Monday, May 26, 2008

தமிழ்ச் செம்மொழிச் சிறப்புமலர்



உலகத்தின் மூத்தமொழி தமிழ்!


உலகத்தின் முதல் தாய்மொழி தமிழ்!


இலக்கணக் கட்டமைப்பால் அறிவியல்மொழி தமிழ்!


இலக்கியச் செழுமையினால் செவ்வியல்மொழி தமிழ்!


மூவாயிரம் ஆண்டுக்கு முன்பே முழுமையடைந்த செம்மொழி தமிழ்!



அனைத்துலக மொழியறிஞர் பெருமக்கள்
ஆய்ந்தறிந்து ஏற்றுக்கொண்ட அறுபெருஞ் செம்மொழிகளுள்
அத்தனை தகுதிகளும் மொத்தமாய் உடைய ஒரேமொழி தமிழ்!

எனினும், இந்திய நடுவணரசு,
தமிழறிஞர்கள் 100 ஆண்டு போராடிய பின்னர்,
2004ஆம் ஆண்டுதான் தமிழைச் செம்மொழியாக
அதிகாரஞ் சார்ந்து அறிவித்தது!

அந்த வரலாற்றுச் சிறப்பின் பதிவாகவும்,
செந்தமிழின் செம்மைக் கூறுகளைத் தெளிவுற நிறுவியும்,
உலகளாவிய நிலையில் தமிழின் நேற்றைய – இன்றைய – நாளைய
நிலைமைகளைப் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து விளக்கியும்
துறைசார்ந்த அறிஞர்கள் தீட்டிய எழுத்தூவியங்களின்
தொகுப்பாக வெளிவந்துள்ளது செம்மொழிச் சிறப்புமலர்..!

செம்மொழியாம் தமிழுக்கென இப்படியொரு சிறப்புமலர்
இப்போதுதான் உலகிலேயே முதலாவதாக வெளிவருகிறது!
அதுவும், மலேசியத் திருநாட்டில் வெளிவருகிறது!


மலேசியாவில் வெளிவரும் 'உங்கள் குரல்' இதழின் ஆசிரியரும்
இறையருட் கவிஞரும் தொல்காப்பிய அறிஞருமாகிய
நல்லார்க்கினியர் ஐயா சீனி நைனா முகம்மது அவர்களின்
அரிய முயற்சியால் தமிழ்க்கூறும் நல்லுலகம் வியக்க வெளிவருகிறது!


1.செம்மொழி : பொதுவிளக்கம்
2.செம்மொழி : நேற்று – இன்று – நாளை
3.செம்மொழி : சிறப்பியல்புகள்
4.செம்மொழி : அக்கரை நாடுகளில்
5.செம்மொழி : தமிழ்க்கல்வி, கலை நிறுவனங்கள்

என்ற ஐந்து பிரிவுகளில்...

தமிழகம், மலேசியா, சிங்கை, இலங்கை சார்ந்த அறிஞர்களும்,
தமிழாய்ந்த மேனாட்டு அறிஞர்களும் வழங்கிய
40 அரிய ஆய்வுக் கட்டுரைகளையும்,
பழந்தமிழ்ப் புலவோர் முதல் பாரதிதாசனார் வரை
நந்தமிழ்ப் புலவர்களின் நறுந்தமிழ்க் கவிதை வரிகளை விளக்கும்
அரிய காட்சிகளாக அழகிய 20 வண்ண ஓவியங்களையும்,
இந்திய நடுவணரசின் செம்மொழி அதிகார ஆவணங்களையும்
இன்ன பிற அருமைசால் செய்திகளையும் தாங்கி,
320 பக்கங்களில் இதழ்விரிக்கும் இந்த மலர்,
உலக நிலையில் செம்மொழி பற்றி வெளிவந்துள்ள
முதல் முழுக் களஞ்சியமாகும்!

