Tuesday, August 31, 2010

சஞ்சியிலே வந்தவங்க தாண்டவக் கோனே!


மனதைத் தொட்ட மரபுக்கவிதை - 3

ரெ.ச என்று எல்லோராலும் அன்பொழுக அழைக்கப்படும் ரெ.சண்முகம் அவர்களின் பாடலை இந்தத் தொடரில் பதிவு செய்கிறேன்.

பாடகர், இசையமைப்பாளர், பாவலர், பாடலாசிரியர், மேடை நாடகாசிரியர், வானொலி நாடக ஆசிரியர், நடிகர், இயக்குநர், கட்டுரையாசிரியர், சிறுகதை எழுத்தாளர் எனப் பன்முக ஆற்றல்பெற்ற அரும்பெறல் கலைஞர் ரெ.சண்முகம். மலேசிய வானொலி அறிவிப்பாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார் என்பது இவருடைய மற்றொரு வரலாறு.

இவருடைய “செந்தாழம் பூவாய்” பாடல் திரைப்பாட்டுகளுக்கே வெல்விளி (சவால்) விடும் அளவுக்கு மிகச் சிறந்த பாடலாக புகழ்பெற்றது என்ற செய்தி பலர் அறிந்ததே. இவருடைய குரலுக்கு மயங்கியோர் நாட்டில் பலர் உள்ளனர்.

இவர் சில நூல்களையும் எழுதி மலேசிய எழுத்துலகைச் செழிக்கச் செய்துள்ளார். அவற்றுள் ரெ.ச.இசைப்பாடல்கள், பிரார்த்தனை (கவிதை), நல்லதே செய்வோம் (கட்டுரை), இந்த மேடையில் சில நாடகங்கள் (சுய சரிதை) ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கன.

மலேசிய தமிழ் இசைக்கலை வாழ்விலும் வளர்ச்சியிலும் ரெ.ச எனும் பெயர் இரண்டறக் கலந்திருக்கிறது. இவருடைய அரும்பணிகளைப் பாராட்டும் வகையில் ‘செவ்விசைச் சித்தர்’ எனும் விருதும் வழங்கப்பட்டுள்ளது.

மலேசியத் தமிழர்களிடையே சாதனை மாந்தராகத் திகழும் செவ்விசைச் சித்தர் ரெ.ச அவர்களின் பாடலொன்று இங்கே பதிவாகிறது. பொருள் விளக்கமே தேவையில்லாமல் புரிந்துகொள்ளும் அளவுக்கு மிக எளிமையான பாடல் இது. மலேசியத் தமிழர்களின் அன்றைய வரலாறு, இன்றைய நிலைமை ஆகிய இரண்டையும் படம்பிடித்துக் காட்டும் ‘சித்தர்’ பாட்டு இது.

**********************
பிரித்தானிய ஆட்சியின்போது தமிழகத்திலிருந்து ஒப்பந்தக் (சஞ்சி) கூலிகளாகத் தமிழ் மக்கள் மலாயாவுக்குக் கொண்டுவரப்பட்ட வரலாற்றிலிருந்து பாடல் தொடங்குகிறது. இங்கு வந்த தமிழர்கள் காட்டுலும் மேட்டிலும் உழைத்து நாட்டைக் கட்டியெழுப்பிய கதைப் போகிற போக்கில் சொல்லிப் போகிறார் கவிஞர். கூடவே, மலேசியத் தமிழர்களின் இன்றைய அவலங்களையும் பாடிக் காட்டுகிறார்.


