Saturday, September 01, 2012

தமிழ்க் கட்டாயப் பாடம்:- பேராபத்து நிறைந்த பரிந்துரை

தற்போது மலேசியத் திருநாட்டில் 523 தமிழ்ப்பள்ளிகள் செயல்படுகின்றன. மேலும் 6 புதிய தமிழ்ப்பள்ளிகளை அமைப்பதற்கு அண்மையில் நமது மாண்புமிகு பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் இரசாக் அவர்கள் அதிகாரப்படியாக அறிவிப்பு  செய்திருந்தார். இந்நாட்டில் நம்முடைய தாய்மொழி உரிமையாக விளங்கும் தமிழ்ப்பள்ளிகளில் 'தமிழ்மொழி' கட்டாயப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் 103,000 மாணவர்கள் தமிழைக் கட்டாயப் பாடமாகப் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தேசியப் பள்ளிகளில் அதாவது மலாய்ப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக ஆக்க வேண்டும் எனச் சிலர் பரிந்துரை செய்துள்ளனர். இதனால், பெரும் பாதிப்புகளையும் இழப்புகளையும் நமது சமுதாயம் எதிர்கொள்ளும் என அஞ்சப்படுகிறது. இந்தக் கட்டாயப் பாடப் பரிந்துரையை எதிர்த்து நான் எழுதிய செய்தி நாளிதழில் வெளிவதிருந்தது. பின்னர் அச்செய்தி முகநூலில் இடம்பெற்று பல்வேறு எதிர்வினைகளை ஏற்படுத்தியது. அவற்றுள் சிலவற்றை இங்குத் தொகுத்து அளித்துள்ளேன்.

மலேசிய நண்பன் நாளிதழ் செய்தி - 23.08.2012

K.s. Senba வாழ்த்துகள் ஐயா!.... இன்னும் நமது தமிழ்மொழியை எப்படி எல்லாம் தத்துக்கொடுத்துச் சீரழிக்க போகிறார்களோ என்று தெரியவில்லை... மொழி உணர்வு ஒருவருக்கு இல்லாவிடில் அவர் மரத்துக்குச் சமம். சீனர்களுக்கு இருக்கும் மொழிப்பற்று நம்மில் பலருக்கு இல்லை என்று உணரும்போது... மனம் வலிக்கிறது.. தேசியப்பள்ளியில் தமிழ்மொழியைக் கட்டாயப்பாடமாக்கினால் என்னவாகும்? ஏற்கனவே தமிழ்ப்பள்ளியில் தமிழ், நன்னெறி மட்டும்தான் தமிழில் போதிக்கப்படுகின்றன.................... அங்கேயே நாம் தத்தளித்துக்கொண்டிருக்கும் போது, தேசியப்பள்ளியில் தமிழைக் கட்டாயப்பாடமாக்கினால்.... விரைவில் தமிழ்ப்பள்ளிகளுக்கு மூடுவிழா காண வேண்டியதுதான்... நம் விரல்களால் கண்களைக் குருடாக்கிக் கொள்ளவும், நம் கழுத்திற்கு நாமே கத்தியை வைத்துக் கொள்ளவும் வழி செய்யும் இந்த யோசனையைக் குழித் தோண்டிப் புதைப்போம்... தமிழையும், தமிழ்ப்பள்ளிகளையும் வாழ வைப்போம்... தமிழுணர்வு கொண்ட அனைவரும் ஒன்றாய் கரம் சேர்ப்போம்.. நம் இனத்தைக் காக்க வேண்டுமானால்; நம் மொழியையையும், பள்ளியையும் காப்போம்!!!

Ramani Darman வாழ்த்துகள் நண்பரே! இந்தப் போராட்டத்திற்கு இன மானமுள்ள தமிழர்கள் கண்டிப்பாக தோள் கொடுப்பர்.

Johnson Victor எலி வலையானாலும் தனி வலை வேணும். இது என்ன ஒரு வசதியும் இல்லை. நரியின் குகையில் தஞ்சம் புகுந்து கொள்ளலாம் என்று நினைப்பது, தனக்குத் தானே உலை வைப்பதற்குச் சமம். 

