Sunday, August 19, 2012

அன்புள்ள இரத்தினவள்ளி அம்மையார் அவர்களே..




வணக்கம். தங்களின் மேலான கவனத்திற்கு இந்த மடலை விடுக்கின்றேன். இம்மடல் வழியாகத் தங்களுக்குச் சில விளக்கங்கள் கூறுவதோடு சில வினாக்களுக்குத் தங்களிடமிருந்து விளக்கம் பெற விரும்புகின்றேன்.

2. அதற்கு முன்னதாக, தமிழ்க் குமுகாய நலன்கருதி தாங்கள் ஆற்றிவருகின்ற நற்பணிகளுக்கு மனமார்நத பாராட்டுகளைப் பதிவுசெய்ய விழைகிறேன். தமிழ் மக்கள், தமிழ்க் கலைஞர்கள், ஆலயங்கள், தமிழ்ப்பள்ளிகள் எனப் பல்வேறு தரப்பினருக்கு நன்கொடைகளை வாரி வழங்கி ஆதரவு செய்துவரும் தங்களின் கொடையுள்ளத்தை வணங்குகின்றேன்.


3. தங்களின் மீதும் தாங்கள் ஆற்றிவரும் அரும்பணிகள் மீதும் எனக்கு எப்பொழுதுமே ஆழ்ந்த மதிப்பு உண்டு. அதேவேளையில், ஒட்டுமொத்த குமுகாய நன்மையைப் பாதிக்கின்ற வகையில்; நமது மொழி இன நலத்தைப் பாழ்படுத்தும் வகையில்; நமது அடிப்படை உரிமைகளைச் சீரழிக்கும் வகையில் அண்மையில் தாங்கள் வெளியிட்டுள்ள கருத்துகளுக்கு எதிர்வினையாடும் உரிமையும் எனக்கு உண்டு என்று நம்புகிறேன். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் இந்த மடலை எழுதுகின்றேன். இதன் வழியாகத் தங்களைக் குறைத்துப் பேசும் எண்ணமோ அல்லது சிறுமைபடுத்தும் எண்ணமோ எனக்குத் துளியும் கிடையாது என்பதை ஆணித்தரமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

4.   அண்மையில், “தேசியப் பள்ளிகளில் தமிழ்மொழி கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும்என்று தாங்கள் தெரிவித்துள்ள கருத்து  நாளிதழ்களில் செய்திகளாக (8.8.2012, 19.8.2012) வெளிவந்துள்ளன. அச்செய்திகளின் சாரம் பின்வருமாறு:-

) மலேசியாவில் உள்ள அனைத்துத் தமிழர்களுக்கும் தமிழை எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஆ) தமிழ்ப்பள்ளிகளில் வெறும் 30% மாணவர்கள் மட்டுமே பயில்கின்றனர். மீதமுள்ள 70% இந்திய மாணவர்கள் தேசியப் பள்ளிகளில் படிக்கிறார்கள்.

இ) இவ்விரு கூற்றுகளின் அடிப்படையில், தேசியத் தொடக்கப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும்.
  
உ) அதற்காக மலேசியத் தமிழ்மொழி நடவடிக்கை என்ற இயக்கத்தின் வழியாக கல்வி அமைச்சுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

மக்கள் ஓசை செய்தி - 19.08.2012
5. மேற்சொன்ன கூற்றுகளைத் தாங்களும் மேலும் இருவரும் வலுவாக ஆதரிக்கின்றீர்கள். அந்த இருவரில் ஒருவர் பத்திரிகை விற்பனையாளர் சங்கத் தலைவர். இன்னொருவர் உலோக மறுசுழற்சி சங்கத் தலைவர். தாங்களும் மேலும் இருவரும் தமிழ்ப்பள்ளி, தமிழ்மொழி, தமிழ்க்கல்வி ஆகிய எந்தவொரு தளத்திலும் காலூன்றி நிற்காதவர்கள் என்னும் சூழலில் இப்படி ஒரு திட்டத்தை முன்னெடுப்பதைத் தவிர்த்திருக்கலாம். எனினும், நீங்கள் மூவரும் தமிழர்கள் அல்லது இந்தியர்; தமிழ்ப்பள்ளி, தமிழ்மொழி, தமிழ்க்கல்வி ஆகியவற்றின் மீது உங்களுக்கும் அக்கறையுண்டு என்ற ஒரு சிறு ஆறுதலை எனக்கு நானே சொல்லிக்கொண்டு தொடர்கிறேன்.


