- நன்றி: வேர்களைத் தேடி
“இமையோர் தேஎத்தும் எறிகடல் வரைப்பினும்
அவையில் காலம் இன்மை யான” என்று பாடுகிறது தொல்காப்பியம். அதாவது, காதலை உயிராகக் கொண்ட அகமும், அகத்தின் தொடர்பில் புறமும் இல்லாத காலமோ அல்லது இடமோ எங்கேயும் கிடையாது என்பதே அதன் பொருள். இதனால்தான் நம் முன்னோர்கள் வாழ்வியலை அகம் – புறம் என இரண்டாகக் கண்டனர்.
இதனை நன்கு ஆராய்ந்தால், உலக வாழ்க்கைக்குக் காதலே அடிப்படையாக இருக்கிறது என அறியலாம். மாந்த வாழ்வில் காதலுணர்வு மிகவும் நுட்பமும் ஆழமும் நிறைந்தது. வாழ்க்கையிலும் சரி, இலக்கியத்திலும் சரி காதலுணர்வை (நவின மொழியில் பாலுணர்வை) மிகவும் பொறுப்போடு கையாளவேண்டும். கொஞ்சமே வழுவினாலும் சமூகத்தில் பேரிழப்பு ஏற்படலாம்.
பாலுணர்வின் இயக்கத்திற்கு உடலே கருவியாக இருக்கிறது. உணர்வுகளை உடலுக்கும் உறுப்புகளுக்கும் அடிமையாக்கிவிட்டால் நுட்பம் நிறைந்த உணர்வுகள் மதிப்பிழந்து போகும். கூடவே, உடலும் உறுப்புகளும் கெட்டுப்போகும்.
இந்த உண்மையை ஆழ்ந்து உணர்ந்ததன் விளைவாகத்தான், சங்க இலக்கியங்கள் பாலியலை மிக நேர்த்தியோடும் – நயத்தோடும் கையாண்டுள்ளன. இந்த அடிப்படை உண்மையை அறியாமல்போனதன் காரணத்தால் பிற்கால இலக்கியங்கள் எல்லாமே செல்வாக்கில்லாமல் போயின என்பது வரலாறு. (இதனை விளக்கினால் நீண்டுபோகும்)
உடல் - உறுப்பு இவற்றைவிட, உணர்வுகளுக்கு முதன்மை கொடுப்பதால் உடலும் உறுப்பும் மறைந்து உணர்வுகளே உடலமாக உருவெடுத்து நிற்கும் என்பது நமது முன்னோர்கள் மரபிவழி கண்டது. இதனையே, சங்க இலக்கியம் முழுவதிலும் காணமுடிகிறது.
இதனை உணர்ந்திருந்த பாரதியார், “செவ்விது,செவ்விது, செவ்விது காதல்” என்றார். இந்தக் காதலால் என்னவாகும் தெரியுமா?
“காதலினால் உயிர் தோன்றும்; - இங்கு
காதலினால் உயிர் வீரத்தில் ஏறும்
காதலினால் அறிவெய்தும் – இங்கு
காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்” என்றும்,
காதலினால் மானுடர்க்கு கலவி உண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலைதீரும்
காதலினால் மானுடர்க்குக் கவிதை உண்டாம்
கானம் உண்டாம்; சிற்பம்முதல் கலைகளுண்டாம்
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே” என்றும் மனிதர்களுக்கு வேண்டுகை விடுக்கிறார் மாபாவலன் பாரதி.
இப்படி பாரதி பாடியதை, அன்றே முன்னுணர்ந்து நமது சங்கப் புலவர்கள் பாடியிருப்பது நம்மை வியக்கச் செய்கிறது. உள்ளங்களால் ஏற்படும் ஆழமான உறவை சங்கப்புலவர்கள் உள்ளப் புணர்ச்சி என்றனர். உள்ளப்புணர்ச்சி நன்றாக அமைந்தால்தான் உடல் புணர்ச்சியும் (உடலுறவு) முழு இன்பத்தைக் கொடுக்கும் என்ற தெளிவான எண்ணக்கருவைச் சங்கப்பாடல்கள் வலியுறுத்துகின்றன.
