர் ஜி.யு.போப் (DR.G.U.POPE) அவர்கள் தமிழைப் படித்து, தமிழிலே உள்ள கருத்துகளை ஆய்ந்தறிந்து, இந்த மொழி உயர்ந்த மொழி; ‏இது ஒரு செம்மொழி எ‎ன்றெல்லாம் எடுத்துக்கூறினார். ‏ஜி.யு.போப் அவர்கள் 50 ஆண்டுகாலம் தமிழுக்குத் தொண்டு செய்தவர். அவர் மறையக்கூடிய இறுதி நேரத்தில் ‏தம்முடைய கல்லறையில் "இங்கு ஒரு தமிழ் மாணவ‎ன் உறங்குகிறா‎ன்" என்று எழுதச் சொ‎ன்னவர். கிறித்துவ சமயத்தைப் பரப்புவதற்காகத் தமிழ் நாட்டுக்கு வந்தவர் தமிழ்த்திருவாசகத்தைப் படித்துவிட்டு "எலும்பை உருக்கும் பாட்டு திருவாசகம்" எ‎ன்று உருக்கத்தோடு கூறியுள்ளார்.

2. பெர்சிவல் பாதிரியார் (REV.PERCIVAL) அவர்கள் தமிழைக் கற்றுணர்ந்தபி‎ன் "ஆற்றல்மிக்கதாகவும் சொல்லவ‎ந்த பல கருத்துகளைச் சில சொற்களால் புலப்படுத்தும் த‎ன்மையும் தமிழ்போல் வேறு எம்மொழியிலும் இல்லை" எ‎ன்று உறுதிபடக் கூறியுள்ளார்.

3. டாக்டர் ரோபர்டு கால்டுவெல் (DR.ROBERT CALDWELL) அவர்கள் தமிழை ஆய்ந்துபார்த்தும் பிறமொழிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தும் தமிழ் தனித்து இயங்கும் ஆற்றல் கொண்டது; பிறமொழி துணையி‎ன்றி இயங்கவல்லது; இந்திய மொழிகளில் தமிழ் தனிச்சிறப்பு வாய்ந்தது எ‎ன்று கூறியுள்ளார்.

4. கமில் சுவெலபில் (KAMIL ZVELEBIL) எ‎ன்பவர் செக்நாட்டுத் தமிழ் அறிஞர். தமிழில் உள்ள ஏடுகளை எல்லாம் ஆய்ந்துபார்த்தும் சிலப்பதிகாரத்தை ஆய்ந்துபார்த்தும் தமிழி‎ன் உண்மையை; மேன்மையை உலகறியச் செய்தவர்.

5. ஈராசுப் பாதிரியார் (FATHER HERAS) எ‎ன்ற இசுபெயி‎ன் நாட்டு அறிஞர் ‏இந்தியாவில் நீண்டகாலமாக வரலாற்று ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டவர். கடல்கொண்ட குமரிக் கண்டத்தி‎ல் தோன்றிய தமிழர் நாகரிகம்தா‎ன் தென்னாட்டின் திரவிட நாகரிகமாக மலர்ந்து, சிந்துவெளி (அராப்பா - மொகஞ்சதாரோ) நாகரிகமாக மிளிர்ந்து, பி‎ன்னர் சுமெரியர் - எகுபதியர் - கிரேக்கர் - உரோமானியர் - ஐரோப்பியர் நாகரிகரிகங்களாக மாறின என்று தம் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தினார்.

6. ஆல்பர்ட் சுவைட்சர் (ALBERT SWITZER) எ‎ன்ற செருமானிய மெய்யியல் அறி‎ஞர் ஏசுநாதரின் மறுபிறவி எ‎ன்ற புகழுட‎ன் வாழ்ந்தவர். அவர் திருக்குறளில் மனம் தோய்ந்து பல குறட்பாக்களை மனப்பாடம் செய்திருந்தார். "சீரிய கோட்பாடுகளி‎ன் தொகுப்பான திருக்குறளில் காணப்படும் அத்துணை உயர்ந்த ஞானம் உலக இலக்கியத்தில் வேறு எந்த நூலிலும் இல்லை" எ‎ன்று சொல்லிச் செ‎ன்றுள்ளார்.