6. தங்களிடமும் தங்கள் குழுவினரிடமும் கேட்பதற்கு என்னிடம் சில கேள்விகள் இருக்கின்றன.


அ) தமிழ்ப்பள்ளிகளில் 30% மாணவர்களும், தேசியப் பள்ளிகளில் 70% மாணவர்களும் படிக்கிறார்கள் என்ற புள்ளி விவரத்திற்குத் தங்களிடம் ஆதாரம் இருக்கின்றதா?

ஆ) தேசியத் தொடக்கப்பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக ஆக்கினால், அங்குப் படிக்கும் அனைத்து இந்திய மாணவர்களும் தமிழைப் படிப்பார்கள் என்று உங்களால் உறுதிபடுத்த முடியுமா?

இ) இந்தியர் என்ற இனப்பெயரைத் தங்கள் பிறப்பு ஆவணத்தில் குறிக்கப்பெற்றிருக்கும் அனைவரும் தமிழைப் படிக்க முன்வருவார்களா?

உ) தற்போது தேசியத் தொடக்கப் பள்ளிகளில் தமிழ்மொழிப் பாடம் (BTSK) கற்பிக்கப்படுகின்றது. மேலும் 15 பெற்றோர்கள் விரும்பினால் தாய்மொழி வகுப்பு (POL) நடத்தப்பட முடியும். இந்த இரு வழிகளில் தமிழைப் படிக்கும் வாய்ப்பு இருந்தும், எத்தனை இந்திய மாணவர்கள் தமிழை எடுத்துப் படிக்கின்றனர் என்ற புள்ள விவரமோ அல்லது தரவுகளோ தங்களிடம் உள்ளனவா?

ஊ) தேசியத் தொடக்கப்பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடம் ஆக்கினால், அது ஒரே ஒரு தமிழ்ப் பாடமாக மட்டுமே இருக்குமே தவிர, ஒருபோதும் அது ‘தமிழ்க்கல்வி’ ஆகாது என்ற வேறுபாட்டைத் தாங்கள் உணர்ந்திருக்கிறீர்களா?
  

எ) தேசியப் பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடம் ஆக்கினால், எல்லாப் பெற்றோரும் தமிழ்ப் பள்ளிகளைப் புறக்கணித்துவிட்டு, தேசியப் பள்ளிகளுக்குப் படையெடுத்துச் செல்வதையும் இதனால் காலப் போக்கில் தமிழ்ப்பள்ளிகள் ஒவ்வொன்றாக மூடப்படுவதையும் இறுதியில் இந்த நாட்டில் தமிழ்ப்பள்ளிகளே இல்லாத நிலைமை உருவாகுவதையும் தாங்கள் வரவேற்கிறீர்களா?

7. இந்த நாட்டில் கடந்த நூறாண்டுகளாகத் தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்க்கல்வியும் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையிலும் பலதரப்பட்ட போராட்டங்களுக்கு நடுவிலும் சிக்கிச் சிதறி, தட்டுத் தடுமாறி குற்றுயிரும் குலையுயிருமாக வாழ்ந்துகொண்டிருக்கின்றன. தமிழ்ப்பள்ளி – தமிழ்க்கல்வி தொடர்பாக ஆயிரமாயிரம் சிக்கல்களும் நெருக்கடிகளும் இன்றவும் முழுமையாகத் தீர்ந்தபாடில்லை. இருந்தாலும், நாடு விடுதலையான காலத்தில் 888 தமிழ்ப்பள்ளிகள் இருந்த நிலையின் இன்று 523 பள்ளிகள் மட்டுமே நிலைத்திருக்கின்றன. இந்தத் தமிழ்ப்பள்ளிகள் இருப்பதால் நம் சமுதாயம் அடைந்திருக்கும் சில நன்மைகளைப் பின்வருமாறு பட்டியலிடலாம்:-

