Wednesday, February 24, 2010

எசுபிஎம்.12: தமிழ் ஆசிரியர்களுக்கு விளக்கக் கூட்டம்


மலேசியக் கல்விச் சான்றிதழ் (எசு.பி.எம்) தேர்வுப் பாடங்கள் தொடர்பில் எழுந்த சிக்கல் என்ன ஆனது? தீர்ந்ததா? இல்லையா? 12 பாடங்களுக்கு உறுதிப்பாடு (அங்கிகாரம்) கிடைத்ததா?

இப்படிப்பட்ட கேள்விகள் இன்னமும் பலருடைய மண்டைக்கு மேலே வட்டமடித்துக்கொண்டு இருக்கின்றன. குறிப்பாக, இவ்வாண்டு தேர்வு எழுதவுள்ள மாணவர்களும் அவர்களுடைய பெற்றோருக்கும்தாம் பெரிய தலைவலி.

எது எப்படி இருப்பினும், மலேசியக் கல்வி அமைச்சு ஓர் உறுதியை எழுத்துப்படியாகத் தம்முடைய சுற்றறிக்கையின் மூலம் அறிவித்துவிட்டது. 13 சனவரி 2010 திகதியிட்ட அந்தச் சுற்றறிக்கை குறிப்பிடும் விவரங்கள் இவைதாம்:-

1.மாணவர்கள் மொத்தமாகப் 12 பாடங்களை எடுக்க முடியும்.

2.மொத்தம் 12 பாடங்களின் தேர்வு அடைவுநிலை சான்றிதழில் குறிக்கப்படும்.

மேலே உள்ள இரண்டு விவரங்கள் தெளிவாக இருக்கின்றன. ஆனால், பலருக்கு இன்னும் தெளிவில்லாத விவரங்கள் அல்லது தெளிவுபடுத்தப்படாத விவரங்கள் இரண்டு உள்ளன.

1.உயர்க்கல்விக் கழகங்களுக்கான விண்ணப்பத்திற்குத் தமிழ்மொழி, தமிழ் இலக்கியப் பாடத்தின் புள்ளிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுமா?

2.அரசாங்கக் கல்விக் கடனுதவி விண்ணப்பத்திற்கு இவ்விரு பாடத்தில் பெறப்படும் புள்ளிகள் ஏற்றுக்கொள்ளப்படுமா?

இந்த இரண்டு ஐயங்களுக்குச் சரியான பதிலை அல்லது விளக்கத்தைச் சொல்ல வேண்டிய பொறுப்பு இரண்டு தரப்புக்கு உள்ளது.

1.உயர்க்கல்வி அமைச்சு (Kementerian Pengajian Tinggi)

2.பொதுச் சேவைத் துறை (Jabatan Perkhidmatan Awam)

இதற்கிடையில், எசு.பி.எம் பாட விவகாரம் தொடர்பில் கோலாலம்பூரில் ஓர் விளக்கக்கூட்டம் நடைபெற இருக்கிறது. மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகம் இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. தமிழ்மொழி, இலக்கியம் கற்பிக்கும் ஆசிரியர்கள் இந்த விளக்கக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள். அதன் விவரம் பின்வருமாறு:-

நாள்:- 26-2-2010 (வெள்ளி)
நேரம்:- மதியம் 2.00 மணிக்கு
இடம்:- தோட்ட மாளிகை, பெட்டாலிங் செயா

மேல்விளக்கம் பெற:- திரு.ந.பச்சைபாலன் (012-6025450)

மனிதவள அமைச்சர் மாண்புமிகு டத்தோ.டாக்டர்.சுப்பிரமணியம் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளார்.

மேலே குறிப்பிட்டதுபோல, இன்னும் விடை கிடைக்காத இரண்டு வினாக்களுக்கு இந்தக் கூட்டத்தில் சரியான தெளிவு கிடைக்கும் எனப் பலரும் எதிர்ப்பார்க்கின்றனர். அதனை அறிவிக்கும் அதிகாரப்படியான பொறுப்பாளர் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அல்லர் எனினும், மக்களுக்குச் சரியான தெளிவை அவர் சொல்லுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் சங்கம் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருப்பதானது அனைவருக்கும் நம்பிக்கை தருவதாக உள்ளது. ஏனெனில், இந்த நாட்டில் எசு.பி.எம் தேர்வில் தமிழ் இலக்கியப் பாடம் இன்றளவும் இருக்கிறது என்றால், அதற்கு முழுமுதற் காரணமே மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் சங்கம்தான்.

இன்னும் சொல்லப்போனால், இப்படி ஒரு பெயரில் இயக்கமாகப் பதிவுபெறும் காலத்திற்கு முன்பாகவே நாடு முழுவதும் உள்ள இடநிலைப்பள்ளி நல்லாசிரியர்கள் சிலர் தன்னார்வ அடிப்படையில் ஆற்றியிருக்கும் பங்கு என்பது காலத்தால் வரலாறாகப் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று.

பல்வேறு சிக்கல்கள், அழுத்தங்கள், இடையூறுகள், தடைகளுக்கு இடையிலும் கடந்த பத்தாண்டுகளாகத் தமிழ் இலக்கியப் பாடத்தின் மீட்சிக்காகவும் எழுச்சிக்காவும் அயராது உழைத்தவர்கள் அவர்கள்.

பத்தாண்டுக்கு முன்னர் முன்னூறு மாணவர்கள் மட்டுமே தமிழ் இலக்கியத்தை தேர்வுக்கு எடுக்கும் பரிதாப நிலைமை சூழ்ந்திருந்தது. எசுபிஎம் தேர்விலிருந்து தமிழ் இலக்கியம் நீக்கப்படும் நெருக்கடியான காலக்கட்டம் அன்று இருந்தது.

ஆனால், அந்த நெருக்கடியிலிருந்து தமிழ் இலக்கியத்தைக் காப்பாற்றி, பின்னர் படிப்படியாகப் பல்வேறு திட்டமிட்ட நடவடிக்கையின் வழியாகக் கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ் இலக்கியம் எடுக்கும் மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்திய பெருமை இந்த நல்லாசிரியர்களையே சாரும். இங்குத் தரப்பட்டுள்ள பட்டியல் மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்ததைக் காட்டுகிறது.

அத்தோடு நின்றுவிடாமல், நாடு முழுவதும் உள்ள இடைநிலைப் பள்ளிகளில் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் மாணவர்கள் தடையின்றி பயிவதற்குத் தேவையான பாடநூல்கள், மேற்கோள் நூல்கள், பயிற்சி நூல்கள், சிப்பங்கள், கையேடுகள், வழிகாட்டிகள், தேர்வுகள் எனப் பல ஏந்துகளை (வசதிகள்) உருவாக்கி தமிழ் இலக்கியக் கல்வியை நிலைப்படுத்திவர்களும் இவர்களே.

மலேசியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இந்த நல்லாசிரியர் பெருமக்கள் கண்டிப்பாக இடம்பெற வேண்டியவர்கள். மலேசியத் தமிழ் இலக்கியத்திற்கு இவர்களுடைய பங்களிப்பு மிகவும் முக்கியமானது.

