Wednesday, June 25, 2008

தனித்தமிழ் விசைப்பலகை


கணினிக்குள் தமிழ் என்பது ஒரு காலத்தில் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு செயலாக இருந்தது. ஆனால், இன்றோ கணினியிலும் இணையத்திலும் ஆங்கிலத்திற்கு இணையாக அனைத்துப் பணிகளையும் செய்யக்கூடிய அளவுக்குத் தமிழ் முன்னேறியுள்ளது.

கணினி மென்பொருள் உலகிலும் இணையத்திலும் தனக்கென தனியாக ஒரு தொழிநுட்பத்தையே உருவாக்கிக்கொண்டு உலகையே வலம் வந்துகொண்டிருக்கிறது தமிழ்மொழி. நிகழ்கால நூற்றாண்டில் தமிழ் அடைந்திருக்கும் இந்த மாபெரும் வெற்றிக்கு வித்திட்ட கணித்தமிழ் வல்லுநர்களை தமிழ்க்கூறும் நல்லுலகம் கைகூப்பித் தொழுதல் வேண்டும்.

கணித்தமிழ் உலகில் ஆகக் கடைசியாக நிகழ்ந்துள்ள சாதனையொன்று உலகத் தமிழரையே வியக்கச் செய்துள்ளது. குறிப்பாக, தனித்தமிழ்ப் பற்றாளர்களை மனங்குளிர வைத்துள்ளது.

ஆம்! கணினியில் தட்டச்சு செய்யும்போது கிரந்த எழுத்துகள் அறவே தலைக்காட்டாமல் இருக்க புதியதாக ஒரு விசைப்பலகைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:- (ரவி வலைப்பதிவிலிருந்து...)

*********************************************************
ஸ, ஷ, ஜ, ஹ, க்ஷ, ஸ்ரீ போன்ற கிரந்தம் உள்ளிட்ட தமிழ் அல்லாத பிற எழுத்துகள் நீங்கிய எழுத்து முறையைத் தனித்தமிழ் எனலாம்.

ஒருங்குறியில் அமைந்த பாமினி, அஞ்சல், தமிழ்99 விசைப்பலகைகளுக்கு NHM Writer ல் பயன்படுத்தக்கூடிய தனித்தமிழ் xml கோப்புகள் செய்து பார்த்தேன். (இதைச் செய்ய NHM Writer Developer Kit உதவியது. இதன் மூலம் இந்த xml கோப்புகளைத் தொகுப்பது, புதிதாக உருவாக்குவது இலகுவாக இருக்கிறது. விரைவில் இதைப் பொதுப் பயன்பாடுக்கு வெளியிடுவார்கள்)

இவற்றை http://ravidreams.net/files/thani-tamil-keyboards.rar என்ற முகவரியில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

தனித்தமிழ் விசைப்பலகையால் என்ன பயன்?

*எனக்கு கிரந்தம் தவிர்த்து தனித்தமிழில் எழுத ஆவல். ஆனால், தட்டச்சு மென்பொருளில் கிரந்தம் இருப்பதால் பழக்கம் காரணமாக அதைப் பயன்படுத்தத் தூண்டுகிறது. இனி தவிர்க்கலாம்.

*தனித்தமிழ் ஆர்வலர்களின் பயன்பாட்டுக்கும், தனித்தமிழ் பரப்பவும் இந்தக் கோப்புகள் உதவலாம்.

*எங்காவது கிரந்தம் தவிர்த்து எழுதினால், ” நீ எப்படி கிரந்தம் தவிர்த்து எழுதலாம்” என்று கேட்கிறார்கள். “ஐயா, அம்மா, என் மொழியிலும் அதை எழுத நான் பயன்படுத்தும் மென்பொருளிலும் கிரந்தம் இல்லை” என்று சொல்வது இலகுவான விடையாக இருக்கும் தமிழில் எழுத மென்பொருள் இல்லையென்று தமிங்கிலத்தில் எழுதுபவர்களை ஏற்றுக் கொள்ளும் போது இதையும் ஏற்றுக் கொள்வார்கள் தானே..!