7. கவியரசர் இரவிந்திர‎நாத் தாகூர் (RABINDRANATH TAGORE) எ‎ன்பவர் புகழ்பெற்ற வடநாட்டுப் பாவலர். திருக்குறளைப் படித்தபி‎ன் அவர் கூறியதாவது, "பாரத நாடு முழுவதற்கும், ஏ‎ன் உலகம் முழுவதற்குமே மகா‎ன் வள்ளுவரி‎ன் கோட்பாடு பொருந்தும்". தமிழில் தோ‎ன்றிய திருக்குறளை அவர் இவ்வாறு பாராட்டியுள்ளார்.

8. மாக்சு முல்லர் (MAX MUELLER) என்ற செருமானிய நாட்டுக்காரர் தலைசிறந்த மொழிநூல் வல்லுநராக விளங்கியவர். இவர் "தமிழ் மிகப் பண்பட்ட மொழி; தனக்கே உரிதாக இயல்பாய் வளர்ந்த சிறந்த இலக்கியச் செல்வமுள்ள மொழி" என்றார்.

9. வீரமாமுனிவர் எ‎னும் பெசுகி பாதிரியார் (FATHER JOSEPH BESCHI) என்பார் இத்தாலி நாட்டிலிருந்து வந்த கிறித்துவ மதகுரு. பிரெஞ்சு, இலத்தின், கிரேக்கம், இப்ரு, இத்தாலி, பாரசீகம், ஆங்கிலம், வடமொழி ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார் இவர் 20 ஆண்டுகள் தமிழ்ப் பயின்றார். இவரே தமிழில் முதன் முதலில் அகராதியை எழுதி வெளியிட்டவர். திருக்குற¨ளைக் கற்று அதன் சிறப்பில் தோய்ந்துபோய் இத்தாலியில் மொழிபெயர்த்தார். தமிழில் உரைநடை இலக்கியம் வளர்வதற்கும்; தமிழில் நிறுத்தக்குறிகள் புகுவதற்கும் இவர்தான் முன்னோடி.

10. மகாத்மா காந்தி (MAHATMA GHANDHI) உலகிற்கு அகிம்சையைக் கற்பித்துச் சென்ற இவருக்கு அந்த அகிம்சையைக் கற்றுகொள்ள தூண்டுகோளாக இருந்தது திருக்குறள்தான். திருக்குறளைப் படிப்பதற்காகவே தமிழைக் கற்றவர். அதனைக் அவரே இப்படி கூறியுள்ளார் "திருக்குறளை அதன் மூலத்திலிருந்து கற்பதற்காகவே நான் தமிழைக் கற்றேன்".

11. சுவாமி விவேகானந்தர் (SWAMI VIVEKANANDA) என்ற ஞானி இளமையிலேயே துறவுகோலம் பூண்டு இந்தியாவின் இமயம் தொடங்கி குமரி வரை பயணம் செய்து பின்னர் அமெரிக்கா வரையில் சென்று ஆன்மிகக் கருத்துகளைப் பரப்பியவர். "ஆரிய இனம் தோன்றுவதற்குத் தாய் இனங்களில் ஒன்றான தமிழினத்தின் இரத்தம் நம் உடலில் ஓடுகின்றது என்பது நமக்குப் பெருமை அளிப்பதாகும்" என்றும் "இந்திய நாட்டின் ஞானநெறி தென்னாட்டிலிருந்து நமக்குக் கிடக்கப்பெற்றதாகும்" என்றும் இவர் சொல்லியிருக்கிறார்.