இப்படியெல்லாம் பாடாற்றியுள்ள அந்த நல்லாசிரியர்கள் இன்று மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகம் என்ற பெயரில் பதிவுபெற்ற இயக்கமாக உருவாகி முன்னெடுக்கும் இந்த அருமை கூட்ட நிகழ்ச்சி நற்பயன்மிக்கதாக அமையட்டும்.

எசுபிஎம் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் இரண்டையும் சூழ்ந்திருக்கும் கருமேகங்கள் இவர்களால் பட்டென அகலட்டும்.

தமிழும் இலக்கியமும் நமது மாணவர் மனங்களில் மீண்டும் இடம்பெற்று செழித்தோங்கட்டும்.

Monday, February 22, 2010

செம்ம ஓட்டு செம்ம ஈட்டு! ராகாவுக்குச் செம்ம பாட்டு!!

“செம்ம ஓட்டு செம்ம ஈட்டு” என்ற புதிய முழக்கத்தோடு பவணிவரும் ராகா வானொலிக்குப் பொதுமக்களிடமிருந்து செம்ம பாட்டு கிடைத்திருக்கிறது.

அந்தச் செம்ம வே(பா)ட்டுகளைப் பார்ப்பதற்கு முன்பதாக, “செம்ம ஓட்டு செம்ம ஈட்டு” என்ற போக்கிரித்தனமான அடைமொழியை ராகா செம்ம வானொலி எங்கிருந்து பொறுக்கி எடுத்தது என்பதைத் தெரிந்துகொள்வோமா?

தமிழ்நாட்டிலிருந்து வருகின்ற புறம்போக்குச் சினிமா சாக்கடையிலிருந்து “செம்ம ஓட்டு” என்ற கண்ணறாவியை, ராகா வானொலி நக்கிக்குடித்து வாந்தியெடுத்திருக்கிறது.

உங்கள் பார்வைக்கு இதோ அந்தச் சினிமா கண்ணறாவி..!!



இப்படியொரு ஆபாசமான பாட்டிலிருந்து திருடிய கொச்சையைத்தான் செம்ம ராகா வானொலியின் அறிவிப்பாளர்கள் ஆணும் பொண்ணுமாக எல்லாரும் மூச்சுக்கு முன்னூறு முறை உச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கொஞ்சம்கூட சமுதாயப் பொறுப்பு இல்லாமல்; கொஞ்சமும் மொழிமானம் இல்லாமல்; கொஞ்சமும் வெட்கம், மானம், சூடு, சுரணை இல்லாமல்; பொதுமக்களின் உணர்வுகளைக் கொஞ்சமும் மதிக்காமல் அந்தச் செம்ம வானொலி இன்னமும் அந்தக் கருமாந்திரத்தைக் கக்கிக்கொண்டிருக்கிறது.

இதனால், தமிழைக் கொச்சைப்படுத்தி சீரழிக்கும் இப்படியொரு நாசகரமான வேலையைச் செய்திருக்கும் தி.எச்.ஆர்.ராகா வானொலிக்குச் செம்ம கண்டனம் குவிந்துகொண்டிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், தமிழ்ப்பற்றுமிக்க இளைஞர்கள் ராகாவின் மொழியழிப்புக் வேலையைப் பற்றி காவல்துறையில் புகார் செய்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகா வானொலிக்கு எதிரான கண்டனங்களையும் புகார் செய்தியையும் கீழே படிக்கவும்.


1.திருத்தமிழில் வந்த கண்டனங்களை இங்கே சொடுக்கிப் படிக்கவும்

2.மலேசியாஇன்றுவில் வந்த கண்டனங்களை இங்கே சொடுக்கிப் படிக்கவும்

3.மக்கள் ஓசை நாளிதழில் வந்த கண்டனங்கள், புகார் செய்தி.




பி.கு:-மேலே உள்ள காணொளியைத் திருத்தமிழில் வெளியிட நேர்ந்தமைக்கு மிகவும் வருந்துகிறேன். சான்று காட்ட வேண்டிய நோக்கத்தில்தான் அக்காணொளி இடம்பெற்றுள்ளதே தவிர, மலிவு விளம்பரம் தேடும் நோக்கம் துளியளவும் கிடையாது என்பதைத் திருத்தமிழ் அன்பர்களுக்குத் தெரிவிக்க விழைகிறேன். -சுப.ந

Thursday, February 18, 2010

கோயில் + கல்வி = நமதிரு கண்கள்


அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னவாயினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்

இது மகாகவி பாரதியின் வாக்கு. பாரதி மட்டுமல்ல, நம்மில் பலருடைய எண்ணமும் அதுவேதான்.

ஏழைகளுக்கு எழுத்தறிவிப்பதே மிகச் சிறந்த பணி என்று பாரதியே சொல்லிவிட்டதால், இனி ஆலயங்களை எழுப்புவதை விட்டுவிட வேண்டும் என்பது இதன் பொருள் அல்ல. மாறாக, கோயில்களில் மட்டுமே நமது முழுக் கவனத்தையும் வைத்துக்கொண்டு இருக்காமல், கல்வி அறிவு புகட்டும் பணிகளிலும் முனைந்து ஈடுபட வேண்டும். அதிலும், நமது ஆலயங்களே இவ்வாறான கல்விப் பணிகளை மேற்கொண்டு செய்வது பன்மடங்கு சிறப்பல்லவா?

இதனைப் பற்றித் தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய காலக்கட்டத்திற்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். அதற்கேற்றாற் போல, கூட்டரசுப் பிரதேசத் துணையமைச்சர் மாண்புமிகு டத்தோ மு.சரவணன் அண்மையில் இதுபற்றிய சிந்தனையைச் சமூகத்தை நோக்கி முன்வைத்திருக்கிறார்.

அந்தச் சிந்தனையை அனைவரோடும் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் அதிலிருந்து ஒரு பகுதியை இங்குத் திருத்தமிழில் பதிவிடுகின்றேன். -சுப.ந
**************************************


ஆலயங்கள் ஆன்மிக வளர்ச்சியில் மட்டும் முனைப்புக் காட்டாமல், மாணவர்களின் அறிவு வளர்ச்சியிலும் கவனம் செலுத்த வேண்டும்.

நாள் தவறாமல் பூசை செய்வதும், ஆண்டு தவறாமல் திருவிழாவினைக் கொண்டாடுவதும், குடமுழுக்கு செய்வதும் ஆலயங்களுக்கு வேண்டப்படுகின்ற திருப்பணிகள் என்றாலும், வளர்ந்து வரும் மாணவர்களிடையே அறிவு வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு படிப்பறிவை வளர்க்க வேண்டும். அதற்கு ஒவ்வோர் ஆலயத்திலும் நூலகம் கட்டாயம் இடம்பெறச் செய்ய வேண்டும்.

அறிவே இன்றைக்கு உலகை ஆள்கிறது. அறிவே இன்று உலகை விட்டு வேற்று உலகம் சென்று உலவும் படியான வாய்ப்பை மனிதனுக்குத் தந்துள்ளது. ஆகவே, அறிவை வளர்த்து வாழ்வை உயர்த்திக்கொள்வதற்கு கற்கத் தகுந்த நூல்களை மாணவர்கள் அதிகமாகக் கற்பதற்கான வாய்ப்பினை ஆலயங்கள் உருவாக்க வேண்டும்.