இந்த செம்மொழிச் சிறப்புமலரின் வெளியீட்டு விழா
28-05-2008ஆம் நாள், புதன்கிழமை, மாலை மணி 6.00க்கு
கோலாலம்பூர், ம.இ.கா தலைமையகம், நேதாஜி மண்டபத்தில்
உயிர்த் தமிழை உயர்த்திப் பிடிக்க வெளியீடு காண்கிறது!!
உலகத் தமிழரை ஊக்கப்படுத்த வெளியீடு காண்கிறது!!
மேல்விளக்கங்கள் பெற தொடர்பு கொள்க:-
UNGALKURAL ENTERPRISE, Room 2, 1st Floor, 22 China Street, 10200 Pulau Pinang, Malaysia.
TEL/FAX : 604-2615290

பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார்


(26.5.2008ஆம் நாள் பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் அவர்களின் நினைவு நாள். இன்றைக்குப் 19 ஆண்டுகளுக்கு முன், 26.5.1989ஆம் நாள் இறைவனடி சேர்ந்த அன்னாரின் நினைவாக இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது.)

தமிழ் இலக்கிய வரலாற்றில் “பன்மொழிப் புலவர்” என்று சொன்னாலே போதும், அது அப்பாதுரையாரைத்தான் குறிக்கும். அவரைப் பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால், ‘ஆராய்ச்சி அறிஞர்’ எனலாம். ஒருவகையில், தேவநேயப் பாவாணர் வழியில் தமிழ், தமிழினம் ஆகிய துறைபோகிய மாபெரும் அறிஞர். தமிழகத் திரவிட இயக்கத்தின் மிகச்சிறந்த சித்தாந்திகள் சிலருள் பன்மொழிப் புலவர் குறிப்பிடத் தக்கவர். இவரை நீக்கிவிட்டு திரவிட இயக்க வரலாற்றை எவராலும் எழுதிவிட முடியாது.

கா.அப்பாதுரையார் 24.6.1907ஆம் நாள் குமரி மாவட்டத்தில் காசிநாத பிள்ளை இலக்குமி அம்மையார் வழ்விணையர்க்கு அருஞ்செல்வமாக வந்துப் பிறந்தார். இவர் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர். இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், பிரெஞ்சு, உருது ஆகிய மொழிகளில் நிறைபுலமை கொண்டவர். தம்முடைய ஆய்வாற்றல் காரணமாக மறைமலை அடிகளாரின் நன்மதிப்பைப் பெற்றவர். பன்மொழிப் புலவர் என்ற அடைமொழிக்கு ஒப்ப பன்மொழி அய்வுகளோடு இருநூறு அரிய நூல்களை எழுதிய பேரறிஞர்.

இவர் எழுதிய நூல்கள் அனைத்திலும் தொன்மைத் தமிழின் இனிமையையும் வரலாற்று மரபையும், மாண்பையும், தமிழ்மண்ணில் முளைத்துத் தழைத்த தமிழ்மக்களின் பண்பாட்டு உயர்வையும், தமிழர்தம் வரலாற்றுப் பரப்பையும், நாகரிக மேன்மையையும் ஆய்ந்து ஆராய்ந்து சான்றுகளோடு எழுதியுள்ளார். அதோடு, கடல்வளம், மலைவளம், காட்டுவளம், நீர்வளம், நிலவளம் ஆகியன சூழ்ந்த தமிழ் மண்ணின் வளங்களையும் சிறப்புகளையும் தம்முடைய நூல்களுள் பதிவு செய்துள்ளார்.

பன்மொழிப் புலவர் அப்பாதுரையார் தாய்மொழியாம் தமிழ்மொழியை அழிக்கவந்த இந்தி மொழியின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடியவர். அதற்காக, தடியடியும் சிறைதண்டனையும் பெற்று தமிழுக்காகப் பல விழுப்புண்களைத் தாங்கியவர்.

அறிவுச் சுடர்விளக்காய் ஒளிவீசித் தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் பெரும் தொண்டாற்றிய அப்பாதுரையார்,
“பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்”
என்று மாபாவலன் பாரதியின் பாடியதை தம் வாழ்நாள் பணியாக மேற்கொண்டு, பிறமொழி நூல்களை மொழிபெயர்த்துத் தமிழுக்கு மேலும் வளமூட்டினார்.

