Saturday, December 27, 2008

திருவள்ளுவராண்டு 2040 தமிழ் நாள்காட்டி


எதிர்வரும் தைத்திங்கள் முதலாம் நாள் (ஆங்கிலம் 14-1-2009) திருவள்ளுவராண்டு 2040 பிறக்கவுள்ளது. ஆங்கிலப் புத்தாண்டை முன்படுத்தி நாள்காட்டிகள் வெளியிடப்படுகின்ற மரபைப் போல, தமிழருகே உரிய தமிழ்ப் புத்தாண்டை முன்னிறுத்தி தமிழ் நாள்காட்டி வெளிவந்துள்ளது. இந்தத் தமிழ் நாள்காட்டி மூன்றாவது ஆண்டாக மலேசியாவில் வெளிவருகிறது.

ஏற்கனவே, 2007, 2008 ஆகிய இரண்டு ஆண்டுகளில் வெளிவந்து தமிழர்களின் பாராட்டுகளையும் மக்கள் தொலைக்காட்சியின் வாழ்த்தையும் பெற்ற இந்த நாள்காட்டியைத் தமிழியல் ஆய்வுக் களம் பெருமையோடு வெளியிட்டுள்ளது. மலேசியத் தமிழறிஞர் இர.திருச்செல்வம் இந்த நாள்காட்டியை கட்டமைப்போடும் நேர்த்தியோடும் வடிவமைத்துள்ளார்.

தமிழ் நாள்காட்டி வரலாற்றில் தனிப்பெரும் சிறப்பாக இதுகாறும் கண்டிராத மாபெரும் முயற்சியாக, இந்த நாள்காட்டி முழுமையாகத் தமிழிலேயே வெளிவந்துள்ளது. தமிழ்க்கூறு நல்லுலகம் முதன்முறையாகக் கண்டிருக்கும் தனித்தமிழ் நாள்காட்டியென இதனைத் துணிந்து குறிப்பிடலாம்.

நாள்காட்டியின் உள்ளடக்கங்கள்

1)தேதியைக் குறிக்கும் எண்கள் தமிழ் எண்களாக உள்ளன. ஆங்கில எண்களுக்கு முதலாக சொல்லப்படும் அரபு எண்களுக்கே மூலமான தமிழ் எண்களை மீட்டெடுக்கும் உயரிய நோக்கத்தோடு இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. தமிழ் எண்களை அறியாதவர்களுக்கு உதவியாக (விவேகானந்தா நாள்காட்டி தமிழ் எண் அமைப்பில்) ஆங்கில எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

2)திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்றி மாதங்கள், கிழமைகள், நாட்கள் என அனைத்தும் தமிழ்ப்பெயர்களோடு அமைந்துள்ளன. மேலும், ஓரை(இராசி), நாள்மீன்(நட்சத்திரம்), பிறைநாள்(திதி) முதலானவையும் தமிழில் குறிக்கப்பட்டுள்ளன.

3)இதுவரையில் வந்துள்ள எந்தவொரு தமிழ் நாள்காட்டியிலும் இல்லாத அளவுக்கு 50க்கும் மேற்பட்ட தமிழ்ச் சான்றோர்கள், அறிஞர்கள், தலைவர்கள் ஆகியோரின் பிறந்த நாள், நினைவு நாள்களோடு தமிழ் அருளாளர்களின் குருபூசை நாட்களும் இந்த நாள்காட்டியில் குறிக்கப்பட்டுள்ளன.

4)மலேசியா, தமிழகம், தமிழீழம் உள்ளிட்ட 30 தமிழ்ப் பெரியோர்கள் - சான்றோர்கள் - தலைவர்களின் உருவப்படங்கள் நாள்காட்டியில் இடம்பெற்றுள்ளன.

5)தமிழர்களின் வரலாற்றில் மறைக்கப்பட்டு; மறக்கப்பட்டுவிட்ட வானியல்(சோதிடக்) கலையை இந்த நாள்காட்டி மீண்டும் வெளிப்படுத்தி காட்டியுள்ளது.


6)குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதற்கான எழுத்து அட்டவணை இந்த நாள்காட்டியில் வழங்கப்பட்டுள்ளது. கிரந்த எழுத்துகள் அறவே கலவாமல் முழுமையாகத் தமிழ் எழுத்துகளையே கொண்டிருக்கும் தமிழ் முன்னோர்கள் கண்ட பெயர் எழுத்து அட்டவணை இதுவாகும்.

7)ஐந்திரக் குறிப்பு, நாள்காட்டிப் பயன்படுத்தும் முறை, பிறைநாள்(திதி), ஓரை(இராசி) பற்றிய விளக்கங்கள் ஆகியவை இரண்டு பக்கங்களில் நாள்காட்டியின் பின்னிணைப்பாக இடம்பெற்றுள்ளன.