ஒரு மனிதனின் சிந்தனை வளர்ச்சிக்குத் துணையாக, தூண்டுகோலாக அமைந்திருப்பது நூல் கல்வியே ஆகும். கல்வியே இல்லாத ஒருவனுக்கு நுட்பமான நல்லபல நூல்களில் நுழைந்து பார்க்கும் அறிவு வாய்க்காது. அவன் அதிகமான நூல்களை ஆழமாக கற்கையில்தான் அறிவுபெற வாய்ப்புள்ளது.

இன்று இந்திய இளைஞர்களிடையே சமூகச் சீர்கேடுகள் தலைவிரித்தாடுவதை ஆலயங்கள் திட்டமிட்டு செயல்பட்டிருந்தால் குறைத்திருக்க முடியும். ஆலயங்கள் வழிபாடுகளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. சமூகச் சேவைகளில் நாட்டம் கொள்ளவில்லை. சமூகச் சீர்கேடுகளைத் துடைதொழிக்க முனைப்புக் காட்டவில்லை.

இன்று பொதுமக்கள் கூட்டங்களுக்குச் செல்வதில்லை. ஆலயங்களுக்கு மட்டுமே விரும்பிச் செல்கிறார்கள். ஆகவே, ஆலயங்கள் மாணவர்களின் அறிவு வளர்ச்சியில்; சமூகச் சேவையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். (மக்கள் ஓசை செய்தி 12.2.2010)

**************************************

மாண்புமிகு டத்தோ மு.சரவணன் பேச்சில் உண்மை இல்லாமல் இல்லை. நமது ஆலயங்கள் தொடர்பாக அவர் முன்வைத்துள்ள கருத்துகள் சிந்திக்க வேண்டியன மட்டுமல்ல; நமது ஆலயங்கள் உடனடியாக செய்யத்தக்கனவும் கூட.

ஊருக்கு ஊர், நகரத்திற்கு நகரம், தோட்டத்திற்குத் தோட்டம் என ஆலயங்கள் அமைத்து நமது மரபையும் நமது இருப்பையும் நாம் வெகு சிறப்பாகவே பறைசாற்றி வருகின்றோம்.

ஆனால், கல்வி – அறிவு – விழிப்புணர்வு – சமூகம் - தமிழ்ப்பள்ளி - தமிழ்க்கல்வி என்று வருகின்றபோது பல இடங்களில் நாம் வழுக்கி இருக்கிறோம்; நெடுந்தொலைவுக்கு விலகி இருக்கிறோம் என்பதை அனைவரும் மனம்திறந்து ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

அதற்கான சான்றுகள் சில இதோ உங்கள் பார்வைக்கு...

ஆலயத்தின் தூண்கள் போல கல்வி மாறுவது எப்போது?

உயர்ந்து நிற்கும் கோயிலும் ஒட்டுக் குடித்தனப் பள்ளியும்

கல்விச் சாலைகளும் கோயில்களாக மாறிட வேண்டும்

இரும்புப் பெட்டிக்குள் தமிழ்ப்பள்ளியின் இருப்பிடமா?

கோயில்களுக்கு நம்மவர்கள் கொடுக்கும் மதிப்பு – மரியாதை – முதன்மை – முகன்மைத்தரம் அனைத்தும் கல்விக்குக் கொடுக்கப்படுகிறதா?

ஆலயங்களுக்கு அள்ளிக் கொடுக்கும் நமது மக்கள், அறிவு புகட்டும் தமிழ்ப்பள்ளிகளுக்கு அப்படி கொடுக்கிறார்களா?

வகை வகையாக – புதிது புதிதாக கோயில்களைக் கட்டி நமது சமயப் பாரம்பரியத்தைக் காக்கின்ற நாம், நமது இனவாழ்வின் உயிர்மூச்சாகத் திகழும் தமிழ்க்கல்வியைக் கவனிக்கின்றோமா?

நமது ஆலயங்களும் மக்களும் சமூகத்திற்குச் செய்ய வேண்டிய கல்விக் கடமையைச் சரியாகக் செய்கிறார்களா?

நமது இரண்டு கண்களில் ஒன்று சமயத்திற்கு நிகரானது என்றால், மற்றொன்று கல்விக்கு இணையானது அல்லவா? ஒரு கண்ணில் பாலை ஊற்றிவிட்டு, மறுகண்ணில் சுண்ணாம்பை வைப்பதுபோல நம்முடைய செயல்பாடுகள் அமைந்திருக்கின்றனவே! இது முறைதானா? சரிதானா?

நாடு விடுதலை அடைந்த அரை நூற்றாண்டு காலத்தை ஆலயங்களுக்காகச் செலவிட்டது போதும்...! நமது வாழ்வும் நமது குழந்தைகள் வாழ்வும் வளமாக அமைய, அடுத்த சில ஆண்டுகளையாவது கல்விக்காகச் செலவிடுவோம் வாருங்கள்.

அனைவரும் சிந்திப்போம்! சீர்பெறுவோம்!!

Sunday, February 14, 2010

கொங் சீ ப சாய் - இன்று சீனப் புத்தாண்டு


இன்று சீன நண்பர்களைக் காண நேர்ந்தால், “கொங் சீ ப சாய்” (சீனப் புத்தாண்டு நல்வாழ்த்து) என்று சொல்லலாம். அல்லது “வன் சீ ரூ யீ” (எல்லா வேலையும் நன்றாக நடக்கட்டும்) என்று சொல்லலாம். ஆம்! இன்று சீனப் புத்தாண்டு என்பதால், மேலே சொன்ன இரண்டு தொடர்கள் அதிகமாக உச்சரிக்கப்படும். அடுத்த 15 நாட்களுக்கு சீனர்களிடையே இதே பல்லவிதான் ஒலித்துக்கொண்டிருக்கும்.

சீனப் புத்தாண்டு பற்றி நாம் மேலோட்டமாக அறிந்திருக்கிறோம். சீனர்களைப் போலவே நாமும் கொங் சீ ப சாய்” என்று சொல்லுகிறோம். அவர்களைப் போலவே இப்போது நாமும் ‘அங் பாவ்’ (மொய்ப்பணம்) கொடுக்கிறோம், ஆனால், எத்தனை பேர் சீனப் புத்தாண்டின் மெய்ம்மத்தை (தத்துவம்) அறிந்து வைத்திருக்கிறோம்? அவர்களுடைய மரபுகளையும் நம்பிக்கைகளையும் தெரிந்து வைத்திருக்கிறோம்?

இதைப்பற்றி கொஞ்சம் அலசுவோம், வாருங்கள்.

மதிமான நாள்காட்டியின் (Lunar Calender) அடிப்படையில் சீனப் புத்தாண்டு முடிவுசெய்யப்படுகிறது. கமாரி என்று அழைக்கப்படும் இந்தச் சீன நாள்காட்டி 2600 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த நாள்காட்டி முறையைச் சீனாவில் அறிமுகப்படுத்தியவர் சீ உவாங் தி (Shi Huang Ti) என்பவர்.


இந்த நாள்காட்டி 5 சுற்றுகள் அடங்கிய மொத்தம் 60 ஆண்டுகளைக் கொண்டது (5X12=60). ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு விலங்கின் பெயர் சுட்டப்பட்டுள்ளது. அவை எலி, மாடு, புலி, முயல், சீன நாகம், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, கோழி, நாய், பன்றி ஆகியன. இந்தப் 12உம் மீண்டும் மீண்டும் சுற்றிவந்துகொண்டே இருக்கும். 5 முறை சுற்றியதும் ஒரு முழுமையை அடையும்.