Thiagaseelan Ganesan நண்பர்களே, நற்குணன் மிகச் சரியாகத் தான் கூறியிருக்கிறார். தேசிய பள்ளியில் தமிழ் கட்டாயமாக்கப்பட்டால், தமிழ்ப்பள்ளியில்தான் தமிழ் பயில முடியும் என்கிற நிலமை மாறிவிடும். இது தமிழ்ப்பள்ளிகளின் மூடுவிழாவிற்கு வித்திடும். எப்படி சீன மொழிகள் சீன பள்ளிகளில் கற்பிக்கப்படுகின்றதோ, தமிழும் தமிழ் பள்ளியில் மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும். தலைப்பை தவறாகப் படித்து உணர்ச்சிவசப்பட்டு ஒரு புண்ணியமில்லை. நிதானத்தோடு யோசித்துப்பாருங்கள், நற்குணனின் செயல் உங்களுக்குப் புரியும்.

Kandasamy Chinnayah Kandasamy தமிழ் பற்றாளர்கள் கண்டிப்பாக தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப் பள்ளிக்குத்தான் அனுப்புவார்கள். ஏனென்றால், அங்கு தான் வள்ளுவரைப் பற்றியும் ஒளவையாரைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடியும். தேசிய பள்ளிகளில் சரஸ்வதியைப் பார்க்க முடியாது , ஆகையினால் தேசியப் பள்ளிகளில் தமிழ் பாடங்களை கட்டடாயப் பாடமாக்குவது பற்றி அஞ்சத் தேவை இல்லை.

Thanesh Balakrishnan தமிழ்ப்பள்ளியில் படிக்கின்றவனால் மட்டுமே மொழியின் சுவை அறிய முடியும் என்றால் ஒரு முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போன்றாகிவிடும். தமிழ்ப்பாடத்தைத் தேசியப் பள்ளிகளில் இந்திய மாணவர்களுக்குக் கட்டாயப் பாடமாக்கப்பட்டால் அது நம் தமிழ்த்தாய்க்குக் கிடைத்த அங்கீகரிப்பாகும். சிந்தனை செய் மனமே சொல்லிவிட்டு, வெறுமனே இல்லாமல் ஆக்கச் சிந்தனையோடு யோசிப்போம்; விவாதிப்போம். நம் தமிழர்கள் வீரத் தமிழர்கள் என்பதனை மனதில் வைத்துக் கொண்டு செயல்படுவோம். 

Elangovan Annamalai என்னைப் பொருத்தவரை.. தேசியப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக்கினால் நன்று தானே....சில இடங்களில் தமிழ்ப்பள்ளிகள் வெகு தூரம் இருப்பதால் சில பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளைத் தேசியப் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர்...அவர்களுக்குத் தமிழின் மீது பற்று கிடையாது என்று கூறிவிடமுடியாது... அப்பேற்பட்ட பெற்றோர்கள் வேறு வழியின்றி தேசியப் பள்ளிகளுக்கு தங்களின் பிள்ளைகளை அனுப்புவது யாரும் குறை சொல்லமுடியாது. இப்பள்ளியில் பயிலும் இந்திய மாணவர்களுக்குத் தமிழ்மொழி கட்டாயப் பாடமாக்குவது தான் சிறப்பு.

Chan Mathi தேசியப் பள்ளிகளில் தமிழ்க்கட்டாயப் பாடமாகும் போது இயல்பாகவே தமிழ்ப்பள்ளி மாணவர்கள் குறைவர் என்பது திண்ணம். PPSMI என்ற திட்டம்(அறிவியல், கணிதம் ஆங்கிலத்தில் போதித்தல்) தொடங்கப்பட்டபோது தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால் இன்று மாணவர் எண்ணிக்கை குறைகின்றது. இவ்வாறு பலவற்றை நாம் இழக்க நேரிடும். தமிழ்ப்பள்ளியில் கலைமகள் வழிபாடு, பொங்கல் விழா, திருமுறை விழா அகியவற்றை நடத்துகின்றோம். ஆனால், தேசியப் பள்ளியில் இவை சாத்தியமா???? தேசியப்பள்ளியில் தமிழைக் கட்டாயமாக்குவதை விடுத்து இடைநிலைப்பள்ளியில் தமிழ்மொழி, இலக்கியத்தைக் கட்டாயப்பாடமாக்கினால் சிறப்பு.

