
Friday, January 30, 2009
உலகத் தமிழ் உறவுகளுக்கு ஒரு கடிதம்

Wednesday, January 28, 2009
மலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு 2

1.இந்தச் சந்திப்பு மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களை ஒருங்கிணைத்து – வழிகாட்டி – வளர்த்தெடுக்கும் உயர்ந்த நோக்கத்திற்காக நடத்தப்படுகிறது.
2.வலைப்பதிவுகள் தமிழர்களின் முதல்தேர்வு ஊடகமாகவும் ஆற்றல்மிக்க மாற்று ஊடகமாகவும் உருவாக முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.
3.மலேசியத் தமிழ் வலைப்பதிவுகள் மெல்லென வளர்ந்து வருகின்றன – உலக நிலையில் அடையாளத்தைப் பதிக்கத் தொடங்கியுள்ளன.
4.ஓலைச்சுவடி, தமிழுயிர் போன்ற வலைப்பதிவுகள் சமுதால நலன், மொழி நலன் தொடர்பாக மிகத் துணிவோடு செய்திகளை வழங்குகின்றன.
5.வாழ்க்கைப் பயணம் வலைப்பதிவு இடுகைகள் தமிழகத்தின் தமிழ் ஓசை நாளிகையில் வெளிவருவது பெருமைக்குரியதாகும்.
6.நமது வலைப்பதிவு இடுகைகள் தமிழ்மணம், தமிழிசு, மாற்று, மலேசியாஇன்று முதலான முன்னணி ஊடகங்களில் இடம்பெறுவது குறிப்பிட வேண்டிய வெற்றியாகும்.
7.நமது வலைப்பதிவர்கள் தமிழ்ச் சமுதாயத்திற்கு நன்மையளிக்கும் இலக்கை முன்வைத்து மொழி, இன, சமய, பண்பாட்டு உணர்வோடு செய்திகளை வழங்க வேண்டும்.
தொடர்ந்து, மலேசியத் தமிழ் வலைப்பதிகள் பற்றிய ஒளியிழைக்காட்சி (Slide Show) இடம்பெற்றது. கிட்டதட்ட 45 மலேசியத் தமிழ் வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்திய இந்தக் காட்சி பலரையும் கவர்ந்ததோடு மலேசியாவில் இத்தனை தமிழ் வலைப்பதிவுகளா? என வாய்ப்பிளக்கவும் வைத்தது.
அடுத்த அங்கமாக, பதிவர் அறிமுக நிகழ்ச்சி. ஒவ்வொருவராக முன்னிலையில் வந்து தங்களை அறிமுகம் செய்துகொண்ட விதம் மறக்க முடியாதது. இதனையடுத்து, கடந்த 14.12.2008இல் நடந்த முதலாம் வலைப்பதிவர் சந்திப்பு பற்றிய ஒரு பின்னோக்கை (Flashback) இளவல் விக்கினேசுவரன் அடைக்கலம் (வாழ்க்கைப் பயணம்) வழங்கினார்.
1.மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் இன்னும் ஏராளமாக எழுதுவதோடு துணிவோடும் சில செய்திகளை எழுதவேண்டும்.
2.வலைப்பதிவர்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டும் வழிகாட்டிக்கொண்டும் செயல்பட வேண்டும்.
3.நாட்டில் பெர்லிசு தொடங்கி சொகூர் வரை 10,000க்கும் மேற்பட்டவர்களுக்கு தமிழ்க்கணினி இணையம் பற்றி தாம் பயிற்றுவித்துள்ளார்.
4.மலேசியாஇன்று இணையத்தளம் செயல்படும் முறைகளும் அதன் வெல்விளி(சவால்)களும் பற்றிய விளக்கம்
5.தொழிநுட்பம் கற்று தமிழ் இணையப் பணி செய்பவர்களைவிட தமிழ்க் கற்று இணையப் பணி செய்பவர்கள் அதிகம் உருவாக வேண்டும்.
6.கணினி இணையம் தொடர்பான கலைச்சொற்களை தமிழிலேயே கையாள்வதுதான் சிறப்பும் தனித்தன்மையும் ஆகும்.
7.மிக விரைவில் நடைபெறவுள்ள மாபெரும் விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு வலைப்பதிவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் தேவை.
