Thursday, November 07, 2013

ஆங்கில எழுத்துருவில் தமிழ்? எதிர்வினை #1

“ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதி 
தமிழின் தொப்புள் கொடியை அறுக்காதீர்”


ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? என்னும் சிந்தனையை எழுத்தாளர் செயமோகன் ‘தி இந்து’ பத்திரிகை வழியாக முன்வைத்துள்ளார்.

செயமோகன் என்றாலே விவரம் அறிந்த தமிழர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும். அதிலும், இவர் போன்றோர்க்குப் பாரிய விளம்பரம் கொடுத்து தூபம் போட்டுத் துதிபாடும் இந்து பத்திரிகையும் சேர்ந்துகொண்டால்  குமட்டலுக்குச் சொல்லவா வேண்டும்?

செயமோகன் சொன்ன கருத்து தற்காலச் சூழலுக்குப் பொருந்தாது; நடைமுறைக்குச் சாத்தியமாகாது; செயல்பாட்டுக்கு ஒவ்வாதது; செயற்படுத்துவதற்கு நாதியற்றது; தமிழுக்கு முற்றிலும் எதிரானது; வளமிக்க இலக்கண இலக்கியங்களோடு திகழும் உயர்தனிச் செம்மொழியாம் தமிழுக்குத் தேவையற்றது என்று எடுத்த எடுப்பிலேயே மறுசுழற்சிக் கூடைக்குள் வீசி எறிந்துவிட்டு நம் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். அந்த அளவுக்கு தகுதரமற்ற ஒரு கருத்தை முன்வைத்திருக்கிறார் செயமோகன்.

இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று சிற்றறிவிற்கு எட்டிவை இவைதாம்:

1)    வழக்கமான அவருடைய கவனஈர்ப்பு உத்தி.
2)    அரிப்பு ஏற்பட்டால் தமிழை எடுத்து சொறிந்து கொள்ளும் போக்கு.
3)  தமிழையும் தமிழனையும் அவ்வப்போது சீண்டிப் பார்த்து சுகம் காணும் வக்கிர மனநிலை.

எது எப்படி இருந்தாலும் கருத்துக்குக் கருத்து என்கின்ற விவாத நடைமுறையை மதித்து இந்த எதிர்வினையைப் பதிவு செய்கிறேன்.

ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? இதற்கு வலுசேர்க்க அவர் முன்வைத்துள்ள வாதங்களில் சில இதோ:

1)இளைய தலைமுறை தமிழில் வாசிப்பதில்லை.
2)தாய்மொழிக் கல்வி இரண்டாம் மொழியாகக் கற்கப்படும் சூழல் உருவாகி வருவதால் தமிழ்மொழியில் கவனம் காட்டுவதில்லை.
3)இரண்டாம் மொழியாகக் கற்றுக்கொண்ட தமிழ் மாணவர் கைகளுக்கும் கருத்துக்கும் பழக்கமற்றதாக ஆகிவிடுகிறது.
4)இணையம், முகநூல் (ஊச்ஞிஞுஞணிணிடு) போன்றவற்றுக்காகக் கணினியில் தட்டச்சு செய்பவர்கள் அனைவருமே ஆங்கில எழுத்துகளிலேயே தட்டச்சு செய்துகொண்டிருக்கிறார்கள்.
5)ஆரம்பப் பள்ளி முதலே ஆங்கில எழுத்துகளில் தமிழைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
6)மலாய் போன்ற பல மொழிகள் இன்று ஆங்கில எழுத்துருக்களிலேயே எழுதப்படுகின்றன. அந்த மக்கள் ஆங்கிலம் கற்பது எளிதாகிறது .
7)வருங்காலத்துக்காக நம் எழுத்துருக்களை மாற்றிக்கொண்டால் அதில் பிழையில்லை என்றே படுகிறது.

(எழுத்தாளர் செயமோகன் எழுதிய முழுக் கட்டுரையை இங்கு வாசிக்கவும்.)

இந்தக் கட்டுரை வெளிவந்து, மக்கள் அதுகுறித்து சிந்திக்கவும் எதிர்வினையாடவும் தொடங்குவதற்குள், தமிழர்கள் தம்முடைய சிந்தனையை எவ்வாறு எதிர்கொள்வார்கள் என்று செயமோகன் இன்னொரு கட்டுரையில் முந்திக்கொண்டு சொல்லியிருக்கிறார்.

