Saturday, October 24, 2009

தொல்.திருமாவளவனுக்கு மலேசியத் திருமாவளவன் கேள்வி



மதிப்பிற்குரிய விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தமிழ்த்திரு தொல் திருமாவளவன் அவர்களுக்கு, வணக்கம்.

அண்மையில் தாங்கள் இலங்கைக்குச் சென்று இலங்கை கொலை வெறி அரசால் வன்னி மண்ணில் படுகொலை செய்யப்பெற்று சொல்லொணா துன்பத்திற்கு ஆளான தமிழ் மக்களில் எஞ்சியவரைக் கொத்தடிமைக் கொட்டடிக்குள் சந்தித்து உரையாடி வந்தமையினை ஊடகங்கள் வாயிலாக படித்தறிந்தேன்.



தமிழின வீரத்தின் மொத்த வடிவமாகவும் தமிழினத்திற்குக் காலம் கொடுத்த அருங்கொடையாகவும் வாய்க்கப் பெற்ற அரும்பெறல் தலைவர் மேதகு பிரபாகரன் கரங்களைக் குலுக்கிய கைகள் தமிழனின் குருதிக் கறைகள் படிந்த கொலை வெறியன் மகிந்தவின் கரங்களைக் குலுக்கியதையும் அவனோடு சிரித்து மகிழ்ந்து உணவுண்டதையும் ஊடகங்களில் கண்டு மனம் நொந்து போன தமிழுள்ளங்களில் நானும் ஒருவன்.
தமிழீழ மக்களுக்காக குரல் கொடுத்த கரணியத்திற்காகவும் தங்கள் இயக்கத் தொண்டர்கள் பலருக்குத் தூயதமிழ் பெயர் சூட்டியமைக்காகவும் மேலும் பல்வேறு மொழி நலன் செயற்பாடுகளுக்காகவும் தங்கள் மீது எனக்கு உயர்ந்த மதிப்பிருந்தது.
  • அதனால், மலேசியாவிற்குத் தங்களை முதன்முறையாக பல்வேறு எதிர்ப்பிற்கிடையே அழைத்து நாடு தழுவிய அளவில் நிகழ்ச்சிகளை நடத்தினேன். இதனைத் தாங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை எனக் கருதுகின்றேன்.
ஆனால், அண்மை காலமாக தங்களின் செயற்பாடுகளில் பிறழ்ச்சி நிலை தென்படுவது தங்களின் மேல் உலகத் தமிழர்கள் வைத்துள்ள மதிப்பை பாதித்துள்ளது என்பதைத் தாங்கள் அறிவீர்களா?

ஈழ மண்ணில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடு இணை சொல்ல முடியாத அளவில் வீரஞ்செறிந்த போர் புரிந்து கொண்டிருந்த வேளையில் அதனை முறியடிக்கும் நோக்கில் சிங்கள் இன வெறி அரசுக்கு முட்டு கொடுத்த இந்திய காங்கிரசு கூட்டணிக்குத் தாங்கள் முட்டு கொடுத்தீர்கள். அக்கால் தமிழீழ மக்களைக் குறிவைத்து சிங்களப் படை கொலை வெறி தண்டவம் ஆடியது. ஈழத் தமிழ் மக்கள் அவலக் குரல் எழுப்பினர். கதறினர். காப்பாற்றக் கோரி இந்தியாவை நோக்கிக் கெஞ்சினர்.

உங்கள் அன்பு முதல்வர் நாற்பது ஆண்டுகால போர் நான்கு நாள்களில் நின்று விடுமா என்று கேட்டார். எங்களால் ஒன்றும் செய்ய இயலாது என சட்ட மன்றத்திலேயே அறிவித்தனர். இந்திய நடுவண் அரசின் நிலைப்பாடே எங்களுடைய நிலைப்பாடும் என உங்கள் முதல்வர் திட்டவட்டமாகவே அறிவித்துவிட்டார். மற்றொரு பக்கம் ஈழத் தமிழ் மக்களுக்காக என்னையே நான் தியாகம் செய்யத் துணிந்து விட்டேன் என்று ஒரு நாள் நோன்பிருந்தார். கொடிய தாக்குதல் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப் படுகையிலேயே போர் நிறுத்தம் வந்து விட்டது என்று கூறினார்.

இவை எல்லாம் யாரோ கூறுபவை அல்ல. உங்கள் தமிழகத் தலைவர்களாலேயே பதிப்பிக்கப் பட்டவை. ஏடுகளில் வந்தவை. காட்சிகளில் பதிவானவை. கொலை வேறி சிங்களவனுக்கு எல்லா வகையாலும் ஒத்தாசை வழங்கி விட்டு,

"அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் அங்கே தலைவிரித்தாடுகின்றன. முகாம்களில் மட்டுமின்றி ஒட்டுமொத்த ஈழத் தேசமே ராணுவத்தின் கெடுபிடிக்குள் சிக்கிச் சிதைந்து வருகிறது.

மக்களிடையே மன அழுத்தங்களும் அச்சமும் பீதியும் மேலோங்கி நிற்கின்றன.
தமிழ் மக்களிடையே அச்சத்தாலான அடிமைத்தனமும் பரவுவதை அவர்கள் கால் வயிற்றுக் கஞ்சிக்காகக் கையேந்தி நிற்கும் நிலைமைகளிலிருந்து அறிய முடிகிறது.

மெலிந்த உடல்களிலிருந்து ஏக்கப் பெருமூச்சுகளும், முனகல்களும் மட்டுமே வெளிப்படுகின்றன. நாவிலிருந்து வார்த்தைகள் வராமல் விழிகளிலிருந்து தாரை தாரையாய் நீர் கொட்டுவதை காண முடிகிறது.