Thursday, June 19, 2008

தசாவதாரம்:- காட்சிகள் சொல்லும் கருத்துகள்


உலகத் தமிழ்த் திரைப்பட நேயர்களைப் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு உள்ளாக்கி, இப்போது திரைகண்டிருக்கும் ‘தசாவதாரம்’ திரைப்படத்தைப் பற்றி, ஆன்மிக வழிநடக்கும் ஒரு பகுத்தறிவாளனின் பார்வையை இங்கே பதிவு செய்கிறேன்.
அறிவியல் உலகில் 'கேயோசு கோட்பாடு' (Chaos Theory) எனச் சொல்லப்படும் கருத்தியலை விளக்கும் படமாக தசாவதாரம் உள்ளது. தமிழில் இதனை வண்ணத்துப் பூச்சி (Butterfly Effect)விளைவு என்கின்றனர். அதாவது, இப்போது நடக்கின்ற ஒரு பெரிய நிகழ்வுக்கு முன்பு எப்போதோ நடந்த ஒரு சிறிய நிகழ்வுதான் காரணம் என்பதே இந்த “வண்ணத்துப் பூச்சி விளைவு”க்கான விளக்கமாகும். ஒருவேளை இப்போது நடக்கின்ற ஒரு நிகழ்வுக்குத் தொடர்பாக முன்பு நடந்த எந்தவொரு நிகழ்வையும் கண்டுபிடிக்க முடியாமல் போகலாம். ஆனாலும், கண்டிப்பாக நேற்றைய ஏதோவொரு சிறு நிகழ்வுதான் இன்றைய மாபெரும் நிகழ்வுக்கு வித்தாக அமைந்திருக்கும் என இன்றைய அறிவியல் உறுதியாக நம்புகிறது. இதனையேதான், ஆன்மிகத்தில் பிறவி(விதி)ப்பயன் என்கிறோம்.

இந்தத் தெளிவோடு, தசாவதாரத்திற்கு வருவோம். 12ஆம் நூற்றாண்டில் பெருமாள் சிலை கடலில் வீசப்பட்ட நிகழ்வுக்கும் 21ஆம் நூற்றாண்டில் சுனாமி பேரலை ஏற்படும் நிகழ்வுக்கும் தொடர்பு இருக்கிறதா? என்று கேட்டால், நிச்சயமாக தொடர்பு உள்ளது என்பதே விடையாகும். இதனைக் கடவுள் நம்பிக்கையாளர்கள் நம்புகிறார்களோ தெரியாது. ஆனால், அறிவியல் உலகம் முழுமையாக நம்புகிறது.

பெருமாள் சிலை கடலில் வீசப்பட்ட நிகழ்வுக்கும் சுனாமி பேரலை ஏற்படும் நிகழ்வுக்கும் தொடர்பு உள்ளதை ஆன்மிக உலகம் ஏன் ஏற்க மறுக்கிறது? காரணம், அந்தத் தொடர்பு அறிவுக்கு எட்டாத அளவுக்கு உள்ளது. ஆயினும், அறிவியல் உலகம் ஏன் ஏற்றுக்கொள்கிறது? காரணம், அந்தத் தொடர்பானது அறிவுக்கு எட்டுகின்ற அளவுக்கு உள்ளது. ஆயினும், அந்தத் தொடர்பானது கோவையாக விளக்கிச் சொல்லமுடியாத அளவுக்கு ஒழுங்கற்று இருக்கிறது.

இப்படியேதான், நம் கண்முன்னே நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் கடந்த காலத்தின் நிகழ்வொன்று காரணமாக உள்ளது. அதற்கான, சரியான காரண காரியத்தைச் சான்றுகளோடு விளக்கிச் சொல்லவும் முடியாது என்பதை ஆன்மிக, அறிவியல் பார்வையோடு கூறும் படம்தான் தசாவதாரக் கதை. இதனை விளக்கத்தான், படத்தின் தொடக்கத்திலும் பின்னர் மீண்டும் இறிதியிலும் சிறகடித்துப் பறக்கும் வண்ணத்துப் பூச்சி காட்டப்படுகிறது. இப்படியாக, புரிந்துகொள்ள சிரமமாக இருக்கின்ற ஆன்மிக, அறிவியல் கோட்பாட்டை விளக்கும் வகையில் தசாவதாரக் காட்சிகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. இவை, ஒரு புறம் இருக்க, இதனையும் தாண்டி மற்றொரு கோணத்தில் என்னுடைய பார்வையைத் திருப்பிச் சிந்தித்ததன் விளைவுதான் தொடர்ந்து நீங்கள் படிக்கப்போகும் செய்திகள்.

கடவுள் சத்தி வாய்த்தவர்; கடவுள்தான் அனைத்தையும் இயக்குகிறார்; கடவுளை யாரும் அழித்திட முடியாது; கடவுள் நின்று கொள்ளும்; கடவுளை நம்பினோர் கைவிடப்படார்; இறுதியில், நன்மைகளைக் கொடுக்க இறைவன் சில சிறிய சோதனைகளை ஏற்படுத்துவார்..! படத்தைப் பார்த்து முடிக்கும் தருவாயில் இப்படிப்பட்ட எண்ணங்கள்தாம் முதலில் அனைவருக்கும் ஏற்படுகிறது.