8)ஒவ்வொரு ஓரை(இராசி) பற்றிய படத்தோடு சமற்கிருதப் பெயர்களுக்கான தமிழ் வேர்ச்சொல் விளக்கமும் மிகச் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்வழி, சமற்கிருதப் பெயர்களுக்குத் தமிழே மூலமாக இருப்பதை அறிய முடிகிறது.

9)தமிழின வாழ்வியல் மூலவர்களான வள்ளுவர் வள்ளலார் ஆகிய இருவரின் உருவப்படத்தை முகப்பில் தாங்கி, முழு வண்ணத்தில் தரமாகவும் கவரும் வகையிலும் இந்நாள்காட்டி அமைந்திருக்கிறது.

10)கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளியிடப்பட்ட தமிழ் நாள்காட்டிக்குத் தமிழர்கள் வழங்கிய மாபெரும் ஆதரவினைக் கருத்திற்கொண்டும், இவ்வாண்டில் மேலும் பல்லாயிரம் தமிழர்கள் பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்திலும் ஒரு நாள்காட்டி ஐந்து மலேசிய வெள்ளி (RM5.00) விலையில் மட்டுமே விற்கப்படுகிறது.

தமிழை முன்னெடுக்கும் தமிழ் நாள்காட்டி

நாள்காட்டிகளில் வழக்கமாக இடம்பெறும் அனைத்து விவரங்களும் இந்தத் தமிழ் நாள்காட்டியிலும் இடம்பெற்றுள்ளன. மலேசியப் பொது விடுமுறைகள், பள்ளி விடுமுறைகள், சிறப்பு நாள்கள் என மலேசிய சூழலுக்கு ஏற்ப அமைந்துள்ளன. தமிழ்ப் புத்தாண்டாம் தை முதல் நாளில் தொடங்குகிற இந்த நாள்காட்டியில் ஆங்கில நாள்காட்டியும் உள்ளடங்கியுள்ளது.

உள்ளத்தில் தமிழ் உணர்வும் ஊக்கமும் கொண்டு தமிழ்நலத்திற்காக முன்னின்று செயலாற்றும் தமிழ் அன்பர்களும் ஆர்வலர்களும் இந்த நாள்காட்டியை வாங்கி ஆதரவு நல்குவதோடு பரப்பும் முயற்சியிலும் துணைநிற்கலாம். எந்த ஒரு வணிக நோக்கமும் கிஞ்சிற்றும் இல்லாமல் முழுக்க முழுக்க தமிழ் வளர்ச்சியை மட்டுமே இலக்காகக் கொண்டு வெளிடப்படும் இந்த நாள்காட்டி தமிழ் மக்களிடையே சென்று சேரவேண்டும்.

இந்த நாள்காட்டியை வாங்கும் ஒவ்வொரு தமிழன்பரும் தமிழ் மொழி வளர்ச்சிக்கு உதவுகின்றீர்கள்; தமிழ் எண்களை மீட்டு எடுக்கின்றீர்கள்; தமிழ்ச் சான்றோர், பெரியோர், தலைவர்களைப் போற்றுகின்றீர்கள்; தமிழ்ப் பண்பாட்டை பேணுகின்றீர்கள்; தமிழர் கண்ட வானியல் கலையை மதிக்கின்றீர்கள்; தமிழரின் இயற்கை அறிவாண்மையைப் போற்றுகின்றீர்கள்.

மேல் விளக்கத்திற்கும் தொடர்புக்கும்:-
தமிழியல் ஆய்வுக் களம் – Persatuan Pengajian Kesusasteraan Tamil
No.17, Lorong Merbah 2, Taman Merbah,
14300 Nibong Tebal, SPS, Pulau Pinang. Malaysia.

கைப்பேசி:- ம.தமிழ்ச்செல்வன் (6013-4392016) / சுப.நற்குணன் (6012-4643401)
மின்னஞ்சல்:- suba.nargunan@gmail.com
  • இவற்றையும் காண்க:-

Thursday, December 18, 2008

அறிவியல் கணிதம்:- ஏழு தெரிவுகளில் எது முடிவு?


அறிவியல், கணிதம் ஆகிய இரண்டு பாடங்களின் கற்றல் கற்பித்தலை நடத்துவதற்கு ஏழு அணுகுமுறைகள் அடையாளங் காணப்பட்டுள்ளன.

[பட விளக்கம்:‍- அறிவியல் கணிதப் பாட வட்டமேசை மாநாட்டில் துணை கல்வி அமைச்சர் மாண்புமிகு டத்தோ வீ கா சியோங், தலைமை கல்வி இயக்குநர் டத்தோ அலிமுடின்.]