2 பேர் மட்டுமே வசிக்கக்கூடிய கூடாரங்களில் 8 பேர், 10 பேர்களை அடைத்து வைத்திருக்கும் மனிதநேயமற்ற கொடுமைகள் திணிக்கப்பட்டுள்ளன. இந்த மனித அவலங்களை மனிதநேயமுள்ள எவராலும் சகித்துக் கொள்ள முடியாது. "

என்று தாங்கள் அறிக்கை விட்டிருப்பதைக் கண்டு நாங்கள் யாரிடம் சொல்லி அழ? இவற்றுக் கெல்லாம் ஏதொவொரு வகையில் தாங்களும் துணையாகி விட்டீர்களே! அதை உங்கள் மனச்சான்றிலிருந்து மறைக்க முடியுமா? மறுக்க முடியுமா?

"நல்ல வேளை நீங்கள் பிராபாகரனோடு அன்று இல்லை. இருந்திருந்தால் நீங்களும் செத்திருப்பீர்கள்" என்று இந்திய நாடாளுமன்ற குழுவில் தங்களைப் பார்த்து அந்தக் கொலை வெறியன் கேளி செய்தானே! அதைக் கண்டு என் நெஞ்சம் கொதித்தது. ஆனால் அது தங்களுக்கு நகைச்சுவையாகப் பட்டது.

பிரபாகரன் என்கின்ற தமிழினத்தின் உயர் தலைவனின் பக்கத்தில் நின்று உரையாடியவர் தாங்கள். விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தாங்கள்.
கொஞ்சமாவது அந்த வீரத்தின் வாடை வீசியிருக்க வேண்டாவா?

ஆனால், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இந்தக் கொடுமைகளை எப்படி வேடிக்கை பார்க்கின்றன என்பது தான் பெரும் கொடுமையாக உள்ளது. இந்திய அரசு ஈழத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக மேலும் ரூ.500 கோடி வழங்கத் தீர்மானித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது நீங்கள் வெளியிட்ட அறிக்கையில் உள்ள குறிப்பு. இது என்ன இந்தியா புதிதாக செய்கின்ற வேலையா? அன்று களத்தில் நின்ற தமிழனைக் கொல்ல துணை நின்ற இந்தியா, இன்று கொத்தடிமைக் கொட்டடிக்குள் கிடக்கும் தமிழனை அழிக்க உதவுகிறது. அப்படிப் பட்ட கூட்டணி தானே உங்கள் கூட்டணி.

அடங்க மறு திருப்பி அடி என்பதெல்லாம் ஏட்டளவில் இருந்தால் போதுமா?

உண்மையான அப்பழுக்கில்லாத உணர்வு மிக்க செயல் வீரம் கொண்ட தமிழனாகவே தங்களை உலகத் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஐயா பழ நெடுமாறன் மலேசியா வந்த பொழுது ஒரு கருத்தைக் குறிப்பிட்டார். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பங்காற்ற கூடிய முழு பொறுப்புக்குரியவர்கள் முந்தைய தலைமுறையோ பிந்திய தலைமுறையோ அல்ல. இன்றைய தலைமுறையினராகிய நாம் தான். நாம் நம்முடைய கடமையை சரிவர ஆற்றத் தவறி விட்டால் வரலாற்றுப் பழிப்பிலிருந்து தப்ப முடியாது.

உங்கள் முதல்வர் இன்று பொறுப்பிலிருக்கின்ற இக்கால்தான் ஆயிரக்கணக்கான் தமிழீழத் தமிழர்கள் சிங்களக் காடையர்களால் ஊரறிய உலகறிய பச்சைப் படுகொலை செய்யப் பட்டார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒடுக்கப் பட்டிருக்கிறது. இலக்கக் கணக்கான தமிழ் மக்கள் முள்வேலிக் கம்பிகளுக்குள் அடைக்கப் பட்டு வதைப் படுத்தப்படுகின்றனர்.

இவற்றை எல்லாம் தடுப்பதற்கு ஆட்சியிலிருக்கும் உங்கள் கூட்டணிக்கு எண்ணம் இல்லையே?

தமிழினத்தை அழிக்கும் இந்திய அழிப்பாற்றலுக்குக் கைகொடுத்துக் கொண்டு ஒப்பாரி வைப்பது வேடிக்கையாக இல்லையா?


இக்கண்;
இரா.திருமாவளவன்,
மலேசியா.




Thursday, October 15, 2009

எசுபிஎம் தமிழ் இலக்கியம் இனி எட்டாக் கனிதானா?

14-10-2009இல் மலேசிய நண்பன் வெளியிட்ட செய்தி இது. எசுபிஎம் தேர்வில் தமிழ் இலக்கியப் பாடத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பைக் கருத்தில்கொண்டு அக்கறையோடு செயல்பட்டிருக்கும் ஐயா.சு.வை.லிங்கம், அவர்தம் குழுவினர் மலேசிய நண்பன் நாளிதழ் ஆகிய தரப்பினரை நன்றியோடு நினைத்துப்பார்த்து இதனை இங்கு பதிவிடுகின்றேன். –சுப.ந.


ந்தாம் படிவத்தின் தேர்வு முறையில் பாடங்களின் எண்ணிக்கையைப் பத்தாகக் குறைக்கும் நடவடிக்கையை 2012இல் செயல்படுத்த மலேசிய கல்வி அமைச்சு அறுதியிட்டு முடிவு செய்துள்ளது. அந்த முடிவினால், தமிழ் இலக்கியப் பாடம் எடுக்கும் மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், தமிழ்மொழியின் எதிர்காலம் பாதிப்படைய போகிறது. இச்சிக்கலுக்குத் தீர்வுகாண 20 இயக்கங்களின் சார்பில் கல்வி அமைச்சிடம் அறிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.

தலைமைக் கல்வி இயக்குநரிடமும் நேரடியாகப் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. தமிழ் இலக்கியம் படிக்க முழுமையாக வரையறுக்கப்பட வேண்டுமென்று வற்புறுத்தப்பட்டது. தலைமை இயக்குநரும் பரிசீலிப்பதாகக் கூறினார். ஆனால், இதுவரை பதில் இல்லை. ம.இ.கா உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மலேசியத் தமிழ்க் காப்பகத்தின் தலைவரும் மலேசியத் தமிழ்மன்றத்தின் தேசியத் தலைவருமான சு.வை.லிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டிருக்கிறார்.



