Friday, September 24, 2010

தமிழ் 1,500 ஆண்டுக்கு உட்பட்டதா? பிழையைத் திருத்துமா இந்திய அரசு?

தமிம்மொழிக்கு வெறும் 1,500 ஆண்டு வரலாற்றைச் சொல்லி ‘செம்மொழி’ தகுதி வழங்கப்பட்டிருப்பது மாபெரும் வரலாற்றுப் பிழை. அதனைத் திருத்தி குறைந்தது 3,000 ஆண்டுகள் என அறிவிக்க வேண்டும். உண்மையில், தமிழ்மொழி 10,000 ஆண்டுகளுக்கும் குறையாத வரலாற்றைக் கொண்டது. இந்திய அரசு செய்துள்ள வரலாற்றுப் பிழையைத் திருத்தும்படி மலேசியத் தமிழர்கள் விடுக்கும் கோரிக்கை பற்றிய செய்தி இது. - சுப.ந



கோலாலம்பூர் செப் 24,
உலகத்தின் மூத்த மொழிகளுள் ஒன்றான தமிழ்மொழிக்கு 1000 அல்லது 1,500 ஆண்டுகளுக்கு உட்பட்ட மொழி எனக் கணக்கிட்டுச் ‘செம்மொழி’ எனும் தகுதியை இந்திய நடுவண்(மத்திய) அரசு வழங்கி இருப்பதும், அதனைத் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டிருப்பதும் வரலாற்றுப் பிழை என்று தமிழ்ச் ‘செம்மொழி அகவைத் திருத்த ஆய்வுக் குழு’ சுட்டிக்காட்டி இருக்கிறது.

இந்தப் பிழையைச் சுட்டிக்காட்டி, தமிழ்மொழி குறைந்தபட்சம் 3,000 (மூவாயிரம்) ஆண்டுகளுக்கு முற்பட்ட மொழியென்று வரையறுத்து, அந்தப் பிழையைத் திருத்தும்படி கோரும் மகஜர் ஒன்றை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த மாதம் மேற்கொள்ளும் மலேசிய வருகையின்போது நேரில் வழங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்தக் குழுவின் தலைவர் ஆறு.நாகப்பன் கூறினார்.

மலேசிய இந்தியப் பொது அமைப்புகளின் ஒருங்கிணைப்புப் பேரவையின் ஏற்பாட்டில் அதன் தலைவர் இராஜரத்தினம் தலைமையில் இங்கு ஓர் உணவகத்தில் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், அமைக்கப்பட்ட மேற்கண்ட குழுவின் தலைவராகப் பணியமர்த்தம் செய்யப்பட்ட ஆறு.நாகப்பன் மேற்கண்டவாறு விளக்கினார். அவர் தொடர்ந்து கூறியதாவது:-

சங்கம் வைத்து வளர்த்த தமிழ் என்பது வரலாறு. ஒரு சங்கம் அல்ல; இரண்டு சங்கங்கள் அல்ல. மூன்று சங்கங்களால் வளர்க்கப்பட்டது செம்மொழியாகியத் தமிழ்மொழி. ஒவ்வொரு சங்கமும் 4,000 முதல் 5,000 ஆண்டுகள் இருந்தது என்பதும் வரலாறுதான். இதன் மூலம் கூட்டிக் கழித்துப் பார்த்தால், எப்படியும் 10,000 (பத்தாயிரம்) ஆண்டுகளுக்கு முற்பட்டது தமிழ் என்பது தெரியவரும்.

இந்த ஆண்டு வரையறை மிகையானது என்று கூறுபவர்கள்கூட தமிழுக்கு இன்றுவரை தொடர்ந்து இருந்துவரும் இலக்கண நூலான ‘தொல்காப்பியம்’ கி.மு.3ஆம்நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பதை ஒப்பவே செய்வார்கள். அப்படியெனில், குறைந்தபட்சம் 2,300 ஆண்டுக்கு முற்பட்ட தமிழை 1,500 ஆண்டுகளுக்கு உட்பட்ட மொழி என்பதற்குள் அடக்கி, செம்மொழியாக அறிவிக்கப்பட்டிருப்பது அபத்தமான வரலாற்றுப் பிழையாகும்.

இதைத் திருத்தி, 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மொழியாகத் தமிழை வரையறுத்துச் செம்மொழி எனும் தகுதியை நிலைநிறுத்த வேண்டுமென்று இந்திய நடுவண் அரசிடம் இக்குழு கேட்டுக்கொள்ளும்.

அதற்கேற்ப மகஜர் தயாரிக்கப்பட்டு, அது முதலில் இங்குள்ள இந்தியத் தூதரகத்திடமும், தமிழ்நாடு அரசிடமும், யுனேஸ்கோ எனும் ஐ.நா நிறுவனத்திடமும் வழங்கப்படும். அதேவேளையில், அந்த மகஜர் கோலாலம்பூரில் ஜாலான் துன் சம்பந்தனில் அமைக்கப்பட்டுவரும் ‘லிட்டல் இந்தியா’ நகரைத் திறந்து வைக்க இந்தியப் பிரதமர் வரும்போது அவரிடம் நேரடியாகவே வழங்கப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதற்கும் முன்பதாக, அக்டோபர் மாதம் 24ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று தலைநகரில் தமிழ் செம்மொழி அகவை திருத்தக் ஆய்வுக் குழு சார்பில் மாநாடு ஒன்று நடத்தப்படும். இந்த மாநாட்டுக்குத் தமிழறிஞர் தமிழ்ச் செம்மொழிக் காவலர் மணவை முஸ்தப்பா சிறப்புச் சொற்பொழிவு ஆற்ற அழைப்பதெனவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

அதனைத் தொடர்ந்து, அக்டோபர் 27ஆம் நாளில் நடைபெறும் பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா திறப்புவிழாவில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தங்களின் கோரிக்கை மகஜர் வழங்கப்படும்.

