Friday, April 27, 2007

சொல் அறிவியல் - Tamil Etimology

பாவாணர் வழியில் மலேசிய மண்ணிலிருந்து..
தமிழ் வேர்ச்சொல் ஆய்வு நூல்கள்
நூலாசிரியர் : தமிழியல் ஆய்வறிஞர் இர.திருச்செல்வம்


 மலேசிய வரலாற்றில் முதன் முறையாக வெளிவரும் வேர்ச்சொல் ஆய்வுநூல்.
 மொழிஞாயிறு பாவாணர் நிறுவிய சொல்லாய்வு வழியில் அமைந்த அரியநூல்.
 தமிழ் மொழியின் ஆழத்தையும் உச்சத்தையும் ஒருசேர விளக்கும் அருமைநூல்.
 தமிழின் தலைமையையும் தகுதியையும் சான்றுகளோடு நிறுவும் அறிவுநூல்.
 தமிழுக்கும் உலக மொழிகளுக்கும் உள்ள உறவுகளைக் காட்டும் உயர்நூல்

தனியொருவராக ‏இருந்து தம் வாழ்நாளில் ஐம்பது ஆண்டுகளை ஈகம்செய்து சொல்லாய்வுத் துறையில் முழுமையாகவும் முறையாகவும் ஈடுபட்டுச் செழிக்கச் செய்த மொழிஞாயிறு பாவாணரிடமிருந்து புறப்பட்ட இர.திருச்செல்வம்(நூலாசிரியர்) என்னும் கதிரவக்கீற்று ‏மலேசிய நாட்டிலும் தமிழ்கூறு நல்லுலகிலும் பெரிதான ஒரு வீச்சை எற்படுத்தக் கதிர்த்துக் காத்திருக்கிறது எ‎ன்ற உண்மைக்கு ‏இந்நூல் நல்லதொரு சான்று.

இந்நூலைப் படித்து முடிக்கி‎ன்ற உள்ளங்களில் தமிழைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும்; தமிழுணர்வு ஏற்படும். தமிழ்மீது இருந்துவந்த தாழ்வுணர்ச்சி மறைந்து நம்பிக்கை ஏற்படும். தமிழ்மீது ஏற்படும் நம்பிக்கை த‎ன்னம்பிக்கையை ஏற்படுத்தும்.

தமிழியல் வாழ்வையும் வளர்ச்சியையும் மட்டுமே இலக்காகக் கொண்டு, எந்தவொரு வணிக நோக்கமும், ஈட்டமும் கருதாமல் தூய்மை எண்ணத்தோடு வெளியிடப்பெற்றுள்ள இந்நூலைப் படித்துப் பயன்பெறுமாறு பிறந்த இனத்தால் அமைந்த உறவால் அன்போடு வேண்டுகிறோம்.

தொடர்புக்கு : தமிழியல் ஆய்வுக் களம்,
No.4, Lorong Bunga Kantan 10,Taman Kerian, 34200 Parit Buntar, Perak, Malaysia.
Tel : 6012-5645171 / 6012-4643401 / 605-7160967

தமிழின் பொருள் - 2

உலக மொழிகளில் எதற்குமே இல்லாத அளவுக்குத் 'தமிழ்' மட்டும் பல்வேறு பொருள்களை உணர்த்தி நிற்கிறது. இக்கட்டுரையின் முதலாம் தொடரில் 'தமிழ்' என்பதற்கான நான்கு பொருள்களை இலக்கியச் சான்றுகளோடு கண்டோம். அதே அணுகுமுறையில் கட்டுரை மேலும் தொடர்கிறது.
5. தமிழ் = இறைமை : திருமந்திரம் தமிழரின் ஒப்பற்ற நூல்களுள் ஒன்று. அதில், "என்னை நன்றாய் இறைவன் படைத்தனன் தன்னை நன்றாய் தமிழ் செய்யுமாறே" என்ற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ளன. இங்கே தமிழ் என்பது கடவுள் தன்மை – இறைமை என்ற பொருளைத் தருகிறது.