1)இத்தகைய ஒரு கருத்து உடனடியாக ‘தமிழை அழிக்கச் சதி’ என்ற கூச்சல் மூலமே எதிர்கொள்ளப்படும்.
2)‘உலகிலேயே சிறந்த’ மொழியாகிய தமிழை ‘அன்னியசக்திகள்’ அழிக்கமுயல்கிறார்கள் என்ற ஒரு பாவனையிலேயே நம் மொழிவெறியர்கள் காலம்தள்ளுகிறார்கள்.
3)மொழியை ‘எதிரிகளிடமிருந்து’ பாதுகாக்க முடிந்தவரை எல்லா இடத்திலும் கடுமையாக வசைபாடி கொந்தளிப்பார்கள்.
4)தனக்கு ஒவ்வாத அல்லது புரியாத எந்த ஒரு தரப்பைக் கேள்விப்பட்டாலும் உடனடியாகப் பொங்கி கொந்தளித்துக் கொப்பளிக்கும் கூட்டம்.
5)பழங்குடிக் கும்பலுணர்ச்சியை மட்டுமே வெளிப்படுத்தக்கூடியவர்கள்.

(அக்கட்டுரையின் மூலத்தை இங்கு வாசிக்கவும்)

செயமோகன் முன்வைத்திருக்கும் சிந்தனை பல்வேறு எதிர்வினைகளுடன் தற்பொழுது களமாடிக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து என் எதிர்வினைகளை முன்வைக்கவே இதனை எழுத வேண்டியதாயிற்று.

முதலில், தம் சிந்தனைக்கு வலுசேர்க்க செயமோகன் வைத்துள்ள வாதங்கள் மீதான எதிர்வாதங்களை முன்வைக்கின்றேன்.

1)    இளைய தலைமுறை தமிழில் வாசிப்பதில்லை என்பதை தமிழின் குறைபாடாகக் காட்டியிருப்பது பெரும் புரட்டாகும். கடந்த கால் நூற்றாண்டுக் காலத்தில் தமிழ்வழிக் கல்வியில் ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவாக இன்றைய இளைய தலைமுறை தமிழை வாசிக்கவும் தமிழோடு வாழவும் தயங்குகின்றனர். இது தலைமுறை குறைபாடே அன்றி தமிழின் குறைபாடு அல்ல. எந்த ஒரு மொழியும் பயிலப்படாமல் போவதற்கு அந்த மொழி மட்டுமே காரணமாகிவிடாது. அந்த மொழிக்குரிய ஆளுமை, பொருளியல் மதிப்பு, பண்பாட்டுத் தேவை, வாழ்க்கைக்குப் பயன் ஆகியவையே முதன்மைக் காரணிகளாகும். இவற்றை ஒரு மொழியால் தானே உருவாக்கிக்கொள்ள முடியாது. அம்மொழி சார்ந்த அரசோ அல்லது மக்களால் மட்டுமே இவற்றைத் திட்டமிட்டுக் கட்டமைக்க முடியும்.

2)    தாய்மொழிக் கல்விக்கு முதன்மைக் கொடுப்பதோடு, தமிழ்வழிக் கல்விக்குப் பிற மாநிலங்களைப் போல் தமிழ்நாட்டில் கட்டாயச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். தமிழ்வழிக் கல்வி கற்றவர்களுக்கே அரசுப் பணிகளில் முதலிடம் கொடுக்கப்பட சட்டம் இயற்ற வேண்டும். பிற மாநிலங்களில் குடியேறிய தமிழர்கள் அவ்வந்த மாநில ஆட்சி மொழிகளை மதித்துக் கட்டுப்பட்டு வாழ்வதைப் போல, தமிழ்நாட்டில் குடியேறிய பிறமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டின் ஆட்சிமொழியாகிய தமிழை மதித்து ஏற்று, கற்று, கட்டுப்பட்டு வாழும் நிலை உருவாக்கப்பட வேண்டும்.