தம் எழுத்தும் எண்ணமும், பேச்சும் மூச்சும் தமிழாகவே இருந்த பன்மொழிப் புலவர், தமிழ்நெறியாம் குறள்நெறியை உலகநெறியாகவும் உயிர்நெறியாகவும் கொண்டிருந்தார். வாழ்நாள் முழுவதும் தமிழையும் தமிழரையும் உயர்த்திப்பிடித்து ஓயாது உழைத்து, கொள்கை குன்றா வேழமாக வாழ்ந்த பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் வரலாற்றையும் அவருடைய அரிய நூல்களையும் படித்தறிந்து இன்றைய இளம் தலைமுறையினர் தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காகப் பாடாற்ற முன்வரவேண்டும்.

Saturday, May 03, 2008

கிரந்தம் தமிழுக்குத் தேவையா? பாகம்-1


(தமிழ் மொழியில் கிரந்த எழுத்து பயின்றுவருவது தொடர்பில் அவ்வப்போது பல்வேறு விவாதங்கள் எழுகின்றன. அவ்வாறான விவாதங்களுக்குத் தெளிந்த விளக்கமாக; முடிந்த முடிபாக இக்கட்டுரை அமையும். மலேசியாவில் 'உங்கள் குரல்' என்னும் மாதிகை (மாத இதழ்) ஆசிரியரும்; நற்றமிழ்க் கவிஞரும்; தொல்காப்பிய அறிஞருமாகிய நல்லார்க்கினியர் ஐயா செ.சீனி நைனா முகம்மது அவர்கள் எழுதிய இந்தக் கட்டுரை மார்ச்சு 2008 'உங்கள் குரல்' இதழில் வெளிவந்தது.)

கிரந்த எழுத்துகள் தமிழில் இடையில் (6ஆம் நூற்றாண்டு) புகுத்தவையே என்றாலும், இக்காலத்தில் எடுகளிலும் நூல்களிலும் மற்ற வகைகளிலும் கிரந்த எழுத்துகள் இன்னும் பேரளவு பயனீட்டில் இருக்கின்றன. ஆகவே, கிரந்த எழுத்துகளை நாம் அறிந்திருக்க வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. அதேவேளை, தமிழில் இல்லாமல் இடையில் வந்த அந்த எழுத்துகளைப் படிப்படியாக நீக்கித் தமிழுக்குக்குரிய எழுத்துகள் மட்டுமே தமிழில் வழங்கும் நிலையை உருவாக்கும் (நல்லதமிழ்) முயற்சியைப் புறக்கணிப்பது சரியான நடவடிக்கை ஆகாது.

பிறமொழி ஒலிகளை எழுதுவதற்காகவே தன்னிடம் இல்லாத எழுத்துகளை உருவாக்கிச் சேர்த்துக்கொண்டுள்ள மொழி தமிழைத்தவிர வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ்மண், பிறமொழிக்குரியவர்கள் ஆட்சியிலிருந்த காலத்தில் நேர்ந்துவிட்ட இந்த இடைச் சேர்க்கையிலிருந்து தமிழ்மொழியை மீட்டு அதன் தனித்தன்மையை நிலைநிறுத்துவதற்கான உரிமையும் பொறுப்பும் தமிழறிஞர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் உண்டு என்பதை மறுக்கவியலாது.

அவை உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்பதும், அவற்றை நீக்கவே கூடாது என்பதும் ஆகிய இரு கருத்துகளுமே இந்தச் சிக்கலுக்கு நடைமுறைக்கேற்ற நல்ல தீர்வாகத் தோன்றவில்லை. மொழிநலன் கருதி, (தமிழர்) ஒன்றுபட்டு முயன்று படிப்படியாக தமிழிலிருந்து கிரந்தத்தை நீக்குவதே ஏற்புடைய தீர்வாகும்.

கிரந்த எழுத்து வேண்டுமென்பது ஏன்?