இப்படியாக, சங்கப் புலவர்கள் உள்ளத்து உணர்வுகளுக்கு முன்னுரிமை கொடுத்தார்களே அன்றி, வெறுமனே பெண்களின் உடல் வருணனையோ அல்லது பாலுறுப்பு வருணனையோ மட்டும் அல்ல. மேலும், இவ்வுணர்வுகளைச் சொல்லுவதற்கு இயற்கையியல் – இன்பியல் (Naturalism & Romanticism) ஆகிய இரண்டுப் பண்புகளைப் பாங்காகப் பயன்படுத்தியுள்ளனர். சங்கப் புலவர்கள் உயர்ந்ததையே எண்ணி, உயர்ந்த நெறிகளையே பின்பற்றி வாழ்ந்தவர்கள் என்பதால் அவர்களுடைய பாடல்களும் மிக உயர்தரத்திலேயே காணப்படுகின்றன.
இதனையே மு.வ தமது குறுந்தொகைச் செல்வம் நூலில் இப்படிக் கூறுகிறார். “இந்த ஓவியங்கள்(சங்கப் பாடல்கள்) காதலரின் மனநிலையை விளக்குவன என்பது சிறப்பாகக் கருதத்தக்கதாகும். இவற்றைத் தீட்டிய கலைஞர்கள், காதலரின் உடல் வனப்பை எடுத்துக் காட்டுவதற்காகத் தம் வண்ணத்தைப் பெரிதும் செலவிடவில்லை; முயற்சியையும் செலவிடவில்லை. ஓவிய அமைப்பிற்கு எந்த அளவுக்கு அவர்களின் தோற்றம் இன்றியமையாததோ, அந்த அளவிற்கே உடலைக் குறித்துள்ளனர். ஓவியத்தைக் காண்பவரின் உள்ளம், காதலர்களின் உடல்வனப்பால் கவரப்படாதவாறு அவர்களின் கலைமுயற்சி அமைந்துள்ளது”
இந்தக் கண்ணோட்டத்தில்தான், சங்கப் பாடல்களைப் பார்க்க வேண்டுமே தவிர, குருடர்கள் ஒன்றுகூடி யானையின் ஒவ்வொரு பாகத்தைத் தொட்டுப் பார்த்தது போன்று அவரவரும் தப்பும் தவறுமாக உணர்ந்ததை தண்டோரா போட்டுச் சொல்லக்கூடாது.
பெண்ணுடல் இயற்கையாகவே முலை, அல்குல், தாய்வயிறு (கருப்பை) எனத் தனித்த அடையாளங்களைக் கொண்டது. பெண்ணுறுப்புப் பெயர்களைச் சங்கப்பாடல்களில் மட்டுமல்ல திருக்குறள் போன்ற அறநூல்களிலும் காணமுடிகிறது. சங்க காலத்தில் ஔவையார், வெள்ளி வீதியார் உள்ளிட்ட நாற்பத்தொரு பெண்பாற் புலவர்கள் பெண்ணிய நிலை, மனவுணர்வு, காதலுணர்வு பற்றி பாடியுள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. அன்றைய புலவர்கள் பெண்ணுறுப்புகளைச் சுட்டும்போது அதில் அருவருப்புத் தன்மையுமில்லை; அது பாலுணர்ச்சியைத் தூண்டியதுமில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிய சிறப்பான உடலெழில் கூறுகள் அன்றே இலக்கணமாகச் சொல்லப்பட்டுள்ளன.
(முற்றும்)
சான்றாதாரம்:-
1.சங்க இலக்கிய ஒப்பீடு (முனைவர் தமிழண்ணல்)
2.சங்க இலக்கியம் (முனைவர் இரா.தண்டாயுதம்)
3.குறுந்தொகைச் செல்வம் (முனைவர் மு.வரதராசன்)
4.உங்கள் குரல் - சூன் 2004 (கவிஞர் சீனி நைனா முகம்மது)
தொடர்பான இடுகைகள்:-
1. தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 1)
2.தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 2)
3.தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 3)
4.தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 4)
5. புத்திலக்கியவாணர்களுக்குத் தமிழும் தெரியாது தமிழுணர்வும் கிடையாது
கடந்த பதிவு (பாகம் 3) பின்நவினம் பற்றிய ஒரு முழுமையான புரிதலை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. பின்நவினத்தை மேலோட்டமாகத் தெரிந்துகொள்ளுவதற்கு அல்லது இனி அதனைப் பற்றி ஆராய்ந்தறிவதற்கு உங்களை நகர்த்தியிருக்கலாம் என்று வேண்டுமானால் துணிந்து சொல்லுவேன்.