சஞ்சியிலே வந்தவங்க தாண்டவக் கோனே - இன்னைக்கும்
சரியாக அமையலயே தாண்டவக் கோனே
மிஞ்சிப்போயி நிக்குதையா தாண்டவக் கோனே - கொஞ்சம்
மிதிக்கத்தானே பாக்குறாங்க தாண்டவக் கோனே

காரினிலே பறக்குறவங்க தாண்டவக் கோனே – நல்ல
கனவிலயும் மிதக்குறாங்க தாண்டவக் கோனே
தாருபோட்டு ரோடு போட்டவன் தாண்டவக் கோனே – இன்னும்
தரையினிலே தவழுறானே தாண்டவக் கோனே


இவனுக்குள்ளயே ஏமாத்துறான் தாண்டவக் கோனே – அத
எதுத்துபுட்டா திரும்பஒத தாண்டவக் கோனே
கவனத்தோட வாழலயே தாண்டவக் கோனே – இன்னும்
கன்னிகழி யாதவந்தான் தாண்டவக் கோனே

அடுத்துவரும் அடிகள் முக்கியமானவை. தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியைப் பக்குவமாகச் சொல்லிச் செல்லுவது கவரும்படியாக உள்ளது.

புள்ளைங்கள்ளாம் படிக்கிறாங்க தாண்டவக் கோனே – அங்கே
போடுறதுல கையவச்சான் தாண்டவக் கோனே
அள்ளி அள்ளி ஊட்டுறானே தாண்டவக் கோனே – எதுக்கும்
ஆகாத முண்டங்களுக்குத் தாண்டவக் கோனே

மலேசிய அரசியல் சூழல் இன்று மாற்றத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இந்த மாற்றத்தின் காரணமாக அரசியல் பிழைப்போரிடமும் மேல்மட்டத் தலைவர்கள் தொடங்கி குட்டி குட்டி தலைவர்கள் வரையில் தன்னலப் போக்கு வரம்புமீறி போய்க்கொண்டிருக்கிறது. தன்னலத்துக்காக தன் இனத்தையே அழிக்கும் அளவுக்கு இன்று தமிழர்கள் துணிந்துவிட்டார்கள். இது அரசியல் நிலை என்றால், குடும்ப அளவிலும் இன்று இதே நிலைமைதான். ஒற்றுமை, புரிந்துணர்வு, விட்டுக்கொடுத்தல் முதலிய பண்புகள் நலிந்துபோய்விட்டன. தமிழர்கள் தங்களுக்குள்ளேயே பிளவுபட்டதும் அல்லாமல் அடித்துக்கொள்வது பேரவலமாக இருக்கின்றது. அடுத்த அடிகளில் செவ்விசைச் சித்தரும் இதனையே சொல்லுவதைப் பாருங்கள்.

கோடரிக்கும் காம்புபோல தாண்டவக் கோனே – இவன்
கோளுவச்சான் குடிகெடுத்தான் தாண்டவக் கோனே
மாடுபோல பாடுபட்டான் தாண்டவக் கோனே – இன்னும்
மனுசனாக மாறலியே தாண்டவக் கோனே


ரெண்டாயிரம் வந்திடுச்சி தாண்டவக் கோனே – இன்னும்
ரெண்டு ரெண்டா பிரிஞ்சுருக்கான் தாண்டவக் கோனே
மண்டுத்தனமா வாழுறத தாண்டவக் கோனே – இவன்
மகத்துவமா நினைக்கிறானே தாண்டவக் கோனே

இன்று 53ஆவது மலேசிய தேசிய நாளை முன்னிட்டு, இந்தப் பாடலை உங்கள் சிந்தனைக்காகப் பரிமாறுகிறேன்.

“தேசிய நாள் நல்வாழ்த்து”


1 comment:

Tamilvanan said...

சிந்திப்போம், சுதாக‌ரித்துக் கொள்வோம்,தேவையான‌ மாற்ற‌ங்க‌ள் வ‌ரும் வ‌ரை செய‌லாற்றுவோம்." இப்பொழுது இல்லையென்றால் எப்பொழுது? நாம் இல்லையென்றால் வேறு யார்?" என்றுண‌ர்ந்து, ந‌ம்முன் உள்ள‌ ச‌வால்க‌ளை க‌ண்டெடுத்து, தீர்வுக்கு வ‌ழி காண்போம். தேசிய‌ தின‌ வாழ்த்துக்க‌ள்.

Blog Widget by LinkWithin