Friday, August 24, 2012

கட்டாயப் பாடம் இல்லாமலே தமிழ் படிக்க 10 திட்டங்கள்


‘தேசியப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும்” என்று தற்பொழுது நாட்டில் ஒரு குழுவினர் ஆள் – அம்பு – படை – சேனை ஆகிய அனைத்துப் பரிவாரங்களோடு கிளம்பி இருக்கிறார்கள். இவர்கள் இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு ஒரு முக்கியமான காரணத்தை முன்வைத்திருக்கிறார்கள். அதாவது,

நாட்டில் உள்ள ஒவ்வொரு தமிழரும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்” என்பதுதான் அந்தக் காரணம்.

சற்று மேலோட்டமாகப் பார்க்கையில், இந்தக் குழுவினர் முன்னெடுத்துள்ள கட்டாயப் பாடத் திட்டமானது மிகச் சரியானது போலவும்; மிகவும் நன்மையானது போலவும்; தமிழ்மொழியை உயர்த்திப் பிடிப்பது போலவும் தோன்றலாம்.

ஆனால், சற்றே ஆழ்ந்து நோக்கி ஆராய்ந்து பார்த்தால்தான் இந்தத் திட்டத்தினால் ஏற்படப்போகும் பேராபத்துகளும் பேரிழப்புகளும் புலப்படும். 

அவற்றுள் சிலவற்றைப் பின்வருமாறு பட்டியலிடலாம்:-

1)தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென குறைந்து போகும்.

2)  இதனால், தமிழ்ப்பள்ளிகள் ஒவ்வொன்றாக மூடப்படும்.

3)  523 தமிழ்ப்பள்ளிகள் படிப்படியாகக் குறைந்து போகும்.

4)தமிழ்க்கல்வி என்னும் அடிப்படை உரிமை பறிபோய், தமிழ்மொழி ஒரு பாடமாக மட்டுமே இருக்கும். 

5)அரசாங்கத் துறைத் தலைவர் (தலைமையாசிரியர்)  பதவிகள் எல்லாம் இல்லாது போகும்.

6)தமிழ்க்கல்வித் துறையில் இருக்கும் ஆசிரியர்கள், அதிகாரிகள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் என்றிருக்கும் பதவிகள், பணிகள், பொறுப்புகள் அனைத்தும் கணிசமாகக் குறைந்து போகும்.
   
7)  தமிழ்ப்பள்ளிகளை நம்பியிருக்கும் அச்சுத்துறை, நூல் பதிப்புத் துறை, பயிற்றுத் துணைப் பொருள் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் முதலான பொருளியல் வாய்ப்புகள் தொலைந்து போகும்.

8)தமிழ்ப்பள்ளிகளைச் சார்ந்து இயங்கும் பெற்றோர் ஆசிரியர் சங்கம், வாரியக் குழு, முன்னாள் மாணவர் சங்கம், தமிழ்ப்பள்ளி ஆசிரியர் சங்கம், தமிழாசிரியர் கூட்டுறவுக் கழகம் முதலான அமைப்புகள்  அனைத்தும் முடக்கப்படும்.

9)தமிழ்ப்பள்ளிக் கட்டடங்கள், நில உரிமங்கள், மண்டபங்கள், நிதி வளங்கள் அனைத்தும் கேட்பார் கொள்வாரின்றி நிலைகெட்டுப் போகும்.

10)மலேசியாவில் தமிழ் மக்களின் வரலாற்றுச் சுவடுகள், வாழ்வியல் சுவடுகள் அனைத்தும் படிப்படியாக மறைந்துபோகும்.

11)வருங்காலத் தமிழ்ச் சமூகத்தின் மொழி, இன, சமய பண்பாட்டு, கூறுகள் அனைத்தும் சிதைந்து சின்னபின்னப்பட்டுப் போகும்.