Suba Nargunan சுப நற்குணன் காணி நிலம் இருக்கும் பொழுது கைப்பிடி மண்ணுக்காகப் போராடுவது புத்திசாலித்தனம் என்று நினைக்கிறீர்களா நண்பரே?
1) நம்மிடம் தமிழ்ப்பள்ளி என்ற உரிமை இருக்கிறது.
2 )அங்கு தமிழ்க்கல்வி என்ற உரிமை இருக்கிறது.
3 ) அங்கு நமது கலை, பண்பாடு, சமயம், இலக்கியம் என யாவற்றையும் வளர்த்துக்கொள்ள உரிமை இருக்கிறது.
4 ) தமிழின் பெயரால் நமது மக்கள் ஒன்று கூடுவதற்கு உரிமை இருக்கிறது.

இப்படிப்பட்ட பல உரிமைகளைப் பறிகொடுத்துவிட்டு ஒரே ஒரு ‘தமிழ்ப் பாடம்’ போதும் எங்களுக்கு என்று போராடுவது நமது புத்திசாலித்தனத்திற்கு நல்ல எடுத்துக்காட்டு என்று நான் நினைக்கவில்லை.

Suba Nargunan சுப நற்குணன் வாருங்கள் அன்பர்களே.. கை கோர்ப்போம் நாம்!
தமிழையும் தமிழ்ப்பள்ளிகளையும் ஒருசேர காக்க வேண்டிய தருணம் இது. இப்போது விட்டால்..பிறகு என்றைக்குமே காப்பாற்ற முடியாமல் போய்விடக்கூடும். இன்னும் 50 ஆண்டுகள் கழித்து நம் குழந்தைகள் தமிழுக்காக.. தாய்மொழிக்காக.. தமிழ்ப்பள்ளிக்காக..தமிழ்க்கல்விக்காக.. இந்த நாட்டில் போராட வேண்டிய நெருக்கடியான சூழலை நாம் ஏற்படுத்தி வைக்க வேண்டாம். நிகழ்காலத்தில் நாம் செய்யும் தவறுகள் எதிர்காலத்தில் நம் அடுத்த தலைமுறையைப் பெரிதும் பாதிக்கலாம். நம் குழந்தைகளின் தாய்மொழி உரிமையை.. தமிழ்ப்பள்ளி உரிமையை.. தமிழ்க்கல்வி உரிமை.. நாமே கெடுத்துவிட வேண்டாம். ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைப்போம்! ஒவ்வொரு முடிவையும் மிக மிகப் பொறுமையாக எடுப்போம்!

தேசியப் பள்ளிகளில் தமிழ்க் கட்டாயப் பாடப் பரிந்துரை தொடர்பான செய்திகளைப் படிக்க கீழ்க்காணும் தொடுப்புகளைச் சொடுக்கவும்:-





@சுப.நற்குணன், திருத்தமிழ்

Friday, August 24, 2012

கட்டாயப் பாடம் இல்லாமலே தமிழ் படிக்க 10 திட்டங்கள்


‘தேசியப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும்” என்று தற்பொழுது நாட்டில் ஒரு குழுவினர் ஆள் – அம்பு – படை – சேனை ஆகிய அனைத்துப் பரிவாரங்களோடு கிளம்பி இருக்கிறார்கள். இவர்கள் இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு ஒரு முக்கியமான காரணத்தை முன்வைத்திருக்கிறார்கள். அதாவது,

நாட்டில் உள்ள ஒவ்வொரு தமிழரும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்” என்பதுதான் அந்தக் காரணம்.

சற்று மேலோட்டமாகப் பார்க்கையில், இந்தக் குழுவினர் முன்னெடுத்துள்ள கட்டாயப் பாடத் திட்டமானது மிகச் சரியானது போலவும்; மிகவும் நன்மையானது போலவும்; தமிழ்மொழியை உயர்த்திப் பிடிப்பது போலவும் தோன்றலாம்.

ஆனால், சற்றே ஆழ்ந்து நோக்கி ஆராய்ந்து பார்த்தால்தான் இந்தத் திட்டத்தினால் ஏற்படப்போகும் பேராபத்துகளும் பேரிழப்புகளும் புலப்படும். 

அவற்றுள் சிலவற்றைப் பின்வருமாறு பட்டியலிடலாம்:-

1)தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென குறைந்து போகும்.

2)  இதனால், தமிழ்ப்பள்ளிகள் ஒவ்வொன்றாக மூடப்படும்.

3)  523 தமிழ்ப்பள்ளிகள் படிப்படியாகக் குறைந்து போகும்.