6. தமிழ் = சைவ சமயம் : திருஞானசம்பந்தர் நாயன்மார்களில் ஒருவர். சைவ சமயத்திற்குப் புத்துயிர் தந்த மூவரில் ஒருவர். இவர் சமயத்தோடு தமிழையும் வளர்த்தார்; தமிழிசையையும் வளர்த்தார். இவரை "நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்" என்று போற்றினார்கள். இங்கே தமிழ் என்பது 'சைவ சமயம்' என்ற பொருளைக் காட்டி நிற்கின்றது.

7. தமிழ் = படை வீரர் / மறவர் : தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், பாண்டிய பெருமன்னர்களுள் ஒருவன். அவன் தலையாலங்கானம் என்னும் இடத்தில் தன் பகைவர்களுடன் போரிட்டு வெற்றி பெற்றான். அவனைக் குடபுலவியனார் என்ற புலவர் பாடினார். "தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து" என்று அப்புலவர் குறிப்பிடுகிறார். இதில், தமிழ் என்ற சொல் படை வீரர் / மறவர் என்ற பொருளைப் பெறுகின்றது.

8. தமிழ் = நாடு : கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி என்பவன் ஒரு பாண்டிய மன்னன். அவனை ஐயூர் முடவனார் என்ற புலவர் பாடியுள்ளார். "சினப்போர் வழுதி தண்டமிழ் பொதுஎனப் பொறாஅன்" (புறம்:51) என்று மன்னனைப் போற்றினார். "தமிழ் வரம்பறுத்த தண்புனல் நன்னாட்டு" என்று சிலப்பதிகாரப் பாடலொன்று இயம்புகிறது. "தண்டமிழ் வினைஞர்" (மணி:19-109) என்றொரு பாடல் உள்ளது. இங்கெல்லாம் வந்துள்ள தமிழ் என்ற சொல் நாட்டைக் குறிக்கிறது.

9. தமிழ் = வேந்தர் : சேரன் செங்குட்டுவன் காலத்தில் வடநாட்டு அரசர்களான கனக வியசர் தமிழ்நாட்டு வேந்தர்களை இகழ்ந்தனர். "தண்டமிழ் இகழந்த ஆரிய மன்னரின்" (சிலப்:28-153) என்று இதனை இளங்கோவடிகள் தம் நூலில் பதிவு செய்துள்ளார். இத்தொடரில் தமிழ் என்பது வேந்தரைக் குறிக்கின்றது.

10. தமிழ் = தமிழர் - தமிழ்நூல் : தமிழ் என்பது பொதுவாகத் தமிழரையும் தமிழ் நூல்களையும் குறிக்கும். (தமிழ் இலெக்சிகன் 3:1756).

இவ்வாறு தமிழ் என்ற சொல், மொழி, இனிமை, நீர்மை, அகப்பொருள், வீரம், இறைமை, சைவ சமயம், படைவீரர், மறவர், நாடு, வேந்தர், தமிழர், தமிழ்நூல் ஆகிய பல பொருள்களைத் தருகின்றது. உலகில் மொழியைக் குறிக்கும் எந்தச் சொல்லும் இத்துணைப் பொருள்கள் பெற்றிருக்கவில்லை. தமிழுக்கு இருக்கின்ற எண்ணற்ற சிறப்புகளுள் இதுவும் ஒன்றாகும்.
இத்துணைச் சிறப்பு வாய்ந்த மொழியைப் பெறுவதற்குத் தமிழர்கள் தவம் செய்திருக்க வேண்டும். எனவே, தாய் தமிழ்மொழியைப் போற்றி வாழ்வோம்.
மூலம்:தமிழும் தமிழரும்

தமிழின் பொருள் - 1

தற்போது உலகத்தில் 6800 மொழிகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மொழிகளுள் சில தொன்மையானவை. சில புதியவை. சிலவற்றுக்கு இலக்கிய வளம் உண்டு. சிலவற்றுக்கு எழுத்துகூட கிடையாது. சில மொழிகள் நெடுங்காலம் வாழக்கூடிய நலமான நிலையைப் பெற்றுள்ளன. ஒரு சில மொழிகள் அழிவின் விளிம்பில் நிலை தடுமாறிக்கொண்டிருக்கின்றன.