12)இன்னும் 50 அல்லது 100 ஆண்டுகள் கழித்து தமிழுக்காகவும் தாய்மொழிக்காவும் தமிழ்ப்பள்ளிக்காகவும் தமிழ்க்கல்விக்காகவும் நமது குழந்தைகள் போராட வேண்டிய நெருக்கடி நிலைமை உருவாகும் அல்லது இவற்றைப் பற்றி ஒன்றுமே அறிந்திராத எதிலி இனமாக உருமாறும்.

இப்படியாக இன்னும் பல்வேறு இழப்புகளைப் பட்டியலிட்டுச் சொல்லலாம். இவை ஒவ்வொன்றையும் சான்றுபட விரிவாக விளக்கினால் இந்தக் கட்டுரை நீண்டுவிடும் என்பதால் இதனைச் சுருக்கமாகச் சொல்லி நிறுத்த வேண்டியுள்ளது.

“நாட்டில் உள்ள ஒவ்வொரு தமிழரும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்” என்னும் ஒரே ஒரு நோக்கத்தை அடைவதற்கு நமது குமுகாயம் மேலே சொன்ன அத்தனை இழப்புகளுக்கும் அணியமாக (தயாராக) வேண்டுமா?

“நாட்டில் உள்ள ஒவ்வொரு தமிழரும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்” என்னும் ஒரே ஒரு காரணத்திற்காக நமது இனம் இத்தனை ஆபத்துகளையும் எதிர்கொள்ள வேண்டுமா?

எதையும் இழக்காமல் எதனையும் அடைய முடியாது என்னும் கூற்றில் உண்மை இருந்தாலும்..

ஒன்றை எய்த நூறை இழக்க வேண்டுமா? ஒற்றை நன்மைக்காக ஒரு தலைமுறையை பலியிட வேண்டுமா? ஒரே ஒருதமிழ்ப் பாடத்திற்காகநமது அடிப்படை உரிமையாக இருக்கும்தமிழ்ப்பள்ளியையும்’ - ‘தமிழ்க்கல்வியையும்இழக்கத்தான் வேண்டுமா? இன்றைய நமது தேவைக்காக அடுத்த தலைமுறையின் தாய்மொழி உரிமையை; தமிழ்ப்பள்ளி உரிமையை; தமிழ்க்கல்வி உரிமையைப் பறிக்கத்தான் வேண்டுமா?


“நாட்டில் உள்ள ஒவ்வொரு தமிழரும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்” என்பதுதானே நோக்கம்! இலக்கு! குறிக்கோள்! அதற்காக ஏன் நாம் வேறு வழிகளையும் மாற்றுத் திட்டங்களையும் சிந்திக்கக் கூடாது? சான்றுக்குச் சில இதோ:-

1)நாடு முழுவதும் செயல்படும் அரசாங்க பாலர் பள்ளிகளில் (Tadika Perpaduan) தமிழையும் ஒரு பாடமாகக் கற்பிக்க வேண்டும் என்ற கோரிகையை முன்னெடுக்கலாம்.

2)நமது ஆலயங்கள் ஒவ்வொன்றும் கல்வி அமைச்சின் இசைவுடன் தமிழ் பாலர் பள்ளிகளை நிறுவி; நடத்துவதற்கு அவன செய்யலாம்.

3)தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க பரப்புரை இயக்கங்களை நடத்தலாம்.

4)தமிழ்ப்பளிகளில் சேரும் மாணவர்களுக்குச் சிறப்பு ஊக்குவிப்புப் பரிசுகளை வழங்கலாம். காட்டாக, 2013 தொடங்கி தமிழ்ப்பள்ளியில் முதலாம் ஆண்டில் பதிந்துகொள்ளும் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு மடிக்கணினி வழங்க நமது அரசு சார்பற்ற அமைப்புகள் முன்வரலாம்.


5)தமிழ்ப்பள்ளிகளின் அடிப்படை ஏந்துகளை (வசதிகளை) மேம்படுத்த அமைப்புகளும் இயக்கங்களும் அரசாங்கத்தை வலியுறுத்தலாம்.