கிரந்த எழுத்துகள் தமிழில் வேண்டும் என்பவர்கள் முக்கியமான இரண்டு காரணங்களை முன்வைக்கின்றனர்.

1.இப்போது கிரந்த எழுத்துகளுடன் வழக்கிலிருக்கும் சமய நூல்களையும் இலக்கியங்களையும் எதிர்கால மக்கள் படிப்பதற்கு உதவியாகக் கிரந்த எழுத்துகள் தொடர்ந்து தமிழில் இருக்க வேண்டும்.

2.சமயஞ்சார்ந்து வைக்கப்படுகின்ற வடமொழிப் பெயர்களைச் சரியான ஒலிப்புடன் எழுதுவதற்குக் கிரந்த எழுத்துகள் தேவை.

இந்தக் காரணங்கள் இயல்பானவை; எளிதில் புரிந்துகொள்ளக் கூடியவை. இந்த இரண்டு காரணங்களையும் நடுநிலையோடு சிந்திக்கலாம்.

சமயச் சார்போடு வாழ்வதற்குக் கிரந்த எழுத்துத் தேவையா? (பாகம் 2-ஐத் தொடர்க..)


தொடர்பான கட்டுரை காண்க:- கிரந்தம் புகுந்தால் தமிழ் இறந்து போகுமா?



கிரந்தம் தமிழுக்குத் தேவையா? பாகம்-2



சமய நூல்களும் கிரந்த எழுத்தும்

கிரந்த எழுத்துகள் வழக்கில் இல்லையென்றால், அவை கலந்து எழுதப்பட்டுள்ள நூல்கள் பிற்காலத்தில் படிக்க இயலாமற் போய்விடும் என்பது ஏற்புடைய கருத்தன்று. இதே நூல்களிலுள்ள கிரந்த எழுத்துகள் தமிழ் எழுத்துகளாக மாற்றப்பட்டாலும் அவற்றைப் படித்து புரிந்துகொள்ள முடியும். இதற்கு எடுத்துக்காட்டாகக் கம்பராமாயணத்தைக் கொள்ளலாம். இதன் கதையும், இதில்வரும் இடப்பெயர்களும் ஆட்பெயர்களும் வடமொழி சார்ந்தவை. கம்பர் காலத்தில் கிரந்த எழுத்துகள் இருக்கவே செய்தன. இருந்தும், அறவே கிரந்த எழுத்துகள் இல்லாமல் ஏறத்தாழ பன்னீராயிரம் பாடல்களைத் தமிழ் எழுத்துகளைக் கொண்டே கம்பர் பாடியுள்ளார். அதில் வந்திருக்க வேண்டிய கிரந்த எழுத்துகளுக்கு மாற்றாக தமிழ் எழுத்துகளே பயன்படுத்தப் பட்டுள்ளன. இதனால், அந்த இலக்கியத்தைப் படிப்பதிலும் சுவைப்பதிலும் எந்த சிறுதடையும் ஏற்பட்டுவிடவில்லை. இதுபோலவே, பிறமொழி ஒலிகளைக் கொண்ட எந்த நூலையும் தமிழ் எழுத்துகளை மட்டுமே பயன்படுத்தி வெளியிட முடியும்; அவற்றைப் படித்துச் சுவைக்கவும் முடியும்.

சமயஞ்சார்ந்த பெயர்களும் கிரந்த எழுத்தும்

பல்வேறு சமயங்களைச் சார்ந்திருக்கும் தமிழர்கள் தங்கள் சமயஞ்சார்ந்து வைத்துக்கொண்டுள்ள பெயர்களை எழுதுவதற்குக் கிரந்த எழுத்துகள் தேவை என்ற கருத்தும் பொருந்துவதாய் இல்லை. கமபர் வடமொழிப் பெயர்களை ஆண்டிருப்பது போலவே, இப்போதும் பிறமொழிப் பெயர்களைத் தமிழ் எழுத்துகளைக் கொண்டே எழுதலாம். (எ.கா: இராமன், இலக்குவன், சீதை, இராவணன், விபீடணன்) கம்பராமாயணத்தில் மட்டுமின்றி அரபு நாட்டில் பிறந்த நபிகள் நாயகத்தின் வரலாற்றைப் பாடிய உமறுப் புலவரின் 5027 படல்களைக் கொண்ட சீறாக்காவியம் அறவே கிரந்த எழுத்துகள் இன்றித் தமிழ் எழுத்துகளாலேயே பாடப்பட்டுள்ளது. அதில் வரும் அரபுமொழிச் சொற்களும் பெயர்களும் தமிழ் எழுத்துகளாலேயே எழுதப்பட்டுள்ளன.