நன்றி: மலேசிய நண்பன் 24.9.2010

Thursday, September 09, 2010

தமிழர் மாற்றமும் ஏற்றமும் மாணவரிடமிருந்து தொடங்கட்டும்

கடந்த 4-9-2010இல், பேரா மாநிலம், தைப்பிங், கம்போங் ஜம்பு தேசிய இடைநிலைப்பள்ளியில் ‘தமிழர் பண்பாட்டு விழா’ மிகவும் நேர்த்தியுடன் நடைபெற்றது. இப்பள்ளியின் தமிழ்மொழிக் கழகத்தினர் இதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஆசிரியர் திரு.பரமேசுவரன் வழிகாட்டுதலில் முழுக்க முழுக்க மாணவர்களே பொறுப்பேற்று நடத்திய இவ்விழா தமிழர் பண்பாட்டை தூக்கி நிறுத்தும் வகையில் வெகு சிறப்பாக நடந்தது. மேலும், திரைப்பட(சினிமா)த் தாக்கம் கிஞ்சிற்றும் இல்லாமல் முழுக்க முழுக்க தமிழ்ப் பண்பாடு சார்ந்து இவ்விழா நடைபெற்றது.
தொல்காப்பியர், திருவள்ளுவர், கம்பர், ஔவையார், மறைமலை அடிகள், பாவாணர், பாரதியார், பாரதிதாசன் என்று தமிழ்ச் சான்றோர்கள் பெயரில் குழுக்களை அமைத்து மாணவர்கள் பல்வேறு போட்டிகளிலும் படைப்புகளிலும் கலந்துகொண்டனர். எல்லா மாணவர்களும் ஆசிரியர்களும் பண்பாட்டு உடையில் வந்திருந்தனர்.

அலங்காரப் பொங்கல், கோலம் போடுதல், தோரணம் கட்டுதல் முதலான பண்பாடு சார்ந்த போட்டிகள் நடந்தன. தமிழ்ச் சான்றோர்கள் தோற்றத்தில் வந்து மாணவர்கள் எழுச்சி ஊட்டினர். மேடைப் பேச்சு அங்கத்தில் தமிழர் பண்பாடு சார்ந்த பல தலைப்புகளில் மாணவர்கள் தங்கள் வாதங்களை முன்வைத்து பாராட்டுகளைப் பெற்றனர். இலக்கியக் காட்சிகளை குறுநாடகங்களாக மேடையில் படைத்தனர். கோலாட்டம், கவிதை, தமிழ் எழுச்சிப் பாடல் என பலவற்றைத் திறம்பட படைத்தனர்.


மிக நேர்த்தியாகவும் கட்டுக்கோப்பாகவும் நடந்த இந்தத் ‘தமிழர் பண்பாட்டு விழா’வில் கலந்துகொண்டு உரையாற்று நல்வாய்ப்பு எனக்குக் கிட்டியது. மாணவர்களுக்கு ஏற்ற வகையில் உரையினை ஆற்றினேன். அதன் தொகுப்பு பின்வருமாறு:-

தமிழர் பண்பாடு சிறப்பு வாய்ந்தது. தமிழர் பண்பாடு இயற்கையோடு இயைந்தது. அந்தத் தமிழர் பண்பாடுகள் இன்று பல்வேறு தாகுதல்களில் சிக்குண்டு சிரழிந்து வருகின்றது. இதனைக் காப்பாற்றும் பெரும் பொறுப்பை இளைஞர்களும் மாணவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நம் பண்பாடு எது? அன்னியர் பண்பாடு எது? என்று வேறுபடுத்திப் பார்க்கும் சிந்தனை நமக்குத் தேவை.

இளைஞர்களால் பெரிதாக என்ன செய்ய முடியும்? மாணவர்களால் என்ன சாதிக்க முடியும்? என்று தப்புக் கணக்குப் போட்டுவிடாதீர்கள். இளைஞர்களும் மாணவர்களும் நினைத்தால் சமுதாயத்தையே மாற்றிக் காட்ட முடியும். அவர்களுடைய ஆற்றல் பெரிது. தமிழ்மொழியாகட்டும், பண்பாடாகட்டும் இளையோர்களும் மாணவர்களும் மனதுவைத்தால் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்; ஏற்றத்தை ஏற்படுத்த முடியும்.

அதற்கு பெரிது பெரிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்பதில்லை. சின்ன சின்னதாக சிலவற்றை இளையோர்களால் செய்ய முடியும்; மாணவர்களாலும் செய்ய முடியும். அதனை இங்கே பட்டியல் போட்டு சொல்கிறேன். இவற்றில் எல்லாவற்றையும் உங்களால் செய்ய முடியாது போனாலும், ஓரிரண்டையாவது செய்ய முடியும்; செய்ய வேண்டும்.


1)முதலில் நீங்கள் செய்ய வேண்டிய அடிப்படையானது என்ன தெரியுமா? உங்கள் அம்மாவை அழகாகத் தமிழில் ‘அம்மா’ என்று கூப்பிடுங்கள். அப்பாவை ‘அப்பா’ என்று அழையுங்கள். மம்மி, டாடி என்பதை விட்டொழியுங்கள். வீட்டுக்கு யார்வந்தாலும் ‘அங்கிள்’ என அழைக்காமல், மாமா என்று தமிழில் சொல்லுங்கள். அங்கிள் என்ற ஒரு ஆங்கிலச் சொல் இன்று மாமா, சித்தப்பா, பெரியப்பா ஆகிய எல்லா உறவுமுறைச் சொற்களையும் விழுங்கிவிட்டது. இவர் மாமா, இவர் சித்தப்பா, இவர் பெரியப்பா என உங்கள் அன்பான குடும்ப உறவுகளை அடையாளம் காட்டுவதற்குத் தமிழைப் பயன்படுத்துங்கள்.

2)தமிழர் குழந்தைகளின் பெயர்கள் இன்று தமிழாக இருப்பதில்லை. நவின காலம் என்ற போதையில் பொருள் புரியாத பெயர்களை வைக்கிறார்கள். அதுகூட தாழ்வில்லை. சிலர் அருவருப்பான பொருள்கொண்ட பெயர்களைச் சூட்டி விடுகிறார்கள். தமிழ் அறிவும் பற்றும் குறைந்து போனதுதான் இதற்குக் காரணம். இப்போது உங்கள் பெயர் ‘கொச்சையானதாக’ இருந்தாலும் அதை மாற்ற முடியாது. ஆனால், உங்களுக்குத் தம்பி பிறந்தால், தங்கை பிறந்தால் நல்ல தமிழ்ப் பெயரை வைக்கச் சொல்லுங்கள்.

3)இங்கே இருக்கும் மாணவர்களில் பலர் தமிழ்ப்பள்ளியில் படித்தவர்களாக இருக்கிறீர்கள். சற்றுமுன் மலாய் பள்ளியிலிருந்து வந்த மாணவர்கள் சிலர் தமிழில் அழகாகப் படைப்புகள் செய்தீர்கள். பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களைப் போல உங்கள் தம்பி தங்கைகளைத் தமிழ்ப்பள்ளியில் போடச்சொல்லி உங்கள் பெற்றோருக்குச் சொல்லுங்கள். தெரியாத்தனமாக வேறு பள்ளிக்குச் சென்றுவிட்டாலும், தாய்மொழியாம் தமிழைக் கட்டாயம் படியுங்கள்.