3)    இரண்டாம் மொழியாகக் கற்கப்படும் சூழலில் மாணவர்களின் கைகளுக்கும் கருத்துக்கும் பழக்கமற்றதாகிப் போய்விடும் என்பது கல்வி உளத்தியல் அடிப்படையில் சரியான கருத்தன்று. தாய்மொழிக் கல்வியை மிக எளிதாகக் கற்றுக்கொள்ளும் ஆற்றல் குழந்தைகளிடம் இயல்பாகவே அமைந்திருக்கிறது. மேலும், குழந்தைகள் தாய்மொழி வழியாகவே சிந்திப்பதால் சொந்த மொழியில் எழுதுவதும் பேசுவதும் மிக எளிதாக அமையும்.

4)    இணையம், முகநூலில் எழுதுபவர்கள் ஆங்கில எழுத்துருக்களில் தட்டச்சு செய்கின்றனர் எனும் கருத்தை பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன் சொல்லியிருந்தால் நம்பியிருக்கலாம். இன்றோ கணினியில் தமிழ் உள்ளீடு வந்துவிட்டது. கைபேசி, திறன்பேசி, திறன்கருவிகள், தட்டைக் கணினிகள் என எல்லாக் கையடக்கக் கருவிகளிலும் தமிழ் எந்தச் சிக்கலுமின்றிச் செயல்படுகிறது. தமிழ் 99, அஞ்சல் ஆகிய இரண்டு விசை முறைகளும் யுனிகோடு எழுத்துரு முறையும் தமிழை எழுத மிகவும் உதவியாக இருக்கின்றன. ஆயினும், இணையம், முகநூலில் தமிழில் எழுதாமல் போனதற்கு மாந்தத் தவறுகளே (Human Error) காரணமாக இருக்க முடியுமே தவிர, தமிழ்மொழியைக் குறைபடுத்திக் காட்டுவது மிக நுட்பமான திருகுதாளமாகும்.

5)    ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கில எழுத்துகளைக் கற்றுக்கொடுத்தால் குழந்தைகளுக்குச் சிக்கல் வராது என்பதெல்லாம் ஆய்வு செய்யப்படாமால் தெரிவிக்கும் பொத்தாம் பொதுவான கூற்று. சான்றாக, மலேசியாவில் ‘அம்மா’ எனப் படிக்கத் தொடங்கும் குழந்தை ஆங்கில எழுத்துருவில் ‘amma’ என்றும் அதே ஆங்கில எழுத்துருவைக் கொண்டு மலாயில் ‘emak’ என்றும் ஆங்கிலத்தில் ‘mom’, 'mummy', ‘mother’ என்றும் படிக்க வேண்டியிருக்கும். இப்படி ஒரே அம்மாவை, ஒரே சொல்லை, ஒரே எழுத்துருவில் வெவ்வேறாகப் படிப்பதும் ஒலிப்பதும் எழுதுவதும் புரிந்துகொள்வதும் குழந்தைகளுக்கு மிக எளிமையானது என்று சொல்லிவிட முடியுமா?

6)    மலாய் போன்ற மொழிகள் ஆங்கில எழுத்துருவில் எழுதப்படுவதால் ஆங்கிலம் கற்க எளிதாகிறது என்ற பொய்யைச் சொல்லி மலேசியாவுக்கு வெளியே இருப்பவர்களை வேண்டுமானால் செயமோகன் நம்பவைக்கலாம். ஆனால், மலேசியத் தெருவில் வந்து  மலாயை விற்று தமிழர்களை ஏமாற்ற முடியாது அவரால். மலேசியாவில் தமிழ்வழிக் கல்வி பயிலும் தமிழ் மாணவர்களே இன்று வரையில் ஆங்கிலத்தில் மேன்மைபெற்று விளங்குகின்றனர் என்று அவருக்குப் புள்ளி விவரங்களோடு அறிவிக்க முடியும். அறிவியலும், கணிதமும் ஆங்கிலத்தில் படிக்கவேண்டும் என்னும் கல்விக் கொள்கை சில ஆண்டுகளுக்கு முன் மலேசியாவில் அமுலாக்கப்பட்டது. 10 ஆன்டுகளுக்குப் பிறகு 2010ஆம் ஆண்டில் அக்கொள்கை தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டுக் கைவிடப்பட்டது. காரணம், தமிழ்ச் சீன மாணவர்களைக் காட்டிலும் மலாய்வழியில் பயிலும் மலாய்க் குழந்தைகளுக்கு ஆங்கிலத்தில் பயில்வது மிகக் கடினமாக உள்ளது என்பதால்தான். ஆங்கிலத்தில் ‘bus’, ‘postman’, ‘computer’ என்று படித்துவிட்டு பிறகு அதையே மலாயில் ‘bas’ ‘posmen’ ‘komputer’ என்று குழம்பி குழம்பி, மலேசியாவில் மலாய் மாணவர்கள் படித்துக் கொண்டிருப்பதை அறியாமல், செயமோகன் மலாய்மொழியை எடுத்துக் காட்டி தமிழக, அயலக மக்களை மயக்க முற்பட்டிருக்கிறார்.