மலேசியத் தொடக்கப் பள்ளிகளில் அறிவியல் - கணிதப் பாடமொழிச் சிக்கல் நாட்டு மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது. கடந்த 2003ஆம் ஆண்டுத் தொடங்கி அறிவியல் – கணிதப் பாடக் கற்றல் கற்பித்தல் ஆங்கிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதனை மீண்டும் தாய்மொழிக்கே மாற்றவேண்டும் என்ற குரல்களும் கோரிக்கைகளும் தற்போது உரக்க ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

இந்தச் சிக்கலுக்குச் சரியான தீர்வினைக் காணும் பொருட்டு, மலேசியக் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் கடந்த 16.12.2008ஆம் நாள் வட்டமேசை மாநாடு நடைபெற்றது. இவ்வகை கலந்தாய்வுக் கூட்டம் ஏற்கனவே நான்கு முறைகள் நடைபெற்று, இப்போது இறுதிக்கட்டக் கூட்டமாக இது அமைந்துள்ளது.

இந்தக் கூட்டத்தில் துணை கல்வி அமைச்சர், தலைமைக் கல்வி இயக்குநர், கல்வித்துறை உயர் அதிகாரிகள், உள்நாட்டு வெளிநாட்டு கல்வியியல் ஆய்வாளர்கள், தேசியப் பெற்றோர் ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்று நாடே மிகவும் எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்தது. ஆனால், இந்த வட்டமேசை மாநாட்டில் இறுதிமுடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இருந்தாலும், அறிவியல் – கணிதப் பாடக் கற்றல் கற்பித்தல் தொடர்பில் 7 அணுகுமுறைகள் அல்லது தெரிவுகள் இந்தக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளன.

அந்த 7 தெரிவுகள் பின்வருமாறு:-

தெரிவு 1:- தற்போது இருக்கும் *PPSMI எனப்படும் அணுகுமுறையை நிலைநிறுத்துதல். (*PPSMI: Pengajaran dan Pembelajaran Sains dan Matematik dalam Bahasa Inggeris – ஆங்கிலமொழியில் அறிவியல் கணிதப் பாடக் கற்றல் கற்பித்தல்)

தெரிவு 2:- அறிவியல் கணிதப் பாடங்களைத் தொடக்கப் பள்ளிகளில் மலாய் அல்லது தாய்மொழியில் கற்பித்தல்; இடைநிலைப்பள்ளிகளில் ஆங்கிலத்தில் கற்பிக்கும் (PPSMI) திட்டத்தைத் தொடருதல்.

தெரிவு 3:- நான்காம் ஆண்டு (4ஆம் வகுப்பு) முதற்கொண்டு இடைநிலைப் பள்ளி வரையில் அறிவியல் கணிதப் பாடங்களை முழுமையாக ஆங்கிலத்தில் கற்பித்தல்.

தெரிவு 4:- தொடக்கப் பள்ளிகளிலும் இடைநிலைப் பள்ளிகளிலும் முழுமையாக மலாய் அல்லது தாய்மொழியில் பயிற்றுவித்தல்.

தெரிவு 5:- அறிவியல் கணிதப் பாடங்களை எந்த மொழியில் பயிற்றுவிப்பது என்பதை அந்தந்தப் பள்ளிகளே முடிவு செய்தல்.

தெரிவு 6:- முதலாம் ஆண்டுமுதல் மூன்றாம் ஆண்டு வரை மலாய் அல்லது தாய்மொழியில் கற்பித்தல்; நான்காம் ஆண்டுமுதல் ஆறாம் ஆண்டு வரை இருமொழிகளில் (ஆங்கிலம் - தாய்மொழி) கற்பித்தல்; இடைநிலைப் பள்ளிகளில் முழுமையாக ஆங்கிலத்தில் கற்பித்தல்.

தெரிவு 7:- முதலாம் ஆண்டுமுதல் மூன்றாம் ஆண்டு வரை அறிவியல் பாடத்தை தவிர்த்துவிட்டு, மற்றுள்ள பாடங்களின் வாயிலாக அறிவியலை இணைத்துக் கற்பித்தல்.

ஏழு தெரிவுகளில் எது முடிவு?

இந்த 7 தெரிவுகள் அல்லது அணுகுமுறைகள் மலேசியக் கல்வி அமைச்சர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ இசாமுடின் துன் உசேன் வழியாக அமைச்சரவைக்குக் கொண்டுசெல்லப்பட உள்ளன. அதன்பிறகு, அறிவியல் கணிதப் பற்றிய இறுதி முடிவு செய்யப்படும். அதுவரையில், தற்போது நடப்பில் இருக்கும் திட்டம் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப்பள்ளிகளின் நிலைப்பாடு என்ன?

இதற்கிடையில், தமிழ்ப்பள்ளிகளைப் பொறுத்தவரையில் மேற்கண்ட 7 தெரிவுகளில் எது சிறப்பாக இருக்கும் என்பதை ஆழமாக ஆராய்ந்து பார்க்கவேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம்.

தற்போது, நாளிதழ்களிலும் மற்ற ஊடகங்களிலும் வருகின்ற செய்திகளின் அடிப்படையில், 'தெரிவு 2' அல்லது 'தெரிவு 6' பெரும்பான்மைத் தமிழர்களின் முதன்மைத் தேர்வாக அமையக்கூடும் என்பதைக் கணிக்க முடிகிறது.