4)தமிழ்ப்பள்ளியிலிருந்து வந்த மாணவர்கள் பிஎம்ஆர், எசுபிஎம், எசுதிபிஎம் போன்ற அரசுத் தேர்வுகளில் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் கண்டிப்பாக ஒரு பாடமாக எடுங்கள். இதன்வழி தமிழைக் கல்விமொழியாக காப்பாற்றிவைக்க நீங்கள் உத முடியும்.

5)உங்கள் வீட்டு நிகழ்ச்சிகளைத் தமிழில் நடத்தச் சொல்லுங்கள். உங்களுக்கு 21ஆவது பிறந்தநாள் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அது நம்முடைய பண்பாடு இல்லாவிட்டாலும், அதைச் செய்யும் போது பதாகை(Banner) அல்லது சுவரில் ‘Happy 21st Birthday’ என்று ஆங்கிலத்தில் மட்டும் எழுதாமல் தமிழிலும் எழுதக்கூடாதா? ஏன் இப்படி சிந்திக்க மறுக்கிறோம். நம் வீட்டில் தமிழுக்கு இடமில்லை என்றால் பிறகு யார்வந்து தமிழுக்கு இடம் கொடுப்பார்கள்?

6)இறைவழிபாடு செய்வதற்குத் தமிழ் மந்திரங்களையும், அருட்பாடல்களையும் பயன்படுத்துங்கள். தேவார, திருவாசகப் பதிகங்களைப் பாடி வழிபாடு செய்யுங்கள். சொந்த மொழியில் இறைவனோடு பேசலாம். எல்லாம் வல்ல இறைவனுக்கு இந்த மொழிதான் புரியும் மற்ற மொழி புரியாது என்பது அறிவுக்குப் பொருத்தமான கருத்து அல்ல. உங்கள் வழிபாட்டைத் தமிழில் செய்யுங்கள்.


7)நீங்கள் தமிழர். இன்னொரு தமிழரிடம் தமிழில் பேசுங்கள். தமிழருக்குத் தமிழர் பேசும் போது பிறமொழிகள் எதற்கு?

8)ஏதேனும் ஒரு தமிழ் நாளிதழை வாங்கிப் படியுங்கள். நாள்தோறும் வாங்க முடியாவிட்டாலும் ஞாயிற்றுக் கிழமையாவது வாங்கிப் படியுங்கள். குயில், மயில் போன்ற மாணவர் இதழ்களை வாங்கலாம். உங்கள் குரல், செம்பருத்தி, ஆலமரம் போன்ற நல்ல இதழ்கள் வருகின்றன. ஏதாவது ஒன்றை வாங்குங்கள். இதற்காக நீங்கள் கொடுக்கும் பணம் தமிழ் வளர்ச்சிக்குப் பயன்படுவதோடு, உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் தமிழ்மணம் வீசும்.

9)பள்ளியில் அல்லது வெளியில் எந்த ஒரு அறிவிப்பு, அறிக்கை வெளியிட்டாலும் அதனைத் தமிழில் வெளியிடுங்கள். இன்று கணினிக் காலத்தில் வாழ்கிறோம். கணினி, கைப்பேசி வரையில் தமிழ் நன்றாகச் செயல்படுகிறது. தமிழில் தட்டச்சு செய்வதற்கு எந்த சிக்கலும் இப்போது இல்லை. ஆகவே, தமிழர்களுக்காக எழுதப்படும் சுற்றறிக்கை, அறிவிப்பு, கடிதம் எதுவானாலும் அது தமிழாக இருப்பதை உறுதிபடுத்துங்கள்.

10)மாணவர்களே நீங்கள் இப்போதுதான் படித்துக்கொண்டிருக்கிறீர்கள். பெரியவர்கள் ஆனதும் எப்படி கையொப்பம் போடலாம் என்று பழகுவீர்கள் அல்லவா? அந்தக் கையொப்பத்தைத் தமிழில் போடுங்கள். இந்த மொழியில்தான் கையொப்பம் போட வேண்டும் என்று கட்டாயமில்லை. தமிழர்கள் நாம் தமிழில் கையொப்பம் போட யாரும் தடை விதிக்கவும் இல்லை. ஆகவே, இப்போதே தமிழில் கையொப்பம் போடக் கற்றுக்கொள்ளுங்கள்.

11)நாம் பல அரசு, தனியார் அலுவலகம் செல்லுகிறோம். அங்கே பார்த்தால் ஆங்கிலம், மலாய், சீன மொழிகளில் அறிவிப்புகளும், படிவங்களும் இருக்கும். ஆனால், தமிழ் இருக்காது. நமக்கு ஏன் இந்த நிலைமை? வெட்கமாக இல்லையா உங்களுக்கு? இதற்கு என்ன செய்யலாம்? அந்த அலுவலகத்தில் ‘சேவை மறுமொழி படிவம்’ (Borang Maklumbalas) இருக்கும். அதில், இந்த அலுவலகத்தில் தமிழுக்கும் இடம் கொடுக்கவும் என்று எழுதிப் பெட்டியில் போட்டுவிட்டு வாருங்கள். எல்லாரும் இப்படியே செய்வோம். ஓராண்டுக்குச் செய்வோம். மாற்றம் வருமா வராதா? பொருளகம் செல்கிறோம். அங்கும் தமிழுக்கு இடமில்லை. மறுமொழி படிவத்தை எடுத்து “தமிழ் வேண்டும். இல்லாவிட்டால் கணக்கை மூடுவேன்” என்று எழுதிப் போட்டுவிட்டு வாருங்கள். மறுமாதம் சொன்னபடி கணக்கை மூடுங்கள். இப்படியே நாடு முழுவதும் எல்லாத் தமிழரும் செய்வோம். பிறகு பாருங்கள். தமிழுக்குத் தானாக இடம் கிடைக்கிறதா இல்லையா பாருங்கள்.

12)தமிழர்களாகிய நாம் தேவைப்படும் போதெல்லாம் நமது பண்பாட்டு உடைகளை விரும்பி உடுத்த வேண்டும். இன்று மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என எல்லாரும் பண்பாட்டு உடையணிந்து வந்திருப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. இதேபோல், வீட்டு நிகழ்ச்சிகளிலும், ஆலயம் செல்லும்போதும் பண்பாட்டு உடைகளை உடுத்துவதைப் பழக்கப்படுத்திக்கொள்வோம். நாம் தமிழர் என அடையாளம் காட்டுவதற்கு உடையும் மிக முக்கியம்.