6)தமிழ்ப்பள்ளிகளில் தரமான கற்றல் கற்பித்தல் நடைபெறுவதை உறுதிபடுத்தும் நடவடிக்கைகளை உருவாக்கிச் செயற்படுத்தலாம்.

7)இடைநிலைப் பள்ளிக்குச் செல்லும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் தமிழைக் கட்டாயப் பாடமாக்கலாம்.

8)இடைநிலைப் பள்ளிகளில் தமிழையும் தமிழ் இலக்கணத்தையும் கால அட்டவணைக்குள் பயிற்றுவிக்க வேண்டும் எனக் கல்வி அமைச்சைத் தொடர்ச்சியாக வலியுறுத்தலாம்.

9) அரசுத் தேர்வுகளில் தமிழ்மொழி, தமிழ் இலக்கியப் பாடங்களில் சிறப்பாகத் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு வெகுமதிகள் வழங்கலாம்.

10)அரசாங்க வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பம் செய்யும் தமிழ் மாணவர்கள் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் ஆகிய பாடங்களில் கண்டிப்பாகச் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற ஆணையைப் பிறப்பிக்க பொதுச்சேவைத் துறையிடம் கோரலாம்.



இவற்றுள் சிலவற்றையேனும் நாம் செய்வோமானால்.. இவற்றுள் ஓரிரு நடவடிக்கையை ஒழுங்காகத் திட்டமிட்டுச் செய்வோமானால்.. இவற்றுள் தெரிவு செய்யப்பட்ட சில திட்டங்களை முன்னெடுத்துச் செய்வோமானால்.. இவற்றை எல்லாம் சிந்திக்கவும் - ஆய்வுச் செய்யவும் – திட்டமிடவும் – செயற்படுத்தவும் – மேம்படுத்தவும் தேவையான இயங்கமைவு (Mechanism) நம்மிடம் இருக்குமானால்..

“நாட்டில் உள்ள ஒவ்வொரு தமிழருக்கும் கண்டிப்பாகத் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்கும்”. 

கூடவே..
“நாட்டில் உள்ள ஒரு தமிழ்ப்பள்ளி கூட மூடப்படாமல் நிலைத்து இருக்கும்! தலைநிமிர்ந்து நிற்கும்!”.

தேசியப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக்கி உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா? என்று ஆகப் போகிறோமா? அல்லது

தமிழ்ப்பள்ளிகளையும் தமிழ்க்கல்வியையும் மேம்படுத்தி காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளப் போகிறோமா?

முடிவு நமது கைகளில்!!!

@சுப.நற்குணன், திருத்தமிழ்

Sunday, August 19, 2012

அன்புள்ள இரத்தினவள்ளி அம்மையார் அவர்களே..




வணக்கம். தங்களின் மேலான கவனத்திற்கு இந்த மடலை விடுக்கின்றேன். இம்மடல் வழியாகத் தங்களுக்குச் சில விளக்கங்கள் கூறுவதோடு சில வினாக்களுக்குத் தங்களிடமிருந்து விளக்கம் பெற விரும்புகின்றேன்.

2. அதற்கு முன்னதாக, தமிழ்க் குமுகாய நலன்கருதி தாங்கள் ஆற்றிவருகின்ற நற்பணிகளுக்கு மனமார்நத பாராட்டுகளைப் பதிவுசெய்ய விழைகிறேன். தமிழ் மக்கள், தமிழ்க் கலைஞர்கள், ஆலயங்கள், தமிழ்ப்பள்ளிகள் எனப் பல்வேறு தரப்பினருக்கு நன்கொடைகளை வாரி வழங்கி ஆதரவு செய்துவரும் தங்களின் கொடையுள்ளத்தை வணங்குகின்றேன்.