அ) நம் நாட்டில் தமிழ்மொழி இன்றளவும் வளமாக வாழ்ந்துகொண்டிருக்கிறது.
ஆ) நாட்டின் கல்விமொழிகளில் ஒன்றாகத் தமிழ்மொழி இடம்பெற்றிருக்கின்றது.
இ) நாட்டின் அரசாங்கக் கேந்திரத்தில் ஒரு மொழியாகத் தமிழும் இடம்பெற்றிருக்கின்றது.
ஈ)  தமிழ்மொழி சார்ந்த கலை, இலக்கிய, பண்பாட்டு, வாழ்வியல் கூறுகள் செழிப்பாக இருக்கின்றன.
உ) பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கு அல்லது இந்தியர்களுக்கு இந்த நாட்டில் வாழ்வாதாரம், பொருளியல் வளம், வேலை வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன.
ஊ) தமிழ் நாளிதழ்களும் ஒலி, ஒளி, மின்னியல் ஊடகங்கள் செயல்படுகின்றன.
எ) தமிழ்மொழி சார்ந்த நிகழ்ச்சிகள், மாநாடுகள், ஆய்வுப் பணிகள் நடைபெறுகின்றன.
ஏ) தமிழ் மக்கள் அதிகாரிகளாகவும் துறைத் தலைவர்களாகவும் பணியாற்றும் அரசாங்கப் பணியிடங்கள் இருக்கின்றன.
ஐ) தனிமனித உரிமைகளாகிய தாய்மொழி, இனம், சமயம், பண்பாடு, கலை, இலக்கியம், கல்வி ஆகியவற்றைப் பேண முடிகின்றது.

8. ஏன் இதனைச் சொல்ல வருகிறேன் என்றால், தாங்களும் தங்கள் குழுவினரும் முன்மொழியும் “தேசியத் தொடக்கப் பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடம்” என்னும் திட்டம் மேலே குறிப்பிட்ட அனைத்து நலன்களையும் இல்லாமல் செய்துவிடும். காலப் போக்கில் நமது குமுகாயத்தின் ஆணிவேராக இருக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கு மாபெரும் ஆபத்தை ஏற்படுத்திவிடும். நமது அடிப்படை உரிமைகளையும் நமது அடையாளங்களையும் நமது இருப்பையும் மெதுமெதுவாகக் கொல்லும் ‘நஞ்சாக’ இந்தத் திட்டம் உருவாகிவிடும்.

9. ஆகவே, நூறாண்டு காலமாக நமது மக்களுக்கும் தமிழ்ப்பள்ளி – தமிழ்க்கல்விக்கும் இடையில் இருந்துவரும் தொப்புள்கொடி உறவைத் துண்டிக்கும் வகையில் அமைந்திருக்கும் இந்த ஆபத்தான திட்டத்தை; எதிர்காலத் தலைமுறையின் தாய்மொழிக் கண்ணைப் பறித்து அவர்களைத் தாய்மொழி அறியாத குருடர்களாக ஆக்கப் போகும்  இந்த அவலமான திட்டத்தை; வருங்காலத்தில் நமது குழந்தைகளை எந்தவித அடையாளமும் இல்லாத ஏதுமற்ற ஏதிலிகளாக ஆக்கப்போகும் இந்த ஆபத்து நிறைந்த திட்டத்தைத் தயவுசெய்து உடனடியாகக் கைவிடுமாறு தங்களைப் பணிவுடன் வேண்டுகிறேன்.

10. அதற்கு மாற்றாக, தமிழுக்கும் தமிழ்ப்பள்ளிக்கும் தமிழ்க்கல்விக்கும் ஏதேனும் நன்மை செய்ய நினைக்கும் தங்களைப் போன்ற செல்வாக்கு நிறைந்த நல்ல மனிதர்கள் செய்ய வேண்டிய சில திட்டங்களை முன்மொழிகின்றேன்.

அ) ‘குழந்தைகளைத் தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்புங்கள்’ என்னும் இயக்கத்தை (Campaign) நடத்தலாம்.
ஆ) தமிழ்ப்பள்ளிகளில் தரமான கற்றல் கற்பித்தல் நடைபெறுவதற்கு வேண்டிய ஏந்துகளைச் (வசதிகளை) செய்து தரலாம்.
இ) தமிழ்ப்பள்ளியில் படித்து இடைநிலைப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் அனைவரும் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் கட்டாயம் படிக்க வேண்டும் என்று பரப்புரை செய்யலாம்.

நன்றி, வணக்கம்.

அன்புடன்;
சுப.நற்குணன்.