சமயஞ்சார்ந்த பெயரைத் தமிழில் எழுதலாம்

வடமொழிப் பெயர்களைத் தவிர்த்து நல்ல தமிழிலேயே பெயர்வைக்கும் விருப்பமும் போக்கும் மக்களிடையே வளர்ந்து வருகிறது. தமிழில் பெயரிடுவோம் என்ற கொள்கையுடன் பல இயக்கங்கள் அந்த மாற்றத்தை மேலும் வளர்த்தும் வலுப்படுத்தியும் வருகின்றன. எனவே, வடமொழிப் பெயர்களையே வைத்தாக வேண்டும் என்ற நிலை வருங்காலத்தில் முற்றாக மாறிவிடக்கூடும். சமய அடிப்படையிலான பெயர்களைக்கூட வடமொழி தவிர்த்து நல்ல தமிழில் வைக்க முடியும். கிருஷ்ணன் என்பதைக் கண்ணன் என்றும், விஷ்ணு என்பதை மாலவன் என்றும், லஷ்மி என்பதைத் திருமகள் என்றும், சரஸ்வதி என்பதைக் கலைமகள் என்றும் தமிழிலேயே வைத்துக்கொள்ள முடியும். ஷண்முகம் என்பதை ஆறுமுகம் என்றும், தட்சிணாமூர்த்தி என்பதை அருள்வேந்தன் என்றும் அதே பொருளில் மாற்றி வைத்துக் கொண்டவர்களும் உள்ளனர். எனவே, சமயஞ்சார்ந்து பெயர்வைக்கக் கிரந்த எழுத்துகள் கட்டாயத் தேவை அல்ல.

தமிழைத் தமிழாக்குவோம்

எனவே, உண்மைகளையும், தமிழ்நலனையும் நடுநிலையோடு சீர்தூக்கிப் பார்த்து, தமிழில் உள்ள கிரந்த எழுத்து வழக்கைப் படிப்படியாக மாற்றித் தமிழைத் தமிழாகவே நிலநிறுத்தத் தமிழர் யாவரும் இன்றிணைந்து செயல்படுவதே நமது தாய்மொழிக்கு நாம் செய்ய வேண்டிய கடமையாகும். பழகிப் போனதால் மாற்றம் சிறிது கடினமாகத் தோன்றலாம்; படிப்படியாகச் செய்தால் அது இயல்பாகிவிடும்; இனிதுமாகிவிடும்.

தவிர, பிறமொழிச் சொற்களைத் தமிழில் எழுதுவதற்குக் கிரந்த எழுத்து மிகவும் தேவை எனச் சிலர் எண்ணுகிறார்களே, அதற்கு என்ன விளக்கம்? (பாகம் 3-ஐத் தொடர்க..)
கிரந்தம் தொடர்பான கட்டுரையைப் படிக்க இங்கே சொடுக்கவும்

கிரந்தம் தமிழுக்குத் தேவையா? பாகம்-3


பிறமொழி ஒலியைத் தமிழில் எழுத முடியுமா?

உலகின் எந்த மொழியிலும், பிறமொழிச் சொற்களைச் சரியாக எழுதமுடியாது. ஒரு மொழியிலுள்ள எழுத்துகளைக் கொண்டு எந்த அளவுக்குப் பிறமொழிச் சொற்களை அவற்றுக்கு நெருக்கமான ஒலிகளூடன் எழுத முடியுமோ அந்த அளவே எழுத முடியும். பிறமொழிச் சொற்களின் சரியான ஒலிப்பைப் பாதுகாப்பதற்காக, எந்த மொழியினரும் தம் மொழி இலக்கணத்தையும் மரபையும் மாற்றிக் கொள்வதோ அல்லது இல்லாத புதிய எழுத்துகளை உருவாக்கிக் கொள்வதோ ஒருபோதும் இல்லை.

