Thursday, October 21, 2010

மலேசியாவில் தமிழ் அகவை திருத்த மாநாடு

மலேசியத் தமிழர்களாகிய நாங்கள் தமிழ் செம்மொழி மீதிலான எங்கள் கோரிக்கையை இந்திய நடுவண் அரசு, தமிழக அரசு, மலேசியாவில் இந்தியத் தூதரகம், யுனெஸ்கோ ஆகிய அமைப்புகளுக்கு இதன் வழி முன் வைக்கிறோம்.


Saturday, October 09, 2010

தமிழ் அகவைத் திருத்த மாநாடு

தமிழைச் செம்மொழியாக அறிவித்திருக்கும் இந்திய நடுவண் அரசு, தமிழின் தொன்மையை 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மலேசியாவில் ‘செம்மொழி அகவை திருத்த மாநாடு’ நடைபெறவுள்ளது. அது குறித்து நாளிகையில் வெளிவந்த செய்தி இது. -சுப.ந

கோலாலம்பூர் அக்.9
செம்மொழி எனும் தகுதிபெற்ற மொழியாக அறிவிக்கபட்டிருக்கும் தமிழ்மொழிக்கு இந்திய நடுவண் அரசு 1,500 ஆண்டுகள் எனும் வரையறையை, நாடு முழுவதுமுள்ள அரசியல் சாரா இந்திய அமைப்புகள் மறுத்துள்ளன.

அத்துடன், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது தமிழ் என்று அந்த வரையறையில் உடனடியாக திருத்தம் செய்ய வேண்டும் என்றும் அந்த இயக்கங்களின் சார்பில் அமைக்கப்பட்ட ‘செம்மொழி அகவை திருத்தக் குழுவின்’ தலைவர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் இந்திய நடுவண் அரசைக் கேட்டுக்கொண்டார்.

இதன் தொடர்பாக மாநாடு ஒன்று அக்டோபர் 24ஆம் நாளன்று காலை மணி 9:00 முதல் பகல் 1:00 மணி வரைக்கும், கோலாலம்பூர் ஜாலான் ஈப்போ மூன்றரை மைலில் உள்ள முத்தியாரா காம்பிளக்சு மண்டபத்தில் நடைபெறும். தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் இந்த மாநாட்டிற்குத் திரளாக வருகை தந்து தமிழுக்கு உதவும்படி அவர் கேட்டுகொண்டார்.

இதன் தொடர்பில் முனைவர் ஆறு.நாகப்பன் கூறியதாவது:-

கி.மு1,200 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஆரிய வேதங்களில் தூய தமிழ்ச்சொற்கள் உள்ளன.

எகிப்திய மொழி, பாபிலோனிய மொழி, ஏபிரேய மொழி, அரபு மொழிகளில் பழந்தமிழ் சொற்கள் கலந்துள்ளன. இவ்வாறு தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் தமது தமிழ் வரலாறு எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சங்கங்களில் முதற் சங்கம், இடைச் சங்கம் ஆகியன பற்றி அறிவியல் சார்ந்த முடிவுகள் இல்லையென்றாலும், சங்கப்பாடல்கள் கி.மு.500 முதல் கி.மு100 வரையிலானது என்று முனைவர் மு.வரதராசனார் தமிழ் இலக்கிய வரலாறு எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இதனைக் கவனத்தில் கொண்டால், இலக்கியப் பொலிவு நிறைந்த சங்கப் பாடல்களின் அகவை 2,500 ஆண்டுகளைக் கடக்கிறது.

இக்காலத்தில் தொல்காப்பியம் எனும் தெளிந்த தமிழ் இலக்கண நூல் எழுந்துள்ளது. இலக்கணத் தெளிவு அமைவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே மொழி தோன்றி வளர்ந்திருக்க வேண்டும் எனும் மொழியியல் கொள்கையை உளம் கொண்டால், தமிழின் தொன்மை 3,000 ஆண்டுகளுக்கு அப்பாற்பட்டது என்பது அறிவு சார்ந்த முடிவே ஆகும்.

