Tuesday, October 25, 2016

பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்


மகாகவி பாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி
அக்தோபர் 20 – 23 வரையில் கெடா, எயிம்சு பல்கலைக்கழகத்தில் பார்புகழ் பாவலர் பாட்டுக்கொரு புலவன் மகாகவி பாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி கலந்துகொண்டார். பாரதியாரின் சரவடியாகிய அவருடைய வருகை மாநாட்டிற்கே கலை கட்டியது; மெருகு கூட்டியது என்றுதான் சொல்ல வேண்டும்.

பாரதியின் பாடலைப் படித்தும் இன்புற்றும் உணர்வு பெற்றும் இருக்கின்ற ஆசிரியர்கள்; வகுப்பறையில் பாரதியின் பாடல்களை அழகழகாகக் கற்பிக்கும் தமிழாசிரியர்கள் இந்த மாநாட்டில் நிரஞ்சன் பாரதியை நேரில் கண்டதும் மகிழ்ச்சியும் குதூகலமும் அடைந்தனர். அவருடைய வருகையும் உரையும் வந்தவர்கள் அனைவருக்கும் புதிய உந்துதலை ஏற்படுத்தியது என்பது மிக வெளிப்படையாகவே தெரிந்தது.
வே.இளஞ்செழியன் நிரஞ்சன் பாரதிக்குச் சிறப்பு செய்கிறார்
நிரஞ்சன் பாரதியோடு பேசவும், கைகுலுக்கவும், தாமி எடுக்கவும் பேராளர்கள் அவரைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டே இருப்பதைக் காண முடிந்தது. நிறைவு விழாவில் உணர்வுகளைத் தொடுகின்ற வகையில் தமிழ்க்கல்வி பற்றியும் மலேசியத் தமிழர்களின் தமிழ்ப்பற்று பற்றியும் அழகாகப் பேசினார் நிரஞ்சன்.

உலகத்தில் பல நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்தாலும் மலேசியத் தமிழர்கள் உள்ளத்தில் தமிழ் என்னும் தீ கொளுந்துவிட்டு எறிவதாகக் குறிப்பிட்ட பொழுதும்; “தாய் தமிழ்நாட்டில் தமிழ் தேய்ந்து போகும் நிலைமையைப் பார்க்கும் பொழுது மனம் சோர்ந்து போனாலும் மலேசியத் தமிழர்களைப் பார்க்கும் பொழுது தமிழை நீங்கள் காப்பாற்றி விடுவீர்கள் என்று புதிய நம்பிக்கை உண்டாகிறது” என்று சொன்ன பொழுதும் மாநாட்டு அரங்கம் கரவொலியால் அதிர்ந்தது.
சுப.நற்குணன், முத்து நெடுமாறன், நிரஞ்சன் பாரதி
மலேசியத் தமிழர்களுக்காக நிரஞ்சன் பாரதி ஓயாத கரவொலிகளுக்கு நடுவில் ஓர் அழகிய கவிதை வாசித்தார்.

லோ லோ லோ
என்று பேசுவோர் பலர் இருக்க
லா லா லா
என்று இசை ததும்ப
பேசுபவர்கள் நீங்கள்;

ஆதலால் உங்களுக்கு
என் வணக்கம் லா
நான் தான் உங்கள்
நிரஞ்சன் லா;

கடாரமே
கடலில் சொலிக்கும் ஆரமே
இராஜேந்திர சோழனின் கண்ணே
தமிழ் பேசும் அழகான பெண்ணே
கீழே குனிந்து கையால் அணைத்து
மனதால் முத்தமிடுகிறேன் உன்னை
ஏற்றுக்கொள்வாய் என்னை;

தாய்த் தமிழகத்தில்
தாய்மொழி தாய்மொழி என்று
தம்பட்டம் அடித்தாலும் அது எங்கள்
வாய்மொழியாக வருவதில்லை;
அப்படியே வந்தாலும் அது
ஆனந்தம் தருவதில்லை;