காரணம், தங்கள் மொழியின் இலக்கண வரம்புகளையும் மரபுகளையும் சிதைத்துவிட்டு, பிறமொழி ஒலிப்பைச் சரியாகப் பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கிற மனப்போக்கே எதிர்மறையானதாகும். பிறமொழி ஒலிக்காக நமது மொழியைச் சிதைத்துக் கொள்ள வேண்டும் என்று அந்தப் பிறமொழிக்குரியவர்களே விரும்பவோ எதிர்பார்க்கவோ மாட்டார்கள். அவர்களே எதிர்பார்க்காத மதிப்பை, நமது சொந்த மதிப்பைக் கெடுத்தாகிலும் அவர்களுக்கு வழங்கவேண்டும் என்று எண்ணுவது உண்மையில் மிகக் கடுமையான தாழ்வு மனப்பான்மையாகும். தன்மதிப்புள்ள எவரும் இதனை ஏற்கமாட்டார்.

பிறமொழி ஒலிகள் எப்படி எழுதப்படுகின்றன?


தமிழ் என்ற சொல்லை உலகப் பெருமொழியான ஆங்கிலத்தில் 'டமில்' (Tamil) என்றுதான் எழுதமுடியும். அவர்கள் அப்படித்தான் எழுதுகிறார்கள். அதுபற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை; நாமும் அதனைக் குறையாகக் கருதுவதில்லை. அரபு மொழியில் எகர ஒகரங்கள் இல்லை. எனவே, அந்த மொழியில் அமெரிக்கா, மலேசியா என்ற நாட்டுப் பெயர்களை ஒலிப்பு மாறாமல் எழுத முடியாது. அரபியர்கள் இவற்றை 'அமிரிக்கா' என்றும் மலீசியா என்றுந்தான் எழுதுகிறார்கள். இதற்காக, அரபியர்கள் கலவைப்படுவதில்லை.

எனவே, எந்த மொழியும் எந்த மொழிக்காகவும் செய்யாத இந்த வேலையை, நாம் நம் தமிழ்மொழியைச் சிதைத்தாவது மற்ற மொழிகளுக்காகச் செய்யவேண்டும் என்பது வெட்கப்பட வேண்டிய கருத்தாகும்.

கி.பி 6ஆம் நூற்றாண்டில் கிரந்த எழுத்துகள் உருவாக்கப்பட்டதும் கூட சமற்கிருத வேதமொழிகளைத் தமிழில் ஒலிபெயர்ப்பதற்கே அன்றி, பொதுப்பயனீட்டுக்காக அன்று. அதன்பிறகு 17ஆம் நூற்றாண்டில் (திருப்புகழ் பாடிய) அருணகிரிநாதர் பாடும் வரை எந்தத் தமிழ்ப் புலவரும் வடசொல்லை ஆண்டாலும் கிரந்த எழுத்தை ஆளவேயில்லை. அதற்குப் பிறகும், உமறுப் புலவர், சேகனாப் புலவர், வீரமாமுனிவர் போன்ற பலரும் கிரந்த எழுத்தை ஆளவில்லை. கடந்த 3 நூற்றாண்டுகளாகவே கிரந்த எழுத்து நூல்வழக்குப் பெற்றது. கடந்த 300 அல்லது 350 ஆண்டுகள் தவிர மற்ற எல்லாக் காலத்திலும் தமிழ், கிரந்த எழுத்து இன்றியே இயங்கியது. எனவே, இன்றும் இனி என்றும் அவ்வாறே இயங்க முடியும்.

