Tuesday, April 29, 2008

பாவேந்தர் பாரதிதாசனார்

(29-4-2008ஆம் நாள் பாவேந்தர் பாரதிதாசனார் தமிழரிடையே தமிழ் மண்ணில் பிறந்த நினைவு நாள். அவருடைய நினைவேந்தலாக இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது)



பாரதிதாசன்....! உண்மைத் தமிழ் உணர்வாளர்களுக்கு நன்கு பழகிய பெயர். தமிழர் உள்ளங்களிலும் நாவிலும் என்றென்றும் நிலவிவரும் தமிழ் உரு ஒன்றின் சொல்லுருவம் அது!

"கவி எப்படி உருவாகிறான் என்பது பற்றி எழுதியிருக்கிறேன். அதில் பாரதிதாசனைத் தான் உவமையாகக் காட்டியிருக்கிறேன். என் கவிதை மண்டலத்தில் பாரதிதாசன் ஒரு பகுதி" புரட்சிக்கவி பற்றி மகாகவி பாரதி எழுதியிருக்கிறார்.

"முகிலைக் கிழித்து வெளிக்கிளம்பும் முழுமதி போல தமிழ்நாட்டில் தோழர் பாரதிதாசன் கவிதை தோன்றியுள்ளது. புரட்சிக் கருத்துகள் அவரது உள்ளத்தில் பொங்கிப் பூரித்து முதுமைக் கவிதைகளாக வெளிவருகின்றன" என பேரறிஞர் அண்ணா பாவேந்தரைப் பற்றி சொல்லியிருக்கிறார்.

எனக்குக் குயிலின் பாடலும்; மயிலின் ஆடலும்; வண்டின் யாழும்; அருவியின் முழவும் −னிக்கும்; பாரதிதாசன் பாட்டும் −னிக்கும்' என மொழிகின்றார் தமிழ்த்தென்றல் திரு.வி.க.

''பழமை - மதவாதம் - ஆசாரம் ஆகியவற்றில் ஊறிக் கிடந்த தமிழ்மக்களிடையே அவருடைய பாடல்கள் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. ஆதலால் −வரைப் புரட்சிக்கவி எனலாம். அமெரிக்கா கண்ட புரட்சிக்கவி வால்ட் விட்மன் போல் தமிழ்நாடு கண்ட புரட்சிக்கவி பாரதிதாசன்'' எனக் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை குறிப்பிடுகிறார்.


''மாபாவலன் பாரதியார் −ன்று நமக்கு வைத்து விட்டுப் போன சொத்துக்கள் பல. அவற்றுள் முகாமையாவை ஞானரதம், குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியனவும் கனகசுப்புரத்தினம் என்ற பாரதிதாசனும்'' எனக் குறிப்பிடுகிறார் புதுமைப்பித்தன்.

''நிமிர்ந்த பார்வை, அச்சமில்லை என்று பறைசாற்றும் முறுக்கான மீசை, வயதை விழுங்கிய வாலிப வீறு, உணர்ச்சி பொங்கும் பேச்சு, புதுமை வேட்கை கொண்ட உள்ளம் ஆகியவற்றின் கலவையே பாரதிதாசனார்'' என முழங்குகிறார் சுத்தானந்த பாரதியார்.

பாரதிதாசனின் உள்ளத்தில் பொங்கி எழுந்த பாவுணர்வு தமிழர் விடுதலை நோக்கிப் புதுவழியில் நடையிடல் ஆயிற்று! அது புரட்சி மனப்பாங்கு வாய்ந்தது! எனவேதான், பாரதிக்கு வாய்க்காத புரட்சிப் பாவலர் என்ற பட்டம் பாரதிதாசனுக்கு மக்களால் கொடுக்கப்பெற்றது என்று எழுதுகிறார் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

''புரட்சிகரமான கருத்துக்களைத் துணிவோடு வெளிப்படுத்திய முதல் கவியும் கடைசிக் கவிஞரும் பாரதிதாசனார் ஒருவரே. அவருக்குப் பிறகு அவருக்கு ஈடாக வேறு எந்தக் கவிஞரும் இதுவரை தோன்றவேயில்லை. அவ்வாறு தோன்றியவர்களும் பழமைக் கருத்துக்களைக் கொண்டவர்களாகவே உள்ளனர். பாரதிதாசன் போல புரட்சிக் கவிஞர்கள் தோன்றியிருந்தால், கடந்த இரண்டு மூன்றாயிரம் ஆண்டுக்காலமாக தமிழரிடையே இழிவுகளும் இன்னல்களும் −ருந்திருக்குமா?'' எனக் கேள்வி கேட்கின்றார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.



இப்படியாக, தமிழகத்தின் மிகச் சிறந்த அறிஞர்களாகவும், சிந்தனையாளர்களாகவும், தலைவர்களாகவும் விளங்கிய பலரும் பாரதிதாசனின் வரலாற்றுச் சிறப்பு எத்தகையது என்பதைக் கூறிச் சென்றுள்ளனர்.

ஏறத்தாழ எழுபத்து நான்காண்டுகள் வாழ்ந்து, செந்தமிழ்க்கும் தமிழர்க்கும் தமிழ்நாட்டிற்கும் நல்லரிய தொண்டுசெய்து, எண்ணற்ற பாமணிகளை வாரி வழங்கி, தமிழே மூச்சாய், வாழ்வாய், இன்பமாய் இருந்தவர் பாரதிதாசன் என்னும் புனைப்பெயர் கொண்ட திரு.கனக.சுப்புரத்தினம். அவர் 1891, ஏப்பிரல் 29ஆம் நாள் புதுவையில் பிறந்தார்.