காரணம், இவ்விரு தெரிவுகள் மட்டுமே தமிழ்ப்பள்ளி – தமிழ்க்கல்வி ஆகியவற்றுக்கு முழுமையான பாதுகாப்பையும் உறுதிபாட்டையும் வழங்குவதாக அமைந்திருக்கின்றன எனலாம்.

எது எப்படி இருப்பினும், மாணவர்களின் கல்வி முன்னேற்றம் என்ற ஒன்றை மட்டும் முன்படுத்திச் சிந்திக்காமல், தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம், தமிழ்க்கல்வியின் வளர்ச்சி, தமிழ்மொழியின் வாழ்வு, சமுதாய நலன், பொருளியல் மேம்பாடு, வேலை வாய்ப்பு, முதலான பல்வேறு கோணங்களிலும் ஆழ்ந்து சிந்தித்து, நீண்டகால நன்மையை அளிக்கக்கூடிய வகையில் முடிவெடுப்பதே சாலச் சிறந்தது.

பி.கு:‍‍ இந்தச் செய்தியை மலேசியா இன்று வலைமனையில் காண்க.

Friday, December 12, 2008

தாய்மொழியில் படித்தால் மன இறுக்கம் குறையும்

"தாய்மொழியில் தொடக்கக் கல்வியைப் படித்தால் குழந்தைகளின் மன இறுக்கம் குறையும்" என்று இந்தியாவின் சந்திராயன் விண்கலத் திட்டத்தின் இயக்குநர் அறிவியலாளர் ம.அண்ணாதுரை கூறியுள்ளார்.


நெய்வேலி இந்திய பொறியாளர் கழகம், பொறியாளர் அறிவியலாளர் கழகம் மற்றும் கோவை அரசு தொழிற் நுட்ப கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் இந்திய இளைஞர்களுக்கான சந்திராயன்-1 என்ற சிறப்பு கலந்தாய்வு நிகழ்ச்சி நெய்வேலியில் நடந்தது.

இதில் சந்திராயன் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு பேசியதாவது:-

இந்தியாவின் சாதனையை உலகமே திரும்பி பார்க்கிறது. நமது நாடு 2020ல் வல்லரசு ஆகும் என அணு விஞ்ஞானி அப்துல் கலாம் கூறியுள்ளார். அவரது ஆசை அதற்கு முன்பே நிறைவேறும் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் சந்திராயன்-1.

நிலவுக்கு சென்ற எந்த நாடும் முதல் முயற்சியில் வெற்றி பெற்றது இல்லை ஆனால் இந்தியா தான் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றது.

நாம் விழித்து கொண்டதால் ஏற்பட்ட விளைவுதான் அது. தற்போது நமது இளைஞர்களுக்கு அடிப்படை கட்டமைப்பு பலமாக உள்ளது. அதனை பயன்படுத்திக் கொண்டு நாட்டையும் தங்களையும் உயர்த்தி கொள்ள வேண்டும்.

வேலைக்காக அமெரிக்கா செல்லும் நிலை மாறி சுற்றுலா செல்ல மட்டுமே அமெரிக்கா என்ற நிலைவரும். சந்திராயனின் வெற்றி முடிவல்ல துவக்கம் தான்.

பெட்ரோல் தங்கம் போன்றவை மட்டும் ஒரு நாட்டின் செல்வம் அல்ல. மனிதவளம் தான் நாட்டிற்கு மிகப் பெரிய செல்வம். நமக்கு அந்த செல்வம் அதிகமாக உள்ளது. நமது மாணவர்களும் இளைஞர்களும் அதிகமாக சாதிக்கும் திறன் கொண்டவர்கள்.

குழந்தைகள் தான் நம்பிக்கை நட்சத்திரங்கள் ஆவார்கள் அவர்களின் விருப்பப்படி விரும்பும் துறையில் படிக்க வையுங்கள். எந்த துறையை தேர்வு செய்தாலும் அதில் முதல் இடத்தை பெற வேண்டும். எல்லோரும் எல்லா துறைகளிலும் முதல் இடத்தை பிடித்தால் நாடு எளிதில் முன்னேறிவிடும்.

இந்தியாவை கொலம்பஸ் தேடிய போது கிடைத்தது தான் அமெரிக்கா, பல நாட்டினரின் உழைப்பால் உயர்ந்தது தான் அமெரிக்கா. இந்தியாவின் கல்பனா சாவ்லா, வில்லியம்ஸ் போன்றோர் அங்கு சென்று சாதித்ததை இங்குள்ள நம்மால் சாதிக்க முடியாதா? முடியும் என்பது தான் சந்திராயன்.

தாய் மொழியில் படித்தால் மன இருக்கம் குறையும். முதல் 5 வருடங்கள் குழந்தைகளைத் தமிழில் படிக்க வையுங்கள். அப்போது தான் உணர்தல் என்பது எளிதாக வரும்.