இப்படிச் சிலவற்றை உங்களால் செய்ய முடியும். ஏற்கனவே சொன்னது போல மாணவர்கள் நீங்கள் மனதுவைத்தால் சீர்கெட்டுக் கிடக்கும் தமிழர்களைத் தட்டி எழுப்ப முடியும். நீங்கள் மனது வைத்தால் தமிழ்மொழியையும் பண்பாட்டையும் தூக்கி நிறுத்த முடியும். முடிவெடுங்கள் தம்பிகளே.. முடிவு செய்யுங்கள் தங்கைகளே.. மாற்றங்கள் மாணவர்களாகிய உங்களிடமிருந்து தொடங்கட்டும்.

(திரு.பரமேசுவரன், சுப.நற்குணன், கோவி.மதிவரன்)
இவ்வாறு என்னுடைய உரை அமைந்திருந்தது. அனைவரும் மிகவும் கவனமெடுத்து உரையினைச் செவிமடுத்தனர். எனக்கு முன்னதாக அருமை நண்பர் தமிழ் ஆலயம் வலைப்பதிவர் கோவி.மதிவரன் ‘தமிழ்ச் செம்மொழி’ எனும் தலைப்பில் உரை ஆற்றினார். தமிழின் செம்மொழிச் சிறப்பு, தமிழைப் பற்றி அறிஞர்களின் கருத்து, தமிழின் செம்மொழித் தகுதிகள், செம்மொழி மாநாட்டுக் காட்சிகள் ஆகியவை பற்றி கணினி திரைக்காட்சி வழியாகக் காட்டிப் பேசினார். இதே நிகழ்ச்சியில், தமிழியில் ஆய்வுக் களத்தின் தலைவர் ஐயா.இர.திருசெல்லவம் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

மொத்தத்தில், தமிழ் மாணவர்களிடத்தில் தமிழைப் பற்றிய தப்பான கருத்துகளையும் தாழ்வு எண்ணங்களையும் நீக்கி, தமிழின் மீதும் தமிழ்ப் பண்பாட்டின் மீதும் புதிய பார்வையையும் தமிழ் வழியில் தன்னம்பிக்கையையும் இந்த விழா ஏற்படுத்தி உள்ளது.

இப்படியான விழாக்கள் எல்லாப் பள்ளிகளிலும், கல்லூரிகள், பக்கலைகளில் நடைபெற வேண்டும். இதன்வழி நாட்டில் தமிழுக்குப் புத்தெழுச்சியும் மறுமலர்ச்சியும் ஏற்படும் என்பது திண்ணம்.

Tuesday, August 31, 2010

சஞ்சியிலே வந்தவங்க தாண்டவக் கோனே!


மனதைத் தொட்ட மரபுக்கவிதை - 3

ரெ.ச என்று எல்லோராலும் அன்பொழுக அழைக்கப்படும் ரெ.சண்முகம் அவர்களின் பாடலை இந்தத் தொடரில் பதிவு செய்கிறேன்.

பாடகர், இசையமைப்பாளர், பாவலர், பாடலாசிரியர், மேடை நாடகாசிரியர், வானொலி நாடக ஆசிரியர், நடிகர், இயக்குநர், கட்டுரையாசிரியர், சிறுகதை எழுத்தாளர் எனப் பன்முக ஆற்றல்பெற்ற அரும்பெறல் கலைஞர் ரெ.சண்முகம். மலேசிய வானொலி அறிவிப்பாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார் என்பது இவருடைய மற்றொரு வரலாறு.

இவருடைய “செந்தாழம் பூவாய்” பாடல் திரைப்பாட்டுகளுக்கே வெல்விளி (சவால்) விடும் அளவுக்கு மிகச் சிறந்த பாடலாக புகழ்பெற்றது என்ற செய்தி பலர் அறிந்ததே. இவருடைய குரலுக்கு மயங்கியோர் நாட்டில் பலர் உள்ளனர்.

இவர் சில நூல்களையும் எழுதி மலேசிய எழுத்துலகைச் செழிக்கச் செய்துள்ளார். அவற்றுள் ரெ.ச.இசைப்பாடல்கள், பிரார்த்தனை (கவிதை), நல்லதே செய்வோம் (கட்டுரை), இந்த மேடையில் சில நாடகங்கள் (சுய சரிதை) ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கன.

மலேசிய தமிழ் இசைக்கலை வாழ்விலும் வளர்ச்சியிலும் ரெ.ச எனும் பெயர் இரண்டறக் கலந்திருக்கிறது. இவருடைய அரும்பணிகளைப் பாராட்டும் வகையில் ‘செவ்விசைச் சித்தர்’ எனும் விருதும் வழங்கப்பட்டுள்ளது.

மலேசியத் தமிழர்களிடையே சாதனை மாந்தராகத் திகழும் செவ்விசைச் சித்தர் ரெ.ச அவர்களின் பாடலொன்று இங்கே பதிவாகிறது. பொருள் விளக்கமே தேவையில்லாமல் புரிந்துகொள்ளும் அளவுக்கு மிக எளிமையான பாடல் இது. மலேசியத் தமிழர்களின் அன்றைய வரலாறு, இன்றைய நிலைமை ஆகிய இரண்டையும் படம்பிடித்துக் காட்டும் ‘சித்தர்’ பாட்டு இது.

**********************
பிரித்தானிய ஆட்சியின்போது தமிழகத்திலிருந்து ஒப்பந்தக் (சஞ்சி) கூலிகளாகத் தமிழ் மக்கள் மலாயாவுக்குக் கொண்டுவரப்பட்ட வரலாற்றிலிருந்து பாடல் தொடங்குகிறது. இங்கு வந்த தமிழர்கள் காட்டுலும் மேட்டிலும் உழைத்து நாட்டைக் கட்டியெழுப்பிய கதைப் போகிற போக்கில் சொல்லிப் போகிறார் கவிஞர். கூடவே, மலேசியத் தமிழர்களின் இன்றைய அவலங்களையும் பாடிக் காட்டுகிறார்.


சஞ்சியிலே வந்தவங்க தாண்டவக் கோனே - இன்னைக்கும்
சரியாக அமையலயே தாண்டவக் கோனே
மிஞ்சிப்போயி நிக்குதையா தாண்டவக் கோனே - கொஞ்சம்
மிதிக்கத்தானே பாக்குறாங்க தாண்டவக் கோனே

காரினிலே பறக்குறவங்க தாண்டவக் கோனே – நல்ல
கனவிலயும் மிதக்குறாங்க தாண்டவக் கோனே
தாருபோட்டு ரோடு போட்டவன் தாண்டவக் கோனே – இன்னும்
தரையினிலே தவழுறானே தாண்டவக் கோனே


இவனுக்குள்ளயே ஏமாத்துறான் தாண்டவக் கோனே – அத
எதுத்துபுட்டா திரும்பஒத தாண்டவக் கோனே
கவனத்தோட வாழலயே தாண்டவக் கோனே – இன்னும்
கன்னிகழி யாதவந்தான் தாண்டவக் கோனே

அடுத்துவரும் அடிகள் முக்கியமானவை. தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியைப் பக்குவமாகச் சொல்லிச் செல்லுவது கவரும்படியாக உள்ளது.