உலக மொழிகள் எதற்கும் இல்லாத தனிச்சிறப்புகள் தமிழ்மொழிக்கு உண்டு. கிரேக்க நாட்டு மொழி கிரேக்கம். இங்கிலாந்து நாட்டின் மொழி இங்கிலீசு(ஆங்கிலம்). கிரேக்கம், இங்கிலீசு என்ற சொற்கள் மொழியை மட்டுமே சுட்டிக் காட்டுகின்றன. ஆனால் தமிழ் என்ற சொல், மொழி என்பதோடு சேர்த்துப் பதினொரு பொருளைத் தருகிறது. இப்படிப்பட்ட சிறப்பு உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லவே இல்லை.

1. தமிழ் = இனிமை : சீவகசிந்தாமணி ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று. இதில் "தமிழ் தழீஇய சாயலவர்" என்ற தொடர் வருகிறது. இதற்கு இனிமை தழுவிய சாயலை உடையவர் என்று பொருள். இங்கே தமிழ் என்பது இனிமை என்ற பொருள் தருகிறது. "வண்டு தமிழ்ப் பாட்டிசைக்கும் தாமரையே" என்ற கம்பராமாயணப் பாட்டின் தொடரிலும் 'தமிழ்' இனிமை என்ற பொருளில் வந்துள்ளது.

2. தமிழ் = நீர்மை : "இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்" என்று பிங்கல நிகண்டு தெளிவாகக் கூறுகிறது. எனவே தமிழுக்கு நீர்மை என்ற பொருள் உள்ளது.

3. தமிழ் = அகப்பொருள் : பிரகந்தன் என்பவன் ஓர் ஆரிய அரசன். அவன் சங்க காலத்தில் வாழ்ந்தவன். அவன் தமிழரின் வாழ்வைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பினான். அவன் கபிலர் என்ற புலவரின் உதவியை நாடினான். அவனுக்காக புலவர் 'குறிஞ்சிப் பாட்டு' என்ற நூலைப் பாடினார். அது தமிழரின் இல்வாழ்வை - அகப்பொருளைப் பற்றிச் சொல்லும் நூல். அதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் "ஆரிய அரசன் பிரகந்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டு" என்று குறித்துள்ளார். இங்குத் தமிழ் என்பதற்கு, 'அகப்பொருள்' என்ற பொருள் அமைகின்றது.

4. தமிழ் = வீரம் : சேரன் செங்குட்டுவன் வடநாட்டின் மீது படையெடுத்துச் சென்றான். கண்ணகி சிலைக்குக் கல் எடுத்து வருவதும் தமிழ் வேந்தர்களை இகழ்ந்து பேசிய ஆரிய அரசர்களைத் தண்டிப்பதும் அவனுடைய நோக்கமாகும். "அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர் ஆங்கெனச் சீற்றம் கொண்டு இச்சேனை செல்வது" என்று அம்மன்னன் அறிவிக்கின்றான். இங்கே தமிழ் என்பது வீரம் என்று பொருள் பெறுகின்றது.
"வடதிசை மருங்கின் மன்னவ ரெல்லாம்
தென்தமிழ் ஆற்றல் காண்குதும் யாமென" என்ற சிலப்பதிகாரத் தொடரிலும் 'தமிழ்' என்பது வீரம் என்னும் பொருளிலேயே ஆளப்பட்டுள்ளது. (தொடரும்..)
Blog Widget by LinkWithin