Saturday, April 24, 2010

பள்ளிப் பாடநூலில் சுழியம்! தமிழுக்கு வெற்றி!!



2012 தொடங்கி மலேசியத் தமிழ்ப்பள்ளிகளில் கணிதம், அறிவியல் ஆகிய இரு பாடங்கள் தமிழிலேயே கற்பிக்கப்பட உள்ளன. இதற்காக பாடநூல்கள் தமிழில் உருவாகி வருகின்றன. அதில் ‘சுழியம்’, ‘பூஜியம்’ ஆகிய இரண்டில் எதனைப் பயன்படுத்துவது என்ற சர்ச்சை அண்மையில் எழுந்தது. இந்தச் சிக்கல் தொடர்பில் மலேசிய இந்தியன் காங்கிரசு (ம.இ.கா) கட்சியின் கல்விக்குழு ஏற்பாட்டில் 22-4—2010ஆம் நாளன்று கூட்டம் நடந்தது.

தமிழ்மொழிக்கான கலைத்திட்டம், பாடநூல் ஆகியவற்றில் இனிமேல் ‘சுழியம்’ எனும் தமிழ்ச்சொல் பயன்படுத்தப்பட இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்ப் பள்ளிப் பாடநூலில் தமிழே இடம்பெற வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இப்படியொரு நல்ல முடிவு காணப்பட்டது மகிழ்ச்சிக்குரியது. சுழியத்தை நிலைநிறுத்த தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்ட அனைவரும் பாராட்டுதலுக்கு உரியவர்கள். இதுகுறித்த விரிவான செய்தி கீழே தரப்பட்டுள்ளது. – சுப.ந


**********************


கோலாலம்பூர் எப்.24,
ம.இ.கா கல்விக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற சந்திப்புக் கூட்டத்தில் பூஜ்யம் அல்லது சுழியம் தொடர்பான சிக்கலுக்குச் சுமுகமான தீர்வு காணப்பட்டது. கல்விக் குழுத் தலைவர் டத்தோ டாக்டர் மாரிமுத்துவின் தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்புக் கூட்டத்தில் பேராசிரியர் முனைவர் கருணாகரன், இணைப்பேராசிரியர் கிருஷ்ணன் மணியம், பல்வேறு சமூக அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ எனும் கோட்பாட்டின் அடிப்படையில் இனி சுழியம் பயன்படுத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது.

பாடநூல் மற்றும் கலைத்திட்ட ஆவணங்களில் இச்சொல் இனிவரும் காலங்களில் பயன்படுத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது.
கலைத்திட்டப் பிரிவு, தேர்வு வாரியம் மற்றும் பாடநூல் பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.

சமூக அமைப்புகளீன் நிகராளிகள் தமிழ்க் காப்பகம், தமிழ் மணிமன்றம், இந்து தர்ம மாமன்றம், திராவிடர் கழகம், தமிழ் இலக்கியக் கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், உலகத் தமிழாசிரியர் மாநாட்டு மலேசியச் செயலகம் மற்றும் ம.இ.கா கல்விக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்த முடிவை ம.இ.கா கல்விக்குழு ஒரு கோரிக்கையாக கல்வி அமைச்சிற்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது.

தமிழ்மொழி தொடர்பான சிக்கல்களை ஆராய்ந்து தீர்வு காண ம.இ.கா கல்விக் குழுவின் கீழ் பல்வேறு தரப்பினர் இடம்பெறும் ஒரு துணைக்குழு நியமிக்கப்படும் எனவும், தற்போது தயார்நிலையில் உள்ள கலைச்சொல் அகராதியை ம.இ.கா கல்விக்குழு பரிசீலித்து ஏற்றுக்கொண்ட பின்னர், கல்வி அமைச்சின் அங்கீகாரத்திற்கும் பயன்பாட்டிற்கும் சமர்ப்பிக்கப்படும் எனவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

  • செய்தி: தமிழ் நேசன் (24.4.2010)

தொடர்பான செய்திகள்:-

1. "0" :- சுழியமா? பூச்சியமா?

2. கணிதம், அறிவியல் பாடநூலில் தமிழ் புறக்கணிப்பு

3. பாடநூலில் பூச்சியமே போ! போ! சுழியமே வா! வா!

2 comments:

தமிழரண் said...

வணக்கம்.

மிக்க மகிழ்ச்சியான செய்தி ஐயா. இது போன்ற பல நல்ல தமிழ்ச்சொற்கள் தொடர்ந்து வர வேண்டும்.

Karthigasu said...

மகிழ்ச்சியான செய்தி.இந்த வெற்றிக்குத் துணை நின்ற எல்லா தமிழ்ச் சார்ந்த இயக்கங்களுக்கும் நன்றி.

இனி வரும் காலங்களில் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் இன்னல் ஏற்பட்டால்,
“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் கலளைவதுஆம் நட்பு” என்ற வள்ளுவரின் கூற்றுக்கேற்ப தமிழர்கள் ஒன்றிணைந்து களைய வேண்டும்.

நன்றி, தமிழோடு உயர்வோம்

Blog Widget by LinkWithin