Tuesday, May 04, 2010

இணைய வெளியில் என் இனிய பயணம்


திருத்தமிழ் வலைப்பதிவு எழுதும் வேளையில், மலேசியச் சூழலில் தமிழ் இணையத்தை இன்னும் எப்படியெல்லாம் வளர்த்தெடுக்கலாம் என்ற சிந்தனை ஒருபக்கம் ஓடிக்கொண்டே இருக்கும். நெருக்கமான நண்பர்களிடம் இதுகுறித்து நிறைய கதைத்து இருக்கிறேன்.

குறிப்பாக, வலைப்பதிவு தொடங்குமாறு நண்பர்கள் பலரை வலியுறுத்தியுள்ளேன். எனக்குச் செவிசாய்த்து சிலர் வலைப்பதிவு தொடங்கியும் உள்ளனர். கி.விக்கினேசு (தமிழோடு நேசம்), கோவி.மதிவரன் (தமிழ் ஆலயம்), மு.மதிவாணன் (செர்சோனீசு தமிழ்ப்பள்ளி), தமிழரண் (கருத்து மேடை), ஆய்தன் / ஆதவன் (தமிழுயிர்), அலகேஸ்ஸ்ரீ (நீலாம்பிகை மழலையர் மன்றில்) ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

வலைப்பதிவுகளைத் தவிர்த்து இன்னும் சில தேவைகள் இருப்பதை உணர்ந்து வேறு சில இணையத் தளங்களையும் தொடங்க வேண்டியிருந்தது. இது காலத்தின் தேவையாகவும் இருந்தது. (பின்வரும் படங்களைச் சொடுக்கு அவ்வந்த தளத்திற்குச் சென்று நோட்டமிடவும்)


மலேசியத் தமிழ் வலைப்பதிவுகளை ஒரு குடையின்கீழ் ஒன்றிணைப்பதற்கும் தமிழ் வலைப்பதிவுகளின் வாசிப்பு வட்டத்தைப் பெருக்கவும் திரட்டி அமைப்பிலான ஒரு தளம் தேவைப்பட்டது. அதற்காக, ‘திருமன்றில்’ எனும் பெயரில் ஒரு எளிய தளத்தை தொடங்கினேன். அதில் மலேசியத் தமிழ் வலைப்பதிவுகள் அனைத்தையும் இணைத்து திரட்டியைப் போல உருவாக்கினேன். ஆயினும், மலேசியப் பதிவர்கள் இந்தத் தளத்தை முழுமையாகப் பயன்கொள்ளவில்லை என்பது தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தமே. பொது நன்மை கருதி ஏற்படுத்தப்பட்ட இந்த ஏந்தினை(வசதி) மலேசியப் பதிவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என இங்கே வேண்டுகையை முன்வைக்கிறேன்.

அடுத்து, மலேசியத் தமிழ் ஆசிரியர்களிடையே தமிழ் இணையம் குறித்து வெளிப்படுத்த வேண்டும்; அவர்களை இணையத்துக்குள் இழுத்துவர வேண்டும்; தமிழ்க் கல்வித்துறை தொடர்பான தகவல்களைப் பரிமாறுவதற்கும் கருத்தாடுவதற்கும் ஒரு களம் வேண்டும் ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் ‘தமிழ் ஆசிரியம்’ மடற்குழு தொடங்கினேன். முழுக்க முழுக்க மலேசிய ஆசிரியர்களை இலக்கு வைத்து இந்தக் கூகில் மடற்குழு தொடங்கப்பட்டது. இதுவரை 116 உறுப்பினர்களுடன் மனநிறைவளிக்கும் வகையில் ஆக்கமான கருத்தாடல்களுடன் தமிழ் ஆசிரியம் மடற்குழு செயல்படுகிறது. ஆனால், மலேசியாவில் ஏறக்குறைய பத்தாயிரம் தமிழ் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது தமிழ் ஆசிரியம் இன்னும் சூம்பிக்கிடப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது. தமிழாசிரியர்கள் நினைத்தால் மலேசியத்தில் தமிழ் இணையத்தை பெரிதாக வளர்த்தெடுக்க முடியும் என்பது என் கருத்து.