திருவள்ளுவர் ஆண்டினைக் கணக்கிட்ட மறைமலை அடிகள் தலைமையிலான குழு திருவள்ளுவர் காலம் இன்றைக்கு 2041 என்று குறித்துள்ளனர்.

உலகச் செம்மொழிகள் பற்றிய ஆய்வினை மேற்கொண்ட யுனேசுகோ நிறுவனம் தமிழ் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட செம்மொழி என்று ஒப்புக்கொண்டுள்ளது.

தமிழின் அகவையை 1,500 ஆண்டுகள் என்று குறித்திருக்கும் இந்திய நடுவண் அரசின் முடிவால், யுனேசுகோ நிறுவனம் அதன் உலகச் செம்மொழி வரிசையிலிருந்து தமிழை நீக்கி விடுவதோடு தமிழுக்கு வழங்கிய தகுதிப்பாடுகளை மீட்டுக்கொள்ளவும் முடிவு செய்யலாம்.

இந்தியச் செம்மொழிகள் நடுவண் அரசின் கல்வி அமைச்சக நிதி உதவிகளைப் பெறும் நிலையில், தமிழ் மட்டும் பண்பாட்டு அமைச்சின் கீழ் வைக்கப்பட்டுள்ளதால் தமிழ் மிகச் சிறிய னிதி ஒதுக்கீட்டையே பெறுகிறது.

உதாரணத்திற்கு, சமஸ்கிருதம் 1,400 கோடி ரூபாய் னிதி ஒதுக்கீட்டைப் பெற்றிருக்கிறது. ஆனால், தமிழ் 3 கோடியே 32 இலட்சம் ரூபாய் மட்டுமே பெற்றுள்ளது.

மேலும், தமிழர் புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழின் நிலை அழியும். அங்குள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் ஆய்வுகள் நலிவடையும். அதோடு மட்டுமல்லாமல், தமிழ் திராவிட குடும்பத்தின் தாய் என்ற தகுதியை இழக்கும் அபாயம் நேரிடும்.

எனவே, நடுநிலை மொழி அறிஞர்களின் கருத்தை ஏற்றுத் தமிழின் தொன்மையை 3,000 ஆண்டுகளுக்கு முந்தியது என்று அறிவிப்பதோடு, இந்தியக் கல்வி அமைச்சின் கீழ் செம்மொழித் தமிழை வைத்து செம்மொழி விதிமுறைகளின் கீழ் உள்ள தகுதிபாடுகளை தமிழுக்கு அளிக்க வேண்டும்.

(மக்கள் ஓசை நாளிகை (8.10.2010) செய்தி)

இதனை உடனடியாகச் செயல்படுத்த வேண்டி இந்திய நடுவண் அரசிற்கும், தமிழக அரசிற்கும், யுனேசுகோ நிறுவனத்திற்கும் மிக விரைவில் மலேசியாவிலுள்ள இந்தியத் தூதரகத்தில் மகஜர் வழங்கப் போவதாக அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் திரண்டு வந்து இம்மாநாட்டில் கலந்து ஆதரவு வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

இம்மாநாட்டில் நாடு தழுவிய அளவில் செயல்படும் 170 தமிழ் பொது இயக்கங்கள் கலந்துகொள்ளும்.

மேல் விவரங்களுக்கு முனைவர் ஆறு.நாகப்பன் (016-9691090), பாதாசன் (019-2401943), சு.வேலுசுப்பிரமணியம் (013-696-4593) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.