இதற்குக் காரணம், பின்நவினம் இன்னமும் முழுத் தெளிவோடு வெளிப்படுத்தப்படவில்லை என்பதுதான். இருந்தபோதிலும், பின்நவினம் மகா கேடானது; அடிப்படையே இல்லாதது என குருட்டாம்போக்காக முற்றும் முழுவதுமாக ஒதுக்கவேண்டியதும் அல்ல.
இரண்டுமுறை போர்களைச் சந்தித்துவிட்ட உலகம், கடவுள் உண்மை, மெய்ம்மம்(தத்துவம்), நேர்மை, மாந்தநேயம் ஆகிய அனைத்து நெறிகளின்மீது நம்பிக்கை இழந்துநிற்கிறது. நவினமயச் சூழலில், ‘எதிர்மறை பண்பாடு’ (Counter Culture) ஏற்படுத்திவரும் பல்வேறு தாகுறவுகளில் சிக்கிக்கொண்டு சின்னபின்னமாகிப் போயிருக்கும் இன்றைய உலகத்திற்குப் பின்நவினம் சில தீர்வுகளைகளை முன்மொழிகிறது. நவினச் சூழலுக்கு ஏற்ற புதியவகை ‘உணர்வுவாங்கலை’ (New Sensibility) கொடுப்பதாகச் சொல்லப்படுகிறது.
தமிழ்ச்சூழலில் ‘பின்நவினம்’ சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகத் தெரியவிலை. மலேசியாவில், தமிழ்ப் படைப்பாளிகள் ‘பின்நவினம்’ என்பதை பிறழ்நிலையாகவே உணர்ந்திருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. ‘பின்நவினம்’ என்ற தளத்தில் எழுதப்படும் படைப்புகள் பெரும்பாலும் ‘பாலியல்’ சார்ந்ததாகவே அமைந்திருப்பது இதற்கான காரணமாக இருக்கலாம். அதோடு, பின்நவினப் படைப்பாளிகள் இன்னும் முதிர்ச்சி இல்லாதவர்களாகவும் இலக்கியத்தில் பரந்த நோக்கு இல்லாதவர்களாகவும் இருப்பதுமாகும்.
பின்நவினப் படைப்புகள் எழுதுவதற்கு எத்தனையோ கருக்களும் களங்களும் இருக்கும்போது, இவர்களின் எழுதுகோள் பாலியல் - பாலுறுப்புகளை மட்டுமே செக்குமாடு போல வட்டமடித்துக் கொண்டிருக்கிறது.
இதனைச் சுட்டிக்காட்டினால், எம்பிக்குதித்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்களே தவிர, அமைதியாக அணுகி ஆராய்ந்துபார்க்க மறுக்கிறார்கள். தமிழ் மரபு – பண்பாடு சார்ந்து பின்நவினம் அணுகப்பட வேண்டும் என்ற கூக்குரல்களில் இருக்கும் அடிப்படைகளை எண்ணிப்பாராமல், மரபிலக்கியங்களில் நயமாக – நாகரிகமாக சொல்லப்பட்ட ‘பாலியல்’ புனைவுகளைக் கொச்சைப்படுத்தி தங்கள் செயல்களுக்கு நியாயம் கற்பிக்கிறார்கள்.
சங்க இலக்கியப் பாக்களில் இழையோடும் காமம், காதல், களவு, கற்பு முதலான அகத்தினைப் புனைவுகள் அனைத்தும் மிக கவனமாகச் செய்யப்பட்டவை – மாந்தப் பண்பாட்டுக்கு உட்பட்டவை என்பதை முதலில் இவர்கள் புரிந்துகொள்வது நலமானது. இது, புரியாத காரணத்தால்தான், மரபுகளில் ‘பாலியல்’ இருப்பதால் நாங்களும் படைக்கிறோம் என்று கொச்சையாக - பச்சையாக எழுதுகின்றனர்.