2010 பிறந்ததும் தமிழ் எழுத்துகளைச் சீர்திருத்தப் போகிறோம் என்று ஒரு கூட்டம் வேகமாகக் கிளம்பியது. தொடக்கத்தில் காதோடு காதாகவும், பின்னர் தமிழக நாளிதழ்கள், தொலைக்காட்சி முதலான ஊடகங்கள் வாயிலாகவும் தமிழ் எழுத்துகளை மாற்றி அமைப்பதற்கான பரப்புரைகள் நடந்தன. இணையத்திலும் அவர்களுடைய பரப்புரை தலையெடுத்தபோது, பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். திருத்தமிழ் வலைப்பதிவும் எழுத்துச் சீர்மையைக் கண்டித்து பல பதிவுகள் போட்டது. ஆயினும், இந்தச் சிக்கலை விவாதிக்க தனி வலைப்பதிவு இருப்பதே நல்லது என நினைத்து ‘தமிழ் எழுத்துச் சீர்மை’ எனும் வலைப்பதிவைத் தொடங்க வேண்டி இருந்தது. எழுத்துச் சீர்மை என்ற பெயரில் நிகழும் மாற்றங்களையும் அதனுடைய மறுபக்கங்கலையும் அலசும் களமாகவும் கருத்தாடல் தளமாகவும் இது அமைந்தது.

இற்றை நாளில் முதன்மைச் சந்தைப் பொருளாக இணையத்தில் புகழ்பெற்றிருப்பது முகப்புத்தகம் (facebook). இதற்கு இன்னும் நல்ல – நயமான – நச்சென்று ஒரு தமிழ்ப்பெயர் தேடிக்கொண்டிருக்கிறேன். என்னிடம் பயின்ற மாணவர் ஒருவரின் விடாப்பிடியான அழைப்பின் பேரில் முகப்புத்தகத்திலும் இடம்பெறவேண்டிய சூழல் வந்தது. பல்வேறு ஏந்துகளை உள்ளடக்கிய முகப்புத்தகத்தில் இன்னும் கத்துக்குட்டியாகவே வலம் வந்துகொண்டிருக்கிறேன்.


என் சொந்த ஆக்கங்களான இவை தவிர, தமிழுயிர் வலைப்பதிவிலும் குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்பை வழங்கியுள்ளேன். நண்பர்கள் சிலர் இணைந்து நடத்திய மலேசியாவின் முதல் தமிழ்த்தேசிய வலைப்பதிவு இது. அதற்காகவும் அவ்வப்போது சில பதிவுகளை வழங்கியுள்ளேன்.

இப்படியாக, மலேசியத் தமிழ் இணையத்தை என்னால் ஆனமட்டில் வளப்படுத்திக் கொண்டிருக்கிறேன். எதிர்காலத்தில் இன்னும் சில திட்டங்கள் உள்ளன. அவற்றை இப்போதைக்குச் சொல்லுவதாக இல்லை. சொன்னால் பலிக்காது என்பதற்காக அல்ல. சொல்லுதல் யார்க்கும் எளிய அறியவாம்; சொல்லிய வண்ணம் செயல் என்ற தமிழ்மறையாம் திருக்குறளின் வரிகள் “செய்யாமல் சொல்லாதே” என்று காதோரம் கேட்கின்றன.

மலேசியத் தமிழ் இணையம் மிகப்பெரிய மாற்று உடகமாக வளர்வதற்குரிய அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன. ஆயினும், சிற்சில தடைகளும் இருக்கவே செய்கின்றன. இன்று உலக அளவில் தமிழ் இணையம் அடைந்துள்ள பரந்துபட்ட வளர்ச்சிக்கு நடுவில் மலேசிய இணைய, வலைத்தலங்களும் பெரிய வளர்ச்சியை எட்டவேண்டும் என்ற கனவு என்னுள் இருந்துகொண்டே இருக்கிறது.

என் கனவுகள் பலித்திட; இன்னும் எண்ணற்ற இணையப் பணிகள் இனிதே நடந்திட நீங்களும் வாழ்த்தினால்.. மகிழ்வேன் நிச்சயமாக!

அடுத்த பதிவில் மலேசியத் தமிழ் வலைப்பதிவுகளைப் பற்றி எழுதுவேன்; படிக்க மறவாதீர். மீண்டும் வருக!

நனிநன்றியுடன்:-

4 comments:

அறவேந்தன் said...

வணக்கம், ஐயா.
உங்களின் பதிவுகளைத் தவறாமல் படித்து வருபவர்களில் நானும் ஒருவன்.
உங்களின் பதிவுகளைப் போலவே உங்களின் அனுபவங்களும் சுவைபடவே இருக்கின்றன.
உங்களின் தமிழ்ப்பணி போற்றத்தகுந்தது.
உங்களை நேரில் சந்தித்து அளவளாவ எனக்கு ஆசை.
நன்றி.

முனைவர் இரா.குணசீலன் said...

தமிழ்மண நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே.

தொடர்க தங்கள் தமிழ்ப்பணி..

தமிழ் said...

பயணம் தொடர வாழ்த்துகள்

doraisamy53 said...

அய்யா உங்கள் பதிவு மிக நன்று.

Blog Widget by LinkWithin