புள்ளைங்கள்ளாம் படிக்கிறாங்க தாண்டவக் கோனே – அங்கே
போடுறதுல கையவச்சான் தாண்டவக் கோனே
அள்ளி அள்ளி ஊட்டுறானே தாண்டவக் கோனே – எதுக்கும்
ஆகாத முண்டங்களுக்குத் தாண்டவக் கோனே

மலேசிய அரசியல் சூழல் இன்று மாற்றத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இந்த மாற்றத்தின் காரணமாக அரசியல் பிழைப்போரிடமும் மேல்மட்டத் தலைவர்கள் தொடங்கி குட்டி குட்டி தலைவர்கள் வரையில் தன்னலப் போக்கு வரம்புமீறி போய்க்கொண்டிருக்கிறது. தன்னலத்துக்காக தன் இனத்தையே அழிக்கும் அளவுக்கு இன்று தமிழர்கள் துணிந்துவிட்டார்கள். இது அரசியல் நிலை என்றால், குடும்ப அளவிலும் இன்று இதே நிலைமைதான். ஒற்றுமை, புரிந்துணர்வு, விட்டுக்கொடுத்தல் முதலிய பண்புகள் நலிந்துபோய்விட்டன. தமிழர்கள் தங்களுக்குள்ளேயே பிளவுபட்டதும் அல்லாமல் அடித்துக்கொள்வது பேரவலமாக இருக்கின்றது. அடுத்த அடிகளில் செவ்விசைச் சித்தரும் இதனையே சொல்லுவதைப் பாருங்கள்.

கோடரிக்கும் காம்புபோல தாண்டவக் கோனே – இவன்
கோளுவச்சான் குடிகெடுத்தான் தாண்டவக் கோனே
மாடுபோல பாடுபட்டான் தாண்டவக் கோனே – இன்னும்
மனுசனாக மாறலியே தாண்டவக் கோனே


ரெண்டாயிரம் வந்திடுச்சி தாண்டவக் கோனே – இன்னும்
ரெண்டு ரெண்டா பிரிஞ்சுருக்கான் தாண்டவக் கோனே
மண்டுத்தனமா வாழுறத தாண்டவக் கோனே – இவன்
மகத்துவமா நினைக்கிறானே தாண்டவக் கோனே

இன்று 53ஆவது மலேசிய தேசிய நாளை முன்னிட்டு, இந்தப் பாடலை உங்கள் சிந்தனைக்காகப் பரிமாறுகிறேன்.

“தேசிய நாள் நல்வாழ்த்து”


Tuesday, August 24, 2010

ஐ-போன் 4 வருகிறது; தமிழை ஒருபடி உயர்த்த போகிறது


எதிர்வரும் செப்தெம்பரில் ‘ஐ-போன் 4’ எனப்படும் புதுவகை கையடக்க இணைய பேசி மலேசியாவில் அறிமுகம் காண விருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஆங்கிலத்திலும் சிறப்பாகத் தமிழ்மொழியிலும் செயல்படும் ஆற்றல் கொண்டது என அறியப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனம் தனது மேம்படுத்தப்பட்ட "ஐபோன்" புதிய பதிப்பை வெற்றிகரமான அறிமுகப்படுத்தியுள்ளது. மலேசியாவில் இந்தப் புதிய ஐபோன் - 4ஆம் பதிப்பு வரும் செப்தெம்பரில் வெளியிடப்படவுள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

‘ஐபோன்’ எனும் புதிய வகையிலான தொழில்நுட்பத் தொடர்பு கருவி 2007இல் சந்தைக்கு வந்தன. இதுவரையில் 5 கோடி ஐபோன்கள் விற்பனையாகி உள்ளதாக அறியப்படுகிறது. தற்போது மேலும் பல புதிய ஏந்து(வசதி)களுடன் மேம்படுத்தப்பட்ட "ஐபோன்-4" சந்தைக்கு வந்துள்ளது.

ஐபோன்-4 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கையடக்க இணைய பேசி எல்லா வகையான ஏந்துகளையும் உள்ளடக்கியதாகத் திகழ்கிறது. iOS 4 எனும் இயங்குதளத்தில் மிகவேகமாக இயங்கும் ஆற்றல் கொண்ட இந்த புதிய கையடக்கப் பேசியில், வீடியோ அழைப்பு, உயர்தரமான கணித்திரை, 5 மெகா பிக்சல் படக்கருவி, லெட் ஃப்ளாச், உச்ச திறன் கொண்ட வீடியோ பதிவு, கம்பியில்லா இணையச் சேவை என ஏராளமான நவினமய சிறப்புத் தன்மைகள் உள்ளன.

(மலேசியாஇன்று தளத்திலிருந்து ஒரு செய்தி)

முந்தைய ஐபோனை விட தற்போதைய "ஐபோன்-4" வடிவத்தில் மெலிதாகவும் சிறியதாகவும் உள்ளது. இதில், தொடர்ச்சியாக 7 மணி நேரம் பேசவும், 10 மணி நேரம் இணையத்தில் உலாவவும் முடியுமாம்.

இத்தனைக்கும் மேலாக, தமிழர்கள் அனைவரும் பெருமைபடும் வகையில் ‘ஐபோன் 4’ தமிழில் உள்ள வரிகளை அப்படியே தமிழில் கொடுக்கும் வகையில் உருவாக்கம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

iOS4இல் இயல்பாகச் சேர்க்கப்பட்டுள்ள தமிழ் இயக்கத்திற்கு மேலும் மெருகூட்டும் வகையில் மலேசியக் கணிஞர் முத்து நெடுமாறன் செல்லினம் எனும் தமிழ்ச் செயலியை வடிவமைத்துச் சாதனைப் புரிந்திருக்கிறார். இதன்வழி தமிழ்மொழியை அடுத்த தொழில்நுட்பத்திற்கு மேம்படுத்தியிருப்பதோடு, தமிழை மேலும் ஒரு படி உயர்த்தியிருக்கிறார்.