மனிதவளத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் ஏற்பாட்டில் கல்வி அமைச்சின் தலைமை இயக்குநருடன் நடத்தப்பட்டச் சந்திப்பில் ம.இ.கா.வின் சார்பில் பிரதமர் துறை துணை அமைச்சர் எஸ்.கே.தேவமணி, ம.இ.கா. கல்விக்குழுத் தலைவர் டாக்டர் மாரிமுத்து, மனிதவளத் துறை அமைச்சின் செயலாளரும் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இயக்கங்களின் சார்பாக மலேசியத் தமிழ் காப்பகத்தின் தலைவர் சு.வை.லிங்கம், துணைத்தலைவர் டாக்டர் எஸ்.குமரன், உதவித் தலைவர் ரெ.சு.முத்தையா, செயலாளர் இரா.திருமாவளவன், தமிழாசிரியர் இலக்கியக் கழகத்தின் தலைவர் பச்சைபாலன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இலக்கியப்பட்டம் குறித்து பரிசீலனை செய்வதாக ஒப்புக்கொண்ட தலைமைக் கல்வி இயக்குநர் பதில் எதுவும் தெரிவிக்காமல் பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பியிருப்பது கவலைக்குரியதாக இருக்கிறது.

இதை உணர்ந்து ம.இ.கா. தமிழ் இலக்கியம் படிக்க ஐந்தாம் படிவத்தில் 11 பாடங்களைத் தேர்வில் எழுத அனுமதிக்க வேண்டுமென்று ம.இ.கா. பேராளர் மாநாட்டில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பேராளர் மாநாட்டில் முன்மொழியப்பட்ட தீர்மானம் எந்தவிதமான விவாதமும் இன்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஆனால், கல்வி அமைச்சு அந்தத் தீர்மானத்திற்கு முக்கியத்துவம் வழங்காமல் தனது திட்டத்தை நிறைவேற்றுவதில் குறியாக இருக்கிறது. இடைநிலைப் பள்ளிகளுக்குப் 10 பாடங்கள் மட்டுமே என்ற உத்தரவு அறிக்கையும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ம.இ.கா.வின் கேரிக்கையைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாமல் புறக்கணித்திருப்பது ஏமாற்றத்தைத் தருகிறது. கல்வி அமைச்சின் திட்டம் நிறைவேற்றப்பட்டால், அறிவியல் துறை மாணவர்கள் தமிழ் இலக்கியம் படிப்பது முற்றாகத் தடைசெய்யப்படுகிறது. தற்போது குறைந்தது 1,000 (ஆயிரம்) அறிவியல் துறை மாணவர்கள் தமிழ் இலக்கியம் எடுப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.

கல்வி அமைச்சுக்கு இச்சிக்கல் தெரிந்திருந்தும் ஏன் 10 பாடம் முடிவை வற்புறுத்துகிறது என்பது ஓரளவு ஊகிக்க முடிகிறது. எதிர்காலத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்கே ஆபத்து வரலாம். இந்திய ஆய்வியல் துறையும் மூடப்படலாம் என்ற நிலைக்குக் கொண்டுசெல்லாமல் ம.இ.கா உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்று வற்புறுத்துவது எங்களின் கடமையாகும்.

15 மாணவர்கள் என்ற கொள்கையை வைத்துக்கொண்டு தமிழ்ப்படிக்க வாய்ப்பு வழங்காமல், சில முதல்வர்கள் பிடிவாதம் பிடிக்கின்றனர். 10 பாடம் மட்டுமே என்ற சுற்றறிக்கை பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டதால், பள்ளி முதல்வர்கள் தமிழ் இலக்கியம் படிக்கின்ற வாய்ப்பை முற்றாகத் தவிர்த்துவிடுவார்கள். கேட்டால், கல்வி அமைச்சின் அறிக்கையைக் காட்டுவார்கள் என சு.வை.லிங்கம் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Saturday, October 10, 2009

நோபல் தமிழர் வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன்

பெரும்பாலும் மேலை நாட்டுத் தலைவர்களையும் அறிஞர்களையும் அறிவியலாளர்களையும் எப்போதுமே தேடிச் செல்லும் நோபல் பரிசு, இந்த 2009இல் ஒரு தமிழரைக் கட்டித் தழுவியிருக்கிறது. இதன்வழி தமிழ் இனத்திற்கே பெருமை வந்து குழுமியிருக்கிறது.


தமிழகம், சிதம்பரத்தில் பிறந்து; அமெரிக்காவில் குடியிருந்து; இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்சு நகரில் உயிரியல் ஆய்வாளராகப் பணியாற்றும் முனைவர் வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் (வயது 57) அவர்கள் இவ்வாண்டுக்கான நோபல் பரிசு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இப்படியொரு சாதனையை நிகழ்த்திக் காட்டியிருப்பவர் ஒரு தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

வேதியல் துறைக்கான (Chemistry) இந்தப் பரிசு வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் அவர்களுக்கும், இவருடன் இணைந்து ஆய்வினை மேற்கொண்ட அமெரிக்கர் தாமசு ஏ. இஸ்டெல்ட்ஸ் (Thomas A. Steitz), இசுரேல் நாட்டைச் சேர்ந்த பெண் அறிவியலாளரான ஆடா இ யோனத் (Ada E. Yonath) ஆகிய மூவருக்கும் வழங்கப்படுகிறது.

இவர்கள் மேற்கொண்ட ஆய்வு என்பது மிகவும் நுட்பமானது. மனிதனுக்கும் மற்றைய உயிரினங்களுக்கும் உடலில் புரதம் (Protein) என்று இருக்கிறது. இதனை நாம் அறிவோம். புரதம் உடலில் நிகழும் வேதியல் மாற்றங்களைக் கட்டுப்படுத்துகிறது. இந்தப் புரதத்தை உருவாக்கும் ‘ரிபோசம்’ (Ribosome) என்கிற அணுக்களின் செயல்பாடுகளை இவர்கள் ஆராய்ந்துள்ளனர்.