மேலும், சி.ம.இளந்தமிழ் வலைப்பதிகள் எவ்வாறு அமையவேண்டும், எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்று ஒளியிழைக் காட்சிகளோடு விளக்கினார். இதற்கடுத்து, புதிதாக வலைப்பதிவு தொடங்கும் வழிமுறைகள் பற்றி விக்கினேசுவரன் அடைக்கலம் செய்முறைகளோடும் (Demonstration) ஒளியிழைக் காட்சியோடும் விளக்கிக் காட்டினார். புதிதாக வந்திருந்த அனைவருக்கும் இவ்வங்கம் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
1.வலைப்பதிவு மாதிகை (மாத இதழ்) நடத்துவதென்பது இயலாத ஒன்று. காரணம், அதற்கென தனியாக ஆசிரியர் குழு, விளம்பரம், விநியோகம் என்று பல அலுவல்கள் இருந்தால்தான் இது சாத்தியமாகும். –சுப.நற்குணன்
2.மாதிகைக்குப் பதிலாக கூட்டு வலைப்பதிவு அல்லது மின்னிதழ் தொடங்கலாம். இப்போது இருக்கும் வலைப்பதிவர்கள் ஒன்றிணைந்து அதனை உருவாக்கி நடத்தலாம். –கிருஷ்ணமூர்த்தி
3.வலைப்பதிவர்கள் ஒரு வலைப்பதிவைப் படித்தற்கான அடையாளமாக பின்னூட்டம் அல்லது மறுமொழி ஒன்றினை விட்டுச்செல்ல வேண்டும்.-குமரன் மாரிமுத்து
4.தமிழ் வலைப்பதிவர்கள் தமிழ் மொழி, இனம், சமயம், பண்பாட்டுக்கு எந்தவொரு பாதிப்பும் இழுக்கும் ஏற்படாத வண்ணம் செயல்பட வேண்டும். -ம.தமிழ்ச்செல்வன்
5.நாட்டில் தமிழ் மொழி, இனம், சமயம், பண்பாட்டுக்கு ஏதாவது பாதிப்பு அல்லது சிக்கல் ஏற்பட்டால் அனைத்து வலைப்பதிவர்களும் ஒன்றிணைந்து கண்டிக்க வேண்டும். –பாலமுரளி
6.அண்மையில் நாளிதழில் ஒன்று தமிழ்த்தேசியத் தலைவர் ஒருவரை இழிபடுத்தி எழுதியதால் ஏற்பட்ட சிக்கலிலும், மற்றொரு நாளிதழ் தீபாவளி சமயத்தில் மது விளம்பரம் வெளியிட்ட சிக்கலிலும் நமது வலைப்பதிவுகள் முன்னின்று கண்டித்ததோடு சாதகமான தீர்வுக்கும் வழிவகுத்துள்ளன. –சுப.நற்குணன்
7.அடுத்த சந்திப்பைத் தலைநகரில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும். –சி.ம.இளந்தமிழ்
சந்திப்பை முறையாக முடித்துவைத்து கோவி.மதிவரன் (தமிழ் ஆலயம்) நன்றியுரை ஆற்றினார். அனைவருக்கும் நன்றி சொன்னதோடு நமது வலைப்பதிவுகள் தமிழ்மொழி, இனம், சமயம், பண்பாட்டு விழிப்புணர்வுக்கும் வளர்ச்சிக்கும் உதவவேண்டும். எந்தச் சூழலிலும் பாரம்பரிய மரபுகளையும், இலக்கண இலக்கிய விழுமியங்களையும், பண்பாட்டு நெறிகளையும் மீறிவிடாமல் நமது வலைப்பதிவுகள் செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.
வருகைதந்த அனைவருக்கும் தமிழ் நாள்காட்டி ஒன்றும் நாள் வழிபாட்டுக் கையேடு ஒன்றும் அன்பளிபாக வழங்கப்பட்டது. மாலை மணி 6.30 அளவில் சந்திப்பு நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
இச்சந்திப்பில் கலந்துகொண்டவர்களின் (குறுஞ்செய்தி) கருத்துகள் சில:-
1.ம.தமிழ்ச்செல்வன்:-இதுவோர் நல்ல சந்திப்பு. தமிழ்ப் பதிவர்களை நேரடியாக சந்திக்க முடிந்தது. வலைப்பதிவைத் தமிழுக்கும் தமிழருக்கும் பயனளிக்கும் ஊடகமாக உருவாக்குவதற்குத் தேவையான வழிமுறைகள் பற்றி பேச முடிந்தது.