ஐபோன்-3G, ஐபோன்-3GS மற்றும் ஐபோன்-4 ஆகிய நான்கு வகை ஐபோன் கருவிகளிலும், இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை ஐ-பாட் டச் (iPod Touch) கருவிகளிலும் iOS4 இயங்குதளம் இயங்கும். இந்த இயக்கத்தைப் பெற்ற அனைவருமே தமிழ் வரிகளைத் திரைகளில் அனுபவிக்கலாம். மலேசிய உருவாக்கமான செல்லினத்தைக் கொண்டு தமிழ் வரிகளைக் கோர்த்து, மின் அஞ்சலாகவும் குறுஞ்செய்தியாகவும் தமிழ் வரிகளை அனுப்பலாம். மேலும் இந்தக் கருவிகளில் வடிவமைக்கப்பட்ட முகநூல்(Facebook) டிவிட்டர் (Twitter) போன்ற செயலிகளிலும் தமிழ் வரிகளைத் தடையின்றிக் காணலாம்.

(விக்கிபீடீயாவில் இருக்கும் தமிழ்ப் பக்கம்)

நவின தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தமிழ்மொழியும் செயல்பட முடியும் என்பதற்கு இந்தப் புதிய கண்டுபிடிப்பு நல்ல சான்றாக அமைந்திருக்கிறது. தமிழின் நிலையை அல்லது இருப்பை உறுதிபடுத்தும் வகையில் இந்த ஆக்கம் அமைந்திருக்கிறது.

(ஐபோனில் மோபைல்கினி செய்தி)

இவ்விடயம் குறித்து திரு.முத்து நெடுமாறனுடன் உரையாடினேன். அதனை அப்படியே கீழே தருகின்றேன்.

சுப.ந:- ஐபோன் 4 கருவியில் தமிழ் நிலையை மேலும் ஒரு படி உயர்த்தியுள்ளீர்கள்....
முத்து:-இன்னும் உயர்த்த திட்டம் இருக்கிறது .... அவற்றிற்கான வேலையை செய்து கொண்டிருக்கிறேன்
சுப.ந:-மகிழ்ச்சியும்... பெருமையும் ஒரு சேர ஏற்படுகிறது....
முத்து:-தமிழகத்தில் இதன் பயன்பாடு அவ்வளவு இல்லாவிட்டாலும், நமது நாட்டிலும் சிங்கப்பூரிலும் அதிகம் பேர் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்
சுப.ந:-தங்கள் பணிகள் அளப்பரியன...
முத்து:- அடுத்த மாதம் ஐ-போன்4 நமது நாட்டில் வெளிவர வாய்ப்பிருக்கிறது
சுப.ந:-அப்படியா?
முத்து:-கடந்த வாரம் இதை நான் சிங்கப்பூரில் வாங்கினேன்.....தமிழ் எழுத்துகள் மிகவும் அழகாகத் தோன்றுகின்றன. அஞ்சல் உள்ளீட்டு முறையையும் அதில் சேர்த்துவிட்டேன்
சுப.ந:-கேட்கவே பெருமிதமாக உள்ளது.
முத்து:-தமிழிலேயே மின்-அஞ்சல், குறுஞ்செய்தி, ஃபேஸ்புக் போன்ற செய்திகளை அதில் இருந்து அனுப்பலாம்
சுப.ந:-கணித்தமிழைப் பயன்படுத்தும் ஆர்வம் இப்போது கொஞ்சம் கூடியுள்ளது நம் நாட்டில்... அதைத் தங்கள் கண்டுபிடிப்புகள் மேலும் வளர்த்தெடுக்க கண்டிப்பாக உதவும்.....
முத்து:-நானும் அதையே விரும்புகிறேன்

(ஐ-டியூன்சில் தமிழ் பாடல்களின் பெயர்கள்)

திரு.முத்து நெடுமாறன் சொன்னது போல, இந்தப் புதிய வகை ‘ஐபோன் 4’இல் தமிழிலேயே எல்லா வேலைகளையும் செய்ய முடியும் என்பது தமிழுக்குக் கிடைத்த பெரும் பேறு என்றால் மிகையன்று. மேலும், ‘ஐ-டியுன்’ எனப்படும் இசை நிரலியில் பாடல்களின் பெயர்களையும் பாடல் விவரங்களையும் தமிழிலேயே பதிவுசெய்து கொள்ள முடியும்.

‘ஐ-போன் 4’ தமிழிலேயே வழங்கும் சேவைகளை இப்பதிவின் இடையிடையே உள்ள படங்கள் வழியாக நீங்களே பார்த்திருப்பீர்கள். உங்களையும் அறியாமல் உங்கள் புருவங்கள் இரண்டும் மேலே உயர்ந்தனவே கவனித்தீர்களா?

  • மேலதிக தகவல்களுக்குப் பின்வரும் தொடுப்புகளைச் சொடுக்கவும்:-
3. செல்லினம் முகநூல் (http://facebook.com/sellinam)

Sunday, August 08, 2010

இணைய மாநாட்டு உரை:- மலேசியக் கணிஞர் முத்து நெடுமாறன்


நமது மலேசியா கண்டெடுத்த முத்து. தமிழ்க் கணினி உலகின் சொத்து. கணினியில் செயல்படும் 'முரசு' தமிழ்ச் செயலியை உருவாக்கி, பிறகு கைபேசியில் செயல்படும் 'செல்லினம்' தமிழ்ச் செயலியை உருவாக்கி தமிழைத் தொழில்நுட்பத்திற்குள் கொண்டுவந்து சாதனை படைத்தவர்.

கணினி, கைபேசிக்குள் தமிழ் வந்தால் போதாது. அடுத்துவரப்போகும் ஐபோன்(iPhone), ஐபேட்(iPad) தொழில்நுட்பத்திலும் தமிழை மிளிரச்செய்யும் பணிகளை அமைதியாகச் செய்துகொண்டிருப்பவர்; கணிமைத் தொழில்நுட்பத்தில் தமிழை அடுத்த தளத்திற்குக் கொண்டுசெல்வதில் முனைப்பாக இருப்பவர்.

இந்த அறிமுகத்திலேயே இந்நேரம் இவரைத் தெரிந்திருந்திருக்கும் உங்களுக்கு. ஆம், நமது மலேசியத் தமிழர்களின் நிகராளியாக இருந்து கணிமை உலகில் பன்னாட்டுத் தமிழ் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள அந்தப் பெருமைக்குரியவர் நமது முத்து நெடுமாறன்தான்.

அண்மையில் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் இணை மாநாடாக நடந்த தமிழ் இணைய மாநாட்டில் முத்து நெடுமாறன் தமிழின் வளர்ச்சியை மேலும் பல படிகள் உயர்த்தும் வகையில் தம்முடைய அரிய கண்டுபிடிப்பு பற்றி பேசினார்.