நாங்கள் “டிஃபன் சாப்டாச்சா” என்கிறோம்
நீங்கள் “பசியாறியாச்சா” என்கிறீர்கள்

தூக்கத்தில் எழுப்பினாலும்
தமிழ்ப் பேசுகிறீர்கள் நீங்கள்
தமிழைத் தூங்க வைத்துவிட்டு
உலவுகிறோம் நாங்கள்;

எதையும் விடாமல்
தமிழ்ப்படுத்தி விடுகிறீர்கள் நீங்கள்;
எப்போதும் விடாமல்
தமிழைப் படுத்துகிறோம் நாங்கள்;

தமிழ் எங்களுக்கு வார்த்தை
தமிழ் உங்களுக்கு வாழ்க்கை;

தாயகத்தில் தமிழ் தளர்கிறதே
என்னும்போது சற்றே வற்றிப்போகிறேன் – எனினும்
அயலகத்தில் தமிழ் வளர்வதைக் கண்டு
என்னைத் தேற்றிக் கொள்கிறேன் நான்

பலநூறு வருடம் முன்னம்
பலநூறு மைல் தாண்டி
பிழைப்பின் பொருட்டு
மலாயம் வந்தீர்கள்;
கூடவே தமிழையும்
கொணர்ந்து வந்தீர்கள்;

கடல்தாண்டி வந்தாலும்
கடலுக்குள் மூழ்காமல்
உங்களுக்குள் மூழ்கியது தமிழ்;

இங்கு வந்து
ரப்பர் மரங்களை
வெட்டியதாலோ என்னவோ
இழுத்து இழுத்து தமிழைத்
தழைக்க வைத்திருக்கிறீர்கள்;

ரப்பர் மரத்தில் வழியும் பால்
உங்கள் மனதிலும் வழிய
அன்பால் பண்பால்
நினைப்பால் முனைப்பால்
துடிப்பால் உழைப்பால்
ஆண்பால் பெண்பால்
என அனைவரும்
தமிழை நிலைக்கச் செய்தீருக்கிறீர்கள்;

கார்கள் செல்ல மட்டுமா
சாலை போட்டீர்கள்
கல்வி பயிலவும் அல்லவா
சாலை போட்டீர்கள்;

உங்களை உளமாற
வணங்கி மகிழ்கிறேன்
உங்களையே உந்து சக்தியாக
உளத்தில் வரித்துக் கொள்கிறேன்;

இந்த மாநாட்டில்
கன்னித்தமிழையும் கணிப்பொறியையும்
முயங்க வைத்தீர்கள்
முயங்குவதை நேரில் காட்டி
மயங்க வைத்தீர்கள்
எனக்குள் சோர்ந்து
கிடந்த ஏதோ ஒன்றை
இயங்க வைத்தீர்கள்;

இணைப்பு நிசமாக்கம் மூலம்
இலக்கியம் கற்கலாம் என்றீர்கள்
அசைவுருவாக்கம் மூலம்
இலக்கணம் பயிலலாம் என்றீர்கள்;
இதையெல்லாம் கேட்டுக் கேட்டுக்
குதூகளித்தேன் - தமிழ்மேல்
மீண்டும் காதலில் விழுந்தேன்

தன் மாணாக்கனைச்
சேயாகக் கருதி
தாயாக மாறும்
ஆசிரியைகள் பார்த்து
ஆசிரியம் என்னும்
புத்தறம் தோன்றக் கண்டேன்;

உங்களிடம் கொளுந்துவிட்டு எறிகிறது
தமிழ் என்னும் நெருப்பு – அதனை
என் கண்களால் ஒற்றிக்கொள்கிறேன்
அந்த நெருப்பெடுத்து என் மனதைப்
பற்றிக் கொள்கிறேன் – அந்நெருப்பைத்
தாய்த் தமிழகத்திற்கு அணையாமல்
அணைத்துச் செல்வதே என் பொறுப்பு;

அந்த நெருப்பால்
அங்குத் தமிழுக்கு
ஒளியூட்டுவதே உங்களுக்கு
நான் செய்யும் சிறப்பு..!


@சுப.நற்குணன்

பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாடு 2016 சாதித்தது என்ன?