சீனர்கள் ஏன் 12 விலங்குகளின் பெயர்களை ஆண்டின் பெயராகச் சூட்டினர்? அவர்களுடைய தொன்மத்தின்படி (புராணம்) புத்தர் பூமியைவிட்டுப் பிரியும் வேளையில் எல்லா விலங்குகளையும் சந்திக்க அழைத்தாராம். ஆனால், வந்தது என்னவோ இந்தப் 12 விலங்குகள்தானாம். அதனால், அந்த விலங்குகளுக்கு நன்றிக்கடன் பாராட்டும் வகையில் அவை வந்து சேர்ந்த நேரப்படி வரிசைப்படுத்தி ஒவ்வொரு ஆண்டுக்கும் பெயர் சூட்டப்பட்டதாக ஒரு தொன்மம் உண்டு.


புத்தாண்டு பிறப்பானது தங்களின் ஆற்றலைப் புதுப்பிக்கிறது; நம்பிக்கையை அதிகரிக்கிறது; புதிய எதிர்ப்பார்ப்புகளை உண்டாக்குகிறது என்று சீனர்கள் நம்புகிறார்கள். புத்தாண்டு வாழ்க்கையில் பல ஆக்கமான மாற்றங்களை ஏற்படுத்துகிறது என எண்ணுகிறார்கள்.


புத்தாண்டு நாளில் சீனர்கள் தங்கள் வீடுகளைத் தூய்மைப்படுத்தி அலங்காரமும் செய்கின்றனர். சிவப்பு நிறத்திலான ‘தங்லுங்’ (காகிதத்தைக் கொண்டு அழகழகான வடிவத்தில் செய்யப்பட்டு உள்ளே மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கப்படும் ஒருவகை ஒளியணிப் பொருள்) வீட்டின் முன்னால் கட்டப்படும். வீட்டு நுழைவாயிலில் மங்கல வாழ்த்து பொறிக்கப்பட சிவப்புப் பதாகைகள் தொங்கவிடப்படும். இப்படிச் செய்வதால் வீட்டுக்குள் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும் என்பது நம்பிக்கை.

அதேவேளையில், துடைப்பம், குப்பைத்தொட்டி, தூரிகை(Brush) போன்ற பொருள்களை எடுத்து மறைத்து வைத்துவிடுகிறார்கள். ஏனெனில், அன்றைய நாளில் வீடுகூட்டுதல், தூய்மைப்படுத்துதல் முதலான வேலைகளைத் தவிர்க்கிறார்கள். இப்படிச் செய்வதால் விட்டில் உள்ள நற்பேறு (Luck) விலகிப்போய்விடும் என்கிறார்கள்.

புத்தாண்டுக்கு முதல்நாள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுகூடி ‘பெரு விருந்து’ உண்பது முகவும் முக்கியமானதாகும். குடும்ப உறுப்பினர்கள் எங்கு இருந்தாலும் கண்டிப்பாக இந்தப் ‘பெரு விருந்தில்’ வந்து கலந்துகொள்கிறார்கள். இதன்வழியாக அவர்களுடைய குடும்ப உறவுகளை வலுப்படுத்திக்கொள்கிறார்கள்.

மறுநாள் புத்தாண்டு என்பதால் காலையிலேயே எழுந்து விடுகிறார்கள். இவ்வாறு அதிகாலையிலேயே எழுவதை ‘சௌ சூய்’ (Shou sui) என்கிறார்கள். சௌ சூயைக் கடைப்பிடிப்பதால் தங்கள் பெற்றோரின் ஆயுள் கூடும் என்பது சீனர்களின் நம்பிக்கை.

புத்தாண்டின் முதல் நாளில், எல்லாரும் கண்டிப்பாகப் புத்தாடை அணிய வேண்டும். சொர்க்கத்திலிருக்கும் கடவுளர்களைப் பூமிக்கு அழைத்து, அனைத்து நன்மைகளையும் வேண்டிப் பெறுவதற்காக வழிபாடு செய்கிறார்கள். இந்நாளில் அவர்கள் மரக்கறி (சைவ) உணவையே உண்கின்றனர். வீட்டில் உள்ள பெரியோர்களிடத்தில் மன்னிப்பும் ஆசியும் பெற்றுக்கொள்கின்றனர்.


‘அங் பாவ்’ (Ang Pau) அதாவது மொய்ப்பணம் போன்ற அன்பளிப்பு வழங்குவது சீனப் புத்தாண்டு நாளில் நிகழும் ஒரு வழக்கம். திருமணம் முடித்த பெரியவர்கள் கணவன் மனைவியாக சேர்ந்து சிவப்பு நிற உறைக்குள் பனத்தை வைத்துத் இன்னும் திருமணமாகாதவர்களுக்கு வழங்குவார்கள். அப்படி கொடுக்கப்படும் ‘அங் பாவ்’ பணத்தின் தொகை ஒற்றைப்படை எண்ணில் இருத்தல் கூடாது. அது கெடுதியைக் கொடுக்கும். கண்டிப்பாக இரட்டைப் படை எண்ணாக இருக்க வேண்டும். அதிலும் 4 எண் வரக்கூடாது. சீன மொழியில் நான்கு என்பதன் உச்சரிப்பு ‘சாவு’ என்பதுபோல ஒலிப்பதால் அதனைத் தவிர்க்கிறார்கள். 8 எண்ணில் வரும் தொகையைக் கொடுப்பது நல்ல பேறு (Good Luck) என்று கருதுகிறார்கள்.

பட்டாசு வெடிப்பது சீனப் புத்தாண்டின் குறிப்பிடத்தக்க அங்கமாகும். மனிதர்களைப் பிடித்து விழுங்கும் ‘நியன்’(Nian) என்ற ஓர் அரக்கனை விரட்டவே பட்டாசு வெடிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும், கெட்ட சத்திகளை விரட்டியடிக்கும் நோக்கத்திலேயே சீனர்கள் பெரிய அளவில் பட்டாசு கொளுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதற்காகவே, சீனாவில் மணிக்கணக்காக வெடிக்கும் சரவெடிகள் தயாரிக்கப்படுகின்றன. படாசு போலவே சீனநாக நடனமும் சிங்க நடனமும் புத்தாண்டின்போது தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக இருக்கிறது. சீன ஆலயங்களிலும் வீடுகளிலும் இந்த நடனங்கள் படைக்கப்படுகின்றன.

புத்தாண்டின் இரண்டாம் நாளில், மருமகளாக வந்தவர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று தங்களுடைய பெற்றோருக்கும் தங்கள் குடும்பத்தில் இறந்துபோன முன்னோர்களுக்கும் வணக்கம் செய்கின்றனர்.

அதேபோல் மூன்றாம், நான்காம் நாட்களில் மருமகன்களாக வந்தவர்கள் தங்கள் மாமனார் மாமியாருக்கு மரியாதை செய்கின்றனர்.

ஐந்தாம் நாள் மிகவும் குறிப்பிடத்தக்கது. அன்றுதான் செல்வத்தை அள்ளிக்கொடுக்கும் கடவுளை வணங்கும் நாள். அன்று யாரும் எவர் வீட்டுக்கும் செல்லமாட்டார்கள். அப்படி சென்றால் விட்டுக்காரர் விருந்தினர் ஆகிய இருவருக்கும் நல்லதல்ல. ஆகவே, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுகூடி அவரவர் வீட்டில் ‘செல்வக் கடவுளை’ வரவேற்பார்கள்.