‘ரிபோசம்’ 25நானோ மீட்டர் அளவு கொண்ட ஒரு நுண்மையான அணு. 25 நானோ மீட்டர் என்பது ஒரு மில்லி மீட்டரைப் பத்து இலக்கம்(இலட்சம்) பங்காகப் பிரித்தால் அதில் உருவாகும் ஒரு பகுதி அளவினது. (1 மில்லி மீட்டரை 100,000ஆல் வகுத்தல்).




இவ்வளவு நுண்மையான ஒரு பொருளைக் கண்டுபிடித்து – அதன் செயல்பாட்டைத் துல்லியமாகக் கண்டறிந்து சொன்னதோடு மட்டுமல்லாமல், அதனைப்பற்றி முப்பரிமாணப் படத்தையும் உருவாக்கி மாபெரும் சாதனை படைத்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு மருந்துகளை புதிய நுட்பங்களோடு உருவாக்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இது உலக மாந்த இனத்திற்கே பெரும் நன்மையளிக்கும் என கருதப்படுகிறது.

வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் 1952இல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.யூ.சி படிப்பும் குசராத் பரோடா பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி –யும் படித்தவர். பிறகு, ஓகாயோ பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் முனைவர் (பி.எச்.டி) பட்டம் பெற்றார். கலிபோர்னியா பல்கலைக்கழகம், யேல் பல்கலைக்கழகம், யாத் பல்கலைக்கழகம், புரூக்கெலன் தேசிய ஆய்வுக்கூடம் ஆகிய இடங்களில் பேராசிரியராகவும் ஆய்வாளராகவும் பணியாறினார்.

1999ஆம் ஆண்டில் இங்கிலாந்து கேம்பிரிட்சு பல்கலைகழகத்தில் இணைந்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அதில் ஒன்றுதான் ‘ரிபோசம்’ தொடர்பானது. இந்த ஆராய்ச்சியில் அவர் கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளார். தம்முடைய ஆய்வுகளைப் பற்றி இதுவரை 95 ஆய்வேடுகளை இவர் எழுதியுள்ளார். தற்போது இவருக்கு நோபல் விருதைப் பெற்றுக்கொடுத்துள்ள ‘ரிபோசம்’ பற்றி மட்டும் மூன்று ஆய்வுக்கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.


உலகத்திலேயே மிக உயரிய விருதாகப் போற்றப்படுவது நோபல் பரிசு. சுவிடன் நாட்டின் அறிவியலாளர், மறைந்த ஆல்பிரட் நோபல் என்பாரின் நினைவாக நிறுவப்பட்டுள்ள நோபல் பரிசு தேர்வுக் குழு, ஒவ்வொரு ஆண்டும் இந்த மாபெரும் பரிசை வழங்கி வருகிறது.


வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் அவர்களையும் சேர்த்து, இதுவரையில் மூன்று தமிழர்களுக்கு இந்த நோபல் பரிசு கிடைத்திருக்கிறது. 1930ஆம் ஆண்டில் இயற்பியல் துறைக்காக சர்.சி.வி.இராமன், 1988இல் அதே இயற்பியலுக்காக சந்திரசேகர் சுப்பிரமணியன் ஆகிய இரு தமிழர்கள் ஏற்கனவே நோபல் விருதைப் பெற்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நோபல் விருது பெற்றுள்ள, வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் அவர்கள் தமிழினத்தில் பிறந்ததினால் தமிழராகப் பிறந்த அனைவருக்குமே பெருமைதான்.

Saturday, October 03, 2009

தரங்குறைகிறது தமிழ்க்கல்வி! யார் பொறுப்பு?

ப்படியொரு சூடான வினாவை, மலேசிய நாட்டின் தமிழ்மொழி, தமிழ்க்கல்வி இதழாகிய ‘உங்கள் குரல்’ (ஆகத்து / செப்தெம்பர் 2009) முன்வைத்திருக்கிறது. திருத்தமிழ் வலைப்பதிவின் வாசகர்களாகிய ஆசிரிய நண்பர்களுக்கும் மற்றுள்ள தமிழன்பர்களுக்கும் இதனை இங்கு வழங்குகின்றேன். ‘உங்கள் குரல்’ இதழின் இந்தக் கருத்துக்கு மறுமொழியாக, உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன். -சுப.ந


தமிழ்வழிக் கல்வி என்பது, மாணவர்கள் கற்கும் எல்லாப் பாடங்களையும் தமிழில் கற்பது. தமிழ்க்கல்வி என்பது தமிழ்மொழியையே கற்பது. சுருங்கக் கூறின் தமிழில் கற்பது தமிழ்வழிக் கல்வி; தமிழைக் கற்பது தமிழ்க்கல்வி.

தமிழ்ப்பள்ளிகளில் கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களையும் தமிழிலேயே கற்பிக்கும் நல்வாய்ப்பு மீண்டும் கிடைத்திருக்கிறது. இதனால், தமிழ்ப்பள்ளிகளில் தமிழ்வழிக் கல்விக்கு இடையில் ஏற்பட்டிருந்த பாதிப்பு நீங்கிவிட்டது.

ஆனால், தமிழ்ப்பள்ளிகளில் தமிழ்க்கல்வியின் நிலை என்ன? தமிழ்ப்பள்ளிகளில் மட்டுமன்றி, உயர்க்கல்வி நிலையங்களிலுங்கூட தமிழின் தரம் மிகமிகத் தாழ்ந்துபோய்விட்டது. இதை நிறுவப் பெரிய ஆய்வுகள் தேவையில்லை. அங்கே வழங்கும் தமிழின் தரத்தைச் சற்றே கவனித்தால் நிலைமை தெற்றென விளங்கிவிடும்.