'நல்லுயிர், உடம்பு, செந்தமிழ் மூன்றும் நான் நான் நான்' என்று தம் தோற்றத்தை விளக்கும் அவ்வரிய தமிழ்ப்பாவேந்தர், வெறும் பாரதிதாசனாக இல்லாமல், தமிழ்ப்புரட்சி செய்த முதல் புரட்சிப் பாவலராய் தமிழகத்திடையே வாழ்ந்து வந்தார். அவர் வரலாறு தமிழரின் மறுமலர்ச்சி வரலாறாகும்; தமிழ்நாட்டின் உணர்வெழுச்சிக் கதையாகும்; தமிழர்தம் மான உணர்வுக்குக் கலங்கரை விளக்காகும்.

பாரதியாரின் உள்ளம் இந்திய நாட்டு விடுதலையை எதிர்நோக்கிப் பாடியபொழுது, பாரதிதாசன் தமிழ்நாட்டு விடுதலைக்கெனக் குரல்கொடுத்தார். தமிழ்மக்களின் ஆறாத் துயரும் அவல நிலையும் பாரதிதாசனின் உள்ளத்தில் ஒரு புத்தெழுச்சியை உண்டாக்கின. இதன் பயனாக, தமிழுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் உழைப்பது ஒன்றே தம் வாழ்வென வரையறுத்துக் கொண்டார்.

"எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்
தனையீன்ற தமிழ்நாட்டு தனக்கும் என்னால்
தினையளவு நலமேனும் கிடைக்கு மென்றால்,
செத்தொழியும் நாள்எனக்குத் திருநாளாகும்" என்பது அவர் கூற்று. இப்புரட்சி மனப்பான்மையால் இவர் பெற்ற துயரங்கள் பலப்பல. இவர் பெறாத நன்மைகள் கோடி. இருப்பினும் 'தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை' என்று தம்மைத் தாமே தேற்றிக் கொள்கிறார்.

தமிழன் உய்வுக்கும் வாழ்வுக்கும் அடிப்படையாக நிற்பது தமிழே என்றுகூறித் தமிழ் இளைஞர் தமக்கு இவர் ஊக்கம் கொடுப்பதைப்போல் வேறு எந்தப் புலவரும் செய்ததில்லை.

"உரம்பெய்த செந்தமிழுக் கொன்றிங்கு
நேர்ந்ததென உரைக்கக் கேட்டால்,
நரம்பெல்லாம் இரும்பாகி
நனவெல்லாம் உணர்வாகி
நண்ணி டாரோ" என்றும், "வண்டமிழ் நைந்திடில் எது நம்மைக் காக்கும்?" என்றும் தமிழ் உணர்வை ஊட்டினார். "சான்றாண்மை இவ்வுலகில் தோன்றத் துளிர்த்த தமிழை" அவர் காதலித்தது போல் கம்பனும் காதலிக்கவில்லை. தமிழே அவர் உயிர்! மூச்சு! அவர் தமிழின் உருவம்!

"தமிழ், தமிழினம், தமிழிலக்கியம் இவற்றில் ஒன்றுபோம் எனில் மற்றவும் ஒழியும்." என்று தமிழர்க்கும் தமிழ்ப்புலவர்க்கும் இருக்கவேண்டிய மொழி, இன நலனையும் கடமையையும் எடுத்துக்கூறினார்.

"பங்கம் விளைத்திடில் தாய்மொழிக்கே - உடல் பச்சை ரத்தம் பரிமா றிடுவோம்" என்று தீப்பொறி பறக்கும் தமிழ் உணர்ச்சியைத் தமிழரிடையே விதைத்து தமிழ்; தமிழர் விடுதலைக்கு வித்திட்ட விடுதலைப் பாவலர் தமிழக வரலாற்றில் பாவேந்தர் ஒருவரே. இவ்வுலகிடை தமிழும் தமிழரும் நிலைத்திருக்கும் காலம் முழுமைக்கும் பாவேந்தர் பாரதிதாசனாரின் புகழ் மறையாதிருக்கும்; உண்மைத் தமிழர் அவரை மறவாதிருப்பர்.

Monday, April 28, 2008

தனித்தமிழ் பற்றிய ஐயங்களும் தெளிவுகளும்

  • தனித்தமிழ் என்றால் என்ன?
  • தனித்தமிழ் ஏன்? எதற்கு?
  • தனித்தமிழின் வரலாறு யாது?
  • தனித்தமிழ் வெற்றி பெற்றுள்ளதா?
  • தற்காலத்திற்குத் தனித்தமிழ் பொருந்துமா?
  • தனித்தமிழ் தமிழர்க்கு ஆக்கத்தைத் தருமா?

இப்படியாகத் தனித்தமிழ் பற்றிய பல்வேறு ஐயங்கங்கள் தமிழரிடையே நிலவி வருகின்றன. குறிப்பாக, தமிழ்க் கற்றோர், கற்பிப்போரிடையே இத்தகைய ஐயப்பாடுகள் நிலவி வருவது குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது. நமது மலேசியத் திருநாட்டில் தமிழ்மொழிச் சார்ந்திருக்கும் ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், கல்வி அதிகாரிகள், பாடநூலாசிரியர்கள், எழுத்தாளர்கள், பாவலர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் 'தனித்தமிழ்' என்பதைப் பெரும்பாலும் தவறாகவே உணர்த்துள்ளனர்; தப்புத் தப்பாகவே அறிந்துள்ளனர்.