7)    வருங்காலத்தில் தமிழ் எழுத்துருக்கள் மாறவே மாறாது அல்லது மாறவே கூடாது என்ற வரட்டு நம்பிக்கை தேவையில்லை. காலச் சூழலுக்கு ஏற்ப மாற்றம் வரலாம். அப்படித்தான் கல்வெட்டுக் காலம் பின்னர் ஓலைச்சுவடிக் காலத்தில் எழுத்துருக்கள் மாறி வந்துள்ளன. வீரமாமுனிவரும் ஏகாரம் ஓகாரம் ஆகிய எழுத்துகளைத் திருத்தி அமைத்தார். அதன்பின்னர் பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் பெரும் எதிர்ப்புக்குப் பின்னர் ஏற்கப்பட்டது. காரணம், பெரியார் கொணர்ந்த எழுத்துச் சீர்திருத்தத்தில் பாதிப்புகளை விட பயன்கள் மிகுதியாக இருந்ததால் மக்கள் அதனை ஏற்க முன்வந்தனர். தமிழகத்திற்கு வெளியே குறிப்பாக, மலேசியாவிலும் அதற்குப் பெரும் எதிர்ப்புகள் இருந்தபோதிலும் அச்சுத்தொழில், தட்டச்சு, கணினி ஆகியவற்றுக்கு அந்தச் சீர்திருத்தம் இசைவாக இருந்ததால் இங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்பிறகு, வா.செ.குழந்தைசாமி உகர, ஊகார எழுத்துச் சீர்மையை முன்வைத்து மூக்குடைபட்டதை விரித்துச் சொல்லத் தேவையில்லை. வா.செ.குழந்தைசாமியின் எழுத்துச் சீர்மை தமிழ் எழுத்துருக்களில் பெரும் அழிம்புகளைச் செய்துவிடும் என்பதால் அது கடுமையான கண்டனத்திற்குப் பிறகு முடங்கிப்போனது.

ஆனால், தற்பொழுது செயமோகன் தமிழையே அடையாளமில்லாமல் அழித்துப்போடும் சீர்திருத்தை முன்மொழிந்திருக்கிறார்; தமிழின் ஒட்டுமொத்த வரலாற்றையே மறைத்துவிடும் மிக ஆபத்தான வரிவடிவ மாற்றத்தை முன்வைத்திருக்கிறார்; தமிழ்மொழியின் தொப்புள்கொடி உறவையே துண்டிக்கப்போகும் கொலை பாதகத்திற்கு நிகரான கொடுஞ்சிந்தனையை நாசுக்காக; நயவஞ்சமாகச் சொல்லியிருக்கிறார்.

தமிழுக்கு நன்மை விளையும், தமிழை எல்லாரும் படிப்பார்கள், வருங்காலத்தில் தமிழ் வாழும் என்றெல்லாம் இனிப்புகளைப் பூசி கொடும் நஞ்சை தங்கத்தட்டில் வைத்து தமிழர்கள் முன்னால் பந்தி வைத்திருக்கிறார்.