ஏழாம் நாளில், சீனர்களில் கண்தோனிசு (Kantonis) பிரிவினர் ‘யீ சாங்’ (Yee Sang) எனும் விருந்தில் கலந்துகொள்கின்றனர். பல வண்ணங்களில் இருக்கும் கீரைவகைகளையும் மீன் இறைச்சியையும் சேர்த்து பெரிய தட்டில் வைப்பார்கள். அதைக் (சீனர்கள் உணவு உண்ணப் பயன்படுத்தும்) குச்சிகளைக்கொண்டு கிளறியும் மேலே உயரமாக தூக்கி மீண்டும் தட்டிலேயே கொட்டியும் மகிழ்வார்கள். இப்படி செய்வதால் அவர்களின் வாழ்நாளில் ஓர் ஆண்டு கூடிவிடும் என்கிறார்கள். மேலும், பணமும் செல்வமும் வந்து கொட்டும் என நம்புகிறார்கள்.

ஒன்பதாம் நாள், சீனர்களில் ஒக்கியன் (Hokkien) பிரிவினருக்கு மிகவும் முக்கியமமன நாளாகும். அதற்கு முதல்நாள் (அதாவது எட்டாம் நாள்) இரவு ‘செட் மாமன்னர்’ (King Jed) என்னும் கடவுளரை வணங்குகிறார்கள். இந்த வழிபாட்டின்போது வீட்டு வாசலில் கரும்பைக் கட்டவேண்டும் என்பது கட்டாயமாகும். காரணம், முந்தைய காலத்தில் இன்னொரு சீனப் பிரிவு மக்கள் தாக்குதல் நடத்தியபோது, ஓக்கியன் இன மக்களை பேரழிவிலிருந்து காப்பாற்றியது கரும்புதானாம்.

சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம் பதினைந்தாம் நாளில் நிறைவு பெறும். இந்நாள் ‘சாப் கோ மே’ (Chap Goh Meh) எனப்படும். அன்று ‘தங்யுவன்’ (Tangyuan) என்ற ஒரு விருந்து நடக்கும். சாப் கோ மே ‘தங்லுங்’ விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. இரவில் வீடுகளில் 'தங்லுங்' மெழுகு ஒளியணிகளைத் தொங்க விடுவார்கள். சிறுவர்கள் 'தங்லுங்' ஏந்தி ஊர்வலமாகச் செல்வார்கள். அதுமட்டுமல்லாமல் அன்றுதான் சீனர்களுக்கான அன்பர்கள் நாளும் (Valentine’s Day) கூட என்பது குறிப்பிடத்தக்கது.
"கொங் சீ ப சாய்"

Thursday, February 11, 2010

செம்ம ஓட்டு; செம்ம ஈட்டு!! தமிழுக்கு வேட்டு!!!


மலேசியாவின் செம்ம தனியார் வானொலி ஒன்று, அண்மையில் செம்ம அடைமொழி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. முன்பு ‘ஆகா சிறந்த இசை’ என்று முழங்கிய அந்தச் செம்ம வானொலி இப்போது புதிதாக ஒரு செம்ம அடைமொழியுடன் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

“செம்ம ஓட்டு(Hottu) செம்ம ஈட்டு(Hittu)” என்பதுதான் அந்தத் தமிழ் வானொலியின் புதிய அடைமொழி. தமிழைக் கெடுத்தது மட்டுமல்லாமல் ஆங்கிலத்தையும் போட்டு செம்ம சொதப்பல் செய்திருக்கும், அந்தச் செம்ம புகழ்பெற்ற வானொலிக்கு எதிராக பினாங்கு பயனீட்டாளர் சங்க அதிகாரி என்.வி.சுப்பாராவ் செம்ம கண்டனம் ஒன்று தெரிவித்துள்ளார்.

அந்தச் செம்ம வானொலியின் செம்ம அறிவிப்பாளர்களுக்கு இதனைச் செம்ம ‘சமர்ப்பணம்’ செய்கிறேன். இதையெல்லாம் அவர்கள் காதுகொடுத்து கேட்கமாட்டார்கள் என்றாலும், செம்ம நேரத்தில் செம்ம கண்டனத்தை சொல்லவேண்டியது நமது செம்ம கடமை என்பதால் செம்ம மெனக்கெட்டு சொல்லிவைக்கிறேன்.

இதனால், அந்தச் செம்ம வானொலிக்காரர்களுக்குச் செம்ம கோபம் வரலாம் என்று யாரும் தயவுசெய்து செம்ம தப்புக்கணக்குப் போட வேண்டாம். இதுவெல்லாம் அவர்களுக்குச் செம்ம புளித்துப் போன கண்டனம்தாம்.

செம்ம காசு கிடைக்கிறது என்பதற்காக அவர்கள் இந்தச் செம்ம அடைமொழியையும் பயன்படுத்துவார்கள் இன்னும் செம்ம கேவலமான வேலைகளையும் துணிந்து செய்வார்கள். -சுப.ந

பினாங்கு பயனீட்டாளர் சங்கக் கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் அறிக்கை


நமது நாட்டின் தனியார் வானொலி நிலையமான டி.எச்.ஆர்.ராகாவின் புதிய அடைமொழி மாற்றப்பட வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஏதோ ஆங்கில வானொலி நிலையத்திற்குச் சூட்ட வேண்டிய அடைமொழியை, தமிழ் வானொலி நிலையத்திற்கு மறந்துபோய் சூட்டிவிடார்களோ என்றுதான் தோன்றுகிறது எனப் பி.ப.சங்க கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.

“செம்ம ஹோட்டு, செம்ம ஹிட்டு” என்ற அடைமொழியை அறிவிப்பாளர்கள் ஒவ்வொரு முறையும் அறிவிக்கும்போது, வெறுப்பும் ஆத்திரமும் சேர்ந்தே வருகிறது என்றார் அவர்.

ஒரு தமிழ் வானொலி நிலையத்திற்கு ஏன் இந்த ஆங்கிலம் கலந்த அடைமொழி என்று அவர் வினா எழுப்பினார். அதுவும் ‘ஹோட்டு’, ‘ஹிட்டு’ என்பது பலதரப்பட்ட பொருளைத் தரக்கூடியதாகும்.

இளைஞர்கள் இதனை உச்சரிக்கத் தொடங்கினால் மோசமான அர்த்தத்தைத் தந்துவிடும்.

தமிழ் வளர்ச்சி பற்றியும், தாய்மொழியைப் பற்றியும் தமிழ் ஆர்வலர்கள் பிரச்சாரம் செய்ட்யுவரும் இவ்வேளையில் டி.எச்.ஆர்.ராகா இப்படி நிமிடத்திற்கு நிமிடம் “செம்ம ஹோட்டு, செம்ம ஹிட்டு” என்று தமிழை வளர்க்கும் பணிக்குப் புறம்பாகச் செயல்படுவது நல்லது அல்ல. டி.எச்.ஆர்.ராகா சமுதாயப் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று சுப்பாராவ் வலியுறுத்தினார்.