'தனித்தமிழ்' என்பதை உண்மையாகவே புரிந்து கொண்டிருப்பவர்கள் மிகக் குறைவானவர்களே ஆவர். அவ்வாறு புரிந்தவர்கள்; அறிந்தவர்கள்; உணர்ந்தவர்கள் 'தனித்தமிழைப்' பற்றி பேசுகின்ற, எழுதுகின்ற, முன்வைக்கின்ற கருத்துகள் பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பதே மலேசியாவில் நாம் கண்டுவந்திருகின்ற வரலாறாகும்.

தனித்தமிழை முன்னெடுப்பவர்கள் 'தமிழ் வெறியர்கள்' என முத்திரைக் குத்தப்படுகிறது. ஆட்சி அதிகார பலம் பெற்றவர்களால் தனித்தமிழ் நயவஞ்சகமாக ஓரங்கட்டப்படுகிறது. தனித்தமிழ் பண்டிதர்களுக்கே சொந்தமானது என்ற தவறான கருத்து வலிந்து பரப்பப்படுகிறது. தனித்தமிழ் மாணவர்களுக்குப் புரியாது என்றும் அவர்களின் சிந்தனையாற்றலை மட்டுப்படுத்தும் என்றும் பொய்ப் பரப்புரைகள் செய்யப்படுகின்றன. தனித்தமிழைப் பற்றிய நம்பிக்கையின்மை தமிழ்ப்பகைவர்களால் மட்டுமின்றி தமிழ்க் கற்றோர்களாலும் விதைக்கப்படுகின்றன.

தனிதமிழை மிகக் கோரமாகப் படம்பிடித்துக் கட்டுபவர்கள் தயவுகூர்ந்து தங்களின் அவதூறுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். தனித்தமிழ் மீதுள்ள தவறான கண்ணோட்டத்தைக் கற்றோர்கள் அனைவரும் மாற்றிக்கொள்ள வேண்டும். தனித்தமிழ் கடுமையானது என்ற பொய்களை தலைமுழுக வேண்டும். தனித்தமிழ் தேவையற்றது என்ற நம்பிக்கையின்மையை விட்டொழிக்க வேண்டும்.

தனித்தமிழ் பற்றிய ஐயங்களுக்கு உண்மையான தெளிவுகளைப் பெற வேண்டும்.

"எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு"

என்ற வள்ளுவப் பேராசானின் வாய்மொழிக்கு ஏற்ப தனித்தமிழ் பற்றிய தெளிவுகளை நடுநிலையோடும் ஆய்வுநோக்கோடும் ஆராய்ந்துபார்த்து முடிவெடுக்க வேண்டும். தனித்தமிழ் என்பது தனியான ஒரு தமிழ் அல்ல; தனித்தமிழ் என்பது தமிழ்தான் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

அதற்கு, 'நயனம்' என்ற வலைப்பதிவில் தமிழன்பர் நாக.இளங்கோவன் அவர்கள் எழுதியுள்ள பின்வரும் செய்திகள் மிகுந்த பயனாக அமையும். திருத்தமிழ் அன்பர்கள் கண்டிப்பாகப் பின்வரும் கட்டுரைகளைப் படிக்க வேண்டுமென அன்புடன் விழைகிறேன்.

1. தனித்தமிழ் - ஊடாடு வினாக்கள் (பகுதி 1)

2. தனித்தமிழ் - ஊடாடு வினாக்கள் (பகுதி 2)

3. தனித்தமிழ் - ஊடாடு வினாக்கள் (பகுதி 3)

4. தனித்தமிழ் - ஊடாடு வினாக்கள் (பகுதி 4)

Monday, April 21, 2008

தமிழவேள் கோ.சாரங்கபாணி


(20.4.2008ஆம் நாள் அமரர் தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களின் பிறந்தநாள். அன்னாரின் நினைவாக இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது.)


கோ.சா என்று அழைக்கப்படும் அமரர் தமிழவேள் கோ.சாரங்கபாணி சிங்கை, மலாயாவில் தமிழும் தமிழரும் நிலைப்பெற்று இருப்பதற்கு தன்னையே ஈகப்படுத்திக் கொண்ட வரலாற்று நாயகர்.

தமிழவேள் கோ.சாரங்கபாணி தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டத்தில் 20-04-1903ல் பிறந்து தமது 21ஆம் வயதில் 1924ல் சிங்கப்பூர் வந்தார். சிங்கப்பூரிலும் பின்னர் மலாயாவிலும் தமிழர் திருநாள் கண்டவர். அப்போதைய மலாயா சிங்கப்பூரில் பல வகையிலும் தமிழ்த் தொண்டாற்றினார்.

மலாயாவில் வாழ்ந்த தமிழர்கள் குடியுரிமை பெற்றவர்களாக வாழவும், தாய்மொழியாம் தமிழோடு தமிழ்க் கலை இலக்கியத்தைப் போற்றி வளர்த்தெடுக்கவும் வேண்டி பல்லாற்றானும் பாடாற்றியவர்.

பிரிட்டிசாரின் காலனித்துவ ஆட்சியின்போது மலாயா இரப்பர் தோட்டங்களில் தொழிலாளிகளாக இருந்த தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளைக் கண்டு மனம் பொறுக்காமல் கொதித்தெழுத்து தமிழர் சீர்திருத்த சங்கத்தின்வழி போராடியவர்.