4)தமிழ்க்கல்வி என்னும் அடிப்படை உரிமை பறிபோய், தமிழ்மொழி ஒரு பாடமாக மட்டுமே இருக்கும். 

5)அரசாங்கத் துறைத் தலைவர் (தலைமையாசிரியர்)  பதவிகள் எல்லாம் இல்லாது போகும்.

6)தமிழ்க்கல்வித் துறையில் இருக்கும் ஆசிரியர்கள், அதிகாரிகள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் என்றிருக்கும் பதவிகள், பணிகள், பொறுப்புகள் அனைத்தும் கணிசமாகக் குறைந்து போகும்.
   
7)  தமிழ்ப்பள்ளிகளை நம்பியிருக்கும் அச்சுத்துறை, நூல் பதிப்புத் துறை, பயிற்றுத் துணைப் பொருள் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் முதலான பொருளியல் வாய்ப்புகள் தொலைந்து போகும்.

8)தமிழ்ப்பள்ளிகளைச் சார்ந்து இயங்கும் பெற்றோர் ஆசிரியர் சங்கம், வாரியக் குழு, முன்னாள் மாணவர் சங்கம், தமிழ்ப்பள்ளி ஆசிரியர் சங்கம், தமிழாசிரியர் கூட்டுறவுக் கழகம் முதலான அமைப்புகள்  அனைத்தும் முடக்கப்படும்.

9)தமிழ்ப்பள்ளிக் கட்டடங்கள், நில உரிமங்கள், மண்டபங்கள், நிதி வளங்கள் அனைத்தும் கேட்பார் கொள்வாரின்றி நிலைகெட்டுப் போகும்.

10)மலேசியாவில் தமிழ் மக்களின் வரலாற்றுச் சுவடுகள், வாழ்வியல் சுவடுகள் அனைத்தும் படிப்படியாக மறைந்துபோகும்.

11)வருங்காலத் தமிழ்ச் சமூகத்தின் மொழி, இன, சமய பண்பாட்டு, கூறுகள் அனைத்தும் சிதைந்து சின்னபின்னப்பட்டுப் போகும்.

12)இன்னும் 50 அல்லது 100 ஆண்டுகள் கழித்து தமிழுக்காகவும் தாய்மொழிக்காவும் தமிழ்ப்பள்ளிக்காகவும் தமிழ்க்கல்விக்காகவும் நமது குழந்தைகள் போராட வேண்டிய நெருக்கடி நிலைமை உருவாகும் அல்லது இவற்றைப் பற்றி ஒன்றுமே அறிந்திராத எதிலி இனமாக உருமாறும்.

இப்படியாக இன்னும் பல்வேறு இழப்புகளைப் பட்டியலிட்டுச் சொல்லலாம். இவை ஒவ்வொன்றையும் சான்றுபட விரிவாக விளக்கினால் இந்தக் கட்டுரை நீண்டுவிடும் என்பதால் இதனைச் சுருக்கமாகச் சொல்லி நிறுத்த வேண்டியுள்ளது.

“நாட்டில் உள்ள ஒவ்வொரு தமிழரும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்” என்னும் ஒரே ஒரு நோக்கத்தை அடைவதற்கு நமது குமுகாயம் மேலே சொன்ன அத்தனை இழப்புகளுக்கும் அணியமாக (தயாராக) வேண்டுமா?

“நாட்டில் உள்ள ஒவ்வொரு தமிழரும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்” என்னும் ஒரே ஒரு காரணத்திற்காக நமது இனம் இத்தனை ஆபத்துகளையும் எதிர்கொள்ள வேண்டுமா?

எதையும் இழக்காமல் எதனையும் அடைய முடியாது என்னும் கூற்றில் உண்மை இருந்தாலும்..

ஒன்றை எய்த நூறை இழக்க வேண்டுமா? ஒற்றை நன்மைக்காக ஒரு தலைமுறையை பலியிட வேண்டுமா? ஒரே ஒருதமிழ்ப் பாடத்திற்காகநமது அடிப்படை உரிமையாக இருக்கும்தமிழ்ப்பள்ளியையும்’ - ‘தமிழ்க்கல்வியையும்இழக்கத்தான் வேண்டுமா? இன்றைய நமது தேவைக்காக அடுத்த தலைமுறையின் தாய்மொழி உரிமையை; தமிழ்ப்பள்ளி உரிமையை; தமிழ்க்கல்வி உரிமையைப் பறிக்கத்தான் வேண்டுமா?