இதோ சில எடுத்துக்காட்டுகள்:-

“நான் அனுப்பிய கடிதமும் படங்களும் கிடைத்ததா?”
(படங்கள் – பன்மை, கிடைத்ததா - ஒருமை)

“இதை உங்கள் குரலில் இடம்பெற்றால் மாணவர்களுக்குப் பயன்படலாம்” (இதில் எழுவாய் இல்லை. ‘இது உங்கள் குரலில் இடம்பெற்றால்' என்று இருக்க வேண்டும்)

“நம் தமிழ்மொழி மிக்க இனியது”
(‘மிக்க’ பெயரெச்சம்; ‘இனியது’ என்ற வினைக்கு முன் ‘மிக’ என்ற வினை எச்சம்தாம் வரவேண்டும்)

“அவர்கள் இந்த விளக்கங்களை இதழில் வெளியிட்டு எழுத்தாளர்களும் பிறரும் பயன்பபெறுமாறு வெளியிட்டு வந்தனர்”
(‘வெளியிட்டு’ என்பது இருமுறை வந்தது பிழை)

மேற்கண்டவை, இங்கு பல்வேறு நிலைகளில் தமிழ்க்கல்வி கற்பவர்கள் எழுதிய வாக்கியங்கள்.

*கல்வி அமைச்சின் பாடத்திட்டப் பிரிவு வெளியிட்ட விளக்கவுரையிலே, வழவழ, திருதிரு, சிலுசிலு என்று கட்டாயமாக இணைந்திருக்க வேண்டிய இரட்டைக் கிளவிகள் வழ வழ, திரு திரு, சிலு சிலு என்று பிரிந்தே உள்ளன.

வானவில் தொலைக்காட்சி, தமிழின் இனிமை கூறும் நிகழ்ச்சியிலேயே “கற்க கசடறக் கற்றவை” என்று திருக்குறளைப் பிழையாக ஒலிக்கச் செய்கிறது. ‘மலைக்கள்ளன்’ என்ற திரைப்படப் பெயரை ‘மழைக்கள்ளன்’ என்று எழுதிக் காட்டுகிறது. மற்ற ஊடகங்களிலும் நிலைமை இத்தகையதே.

நம் நாளிதழ்கள், நாளும் தவறாமல் செய்துவரும் தமிழ்க்கொலை இவ்விதழில் (உங்கள் குரல்) மாதந்தோறும் சுட்டப்படுகிறது.

தமிழால் பெயரும் பரிசுகளும் பெறுகிற நமது எழுத்தாளர்களில் பலர் இலக்கியத்தில் இலக்கணமே தேவையில்லை என்று கூறும் அளவுக்கு தமிழ்ப்பகைவர்களாக ஆகிவிட்டனர்.

இவையெல்லாம் மாணவரின் தமிழறிவைக் கெடுப்பவையே.

தமிழ்வழிக் கல்விக்கு இடையில் நேர்ந்த பாதிப்பு அரசின் கல்விக் கொள்கை மாற்றத்தால் நேர்ந்தது. இப்போது நீங்கியது. ஆனால், தமிழ்க்கல்வியில் தமிழின் தரத்துக்கு நேர்ந்துவரும் கேட்டுக்குப் பொறுப்பானவர் யார்?

ஆசிரியர்களா? விரிவுரைஞர்களா? பேராசிரியர்களா? கல்வி அதிகாரிகளா? ஊடகங்களா? ஏடுகளா? எழுத்தாளர்களா?

அனைவருமே தம்மளவில் இதற்குப் பொறுப்பானவர்தாம். ஏனெனில், இவர்கள் அனைவரது பொறுப்பின்மையும் எப்படியோ ஒருவகையில் இதற்குக் காரணமாகிறது. எனினும், இதற்கு மூல முதனிலைக் காரணமானவர்கள் கல்வி அமைச்சின் தமிழ்ப் பாடத்திட்டப் பிரிவினரே ஆவர். இவர்களின் செயற்பாடு தமிழின் தரத்தைவிட தங்கள் கருத்தை மேலாகக் கருதும் போக்கையே காட்டுகிறது.

நம் நாட்டுச் சூழலில் தமிழ்க் கல்வியதிகாரிகள் தங்கள் பொறுப்புக்குத் தக்க தமிழறிவு பெற்றிருக்கும் வாய்ப்பு குறைவு. எனவே, அவர்கள் தமிழறிவுக் குறையை நாம் குற்றங்கூற விழையவில்லை. ஆனால், அவர்கள் தங்கள் பொறுப்புக்குத் தேவையான அளவுக்கு தமிழறிவை வளர்த்துக்கொள்ளாததும் இங்குள்ள தமிழ் அறிஞர்களைத் தக்கவாறு பயன்கொள்ள முன்வராததும் குற்றங்களே.

இவர்களுக்கு வாய்த்துள்ள அதிகாரம் பொறுப்பை நிறைவேற்றுவதற்கே அன்றி பொறுப்பை மறுத்தும் மறந்தும் விருப்பம்போல செயற்படுவதற்கன்று என்பதை உணர்ந்து, இவர்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.

தவறினால், அதைக் காலம் கட்டாயம் உணர்த்தும். அந்த உணர்த்தும் முறை மிகமிகக் கடியதாய் இருக்கும்!