தமிழ் முரசு என்ற நாளிதழைத் தொடங்கி மலாயாவிலும் சிங்கையிலும் தமிழியச் சிந்தனைகள் பரவுவதற்கும் தமிழர் விழுமியங்கள் நிலைபெறவும் ஓயாது உழைத்து வெற்றி கண்டவர். மிகுந்த தமிழ்ப்பற்று கொண்டவராகவும், தமிழர் நலமொன்றையே மேலாகக் கருதியவராகவும் திகழந்தார். தமிழ் முரசு நாளிதழ் வழியாகவே எழுத்தாளர் பேரவை, மாணவர் மணிமன்ற மலர், தமிழ் இளைஞர் மணிமன்றம் ஆகிய அமைப்புகளை உருவாக்கினார். இதன் வழியாக ஆயிரமாயிரம் எழுத்தாளர்களையும், கவிஞர்களையும், பேச்சாளர்களையும், சிந்தனையாளர்களையும் உருவாக்கிக் காட்டினார். தமிழகத்திலிருந்து மிகச் சிறந்த அறிஞர்களையும் சான்றோர்களையும் தலைவர்களையும் அழைத்துவந்து நாடுதழுவிய நிலையில் தமிழர்களிடையே தமிழ் உணர்வை ஊட்டி மாபெரும் தமிழ் எழுச்சியை ஏற்படுத்தினார். தவத்திரு குன்றக்குடி அடிகளார் 1955ல் கோலாலம்பூர் வந்திருந்தபோது கோ.சா அவர்களுக்கு “தமிழவேள்” எனும் சிறப்புப் பட்டமளித்துப் பாராட்டினார்.

அனைத்திற்கும் மேலாக, மாலாயாவிலும் சிங்கப்பூரிலும் தமிழ்மொழிக் கல்வி நிலைப்பதற்கு மிக உறுதியான அடித்தளத்தை ஏற்படுத்தியவர் அமரர் கோ.சா என்பது பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ள வரலாறு. மலாயாவில் முதன் முதலாகப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டபோது அதில் சமற்கிருத மொழியைப் பாட மொழியாக வைக்கவேண்டும் என பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி பரிந்துரை செய்தார். ஆனால், அமரர் கோ.சா இந்தப் பரிந்துரையை மிகத் தீவிரமாக எதிர்த்தார். பல்கலைக்கழகத்தில் தமிழயே வைக்கவேண்டும் என்று போராடினார்.

பல்கலைக்கழகத்தில் தமிழை இடம்பெறச் செய்வதற்காக ‘தமிழ் எங்கள் உயிர்’ என்ற நிதித்திட்டத்தைத் தொடங்கி நாடுமுழுவதும் சுற்றித்திரிந்து பணத்தைத் திரட்டி தமிழைக் காப்பாற்றிய பெருமகனார் இவராவார். இவருடைய அயராத உழைப்பின் பயனாகவும் தமிழ்மக்கள் ஒன்றுதிரண்டு வழங்கிய ஆதரவினாலும் மலாயா பல்கலைக்கழகத்தில் தமிழை முதல் மொழியாகக் கொண்ட இந்திய ஆய்வியல் துறை அமைந்தது.

'தமிழர் திருநாள்' என்ற பெயரில் மாபெரும் தமிழ்; தமிழர் எழுச்சிப் பெருவிழாவினை ஏற்படுத்தி மலாயாவில்(மலேசியாவில்) வாழும் தமிழர்களிடையே மாபெரும் தமிழ் அறிவையும் தமிழ் உணர்வையும் தமிழின எழுச்சியையும் ஏற்படுத்தி, இன்றளவும் தமிழும் தமிழரும் தங்களின் தாய்மொழி உரிமையோடு வாழ்வதற்குரிய வாழ்வாதாரத்தை வழங்கிய தமிழவேள் கோ.சாரங்கபாணி என்னும் அந்த மொழி, இனநலச் சான்றோன் பொன்னடிகளை ஒவ்வொரு தமிழனும் தமிழச்சியும் போற்றிக் கும்பிட வேண்டும்.

Monday, April 14, 2008

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 1


முன்னுரை - ஆங்கில ஆண்டின் வரலாறு

தமிழ்ப் புத்தாண்டு தொடர்பான விவாதங்கள் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இவ்வாண்டின் தொடக்கத்தில் தமிழக முதல் 'தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு' என்று அரசாணை பிறப்பித்தார். அதன்பிறகு, காலங்காலமாக சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடிவரும் உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களிடையே பல்வேறு ஐயங்களும் குழப்பங்களும் சலசலப்புகளும் தோன்றின. சித்திரையை ஒதுக்கவும் முடியாமல் தைத்திங்களை ஏற்கவும் முடியாமல் தமிழ் மக்கள் இன்னும் தினறிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில், தமிழ்ப் புத்தாண்டு எது? ஏன்? எப்படி? ஆராய்வோம் வாரீர்.

மாந்த நாகரிகம் தொடங்கிய காலம் தொட்டு வெவ்வேறு இன மக்கள் வெவ்வேறு நாட்களைத் தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறார்கள். இன்று சமய அடிப்படையில் கிறித்தவர்கள் சனவரி முதல் நாளையே புத்தாண்டின் தொடக்கமாகக் கொண்டாடுகிறார்கள். இசுலாமியர்கள் முகமது நபி மெக்காவில் இருந்து மதினாவிற்குப் புலம்பெயர்ந்த நாளில் இருந்தே ஆண்டுகளைக் கணக்கிடுகிறார்கள். இப்படியே புத்த சமயத்தவர் புத்தர் பிறந்த நாளில் இருந்து ஆண்டுகளை எண்ணுகிறார்கள்.