கடந்த அக்தோபர் 20 – 23 வரையில் கெடாவிலுள்ள எயிம்சு பல்கலைகழகத்தில் பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாடு 2016 நடந்து முடிந்தது. மலேசியக் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் துணைக் கல்வி அமைச்சர் மாண்புமிகு டத்தோ பா.கமலநாதன் அவர்கள் முன்னின்று நடத்திய இந்த மாநாடு தொடர்பான சில புள்ளி விவரங்கள் பின்வருமாறு:-


  • மலேசியத் தமிழாசிரியர்கள் 200 பேர் பேராளர்களாகக் கலந்துகொண்டனர்.

  • வெளிநாட்டுப் பேராளர்கள் 50 பேர் கலந்துகொண்டனர்.

  • இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், தாய்லாந்து, மியான்மார், மொரிசியசு, பிரெஞ்சு, அசுத்திரேலியா, அமெரிக்கா முதலான நாடுகளின் பேராளர்கள் கலந்துகொண்டனர்.

  • மொத்தம் 24 தமிழாசிரியர்கள் ஆய்வுக் கட்டுரைகள் படைத்தனர்.

  • பொது அமர்வில் உள்நாட்டு, வெளிநாட்டைச் சேர்ந்த 16 பேர் கட்டுரைகள் படைத்தனர்.

  • கல்வி அமைச்சின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த தமிழ்க்கல்வி அதிகாரிகள் 50 பேர் மாநாட்டில் பங்கேற்றனர்.

  • எயிம்சு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 20 மாணவர்களும் கெடா மாநிலத்தைச் சேர்ந்த 30 ஆசிரியர்களும் தன்னார்வலர்களாக வந்திருந்து மாநாட்டுப் பணிகளுக்கு உதவினர்.


இந்தப் பன்னாட்டு மாநாடு சில வகையில் முத்திரைப் பதித்து சிறப்பான ஒரு மாநாடாக அதிக மதிப்பெண்களைப் பெற்றுவிட்டது. அதற்கான கரணியங்களைப் பார்ப்போம்.

1.மலேசிய வரலாற்றிலேயே மலேசியக் கல்வி அமைச்சின் ஆதரவோடும் நிதி உதவியோடும் முதன்முறையாகத் தமிழ்க்கல்வியை முன்படுத்தி தமிழாசிரியர்களுக்காக நடத்தப்பட்ட மாநாடு இது.

2.ஆசிரியர்கள் மட்டுமே கூடிக் களைந்துவிட்டுப் போகாமல் உலக நாடுகளில் தமிழ்க்கல்வி எவ்வாறு இருக்கின்றது; எப்படி கற்பிக்கப்படுகிறது என்றெல்லாம் மலேசியத் தமிழாசிரியர்கள் அறியவேண்டும் என்பதற்காகப் பன்னாடுகளைச் சேர்ந்த தமிழ்க் கல்வியாளர்களையும், முனைவர்கள், பேராசிரியர்கள், அறிஞர்களை அழைத்து அறிவார்ந்த பகிர்வுக்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்த மாநாடு இது.

3.தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள், தேசியப்பள்ளி தமிழாசிரியர்கள், இடைநிலைப் பள்ளி தமிழாசிரியர்கள், ஆசிரியர் கல்விக் கழக விரிவுரைஞர்கள் எனத் தமிழைக் கற்பிக்கும் எல்லாத் தரப்பினரையும் அரவணைத்து ஒரே குடையின் கீழ் தமிழ்க்கல்வி கற்றல் கற்பித்தல் பற்றி விவாதித்த மாநாடு இது.

4.உலக வெல்விளிகளுக்கு (சவால்) இடையில் 21ஆம் நூற்றாண்டில் தமிழ்க்கல்வியை வளர்த்தெடுக்கும் வழிமுறைகளையும், கற்றல் கற்பித்தல் அணுகு முறைகளையும் ஆராய்து தெளிவு பெறுவதற்காக நடத்தப்பட்ட மாநாடு இது.