எனவே, கட்டாயத் தேவையின்றியும், பிறமொழியினரே எதிர்பார்க்காத ஒன்றைப் பிறமொழிக்குச் செய்யும் வேண்டாத முயற்சிக்காகவும், அப்படியே முயன்றாலும் அதனை முழுமையாகச் செய்யவியலாத நிலையிலும்; நம் தமிழ்மொழியின் அமைப்பையும் செம்மையையும் கெடுக்கலாம் – கெடுக்க வேண்டும் என்று எண்ணுவதும்; அதற்காக வாதமும் பிடிவாதமும் செய்வது சரியன்று.

வழக்கிலிருக்கும் கிரந்த எழுத்துப் பயனீட்டைக் குறைக்கும் முயற்சியில் தமிழுணர்வாளர்கள் ஈடுபட்டுள்ள காலத்தில், அவற்றை வலிந்து மேலும் திணிக்க முயல்வது, அதிலும் குறிப்பாகத் தமிழ்க் கல்வியாளர்கள் அவ்வாறு செய்வது ஆக்கமான நடவடிக்கையன்று. அது, வீண் குழப்பத்துக்கும் வேற்றுமைக்கும் போராட்டத்துக்குமே வழிவகுக்கும்.

ஆனாலும், தொல்காபியக் காலத்திலேயே வடசொல்லும் கிரந்தமும் தமிழில் கந்துவிட்டதே.. எப்படி? (பாகம் 4-ஐத் தொடர்க..)

கிரந்தம் தமிழுக்குத் தேவையா? பாகம் 4

கிரந்த எழுத்து பற்றி தமிழ் இலக்கணம்?

தொல்காப்பியரே வடசொல்லைப் பயன்படுத்த வேண்டித்தானே, அதற்கு வழிகாட்டும் நூற்பாவை இயற்றியுள்ளார் என்று சிலர் கூறுகிறார்கள். இது, நுனிப்புல் மேய்ந்ததொரு கருத்து. தொல்காப்பியர் வடசொல்லைப் பயன்படுத்துமாறு எங்கும் கூறவில்லை.

வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே
என்ற அவரது நூற்பாவின் பொருள்:-
வடசொல் என்பது வட எழுத்தை (ஒலியை) முற்றும் நீங்கித் தமிழ் எழுத்துகளால் உருவான சொல்லே என்பதுதான். பிறமொழிச் சொல்லை எப்படித் தமிழில் எழுதுவது என்று கூறியதை பிறமொழிச் சொல்லை தமிழில் கலக்கவேண்டும் என்று கூறியதாகக் கொள்வது கதைத்திரித்தல் ஆகும்.

நமக்கு பிறமொழிப் பேசும் மக்களுடன் தொடர்பு ஏற்பட்டால் அந்த மக்களது பெயர்களையும் அவர்கள் தங்கள் மொழியில் வைத்துள்ள இடப்பெயர்களையும் எழுதும் தேவையும் ஏற்படவே செய்யும். அந்தப் பெயர்கள் நமது மொழியில் இல்லாத ஒலிகளைக் கொண்டிருக்கலாம். எனவே, அந்த மொழிப் பெயர்களை நமது மொழியில் எழுத ஒரு முறையை வகுத்துரைப்பது இக்கணியின் கடமையாகும்.

எனவேதான், தொல்காப்பியர் வடசொல்லைத் தமிழில் எழுதும் முறையை வழங்கினார். ஆனால், இந்த நூற்பாவின் தெளிவான செய்தி பிறமொழிச் சொல்லைத் தமிழில் எழுதும்போது தமிழ் எழுத்துகளால் தமிழ் இலக்கணப்படி புணர்ந்து எழுத வேண்டும் என்பதே. கிரந்த எழுத்தாக்கம் போன்ற நடவடிக்கையைத் தொல்காப்பியர் முன்னறிந்து தடுத்திருக்கிறார் என்பதே உண்மை. இதையும் மீறி கி.பி 6ஆம் நூற்றாண்டில் கிரந்த எழுத்து உருவானது.

நன்னூல் என்ன சொல்கிறது?