ஆனால், மேலே சொன்ன அத்தனை ஆன்மிகக் கருத்துகளும் படத்தில் வெளிப்படையாகத் தெரிபவை மட்டுமே! இதற்கும் அப்பால், மிகப் புரட்சிகரமான பகுத்தறிவுச் சிந்தனைகள் இப்படத்தில் சொல்லப்பட்டுள்ளதாக நினைக்கிறேன். சுருக்கமாகச் சொன்னால், இப்படம் ஆன்மிகப் பூச்சுப்(முலாம்) பூசிய ‘பக்கா’ பகுத்தறிவுப் படம் எனலாம்.

என்னுடைய பார்வையில், தசாவதாரம் சொல்லவரும் முகமைக்கருத்து கடவுளும் உயிர்க்கொல்லும் கிருமியும் ஒன்றுதான். இவை இரண்டுமே மனிதக்குலத்தை அழித்துவிடும் ஆற்றல் கொண்டவை. ஆகவே, இவை இரண்டையும் அழித்திட வேண்டும். இதில் குறைபேறு(துரதிர்ஷ்டம்) என்னவென்றால், எப்படிபட்ட சத்திவாய்ந்த கிருமியைக்கூட அழித்துவிடலாம். ஆனால், கடவுளை அழிக்க முடியாது. எது எப்படி இருந்தாலும், இயற்கை என்று ஒன்று உண்டு. அது தன்னுடைய வேலையை எந்தவித விருப்பு வெறுப்பு இல்லாமல் மிக மிக நீதியாகச் செய்துவருகிறது. அந்த இயற்கை தனக்கு உடன்பாடாகச் செயல்படும்போது மனிதன் “கடவுள் உண்டு” அல்லது “கடவுள் அருள்கிறார்” என்கிறான்; இயற்கை தனக்கு எதிர்மறையாகச் செயல்படும்போது மாந்தன் “கடவுள் இல்லை” அல்லது “கடவுள் தண்டிக்கிறார்” என்கிறான். ஆகவே, மாயையாகிய கடவுள் சிந்தனையை விட்டுவிட்டு இயற்கையோடும் மனித நேயத்தோடும் மக்கள் வாழ முற்படவேண்டும். அப்போதுதான் உலகம் நல்வாழ்வுக்கு உரிய இடமாக இருக்கும்.

என்னுடைய இந்தப் பார்வை, பலருக்குக் குழப்பத்தை ஏற்படுத்தலாம். அவ்வாறு குழம்புகின்றவர்களுக்கு சான்றுகளும் ஆதாரங்களும் காட்டி விளக்கவேண்டியது என்னுடைய கடமையாகும். ஆகவே, என்னுடைய பார்வைக்கான சான்றுகள் இதோ:-


1. படத்தின் முதல் காட்சியிலேயே, சைவம் - வைணவம் ஆகிய இருபெரும் சயங்களுக்கு இடையில் ஏற்படும் போராட்டம் காட்டப்படுகிறது. சிவன் - திருமால் ஆகிய இரு கடவுளர்களில் எந்த கடவுள் பெரியவர் என்ற போராட்டத்தில் மனித இனம் போராடி மடிந்துபோகிறது. கடவுள் நம்பிக்கையால் அழிவுகள் ஏற்படுவது மிகப் பழங்காலத்திலேயே தொடங்கிவிட்டது என்ற கருத்தைப் பறைசாற்றுகிறது முதல் காட்சி.

2. இரண்டாவது காட்சியில், அறிவியலாளர் கமல் கண்டுபிடிக்கும் உயிரியல் அழிவியை(கிருமி) இனிப்பு(சாக்லேட்டு) என நம்பி தின்றுவிடும் ஒரு குரங்கு எவ்வாறு துடிதுடித்துச் சாகிறது என்று காட்டப்படுகிறது. முதலாவது, காட்சியில் கடவுளை ஏற்றுக்கொண்டதால் பத்தன் இறக்கிறான். அடுத்தக் காட்சியில், கிருமியை உட்கொண்டதால் குரங்கு இறக்கிறது. “கடவுள்” என்ற நம்பிக்கையால் அழிவு ஏற்படும் எனச் சொல்லப்பட்ட அதே கருத்து, இப்போது கிருமியின் வழியாக மேலும் விளக்கப்படுகிறது.

3. அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட உயிரியல் அழிவி, பிறகு இந்தியாவுக்குள் நுழைந்து, மூதாட்டி கமலின் கைக்குப் போய் பிறகு திருமால் சிலைக்குள் புகுந்துகொண்டு சுற்றிவருகிறது. அந்தப் பெருமாள் சிலைக்காக நடிகை அசின் காடுமேடு எல்லாம் ஓடி உயிரைப் பணயம் வைத்துத் துரத்துகிறார். இப்படியேதான், கொலைவெறி பிடித்த வெள்ளைக்கார கமலும் கிருமிக்காக உயிரைக்கொடுத்து போராடுகிறார். இந்தத் துரத்தலிலும் போராட்டத்திலும் படுபயங்கரச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. முன்பின் சிந்திக்காமல் கடவுளை(கிருமி) நம்பி ஓடுபவர்கள் பெரும் சிக்கல்களில் மாட்டிக்கொள்கிறார்கள் என்பதே மேலே சொன்ன அத்தனைக் காட்சிகளும் உணர்த்தும் கருத்துகளாகும்.