2.கோவி.மதிவரன்:-சிறப்பான முயற்சி. பதிவர்கள் மொழி, இன, சமயத்தைக் காத்திட முனைப்புக் காட்ட வேண்டும்.
3.ப.தமிழ்மாறன்:-மிக அருமையான சந்திப்பு. நிறைய பயனான தகவல்கள். நல்ல முயற்சி. நல்ல பயனை நல்கும்.
4.இராசகுமாரன்:- அருமையான நிகழ்ச்சி. மனதில் தோன்றும் கருத்துகள், எண்ணம், அனுபவங்களை பிறரிடம் பகிர்ந்துகொள்ள நீண்ட நாள் கனவு.. இன்று நடந்த நிகழ்ச்சியில் தமிழில் இப்படியும் செய்யலாம் என அறிந்தேன். விரைவில் என்னை இணையத்தில் காண்பீர்.
5.து.பவனேசுவரி:- என் கருத்துகளை விரைவில் என் வலைப்பதிவில் இடுவேன். சிறப்பான ஏற்பாட்டுக்கு நன்றி.
6.ம.ஜீவன்:-மிகவும் அற்புதமான நிகழ்வு. அனுபவமிக்க பதிவர்கள் நிறைய வந்தார்கள். அவர்கள் முன் எனக்கு முதலில் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது. ஆனால், நானும் அவர்களைப் போல் வரவேண்டும் என்ற வைராக்கியம் என்னுள் ஏற்பட்டுள்ளது. கண்டிப்பாக நானும் ஒரு வலைப்பதிவு தொடங்குவேன்.
7.அனந்தன்:-சிறப்பாக நடந்தேறியது. பெரிய வெற்றிதான். உங்கள் முயற்சி, உழைப்பு போற்றுதலுக்கு உரியவை.
8.கிருஷ்ணமூர்த்தி:-நல்ல முயற்சி. நற்பணி தொடர தோள் சேர்ந்து உழைப்போம்; தமிழ் சேவை ஆற்றுவோம்.
இந்தச் சந்திப்பைப் பற்றி மேலும் படிக்க:-
1.இரண்டாம் தமிழ்ப்பதிவர் சந்திப்பு -அனந்தன்
2.மலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு 2 -விக்கினேசுவரன் அடைக்கலம்
3.மலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு - மலேசியாஇன்று.காம்
Monday, January 26, 2009
தமிழின் வரலாறு - பாகம் 2

"ஒரு வீட்டிற்கு ஆவணம் போன்றதே ஒரு நாட்டிற்கு உரிமை வரலாற்று சான்றாகும்.ஆயின் ஓர் ஆவணத்தில் எதிரிகளால் ஏதேனும் கரவடமாகச் சேர்க்கப்படலாம். அது போன்றே ஒரு நாட்டு வரலாறும் பகைவரால் அவரவர்க்கு ஏற்றவாறு மாற்றப் படலாம். ஆதலால் இவ்விரு வகையிலும் உரிமையாளர் விழிப்பாயிருந்து தம் உரிமையைப் போற்றிக் காத்துக் கொள்ள வேண்டும்" என்கிறார்.

- தமிழின் வரலாறு - பாகம் 1
- தமிழின் வரலாறு - பாகம் 2
நன்றி:கணியத்தமிழ்
Sunday, January 25, 2009
தமிழின் வரலாறு - பாகம் 1

*மொழி வரலாறு
*இலக்கிய வரலாறு
*இன வரலாறு
*தமிழ் எழுத்து வரலாறு
*மொழியின் தோற்றம்

அகழ்வு ஆய்விலும் பல இடங்களில் காணப்படும் கல்வெட்டுக்கள், பாறை செதுக்கல்களில் உள்ள ஆதாரங்கள் கிடைத்த காலம் வரலாற்றுக் காலமெனவும், சான்றுகள் இல்லாத பழமையான மக்கள் வசித்த இருப்பிடங்கள், அங்கு கண்ட சீரற்ற கருவிகளால் கற்காலம் அதாவது கல்வி அறிவு, சிந்திக்கும் திறனற்ற வளர்ச்சியுறா காலத்தை பழைய கற்காலம், புதிய கற்காலம் என பிரித்து வழங்கிடுவர்.