“நாட்டில் உள்ள ஒவ்வொரு தமிழரும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்” என்பதுதானே நோக்கம்! இலக்கு! குறிக்கோள்! அதற்காக ஏன் நாம் வேறு வழிகளையும் மாற்றுத் திட்டங்களையும் சிந்திக்கக் கூடாது? சான்றுக்குச் சில இதோ:-

1)நாடு முழுவதும் செயல்படும் அரசாங்க பாலர் பள்ளிகளில் (Tadika Perpaduan) தமிழையும் ஒரு பாடமாகக் கற்பிக்க வேண்டும் என்ற கோரிகையை முன்னெடுக்கலாம்.

2)நமது ஆலயங்கள் ஒவ்வொன்றும் கல்வி அமைச்சின் இசைவுடன் தமிழ் பாலர் பள்ளிகளை நிறுவி; நடத்துவதற்கு அவன செய்யலாம்.

3)தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க பரப்புரை இயக்கங்களை நடத்தலாம்.

4)தமிழ்ப்பளிகளில் சேரும் மாணவர்களுக்குச் சிறப்பு ஊக்குவிப்புப் பரிசுகளை வழங்கலாம். காட்டாக, 2013 தொடங்கி தமிழ்ப்பள்ளியில் முதலாம் ஆண்டில் பதிந்துகொள்ளும் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு மடிக்கணினி வழங்க நமது அரசு சார்பற்ற அமைப்புகள் முன்வரலாம்.


5)தமிழ்ப்பள்ளிகளின் அடிப்படை ஏந்துகளை (வசதிகளை) மேம்படுத்த அமைப்புகளும் இயக்கங்களும் அரசாங்கத்தை வலியுறுத்தலாம்.

6)தமிழ்ப்பள்ளிகளில் தரமான கற்றல் கற்பித்தல் நடைபெறுவதை உறுதிபடுத்தும் நடவடிக்கைகளை உருவாக்கிச் செயற்படுத்தலாம்.

7)இடைநிலைப் பள்ளிக்குச் செல்லும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் தமிழைக் கட்டாயப் பாடமாக்கலாம்.

8)இடைநிலைப் பள்ளிகளில் தமிழையும் தமிழ் இலக்கணத்தையும் கால அட்டவணைக்குள் பயிற்றுவிக்க வேண்டும் எனக் கல்வி அமைச்சைத் தொடர்ச்சியாக வலியுறுத்தலாம்.

9) அரசுத் தேர்வுகளில் தமிழ்மொழி, தமிழ் இலக்கியப் பாடங்களில் சிறப்பாகத் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு வெகுமதிகள் வழங்கலாம்.

10)அரசாங்க வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பம் செய்யும் தமிழ் மாணவர்கள் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் ஆகிய பாடங்களில் கண்டிப்பாகச் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற ஆணையைப் பிறப்பிக்க பொதுச்சேவைத் துறையிடம் கோரலாம்.



இவற்றுள் சிலவற்றையேனும் நாம் செய்வோமானால்.. இவற்றுள் ஓரிரு நடவடிக்கையை ஒழுங்காகத் திட்டமிட்டுச் செய்வோமானால்.. இவற்றுள் தெரிவு செய்யப்பட்ட சில திட்டங்களை முன்னெடுத்துச் செய்வோமானால்.. இவற்றை எல்லாம் சிந்திக்கவும் - ஆய்வுச் செய்யவும் – திட்டமிடவும் – செயற்படுத்தவும் – மேம்படுத்தவும் தேவையான இயங்கமைவு (Mechanism) நம்மிடம் இருக்குமானால்..

“நாட்டில் உள்ள ஒவ்வொரு தமிழருக்கும் கண்டிப்பாகத் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்கும்”. 

கூடவே..
“நாட்டில் உள்ள ஒரு தமிழ்ப்பள்ளி கூட மூடப்படாமல் நிலைத்து இருக்கும்! தலைநிமிர்ந்து நிற்கும்!”.

தேசியப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக்கி உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா? என்று ஆகப் போகிறோமா? அல்லது

தமிழ்ப்பள்ளிகளையும் தமிழ்க்கல்வியையும் மேம்படுத்தி காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளப் போகிறோமா?

முடிவு நமது கைகளில்!!!

@சுப.நற்குணன், திருத்தமிழ்
Blog Widget by LinkWithin