5.மலேசியத் தமிழ்க்கல்வி வரலாற்றில் முதன் முறையாகக் கல்வி அமைச்சின் தமிழ்க்கல்வி உயர் அதிகாரிகள் அனைவரும் ஒரு செயற்குழுவாக இணைந்து சரியாகத் திட்டமிட்டு நேர்த்தியான முறையில் கல்விசார் நெறிமுறைகளோடு நடத்திய மாநாடு இது.


தொடர்ந்து இந்த மாநாட்டின் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க சிறப்பான சில இடங்களைப் பார்ப்போம்:-

1 இந்த மாநாட்டுக்குரிய இடமாக எயிம்சு பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்டது சாலப் பொருத்தமானது. ஏனெனில், தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் சொந்தமாகப் பல்கலைக்கழகம் கட்டியுள்ள ஒரே நாடு மலேசியா தான். அந்தச் சிறப்பினை ம.இ.கா கட்சியின் முன்னாள் தலைவர் டத்தோ ஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு அவர்கள் ஏற்படுத்திச் சென்றுள்ளார். அந்தப் பல்கலைக்கழகத்தின் தோற்றமும் வளாகமும் மாநாட்டிற்குப் புதுமையான பொழிவைக் கொடுத்தது. மேலும், கெடா என்னும் கடாரம் தமிழ் மன்னனாகிய இராசேந்திர சோழன் தடம் பதித்து ஆட்சி நடத்தி தமிழரின் பெருமையைப் பறைசாற்றிய பூமி; 11ஆம் நூற்றாண்டின் தமிழன் ஆண்ட வரலாற்று மண். அந்த வரலாற்று சிறப்புமிக்க மண்ணில் இந்த 200 ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டை நடத்த வேண்டும் என்பது நமது துணைக் கல்வியமைச்சர் மாண்புமிகு டத்தோ ப.கமலநாதன் அவர்களின் ஆவலும் இதற்கு மற்றொரு கரணியம். மாநாட்டின் இறுதி நாளன்று வெளிநாட்டுப் பேராளர்கள் அனைவரும் அங்குள்ள பூசாங்கு பள்ளத்தாக்கு வரலாற்றுத் தலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

2.   மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 70% ஆசிரியர்கள் 25 - 40 வயதுக்கு உட்பட்ட இளம் ஆசிரியர்கள். கட்டுரைப் படைப்பாளர்களில் 60% இளம் ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 21ஆம் நூற்றாண்டில் தமிழ்க்கல்வி எனும் மாநாட்டின் கருப்பொருளுக்கு ஏற்ற வகையில் இந்த மாநாட்டில் இளம் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது பாராட்டுக்குரிய ஒன்று,

3.   அதே போல் மாநாட்டு ஆய்வடங்கலில் இடம்பெற்றுள்ள ஆய்வுக் கட்டுரைகளும் மாநாட்டின் கருப்பொருளுக்கு ஒட்டியதாகவே இருக்கின்றன. படைக்கப்பட்ட கட்டுரைகள் அனைத்தும் ஆய்வடங்களில் வன்படியாக (Hardcopy) வழங்கப்பட்ட வேளையில் 21ஆம் நூற்றாண்டுத் தரத்திற்கு மென்படியாகத் (Softcopy) தமிழ்க்கல்வி.மலேசியா (tamilkalvi.my) இணையத் தளத்திலும் வழங்கப்பட்டிருப்பது மிகச் சிறந்த பணி.

4.   மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டு அறிஞர்கள் அவர்களுடைய நாட்டைக் காட்டிலும் மலேசியாவில் தமிழ்க்கல்வி மிகச் சிறந்து இருப்பதாகப் புகழாரம் சூட்டினர். குறிப்பாக, மலேசியாவில் பயன்படுத்தப்படும் கலைத்திட்டம், பாடநூல்கள், மதிப்பீட்டு முறைகள், மெய்நிகர் கற்றல் முதலானவை அவர்களைப் பெரிதும் ஈர்த்தன.