ஆகவே. டி.எச்.ஆர் ராகா உடனடியாக இந்த அடைமொழியை மாற்றியமைக்க ஆவன செய்ய வேண்டும். தமிழ்மொழி அமைப்புகள் இந்த அடைமொழிக்கு எதிராகக் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் பி.ப.சங்க அதிகாரி என்.வி.சுப்பாராவ் கேட்டுக்கொண்டார்.

Saturday, February 06, 2010

உங்கள் குரல்: தமிழ் வளர்க்கும் தரமான இதழ்

மலேசியாவில் இன்று வார மாத இதழ்கள் காளான்காய் வளர்ந்திருக்கின்றன. அவற்றுள் பெரும்பாலானவை திரைபடக் கவர்ச்சியைப் பரிமாறும் ‘கவுச்சி’ ஏடுகளாகவே உள்ளன.
இன்று வெளிவரும் எந்த இதழுக்கும் மொழி, இலக்கணம், இலக்கியம், மரபு, பண்பாடு பற்றியெல்லாம் கொஞ்சமும் அக்கறை கிடையாது. இன்றைய இதழ்களின் முக்கிய இலக்கே காசு பண்ணுவதுதான் - பணம் சம்பாதிப்பது தான். அதற்காக, மக்கள் விரும்புகிறார்கள் என்று வாசகர் மீது பழியைப் போட்டுவிட்டு கண்ட கழிசடைகளையும் வெளியிடுகிறார்கள்.

இவற்றுக்கு நடுவில், தமிழ்நலச் சிந்தனையோடு – தமிழ்க்காப்பு உணர்வோடு – இலக்கிய நயத்தோடு – இலக்கணச் செப்பத்தோடு – தமிழ்க்கல்வி நலத்தோடு ஓர் இதழ் வெளிவந்துகொண்டிருக்கிறது.

பெரிய அளவில் எந்த அறிமுகமும் இல்லாமல் ஆனால், தரமிக்க வாசகர்கள், தமிழ்ப் பற்றாளர்கள், நல்லாசிரியர்கள், நன்மாணாக்கர் ஆகியோரின் ஆதரவோடு கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக இவ்விதழ் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.

அதுதான் உங்கள் குரல் மாத இதழ்.

மலேசியாவின் மூத்த செய்தியாளரும்; மூத்த மரபுக் கவிஞரும்; இலக்கியப் பொழிவாளரும்; இலக்கண அறிஞரும்; தொல்காப்பிய ஆய்வாளருமாகிய நல்லார்க்கினியர் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது அவர்கள் இவ்விதழின் ஆசிரியராக இருந்து வருகின்றார்.

மலேசியாவில் கொஞ்சம் கொஞ்சமாக வீழ்ச்சியை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் தமிழ்மொழி – தமிழ் இலக்கியம், இலக்கணம் – மரபுக் கவிதை ஆகியவற்றை காத்து நிற்கவும் கட்டி எழுப்பவும் ‘உங்கள் குரல்’ அயராது பாடாற்றி வருகின்றது.

யுபிஎசார், பிஎமார், எசுபிஎம், எசுதிபிஎம் ஆகிய முகாமையான தேர்வுகளுக்கான தமிழ்மொழிப் பாட வழிகாட்டிகள், வினாவிடை அணுகுமுறைகள், மாதிரி வினாக்கள், பயிற்சிகள் முதலானவையும் இவ்விதழில் இடம்பெறுகின்றன. தேர்வுக் கலைத்திட்டத்தைப் பின்பற்றி தேர்ந்த ஆசிரியர்களால் எழுதப்படும் இவை ஒவ்வொரு மாதமும் இதழில் இடம்பெறுகின்றன.

இதற்காகவே, நாடு முழுவதும் உள்ள உணர்வுள்ளம் கொண்ட நல்லாசிரியர்கள் இந்த இதழை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி கற்கச் செய்கின்றனர். அவ்வாசிரியர்களும் அவர்களிடம் பயிலும் மாணவர்களுமே இவ்விதழுக்கு முதுகெலும்பாக இருக்கின்றனர்.

தவிர, மரபுக் கவிதை இதுதான் என்று காட்டுவதற்கும்; மரபுக் கவிதையை இப்படித்தான் எழுதவேண்டும் என்று எளிமையாகக் கற்பிப்பதற்கும்; மரபுக் கவிதையின் மாண்பைக் காக்கவும்; மரபுக் கவிதை இலக்கியத்தை வளர்த்தெடுக்கவும் இந்த நாட்டில் பெரும் பாடாற்றும் ஒரே இதழ் இந்த உங்கள் குரல்தான்.

தமிழ் இலக்கணம் தொடர்பாகத் தொல்காப்பியத்தின் அடிப்படையில் மிக எளிமையாகவும் விளக்கமாகவும் இதழாசிரியர் ‘தொல்காப்பிய மரபு’ என்னும் தொடர் கட்டுரைய எழுதி வருகின்றார்.

தமிழ் இலக்கணம் கடினம், கரடு முரடாக இருக்கிறது, பண்டித நடை புரியவில்லை, தமிழ் இலக்கணம் மிகவும் சிக்கலானது முதலான வறட்டு எண்ணங்களை அடித்து நொறுக்கி, இலக்கணத்தைகூட மிகச் சுவையாக, சுகமாக எடுத்துக்கூறுகிறது ‘தொல்காப்பியத் தேன்’ தொடர்.

‘திண்ணைப்பள்ளி’ என்ற பகுதியில் வாசகர்களின் ஐயங்களுக்கு இதழாசிரியர் மிகவும் தெளிவான விளக்கங்களைக் கொடுத்து வருகிறார். மொழியியல், இலக்கணம், இலக்கியம், யாப்பு தொடர்பான வினாக்களுக்கு அளிக்கப்படும் பதில்கள் ஒவ்வொன்றும் அரியவை மட்டுமல்ல; பாதுகாத்து வைத்துப் படிக்கத்தக்கவை எனலாம்.

‘யார்க்கும் எளிதாகும் வெண்பா’ எனும் பகுதி யாப்பிலக்கணம் பயின்றுகொள்வதற்கு அருமையான களம். இப்பகுதியைத் தொடர்ந்து படித்தும் உங்கள் குரலில் எழுதியும் மரபுக் கவிஞர்களாக ஆனவர்கள் நாட்டில் பலர்

இத்தனைக்கும் மேலாக, இதழாசிரியர் கவிஞர் ஐயா எழுதும் முகப்புக் கவிதைக்காகவே ஒவ்வொரு மாதமும் இவ்விதழை வாங்குபவர்கள் இருக்கிறார்கள். இனிய நடையில், எளிய சொற்களால் கட்டப்படும் அவருடைய பாட்டுகள் ஒவ்வொன்றும் அள்ளிப்பருக வேண்டிய அமுதச்சுவை.

மேலும், இந்த இதழின் ஒவ்வொரு பக்கத்திலும் இடம்பெறும் அடிக்குறிப்புகள் மிகவும் சிறப்பானவை. இந்த அடிக்குறிப்பை மட்டுமே படித்தாலும் ஒவ்வொரு மாதமும் ஒரு இலக்கண விதியை தெள்ளத் தெளிவாகக் கற்றுக்கொள்ளலாம்.

இவை போக, பயனான கட்டுரைகள், செய்திகள், சிறுகதை என பல சுவையான அங்கங்களும் இடம்பெறுகின்றன.