விரக்தி அடைந்த இளைஞர்கள் கூட்டம் தான் வன்முறையை நாடுகிறார்கள், எங்கோ,எதிலோ கிடைத்த ஏமாற்றம் தான் அவர்களை தவறான பாதைக்கு அழைத்து சென்று விடுகிறது. இது போன்ற செயல்கள் பலம் மிக்க நமது நாட்டை தடுமாற வைத்துவிடாது. இவ்வாறு அவர் பேசினார்.


  • நன்றி: செந்தமிழர்

பி.கு:‍‍ இந்தச் செய்தியை மலேசியா இன்று வலைமனையில் காண்க.

Monday, December 08, 2008

கணிதம், அறிவியல் தமிழிலா? ஆங்கில தமிழிலா?

(முக்கிய அறிவிப்பு:- இந்தக் கட்டுரை சற்று நீண்டிருக்கும். இருந்தாலும், தமிழ்ப்பள்ளி, தமிழ்க்கல்வி, தாய்மொழி ஆகியவற்றின் எதிர்கால நலன் கருதி தயவுகூர்ந்து பொறுமையுடன் படித்து முடிக்க திருத்தமிழ் அன்பர்களை வேண்டுகிறேன்.)



கணிதம், அறிவியல் ஆகிய இரு பாடங்கள் தமிழ்ப்பள்ளிகளில் ஆங்கிலத்தில் கற்பிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2003 தொடங்கி 2008 வரையில் ஆறு ஆண்டுகளாக இது நடைமுறையில் இருந்து வருகிறது.

இதனை மேலும் தொடருவதா? அல்லது மீண்டும் முன்பு இருந்ததைப் போல தமிழுக்கு திரும்புவதா? அல்லது ஆங்கிலம் தமிழ் என்ற இருமொழிகளில் மாற்றுவதா? என்ற விவாதங்கள் தற்சமயம் மிகச் சூடாக நடந்து வருகின்றன.

இதன் தொடர்பில், கடந்த 5.12.2008ஆம் நாள் தமிழ்ப்பள்ளி தேசிய நடவடிக்கை மன்றம் ஓர் ஆய்வுக் கூட்டத்தை நடத்தியுள்ளது. ம.இ.கா தேசியத் தலைவர் மதிப்புமிகு டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு அவர்களின் தலைமையில் இந்தக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதிப்புமிகு டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு, "கணிதம் அறிவியல் பாடங்களுக்கான பயிற்றுமொழியை முடிவு செய்வதற்கு எதிர்வரும் 14.12.2008ஆம் நாள் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு அதில் முடிவு செய்யப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்த மாபெரும் கூட்டத்தில் ம.இ.கா அரசியல் தலைவர்களோடு, தமிழ்ப்பள்ளி தொடர்புள்ள உயர் அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்கள், பெற்றோர்கள் ஆகிய தரப்பினர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தத் தீர்மானக் கூட்டத்தில் தங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என தமிழ், தமிழர், தமிழ்க்கல்வி சார்ந்த பொது இயக்கங்களும் கோரிக்கை எழுப்பி வருகின்றன.

அடுத்து வருகின்ற ஆண்டுகளில் தமிழ்ப்பள்ளிகளில் கணிதம் அறிவியல் ஆகிய பாடங்களின் நிலையோடு சேர்த்து ஒட்டுமொத்தத் தமிழ்ப்பள்ளிகளின் தலைவிதியை முடிவு செய்யும் மிக முக்கியமான கூட்டமாக இந்தத் தீர்மானக் கூட்டம் அமையவுள்ளது.

இதேபோல்தான் கடந்த 2002ஆம் ஆண்டில் ஒரு தீர்மானக் கூட்டம் நடந்தது. கூட்டம் நடந்த அரங்கத்திற்கு வெளியில் "கணிதமும் அறிவியலும் தொடர்ந்து தமிழிலேயே கற்பிக்கப்பட வேண்டும்' என்று பல பொது இயக்கங்கள் ஒன்றுகூடி முழங்கிய வேளையில், அரங்கத்திற்கு உள்ளே "கணிதமும் அறிவியலும் முழுமையாக ஆங்கிலத்தில் கற்பிக்கப்பட வேண்டும்" என முடிவு செய்யப்பட்டது.

பின்னர் அம்முடிவு ஒட்டுமொத்த சமுதாயத்தின் முடிவாக வெளியறிவிப்புச் செய்யப்பட்டு அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. அரசாங்கமும் அம்முடிவை தலைமேல் ஏற்று 2003 தொடங்கி இதனைச் செயல்படுத்தியது.

கடந்த ஆறு ஆண்டுகள் கணிதம் அறிவியல் பாடங்களை முழுமையாக ஆங்கிலத்தில் படித்த தமிழ்ப்பள்ளி மாணவர்களோடு சேர்த்து தேசியப்பள்ளி, சீனப்பள்ளி மாணவர்கள் இவ்வாண்டில் யு.பி.எஸ்.ஆர் தேர்வு எழுதினர். அதன் அடைவுநிலை பெரிதாக மகிழத்தக்க வகையில் அமையவில்லை என்பது கசப்பான உண்மை.