5.   மலேசியாவில் சுலுத்தான் இதிரிசு கல்வியியல் பல்கலைக்கழகத்தின் (UPSI) தமிழ் இலக்கியக் கலைத்திட்டம் செருமானிய நாட்டின் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறது. இதன்வழி, மலேசியத் தமிழ்க்கல்வி உலக நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் நிலைக்கு நாம் முன்னேறி இருக்கிறோம் என்று துணைக் கல்வியமைச்சர் தமதுரையில் குறிப்பிட்டபோது கல்வி அமைச்சர் உள்பட மாநாட்டு அரங்கமே கரவொலி எழுப்பி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

6.   மாநாட்டின் அமர்வுகள் அனைத்தும் திட்டமிட்டது போல மிக மிக நேர்த்தியாக நடைபெற்றது அனைவரையும் மகிழச் செய்தது. மாநாட்டு நிரலிகையில் உள்ளபடி குறித்த நேரத்தில் ஒவ்வொரு அமர்வும் சரியாக நடைபெற்றது. அமர்வுகள் அனைத்தும் கொடுக்கப்பட்ட நேரத்தில் துல்லியமாக முடிக்கப்பட்டன. அமர்வின் நெறியாளர்கள் கட்டுரை படைக்கும் நேரத்தை மிகவும் கட்டுப்பாடாக மேலாண்மை செய்தனர்.

7.   தமிழர்களின் உயர்ந்த பண்பாடு விருந்தினரை அன்போடு ஓம்புதல் ஆகும். இந்தப் பண்பாட்டை ஏற்பாட்டுக் குழுவினர் மிக மிகச் சிறப்பாகவே பின்பற்றினார்கள். நல்ல தரமான உணவு வகைகள் அருமையான சூழலில் அன்பாகப் பரிமாறப்பட்டன.

8.   மாநாட்டின் தொடக்கவிழா நிகழ்ச்சி மிகவும் கட்டுக்கோப்பாகவும் மிக மிக நேர்த்தியாகவும் நடந்தது இந்த மாநாட்டின் மற்றொரு சிறப்பு எனலாம். தொடக்க விழா அங்கங்கள் ஒன்றின் பின் ஒன்றாக மிக அழகாக நிகழ்ந்தன. இப்படி நேர்த்தியாக நமது நிகழ்ச்சிகள் நடப்பது மிக அரிதுதான். ஆனால், ஏறக்குறைய இரண்டு மணிநேரம் நீடித்த தொடக்க விழா எவ்வளவு சிறப்பாகவும் பெருமாண்டமாகவும் இருந்தது என்பதை நேரில் கண்டவர்கள் அறிவார்கள்.

9.   தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் காணொலிப் போட்டிகள் நடத்தப்பட்டு தொடக்கவிழா மேடையில் பணத்தொகை பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ்க்கல்வியைக் கருவாக்கி உருவாக்கப்பட்ட காணொலிகள் ஒலிபரப்பப்பட்ட பொழுது நமது தமிழ்ப்பள்ளி மாணவர்களின் திறமைகளைக் காண முடிந்தது.

10. தமிழ்க்கல்வி.மலேசியா (tamilkalvi.my) இணையத்தளம் இந்த மாநாட்டில் அறிமுகமானது தமிழசிரியர்களுக்கு ஒரு வரமே எனலாம். தமிழ் ஆசிரியர்களிடையே அறிவார்ந்த கருத்தாடல்களுக்கும் பகிர்வுகளுக்கும் இத்தளம் பயன்படும். ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வளர்த்தெடுக்கும் வகையில் இந்தத் தளம் உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதன்வழி தமிழ்க்கல்வித் துறையில் மெய்நிகர் கற்றல் சூழல் உருவாகலாம்; இதனால் தமிழ்க்கல்வியில் மேம்பாடுகள் நடக்கலாம்.

11. இந்த மாநாட்டின் இறுதியில் முத்தான 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவை பத்தும் நடைமுறைக்கு ஏற்ற தீர்மானங்களாகவும் தமிழ்க்கல்விக்குச் சில அடிப்படையான வளர்ச்சிகளை உண்டாக்கக் கூடியவையாகவும் இருந்தன. அடுத்த ஓரிரு ஆண்டுகளில் அமுல்படுத்தக்கூடிய சாத்தியத்தைக் கொண்ட தீர்மானங்களே நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


@சுப.நற்குணன்



Friday, October 21, 2016

மலேசிய மண்ணில் தமிழ்க்கல்வியை 200 ஆண்டு வாழ வைத்துள்ளோம்




2016ஆம் ஆண்டு நம் மலேசியத் திருநாட்டில் தமிழ்க்கல்வி தொடக்கப்பட்டு 200 அகவை நிறைவடைகிறது.