3. தங்களின் மீதும் தாங்கள் ஆற்றிவரும் அரும்பணிகள் மீதும் எனக்கு எப்பொழுதுமே ஆழ்ந்த மதிப்பு உண்டு. அதேவேளையில், ஒட்டுமொத்த குமுகாய நன்மையைப் பாதிக்கின்ற வகையில்; நமது மொழி இன நலத்தைப் பாழ்படுத்தும் வகையில்; நமது அடிப்படை உரிமைகளைச் சீரழிக்கும் வகையில் அண்மையில் தாங்கள் வெளியிட்டுள்ள கருத்துகளுக்கு எதிர்வினையாடும் உரிமையும் எனக்கு உண்டு என்று நம்புகிறேன். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் இந்த மடலை எழுதுகின்றேன். இதன் வழியாகத் தங்களைக் குறைத்துப் பேசும் எண்ணமோ அல்லது சிறுமைபடுத்தும் எண்ணமோ எனக்குத் துளியும் கிடையாது என்பதை ஆணித்தரமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

4.   அண்மையில், “தேசியப் பள்ளிகளில் தமிழ்மொழி கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும்என்று தாங்கள் தெரிவித்துள்ள கருத்து  நாளிதழ்களில் செய்திகளாக (8.8.2012, 19.8.2012) வெளிவந்துள்ளன. அச்செய்திகளின் சாரம் பின்வருமாறு:-

) மலேசியாவில் உள்ள அனைத்துத் தமிழர்களுக்கும் தமிழை எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஆ) தமிழ்ப்பள்ளிகளில் வெறும் 30% மாணவர்கள் மட்டுமே பயில்கின்றனர். மீதமுள்ள 70% இந்திய மாணவர்கள் தேசியப் பள்ளிகளில் படிக்கிறார்கள்.

இ) இவ்விரு கூற்றுகளின் அடிப்படையில், தேசியத் தொடக்கப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும்.
  
உ) அதற்காக மலேசியத் தமிழ்மொழி நடவடிக்கை என்ற இயக்கத்தின் வழியாக கல்வி அமைச்சுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

மக்கள் ஓசை செய்தி - 19.08.2012
5. மேற்சொன்ன கூற்றுகளைத் தாங்களும் மேலும் இருவரும் வலுவாக ஆதரிக்கின்றீர்கள். அந்த இருவரில் ஒருவர் பத்திரிகை விற்பனையாளர் சங்கத் தலைவர். இன்னொருவர் உலோக மறுசுழற்சி சங்கத் தலைவர். தாங்களும் மேலும் இருவரும் தமிழ்ப்பள்ளி, தமிழ்மொழி, தமிழ்க்கல்வி ஆகிய எந்தவொரு தளத்திலும் காலூன்றி நிற்காதவர்கள் என்னும் சூழலில் இப்படி ஒரு திட்டத்தை முன்னெடுப்பதைத் தவிர்த்திருக்கலாம். எனினும், நீங்கள் மூவரும் தமிழர்கள் அல்லது இந்தியர்; தமிழ்ப்பள்ளி, தமிழ்மொழி, தமிழ்க்கல்வி ஆகியவற்றின் மீது உங்களுக்கும் அக்கறையுண்டு என்ற ஒரு சிறு ஆறுதலை எனக்கு நானே சொல்லிக்கொண்டு தொடர்கிறேன்.


6. தங்களிடமும் தங்கள் குழுவினரிடமும் கேட்பதற்கு என்னிடம் சில கேள்விகள் இருக்கின்றன.


அ) தமிழ்ப்பள்ளிகளில் 30% மாணவர்களும், தேசியப் பள்ளிகளில் 70% மாணவர்களும் படிக்கிறார்கள் என்ற புள்ளி விவரத்திற்குத் தங்களிடம் ஆதாரம் இருக்கின்றதா?

ஆ) தேசியத் தொடக்கப்பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக ஆக்கினால், அங்குப் படிக்கும் அனைத்து இந்திய மாணவர்களும் தமிழைப் படிப்பார்கள் என்று உங்களால் உறுதிபடுத்த முடியுமா?