கணினி, இணையத் தொழில்நுட்பத் துறையில் தமிழ்மொழி மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இவருடைய உரை நல்ல சான்று. இவருடைய உரை தமிழ் மீதான நம்பிக்கையை பல மடங்கு கூட்டுகிறது. தமிழைப் பற்றிய தாழ்வு எண்ணங்களை உடைத்துப் போடுகிறது. அடுத்த நூற்றாண்டிலும் தமிழ் நிலைத்து வாழும் என்ற நம்பிக்கையை விதைக்கிறது.

அனைவரும் கேட்க வேண்டிய முத்து நெடுமாறன் அவர்களின் உரை நிகழ்படமாக இதோ:-

பகுதி 1:- (முத்து நெடுமாறன் உரை 6.50 நிமயத்தில் தொடங்குகிறது)

பகுதி 2:-


பகுதி 3:-

பகுதி 4:-

பகுதி 5:-

பகுதி 6:-


Monday, August 02, 2010

செம்மொழி மாநாட்டு உரை:- பெ.இராஜேந்திரன் / பேரா.ரெ.கா

கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ள மலேசியாவிலிருந்து பெரிய குழுவை அழைத்துச் சென்றவர் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரன். அம்மாநாட்டில் மலேசியத் தமிழர்களுக்குத் தனி முத்திரையை ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். மலேசியக் கட்டுரையாளர்களின் ஆய்வுக் கட்டுரைகளைத் தொகுத்து 'மலேசிய அறிமுக மலரை' இவர் பொறுப்பேற்றிருக்கும் ம.த.எழுத்தாளர் சங்கம் வெளியிட்டிருந்தது.

''குடியேறிய நாட்டில் தமிழ் இலக்கியத்தைக் காப்பாற்றுதலும் வளர்த்தலும்" எனும் தலைப்பில் பெ.இராஜேந்திரன் அவர்கள் கட்டுரை படைத்தார். அதன் நிகழ்படம் கீழே தரப்படுகிறது.

பகுதி 1:-


பகுதி 2:-


பகுதி 3:-

ம.த.எழுத்தாளர் சங்கத்தின் துணைத்தலைவரும், சிறுகதை எழுத்தாளருமான பேராசிரியர் ரெ.கார்த்திகேசு அவர்களும் இம்மாநாட்டில் கலந்துகொண்டு கட்டுரை படைத்தார். இவருடைய கட்டுரையின் தலைப்பு "நவினத் தமிழ் ஊடகங்களில் தமிழ் மொழியின் பயன்பாடு மெய்ம்மையும் அறைகூவல்களும்" என்பதாகும். இவருடைய உரையைக் கீழே வரும் நிகழ்படங்களில் காணலாம்.

பகுதி 1:-

பகுதி 2:-
பகுதி 3:-

குறிப்பு: பேரா.ரெ.கா அவர்களின் உரையின் பகுதி 3 நிகழ்படத்தின் இறுதியில் சீனா நாட்டைச் சேர்ந்த கலையரசி என்று தமிழ்ப்பெயர் சூடிய அம்மையார் அழகு தமிழில் கட்டுரை வாசிப்பதைக் கேட்கலாம்.

பி.கு:-மலேசியத் தமிழர்களின் மாநாட்டுக் கட்டுரைகள் தொடர்ந்து திருத்தமிழில் இடம்பெறும். தவறாமல் பாருங்கள் - கேளுங்கள்.

Sunday, August 01, 2010

மலாயா பல்கலை தமிழ்த்துறை மறுமலர்ச்சி காணட்டும்


1-8-2010 முதற்கொண்டு இணைப்பேராசிரியர் முனைவர் சு.குமரன் அவர்கள் மீண்டும் தமிழ்த்துறை தலைவர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தால், நாட்டின் மிக உயரிய கல்வி நிறுவனத்தில் நமது கையைவிட்டுப் போன தாய்மொழி உரிமை மீண்டும் கையகமாகியுள்ளது.

இந்த மகிழ்ச்சியான நேரத்தில் முனைவர் சு.குமரன் ஐயா அவர்களுக்குத் திருத்தமிழ் தமது மனமார்ந்த நல்வாழ்த்தைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. ஓராண்டாய் சுற்றிச் சூழந்த கருமேகங்கள் களைந்து இன்று புத்தொளி பிறந்துள்ளது. இதுவரை இருந்த நெருக்கடிகள் நீங்கி இன்று புத்தெழுச்சி ஏற்பட்டுள்ளது. இனிவரும் காலம் நமது தமிழ்த்துறைக்குப் பொற்காலமாக அமைய வேண்டும். புதிய சிந்தனையோடு புதுப்புது இலக்குகளை இனி எட்ட வேண்டும்; புதுப்புது பாதைகளைத் தேடி பாதங்கள் பதிய வேண்டும். மலேசியாவில் தமிழும் தமிழரும் எழுச்சி பெற - ஏற்றம் காண மலாயா பலகலை தமிழத்துறை தக்கனவற்றைச் செய்ய வேண்டும்; தகுந்த நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும்.

இத்தனைக்கும் மேலாக, அங்குப் பணியாற்றும் நமது மரியாதைக்குரிய கல்விமான்கள் அனைவரும் தனித்தனி விருப்பு வெறுப்புகளுக்கு இடங்கொடாமல்; மொழியின, சமுதாய நலம் என்ற ஒருமித்த சிந்தனையில் ஒருகுடையின் கீழ் ஒன்றுபட்டு; முனைவர் சு.குமரன் அவர்களின் தலைமைக் கரங்களை வலுப்படுத்தி வீறுகொண்டு எழவேண்டும் – வெற்றிகளைக் குவிக்க வேண்டும் எனத் திருத்தமிழ் வேண்டிக் கேட்டுக்கொள்கிறது.

மலேசியாவின் மூத்த பல்கலைக்கழகமாக விளங்குவதோடு, மலேசியத் தமிழர்களின் தாய்மொழிக்கும் தாய்மொழிக் கல்விக்கும் உரிமைச் சின்னமாக - உயரிய சின்னமாக இருக்கும் கல்வி நிறுவனம் மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை என்றால் சாலப் பொருந்தும். தமிழவேள் கோ.சாரங்கபாணியின் தலைமையில் மலேசியத் தமிழர்கள் முன்னெடுத்த ‘தமிழ் எங்கள் உயிர்’ என்னும் மொழிப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியின் அடையாளச் சின்னமாக இந்தத் தமிழ்த்துறை வீற்றிருக்கிறது என்பது பெருமைக்குரிய வரலாறு.

