Sunday, June 27, 2010

செம்மொழி மாநாடு வரலாறு காணாத நிகழ்ச்சி; தமிழுக்கு எழுச்சி

சூன் திங்கள் 23 தொடங்கி 27 வரையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, தமிழகம் கோவை நகரில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலகமெங்கும் உள்ள பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தற்போது கோவையில் குவிந்துள்ளனர். நூற்றுக்கணக்கில் தமிழ் அறிஞர் பெருமக்கள் பத்துக்கும் மேற்பட்ட ஆய்வரங்கங்களில் கட்டுரைகளைப் படைத்துக்கொண்டிருக்கின்றனர்.


ஆய்வரங்கம், கவியரங்கம், கலந்தாய்வரங்கம், கலைநிகழ்ச்சி, நாடகம், இசைநிகழ்ச்சி, கண்காட்சி எனப் பல பல நிகழ்ச்சிகள் மிகவும் எழுச்சியோடும் நேர்த்தியாகவும் நடந்துகொண்டிருக்கின்றன.


எல்லாவகையில் மிகுந்த கவனமெடுத்து இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது; மிக நேர்த்தியாகவும் கட்டுக்கோப்பாகவும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் நடத்தப்படுகின்றன; நேரக் கட்டுப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது; பாதுகாப்பு நடவடிக்கைகள் வெகு செப்பமாக இருக்கின்றன.


இன்னும் சொல்லப்போனால், எந்த விதமான பெரிய குறைபாடுகளும் இல்லை என்று எல்லாரும் பாராட்டும் அளவுக்கு இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.



இப்படியொரு எழுச்சியையும் பிரமாண்டத்தையும் நிகழ்த்திக்காட்டி; உலகத்தின் பார்வையைத் தமிழின் பக்கம் திருப்பியிருக்கும் பெருமையும் பெருமிதமும் நிச்சயமாகத் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களையே சாரும் என்றால் அதில் மறுப்பதற்கோ மறைப்பதற்கோ எதுவுமில்லை.


தமிழக முதல்வர் அவர்களுடைய நேரடியான ஈடுபாடும், ஒவ்வொரு நாளும் அவர் மாநாட்டு அரங்கத்திற்கு வந்து தமிழோடு இணைந்து இன்புற்று இருப்பதும் இந்த மாநாட்டின் வெற்றிக்குக் காரணமாகும். தம்முடைய முக்கியமான அலுவல்களுக்கு இடையிலும் மாநாட்டில் தவறாமல் பங்கேற்கும் முதல்வர் அவர்களின் தமிழ் உள்ளம் போற்றுதலுக்கு உரியது; வணக்கத்திற்கு உரியது.


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கும் கோவை, கொடிசியா தொழிற்கல்வி வளாகத்தில் 9ஆவது தமிழ் இணைய மாநாடும் வெகு சிறப்பாக நடந்துகொண்டிருக்கிறது. பேராளர்களும் பார்வையாளர்களும் மிரண்டுபோகும் அளவுக்குக் கணினி, இணையத் துறையில் தமிழ் வளர்ச்சி தொடர்பான ஆய்வுகளும் புதுப்புதுக் கண்டுபிடிப்புகளும் எடுத்துக்காட்டப்பட்டன; விளக்கிச் சொல்லப்பட்டன.


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - தமிழ் இணைய மாநாடு ஆகிய இரண்டிலும் கலந்துகொள்ள நம் மலேசியாவிலிருந்து 200க்கும் மேற்பட்டோர் இங்கு வந்துள்ளனர். 30க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் மலேசியத் தமிழர்களால் படைக்கப்பட்டன. தமிழ் இணைய மாநாட்டில் மலேசியாவிலிருந்து 7 கட்டுரையாளர்கள் ஆய்வுக் கட்டுரைகளைப் படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


உலகத் தரத்திலான இவ்விரு மாநாடுகளிலும் கலந்துகொண்டதையும் தமிழ் இணைய மாநாட்டில் கட்டுரை படைத்ததையும் மிகவும் பெருமையும் பூரிப்பும் அடைகிறேன். அந்தப் பூரிப்பின் உந்துதலால், தமிழ் இணைய மாநாட்டுக் கணினி அறையிலிருந்து இந்தப் பதிவை இடுகின்றேன்.

மாநாட்டில் எடுக்கப்பட்ட சில படங்களைக் கீழே தருகிறேன்.


>மாநாட்டிற்கு அலையென திரண்ட மக்கள்

>தொல்காப்பியர் அரங்கில் நானும் நண்பர் கோவி.மதிவரனும்

>புத்தகக் கண்காட்சி அரங்கம்

>இனியவை நாற்பது அலங்கார வாகன ஊர்வல ஊர்தி

>தமிழ் இணைய மாநாட்டுக் கண்காட்சி அரங்கு

>தமிழ் - தமிழர் வரலாற்றுக் கண்காட்சி அரங்கு

> மாநாட்டு அரங்கில் மலேசிய அறிஞர் இர.திருச்செல்வம்
> மலேசியக் கல்வியாளர்கள் குழு

> தமிழ் இணைய மாநாட்டில் கட்டுரை படைக்கிறேன்

@தமிழ்ச் செம்மொழி மாநாடு - தமிழ் இணைய மாநாடு அரங்கிலிருந்து சுப.நற்குணன்


2 comments:

Sanjai Gandhi said...

தங்களைப் போன்ற வெளிநாட்டுத் தமிழ் அன்பர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தோம்.. தங்கள் தமிழ் பணி சிறக்கட்டும்..

அன்புடன்
சஞ்சய்காந்தி

புனிதா பிரகாஷ் said...

செம்மொழி மாநாடு தமிழுக்கு அணிசேர்த்த பெருவிழா. தொடரட்டும் தங்கள் தமிழ் பணி.


அன்புடன்,
தெமர்லோ தமிழ்ப்பள்ளி, துரோங், பேராக்.

Blog Widget by LinkWithin