கிறித்தவர்களுக்கு சனவரி முதல்நாள் எப்போதுமே புத்தாண்டின் தொடக்கமாக இருந்ததில்லை. பதினெட்டாம் நூற்றாண்டுவரை யேசுபிறந்த திசம்பர் 25 ஆம் நாளே புத்தாண்டின் தொடக்கமாக இருந்தது. ஆயினும், கிறித்துவ நாட்காட்டியின் அடிப்படையிலேயே சனவரி முதல் நாள் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாட்காட்டி காலத்துக்குக் காலம் திருத்தப்பட்டு ஒழுங்குபடுத்தி வரப்பட்டிருக்கிறது.

உரோம சக்கரவர்த்தி யூலியசு சீசர் அவர்கள் கி.மு. 45 ஆம் ஆண்டு ஒரு புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தினார். அதற்கு யூலியன் நாட்காட்டி என்று பெயர். அதற்கு முந்தி ஒரு ஆண்டில் பத்து மாதங்களும் 304 நாட்கள் மட்டுமே இருந்தன. கிறித்துவ பாதிரிமார்கள் தங்களது அரசியல் நோக்கங்களுக்காக நாட்காட்டியில் உள்ள நாட்களையும் மாதங்களையும் கூட்டியும் குறைத்தும் சமயத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்தினார்கள். சில சமயங்களில் கையூட்டு வாங்கிக் கொண்டு ஆண்டை நீட்டியும் குறைத்தும் காட்டினார்கள்! யூலியஸ் சீசர் அந்தக் குளறுபடிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். தனது பெயரில் ஒரு மாதத்தைக் கூட்டினார். அவர் கணித்த நாட்குறிப்பு கிபி 1,500 வரை பயன்பாட்டில் இருந்தது. கிமு 45ஆம் ஆண்டில் நாட்காட்டியைத் திருத்தி அமைத்ததால் அந்தக் குழப்ப ஆண்டு மொத்தம் 445 நாட்களைக் கொண்டிருந்தது.

அதன் பின் கிரிகோறியன் (Gregorian) நாட்காட்டி நடைமுறைக்கு வந்தது. ஆனால் கிபி 1900 வரை பழைய நாட்காட்டியை கிரேக்கம், உருசியா போன்ற நாடுகள் கைவிடவில்லை. இன்றும் உருசியாவின் பழைமைவாத தேவாலயங்கள் யூலியன் நாட்காட்டியைத்தான் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன.

யூலியன் நாட்காட்டி ஒரு ஆண்டில் 365 1/4 நாட்கள் இருப்பதாகக் கணக்கிட்டது. கணக்கைச் சரிசெய்ய நாலாண்டுக்கு ஒருமுறை (Leap Year) ஒரு நாள் பிப்பிரவரி மாதத்துக்குரிய நாட்களோடு கூட்டப்பட்டது. ஆனால் உண்மையில் ஒரு ஆண்டு 365 நாட்கள், 5 மணி, 49 நிமிடம், 12 வினாடியைக் (365.2424) கொண்டது. இதனால் ஒரு புதிய சிக்கல் உருவாகியது. 128 ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 நாள் வித்தியாசம் ஏற்பட்டது. எனவே 1582இல் போப் கிரிகோறியன் அதைச் சரிசெய்ய 10 நாட்களைக் குறைத்தார். அதன் பின்னர் 400 ஆல் பிரிக்கக்கூடிய நூற்றாண்டுகளில் (1700, 1800, 1900) ஒரு நாள் கூட்டப்பட்டது. ஆனால் 2000இல் கூட்டப்படவில்லை.

அப்படியும் கிபி 4,000 அல்லது 5,000 ஆண்டளவில் 12 நாட்கள் வித்தியாசம் ஏற்பட்டுவிடும் எனத் தெரிய வந்தது. எனவே இந்தத் தொல்லையில் இருந்து விடுபட 1972 ஆம் ஆண்டு அணு மணிப் பொறி ஒன்றினைக் கண்டு பிடித்தார்கள். அது காட்டும் நேரமே உலகத்தின் முறைமைப்பட்ட (official) நேரம் என எல்லா நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது.

வரலாற்றில் எகிப்தியர்கள்தான் முதன் முதலில் ஒரு ஆண்டில் 365 நாட்களைக் கொண்ட நாட்காட்டியை கிமு 4236இல் கண்டு பிடித்ததாகச் சொல்லப்படுகிறது.

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 2



தமிழர் கண்ட கால அளவீடு

பழந் தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது. பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது.
ஆனால் தமிழர்கள் ஞாயிறு ஆண்டைக் (365 1/4); கொண்ட நாட்காட்டியை உருவாக்கியதாகத் தெரியவில்லை. உருவாக்கியதற்கான சான்று எதுவும் இல்லை.

திங்களின் வளர்பிறை தேய்பிறை கொண்டே தமிழர்கள்; ஆண்டைக் கணித்தனர். அதனால்தான் மாதத்தை திங்கள் என்று அழைத்தனர். திங்கள் ஞாயிற்றைச் சுற்றிவர எடுக்கும் நேரம் 27 நாட்கள், 7 மணி, 43 மணித்துளிகள்.

பண்டைய நாட்களில் காலத்தைப் பெரும்பொழுது சிறுபொழுது என வகுத்தனர். இளவேனில் (சித்திரை, வைகாசி ) முதுவேனில் (ஆனி, ஆடி), கார் (ஆவணி, புரட்டாதி) கூதிர் (ஐப்பசி, கார்த்திகை) முன்பனி ( மார்கழி, தை, ) பின்பனி ( மாசி, பங்குனி) ஆறு பெரும் பொழுதாகும்.

வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை. யாமம் என்பதே ஒரு நாளில் அடங்கிய ஆறு சிறுபொழுதாகும். மேலும் ஒரு நாள் 60 நாளிகை கொண்டது என்று கணக்கிட்டனர். ஒரு நாளிகை 24 நிமிடங்களாகும்.

சங்க காலத் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, திங்கள், ஆண்டு, ஊழி என்று வானியல் அடிப்படையில் வரையறை செய்துள்ளன. முழுமதி நாளில் ஞாயிறும் திங்களும் எதிர் எதிராக நிற்கும் என்ற வானவியல் உண்மையைப் புறநானூற்றுப் பாடல் (65) ஒன்று தெரிவிக்கிறது.

சங்க இலக்கியங்களில் தமிழ் மாதப்பெயர்கள் காணக்கிடைக்கின்றன. தை, மாசி (பதிற்றுப்பத்து) பங்குனி (புறநானூறு) சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தொல்காப்பிய ஆசிரியர் இகரவீற்றுப் புணர்ச்சி, ஐகாரவீற்றுப் புணர்ச்சியை விளக்கும்போது 'திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன' எனக் கூறுவதைக் காணலாம். எல்லாத் திங்கள்களின் பெயர்களும் இந்த இரண்டு எழுத்தில் (இ, ஐ) முடிந்தன என்கிறார். "நாள்முன் தோன்றும் தொழில்நிலைக் கிளவி" எனும் பாடல் நாள்மீன்(நட்சத்திரம்) பற்றி பேசுகிறது. "திங்கள் முன்வரின் இக்கே சாரியை" என்ற பாடல்வரி மாதத்தைப் பற்றியது. எனவே இன்றுள்ள 12 மாதங்களும் அவர் காலத்தில் இருந்து வருகின்றன எனத் துணியலாம்.

மேலும் தொல்காப்பியர் அ,இ,உ,எ, ஒ என்னும் ஐந்து உயிர் எழுத்துக்களும் ஒரு மாத்திரை ஒலிக்கும் குறில் எழுத்துக்கள் என்கிறார். ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ, ஒள என்னும் ஏழு உயிர் எழுத்துக்களும் இரண்டு மாத்திரை ஒலிக்கும் நெடில் எழுத்துக்கள். மூன்று மாத்திரைகளில் எந்த எழுத்தும் ஒலிக்கப்படுவதில்லை. ஒலி மிகுதல் தேவைப்பட்டால் அந்தளவிற்குத் தேவையான எழுத்து ஒலிகளை எழுப்புதுல் வேண்டும்.

இதே போல் மெய் எழுத்துக்கு ஒலி அரை மாத்திரை. மாத்திரையின் கால அளவைச் சொல்லும்போது இயல்பாகக் கண் இமைத்தலும், விரல் நொடித்தலுமே ஒரு மாத்திரை என்னும் ஒலி அளவு. இது தெளிவாக அறிந்தோர் வழி என்கிறார் தொல்காப்பியர்.

"கண்இமை நொடிஎன அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே" (தொல்)
காலத்தை இவ்வளவு நுணுக்கமாகக் கணக்கிட்ட புலவர்கள், இலக்கண ஆசிரியர்கள், அறிஞர்கள் தமிழர்களுக்கென ஒரு பொதுவான தொடர் ஆண்டை வரையறை செய்யாது போயினர். அதனால் அரசர்கள் புலவர்கள் சான்றோர்கள் பிறப்பு ஆண்டு, மறைவு ஆண்டு இவற்றைத் தொடர் ஆண்டோடு தொடர்பு படுத்தி வரலாற்றைப் பதிவு செய்ய முடியாமல் போய்விட்டது.

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 3


தைத்திங்கள் முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு

ஆண்டுகள் வரலாற்றைத் தொடர்ச்சியாக பதிவு செய்யப் பயன்பட வேண்டும். அவை குழப்பத்திற்கு இடமின்றி இருத்தல் வேண்டும். தமிழர் வரலாற்றில் காலக் குழப்பம் இருப்பதற்கு தொடராண்டு முறை இல்லாதது முக்கிய காரணமாகும்.

பழந்தமிழரிடையே வியாழ ஆண்டு என்கிற அறுபதாண்டு கணக்குமுறை இருந்துவந்துள்ளது என்பதை வரலாற்றில் அறிய முடிகிறது. இந்த அறுபதாண்டு கணக்குமுறையை பின்னாளில் ஆரியர்கள் தங்கள் கையகப்படுத்திக் கொண்டு ஆரியமயமாக்கி 60 ஆண்டுகளுக்கும் சமற்கிருதப் பெயர்களைச் சூட்டி, காலப்போக்கில் தமிழரின் ஆண்டு முறையையும் வானியல் கலையையும் ஐந்திற அறிவையும் அழித்து ஒழித்தனர். தமிழரிடையே தொடராண்டு முறை இல்லாமல் போனதால் இன்று நாம் காணுகின்ற பல்வேறு தாக்குறவுகளும் பின்னடைவுகளும் தமிழினத்திற்கு ஏற்பட்டுவிட்டது.

இந்தக் குழப்பத்தை நீக்க ஐந்நூறு தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள் மறைமலை அடிகளார் தலைமையில் 1921 ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றுகூடி ஆராய்ந்தார்கள். திருவள்ளுவர் பிறந்த ஆண்டை கி.மு 31 எனக் கொண்டு, திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டை ஏற்படுத்துவதென முடிவு செய்தனர். இழந்த தொன்மைச் சிறப்புக்குரிய தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமென அவர்கள் அறிவித்தனர்.