கடந்த 200 ஆண்டாக இந்நாட்டில் தமிழ் மொழி, இனம், சமயம், பண்பாடு, கலை, இலக்கியம் ஆகிய அனைத்தும் இடையறாது வாழ்ந்து கொண்டிருப்பதற்கும் வளர்ந்து கொண்டிருப்பதற்கும் தமிழ்க்கல்வியின் பங்களிப்பு மிக மிக உன்னதமானது; உயர்வானது; அளப்பரியது என்றால் அது மிகையாகாது.

மலேசியாவில் 200 ஆண்டு நிறைவை அடையும் தமிழ்க்கல்விக்கு மனமகிழ்ச்சியோடு மகுடம் சூட்டி மாண்புறச் செய்ய வேண்டியது மலேசியத் தமிழரின் கடமை; அதனால் மலேசியத் தமிழருக்குப் பெருமை.

மலேசியாவில் தமிழ்க்கல்விக்கென்று தனி வரலாறு உண்டு. மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளுக்கு நீண்ட நெடிய பாரம்பரியம் உண்டு. மலேசியாவில் தமிழ்க்கல்வி கற்று வாழ்வில் முன்னேறியவர்கள் பற்றி ஆயிரமாயிரம் வெற்றிக் கதைகள் உண்டு.

1816 மலேசியக் கல்வி வரலாற்றில் ஒரு முக்கியமான ஆண்டு. அன்றைய காலத்தில் மலாயாவில் ஆட்சி நடத்திய பிரிட்டிசார் அரசாங்கம் பினாங்கில் ஒரு பள்ளிக்கூடத்தைத் தொடங்கியது.

பினாங்கு பொதுப்பள்ளி அல்லது ஆங்கிலத்தில் Penang Free School என்பதுதான் அந்தப் பள்ளி. ஆங்கிலம் வழி கல்வி கற்க இந்தப் பள்ளி உருவாக்கப்பட்டது. இந்தப் பள்ளியில் தான் முதன்முதலாக, நமது அன்னைமொழியாம் தமிழ்மொழிக்காக ஒரு தமிழ் வகுப்பு தொடங்கப்பட்டது. 21.10.1816 நாளன்று அன்றைய  Penang Free School  பள்ளியின் தலைவராக இருந்த சர் ரெவரண்டு அட்சிங்ஸ் என்பவர் இந்தத் தமிழ் வகுப்பைத் தொடங்கியதாக வரலாறு கூறுகின்றது.

அன்று தொடங்கி இந்த 21.10.2016ஆம் ஆண்டு வரையில் நமது மலேசியத் திருநாட்டில் தமிழ்ப்பள்ளிகள் இயங்கி வருகின்றன; தமிழ்க்கல்வி இடையறாது நடைபெற்று வருகின்றது என்பது மகிழ்ச்சியும் பெருமையும் தருகின்ற செய்தியாகும்.

அன்று பினாங்கில் ஒற்றை வகுப்பறையில் தொடங்கிய தமிழ்க்கல்வி சரியாக 200 ஆண்டுகளைக் கடந்து இன்று அரச வேராக ஆழ ஊன்றி ஆல விழுதுகளாகப் பெருகி 524 பள்ளிகளில் தமிழ்க்கல்வி பயிலப்படுகிறது என்பது நாம் அடைந்திருக்கும் மிகப்பெரிய சாதனை என்று சொன்னால் மிகையாகாது.

தமிழ்க்கல்வியின் சாதனை தமிழ்ப்பள்ளிகளோடு நின்றுவிட்டதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இடைநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, ஆசிரியர் கல்விக்கழகம், பல்கலைக்கழகம் வரையில் தமிழ்க்கல்வியைப் பயிலும் நிலை இன்று கைகூடி உள்ளது.