  • நன்றி:- உங்கள் குரல் (ஆகத்து/செப்தெம்பர் 2009)

*பி.கு:- கல்வி அமைச்சின் பாடத்திட்டப் பிரிவு வெளியிட்ட விளக்கவுரையிலே இருந்த இரட்டைக்கிளவி தொடர்பான தவறுகள், புதிய பதிப்பில் திருத்தப்பட்டுள்ளன. எனினும், முன்னம் இருந்த வேறு சில தவறுகள் இன்னமும் திருத்தப்படாமலே உள்ளன. அவையும் திருத்தப்படுவது சாலச் சிறத்தது. -சுப.ந

Wednesday, September 30, 2009

இந்திய நாட்டின் முதல் - மூத்தக் குடிமக்கள் தமிழர்களே

டந்த 26-9-2009இல் மலேசிய நாளிகைகளில் வெளிவந்த செய்தி இது. 'நேச்சர்' என்ற ஆங்கில ஏட்டில் வெளிவந்த இந்தச் செய்தியைத் தமிழ் நாளிகைகளும் வெளியிட்டுள்ளன.
இந்தியா என்று இன்று சொல்லப்படுகின்ற நாட்டின் ஆதி(பூர்வீக) குடிமக்கள் தென்னிந்தியர்களே அதாவது தமிழர்களே என்றும், இன்றைக்கு இந்தியாவை ஆதிக்கம் செய்யும் வட இந்திய இனம் பிற்காலத்தில் இந்தியாவில் குடியேறியவர்கள் என்றும் இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.


இப்படியொரு உண்மையை ஒரு தமிழன் கண்டறிந்து சொல்லியிருந்தால் இப்படி நாளிதழ் செய்தியாக வந்திருக்காது. காலங்காலமாக தமிழரை வல்லாதிக்கம் செய்துவருபவர்கள் இந்தச் செய்தியைகூட இந்நேரம் இருட்டடிப்புச் செய்திருப்பார்கள்.

எவனோ இருட்டடிப்புச் செய்வது இருக்கட்டும். வரலாற்று அறிவும் அறிவாராச்சிப் பார்வையும் கெட்டுப்போய்விட்ட தமிழர்களே இந்த ஆராய்ச்சி உண்மையை நம்ப மறுத்திருப்பார்கள்; மறுதளித்திருப்பார்கள். காலந்தோறும் காலத்தோறும் தமிழன் செய்து வந்திருக்கும் வரலாற்றுப் பிழையை இப்போதும் செய்திருப்பார்கள்.

ஆனால், இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு இந்த உண்மையை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பவர்கள் தமிழர்கள் அல்லர். ஐதராபாத்தில் உள்ள மூலக்கூறு, மூலக்கூறு உயிரியல் ஆய்வு மையம், அமெரிக்காவின் ஆர்வர்டு பொது சுகாதார கல்லூரி, ஆர்வர்டு பிராட் கழகம், மாசசூசட்டு தொழில்நுட்பக் கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து இப்படியொரு ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆய்வின் முடிவுகளை ஐதராபாத் மையத்தின் முன்னாள் இயக்குநரும், இந்த ஆய்வறிக்கையின் ஆசிரியருமான லால்ஜி சிங் என்பவரும் அதே மையத்தின் மூத்த அறிவியலாளர் குமாரசாமி தங்கராஜன் என்பவரும் மேற்கண்ட வகையில் ஆராய்ச்சி உண்மையை அறிவித்துள்ளனர்.

இவர்களின் ஆய்வின்படி, இந்தியாவின் தொன்மை இனங்களாக வட இந்தியரும் தென் இந்தியரும் (தமிழரும்) தான் என்பது தெளிவாகிறது. ஆனால், இந்த இரு தொன்மையான இந்தியர்களில், வடவர்கள் தற்போதைய மேற்கு ஆசிய மக்களிடனும் ஐரோப்பிய மக்களுடனும் மரபியல் அடிப்படையில் 40 முதல் 80 விழுக்காடு வரை ஒத்து இருக்கிறார்கள். அதாவது, அன்னியர்களின் மரபியல் கூறுகளோடு அதிகம் ஒத்துப் போகிறார்கள்.

அனால், தென்னவர்கள் உலகின் எந்த இன மக்களோடும் மரபியல் அடிப்படையில் தொடர்பு அற்றவர்களாக இருக்கிறார்கள். அதாவது, அன்னியரின் கலப்படம் அறவே இல்லாமல் (தூய்மையாக) இருக்கிறார்கள். இதன்மூலம், தென்னக மக்கள்தான், இந்திய நாட்டின் ஆதிமக்கள் அல்லது முதல் குடிமக்கள் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.

இந்திய நாட்டின் தொன்மையான இனம் எது? என்பது மீதான ஆய்விக் கிடைக்கப் பெற்றிருக்கும் இந்தப் புதிய முடிவுகள் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. காரணம், இதுவரை எழுதப்பட்டுள்ள வரலாற்றை மாற்றி எழுதக்கூடிய அளவுக்குச் சான்றுகள் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்த ஆய்வு முக்கியமான ஒன்றாகவும் அறிஞர்களின் விவாதத்திற்குரிய ஆய்வுப் பொருளாகவும் ஆகியிருக்கிறது.

பாவாணர் என்னும் தமிழன் கண்டுசொன்ன உண்மை

இப்போது வெளிவந்துள்ள இந்தச் செய்தி இப்படி இருக்க, தமிழினத்தில் தோன்றிய மாபெரும் அறிஞர் – ஆய்வாளர் – பன்மொழிப் பயின்ற மேதை மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் இந்த உண்மையயயும்; இதற்கு மேலே இன்னும் பல உண்மைகளையும் தம்முடையை 50ஆண்டுகால ஆய்வுகளின் அடிப்படையில் நிறுவியிருக்கிறார் என்பது நம்மில் பலர் அரியாமல் இருக்கலாம்.

1.மாந்தனின் முதல்மொழி தமிழே.
2.அந்தத் தமிழே ஆரியத்திற்கு மூலம்.
3.தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மாந்தன் பிறந்தகம் குமரிக்கண்டம்.

என்னும் முப்பெரும் உண்மைகளைக் கண்டுகாட்டினார் – மொழியியல் சான்றுகளுடன் நிறுவிக்காட்டினார்.

பாவாணருடைய கண்டிபிடிப்பை ஆதிக்க இனத்தவரும் கற்றறிந்த இந்திய மேதைகளும் தமிழினப் பகைவர்களும் ஏளனமும் ஏகடியமும் செய்தார்களே அன்றி, இதுவரை எவரும் சான்றுபட மறுக்கவில்லை.