Wednesday, August 15, 2012

பூப்பந்து வாகையர் 'பஞ்ச்' குணாளன் இயற்கை எய்தினார்

மலேசிய நாட்டின் பூப்பந்து விளையாட்டு வாகையர்,  'பஞ்ச்' (Punch) என்ற சிறப்பு அடைமொழிக்குச்  சொந்தக்காரர் 'பஞ்ச்' குணாளன் இன்று (15.08.2012) இயற்கை எய்தினார். 1960 - 70களில் பூப்பந்து விளையாட்டுத் துறையில் உலக அளவில் மலேசியாவின்   புகழை உயர்த்திய அவர் புற்றுநோயின் காரணமாக த் தமது 68-ஆவது அகவையில் காலமானார்.

'பஞ்ச்' குணாளன் பூப்பந்து துறையில் மிகவும் புகழ்பெற்ற வீரராக விளங்கினார். பூப்பந்து ஆட்டத்தில் ஒற்றையர் பிரிவிலும், இங் பூன் பீ என்பவருடன் இணைந்து ஆடிய இரட்டையர் பிரிவிலும் இவர் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்து உள்நாட்டு மக்களின் கவனத்தையும் பன்னாட்டு மக்களின் பார்வையையும் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1960ஆம் ஆண்டில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நடந்த ஒரு பூப்பந்து போட்டியில் முதன் முதலாக வாகையர் பட்டத்தை வென்று பூப்பந்து துறையில் பெயர் பதித்தார். பின்னர் 1962இல் கோலாலம்பூரில் நடந்த ஆசிய இளைஞர் பூப்பந்து போட்டியில் வென்றதன் மூலமாக நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிரத் தொடங்கினார். 

பத்தாண்டுகள் கழித்து 1970ஆம் ஆண்டு எடின்பர்க்கு மாநகரில் நடந்த காமன்வெல்த்து போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்தார். அதே ஆண்டில் பாங்காக்கில் நடந்த ஆசியப் போட்டியில் தங்கம் வென்றார். பின்னர் அடுத்த ஆண்டிலேயே (1971) 'தோமசு கிண்ணப்' போட்டியில் இரட்டையர் பிரிவில் வாகையர் பட்டத்தை வென்று சாதித்தார். 1974இல்  நியுசிலாந்து நாட்டில் நடந்த காமன்வெல்த்து போட்டியில் தனியாள் பிரிவில் தங்கமும் இரட்டையர் பிரிவில் வெண்கலமும் வெற்றிகொண்டு தமது திறனைப் பறைசாற்றினார்.

பூப்பந்து விளையாட்டுத் துறையில் இவருடைய  சாதனைகளுக்கு மதிப்பளித்து 1969, 1974 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மலேசிய அரசாங்கம் இவருக்குத் தேசிய சாதனையாளர் விருதளித்து சிறப்பு செய்தது. 

பூப்பந்து ஆடுவதிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் இவர் தம்முடைய பட்டறிவையும் விளையாட்டு நுணுக்கங்களையும் இளம் விளையாட்டாளர்களுக்குப் பயிற்றுவிக்கத் தொடங்கினார். தேசிய பயிற்றுனாராகப் பணியாற்றி 1992ஆம் ஆண்டில் 'தோமசு கிண்ணத்தைக்' கைப்பற்றும் அளவுக்கு நாட்டின் பூப்பந்து குழுவினரை உருவாக்கிய பெருமை இவரையே சாரும்.

நமது நாட்டின் புகழ்பெற்ற பூப்பந்து வீரர்களான இரசிட் சிடேக், இரசிவ் சிடேக், பூ கொக் கியாங் போன்றோர் இவரிடம் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசியப் பூப்பந்து சம்மேளனத்தின் (Asian Badminton Confederation) செயலாளராகவும், அனைத்துலகப் பூப்பந்து பேரவையின் (International Badminton Federation) தலைவராகவும் பொறுப்பேற்ற பெருமையும் இவருக்கு உண்டு. அதேபோல, மலேசியப் பூப்பந்து சங்கத்தின் தலைவராக 1985 முதல் 1997 வரை பணியாற்றியுள்ளார்.

1998ஆம் ஆண்டில் காமன்வெல்த்துப் போட்டிக்கான விளையாட்டு தீபத்தை, பங்கீங்காம் அரன்மனையில் இங்கிலாந்து பேரரிசியார் எலிசபெத்திடமிருந்து பெற்றுகொள்ளும் மிக உயரிய தகுதிபாட்டை இவர் பெற்றிருக்கிறார் என்பது பெருமைக்குரிய செய்தியாகும். 'பஞ்ச்' குணாளனின் பங்களிப்பைப் பெருமைபடுத்தும் வகையில் மலேசிய அரசாங்கம் இவருக்கு 'டத்தோ' எனப்படும் உயரிய விருதையும் வழங்கிச் சிறப்பித்துள்ளது.