இ) இந்தியர் என்ற இனப்பெயரைத் தங்கள் பிறப்பு ஆவணத்தில் குறிக்கப்பெற்றிருக்கும் அனைவரும் தமிழைப் படிக்க முன்வருவார்களா?

உ) தற்போது தேசியத் தொடக்கப் பள்ளிகளில் தமிழ்மொழிப் பாடம் (BTSK) கற்பிக்கப்படுகின்றது. மேலும் 15 பெற்றோர்கள் விரும்பினால் தாய்மொழி வகுப்பு (POL) நடத்தப்பட முடியும். இந்த இரு வழிகளில் தமிழைப் படிக்கும் வாய்ப்பு இருந்தும், எத்தனை இந்திய மாணவர்கள் தமிழை எடுத்துப் படிக்கின்றனர் என்ற புள்ள விவரமோ அல்லது தரவுகளோ தங்களிடம் உள்ளனவா?

ஊ) தேசியத் தொடக்கப்பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடம் ஆக்கினால், அது ஒரே ஒரு தமிழ்ப் பாடமாக மட்டுமே இருக்குமே தவிர, ஒருபோதும் அது ‘தமிழ்க்கல்வி’ ஆகாது என்ற வேறுபாட்டைத் தாங்கள் உணர்ந்திருக்கிறீர்களா?
  

எ) தேசியப் பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடம் ஆக்கினால், எல்லாப் பெற்றோரும் தமிழ்ப் பள்ளிகளைப் புறக்கணித்துவிட்டு, தேசியப் பள்ளிகளுக்குப் படையெடுத்துச் செல்வதையும் இதனால் காலப் போக்கில் தமிழ்ப்பள்ளிகள் ஒவ்வொன்றாக மூடப்படுவதையும் இறுதியில் இந்த நாட்டில் தமிழ்ப்பள்ளிகளே இல்லாத நிலைமை உருவாகுவதையும் தாங்கள் வரவேற்கிறீர்களா?

7. இந்த நாட்டில் கடந்த நூறாண்டுகளாகத் தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்க்கல்வியும் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையிலும் பலதரப்பட்ட போராட்டங்களுக்கு நடுவிலும் சிக்கிச் சிதறி, தட்டுத் தடுமாறி குற்றுயிரும் குலையுயிருமாக வாழ்ந்துகொண்டிருக்கின்றன. தமிழ்ப்பள்ளி – தமிழ்க்கல்வி தொடர்பாக ஆயிரமாயிரம் சிக்கல்களும் நெருக்கடிகளும் இன்றவும் முழுமையாகத் தீர்ந்தபாடில்லை. இருந்தாலும், நாடு விடுதலையான காலத்தில் 888 தமிழ்ப்பள்ளிகள் இருந்த நிலையின் இன்று 523 பள்ளிகள் மட்டுமே நிலைத்திருக்கின்றன. இந்தத் தமிழ்ப்பள்ளிகள் இருப்பதால் நம் சமுதாயம் அடைந்திருக்கும் சில நன்மைகளைப் பின்வருமாறு பட்டியலிடலாம்:-