  • நன்றி: மலேசிய நண்பன் (9-10-2010)

Wednesday, October 06, 2010

மலேசியத் தமிழர் வாழ்வியல் மாநாடு 2011

மலேசியாவில் தமிழர்களின் வரலாறு ஆய்வு செய்யப்படவேண்டும் என்ற அடிப்படை நோக்கத்திற்க்காக, மலேசியத் தமிழர் வாழ்வியல் மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மலேசியாவிற்குத் தமிழர்கள் வந்த காலம், மற்றும் தொடர்ந்து மலேசியாவின் மேம்பாட்டிற்குத் தமிழர்கள் ஆற்றிய பங்கு குறித்தும் மாநாட்டில் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படும். கடாரம் கண்டான் இராஜேந்திர சோழன் என்று பெருமையாகப் பேசிக் கொள்ளும் நாம், நம் எதிர்கால சந்ததியினர் விளங்கிக் கொள்வதற்காக என்ன முயற்சிகளை மேற்கொண்டோம் என்பது பரவலான கேள்விக் குறியாக இருக்கிறது.

நம்முடைய எழுத்தாளர்கள் பல ஆய்வு கட்டுரைகளையும் கதைகளயும் எழுதி இருக்கிறார்கள். பல்கலைகழத்தில் பட்டப்படிப்பிற்காக ஆய்வுக் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால், அக்கட்டுரைகள் தமிழர்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படவில்லை. ஈப்போ க.கலைமுத்து கடுமையாக முயற்சி செய்து நூல் ஒன்றை வெளியிட்டிருகிறார். எழுத்தாளர் சந்திரகாந்தம், ஜப்பானியர் காலத்தில் தமிழர்களின் வாழ்க்கை குறித்து கிள்ளான் அருண், கோல சிலாங்கூர் குணநாதன், இப்படி சிலர் நூல்களை வெளியிட்டிருக்கின்றனர். இப்படி எழுதப்பட்ட நூல்கள் மக்களின் பார்வைக்குப் பரவலாக கொண்டு வரப்படவிலை.

ஆங்கிலேயர்கள் நம்மை சஞ்சிக் கூலிகளாகக் கொண்டு வந்தார்கள் என்ற கதைகள் தான் நம் முன்னே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இது மட்டும் நமது வரலாறு இல்லை என்பதை உணரவேண்டும். இதற்கு முந்தைய நீண்ட வரலாறு நமக்கு உண்டு. அதற்காகத்தான் இம்மாநாடு கூட்டப்படுகிறது.

மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையுடன் இணந்து மலேசியாவிலுள்ள தமிழர் அமைப்புகளின் கூட்டு அமைப்பான மலேசியத் தமிழ்க் காப்பகம் ஆய்வியல் மாநாட்டை 2011 சனவரித் திங்கள் 22 & 23 ஆகிய நாட்களில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கோலாலம்பூரிலுள்ள மலாயப் பல்கலைக்கழத்தில் நடத்த திட்டமிடப் பட்டுள்ள இம்மாநாட்டில் மொத்தம் 24 ஆய்வு கட்டுரைகள் இடம் பெறவுள்ளன. பல்கலைக்கழக மாணவர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் அனைவரும் பேராளர்களாகக் கலந்துக் கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதாக மாநாடு ஏற்பாட்டுக் குழுத்தலைவரும் மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் தேசியத் தலைவருமான சு.வை.லிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெர்வித்துள்ளார்.

மாநாட்டின் இணைத்தலைவராக மலாயாப் பல்கலைகழக இந்திய ஆய்வியல் துறையின் தலைவர் இணைப் பேராசிரியர் முனைவர் எஸ்.குமரன் பொறுப்பு வகிப்பார். மாநாட்டின் தலைமைச் செயலாளராக இந்திய ஆய்வியல் துறையின் முன்னாள் தலைவரும் இணைப் பேராசிரியருமான முனைவர் வே.சபாபதி பொறுப்பு வகிப்பார்.
மலேசியத் திராவிடர் கழகத்தலைவர் ரெ.சு.முத்தையா, மலேசிய தமிழ் நெறிக் கழகத்தின் தலைவர் இரா.திருமாளவன், மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றத்தலைவர் துரைசாமி, மலாக்கா தமிழர் சங்கத்தின் தலைவர் தொ.கா.நாராயணசாமி, பாரிட் புந்தார் தமிழ் வாழ்வியல் இயக்கத் தலைவர் க.முருகையன், சொகூர் தமிழர் சங்கத் தலைவர் ந.வேணுகோபால், பேரா மாநில எழுத்தாளர் சங்கத் தலைவர் இராம பெருமாள் ஆகியோர் உதவித் தலைவர்களாகவும்,