4. இறுதிக் காட்சியில், கிருமியைக் கொல்ல சுனாமி பேரலை எழுந்துவருகிறது. கிருமியோடு சேர்த்து ஆயிரமாயிரம் மக்களையும் சுனாமி அழித்துப்போகிறது. அந்தச் சுனாமியால், 12ஆம் நூற்றாண்டில் கடலில் வீசப்பட்ட திருமாள் சிலை மீண்டும் கரைகாண்கிறது. எவராலும் அழிக்க முடியாத கிருமியைக்கூட அழித்துவிடலாம். ஆனால், கடவுளை அழிக்க முடியாது. கிருமியால் வந்த ஆபத்து முடிந்துவிட்டது. ஆனால், கடவுளால் இன்னும் ஆபத்துகள் தொடரவுள்ளன என்ற கருத்தை இக்காட்சிகள் சொல்கின்றன.

5. கரை ஒதுங்கும் சிலையருகில் பேசப்படும் "கடவுள் இல்லை என்று நான் சொல்லவில்லை; கடவுள் இருந்தால் நல்லாயிருக்கும் என்றுதான் சொல்கிறேன்" என்ற கமலின் உரையாடல் எண்ணிப்பார்க்க வேண்டிய ஒன்று. "கடவுள் இல்லை என்பதும்", "கடவுள் இருந்தால் நல்லாயிருக்கும்" என்பதும் ஒரே பொருளைத்தான் குறிக்கின்றன. இந்தக் கருத்தை வலியுறுத்தும் வகையில் இன்னும் சில காட்சிகளில், கடவுள் உண்டா? இல்லையா? எனும் கேள்வியைப் படம் பார்ப்பவர் சிந்தனைக்கே விட்டுள்ளனர்.

6. பெருமாள் ஊர்வலத்தில், மல்லிகா செராவத்து கோவிந்து கமலைக் கொல்ல பாய்ந்தோடும் போது கமலைக் காத்தது கடவுளா? யானையா?

7. புலனாய்வு அதிகாரி கமலின் கட்டளைக்கு உட்பட்டு பள்ளிவாசளுக்குள் இருந்த மக்கள் சுனாமியிலிருந்து உயிர்ப்பிழைத்துக் கொள்கின்றனர். இதற்குக் காரணம் கடவுளா? புலனாய்வு அதிகாரியா?

8. அதேபோல், தலித் கமலிடமிருந்து சிலுவையைப் பரிசாகப் பெறும் சிறுவன் பிழைத்துக் கொள்கிறான். அவனைப் தப்பிக்கக் காரணம் கடவுளா? பூவராகனா?

9. பாடகராக வரும் சர்தார் கமலுக்குத் தொண்டையில் புற்றுநோய். ஒரு காட்சியில், தன்னுடைய நோய் தீர அவர் கடவுளிடம் மன்றாடுகிறார். இறுதியில், அவரைக் கொல்லும் நோக்கத்தில் கொலைவெறியன் கமல் துப்பாக்கியால் சுடுகின்றான். ஆனால், அந்தத் துப்பாக்கிக் குண்டு புற்றுநோய்கண்ட இடத்தில் பாய்ந்ததால் சர்தார் கமல் உயிர் பிழைத்துக் கொள்கிறார். இதற்குக் காரணம் கடவுளா? கொலைவெறியனா?

10. ஆழிப்பேரலை சுனாமி உருவாகிக் கிருமியை அழிக்கிறது. இதற்குக் காரணம் கடவுளா? வண்ணத்துப் பூச்சி விளைவுக் கோட்பாடா?

11. சுனாமி காட்சியும் சுனாமிக்கு இடையில் ஒரு வண்ணத்துப்பூச்சி சிறகடித்துப் பறக்கும் காட்சியும் இயற்கையின் பேராற்றலை உணர்த்துவனவாக உள்ளன. அதாவது, இயற்கை எப்போதும் விருப்பு வெறுப்பு இல்லாத ஒரே நிலையில் இருந்துவருகிறது. இயற்கை எல்லாருக்கும் பொதுவாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற கருத்தைச் சுனாமியால் கொடியவர்களோடு சேர்ந்து நல்லவர்களும் இறந்துபோகும் காட்சி விளக்குகிறது.