அப்படியானால், கணிதம் அறிவியல் பாடங்கள் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுவதால் பெரிய பயன் எதுவும் ஏற்படவில்லை என்பது உண்மையாகிறது. கூடவே, ஆங்கிலமும் புரியாமல் தமிழிலும் படிக்க முடியாமல் மாணவர்கள் சிரமப்படுகிறார்கள் என்பதும் தெளிவாகிறது.

கணிதம் அறிவியல் பாடங்களைக் கற்பிக்கும் திறன்பெறாமல் ஆசிரியர்கள் குறைவாக இருப்பது, அப்பாடங்களுக்கான கலைச்சொற்கள் புரிந்துகொள்ள முடியாத அளவுக்குச் சிரமமாக இருப்பது; கணித அறிவியல் கோட்பாடுகளைத் தெளிவாக விளங்கிக்கொள்ளாமல் இருப்பது; ஆங்கிலத்தில் கேள்விகளைப் படித்துப் புரிந்து அதற்கேற்ற சரியான விடையெழுத முடியால் இருப்பது ஆகியவை இந்தப் பின்னடைவிற்குக் காரணமாக இருக்கலாம்.

இவ்வாண்டுக்கான தேர்வுத் தாள்கள் ஆங்கிலம் தாய்மொழி என இருமொழிகளில் அச்சிடப்பட்டு இருந்தாலும் அதனால் மாணவர்கள் பெரும் பயனை அடையவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாய் தெரிகிறது.

தவிர, கணித அறிவியல் பாடங்களில் மாணவர்களுக்கு வீட்டில் வழிகாட்டவும் உதவிகள் செய்யவும் பெரும்பாலான பெற்றோர்களால் இயலாமல் போய்விட்டது என்பதையும் இங்கே ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

ஆகவே, கணிதமும் அறிவியலும் தமிழில் கற்பிக்கப்பட வேண்டும் அல்லது சீனப்பள்ளிகளைப் போன்று இருமொழிகளில் கற்பிக்கப்பட வேண்டும் என்ற பெரும்பாலாரின் கருத்தில் அடிப்படை உண்மையும் வலுவும் இருக்கிறது.


இதன்வழி, தமிழ் மாணவர்கள் மட்டுமின்றி தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்ச் சமுதாயமும் குறுகியகால நன்மைகளையும் நீண்ட காலத்திற்கான நன்மைகளையும் ஒருசேர அடையமுடியும் என்ற கருத்து ஆழ்ந்து எண்ணிப்பார்க்கத்தக்கது.

இந்த நிலையில், இப்போது மீண்டும் அதே 2003இன் பழைய வரலாறு திரும்பியுள்ளது. மீண்டும் ஒரு தீர்மானக் கூட்டம் நடைபெறவுள்ளது. மீண்டும் ஒருமுறை முடிவு செய்யப்பட உள்ளது.

மீண்டும் அதே பழைய முடிவு நிலைநிறுத்தப்படுமா? அல்லது தமிழுக்கு மாற்றப்படுமா? அல்லது இருமொழிகளில் கற்பிக்க முடிவு செய்யப்படுமா? என்ற கேள்விக்குறி எல்லாருடைய மனத்திலும் எழுந்துள்ளது.


வரலாற்றில் இடம்பெறப் போகும் இந்த முடிவைச் செய்யும்முன், கூட்டத்தில் கலந்துகொள்பவர்கள் அனைவரும் சிலவற்றை ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்: ஆய்வு நோக்கோடு சீர்தூக்கிப்பார்க்க வேண்டும். அவையாவன:-

1.தமிழ்ப்பள்ளிகள் இந்த நாட்டில் தொடர்ந்து நிலைபெற்றிருக்க வேண்டும்.

2.தமிழ்ப்பள்ளிகள் தனித்தன்மையோடும் தனி அடையாளத்தோடும் இருக்க வேண்டும்.

3.தமிழ்ப்பள்ளிகள் தமிழ் மக்களின் பண்பாட்டு நடுவமாகத் தொடர்ந்து செயல்பட வேண்டும்.

4.தமிழ்ப்பள்ளிகள் தமிழ்மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் முக்கிய இடமாக நிலைத்திருக்க வேண்டும்.

5.தமிழ்ப்பள்ளிகள் (523)துறைத்தலைவர்கள் (Head Of Department) நியமனம் பெறக்கூடிய இடங்களாக எதிர்காலத்திலும் இருந்திட வேண்டும்.

6.தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் பயிற்றுமொழியாக (Teaching & Learning Language) இருக்கவேண்டுமே தவிர ஒரு பாடமொழியாக (Subject) மட்டுமே ஆகிவிடக் கூடாது.

7.நமக்குப்பின் வரும் அடுத்த தலைமுறை தமிழ்ப்பள்ளிக்காவும் தமிழ்க்கல்விக்காகவும் போராட வேண்டிய நெருக்கடியை இன்று ஏற்படுத்திவிடக் கூடாது.