தமிழ்ச் சூழலில் பாலியல் சார்ந்த படைப்புகள் எவ்வாறு சொல்லப்பட வேண்டும் என்று எழுத்தாளர் செயமோகன் தம்முடைய கட்டுரை ஒன்றில் பின்வருமாறு விவரிக்கிறார். எந்தவொரு மாற்றமும் செய்யாமல் அதனை அப்படியே இங்குத் தருகின்றேன்.
பாலுணர்வுக்கதை என்பது தன் மையக்கருவாகவே பாலுணர்வை எடுத்துக் கொண்டிருக்கும். அதைபற்றி கூர்ந்த அவதானிப்புடன் விவாதிக்கும். அதை நுண்ணிய விவரிப்புடன் சித்தரித்துக் காட்டும். அதன் மனநிலைகளை பல தளங்களில் விரித்துச் செல்லும்.
பாலுணர்வெழுத்திற்கும் பாலியல்கவர்ச்சி எழுத்துக்கும் என்ன வேறுபாடு? வெறுமனே சற்று நேரம் நமக்கு ஒரு மனச்சித்திரத்தின் இன்பத்தை மட்டுமே அளித்து நின்றுவிடுவது பாலியல்கவர்ச்சி எழுத்து. இலக்கியம் எந்த வகையானாலும் அது நம்மை நாமே அறியச்செய்யும். கூர்ந்து நோக்க வைக்கும். நமக்குள் நம்மைக் கொண்டுசெல்லும். அதுவே முக்கியமான வேறுபாடு.
என் நோக்கில், நல்ல பாலுணர்வெழுத்து என்பது சில இயல்புகள் கொண்டது. அது எந்நிலையிலும் அழகாகவே இருக்கும். பகற்கனவுகளுக்கு மட்டுமே உரிய மென்மையான அழகு அது. தொட்டால் பொலபொலவென உதிர்ந்துவிடக் கூடிய, பிறரிடம் பகிர முடியாத அழகு. நல்ல பாலுணர்வெழுத்து குறைவாகவே சொல்லி வாசகனின் கற்பனையைத் தூண்டும். அவனுடைய அந்தரங்கமான கனவுகளில் மட்டுமே அது முழுமையடையும்.
மனத்திரிபு நிலைகளை எழுதுவது பாலுணர்வெழுத்து அல்ல. அதை வேறு வகைமையில்தான் சேர்க்க வேண்டும். மனதை சிதைப்பதும் வதைப்பதும் பாலுணர்வெழுத்தின் இயல்பல்ல. பாலுணர்வெழுத்து இனிய மனக்கிளர்ச்சி ஒன்றை மட்டுமே அளிக்கும். அதன் உச்சியில் ஒரு வகை தனிமையின் துயரையும், இழப்பின் ஏக்கத்தையும் சொல்லி முடியக்கூடும். எப்போதும் அது மூளைக்குள் பரவும் இனிய தென்றலாகவும் கற்பனையில் விரியும் இளவெயிலாகவுமே இருக்கும்.
எங்கெல்லாம் இலக்கியம் இருக்கிறதோ அங்கெல்லாம் பாலுணர்விலக்கியமும் உண்டு. பழங்குடிப் பாடல்கள் முதல் பேரிலக்கியப் பரப்பு வரை. வேதங்களில், பைபிளில்.. இந்திய காவிய மரபின் இரு உச்சங்களான கம்பனையும் காளிதாசனையும் பாலுணர்வெழுத்தின் இரு சிகரங்களாகவே சொல்ல வேண்டும்.
ஏனென்றால் மனிதர்களுக்கு பாலுணர்வெழுத்து மிகவும் தேவையாகிறது. அது ஓர் அடிபப்டையான இச்சை. இச்சைகள் அனைத்துமெ ருசிகள். ருசிகளே அழகுகளாக ஆகின்றன. மனிதன் தன் கற்பனையை பாலுறவுசார்ந்து முடிவிலாது விரித்துக் கொண்டாகவேண்டியிருக்கிறது. அது அவன் வாழ்வின் மீது கொள்ளும் ஆசையின் ஒரு வெளிப்பாடேயாகும். நம் கலைகளில் பாலுணர்வென்பது வாழ்வாசையின் மன எழுச்சியாகவே எப்போதும் வெளிப்பாடு கொள்கிறது.