12. இறுதிச் சண்டைக் காட்சியில், சுனாமி வரப்போவதை முன்னறிந்து வானத்தில் பறவைகள் கூட்டமாக பறந்துபோகின்றன. உலகில், விலங்குகள்கூட இயற்கையின் நிகழ்வுகளைப் புரிந்து நடந்துகொள்கின்றன. ஆனால், ஆறரிவு மனிதனோ உலகியல் தேவையை மட்டுமே முன்படுத்தி வாழ்வதால் இயற்கையின் நிகழ்வுகளை அறியமுடியாமல் இருக்கிறான். பேராசையாலும் பகையுணர்ச்சியாலும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு சாகிறான். ஒரு உயிரை அழிப்பதற்காக நாடுவிட்டு நாடு செல்கிறான்; கண்டம் விட்டு கண்டம் போகிறான்; ஒருநாட்டிலிருந்து (சப்பான்) நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு (இந்தியா) வந்து வேறொரு நாட்டினனை (ஆங்கிலேயன்) கொல்லுவும் துடிக்கிறான்.

13. இப்படி, கொலையுணர்ச்சி கொண்டவர்கள்கூட கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்ற கருத்தையும் இறுதிக் காட்சியில் சப்பான் நாட்டுக் கராத்தே வீரன் கமல் கடலை வணங்கும் காட்சியில் காட்டப்படுகிறது.

14. முன்பின் அறிந்திராத பூவராகன் கமலைத் தன்னுடைய மகன் என்று நம்பி மூதாட்டி கமல் கதறி அழும் காட்சி; தன்னுடைய பகைவனின் குழந்தையாக இருந்தபோதிலும் அந்தச் சிறுவனின் உயிரைக் காப்பாற்றி பூவராகன் கமல் தன்னுயிரை விடுகின்ற காட்சி; அன்பிற்குரிய மனைவிக்காகப் பாடகர் சர்தார் கமல் தான் உயிராக மதிக்கும் இசையை அல்லது பாடுவதை விட்டுவிட துணியும் காட்சி; மனிதக்குலத்தை அழிக்கக்கூடிய உயிரியல் கிருமியை அறிவியலான் கமல் அழித்துவிட துடிக்கும் காட்சி ஆகிய காட்சிகள்வழி மனிதநேயத்தின் மாண்பு சொல்லப்படுகிறது; அன்புணர்ச்சியின் அருமை காட்டப்படுகிறது. மொழி, இனம், சமயம், நாடு என அனைத்தையும் கடந்து நிற்பது அன்பு ஒன்றே என வலியுறுத்தப்படுகிறது.

ஆத்திகம் பேசும் அடியாருக்குச் சிவமே அன்பாகும்!
நாத்திகம் பேசும் நல்லவருக்கு அன்பே சிவமாகும்!

அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு (தமிழ்மறை அதி:8 குறள்:72)

இறுதியாக, இந்தக் கட்டுரையைப் படிக்கும் அன்பர்கள் தங்களின் மறுமொழிகளை மறவாமல் தெரிவிக்க வேண்டுகிறேன்.

Tuesday, June 10, 2008

உலகின் முதல் தாய்மொழி தமிழ் ! -பாவாணர் நிறுவிய உண்மை


தமிழ்மொழி, இந்திய நடுவண் அரசால் 'செம்மொழி 'என 17-09-2004இல் அறிவிக்கப் பட்டது. இந்திய அரசின் இவ்வறிவிப்பிற்கு நெடுங்காலம் முன்னரே, மொழியறிஞர்கள், தமிழை இயற்கைமொழி, முதன்மொழி, உயர்தனிச் செம்மொழி எனப் பலவாறு பாராட்டி உரைத்துள்ளனர்.


இன்றைக்கு இந்தியா என்றழைக்கப்படும் பண்டை நாவலந்தீவு முழுவதிலும் மக்கள் தமிழ்மொழியே பேசினர். ஆரியர் வருகைக்குப் பின், பல்வேறு சூழ்ச்சி கரவுச் செயல்களால் தமிழ் தாழ்வுறுத்தப்பட்டுக் குலைந் துலைந்து நிலையிழந் திழிந்தது.தமிழருள்ளும் தன்மானமும் தாய்மொழிக் காப்புணர்வும் மிக்க சிலர் தாய்மொழி மீடசிக்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். அவர்களின் முயற்சிகளுக்குத் தம் அறிவழுத்தம் சான்ற ஆக்கமான அறிவு வெளிப்பாடு களால் பெரும் வலிவைச் சேர்த்தவர், பாவாணர் எனப் பரவலாகப் பலராலும் அழைக்கப்படும் தேவநேயப் பாவாணர் ஆவார். அஃகி அகன்ற தம் ஆய்வறிவால், மொழியாய்வில் மாபெரும் விழிப்புணர்வை உண்டாக்கிய பெருமை அவருக்கே உரியதாகும்.