சைவம், வைணவம், புத்தம், சமணம், கிறித்துவம், இசுலாம் என பல்வேறு சமயத்தைத் தழுயிய அந்த ஐந்நூறு சான்றோர்கள் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்ததற்குச் சரியான காரணங்களும் சான்றுகளும் இருக்க்கின்றன.

தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு ஈராயிரம் அண்டுகளுக்கும் முற்பட்ட கழக இலக்கியன்களில் காணப்பெறும் சான்றுகள் சில:-

1. "தைஇத் திங்கள் தண்கயம் படியும்" – நற்றிணை

2. "தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" – குறுந்தொகை

3. "தைஇத் திங்கள் தண்கயம் போல்" – புறநாநூறு

4. "தைஇத் திங்கள் தண்கயம் போல" – ஐங்குறுநூறு

5. "தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ" – கலித்தொகை

தைப் பிறந்தால் வழி பிறக்கும், தை மழை நெய் மழை முதலான பழமொழிகள் இன்றும் தமிழ் மக்கள் நாவில் இன்றும் பயின்று வருகின்றன. இவை வாழையடி வாழையாக வாய்மொழிச் சான்றாக அமைந்துள்ளன.

இனி, தை முதல் நாளே புத்தாண்டு என்பதற்குரிய வானவியல் அடிப்படையிலான காரணத்தை காண்போம். பூமி ஒரு முறை கதிரவனைச் சுற்றிவரும் காலமே ஓர் ஆண்டாகும். இச்சுழற்சியில் ஒருபாதிக் காலம் கதிரவன் வடதிசை நோக்கியும் மறுபகுதிக் காலம் தென்திசை நோக்கியும் செல்வதாகக் காணப்படுகிறது. இதனால் ஓராண்டில் சூரியனின் பயணம், வடசெலவு (உத்ராயணம்) என்றும் தென்செலவு (தட்சனாயணம்) என்றும் சொல்லப்படும். தை முதல் ஆனி வரை ஆறு மாதம் வடசெலவும் ஆடி முதல் மார்கழி வரை தென்செலவுமாகும். அந்தவககயில், கதிரவன் வடசெலவைத் தையில்தான் தொடங்குகிறது. இந்த வானியல் உண்மையை அறிந்த பழந்தமிழர் தைத்திங்களைப் புத்தாண்டாக வைத்தது மிகவும் பொருத்தமானதே.

இப்படியும் இன்னும் பல அடிப்படை காரணங்களாலும் தை முதல் நாளை ஐந்நூறு தமிழ்ச் சான்றோர்கள் புத்தாண்டாக அறிவித்தனர். தமிழ்நாடு அரசு அதனை ஏற்றுக் கொண்டு 1972 முதல் அரசுப் பயன்பாட்டிலும் ஆவணங்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.

'பத்தன்று நூறன்று பன்னூ றன்று
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தை முதல் நாள், பொங்கல் நன்னாள்''

என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடலும் தமிழருக்குத் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்பதைத் தெளிவாக்குகிறது.

தமிழ் மொழி, இன, சமய, கலை, பண்பாடு, வரலாற்று மீட்பு வரிசையில் பிற இனத்தாரின் தாகுதலால், படையெடுப்பால், மறைப்புகளால், சூழ்ச்சிகளால் இடைக்காலத்தில் சிதைக்கப்பட்ட தமிழரின் வானியல் கலையை – ஐந்திரக்(சோதிடம்) கலையை நாம் மீட்டெடுக்க வேண்டும். அப்போதுதான் தமிழரின் செவ்வியல் நெறியை நிலைப்படுத்த முடியும்.

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 4


சித்திரைப் புத்தாண்டு புராண வரலாறு

தமிழரின் ஆண்டு என்ற பெயரில் இன்று இருப்பது 60 ஆண்டுகளைக் கொண்டு சுழன்றுவரும் ஆண்டு முறைதான. இதற்கு, விக்கிரம ஆண்டு, சாலிவாகன ஆண்டு(சாலிவாகன சகம்), கலியாண்டு என்று பல பெயர்கள் விளங்குகின்றன. தமிழரின் வியாழ ஆண்டு முறையாக 60 ஆண்டு சுழற்சி முறை ஆரியமயமாக மாறிப்போன பிறகு அதற்கு தெய்வீகம் கற்பிக்கப்பட்டது. இறைவனால் உருவாக்கப்பட்டது என நம்பவைக்கப்பட்டது. மதச்சார்பு செய்யப்பட்டுப் புராணங்களில் இணைக்கப்பட்டது. மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த கடவுளர்களின் பெயர்களோடு தொடர்புபடுத்தி மதநூல்களில் ஏற்றப்பட்டது.

அவ்வகையில், புராணக் கதையின்படி ஒரு காலத்தில் நாரத முனிவர் காமம் மேலோங்கி அலைந்தபோது அவருக்கு அறுபதினாயிரம் கோபியரோடு கொஞ்சிக் குலாவும் கிருஷ்ண பகவான் நினைவு வந்ததது. நேராக அவர் முன் போய் "'கிருஷ்ணா, சதா கோபியரோடு கொஞ்சி இன்பம் அனுபவிக்கும் தேவனே, எனக்கு யாராவது ஒரு கோபியைத் தந்து எனது காம இச்சையைத் தீர்த்து வைக்க வேண்டும்''; என வேண்டினார்.

அதற்குக் கிருஷ்ண பரமாத்மா ''நாரதரே, எந்தவொரு பெண்ணின் மனதில் நான் இல்லையோ அந்தப் பெண்ணை நீ அனுபவித்துக்கொள்'' என ஆறுதல் மொழி கூறினார்.