பாவாணர் கண்டறிந்து சொன்ன தமிழியற் கண்டுபிடிப்புகளை இருட்டடிப்புச் செய்து மறைப்பதற்கே இந்தியாவின் தலைவர்களாகவும் அறிஞர்களாகவும் ஆய்வாளர்களாவும் சொல்லப்பட்டவர்கள் முனைந்திருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

பாவாணர் என்ற ஒரு பேரறிஞரின் கண்டுபிடிப்புகள் எங்கேயும் எந்தக் காலத்திலும் எந்தச் சூழலிலும் வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதில் தமிழினப் பகைவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளனர்; இப்போதும் இருந்துவருகின்றனர் என்பது மறைக்க முடியாத வரலாறு.

ஆனால், பாவாணர் அன்று கண்டு சொன்ன உண்மைகள் இன்று மற்றவர்கள் வாயிலாக – மாற்றார்கள் மூலமாக வெளிவரத் தொடங்கிவிட்டன என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இப்போது வந்துள்ள இந்தச் செய்தியும் அதையேதான் பறைசாற்றுகிறது.

காலம் ஒருநாள் கண்டிப்பாக மாறும். உண்மைகள் தற்காலிகமாக மறைக்கப்படலாம். ஆனால், முற்றிலுமாக ஒழித்துக்கட்டி இல்லாமல் செய்துவிட முடியாது.

(மறைந்துபோன பழந்தமிழர் நாடு - குமரிக்கண்டம்)


உலகம் ஒருநாள் நமது தமிழையும் தமிழ் இனத்தையும் தமிழரின் பழந்தமிழ்நாடாகிய குமரிக்கண்டத்தையும் கண்டிப்பாகத் திரும்பிப் பார்க்கும் – திறந்து பார்க்கும் – ஆழந்து அகன்று ஆராய்ந்து பார்க்கும்.

அப்போது, உலகத்தின் பல வரலாறுகள் திருத்தப்படலாம் – உலக இனங்களின் வரலாறுகள் மாற்றி எழுதப்படலாம் – உலக மொழிகளின் வரலாற்று ஆவணங்கள் புதுப்பிக்கப்படலாம்.

அனைத்திற்கும் காலம் கண்டிப்பாக பதில் சொல்லியே தீரும். அப்படி, காலம் பதில் சொல்லும் காலத்தில் அதனை எண்ணிப் பெருமைபடுவதற்கு.. ஒருவேளை பூமிப்பந்தில் எந்த மூலையிலும் ஓர் ஒற்றைத் தமிழன்கூட இல்லாமல் போகலாம்.

தொடர்பான செய்திகள்:-

தமிழின வரலாறு 1, தமிழின வரலாறு 2

Friday, September 25, 2009

இனிய தமிழ் ஏடு; இலவய இதழ் - புதிய உதயம்

‘உதயம்’ என்ற பெயரில் மலேசியாவில் ஒரு தமிழ் இதழ் வெளிவந்தது, உங்களுக்குத் தெரியுமா? 1970, 80களில் தமிழ் மக்களிடையே அதிகம் வாசிக்கப்பட்ட இதழ் இந்த உதயம்.

நாட்டின் மூத்த ஊடகவியலாளரும் இப்போது மக்கள் ஓசை நாளிதழின் மூத்த செய்தியாளராகவும் இருக்கும் ஐயா எம்.துரைராஜ், வழக்கறிஞர் ஐயா பொன்முகம், திரு.தேவராஜ் முதலானோர் அன்றைய உதயம் இதழின் ஆசிரியர்களாக இருந்து பணியாற்றியவர்கள்.

அரசாங்கத்தின் கருத்துப் பரப்புரை ஏடாக இருந்ததோடு அல்லாமல், தமிழுக்கும் வளம் சேர்க்கும் வகையில் நல்லதோர் இலக்கிய ஏடாகவும் உதயம் வார்த்தெடுத்தப்பட்டது – வளர்த்தெடுக்கப்பட்டது.

ஏனோ தெரியவில்லை? என்ன காரணமோ புரியவில்லை? மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்த அந்த அருமை இதழ் நின்றுபோனது; அது பரப்பிய செந்தமிழ் மணம் மறைந்துபோனது. உதயத்தின் மறைவு அன்று பல்லாயிரம் மனங்களில் ஆறாத்துயரை மாறாநினைவாக விட்டுச்சென்றது – விதைத்துச் சென்றது என்பது வரலாறு.

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் உதயமாகி இருக்கிறது அந்த அரசாங்க ஏடு. மலேசியத் தகவல் திணைக்களம் (Jabatan Penerangan Malaysia) இப்போது மீண்டும் இந்த இதழை வெளியிடத் தொடங்கியிருக்கிறது. இப்போது இதன் பெயர் “புதிய உதயம்”.

முழுக்க முழுக்க தமிழில் இவ்விதழ் வெளிவருகிறது; இலவயமாக வழங்கப்படுகிறது. நான்கு வண்ணத்தில் – தரமான வழவழப்புத் தாளில் – புதியவகை அச்சமைப்பில் - மிகவும் நேர்த்தியாக – பொழிவான தோற்றத்தில் – பார்ப்போர், படிப்போர் கவனத்தையும் கருத்தையும் பட்டென கவரும் வகையில் ‘புதிய உதயம்’ வெளியிடப்படுகிறது.

முற்றிலும் புதிய தோற்றத்தில் புதுமை அமைப்பில் புதுப்புது செய்திகளைத் தாங்கி ‘புதிய உதயம்’ மீண்டும் தமிழ்மணம் பரப்ப வந்திருக்கிறது; வாராது வந்த மாமணியாய் தமிழ் மக்களின் அறிவுப்பசிக்கு நல்விருந்தாக அமைந்திருக்கிறது.