8.தமிழ்ப்பள்ளி, தமிழ்க்கல்வி சார்ந்த சமுதாயப் பணிகளுக்கும் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் இடையூறுகள் ஏற்பட்டுவிடக் கூடாது.

9.உலகின் பல நாடுகளில் தமிழ்ப்பள்ளிக்காகவும் தமிழ்க்கல்விக்காகவும் தமிழர் உரிமைக்காகவும் காலங்கடந்து தமிழர்கள் போராடிக்கொண்டிருக்கும் நிலைமை எதிர்காலத்தில் நமது குழந்தைகளுக்கு வரக்கூடாது.

10.உலக மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகிய தாய்மொழி உரிமையானது மலேசியத் தமிழர்களுக்கு இன்றும் இனி என்றும் நிலையாக இருந்திட வேண்டும்.

எனவே, வரும் 14.12.2008ஆம் நாள் நடைபெறவுள்ள தீர்மானக் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருக்கும் அனைத்துத் தரப்பினரும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளையும் தன்னலக் கருத்துகளையும் அறவே ஒதுக்கிவைத்துவிட்டு நல்ல முடிவை எடுக்க வேண்டும்!

பெரும்பான்மைத் தமிழ் மாணவர்கள் நலனையும் தமிழ்மொழியின் நலனையும் தமிழ்ப்பள்ளிகளின் நல்வாழ்வையும் நன்கு எண்ணிப்பார்த்து நல்ல முடிவை எடுக்க வேண்டும்!

நாளைய சமுதாயம் நம்மைப் பார்த்து கைநீட்டி கேள்வி கேட்கும்படியாக இல்லாமல், நெஞ்சை உயர்த்திப் பாராட்டும்படியாக நல்ல முடிவை எடுக்க வேண்டும்!

பி.கு:‍‍ இந்தச் செய்தியை மலேசியா இன்று வலைமனையில் காண்க.

Saturday, December 06, 2008

நாட்டுப்புறப் பாடல்(2) – சிறுவர் பாட்டு


"அச்சிக்கா புச்சிக்கா தண்ணித்தோம்பு
அம்மாகிட்ட சொல்லாத சின்ன பாப்பா
உன்னையும் என்னையும் பெத்தாங்க
சீனசட்டியில் போட்டு வருத்தாங்க"

இப்படி சிறுவயதில் பாடிய 'சிறுவர் பாடல்கள்' ஏராளம் ஏராளம். இளம் வயதில் பாடிப்பழகியப் பாட்டு என்பதால் இன்றும் நினைவைவிட்டு நீங்காமல் இருக்கிறது.

இதுபோன்ற பாடல்களைச் சிறுவர்கள் விளையாட்டுத்தனமாகவும் கூட்டமாகக் கூடி மகிழ்ச்சியாகவும் பாடுவர். இவை மனப்பாடமாக வைத்துப் பாடக்கூடியவையே தவிர ஏட்டில் எழுதிவைத்து பாடுகின்ற கவிதையன்று.

இப்படி எழுதிவைக்காத காரணத்தினாலே பல நாட்டுப்புறப் பாடல்கள் காணாமலே போய்விட்டன. இன்றைய சிறுவர்களுக்கும் இப்படியான சிறுவர் பாடல்கள் தெரிவதில்லை. பெற்றோர்களும் பிள்ளைகளுக்கு இப்படிப்பட்ட பாடல்களைச் சொல்லித் தருவதில்லை.

சிறுவர் பாடல்கள் நாட்டுப்புற மக்களால் வாய்மொழியாக உருவாக்கப்பட்டவை என்றாலும்கூட, சந்த நயத்தாலும் எதுகை மோனையாலும் ஒரு நல்ல கவிதைக்குரிய தன்மையோடு அமைந்திருப்பதைக் காணலாம். மேலும், சிற்றூர் அல்லது தோட்டப்புற மண்வாசனை அந்தப் பாடல்களில் அப்படியே படிந்துநின்று பழைய வரலாற்றையும் எடுத்துக்காட்டும்.

அதோ பாரு மாப்பிள
காசு கேட்டா குடுக்கல
உட்டான் பாரு வைத்துல
உழுந்தான் பாரு சேத்துல
தூக்கி உட்டான் மேடுல
'தெரிமா காசே' சொல்லல

என்ற ஒரு சிறுவர் பாட்டில் மலேசியத் தோட்டத்தின் மணமும் மலாய்மொழியின் மணமும் மிக அழகாக வீசுகிறதே பார்த்தீர்களா?

மலாயாத் தோட்டக்காட்டில் குடியேறிய அன்றையத் தமிழர்கள் தங்களின் தமிழ் இசையோடு இந்த நாட்டின் மலாய்மொழியை இணைத்து எவ்வளவு அழகாகப் பாடலை உருவாக்கி இருக்கிறார்கள். கூடவே, அருமையான நகைச்சுவை செய்தியையும் சொல்லி இப்பாடல் அனைவரையும் சிரிக்கவும் வைக்கிறது.