பாலர் பள்ளித் தொடங்கி முனைவர் பட்டம் வரையில் தமிழ்க்கல்வியைப் படிக்கும் வாய்ப்பையும் உரிமையையும் மலேசியத் தமிழர்களாகிய நாம் பெற்று இருக்கிறோம் என்பதைச் சொல்லும் பொழுதே நாவெல்லாம் இனிக்கிறது; மனமெல்லாம் மணக்கிறது.

இந்தியா, தமிழ்நாட்டு, இலங்கை முதலான தமிழின் தாய்நிலத்திற்கு வெளியே கடல் கடந்த ஒரு நாட்டில் கடந்த 200 ஆண்டுகளாகத் தமிழ்மொழியும் தமிழ்க்கல்வியும் நீடித்து வருவதும் நிலைபெற்று வாழ்வதும் கல்வி மொழியாக விளங்குவதும் போற்றுதலுக்கு உரிய மரபு; கொண்டாடப்பட வேண்டிய மாண்பு என்றால் அது மிகையாகாது.


மலேசியத் தமிழர்கள் வரலாற்றில் தமிழ்ப்பள்ளிகளுக்குத் தனிச்சிறப்பிடம் உண்டு என்றால் மிகையாகாது. பல்லாயிரக்கணக்கில் பட்டதாரிகள், கல்வியாளர்கள், நிபுணர்கள், தொழிலதிபர்கள், வணிகர்கள், விளையாட்டாளர்கள், தலைவர்கள், அரசியல்வாதிகள், அனைத்துலக நிலையிலான சாதனையாளர்கள் என வெற்றியாளர்கள் பலர் தமிழ்ப்பள்ளிகளிலிருந்து உருவாகி வந்திருக்கின்றனர். அன்று தமிழ்நாட்டிலிருந்து ஒப்பந்தத் தொழிலாளர்களாக மலாயாவுக்கு வந்த பலர் இன்று முதலாளிகளாகவும் திறன்மிக்க தொழிலாளர்களாவும் உருவாகுவதற்குத் தமிழ்ப்பள்ளிகள் பங்காற்றியுள்ளன.  அதுமட்டுமல்லாமல் தமிழர்களின் கலை, இலக்கியம், பண்பாட்டு, சமய வளர்ச்சிக்கும் தமிழ்ப்பள்ளிகளின் பங்களிப்பு நிறைவாகவே இருக்கின்றது.

1816 முதல் 2016 வரையில் 200 ஆண்டுகளில் பல்வேறு இடர்கள், நெருக்கடிகள், அரசியல் பூசல்கள், பொருளியல் வெல்விளிகள், சமுதாயச் சிக்கல்கள், சிந்தனைப் போராட்டங்கள், ஏற்றத் தாழ்வுகள் எனப் பற்பல பரிணாமங்களைக் கடந்து மலேசியாவில் தமிழ்க்கல்வி வெற்றிக் கண்டிருக்கும் இந்தத் தருணத்தில், மலேசியத் தமிழர்கள் அனைவரும் பெருமைகொள்ள வேண்டும். அதே வேளையில், மலேசியாவில் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்காகப் பாடுபட்ட அரசியல், சமூக, பொது இயக்க, தோட்டத் தொழிற்சங்க, தன்னார்வ முன்னோடிகளையும் மூத்த தலைவர்களையும் இந்தத் தருணத்தில் நன்றியோடு நினைத்துப் பார்க்கவேண்டும்.

மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடர்ந்து நிலைக்கவும் அதனுடன் தமிழ்மொழி நிலைபெற்று வாழ வேண்டும். இதன்வழி மலேசியத் தமிழர்களின் கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு, வாழ்வியல், விழுமியங்கள் ஆகிய அனைத்தும் காக்கப்பட வேண்டும். அனைத்திற்கும் மேலாக மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்க்கல்வியும் அடுத்துவரும் நூற்றாண்டுகளுக்கு முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். 

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்க்கல்வி!

@சுப.நற்குணன்

Blog Widget by LinkWithin