பாவாணரின் தலைசிறந்த மாணாக்கரும் தமிழின விடுதலைப் பாவலரும் தென்மொழி', 'தமிழ்ச்சிட்டு', 'தமிழ்நிலம்' ஆகிய மூன்று தூயதமிழ் இதழ்களின் ஆசிரியருமான பாவலரேறு பெருஞ்சித்திரனார், பாவாணரைப் பற்றி எழுதுகையில், “இவர் வாயினின்று சரமாரியாக வந்துவிழும் தனித்தமிழ் ஆராய்ச்சிக் கருத்துக்களை இதுவரை எந்த அறிஞரும் தமிழ்மொழிக்கு வழங்கிவிட வில்லை. தமிழ்த் துறைக்கு அவர் தொண்டு புதியது; தமிழர்க்கு அவர் கருத்துக்கள் மயக்கறுப்பன; மேனாட்டார்க்கு அவர் நூல்கள் வியப்பளிப்பன. அவர் எடுத்துக்கொண்ட முயற்சி அரியது. தொல்காப்பியர் காலத்திற்குப் பின், தமிழ் தன்னை நிலைப் படுத்திக் கொள்ளும் ஒட்டுமொத்த முயற்சிக்குப் 'பாவாணர்' என்றே பெயரிடலாம்" என அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார்."


பாவாணர் கண்டுகாட்டிய உண்மைகளில் மிக முகாமையானது, 'தமிழே உலகின் முதல் தாய்மொழி' என்பதாகும். மொழியியல் அடிப்படையில், வேர்ச்சொல் ஆய்வுகளின் வழி இந்தக் கருத்தைப் பாவாணர் நிறுவியுள்ளார். இந்தக் கருத்து எந்த அளவுக்கு உண்மை! இந்தக் கருத்து ஏற்கத்தக்கதா?


Thursday, June 05, 2008

யாரை, எப்போது புகழலாம்! (தமிழமுது-2)



ஒருத்தரைப் புகழ்வதற்குக் கூட நேரம், காலம் இருக்கிறதா என்ன? கட்டாயம் இருக்கிறது என்கிறார் ஔவையார்.




நேசனைக் காணாவிடத்தில் நெஞ்சாரவே துதித்தல்
ஆசானை எவ்விடத்தும்
அப்படியே வாச மனையாளைப் பஞ்சனையில்
மைந்தர் தம்மை நெஞ்சில்
வினையாளை வேலை முடிவில்! - ஔவையார்

விளக்கம்:- நண்பனைப் புகழ வேண்டுமானால் அவனைக் காணாதபோது மனமாரப் புகழ வேண்டுமாம்; ஆசிரியர் என்றால் அவரை நேரிலும், மறைவிலும் எப்போதும் துதிக்கலாம்;மனைவியைப் பஞ்சனையில் புகழ வேண்டுமாம்; பெற்ற பிள்ளைகளைப் புகழ்வது மனதுக்குள் தானாம்; வேலைக்காரர்களை, அவர்களது வேலைகளை முடித்த பிறகுதான் புகழவேண்டுமாம்.


நன்றி: தமிழோடு..

அமுது ஊறும்...

Wednesday, June 04, 2008

சித்த மருத்துவம் தமிழ் மருத்துவம்


சித்தர் என்ற சொல்லுக்குச் சித்தமானவர்கள் என்றும் பொருள் உண்டு. அவர்கள் அறிவியலை ஞானமாக்கியவர்கள். அவர்கள் மனித வாழ்க்கைக்குச் சித்தமானதைக் கண்டு சொன்னார்கள். உணவை உண்பதில் மருத்துவம் சார்ந்த நெறிமுறைகளை ஏற்படுத்தினார்கள். சுகவாழ்வுக்காக அறிவியல்ரீதியான சில வழக்கங் களை ஏற்படுத்தினார்கள்.


அவ்வாறு வந்தது தான் மனிதனின் தலைமுடி அளவு குறைவாய் இருத்தல் என்பது ஆரோக்கியமானது என்பது அவர்களின் கண்டுபிடிப்பு. மேலைநாடுகளில் பெரும்பாலான ஆண்கள் தலையில் அதிக முடியையும் பெரிய மீசையையும் வைப்பதே இல்லை.

ஆடவர்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறையாக வந்திருக்கிறது என்பது இன்று பலருக்குத் தெரியாது. ஆடவர்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந் நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது. பிறகு அக்கயிறு வெள்ளிக்கொடியாக மாறியது. இன்றைக்கு அநாகரீகம் எனக் கருதி அரைஞாண்கயிறும் கட்டுவதும் குறைந்து விட்டது.