பூப்பந்து போட்டியில் விரைந்து தாக்குவதில் (Smash) மிக வல்லவராக விளங்கிய காரணத்தினால் இவருக்கு 'பஞ்ச்' (Punch) என்ற அடைமொழி பெயருடன் ஒட்டிக்கொண்டது. இஃது அவருக்கே உரிய தனிச்சிறப்பாகும்.

திருமதி.விஜயகுமாரி என்பாரை வாழ்க்கைத் துணைவியாகவும், ரோசன் என்னும் பெயரில் ஒரே மகனையும் பெற்று மிகச் சிறந்த வாகையராகவும் மிக நல்ல மனிதராகவும் வாழ்ந்து, இறைவன் திருவடி சேர்ந்துவிட்ட மதிப்புமிகு டத்டோ பஞ்ச் குணாளன் அவர்களின் ஆதன் அமைதிபெற எல்லாம் வல்ல இறைமைத் திருவருள் துணைநிற்க வேண்டுவோமாக!

@சுப.நற்குணன், திருத்தமிழ்

Thursday, August 02, 2012

யுபிஎசார் தேர்வுத்தாள் தொகுப்பு:- புதிய வெளியீடு



ஜாலான் செராஸ் தமிழ்ப்பள்ளியில் யூ.பி.எஸ்.ஆர் தேர்வை நோக்கி ஐம்பது நாட்கள் என்னும் நிகழ்ச்சி 22.7.2012 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதே நிகழ்ச்சியில் யூ.பி.எஸ்.ஆர் தேர்வுத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவும் நடந்தது.  முன்னாள் மாணவர் சங்கத் தேசியப் பேரவையின் தலைவர் இராஜரத்தினம் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பு செய்தார்.


தொடக்கப் பள்ளிகளில் ஆறாம் ஆண்டில் பயிலும் மாணவர்கள் எதிர்வரும் செப்டெம்பர் 11 தொடங்கி 13ஆம் நாள் வரையில் மூன்று நாட்களுக்கு யூ.பி.எஸ்.ஆர் என்னும் அரசுத் தேர்வை எழுதவுள்ளனர். அதனை முன்னிட்டு மாணவர்களைத் தயார்படுத்தி ஊக்கமூட்டும் வகையில் ஜாலான் செராய் தமிழ்ப்பள்ளியில் ‘யூ.பி.எஸ்.ஆர் தேர்வை நோக்கி ஐம்பது நாட்கள்’ என்னும் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யபட்டிருந்தது.

தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்குத் தன்முனைப்பையும் ஊக்கத்தையும் வழங்கும் பொருட்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்பெற்றது. மாணவர்களின் தேர்வுக்கு உதவும் வகையில் ஒவ்வொருவருக்கும் 5 புத்தகங்கள் கொண்ட தேர்வுத்தாள் தொகுப்பு வழங்கப்பட்டது. யூ.பி.எஸ்.ஆர் தேர்வுக்குரிய 7 சோதனைத் தாள்கள் இந்தத் தொகுப்பில் அடங்கியுள்ளன.

இவ்வாண்டு யூ.பி.எஸ்.ஆர் எழுதவுள்ள மாணவர்களுக்கு உதவியாக ‘ரீட் ரிசோர்சஸ்’ நிறுவனம் இந்தத் தேர்வுத் தாள் தொகுப்பைச் சிறப்பாக வெளியிட்டுள்ளது. யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் இடம்பெறும் 7 பாடங்களுக்கும் தலா 7 தேர்வுத் தாள்களை இந்த நிறுவனம் மிக தரமான முறையில் உருவாக்கி வெளியிட்டிருப்பதாக சுப.நற்குணன் பேசுகையில் தெரிவித்தார். இவர் தமிழ்மொழிக்குரிய தேர்வுத் தாள் தொகுப்பினை எழுதிய ஆசிரியராவார்.