மொத்தத்தில், உங்கள் குரல் இதழ் தமிழைத் தமிழாகப் படிக்கவும் எழுதவும் வழிகாட்டுகிறது. தமிழின் மீது உயர்ந்த மதிப்பையும் நம்பிக்கையையும் எற்படுத்துகிறது; தமிழ் இலக்கண இலக்கிய ஆளுமையை வலுப்படுத்துகிறது; மொழி அறிவையும் உனர்வையும் வளர்த்தெடுக்கிறது.

ஆகவே, தமிழ் ஆர்வலர்கள், தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள், தமிழ்ப்பணிக்கு அமர்த்தப்பெற்றுள்ள அதிகாரிகள், உயர்க்கல்விக் கழகங்கள், இடைநிலைப் பள்ளிகள், தமிழ்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் நல்லதமிழ் அறிய விழையும் அனைவரும் படிக்க வேண்டிய இதழ் ‘உங்கள் குரல்’.

இந்த இதழ் எங்கு கிடைக்கும் என்று தேடிக்கொண்டிராமல், உடனடியாக ஆண்டுக் கட்டணம் செலுத்திவிட்டால் போதும். இதழ் உங்கள் இல்லம் தேடி அஞ்சலில் வந்துவிடும்.

ஆண்டுக் கட்டணம்: RM36.00 [Ungalkural Enterprise எனும் பெயரில் காசோலை (Cheque) அல்லது பணவிடை(Money Order) அனுப்பலாம்.]

உங்கள் குரல் முகவரி: Ungalkural Enterprise, Room 2, 1st Floor, 22 China Street, 10200 Pulau Pinang.

தொ.பேசி / தொ.படி: 04-2615290

Thursday, February 04, 2010

தமிழைச் சீரழிக்கும் எழுத்துச் சீர்திருத்தம்


தமிழ் எழுத்துச் சீர்மை என்ற பெயரில் தமிழ் எழுத்துகளை மாற்றி அமைப்பதற்கான முயற்சி மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. எதிர்வரும் சூன் திங்களில் தமிழகத்தில் நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டில் அதற்கான அதிகாரப்படியான அறிவிப்பு செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.




இப்புதிய எழுத்துச் சீர்மையால் பல்வேறு நன்மைகள் விளையும் எனவும், தமிழுக்கு ஆக்கங்கள் ஏற்படும் எனவும் போலியான பரப்புரைகளும் புனைந்துரைகளும் தமிழக ஏடுகளில் - தமிழகத் தொலைக்காட்சிகளில் - இணைய ஊடகத்தில் பரப்படுகின்றன.

இதற்கிடையில், இந்த எழுத்துச் சீர்மை தேவையற்றது - இதனால் தமிழுக்கு யாதொரு பயனும் இல்லை - இது தமிழுக்கு மாபெரும் ஊறு விளைவிக்கும் என்ற எதிர்ப்புக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கிவிட்டன - சீரழிவிலிருந்து தமிழைக் காக்கும் குரல்கள் உலகம் முழுவதும் கேட்கத் தொடங்கிவிட்டன.


இதன் தொடர்பில், தமிழகத்தின் அறிஞரும் - மறைமலையடிகள், பாவாணர், பெருஞ்சித்திரனார், வ.சுப.மாணிக்கம் வழியில் தமிழ் பயின்றவரும் - பாரதிதாசன் பரம்பரை என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவரும் - முன்னணி வலைப்பதிவரும் ஆகிய முனைவர் ஐயா.மு.இளங்கோவனார் தம்முடைய கருத்தை வெளியிட்டு இருக்கிறார். அதில் ஒருபகுதி பின்வருமாறு:-

//சில அறிஞர்கள் இ,ஈ,உ,ஊ எழுத்துகளில் மாற்றம் வேண்டும் எனவும் அவ்வாறு மாற்றினால் 4 x 18 = 72 எழுத்துகளில் சீர்மை காணப்படும் எனவும் வாதிடுகின்றனர். ஆனால், இதைச் சீர்மை என ஏற்றுக்கொள்ள முடியாது.

இது முற்றாக மாற்றம் ஆகும். இந்த இடத்தில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். நாம் எழுதும் சொற்களில் இவ்வகை எழுத்துகள்தான் (அதாவது கி,கீ,மு,மூ) அதிகம் புழங்குகின்றன. இவ்வாறு வரும் 72 எழுத்துகளைப் புதிய குறியீடுகளால் எழுதத் தொடங்கினால் கற்றவர்களால் தமிழைப் படிப்பதே இயலாததாகிவிடும். புதியவர்கள் எப்படித் தமிழ் கற்பார்கள்?

ஆகவே, சீர்மைக்கும் மாற்றத்திற்கும் அறிஞர்கள் வேறுபாடு உணர வேண்டும்.

இவ்வாறு முப்பதாண்டுக் காலம் எழுத்துத்திருத்தம் வலியுறுத்திவரும் அறிஞர்கள் எதிர்வரும் செம்மொழி மாநாட்டில் தங்கள் விருப்பத்தை நடைமுறைப்படுத்தி வெற்றி பெறவேண்டும் என்று நினைக்கின்றனர்.

இவர்களை உலகெங்கும் பரவி வாழும் தமிழறிஞர்களில் பெரும் பிரிவினர் இணையம் வழியாகக் கண்டிக்கத் தொடங்கியுள்ளனர். // விரிவாகப் படிக்க இங்கு சொடுக்கவும்.

எழுத்துச் சீர்மை குறித்து திருத்தமிழ் வலைப்பதில் வந்த செய்திகள் இவை:-

Tuesday, February 02, 2010

இந்தியர்கள் பிச்சை எடுக்க! சீனர்கள் உடலை விற்க!

“இந்தியர்கள் இந்நாட்டிற்குப் பிச்சைக்காரர்களாக வந்தனர். சீனர்கள், குறிப்பாக பெண்கள், உடலை விற்க வந்தனர்”.

“குடியேறிகளாக இங்கு வந்த இந்தியர்களும் சீனர்களும் இப்போது இந்நாட்டில் நல்வாழ்க்கையை அனுபவிக்கின்றனர்”.

"எசுபிஎம் தேர்வுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 10 பாட வரம்பை 12 ஆக உயர்த்த வேண்டும் என்று இந்தியர்கள் அளவிற்கு மீறி வலியுறுத்துவார்களானால் அவர்களுடைய குடியுரிமை பறிக்கப்படும்".

“பகசா மிலாயு (மலாய்மொழி) அதிகாரத்துவ மொழியாக இருக்கையில் அவர்கள் எப்படி தமிழ்மொழியைப் பற்றி அவ்வளவு பேச முடியும்".

இன்று (2.2.2010) காலையில் மலாக்காவில் நடந்த ஒரே மலேசியா கருத்தரங்கில் பிரதமர் நஜிப்பின் சிறப்பு உதவியாளர் கொட்டிய கொடுஞ்சொற்கள் இவை.