கிரந்த எழுத்து உருவாகி 6 நூற்றாண்டு கடந்து கி.பி12ஆம் நூற்றாண்டில் நன்னூல் இயற்றிய பவணந்தி முனிவரும் வடசொல்லத் தற்சமம் (ஒலிமாறாமல் தமிழ் எழுத்துகளால் எழுதுபவை) என்றும்; தற்பவம் (ஒலி மாற்றி தமிழ் எழுத்துகளால் எழுதுபவை) என்றுதான் பிரித்து இலக்கணம் வகுத்தாரே அன்றி, அப்போதிருந்த கிரந்த எழுத்தைப் பயன்படுத்தும்படியோ, பயன்படுத்தும் முறையையோ கூறவில்லை.

தற்சமம், தற்பவம் என்றால் என்ன?

தமிழிலும் சமற்கிருதத்திலும் உள்ள பொதுவான எழுத்தொலிகளைக் கொண்ட அதாவது ஒலிக்காக எழுத்துகளை மாற்றத் தேவையில்லாத சமற்கிருதச் சொற்களே தற்சமம் எனப்படும். தமிழிலும் சமற்கிருதத்திலும் சமமான ஒலிகளைக் கொண்ட எழுத்துகளால் ஆன சொற்கள் என்பது இதன் கருத்து.

தமிழில் இல்லாத சமற்கிருதத்தில் மட்டும் உள்ள எழுத்தொலிகள் கொண்ட சமற்கிருதச் சொற்களில் உள்ள சமற்கிருத ஒலிகளை மாற்றி தமிழ் எழுத்துகளையே கொண்டு எழுதப்படும் சொற்களே தற்பவம் எனப்படும். தமிழில் இல்லாத சமற்கிருத ஒலிகளுக்கு ஈடாகத் தமிழ் ஒலிகள் பாவிக்கப்பட்ட சொற்கள் என்பது கருத்து.

தற்சமம், தற்பவம் ஆகிய இரண்டிலுமே கிரந்த எழுத்து வராது. கமலம், கல்யாணம் போன்ற வட சொற்கள் எழுத்தொலி மாற்றப்பட்டாமையால் இவை தற்சமம் ஆகும். வருடம், புட்பம் போன்ற வடச்சொற்களில் உள்ள சமற்கிருத ஒலி தமிழ் எழுத்தாக மாற்றப்பட்டிருப்பதால் இவை தற்பவம் ஆகும்.

மனமார்ந்த நன்றிக்குரியவர்: -
நல்லார்க்கினியர் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது அவர்கள்
'உங்கள் குரல்' 2008 மார்ச்சு மாத இதழ்
மலேசியா.
கிரந்தம் புகுந்தால் தமிழ் இறந்து போகுமா? மேலும் படிக்க.. இங்கே சொடுக்கவும்

Friday, May 02, 2008

தூயதமிழ்க் காப்பின் உண்மை நிலைகள்

வடமொழி தேவமொழி என்றும் அம் மொழியையும் அதன் சொற்களையும் வழங்குவது இறைவனும் விரும்பும் ஏற்றம் என்றும் தவறான கருத்து வலிவாகப் பரப்பப் பட்டதால் வரைதுறையின்றி வடமொழிச் சொற்களை எவ்வகை எதிர்ப்புமின்றிக் கண்டமண்டலமாகத் தமிழில் கலந்தெழுதும் நிலையேற்பட்டது. இந்நிலையால், தமிழினுடைய தூய்மையும் வளமுங் கெடவும் பெரும்பேரளவிலான தமிழ்ச் சொற்கள் பொருளிழக்கவும் வழக்கொழியவும் நேர்ந்தது.
  • நன்றாக எளிதில் புரியக்கூடிய பொருத்தமான தமிழ்ச்சொற்களை விலக்கி, அரிதான, விளங்காத, சரியாகப் பொருந்தாத வடசொற்கள் வலிய திணித்துக் கலக்கப்பட்டதற்கான சில சான்றுகளைப் பாருங்கள்: தொடர்ந்து படிக்கவும்...
நன்றி : தமிழநம்பி
Blog Widget by LinkWithin