கற்பனையில் இருந்து எப்படி காமத்தை விலக்க முடியும்? நல்ல பாலுணர்வெழுத்தும் ஓயாத படிமவெளியை உருவாக்கக் கூடியது. சுவர்களை மறையச் செய்யக்கூடியது. நம்மை கட்டற்ற பசுமை வெளியில் நிறுத்தக் கூடியது. அத்தகைய எழுத்துக்கள் தமிழில் இனிவரும் காலத்தில் உருவாகுமென எண்ணுகிறேன்.
தங்களுடைய படைப்புகளில் ‘பாலியல்’ தொடர்பான கருவை எடுத்துக்கொள்ளும் படைப்பாளிகள் மேற்கண்ட கருத்துகளை ஆழமாகப் புரிந்துகொண்டால், நவின இலக்கியங்களையும் நல்ல – நயமான - நாகரிகமான இலக்கியங்களாகப் படைக்க முடியுமல்லவா?
அடுத்த தொடரில், தமிழ் மரபிலக்கியம் காமம் – காதல் அதாவது நவின மொழியில் சொல்லவேண்டுமானால் ‘பாலியல்’ எண்ணக்கருவை எவ்வாறு அணுகுகிறது என்பதைப் பார்ப்போம்.
(மரபியல் மீண்டும் மலரும்..)
தொடர்பான இடுகைகள்:-
1. தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 1)
2.தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 2)
3.தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 3)
4. புத்திலக்கியவாணர்களுக்குத் தமிழும் தெரியாது தமிழுணர்வும் கிடையாது
மாந்த நாகரிகக் காலத்தைக் கற்காலம், செப்புக்காலம், இரும்புக்காலம், நவினக் காலம் என பிரிப்பது வழக்கம். இந்த வரிசையில் அனைத்திற்கும் இறுதியானதாக உருவாகியிருக்கும் காலத்தைக் குறிக்கவே ‘பின்நவினம்’ என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது. மேற்கிற்கே உரிய பண்பட்டுப் பின்னணியில் தோன்றியதாக இருந்தபோதிலும் அது என்னவோ உலகம் முழுமைக்கும் உரிய புதிய எண்ணக்கருபோல காத்திரமாக(seriously) முன்னெடுக்கப்படுகிறது.
பின்நவினத்தைப் புரிந்துகொள்வதற்கு ‘காலம்’ என்பது முதலில் புரிந்துகொள்ளப்பட வேண்டியதாக இருக்கிறது. ‘பின்நவினக் காலம்’ என்பது மின்னல்வேகத்தில் மாறிவரும் மேற்கத்திய நாடுகளின் காலத்தைக் குறிக்கிறது. மேலை நாடுகளின் இடத்தை - காலத்தை எட்டிப்பிடிக்க கிழக்கத்திய நாடுகளுக்கு இன்னும் காலம் தேவைப்படலாம். அதில், தமிழ் மக்களுக்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பது சிந்தனைக்குரியது.
இப்படிப்பட்ட சூழலில், மேற்கு நாடுகளில் பல்துறைகளிலும் ஊடுறுவி வியாபித்திருக்கும் ‘பின்நவின’ எண்ணக்கருவைக் கொண்டுவந்து நம்முடைய தலைக்குள் கொட்டுவது சரியல்ல என்று சொல்வதா இல்லை இப்போதைக்கு சாத்தியமல்ல என்று சொல்லுவதா?
இத்தனைக்கும், பின்நவினத்தின் வரையரைகள் பற்றி முடிவான கட்டுமங்கள் (Construct) இன்றுவரையில் மேற்குச் சமுகத்தாரிடம் ஏற்பட்டிருக்கவில்லை. பின்நவினம் மீது திறனாய்வு மேற்கொண்ட இகாப் அசான் (Ihab Hassan), அஃது இன்னமும் ஆய்வுக்குரிய ஒரு விடயமாகவே இருக்கிறது எனக் கூறுகின்றார்.
பின்நவினம் பற்றி இதுவரையில் வெளிவந்துள்ள ஆய்வுகளிலிருந்து அறியப்பட்ட உண்மை என்னவெனில், பின்நவினம் என்பது ஒழுங்குசெய்யப்பட்ட - ஒருமைப்பட்ட - ஒரு முழுமையான - செறிவான கோட்பாடு அல்லது கட்டுமம் அல்ல.