இந்திய ஆய்வியல் துறையின் விரிவுரையாளர் குமாரி இரா. சீத்தாலட்சுமி, ஆலமரம் வாரப் இதழின் ஆசிரியர் புலவர் முருகையன், மலேசிய இந்திய கலை கலாச்சார மன்றத்தின் மகளிர் பிரிவு தலைவர் திருமதி பத்மாவதி ஆகியோர் துணைச் செயலாளர்களாகவும் பொருளாளராக மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் டத்தோ செல்லக்கிருஷ்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

இணைப் பேராசிரியர் முனைவர் கிருஷ்ணன் மணியம், விரிவுரையாளர் த.மணிமாறன், விரிவுரையாளர் கோவி.சிவபாலன், மனித வளத்துறை அமைச்சைச் சார்ந்த நீலமேகன், திருத்தமிழ் வலைப்பதிவர் சுப.நற்குணன் பினாங்கு இந்திய மாணவர் பெற்றோர் சங்கத் தலைவர் ம.தமிழ்ச் செல்வன், திருக்குறள் பணிக் கழகத்தின் பண்டிட் இலக்குமனன், உலகத் தமிழ் மாமன்ற தலைவர் வீரா, கோலாலம்பூர் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் காரைக் கிழார், மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் தேசியத் துணைத் தலைவர் கை.சிவப்பிரகாசம்,

மலேசியத் தமிழப் பாண்பாட்டு இயக்கத்தின் தலைவர் ப.கு.சண்முகம், மலேசிய இந்திய கலை கலாச்சார மன்றத்தின் தலைவர் ப.ஆனந்தன், சிரம்பான் கம்பன் கழகத்தின் செயலாளர் திருமதி துளசி அண்ணாமலை, தமிழாசிரியர் இலக்கிய கழகத்தின் தலைவர் ந.பச்சை பாலன், தமிழ் இலக்கிகழ்கத்தின் மா.கருப்பண்ணன், மற்றும் மூத்தச் செய்தியாளர் வே.விவேகானந்தன், அ.அலெக்சாண்டர், பி.பன்னிர் செல்வம், ஆர்.கணேசன் மலாயாப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரவையின் மாணவர் தலைவர் உ.உகேந்திரன், கிள்ளான் கோவி பெருமாள் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இது தவிர பல்வேறு துணைக்குழுக்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. குழுவில் பணியாற்ற விரும்பும் மற்ற இயக்கங்களையும் இணைத்துக் கொள்ளவும் முடிவு செய்யப் பட்டது.

மாநாடு பற்றிய விபரம் அறிய :-
முனைவர் வே.சபாபதி,
தலைமைச் செயலாளர்,
மலேசியத் தமிழர் வாழ்வியல் மாநாடு ஏற்பாட்டுக்குழு
இந்திய ஆய்வியல் துறை,
மலாயாப் பல்கலைக் கழகம், 50603 கோலாலம்பூர்


அகப்பக்க முகவரி:- tamizsemmozi.blogspot.com
மின்னஞ்சல் முகவரி:- vaiskru @yahoo.com
தொலைப்பேசி தொடர்பு:- சு.வை.லிங்கம் 019 6011569
முனைவர் சு.குமரன் 012 3123753
முனைவர் வே. சபாபதி 012 6754709

Blog Widget by LinkWithin