பெண்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே இந்நோய் வரும் என்பதால் அவர்கள் அரைஞாண் கயிறு கட்டுவதில்லை.தாய்ப்பால் குழந்தைகளுக்கு மிக அவசியம் எனக் கண்டவர்கள் பழந்தமிழர்கள். தாய்ப்பாலைத் தவிர வேறு எந்தப் பாலுமே அதற்கு ஈடாகாது. இன்றைக்கு மேல்நாடுகளில் தாய்ப்பால் குந்தைகளுக்குக் கொடுக்கும்படி வலியுறுத்தி வருகின்றார்கள். ஆடும், மாடும், நாயும் தாய்ப் பாலைத் தம் குட்டிகளுக்குக் கொடுக்கிறபோது மனிதர் மட்டும் ஏன் மாற்றுப்பால், மாட்டுப்பால் தேடுகின்றனர்.

குழந்தை பிறந்ததும் இயற்கையாகவே தாயின் மார்பில் பால் சுரக்கும். அது குழந்தை குடிக்கத்தான். அதனைக் கொடுக்காமல் விடுவது நாகரீகம் என்றும் மேனி அழகுக்கு நல்லது என்றும் நினைக்கின்றனர் சிலர். ஆனால் இவ்வாறு பெற்ற குழந்தைக்குப் பால் கொடுக்காமல் விடுவதால் மார்பகப் புற்றுநோயே வருகிறதாம்.

கர்ப்பம் தரிக்காமல் இருக்க இயற்கைக்கு எதிராக ஊசி போட்டுக் கொள்கிறார்கள். மாத்திரை சாப்பிடுகிறார்கள். இவற்றால் உடலில் பக்க விளைவுகள் ஏற்படும். ஆனால் இந்த உடலே கர்ப்பம் தரிக்காமல் இருக்க இயற்கையான முறையில் சில வழிகளைச் சொல்லியிருக்கிறது.

வாரத்தில் ஒருநாள் மாதத்தில் பலநாள் பட்டினி(சில நோயாளிகள் தவிர்ந்த)யாய் இருப்பது உடலுக்கு நல்லது என்பது பழந்தமிழன் மருத்துவம். பட்டினி இருப்பதால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற முடிகிறது. நோய் எதிர்ப்பாற்றலை மிகுதிப்படுத்தலாம். நோய்க் கிருமிகள் பரவாமல் தடுக்கலாம். உடலில் உள்ள மோசமான கிருமிகளை அழிக்கலாம் என்பது ஒரு நம்பிக்கை.

இவற்றை நனைவில் கொண்டுதான் தவஞானிகள் உண்ணாவிரதத்தையும் பேசா விரதத்தையும் ஒருநாள் (வாரம் ஒரு முறை) பின்பற்றினர். அதிகாலைத் துயில் எழுதல் உடல் நலத்திற்கு நல்லது. நீண்ட வயது வாழ்ந்தவர்கள் பெரும்பாலானவர்கள் அதிகாலை எழுபவர்களாகத்தான் இருப்பார்கள். அதிகாலையில் காற்று தூய்மையாக இருக்கும். சுத்தமான பிராணவாயு தெருக்களில் அப்போது கிடைக்கும்.

குறிப்பாக மார்கழி, தை மாதங்களில் மிக நல்ல தரமான பிராண வாயு கிடைக்கும். இது பூமி சுழற்சியினால் ஏற்படும் செயல். எனவேதான் இதனை சுவாசிக்கும் பொருட்டு ஆண்கள் மார்கழி பஜனைக்குப் போக வைக்கப்பட்டார்கள். பெண்களை வீட்டு வாசலில் கோலம் போட வைத்தார்கள். கோலம் போடுவது பண்பாட்டு மரபு. அதே நேரத்தில் நம் கண்ணுக்குத் தெரியாத சிறிய உயினங்களுக்கு உணவுக் கொடை இடுவதே முக்கியமானது.

ஆனால் இன்று தானிய மாவைத் தவிர்த்து வெள்ளைக்கல்லை அரைத்து மாவாக்கிக் கோலம் போடுகிறார் கள். இதனால் எறும்புகள் ஏமாந்தது நமக்குத் தெரியுமா என்ன?

அதே நேரத்தில் இந்த வெள்ளைக் கல் மாவு காற்றிலே கலந்து மனிதர்களின் மூச்சிலே இணைந்து நலத்திற்கு கேட்டை விளைவிக்கும். எத்தனை பேர் இதனை உணர்ந்தோம்?. நம்மை அறியாமலே நம் தெருக்களில் வளரும் வேப்பிலை மரம் செய்யும் நன்மை தெரியுமா? அது காற்றைத் தூய்மைப் படுத்துகிறது. நிழல் தருகிறது. தொற்று நோய்களைத் தடுக்க உதவுகிறது. அம்மை நோய் கண்டவர்களுக்கு வேப்பிலைப் படுக்கை சுகமானது. வயிற்றுப் புண், குஷ்டம், சர்க்கரை நோய்களுக்கு அதன் இலைகள் அருமருந்து.