12. பேராசிரியர் ஜோர்ஜ் எல்.ஆர்ட் (PROF. GEORGE L.HART) என்ற கலிபோர்னியா பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியரான இவர் அண்மையில் சொல்லியிருக்கும் கூற்றே வாழும் நற்சான்றாக இருக்கின்றது. இவர் சமஸ்கிருதம், தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர். கடந்த 2004 ஆம் ஆண்டில் இந்திய அரசினால் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டபோது "தமிழ் உலகின் மிகச் சிறந்த இலக்கியங்களையும் பண்பாட்டுப் பாரம்பரியத்தையும் கொண்ட செம்மொழியாகும். ஒரு மொழி செம்மொழி (Classical Language) ஆகவேண்டுமானால் அது சில அடிப்படையான தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். அந்த அத்தனைத் தகுதிகளையும் தமிழ்மொழி பெற்றுள்ளது" என இவர் கூறியுள்ளார்.

இவர்களோடு, டாக்டர் வி‎‎ன்சுலோ (DR.WINSLOW), இரைசு டேவிட்டு (RHYS DAVIDS), டாக்டர் பிலியோசா (DR.FILIOZAT), கில்பர்ட்டு இசுலெட்டர் (GUILBERT SLATER), பேராசிரியர் பரோ (PROF.T.BURRO), பேராசிரியர் பானர்ஜி (PROF.R.D.BANERJI) கே.எம்.முன்சி (K.M.MUNSHI), போ‎ன்றோர் தமிழைக் கற்றும் - தெளிந்தும் - ஆய்ந்தும் பல உண்மைகளை வெளிப்படுத்திக்காட்டி தக்க ஆய்வுச் சா‎ன்றுகளோடு தமிழி‎ன் தொன்மை; தலைமை; தெய்வத்தன்மை; உண்மையை நிறுவியுள்ளனர். தமிழி‎ன் சிறப்புகளைத் தமிழர் அல்லாத மேற்கண்டோர் உணர்ந்துள்ளது போல நம் தமிழர்கள் எ‎த்தனைபேர் உணர்ந்துள்ளனர்? அப்படியே உணர்ந்தவர்களில் தமிழுக்காக உண்மையாய் உழைப்பவர்கள்தாம் எத்தனை பேர்?தமிழராய் பிறந்ததற்காகப் பெருமைபடுவோம்! தமிழை வளர்ப்பதற்காகப் பாடுபடுவோம்! தமிழனால் தமிழுக்கு வாழ்வு உண்டானால்... தமிழால் தமிழனுக்கும் வாழ்வு உண்டாகும் !

இறைவன் இருக்கின்றார்!


மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் தம் 'தமிழர் மதம்' என்ற ஆய்வு நூலில் கடவுள் உண்டு என்பதற்கான அசைக்க முடியாத புறச்சான்றுகள் இருக்கின்றன என வலியுறுத்துகின்றார். அதனை வைதே கடவுள் எனும் பேராற்றல் இருக்கின்றது என நம்பத் தோன்றுகிறது என்ற ஒரு முடிவான கருத்தை அவர் கொடுத்துள்ளார். அவை பின்வருமாறு:-

1. கதிரவன்(சூரியக்) குடும்பத்தைச் சேர்ந்த கோள்கல் எல்லாம் இடையறாது ஓர் ஒழுங்காக இயங்கி வருகின்றன. ஓர் ஊரில் ஊர்க்காவலரோ, ஆரசியலாட்சியோ சிறிது நேரம் இல்லாவிடினும் கலகமும் கொள்ளையும் கொலைகளும் நேர்கின்றன. உயிரற்ற நாளும், கோளும் பாவையாட்டுகள் (பாவை விளையாட்டுகள்) போல ஒழுங்காக ஆடிவருவதால், அவற்றை ஆட்டும் ஆற்றல் இருத்தல் வேண்டும். அவ்வாற்றலே இறைவன்!