கேட்பொலியின் செழுமையும் சுட்டொலியின் பயனும் இணைந்த போது அழுத்தமான சைகைகள் வாயிலாக உணர்வுகளை வெளிப்படுத்தும் காலம் தோன்றியிருக்கலாம்.
இலக்கியத் தோற்றம்
இச்செய்யுள்களை படைக்கும் புலவர்கள் அதற்கென வகுக்கப்பட்டுள்ள இலக்கண நெறிகளைக் கையாண்டுள்ளனர். அந்த இலக்கண நெறிகள் இன்றும் கையாளப்பட்டு மரபு செய்யுள்களில் பாடல்கள் புனைகின்றனர்.
என தொல்காப்பியர் யாப்பு எனும் செய்யுள் படைப்புக்கு நெறிவகுக்கிறார். இதனால் எத்துறையாயினும் தமிழ் மொழியை அத்துறைக்கு ஏற்றவாறு பயன்படுத்திட இயல்கிறது.
இன வரலாறு, தமிழ் எழுத்து வரலாறு ஆகியவைப் பற்றி அடுத்தப் பகுதியில் விரைவில் வரும்...
- தமிழின் வரலாறு - பாகம் 1
- தமிழின் வரலாறு - பாகம் 2
Tuesday, January 20, 2009
என் இனியத் தமிழ் வலைப்பதிவர்களே...
இரண்டாம் முறையாகப் பதிவர் சந்திப்பு ஏற்பாடாகி உள்ளதை இந்நேரம் அறிந்திருப்பீர்கள். இது மிகவும் மகிழ்ச்சிக்குரிய செய்தி மட்டுமல்ல; அடுத்த இலக்குகளைத் தொடப்போகும் வெற்றிக்குரிய செய்தியுமாகும்.
மிக வேகமாக வளர்ந்துவரும் இணைய உலகில், மலேசிய வலைப்பதிவுகள் கடலில் கரைத்த பெருங்காயமாக இருந்துவந்த காலம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. இன்று, உலகத் தமிழ் வலைப்பதிவுகளுக்கு நடுவில் நமது மலேசிய வலைப்பதிவுகளும் குறிப்பிடத்தக்க அடையாளத்தை நிறுவி வருகின்றன என்பது நடப்பியல் உண்மை.
இருந்தாலும், நாம் செல்லவேண்டிய தொலைவுகள் அதிகமுள்ளன; செய்யவேண்டிய பணிகள் நிறையவுள்ளன.
இதனைக் கருத்தில்கொண்டு முன்னெடுக்கப்பட்ட முயற்சிதான் "வலைப்பதிவர் சந்திப்பு" என்ற இந்த முனைப்பு.
"வலைப்பதிவர் சந்திப்பு" எனும் பெயரில் மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களை ஒருங்கிணைத்து – வழிகாட்டி – வளர்த்தெடுக்கும் உயரிய சிந்தனையை முன்மொழிந்ததோடு மட்டுமல்லாமல், முதற்கட்ட சந்திப்பை முடித்துக்காட்டிய பெருமை நன்னோக்கம் கொண்ட சிலரைச் சாரும்.
அவர்களுள் முகாமையானவர்கள் விக்னேஷ்வரன் அடைக்கலம் அவர்களும் அவருடன் உழைத்த மு.வேலன், மூர்த்தி போன்றோர்களும், முதல் சந்திப்பில் கலந்துகொண்ட பன்னிருவரும் தான் என்பதை இங்கு பதிவு செய்கிறேன்.

இந்தக் கூட்டணியின் முனைப்பில்தான், கடந்த 2008 திசம்பர் 14ஆம் நாள் கோலாலும்பூரில் முதலாவது வலைப்பதிவர் சந்திப்பு நடந்தது. 12 பேர் மட்டுமே கலந்துகொண்ட இதுவோர் எளிய சந்திப்பாக இருக்கலாம். ஆனால், மலேசியத் தமிழ் வலைப்பதிவு வரலாற்றில் முக்கியமான நிகழ்வு என்பதைக் காலம் கண்டிப்பாக அடையாளப்படுத்தும் – அடையாளப்படுத்த வேண்டும்.
