மரபு வழியிலிருந்து இன்று உலகம் பின்நவினம்(Post-Modernism) வரையில் பயணித்துக்கொண்டிருக்கிறது. தொழிற்புரட்சியைத் தொடர்ந்து உண்டாகிய நவினக் காலத்தில் மரபு, பண்பாடு, ஒழுக்கம், நெறி, குடும்ப உறவு, பாலுணர்வு ஆகியவற்றில் மேலை நாட்டினர் பெரும் சிதைவுகளுக்கும் போராட்டங்களுக்கும் உள்ளாகினர். அதனையடுத்து, எழும்பியதுதான் பின்நவினம். இது இன்று எல்லாத் துறைகளையும் தழுவிக்கொண்டிருக்கிறது; விழுங்கிக்கொண்டிருக்கிறது.
மாந்த நாகரிகக் காலத்தைக் கற்காலம், செப்புக்காலம், இரும்புக்காலம், நவினக் காலம் என பிரிப்பது வழக்கம். இந்த வரிசையில் அனைத்திற்கும் இறுதியானதாக உருவாகியிருக்கும் காலத்தைக் குறிக்கவே ‘பின்நவினம்’ என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது. மேற்கிற்கே உரிய பண்பட்டுப் பின்னணியில் தோன்றியதாக இருந்தபோதிலும் அது என்னவோ உலகம் முழுமைக்கும் உரிய புதிய எண்ணக்கருபோல காத்திரமாக(seriously) முன்னெடுக்கப்படுகிறது.
பின்நவினத்தைப் புரிந்துகொள்வதற்கு ‘காலம்’ என்பது முதலில் புரிந்துகொள்ளப்பட வேண்டியதாக இருக்கிறது. ‘பின்நவினக் காலம்’ என்பது மின்னல்வேகத்தில் மாறிவரும் மேற்கத்திய நாடுகளின் காலத்தைக் குறிக்கிறது. மேலை நாடுகளின் இடத்தை - காலத்தை எட்டிப்பிடிக்க கிழக்கத்திய நாடுகளுக்கு இன்னும் காலம் தேவைப்படலாம். அதில், தமிழ் மக்களுக்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பது சிந்தனைக்குரியது.
இப்படிப்பட்ட சூழலில், மேற்கு நாடுகளில் பல்துறைகளிலும் ஊடுறுவி வியாபித்திருக்கும் ‘பின்நவின’ எண்ணக்கருவைக் கொண்டுவந்து நம்முடைய தலைக்குள் கொட்டுவது சரியல்ல என்று சொல்வதா இல்லை இப்போதைக்கு சாத்தியமல்ல என்று சொல்லுவதா?
இத்தனைக்கும், பின்நவினத்தின் வரையரைகள் பற்றி முடிவான கட்டுமங்கள் (Construct) இன்றுவரையில் மேற்குச் சமுகத்தாரிடம் ஏற்பட்டிருக்கவில்லை. பின்நவினம் மீது திறனாய்வு மேற்கொண்ட இகாப் அசான் (Ihab Hassan), அஃது இன்னமும் ஆய்வுக்குரிய ஒரு விடயமாகவே இருக்கிறது எனக் கூறுகின்றார்.
பின்நவினம் பற்றி இதுவரையில் வெளிவந்துள்ள ஆய்வுகளிலிருந்து அறியப்பட்ட உண்மை என்னவெனில், பின்நவினம் என்பது ஒழுங்குசெய்யப்பட்ட - ஒருமைப்பட்ட - ஒரு முழுமையான - செறிவான கோட்பாடு அல்லது கட்டுமம் அல்ல.
இந்தப் பின்நவினம் பின்வரும் இயல்புகளைக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
2. பெரும் தொகுதியான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மைகளை - நெறிகளை – மரபுகளை மறுத்துரைப்பது.
3. ஒற்றைத் தன்மைக்கு எதிராக பன்முக அமைப்பைக் கொண்டிருப்பது.
4. மக்களின் மதிப்பைப் பெற்ற பெருநெறி, பெருங்கதையாடல்கள் (Meta Narratives) முதலானவற்றை மறுத்து சிறுங்கதையாடல்களை வரவேற்பது.
5. தன்னிலை(சுய) முரண்பாடுகளைக் கொண்டிருப்பது.
6. எதற்கும் உரிய பொதுவான தீர்வு என்று தனியாக எதுவுமில்லை என்கிறது.
7. அறிவியலே மேலான அறிவு என்ற வாதத்தைத் தகர்த்தெரிவது
8. எதனையும் மாற்றுவதோ அல்லது தீர்ப்பதோ அல்ல. மாறாக அனைத்தையும் மறுத்துரைப்பது.
9. வரலாற்று நிகழ்வுகளைத் திரும்பிப்பார்த்து புதிய பயணங்களை மேற்கொள்ளத் தூண்டுவது.
10. முதலாளியத்தின் (Capitalism) அடக்குமுறைக்குப் பின்னெழுந்த பின்முதலாளியம், பயனீட்டாளரியல் (Consumerism) ஆகியவற்றின் பின்னனியில் வருவது.