2. இவ்வுலகம் முழுவதற்கும் கதிரவன் பகல் விளக்காகவும் திங்கள் இரா விளக்காகவும் எண்ண இயலாத காலத்திலிருந்து விளங்கி வருகின்றன. ஒரு வீட்டில் விளக்கேற்றி வைப்பது அதில் குடியிருக்கும் மக்களுக்கே. மக்கள் இல்லாவிட்டால் வீட்டில் விளக்குத் தானாகவே தோன்றி எறியாது. பல உலகங்களுக்கும் இரு சுடரையும் விளக்காக ஏற்படுத்தியவன் இருவன் இருக்க வேண்டும். அவனே இறைவன்!

3. பிற கோள்களைப் போல் சுற்றாது ஒரே இடத்தில் இருக்கும் கதிரவன் பத்து திசையும் ஒளி சமமாகப் பரவுமாறு உருண்டையாய் இருப்பதும், அளவிடப்பட முடியாத நீண்ட நெடுங்காலமாக எரிந்து வரினும் அதனது எரியாவியாகிய சத்தி குறைந்து அணையாமல் இருப்பதும், இயற்கைக்கு மாறான இரும்பூதுச் செய்தியாதலால், அதை இயக்கி ஆளும் ஒரு பரம்பொருள் இருத்தல் வேண்டும்! அப்பரம்பொருளே இறைவன்!

4. கோள்கள் ஒன்றோடு ஒன்று முட்டாது, தத்தம் கோள்வழியில் இயங்குமாறும், இவை சுழழும்போது இவற்றின் மேல் உள்ள பொருள்கள் நீங்காதவாறும் ஒவ்வொன்றையும் சூழ ஒரு கவர்ச்சி(ஈர்ப்பு) மண்டலம் அமைந்திருப்பதும் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஓர் ஆற்றலின் அமைப்பேயாகும். இவ்வமைப்பே இறைவன்!

5. காலமும் இடமும், தொடக்கமும் முடிவும் இல்லாதவையாதலால் இன்றைய மக்கள் உலகம் தோன்றுமுன், எண்ணிக்கையற்ற உயிர் உலகங்கள் தோன்றி அழிந்திருத்தல் வேண்டும்.
"படைத்து விளையாடும் பண்பி னோனும்
துடைத்துத் துயர்தீர் தோற்றத் தோனும்
தன்னில் வேறுதா னொன்றி லோனும்
அன்னோன் இறைவன் ஆகும் என்றுரத்தனன்"
(மணிமேகலை)

6. மாந்தன் தோன்றி ஐம்பதினாயிரம் ஆண்டுகள் ஆயிற்று என வைத்துக்கொண்டாலும், நூற்றுக்கணக்கான தலைமுறைகள் கழிந்திருத்தல் வேண்டும். பத்துக்கணக்காகத் தொடங்கிய மக்கள் தொகை இன்று நூறு கோடிக்கணக்காகப் பெருகியுள்ளது. ஒவ்வொரு தலைமுறையிலும் எத்தனையராயினும் அத்தனை பேரும் அடையாளம் காணுமாறு வெவ்வேறு முக வடிவில் உள்ளனர். கைவரையும்(ரேகை) வேறுபட்டுள்ளது. இது அறிவு நிரம்பிய ஒரு பேராற்றலின் செயலேயாகும். அப்பேராற்றலே இறைவன்!

7. 'கடவுளை நம்பினோர் கைவிடப்படார்' என்பது இன்றும் சிலர் வாழ்க்கையில் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த மெய்யே இறைவன்!

8. உடல்நலம், மனநலம், மதிநலம் முதலிய நலங்கள் உள்ளவரும் இல்லாரும் படைக்கப்பட்டுள்ளனர். இந்தப் படைப்பாற்றலே இறைவன்!

9. பஞ்சம், கொள்ளை, நோய், பெருவெள்ளம், நிலநடுக்கம் முதலிய இயற்கை அழிவு நிகழ்ச்சிகள் நேர்கின்றன. இந்த இயற்கையாற்றலே இறைவன்!
Blog Widget by LinkWithin