இத்தோடு நின்றுவிடாமல், "வலைப்பதிவர் சந்திப்பு" தொடர வேண்டும் என்ற ஆவலின் விளைவுதான் தற்போது நடைபெறவுள்ள மலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு – 2.
அதன் விவரம் பின்வருமாறு:-
நாள்:-25-1-2009 (ஞாயிறு)
நேரம்:-பிற்பகல் மணி 2.00 தொடக்கம்
இடம்:-தமிழியல் நடுவம், பாரிட் புந்தார், பேரா.
(பள்ளிவாசல் எதிர்ப்புறம் – ஏ.ஆர்.ரகுமான் உணவகம் அருகில்)
மலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு 2இன் நோக்கம்:-
*1.மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களிடையே அறிமுகத்தை ஏற்படுத்துதல்
*2.மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களை ஒருங்கிணைத்தல்
*3.மலேசியத் தமிழ் வலைப்பதிவுகளின் தரத்தை மேம்படுத்தும் வழிவகைகளை ஆராய்தல்
*4.கணினி – இணையத் துறையில் தமிழ்மொழியின் பயன்பாட்டையும் பயனாளர்களையும் விரிவுபடுத்துதல்
*5.புதியப் பதிவர்களை உருவாக்கி; ஊக்கப்படுத்தி; வழிகாட்டுதல்
*6.மலேசியத் தமிழ் வலைபதிவுகளை மாற்று ஊடகமாக வளர்த்தெடுத்தல்
நமது மலேசியாவைப் பொறுத்தவரை, ஆங்கில, மலாய், சீன வலைப்பதிவு(புளோக்) ஊடகம் மக்களின் உற்ற ஊடகமாகவும் மாற்று ஊடகமாகவும் வேறூன்றி வளர்ந்து நிற்கிறது.
ஆனால், தமிழ் வலைப்பதிவு ஊடகம் இப்போதுதான் மெல்லென தலையெடுத்து வருகின்றது. மலேசியத் தமிழ் வலைப்பதிவுகளைத் தமிழ் மக்களின் முதல்தேர்வு ஊடகமாக உருவாக்கும் முயற்சிகளை முன்னெடுப்பதற்கு இதுபோன்ற வலைப்பதிவு சந்திப்புகள் மிகவும் பயன்படும் – பயன்படுத்தப்பட வேண்டும்.
ஆகவே, மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள், வலைப்பதிவு வாசகர்கள், தமிழ் இணைய ஆர்வலர்கள், தமிழ்க் கணினி பயனாளர்கள், வலைப்பதிவு தொடங்க விரும்புபவர்கள் என அனைவரும் இந்தச் சந்திப்பில் தவறாமல் கலந்து பயன்பெற அன்போடு அழைக்கிறோம்.
மேல்விளக்கத்திற்கும் தொடர்புக்கும்:-
விக்னேஷ்வரன் அடைக்கலம் (012-5578257), சுப.நற்குணன் (012-4643401), கோவி.மதிவரன் (013-5034981), கி.விக்கினேசு (012-4532803)
வருகைதரும் நண்பர்கள் தங்களின் வருகையைக் குறுஞ்செய்தி வழியாக தயவுசெய்து உறுதிபடுத்தவும். Type:-MTV[இடைவெளி]உங்கள் பெயர்[அனுப்பவேண்டிய எண்]0124643401
பி.கு:-
1.தெற்கிலிருந்து வருபவர்கள் PLUS நெடுஞ்சாலையிலிருந்து கமுண்டிங் அல்லது பண்டார் பாருவில் வெளியேறி பாரிட் புந்தார் வரலாம்.
2.வடக்கிலிருந்து வருவோர் நிபோங் திபாலில் வெளியேறி பாரிட் புந்தார் வரலாம்.
3.பாரிட் புந்தார் மணிக்கூண்டுக்கு அருகில்தான் பள்ளிவாசல் உள்ளது. பள்ளிவாசலுக்கு எதிர்புறத்தில் ஏ.ஆர்.ரகுமான் ஊணவகத்திற்கு பக்கத்தில் 'தமிழியல் நடுவம்' உள்ளது.
- அன்புடன்,
ஏற்பாட்டுக் குழுவின் சார்பில்,
சுப.நற்குணன்.