அ) நம் நாட்டில் தமிழ்மொழி இன்றளவும் வளமாக வாழ்ந்துகொண்டிருக்கிறது.
ஆ) நாட்டின் கல்விமொழிகளில் ஒன்றாகத் தமிழ்மொழி இடம்பெற்றிருக்கின்றது.
இ) நாட்டின் அரசாங்கக் கேந்திரத்தில் ஒரு மொழியாகத் தமிழும் இடம்பெற்றிருக்கின்றது.
ஈ)  தமிழ்மொழி சார்ந்த கலை, இலக்கிய, பண்பாட்டு, வாழ்வியல் கூறுகள் செழிப்பாக இருக்கின்றன.
உ) பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கு அல்லது இந்தியர்களுக்கு இந்த நாட்டில் வாழ்வாதாரம், பொருளியல் வளம், வேலை வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன.
ஊ) தமிழ் நாளிதழ்களும் ஒலி, ஒளி, மின்னியல் ஊடகங்கள் செயல்படுகின்றன.
எ) தமிழ்மொழி சார்ந்த நிகழ்ச்சிகள், மாநாடுகள், ஆய்வுப் பணிகள் நடைபெறுகின்றன.
ஏ) தமிழ் மக்கள் அதிகாரிகளாகவும் துறைத் தலைவர்களாகவும் பணியாற்றும் அரசாங்கப் பணியிடங்கள் இருக்கின்றன.
ஐ) தனிமனித உரிமைகளாகிய தாய்மொழி, இனம், சமயம், பண்பாடு, கலை, இலக்கியம், கல்வி ஆகியவற்றைப் பேண முடிகின்றது.

8. ஏன் இதனைச் சொல்ல வருகிறேன் என்றால், தாங்களும் தங்கள் குழுவினரும் முன்மொழியும் “தேசியத் தொடக்கப் பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடம்” என்னும் திட்டம் மேலே குறிப்பிட்ட அனைத்து நலன்களையும் இல்லாமல் செய்துவிடும். காலப் போக்கில் நமது குமுகாயத்தின் ஆணிவேராக இருக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கு மாபெரும் ஆபத்தை ஏற்படுத்திவிடும். நமது அடிப்படை உரிமைகளையும் நமது அடையாளங்களையும் நமது இருப்பையும் மெதுமெதுவாகக் கொல்லும் ‘நஞ்சாக’ இந்தத் திட்டம் உருவாகிவிடும்.

9. ஆகவே, நூறாண்டு காலமாக நமது மக்களுக்கும் தமிழ்ப்பள்ளி – தமிழ்க்கல்விக்கும் இடையில் இருந்துவரும் தொப்புள்கொடி உறவைத் துண்டிக்கும் வகையில் அமைந்திருக்கும் இந்த ஆபத்தான திட்டத்தை; எதிர்காலத் தலைமுறையின் தாய்மொழிக் கண்ணைப் பறித்து அவர்களைத் தாய்மொழி அறியாத குருடர்களாக ஆக்கப் போகும்  இந்த அவலமான திட்டத்தை; வருங்காலத்தில் நமது குழந்தைகளை எந்தவித அடையாளமும் இல்லாத ஏதுமற்ற ஏதிலிகளாக ஆக்கப்போகும் இந்த ஆபத்து நிறைந்த திட்டத்தைத் தயவுசெய்து உடனடியாகக் கைவிடுமாறு தங்களைப் பணிவுடன் வேண்டுகிறேன்.

10. அதற்கு மாற்றாக, தமிழுக்கும் தமிழ்ப்பள்ளிக்கும் தமிழ்க்கல்விக்கும் ஏதேனும் நன்மை செய்ய நினைக்கும் தங்களைப் போன்ற செல்வாக்கு நிறைந்த நல்ல மனிதர்கள் செய்ய வேண்டிய சில திட்டங்களை முன்மொழிகின்றேன்.

அ) ‘குழந்தைகளைத் தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்புங்கள்’ என்னும் இயக்கத்தை (Campaign) நடத்தலாம்.
ஆ) தமிழ்ப்பள்ளிகளில் தரமான கற்றல் கற்பித்தல் நடைபெறுவதற்கு வேண்டிய ஏந்துகளைச் (வசதிகளை) செய்து தரலாம்.
இ) தமிழ்ப்பள்ளியில் படித்து இடைநிலைப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் அனைவரும் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் கட்டாயம் படிக்க வேண்டும் என்று பரப்புரை செய்யலாம்.

நன்றி, வணக்கம்.

அன்புடன்;
சுப.நற்குணன்.



Blog Widget by LinkWithin