சுப.நற்குணனுக்குப் பொன்னாடை அணிவிக்கும் திரு.பாலன்
மேலும் பேசுகையில், நம் நாட்டில் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பயனுக்கும் பயன்பாட்டிற்கும் சில புத்தக நிறுவனங்கள் தொடர்ந்து துணை நூல்கள், பயிற்சி நூல்கள், வழிகாட்டி நூல்கள், தேர்வுத் தாள் தொகுப்பு போன்றவற்றை வெளியிட்டு வருகின்றன. இவற்றைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களும் வாங்கிப் பேராதரவு கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் மலாய், சீன நிறுவனங்கள் போல் நமது நிறுவனங்களும் தரமிக்க நூல்களை வெளியிட முடியும்.

பெற்றோர்களின் நல்ல ஆதரவும் நல்ல சந்தை வாய்ப்பும் இருந்தால் தரமான நூல்களைக் குறைந்த விலையில் வெளியிடுவதற்குப் பல நிறுவனங்கள் முன்வருவார்கள். தவிர, பல நிறுவங்களிடையே வணிகப் போட்டாப்போட்டி இருந்தால்தான் சிறப்பான நூல்கள் வெளிவர முடியும். ஆகவே, பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களும் சந்தையில் உள்ள தேர்வுத் துணை நூல்களை வாங்கி ஆதரிக்க வேண்டும். ஒரே ஒரு புத்தகத்தை வாங்கி பல படிகள் (Photostat) எடுத்துப் பயன்படுத்தும் நிலைமையை மாற்ற வேண்டும். எல்லாரும் மூலப்படி நூல்களை வாங்கினால் நம் சமுதாயத்தில் தமிழ்க்கல்வி சம்பந்தமான நூல்கள் இன்னும் அதிக அளவில் வெளிவரும் வாய்ப்பு உண்டாகும் என அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியினைத் தொடக்கிவைத்து சிறப்புரை ஆற்றிய முன்னாள் மாணவர் சங்கத் தேசியப் பேரவையின் தலைவர் இராஜரத்தினம் பேசுகையில், இந்த நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் நிலைத்திருக்க வேண்டும். அப்பொழுதான் நமது மொழி, பண்பாடு, கலை, இலக்கியம், சமயம் என அனைத்தும் நிலைத்து இருக்கும். இன்னும் ஐம்பது, நூறு ஆண்டுகளுக்குப் பிறகு நமது அடுத்த தலைமுறையினர் நமது சொந்த அடையாளத்தோடு வாழ்வதற்குத் தமிழ்ப்பள்ளிகள் கண்டிப்பாகக் காப்பாற்றப்பட வேண்டும் என்றார்.

திரு.இராஜரத்தினம் யுபிஎசார் தேர்வுநூலை வெளியிடுகிறார்

மாணவர்களுக்குத் தேர்வுத் தொகுப்பு வழங்கப்படுகிறது
தமிழ்ப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மிகச் சிறப்பாகக் கல்விப் பணிகளை செய்து வருகிறார்கள். ஆசிரியர்களின் கடுமையான உழைப்பால் இன்று தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மிகச் சிறப்பாகத் தேர்ச்சிபெற்று வருகிறார்கள். அதேபோல், ஆசிரியர்கள் நமது கலை, பண்பாடு, பழக்க வழக்கம், மரபுகளை நமது மாணவர்களுக்கு ஊட்டி வர வேண்டும் என்று அவர் தமதுரையில் குறிப்பிட்டார்.

இப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதோடு, பள்ளியில் பயிலும் 55 யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் வெளியீடு கண்ட தேர்வுத் தாள் தொகுப்பு இலவசமாக வழங்கப்பட்டது. இந்தத் தொகுப்பு மாணவர்கள் தேர்வினைத் துணிச்சலுடன் எதிர்கொள்ள துணைபுரியும் என முன்னாள் மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் கேசவன் குறிப்பிட்டார்.


பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் நாகேஸ்வரராவ், மாணவர்கள், ‘ரீட் ரிசோர்சஸ்’ புத்தக நிறுவன அதிகாரிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.

இந்தத் தேர்வுத் தொகுப்பு நாட்டில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் பயன்பட வேண்டும். இதனை நியாயமான விலையில் விற்பனை செய்வதாகவும், இதனை வாங்க விரும்புவோர் 012-6514683 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் எனவும் ‘ரீட் ரிசோர்சஸ்’ புத்தக நிறுவனத்தின் சார்பில் பாலன் தெரிவித்தார்.


                                                                                           @சுப.நற்குணன், திருத்தமிழ்



Blog Widget by LinkWithin