Sunday, January 18, 2009
தமிழமுது 6:- 16 பெற்றால் பெருவாழ்வு அமையும்

"பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்க!" என்பது பதினாறு பிள்ளைகளைப் பெற்று வளமாக வாழ்வதையா குறிக்கிறது? இல்லவே இல்லை. மாறாக, வாழ்க்கையில் பதினாறு செல்வங்களை அல்லது நலன்களை பெற்று சிறப்பாக வாழ்வதையே குறிக்கிறது.
இன்றைய இளையோர்கள் பலரும் இந்தப் பழமொழியில் வரும் 'பதினாறு' என்ற சொல் வாழ்க்கைக்குத் தேவையான பதினாறு செல்வங்களைத்தான் குறிக்கிறது என அறிந்து வைத்துள்ளனர். ஆனாலும், அந்தப் பதினாறும் யாவை என அறியாமல் இருக்கின்றனர்.
அபிராமி அந்தாதி பதிகப் பாடலொன்று இந்தப் பதினாறு செல்வங்கள் என்னென்ன என்பதை அழகாகக் கூறுகின்றது இப்படி:-
அகிலமதில் நோயின்மை கல்விதன தானியம்
அழகுபுகழ் பெருமை இளமை
அறிவுசந் தானம்வலி துணிவுவாழ் நாள்வெற்றி
ஆகுநல் லூழ்நுகர்ச்சி
தொகைதரும் பதினாறு பேறும்தந் தருளிநீ
சுகானந்த வாழ்வளிப்பாய் -(அபிராமி அந்தாதி பதிகம்)
1.உடலில் நோயின்மை, 2.நல்ல கல்வி, 3.தீதற்ற செல்வம், 4.நிறைந்த தானியம், 5.ஒப்பற்ற அழகு, 6.அழியாப் புகழ், 7.சிறந்த பெருமை, 8.சீரான இளமை, 9.நுண்ணிய அறிவு, 10.குழந்தைச் செல்வம், 11.நல்ல வலிமை, 12.மனத்தில் துணிவு, 13.நீண்ட வாழ்நாள்(ஆயுள்), 14.எடுத்தக் காரியத்தில் வெற்றி, 15.நல்ல ஊழ்(விதி), 16.இன்ப நுகர்ச்சி
ஆகியவையே அந்தப் பதினாறு பேறுகள் அல்லது செல்வங்கள்.
மக்கள் வாழ்க்கைக்கு முழுமையான மகிழ்வையும் நிறைவையும் அளிக்கும் பதினாறு பேறுகளை நமது முன்னோர்கள் அன்றே வகுத்திருப்பது எண்ணிப்பார்க்கத் தக்கது.
Sunday, January 11, 2009
தை முதல் நாள் - தமிழ்ப் புத்தாண்டு
கடந்த திருவள்ளுவராண்டு 2039 (அதாவது ஆங்கில ஆண்டு 2008)இல், தமிழ்நாட்டு அரசு தமிழகத்தின் ஆளுநர் வழியாகத் தைத்திங்கள் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என உலகத்திற்கு அறிவித்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அறிவிப்பை உலகத் தமிழர்கள் அனைவரும் ஒருமுகமாக வரவேற்றுப் பேருவகை அடைந்தனர்.
இந்த அறிவிப்பின் வழியாக, தமிழர்களிடையே பலகாலம் நிலவிவந்த "தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாளா? அல்லது சித்திரை முதல் நாளா?" என்ற கருத்து வேறுபாட்டுக்கு முடிந்த முடிவாக ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இந்த அறிவிப்புக்கு முன்பாக...
தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டுமுறையை அதிகாரப்படியாக ஏற்றுக்கொண்டு 1971ஆம் ஆண்டுமுதல் அரசு நாட்குறிப்பிலும் அதன்பின்னர் 1972 முதற்கொண்டு அரசிதழிலும் 1981 தொடங்கி அரசாங்கத் தொடர்புடைய அனைத்து அலுவல்களிலும் பின்பற்றி வந்துள்ளது.
இதற்கும் முன்பாக...