இந்த 2009இல் இதுவரை மூன்று இதழ்கள் வெளிவந்துவிட்டன. தற்போது, திருமதி பத்மா செல்வராஜு அவர்களின் பொறுப்பில் இவ்வேடு நல்லதோர் தமிழ் ஏடாக – ஏடுகளுகெல்லாம் முன்மாதிரி ஏடாக வெளிவருகின்றது.

ஆனால், இதில் வருத்தத்திற்குரிய விடயம் என்னவென்றால், இப்படியொரு இதழ் வெளிவருகிறது என்பதே இன்னும் பலரும் அறியாமல் இருக்கின்றனர்; இலவயமாக கிடைக்கும் இனியதோர் இதழைப் படிக்காமல் இருக்கின்றனர்.

‘புதிய உதயம்’ அரசுசார்ந்த செய்திகளை வழங்கும் அதே வேளையில், கல்வி, சமூகம், பொருளாதாரம், பெற்றோரியல், அறிவியல், சமயம், விளையாட்டு, சுகாதாரம், தமிழ்மொழி, தொழில்நுட்பம், சிறுகதை, கவிதை என பல்வேறு வகையான படைப்புகளைப் பாங்குடன் பரிமாறுகிறது.


தமிழ்ப்பள்ளிகள், இடைநிலை; உயர்நிலைப்பள்ளிகள், ஆசிரியர் பயிற்சிக் கழகங்கள், தமிழ்மொழிக் கழகங்கள், பொது இயக்கங்கள், பொது மக்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் இந்த இதழ் பயனாக அமையும் என்று உறுதியாகச் சொல்லலாம்.

குறிப்பாக, தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையில் தமிழைப் பயிலும் மாணவர்களுக்கு இவ்விதழ் பெரும் நன்மையை அளிக்கும்; அவர்களின் தமிழ் வாசிப்பிற்குத் துணை நிற்கும்; தமிழ்மொழி ஆற்றலை வளர்த்தெடுக்கும். இன்னும் சொல்லப்போனால் அவர்களின் கல்விக்கும் தேர்வுக்கும்கூட துணைநூலாகப் பயன்படும்.

‘புதிய உதயம்’ இதழ் நாடு முழுவதுமுள்ள தகவல் திணைக்களம் (Jabatan Penerangan), மாவட்டத் தகவல் அலுவலகம் (Pejabat Penerangan Daerah) ஆகிய இடங்களில் இலவயமாகக் கிடைக்கும்.

பள்ளி நிருவாகங்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், பொது இயக்கங்கள், இளைஞர் அமைப்புகள் ஆகிய தரப்பினர் இந்த இதழைப் பரப்பும் நல்ல பணியை விரைந்து செய்யலாம்.

இந்தச் செய்தியைப் படிக்கும் அன்பர்கள், உங்களுக்கு அருகிலுள்ள தமிழ்ப் பள்ளிகள் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், பொது இயக்கங்கள், இளைஞர் இயக்கங்கள் ஆகியோருக்கு அன்புகூர்ந்து தெரியப்படுத்துங்கள்.


தமிழ்மக்களின் பேராதரவு இருந்தால் அரசாங்கம் வெளியிடும் இந்த இலவய இதழ்.. இனியத் தமிழ்பரப்பும் இந்த ஏடு.. எல்லாரும் படிக்கும் வகையில் பேரளவில் வெளிவரும்; மீண்டும் பாதியிலே நின்றுவிடாமல் பலகாலம் தொடர்ந்து வரும்.

‘புதிய உதயம்’ இதழ் தொடர்பாக மேல் விவரம் பெறுவதற்கு:-
திருமதி பத்மா செல்வராஜு (ஆசிரியர்)
மின்னஞ்சல்:- pathma@inform.gov.my கைப்பேசி:- 019-2808526

‘புதிய உதயம்’ முகவரி:-
Ketua Pengarang, Bahagian Penerbitan Dasar Negara,
Jabatan Penerangan Malaysia, Tingkat 12 Barat, Wisma Sime Darby,
Jalan Raja Laut, 50350 Kuala Lumpur. Tel:03-2173 4400 samb.4655

Wednesday, September 23, 2009

கோலாலம்பூரில், 6ஆவது உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு 2009

ன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் ஏற்பாட்டில் '6ஆவது உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு 2009' மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கிறது.

"உலகோடு நாம் - நம்மோடு உலகு" என்ற கருப்பொருளில் இந்த மாநாடு நடைபெறும்.

மாநாட்டின் உட்பொருள்கள்:-

1.செம்மொழிகளில் தமிழின் தொன்மையும் சங்க இலக்கியங்களின் வாழ்வியல் நெறிகளும்.

2.காலந்தோறும், காலம் வெல்லும் தமிழ் இலக்கிய மேம்பாடு.

3.அன்றும் இன்றும் உலகளாவியத் தமிழர்களின் வாழ்வும் தாழ்வும்.

4.ஈழம் உள்ளிட்ட தமிழர்கள் வாழும் நாடுகளில் உள்ள நெருக்கடிகளும் தீர்வுகளும்.

5.வையகத் தமிழர்களின் தொழில் வணிகம் - கணினி வளர்ச்சிப் போக்குகள்.


(படத்தைச் சொடுக்கி முழு விவரம் அறியவும்)


நாள்:- 26, 26, 27 செப்தெம்பர் 2009
இடம்:- கோலாலம்பூர் பல்கலைக்கழக வளாகம்


பி.கு:-25.9.2009 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு மாநாட்டுத் தொடக்க விழாவில் தமிழ் மக்கள் அனைவரும் இலவயமாகக் கலந்துகொள்ளலாம்.
தொடர்புக்கு:- டாக்டர் எஸ்.தருமலிங்கம் 012-3082609

உறவு நிலையிலும் - அறிவு நிலையிலும் - ஆய்வு நிலையிலும் தமிழுக்கும் தமிழருக்கும் அடித்தளமாக விளங்கப்போகும் இம்மாநாட்டிற்குத் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வரவேற்கப்படுகிறார்கள்.

Blog Widget by LinkWithin