எனவே தான் தமிழர்களோடு வேப்பமரம் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது.வில்வ இலையில் மருத்துவம் இருக்கிறது. உடலில் உள்ள ஐம்பூதங்களைச் சமநிலைப்படுத்துவது அதன் தீர்த்தம். எனவேதான் சில கோயில்களில் வில்வ இலைத் தீர்த்தம் வழங்கப்படுகிறது. வாழைப்பழம் புத்திசாலிகள் சாப்பிடும் பழம். ஏழைகளின் ஆப்பிள். உண்பவருக்குப் பல நன்மைகள் இப் பழத்தால் கிடைக்கின்றன. இது பழந்தமிழன் பண்பாட்டுப் பழமாகவும் இருக்கிறது.

அதே போன்ற அந்தப் பழம் தரும் வாழைமரம் தமிழர்களின் பண்பாட்டு மரமாகயிருக்கிறது.அதன் இலையில் உண்பது சுவைக்கு மட்டுமல்ல நலத்திற்கும் உதவுகிறது. சுற்றுப்புறச் சூழலுக்கும் நண்பனாக இருக்கிறது. தொடர்ந்து வாழை இலையில் உண்பவர்களின் கண்களுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும். அதன் தண்டுகள் சிறுநீர்க்கல் அடைப்புகளை நீக்கும். எனவே தான் மருந்தாகப் பயன்படுகிற மரங்களைப் பழந்தமிழர் வீட்டுத் தோட்டத்துக்குள் கொண்டு வந்தனர். தமிழன் வீட்டுத் தோட்டத்து மரங்கள், செடிகள், கொடிகள் உணவிற்கும் மருந்திற்கும் பயன்படுகின்றன.

ஆனால் இன்றைய மேல்நாட்டு நிாககத்தில் வெறும் அழகுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்ட மரம், செடி, கொடிகளே வீட்டுத் தோட்டத்தில் இருக் கின்றன. வீட்டுத் தோட்டத்தில் கறிவேப்பிலை இருந்தால் சாம்பாருக்கு உதவும். துளசிச் செடியின் இலைகள் வாயில் போட்டு மெல்ல உதவும். இஞ்சிச் செடியில் கிடைக்கும் இஞ்சி செரிமானத்திற்கு உதவும். மஞ்சள் செடியின் மஞ்சள் பூசிக் குளிக்க உதவும். மஞ்சள் சிறந்த ஒரு கிருமி நாசினி. ஆகவேதான் மஞ்சள் தூளைத் தண்ணீல் கரைத்து வீட்டு வாசலில் தெளிப்பார்கள். கிராமத்து திருவிழாக்களில் மஞ்சள் நீராட்டுதல் ஒரு அர்த்தத்தோடு வந்ததுதான். வீட்டுத் தோட்டத்தில் நிற்கும் முருங்கைக்கீரை ஆண்மையைப் பெருக்கும். கீழாநெல்லி மஞ்சள் காமாலை நோய்க்கு அருமருந்தாகும். அந்த மருந்து ஆங்கில மருந்தைவிட பலனை அள்ளித் தரவல்லது. அதன் சக்தி உணர்ந்த மேல்நாட்டு விஞ்ஞானிகள் கீழாநெல்லியை மாத்திரையில் கொண்டு வந்துள்ளனர். இது தமிழர் மருத்துவத்திற்குக் கிடைத்த அங்கீகாரமாகும்.

தமிழர் மருத்துவமாகிய சித்த மருத்துவம் 2,50,000 மூலிகை களைக் கொண்டு மருத்துவம் பேசுகிறது. இவற்றை நாம், ஆங்கில மருந்து என்பனவற்றை மட்டும் நம்பிக்கொண்டு புரிந்து கொள்ளாதது பெரிய தவறு. சித்த மருத்துவம் பக்க விளைவு அல்லது பின் விளைவு இல்லாத மருத்துவம். இந்த நாட்டின் இயற்கைச் சூழலுக்கேற்ப தட்ப- வெப்பநிலைகளுக்கேற்ப, கால மாற்றங்களுக்கேற்ப இயற்கையாகக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்துகளே அவைகள்.

அதே நேரத்தில் இயற்கை விதிகளுக்குட்பட்டு இயற்கை நெறியோடு உணவினை உண்ணுவதே உடலுக்கு நலம் சேர்க்கும் என்கிறது சித்த மருத்துவம். எனவே தமிழ்ச் சித்தர்களின் சித்த மருத்துவத்தைப் பயன்படுத்தச் சித்தமானால் அது நம்மை நிச்சயம் வாழ வைக்கும்.

  • நன்றி- தென்செய்தி
(பழந்தமிழர் உணவு, உடை, அறிவியல், மருத்துவம், விளையாட்டு முதலான பல்வேறு செய்திகள் குறித்து விரிவாக விளக்கும் நூல் வியக்க வைக்கும் தமிழர் அறிவியல். அந்த நூலிலிருந்து..).
Blog Widget by LinkWithin