1921ஆம் ஆண்டு தமிழ்க்கடல் தவத்திரு மறைமலையடிகள் தலைமையில் 500 தமிழ் அறிஞர்கள் கலந்துகொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கூட்டம் நடத்தப்பெற்றது. சைவம், வைணவம், புத்தம், சமணம், இந்து, கிறித்துவம், முகமதியம் என எல்லா சமயங்களையும் சார்ந்த தமிழ்ப் பேரறிஞர்கள் ஒன்றுகூடி ஆய்வுமுறைகளின் அடிப்பையில் முப்பெரும் உண்மைகளை உலகத்திற்கு அறிவித்தனர்.
1.தைமுதல் நாளே தமிழாண்டுப் பிறப்பு
2.திருவள்ளுவர் பெயரில் தமிழாண்டைப் பின்பற்றுதல்
3.ஆங்கில ஆண்டுடன் (ஏசு கிறித்து பிறப்பாண்டு) 31 ஆண்டுகளைச் கூட்டித் திருவள்ளுவராண்டைக் கணக்கிட வேண்டும்.
தமிழுக்கு அரணாக இருந்துவிளங்கிய 500 தமிழறிஞர்கள் சமய வேறுபாடுகளையும் கொள்கை மாறுபாடுகளையும் மறந்துவிட்டு; ஆரியக் கலப்பையும் வடமொழிக் குறுக்கீட்டையும் உதறிவிட்டு தமிழ் ஒன்றையே முன்படுத்தி முறையான ஆய்வியல் பார்வையோடு தமிழ்ப் புத்தாண்டு அறிவிப்பை வெளியிட்டனர்.
அன்றுதொடங்கி உலகம் முழுவதுமுள்ள தமிழ்ப் பற்றாளர்கள் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக ஏற்றிப் போற்றி கொண்டாடி மகிழ்கின்றனர். தமிழாண்டு முறைப்படி தங்கள் வாழ்வியலை அமைத்துக்கொண்டு தமிழியல் நெறிப்படி வாழ்ந்தும் வருகின்றனர்.
இதற்கெல்லாம் முன்பாக...
தைப் பொங்கல் விழா நாளைத் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கமாக தமிழர்கள் பலகாலமாகக் கொண்டாடி வந்துள்ளனர். இதற்கான அகநிலைச் சான்றுகள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன.
"தைஇத் திங்கள் தண்கயம் படியும்" என்று நற்றிணையும்
"தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" என்று குறுந்தொகையும்
""தைஇத் திங்கள் தண்கயம் போல்" என்று புறநானூறும்
"தைஇத் திங்கள் தண்கயம் போல" என்று ஐங்குறுநூறும்
"தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ" என்று கலித்தொகையும்
தைத் திங்களில் புத்தாண்டு தொடங்கிய தமிழரின் வரலாற்றை இன்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றன. இலக்கியப் பாடல்களில் சான்றுகள் இவ்வாறு இருக்க, பாமர மக்கள் வழக்கிலும் பழமொழி வடிவத்தில் சில சான்றுகளும் இருக்கின்றன.
"தைப் பிறந்தால் வழி பிறக்கும்" என்ற பழமொழியும்
"தை மழை நெய் மழை" என்ற பழமொழியும்
தமிழர் புத்தாண்டுக்கான வரவேற்பையும் தமிழர் வாழ்வில் தைப் பிறப்புக்கு இருக்கின்ற சிறப்பிடத்தையும் பறைசாற்றுகின்றன.
மேற்சொன்ன அனைத்துக்கும் மேலாக...

உலகத்தில் இயற்கை என்று ஒன்று இருக்கின்றது. அது இயங்கிக்கொண்டே இருக்கிறது. இயற்கையின் இயக்கத்திற்கு ஏற்பவே உலகத்தின் அனைத்து நடப்புகளும் அமைகின்றன. அந்தவகையில், இயற்கைக்கும் தைப் பிறப்பிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தைத்திங்கள் அதாவது சுறவ மாதம் முதல் நாளில் சூரியன் வடதிசை நோக்கி தன்னுடைய பயணத்தைத் (அயணம்) தொடங்குகிறது. இதனைத் தமிழில் வடசெலவு எனவும் வடமொழியில் உத்தராயணம் என்றும் கூறுவர்.
ஆக, சூரியன் வடதிசை நோக்கிப் புறப்படும் புதிய பயணத்தைத் தொடங்கும் நாளில் தமிழர்கள் பொங்கல் வைப்பதும் அதனைச் சூரியப் பொங்கல் என்று வழங்குவதும் மிகப் பொருந்த அமைந்துள்ளன. ஆகவே, இதனைத் தமிழர்கள் ஆண்டுத் தொடக்கமாகக் கொண்டது இயற்கையின் சட்டத்திற்கும் உட்பட்டு இருப்பது கவனிக்கத்தக்கது.