மேலே படத்தில் நடுவில் நிற்கும் நசிர் சாபார் என்பவரின் இந்தப் பேச்சானது மலேசிய இந்தியர்கள், சீனர்களிடையே கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் தேசநிந்தனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. (விரிவாக)

  • செய்தி:-மலேசியாஇன்று

பி.கு:-இனங்களுக்கு இடயிலான நல்லுறவைச் சீர்குலைக்கும் வகையில் பேசிய நசிர் சாபார், பிரதமரின் சிறப்பு உதவியாளர் என்ற பொறுப்பிலிருந்து விலகுவார் என பிரதமர் துறை அலுவலகம் அறிவித்துள்ளது. மேலும் அவர் பேசிய கருத்துகள் மலேசியப் பிரதமரின் நிலைப்பாடு அல்ல எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Monday, February 01, 2010

எசுபிஎம்12: உரிமை இழக்கலாமா? உயிர்த்தமிழ் இறக்கலாமா?


மலேசியக் கல்விச் சான்றிதழ் எனப்படும் எசுபிஎம் தேர்வில் மொத்தம் 12 பாடங்களை மாணவர்கள் எடுக்க முடியும். இத்தகவலை, 13-01-2010 திகதியிட்ட சுற்றறிக்கையின் வழியாக மலேசியக் கல்வி அமைச்சு அதிகாரப்படியாக அறிவித்துவிட்டது.

அந்தச் சுற்றறிக்கையைப் படிக்க சொடுக்கவும்:- http://www.moe.gov.my/upload/galeri_awam/pekeliling/1264067970.pdf

மேலும், மாணவர்கள் எழுதும் 12 பாடங்களின் முடிவும் புள்ளி விவரமும் ஒரே சான்றிதழில் குறிக்கப்படும் எனவும் அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, நமது மாணவர்கள் இனி எந்தவித அச்சமோ அல்லது ஐயமோ இல்லாமல், துணிந்து 12 பாடங்களை எடுக்கலாம் - எடுக்க வேண்டும். எசுபிஎம் தேர்வுக்குப் பதிவு செய்துகொள்ளும் இறுதிநாள் எதிர்வரும் 31-03-2010 ஆகும்.

இதற்கு, பெர்றோர்கள், இடைநிலைப்பள்ளி தமிழாசிரியர்கள், பொது இயக்கங்கள், தமிழ் அமைப்புகள் என அனைத்துத் தரப்பினரும் மெனக்கெட்டு நமது மாணவர்களுக்கு உதவ வேண்டும் – வழிகாட்ட வேண்டும்.

நமது மாணவர்கள் 12 பாடங்களை எடுப்பது எப்பது அவர்களுடைய உரிமையாகும். ஆகவே, அதனைத் தடுக்கவோ தடை போடாவோ யாருக்கும் உரிமையில்லை.

குறிப்பாக, பள்ளி நிருவாகம் அல்லது பள்ளி முதல்வர்கள் பல்வேறு காரணங்களையும் சாக்குப் போக்குகளையும் சொல்லி நமது மாணவர்கள் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் எடுப்பதை தடுத்து நிறுத்த முடியாது.

அப்படியே யாராவது; எந்தப் பள்ளியாவது; எந்த முதல்வராவது; செய்தால் அது சட்டப்படி குற்றமாகும்.

எனவே,

1) பள்ளியில் மாணவர் எண்ணிக்கை போதாது
2) பள்ளி நேரத்தில் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் கற்பிக்க முடியாது
3) பள்ளியில் முழுநேர தமிழ் ஆசிரியர் இல்லை
4) பள்ளியில் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் எடுக்கும் பாடச் சிப்ப முறை (Pakej Sistem) இல்லை


என்பன போன்ற சாக்குப் போக்குகளை இனி எந்தப் பள்ளியும் சொல்ல முடியாது – சொல்லவும் கூடாது.

அப்படியே, நமது மாணவர்கள் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் தேர்வுக்கு எடுப்பதை தடுக்கின்ற பள்ளிகள் இருக்குமானால் உடனடியாக அதுகுறித்து புகார் செய்ய வேண்டும். மாவட்டக் கல்வி அலுவலகம், மாநிலக் கல்வித் திணைக்களம், மலேசியத் தேர்வு வாரியம், மலேசியக் கல்வி அமைச்சு ஆகிய தரப்பினரிடம் இந்தப் புகாரைச் செய்யலாம். ஓவ்வொரு மாநிலக் கல்வித் திணைக்களத்திலும் பணியாற்றும் தமிழ்மொழி உதவி இயக்குநர்களிடம் தாராளமாகப் புகார் கொடுக்கலாம்.

அதற்கு உதவியாக கீழே சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களின் முகவரிகளும் தொலைபேசி தொடர்பு எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

1) மலேசியக் கல்வி அமைச்சு
KEMENTERIAN PELAJARAN MALAYSIA, Blok E8, Kompleks E,Pusat Pentadbiran Kerajaan Persekutuan,62604, PUTRAJAYA, MALAYSIATel : 603-8884 6000

2) மலேசியத் தேர்வு வாரியம் (Lembaga Peperiksaan Malaysia) சொடுக்கவும்

3) மாநிலக் கல்வித் திணைக்களம் (Jabatan Pelajaran Negeri) மாநில வாரியாகச் சொடுக்கவும்:-

அ.பெர்லிசு மாநிலம்
ஆ.கெடா மாநிலம்
இ.பினாங்கு மாநிலம்
ஈ.பேரா மாநிலம்
உ.சிலாங்கூர் மாநிலம்
ஊ.பகாங்கு மாநிலம்
எ.நெகிரி செம்பிலான் மாநிலம்
ஏ.மலாக்கா மாநிலம்
ஐ.சொகூர் மாநிலம்
ஒ.கிளந்தான் மாநிலம்
ஓ.திரங்கானு மாநிலம்
ஔ.கூட்டரசு பிரதேசம்

மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தில் நமக்காக இருக்கின்ற உரிமையை நாம் முழுமையாகப் பயன்கொள்ள வேண்டும். எந்தக் காரணத்திற்காகவும் நமது உரிமைகளை மறந்து வாளாவிருக்கக் கூடாது.

அந்தவகையில், நமது உயிர்த்தமிழைக் காப்பதற்கு நாம் முனைப்பாக இருந்து செயல்பட வேண்டும். நம்மோடு இந்நாட்டில் வாழும் சீனர்கள் எதற்காகவும் எந்தச் சூழலிலும் தங்களின் தாய்மொழியை விட்டுக்கொடுக்காமல் கண்ணும் கருத்துமாக இருந்து காத்து நிற்பதற்கான மூலக்காரணத்தை நம்மவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

நமது மாணவர்களின் நலனுக்காக – நமது தாய்மொழியின் நலனுக்காக – நமது சமுதாயத்தின் நன்மைக்காக – நமது எதிர்காலத் தலைமுறையின் நலனுக்காகத் தமிழ்மொழியைக் கற்போம்; தேர்வில் கட்டாயப் பாடமாகத் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் எடுப்போம்.

சாவிலும் தமிழ்ப்படித்துச் சாக வேண்டும் – என்
சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்

என்ற உணர்வோடு ஒவ்வொரு தமிழ் மாணவரும் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் படிக்க வேண்டும்.

அவ்வாறு, மாணவர்கள் படிப்பதை பெற்றோர்களும் ஆசிரியர்களும் மற்றுள்ள பொது அமைப்புகளும் உறுதிபடுத்த வேண்டும். கூடவே, வேண்டிய உதவிகளையும் ஆதரவுகளையும் உடனடியாகச் செய்ய வேண்டும்.

Blog Widget by LinkWithin