இந்தப் பின்நவினம் பின்வரும் இயல்புகளைக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
1.கல்விக் கோட்பாடுகளும் மாற்றுச் சிந்தனைகளும் (பேரா.முனைவர் சபா.செயராசா)
2. உயிர்நிழல்-பிரான்சு), செப்தெம்பர்-அத்தோபர், 1999 (கொ.றொ.கொன்சுரன்ரைன்)
3.உளவியல் முகங்கள் (பேரா.முனைவர் சபா.செயராசா)
4.தமிழ் விக்கிபீடியா
(மரபியல் தொடர்ந்து மலரும்)
தொடர்பான இடுகைகள்:-
1. தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 1)
2.தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 2)
3. புத்திலக்கியவாணர்களுக்குத் தமிழும் தெரியாது தமிழுணர்வும் கிடையாது
சொந்த மொழியை - இனத்தை - சமயத்தை - இலக்கியத்தை - பண்பாட்டை - வரலாற்றை - சான்றோரை இழுவுபடுத்தி இன்பம்காணும் பேதையர்கள் நிறைந்ததுதான் தமிழினம் என்பது காலம் கட்டியங்கூறும் வரலாறு.
‘நீசபாசை’ என்றும், ‘ஐந்தெழுத்தால் ஆனதொரு பாடை’ என்றும், ‘தமிழ் இலக்கியங்களுக்கு ஆரியமே மூலம்’ என்றும், ‘தமிழ் அறிவியல் மொழியாகுமா? என்றும், ‘தமிழ் தொழில்நுட்ப உலகில் தழைக்குமா?’ என்றும், ‘தமிழ் அடுத்த 100 ஆண்டுகளில் அழிந்துவிடும்’ என்றும் பறபல பரிகாசிப்புக்கு உள்ளாகிய வரலாறு தமிழுக்கு உண்டு.
இத்தனைக்கும், இத்துணைக் கொடுமைகளையும் செய்தவர்கள் வேற்று இனத்தாரில்லை. தமிழினத்தில் பிறந்த கோடரிக்காம்புகளும் - தப்பிப் பிறந்த தறுதலைத் தமிழர்களும் ஆகியவரோடு எப்போதுமே தமிழுக்குப் பகையாக நிற்கும் ஆரியப் பார்ப்பனக் கூட்டமும்தான்.
இந்நிலையில், காலந்தோறும் தமிழுக்கு எதிராக வீசப்பட்ட ஏவுகணைகளைத் தகர்த்தெரிந்து மொழியறிஞர் பாவாணர் குறிப்பிட்டதுபோல, 50,000 ஆண்டுகள் வரலாறுகொண்டதும், 3,000 ஆண்டுகளுக்கு முன்னாலேயே செவ்வியல் நிலைக்கு முன்னேறிவிட்ட மொழியாகவும் இன்றைய கணினி இணைய உலகிலும் நின்று நிலைக்கும் மொழியாகவும் தமிழ் இருப்புக்கொண்டிருப்பது உலகில் வேரெந்த மொழிக்கும் இல்லாத தனியுயர்ச் சிறப்பாகும்.
அப்படிப்பட்ட தமிழில், மொழிக்கென்று ஒரு மரபு உண்டு! இனமரபு உண்டு! சமய மரபு உண்டு! பண்பாட்டு மரபு உண்டு! கலை மரபு உண்டு! இசை மரபு உண்டு! இலக்கிய மரபு உண்டு! வாழ்வியல் மரபு உண்டு! இப்படி மாந்த வாழ்வியலைத் தழுவிய எல்லாவற்றிலும் மிக உயரிய மரபுகளை வகுத்தவர்கள் தமிழர்கள்.
அப்படியிருக்க, சொந்த இனத்தின் - சொந்த மொழியின் பண்பாட்டை மதிக்கத் தெரியாத இன்றையத் தமிழர்கள் சிலர் ‘தமிழை’ வழக்குமன்றத்தில் ஏற்றி ‘மரபு என்பதற்கு ஒரு முழுமையான தெளிவான விளக்கம் கொடுக்கவும்’ என்றெல்லாம் வாதம் செய்கின்றனர்.