இத்தனைக்கும் இடையில்...ஆதியிலிருந்து தைத் திங்களையே தமிழ்ப் புத்தாண்டாக இருந்தாலும், இடைக்காலத்தில் சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கிய மரபும் தமிழரிடையே இருந்துள்ளது. கி.மு 317ஆம் ஆண்டுக்குப் பின்னர் சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக உருவாகியது. சித்திரைப் புத்தாண்டுக் கணக்கும் தமிழருக்கு உரியதே.
பிற்காலச் சோழர் காலத்தில் சித்திரைப் புத்தாண்டுக்குப் பெரும் செல்வாக்கு ஏற்பட்டது. இதற்குக் காரணம், சோழநாட்டில் தமிழியத்தின் தலைமை கொஞ்சங் கொஞ்சமாக மாறியும் மறுவியும் திரிந்தும்போய் ஆரியப் பார்ப்பனியம் தலையெடுக்கத் தொடங்கியதுதான்.
இதனால், அதுவரை தூயத்தமிழாக இருந்த தமிழரின் வானியல் கண்டுபிடிப்புகளும், ஐந்திரக் குறிப்புகளும், நாள், நாள்மீன், பிறைநாள், திங்கள், ஓரை (ஜோதிடம், தினம், நட்சத்திரம், திதி, இராசி, மாதம்) ஆகிய அனைத்தும் வடமொழிக்கு மாற்றப்பட்டன. தமிழர் கண்ட வானியல் மரபு ஆரியமயமாக்கப்பட்டு அடியோடு மறைக்கப்பட்டது.
இதுமட்டுமல்லாது, தொல்காப்பியர் காலத்தில், அதாவது கி.மு 5ஆம் நூற்றாண்டுக்கும் கி.மு.7ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஆவணி முதல்நாளில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கப்பட்டுள்ளது. தொடிதோட் செம்பியன் எனும் முசுகுந்த சோழன் என்ற மன்னன் ஆட்சிக்காலத்தில் ஆவணிப் புத்தாண்டுக்குப் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதாக மணிமேகலைக் காப்பியம் தெரிவிக்கின்றது.
முடிவும் விடிவும் இதுதான்!
ஓர் இடைக்கால மாற்றம் என்பதாலும், ஆரிய வலைக்குள் சிக்கிக் கொண்டதாலும், மீட்க முடியாத அளவுக்குக் கலப்படம் நேர்ந்துவிட்டதாலும், பார்ப்பனியக் கூறுகளும் மத ஊடுறுவல்களும் அளவுக்கதிமாக நேர்ந்துவிட்டதாலும் சித்திரையைத் தமிழ்ப் புத்தாண்டாக ஏற்கமுடியாது என 1921இல் 500 தமிழறிஞர்கள் எடுத்த முடிவு முற்றிலும் சரியானதே என்பதை ஆய்வுப்பார்வையும் அறிவுநோக்கும் கொண்ட எவரும் ஒப்புவர். அதுபோலவே ஆவணிப் புத்தாண்டும் வழக்கற்றுப் போனதோடு காலச்சூழலும் மாறிப்போய்விட்டது.
இந்நிலையில், அகநிலையிலும் புறநிலையிலும் தமிழர்கள் விடுதலை பெற்ற இனமாக வாழவும் உயரவும் தனித்திலங்கவும் தைப்பிறப்பையே தமிழாண்டுப் பிறப்பாக – தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்! கடவுளின் தீர்ப்பு!
உலகின் பழமையான இனமாகிய தமிழினம் தலைநிமிர்ந்து வாழ வேண்டுமானால், தமிழரின் வாழ்வியல் தமிழியலைச் சார்ந்திருக்க வேண்டும்; தமிழியத்தின் விழுமியங்களைத் தாங்கியிருக்க வேண்டும்; தமிழிய மரபுவேர்களில் எழுந்துநிற்க வேண்டும். இந்த முடிவொன்றே தமிழருக்கு விடிவாக அமையும்.
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
முந்தையக் கட்டுரைகள்:-