இப்படியாகப் பின்நவினம் பற்றிய பல்வேறு கருத்துகள் இருக்கின்றன. இதில் சிக்கல் என்னவெனில், நேரடிப் பட்டறிவுகள் எதுவும் இல்லாதச் சூழலில் அவற்றைப் புரிந்துகொள்வதில் கிழக்கத்திய மரபுகளோடு வாழ்ந்துகொண்டிருக்கும் நமக்கு சங்கடங்கள் நிறைய இருக்கின்றன. புரிந்துகொள்வதே சிரமாக இருக்கின்ற நிலையில் அவற்றை ஏற்றுக்கொள்வதென்பதைப் பற்றி சொல்லவும் வேண்டுமா?
ஆளானப்பட்ட மேலைநாட்டு அறிஞர்களே திக்குமுக்காடிக் கொண்டிருக்கும் ‘பின்நவினம்’ பற்றி இங்கே இருக்கும் சிலர் கரைத்துக்குடித்துவிட்டது போல எழுதுவதும் பேசுவதும் கேள்விக்குரியதாகும். மாறாக, பொதுவுடைமை, நவினமயம், பின்நவினமயம் ஆகிய வாழ்க்கைச் சூழலில் ஒன்றன்பின் ஒன்றாக உழன்று – அழுந்தி – சிதைந்து – சீரழிந்து பின்னர் வாழ்வைத் தேடி அலையும் மேலையர்களுக்கு வேண்டுமானால் பின்நவினம் ஓரளவுக்குப் புரிதலுக்கு உரிய ஒன்றாக இருக்கலாம்; அவர்களின் வாழ்க்கைமுறைக்கு ஏற்றதாகவும் இருக்கலாம்.
இருந்த போதிலும், பின்நவினத்தைப் பற்றி கருத்துகளை முன்வைத்த லெவின்(Harry Levin), பின்நவினமானது அடிப்படையில் அறிவாண்மைக்கு எதிரானது (Anti intellectual) என்று கூறியுள்ளார்.
இறுதியாக, தமிழ் விக்கிப்பீடியா பின்நவினம் பற்றி என்ன சொல்கிறது என்று பாருங்கள்:-
பின்னை நவீனத்துவம் (பின்நவீனத்துவம்) என்பது குறிப்பாக மேற்கு நாடுகளில் கலை இலக்கிய உலகில் நிலவும் ஒரு சமீபத்திய மனோபாவமாகும்.
கலை இலக்கியம் எனும் எல்லைப்பாடுகளைக் கடந்து தற்போது அது தத்துவம், அரசியல், வாழ்க்கைமுறை, தொழிநுட்பம், கட்டடக்கலை, நாடகம், சினிமா போன்ற களங்களை நோக்கியும் விரிந்து வருகிறது. பின்னை நவீன யுகம் எனும் வரலாற்றுக் காலகட்டத்தை அது குறிப்பதாக பின்னை நவீன வாதிகள் கருதுகின்றனர். பின் அமைப்பியல் சிந்தனையாளர்களான மிஷேல் ஃபூக்கோ, லக்கான், தெரிதா போன்றோர், அவர்களைத் தொடந்து லியத்தார்ட், பௌதலியார்ட், டெலூஸ் ஆகியோர், இன்னும் சமீபத்தில் அறிமுகமாகிவரும் புதிய தத்துவவியலாளர்கள் போன்றோர் பின்னை நவீனத் தத்துவத்தின் தத்துவவியலாளர்களாகக் கருதப்படுகின்றனர்.
இப்போக்கானது இரண்டாம் உலகப்போரின் பின்னான நம்பிக்கைச்சிதைவுகளின் செல்வாக்கால் எழுந்தது எனக் கூறப்படுகிறது.
ஒழுங்குபடுத்தும் கோட்பாடோ, ஒரு தெளிவான மையப் படிநிலையோ அற்ற கலாசார, புலமைத்துவ, கலைத்துவ நிலையாக பின்னவீனத்துவம் குறிப்பிடப்படுகிறது.
இது, தீவிர சிக்கற்றன்மை, முரண்பாடு, குழப்பநிலை, பல்வகைமை, தம்மிடைத் தொடர்புடைமை போன்றவற்றை வெளிப்படுத்துகிறது.
சான்றாதாரம்:-
1.கல்விக் கோட்பாடுகளும் மாற்றுச் சிந்தனைகளும் (பேரா.முனைவர் சபா.செயராசா)
2. உயிர்நிழல்-பிரான்சு), செப்தெம்பர்-அத்தோபர், 1999 (கொ.றொ.கொன்சுரன்ரைன்)
3.உளவியல் முகங்கள் (பேரா.முனைவர் சபா.செயராசா)
4.தமிழ் விக்கிபீடியா
(மரபியல் தொடர்ந்து மலரும்)
தொடர்பான இடுகைகள்:-
1. தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 1)
2.தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 2)
3. புத்திலக்கியவாணர்களுக்குத் தமிழும் தெரியாது தமிழுணர்வும் கிடையாது