"கைவீசம்மா கைவீசு; கடைக்குப் போகலாம் கைவீசு"
"நிலா நிலா ஓடிவா; நில்லாமல் ஓடிவா"
"காக்கா காக்கா மைகொண்ட"
"டிங் டிங் கொய்யாக்கா எங்கடா போன"
"ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்திச்சு"

இப்படி இறவா புகழ்கொண்ட சிறுவர்கள் பாட்டுகள் பல உள்ளன.

ஞாயிற்றுக்கிழமை நகையைக் கானோம்
திங்கள் கிழமை திருடன் கிடைத்தான்
செவ்வாய்க் கிழமை செயிலுக்குப் போனான்
புதன் கிழமை புத்தி வந்தது
வியாழக் கிழமை விடுதலை ஆனான்
வெள்ளிக் கிழமை வீட்டுக்கு வந்தான்
சனிக்கிழமை சாப்பிட்டு படுத்தான்

என்ற சிறுவர் பாடலின்வழி, கிழமைப்பெயர்களை அறிமுகப்படுத்துவதோடு நல்லதொரு நன்னெறிப் பண்பையும் புகட்டுகின்ற அழகும் திறமும் நிறைந்த நாட்டுப்புறப் பாடல்கள் நிறைய உண்டு.

நாட்டுப்புறச் சிறுவர்கள் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று 'குத்து குத்து தாம்பாளம்' என்பது. சிறுவர்கள் வட்டமாக அமர்ந்து கைகளைத் தரையில் வைத்து ஆடும் விளையாட்டு இது. இந்த ஆட்டத்தை ஆடும்போது பாடப்படும் ஒரு சிறுவர் பாடலை பாடிப்பார்ப்போம்.. வாருங்கள்.

குத்து குத்து தாம்பாளம்
கோடாலி தாம்பாளம்
உங்க அப்பா பேர் என்னா?
'முங்கப்பூ"
முருங்கப்பூ தின்னுபுட்டு
பாம்பு கைய எடுப்பியா
எடுக்க மாட்டியா?

எடுக்காட்டி போனா
பீச்சாங் கைய எடுத்து
தலை மேல வச்சிக்கோ...

இந்தக் 'குத்து குத்து தாம்பாளம்' பாடல் பல ஊர்களில் பல வகையாகப் பாடப்படுகிறது. அப்படி, தெரிந்தவர்கள் நமக்குத் தெரிவிக்கலாமே..!

Monday, December 01, 2008

தமிழமுது 5 - பசி வந்தால் பறக்கும் பத்து

"பசி வந்திடப் பத்தும் பறக்கும்" என்பது நாம் அடிக்கடி உச்சரிக்கும் அல்லது கேட்கும் பழமொழி.

பசி மிகவும் கொடுமையானது. பசி வந்துவிட்டால் அதன் முன் எதுவும் நிற்க முடியாது. எவ்வளவு பெரிய அறிவையும் ஆற்றலையும் வீரத்தையும் ஏன், தவத்தையும் கூட பசி ஒரே நொடியில் வென்றுவிடும். பசிக் கொடுமை மிகவும் பொல்லாதது. எந்தச் சத்தியாலும் பசியை வெல்ல முடியாது.

இந்தக் கருத்தை உணர்த்துவதுதான் "பசி வந்திடப் பத்தும் பறக்கும்" என்ற பழமொழி.

இந்தப் பழமொழியில் வரும் 'பத்து' எவை?

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்
(நல்வழி பாடல் 26)

ஔவைக் கிழவி நம் கிழவி; அமிழ்தினும் இனிய சொற்கிழவி என்ற சிறப்புக்குரிய தமிழ் மூதாட்டி ஔவையார் இயற்றிய இந்த நல்வழிப் பாடலிலிருந்து பிறந்ததுதான் அந்தப் பழமொழி.

மானம் – குலப்பெருமை – கற்ற கல்வி – அழகிய தோற்றம் – பகுத்தறிந்து பார்க்கும் அறிவு – தானம் செய்வதால் வரும் புகழ் – தவம் மேற்கொள்ளும் ஆற்றல் – முன்னேற்றம் – விடாமுயற்சி – பெண்மீது கொள்ளும் காதல் உணர்ச்சி ஆகிய பத்தும் பசியால் வாடும் ஒருவனிடமிருந்து உடனே ஓடிவிடும் என்பதை அன்றே கண்டுபிடித்து பாடிவைத்துள்ளார் நம் ஔவைப்பாட்டி.

பாடல் என்னவோ பழங்காலத்தில் எழுதப்பட்டதுதான். ஆனால், அது இந்தக் காலத்திற்கும் இனிவரும் எந்தக் காலத்திற்கும் பொருந்துவதாக இருக்கிறது.
இதுவே தமிழ், தமிழ்ப் புலவோர், தமிழ்ச் செய்யுள் ஆகியவற்றுக்கு இருக்கும் தனிச்சிறப்பாகும்

Blog Widget by LinkWithin