இது எப்படி இருக்கிறது என்றால், தன்னைப் பெற்றெடுத்து - பாலூட்டி - சீராட்டி - தாலாட்டி - மார்பிலும் தோளிலுமிட்டு - அன்பொடு அறிவையும் புகட்டி ஆளாக்கி வளர்த்தெடுத்த சொந்த அம்மாவைப் பற்றி சொல்லச்சொல்லி பக்கத்து வீட்டுக்காரனிடம் கேட்டக் கதையாக இருக்கிறது.
மேலை நாடுகளின் பண்பாட்டுச் சிதவுகளினால் உருவெடுத்த ‘நவினம்’, ‘பின்நவினம்’ முதலான வடிவங்களில் ஈர்க்கப்பட்ட இளையோர்கள் மட்டுமல்ல, முதுமையிலும் "இன்பம் எங்கே இன்பம் எங்கே" என்று தேடும் மூத்தவர் சிலரும் இப்படிப்பட்ட குருட்டுக் கணைகளை ஏவிவருவது வழக்கமாகிவிட்டது. அந்த முனைப்பில், தமிழ் மரபியலைச் சிறுமைபடுத்துவதும் சிதைவுக்குள்ளாக்குவதும் இவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், தமிழைப் பழித்துக்கொண்டே - தமிழ் மரபியலைப் பழித்துக்கொண்டே - தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பழித்துக்கொண்டே, அதே தமிழால் வந்துசேரும் பணம், பட்டம், விருது, புகழ், மேடை, மாலை, சிற்றிதழ், கவிதைத் தொகுப்பு, சிறுகதை, நாவல், இலக்கியக்கூட்டம் என்று பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் ‘சோற்றுப் பட்டாளம்’ ஒன்று தமிழகத்தில் கருவாகி இன்று உலகமெங்கிலும் பரவலாகி இருக்கிறது.
இவர்களுக்குத் தமிழின் மூக்குநுனி தெரிகிறதோ இல்லையோ. ஆனால், அன்னியரின் மூளை அணுக்கள்வரையில் துல்லியமாகத் தெள்ளெனத் தெரிகிறது.
அன்னியரின் கண்டுபிடிப்புகள் அனைத்தும் வெறுக்கதக்கவை அல்ல. அன்னியர் கண்டுபிடித்தாலே அவை தமிழுக்கு அன்னியம் என ஒதுக்கத்தக்கவையும் அல்ல. மாறாக, அவர்களின் கண்டுபிடிப்புகளில் இருக்கும் உயர்வுகளை மட்டுமே மதித்து ஏற்கமுடியுமே தவிர, இழிவுகளையும் கழிசடைகளையும் அல்ல.
தங்கத்தை உரசிப்பார்க்கும் தமிழ்க்கல்லில் அன்னியத் தகரங்களைக் கொண்டுவந்து உரசுவது மடமையன்றி வேரென்ன? அப்படியேதான், தமிழ் மரபியலோடு ‘பின்நவினம்’ போன்றவற்றை உரசிப்பார்ப்பதுவும்.
‘பண்புடையார் பட்டுண்டு உலகம்’ என்ற தமிழ் மரபுக்கும் ‘உலகப் பொதுமை என்று என்று எதுவும் கிடையாது’ என்ற மேற்குலகப் பின்நவின மரபுக்கும் எத்துணை வேறுபாடு இருக்கிறது. ‘அறத்தான் வருவதே இன்பம்’ என்ற தமிழ் மரபு மாந்த இனத்தை உய்விக்கும் அளவுக்கு ‘மனித இனத்தின் முதன்மையான உந்துவிசை பாலுணர்வு வேட்கைதான்’ என்ற மேலையர் கண்டிபிடிப்பு எந்தளவுக்கு உய்விக்கும்?
இறைமையை ஒன்றாகவும்,
வாழ்வை இரண்டாகவும்,
மொழியை மூன்றாகவும்,
நெறியை - நிலத்தை நான்காகவும்,
திணையை ஐந்தாகவும்,
அறிவை - சுவையை ஆறாகவும்,
இசையை - கிழமையை ஏழாகவும்,
திசையை - மெய்ப்பாட்டை எட்டாகவும்,
மணிகளை - எண்களை ஒன்பதாகவும்,
கண்டு உலகத்திற்குத் தந்தது தமிழ் மரபியல் அல்லவா? இவை இன்றும் உலகத்திலே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது மட்டுமல்ல.. இன்றளவும் மாற்றத்திற்கு உள்ளாகாமல் இருப்பதுவும் உண்மையல்லவா?