ஆங்கிலவழி படித்தவர்கள் இன்று பெருகிவிட்டனர், தமிழையும் அதன் தூய்மையையும் உண்மையாக நேசிப்பவர்கள் குறைந்துவிட்டனர். இந்திய நாட்டில் இந்தியையும் ஆங்கிலத்தையும் கற்கும் மக்கள் பெருகிவிட்டனர். தமிழ்வழிக் கல்வியை தெரிவுசெய்பவர்களும் ஆதரிப்பவர்களும் குறைந்துவிட்டனர். தமிழ்நாட்டில் பிறமொழிக்காரர்கள் ஆதிக்கம் பெருகிவிட்டது. தமிழர்களின் பலம் காயடிக்கப்பட்டு நசுக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிட்டது. இதையெல்லாம் நன்றாக புரிந்துகொண்டு அந்தச் சிறு சந்தில் நுழைந்துகொண்டு தமிழுக்கு எதிராகச் சிந்துபாடுவதைச் செயமோகன் நிறுத்திகொள்வது நல்லது.

தமிழ் வரலாற்றில் பெயர் பொறிப்பதற்குச் செயமோகன் இத்துணை மெனக்கெட்டு, தமிழைப் பலிகொடுக்கும் தீயச்செயலில் இறங்கக்கூடாது. தமிழில் எழுதி எழுதிப் பெயரும் புகழும் கிடைத்தது போதாது என்று தனக்கு வரலாற்றில் அழியாப் புகழைத் தேடிக்கொள்ள தாம் அண்டிப்பிழைத்த தமிழுக்கே இரண்டகம் செய்ய அவருடைய மனம் துணியக்கூடாது.

தமிழை ஒரு தொடர்பு ஊடகமாகவும் கருவியாகவும் மட்டுமே பாவித்து பிழைத்துக்கொண்டிருக்கும் செயமோகன் இப்படியெல்லாம் சிந்திக்கக்கூடாது என நம்மில் எவரும் தடைபோட முடியாது. அது அவருடைய மண்டை; அவருடைய மூளை; அவருடைய உரிமை. ஆனால், அதனைக் கொண்டுவந்து தமிழன் மண்டைக்குள் கொட்டி குழப்பம் செய்வதற்கும்; தமிழன் மூளையைச் சலவை செய்வதற்கும் அவருக்கு எந்த உரிமையும் கிடையாது.

தமிழைத் தாயாகவும் மூச்சாகவும்; தமிழை இனத்தின் உயிராகவும் உரிமையாகவும்; தமிழைப் பண்பாட்டுத் தளமாகவும்; தமிழை வரலாற்றுச் சுவடாகவும்; தமிழை வாழ்வியல் நெறியாகவும்; தமிழை இலக்கியத்தின் வேராகவும்; தமிழை இலக்கணத்தின் ஆவணமாகவும்; தமிழை மரபுப் பெட்டகமாகவும்; தமிழை அறிவாகவும்; தமிழை ஆலயமாகவும்; தமிழைக் காவியமாகவும்; தமிழைக் கலையாகவும்;  தமிழை ஞால முதன்மொழியாகவும்; தமிழை ஆரியத்திற்கு மூலமாகவும்; தமிழை உலகமொழிகளின் தாயாகவும் எண்ணி எண்ணி மதித்துப் போற்றும் தமிழர்கள் இன்னும் நிறைய இருக்கிறார்கள்.

உலகத் தமிழர்களில் பெரும்பாலோர் தமிழை இன்னும் தமிழாக அறியாமலே இருக்கின்றனர். தமிழைப் பற்றி முழுமையாகத் தமிழர்கள் அறிந்துகொள்வதற்கு முன்னாலேயே, ஆங்கில எழுத்துருவுக்குத் தமிழை மாற்றி, தாயைப் பார்க்கமலேயே, தந்தையைப் பார்க்காமலே, உடன்பிறந்தாரைப் பார்க்காமலே, உறவுகளைப் பார்க்காமலே குழந்தையைக் கருவிலேயே களைத்து அழிப்பதைப் போல தமிழர்களுக்கும் தமிழுக்கும் உள்ள தொப்புள்கொடி உறவை அறுத்தெறியாதீர் என செயமோகனுக்கு வேண்டுகை விடுகின்றேன்.

இது குறித்து எதிர்வினைகள்... தொடரும்...

@சுப.நற்குணன், திருத்தமிழ்


Blog Widget by LinkWithin