ஆண்டவன் அருள்வாக்கு அருளப்பெற்ற நாரதர் வீடு வீடாய் (நாயாய்) அலைந்தார். அனைத்துப் பெண்கள் மனதிலும் கிருஷ்ணனே நீக்கமறக் குடி கொண்டிருந்தார். ஒரு கோபியும் அதற்கு விதி விலக்கல்ல. ஏக்கமும், ஏமாற்றமும் அடைந்த நாரதர் மானம், வெட்கம் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு மீண்;டும் கிருஷ்ண பரமாத்மாவிடமே வந்தார்.

'கிருஷ்ணா! எல்லாக் கோபியர் மனதிலும் தாங்களே இருக்கக் கண்டேன். தேவரீர் என்னை இவ்விதம் சோதிக்கலாமா? காம வேட்கை எனை வாட்டுகிறது. என்னைப் பெண்ணாக மாற்றி நீரே என்னை அனுபவித்து என் வேட்கையைப் போக்க வேண்டும்"' என வேண்டி நின்றார்.

பரிதாபப் பட்ட பகவானும் அவ்விதமே நடப்பதாகக் கூறி, நாரதரைப் பெண்ணாக்கி அவரோடு கலந்து அறுபது குழந்தைகளைப் பெற்றார்.

அந்த அறுபது குழந்தைகள் தான் பிரபவ முதல் அட்சய வரையிலான ஆண்டுகள். அந்தப் பெயர்கள் ஒன்றேனும் தமிழ் அல்ல. அறிவுக்கும் அறிவியலுக்கும் ஒவ்வாத இவ்வாண்டு முறை வரலாற்றுக்கு உதவாத வகையில் உள்ளது.

இந்த அறுபது ஆண்டுகளின் பெயர்களை ஆத்திரம் கொள்ளாமல் ஆன்மீகத் தமிழர்கள் ஆர அமர அலசிப் பார்க்க வேண்டும்.

பிரபவ முதல் அட்சய வடமொழிப் பெயர்களாவது தமிழர்கள் பெருமை கொள்ளத் தக்கவாறு உள்ளதா என்றால் அப்படியும் இல்லை. எடுத்துக் காட்டாக மூன்றாவது ஆண்டின் பெயரான ""சுக்கில"" ஆண் விந்தைக் குறிக்கிறது. இருபத்துமூன்றாவது ஆண்டான விரோதி எதிரி என்ற பொருளைத் தருகிறது. முப்பத்தெட்டாவது ஆண்டு குரோதி. இதன் பொருள் பழிவாங்குபவன் என்பதாகும். முப்பத்துமூன்றாவது ஆண்டின் பெயர் விகாரி. பொருள் அழகற்றவன், ஐம்பத்து ஐந்தாவது ஆண்டான துன்மதி கெட்டபுத்தி என்று பொருள்.

இப்படிப்பட்ட அருவருக்கத்தக்க வரலாற்றக் கொண்டுவந்து தமிழனின் தலையில் கட்டிவைத்து இதுதான் தமிழ்ப் புத்தாண்டு என்று பறைசாற்றுவதில் உண்மையும் நேர்மையும் இருப்பதாகத் தோன்றவில்லை. வரலாற்றில் மாபெரும் சருக்கல் ஏற்பட்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெரிகிறது.

ஆகவே, காலங்காலமாக அறிவாராய்ச்சி இன்றி குருட்டுத்தனமாகத் தமிழர்கள் சித்திரையைப் புத்தாண்டாகக் கொண்டாடி வந்திருக்கின்றனர் என்பது புலப்படுகிறது. இன்று, நிலைமை அவ்வாறு இல்லை. தமிழ்ப் புத்தாண்டு தொடர்பில் பல்வேறு ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் நடைபெற்று மறைந்துகிடந்த உண்மைகள் வெளிப்பட்டுவிட்டன. இனியும் தமிழ் மக்களை மடையர்கள் என்று எண்ணிக்கொண்டு ஆதிக்க(ஆரிய)க் கூட்டம் ஆட்டம் போடாமல் அடங்கிப் போவதுதான் நல்லது. ஆரிய வழிசார்ந்தவர்கள் தங்களுக்கு எந்த ஆண்டு வேண்டுமோ வைத்துக்கொள்ளட்டும்; எந்த நம்பிக்கை வேண்டுமோ வைத்துக்கொள்ளட்டும்; சமற்கிருத மொழி வேண்டுமானால் வைத்துக்கொள்ளட்டும்; கிரந்தம் வேண்டுமானால் வைத்துக்கொள்ளட்டும்; ஆரிய வாழ்க்கை முறையை வைத்துக்கொள்ளட்டும். இவை அனைத்தையும் அவர்களுடன் வைத்துக்கொள்ளட்டும்.

ஆரியக் கூட்டத்தின் மூடத்தனங்களை எந்த நிலையிலும் – எந்தச் சூழலிலும் – எந்த வடிவத்திலும் – எந்த முறையிலும் – எந்த ஊடகத்திலும் உலகின் நனிசிறந்த இனமாகிய தமிழ் இனத்தின்மீது திணிக்க வேண்டாம்! தமிழர்மீது திணிக்க வேண்டாம்! காரணம், அவ்வாறு திணிப்பது ஆதிக்க மனப்பான்மை மட்டுமன்று மனித உரிமை மீறல் என்பதையும் எவரும் மறக்கலாகாது.
Blog Widget by LinkWithin