'மாற்றம் ஒன்றே உலகில் மாறாதது' என்ற கோட்பாட்டைக் கடந்து உலகத்தில் இன்னமும் மாறாமல் இருப்பவை ஏராளம் இருக்கின்றன என்பதை முற்றிலுமாக மறுத்துவிட முடியுமா?
தமிழ் மரபியல் ஒன்றும் மாற்றத்தை மறுதளிக்கும் ஏற்பாடு கிடையாது. காலத்திற்கு ஏற்ற தேவையான மாறுதல்கள் தமிழிலும் ஏற்பட்டே வந்துள்ளன. ஆயினும், தமிழின் ஆணிவேரிலே கைவைக்கும் மாற்றங்கள் அடையாளம் தெரியாமல் பொசுங்கிப் போயுள்ளன என்பதே வரலாற்று உண்மை.
சான்றாக, வடமொழி ஆதிக்கம் பெற்றிருந்த காலத்தில் தமிழில் வழங்கிய 'மணிப்பிரவாள' நடை தோன்றி கோலோச்சியது. மணிப்பிரவாளத்தில் எழுதுபவரே மகா பண்டிதர் என்ற நிலை அன்று உருவாகியது. இதனால், தமிழ்ப் புலவோர் பலரும் மணிப்பிரவாளத்தில் எழுதத் தொடங்கினர். ஆனால், இன்று 'பின்நவினம்' பேசும் கத்துக்குட்டிகளுக்குத் தெரியுமா இந்த மணிப்பிரவாளம்? தெரியுமா இந்த வரலாறு?
ஓர் இடைக்காலத் தொய்வுக்குப் பின்னர் மீண்டும் தமிழ் மரபியலே தலையெடுத்தது. அப்படித்தான் இன்று, நவினமும் பின்நவினமும் பொங்கி எழும்புகிறது. ஆனால், அது விரைவிலேயே மரபியல் சமுத்திரத்தில் பெருங்காயமாகிக் கரைந்துபோகும்.
தமிழ் மரபியலுக்கு விளக்கம் கேட்போருக்கு நாம் ஒரே ஒரு சொல்லில் விளக்கம் சொல்லிவிடலாம். அந்தச் சொல் 'தொல்காப்பியம்'.
இதனைக்கூட அறியாதவர்கள் ‘இலக்கியம்’ என்று எதையோ படைக்கிறார்கள். இவர்களுக்கும், கருவிகள் எதுவும் இல்லாமல் உழவுக்குப் போகிறவர்களுக்கும்.. வாளைத் தீட்டாமல் போர்க்களம் புகுகின்றவர்களுக்கும்.. ஆண்மையே இல்லாதவன் ‘முதலிரவுக்காக’ முந்திக்கொண்டு ஓடுவதற்கும்.. எந்தவொரு வேறுபாடுமே கிடையாது.
தமிழ் மரபியல் என்பதற்கு விளக்கம் கேட்பவர்கள் தொல்காப்பியம் போன்ற நூல்களைப் தேடிப்பிடித்துப் படிப்பது நல்லது. படித்தாலும் புரியவில்லை என்றால் அதற்குப் பொறுப்பு தொல்காப்பியத் தமிழல்ல.. அதனைப் புரிந்துகொள்ள முடியாத மொழியறிவும் மொழிமானமும் கெட்டுப்போன தமிழன்தான்!
(மரபியல் மலரும்...)
ஆங்கிலத்தில் கணிதமும் அறிவியலும் கற்பிக்கும் திட்டம் படுதோல்வி அடைந்துள்ளதை ஒப்புக்கொண்ட அரசாங்கம், அதனை மாற்றியமைக்க இனியும் 2012வரையில் காத்திருக்கத்தான் வேண்டுமா?
முந்தையக் கட்டுரைகள்:-
சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.
(குப்லாய் கான்)
சூவன்லிசௌ துறைமுக நகரில் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் நிறுவப் பெற்றுள்ள சில விக்கிரகம் குப்லாய்கான என்னும் புகழ்ப் பெற்ற சீனச் சக்கரவர்த்தியின் ஆணையால் அமைக்கப் பட்டதாகும். இவருக்குச் சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவரின் உடல் நலத்திற்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டது.