கடந்த 2009இல் இத்துறையில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டது. இதனால் 2009 சூலைத் திங்கள் 2ஆம் நாள் இத்துறைக்கான தலைவரைப் பல்கலை நிருவாகம் பதவியிலிருந்து அகற்றியது. காலங்காலமாக நம்மவர்கள் அலங்கரித்த தலைவர் பதவிக்குத் தமிழரல்லாத வேறு ஒருவர் நியமிக்கப்பட்டார். அதுமட்டுமல்லாது, அத்துறையின் பெயரும் மாற்றப்படும் இக்கட்டான சூழல் உருவாகியது.

இத்தனை கசப்பான நெருக்கடிகள் நடந்து மலேசியத் தமிழர்கள் ஓராண்டு காலமாக வாட்டமுற்று இருந்த வேளையில், கைவிட்டுப் போன தமிழ்த்துறை தலைவர் பதவி இன்று மீண்டும் கிடைத்திருக்கிறது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. இதற்கு, நமது சமுதாய அமைப்புகளின் போராட்டமும் மக்களின் கோரிக்கைகளுமே முகாமையான கரணியம் என்றால் மிகையாகாது. மலாயாப் பல்கலையில் தமிழுக்கு இடமில்லையா? என்று சமுதாயத்தில் ஏற்பட்ட மனவருத்தம்தான் இன்று அத்துறையையும் அதற்குரிய தலைமை பொறுப்பையும் மீட்டுக்கொடுத்திருக்கிறது. இதுதான் உண்மை.

ஆகவே, எப்போதும் – எந்தச் சூழலிலும் தமிழுக்கு முன்னுரிமை கொடுத்துத் தமிழை வாழவைக்க முன்னின்று போராடும் தமிழ் இயக்கங்களும் அதன் தலைவர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள். காணாமல் போகவிருந்த தமிழின் அரியணையைக் காப்பாற்றிக்கொடுத்த அவர்களுக்குச் சமுதாயமே நன்றிக்கடன் பட்டிருக்கிறது. இந்த உண்மை நிலையை உணர்ந்து தமிழ்த்துறை பணியாளர்கள் தங்கள் பணிகளை உளமாற ஆற்றுவார்கள் என்று சமுதாயம் மிகவும் நம்பிக்கையோடு காத்திருக்கிறது.

இந்த நம்பிக்கையைத்தான் சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும் பதிவு செய்திருகின்றனர். அதற்குப் பின்வரும் செய்திகளே சான்றாகும்.

1.டத்தோ சுப்ரா அவர்கள்
அரை நூற்றாண்டு காலப் பெருமை வாய்ந்த இந்திய ஆய்வியல் துறை ஒரு வரலாற்றுப்பூர்வமான அமைப்பு. தமிழ், தமிழ் இலக்கியம், மொழி, இனம், கலை, பண்பாடு ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டு செயல்படும் மிகப் பெரிய நிறுவனமான இந்திய ஆய்வியல் துறைக்கென்று ஒரு வரலாற்றுப் பெருமை இருந்தது. அத்துறை சார்ந்த பொறுப்பாளர்கள் மீண்டும் ஒன்றிணைந்து மொழி வளர்ச்சிக்கும் மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் பாடுபட வேண்டும். (மக்கள் ஓசை 1.8.2010)

2.தான்ஸ்ரீ குமரன் அவர்கள்
நாடு முழுவதுமுள்ள தமிழர்களும் தமிழ் இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் இதனைத் தங்களது தன்மானப் பிரச்சனையாக எடுத்துக்கொண்டு நடத்திய கூட்டு முயற்சிகளின் வழியாக ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் முனைவர் சு.குமரன் துறைத் தலைவராக நியமிக்கப்பட்டுளார். இ.ஆ.துறையில் தகுதியும் திறமையும் கொண்ட கல்வியாளர்கள் பணியாற்றுகின்றனர் என்பதற்கு இது சான்றாகும். இ.ஆ.துறை கல்வியாளர்கள் அனைவரும் சமுதாய நலனை மனத்திற்கொண்டு, சமுதாய மையமாக அதனைச் செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இ.ஆ.துறை வளர்ச்சியில் சமுதாயம் நம்பிக்கை கொண்டுள்ளது. பேராசிரியர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளது. எனவே, இன்பத் தமிழுக்கு இணைந்து பாடுபடுவோம். (மலேசிய நண்பன் 1.8.2010)

3.சு.வை.லிங்கம் (தமிழ்க் காப்பகத் தலைவர்)
கடந்த ஓராண்டுக்கு மேலாக இழுபறியாக இருந்த ம.ப இந்திய ஆய்வியல் துறைத் தலைவர் பதவி மீண்டும் தமிழர் ஒருவருக்கே நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. சமூகத்தின் கோரிக்கை வெற்றி பெற்றுள்ளது. இ.ஆ.துறையைச் சார்ந்த விரிவுரையாளர்களின் ஒற்றுமையும் இதற்கு காரணமாகும். அனைவருடனும் இணைந்து செயலாற்றுவதில் முனைவர் சு.குமரன் வெற்றி பெறுவார் என நம்பிக்கை கொள்வோம். (மக்கள் ஓசை 1.8.2010)


4.இரெ.சு.முத்தையா (மலேசியத் திராவிடர் கழகத் தலைவர்)
புலம்பெயர் தமிழர்க்கெல்லாம் பெருமை சேர்த்த கல்விக் களமான மலாயாப் பல்கலைக்கழக தமிழாய்வியல் பிரிவின் மகுடம் ஓராட்ண்டு காலமாக ஒளியிழந்து காணப்பட்டது. இணைப் பேராசிரியர் முனைவர் சு.குமரன் மீண்டும் தமிழாய்வுப் பிரிவுக்குத் தலைமை ஏற்கிறார். இந்த நிலைக்காகப் பாடுபட்ட அனைத்து தரப்பினருக்கும் நன்றி. (மலேசிய நண்பன் 1.8.2010)

நாட்டின் சிறந்த கல்விமானாக விளங்கும் மரியாதைக்குரிய முனைவர் சு.குமரன் ஐயா அவர்கள் சமுதாயத்தின் இந்த நம்பிக்கையை நிச்சியமாக உணர்ந்திருப்பார். வெகு அக்கறையோடும் மிக நேர்த்தியோடும் செயல்பட்டு சமுதாயத்தின் நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுப்பார் என நம்புவோம்; அவருக்குத் துணைநின்று தோளுரம் ஊட்டுவோம்; நமது தமிழ்த்துறையைச் மொழி – இன – சமுதாய நடுவமாக வளர்த்தெடுப்போம்.

Blog Widget by LinkWithin