Friday, September 01, 2006

தொடர் 6 : ஆரியத் தீயிலும் அழியாத தமிழ்

குமரிக்கண்ட அழிவுக்குப் பின்னர் எஞ்சியிருந்த நிலப்பரப்பான இன்றைய இந்தியத் துணைக்கண்ட நிலப்பகுதியில் தமிழ் மக்கள் குடியேறினர். அப்போது அந்த துணைக்கண்டத்தின் பெயர் நாவலம் என்பதாகும். நாவலம் என்ற இந்தியா முழுவதும் தமிழ் மக்கள் நிரம்பியிருந்த காலக்கட்டம் ஒன்று அப்போது இருந்ததை ஆய்வாளர்கள் அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர்.

இவ்வாறு, தமிழ் மக்கள் நிரம்பியிருந்த பகுதிதான் வட இந்தியா பாக்கிஸ்தான் எல்லையில் இருந்த சிந்துவெளி பரப்பு. நாகரிக உலகின் பிறப்பிடமாகக் கூறப்படும் சிந்துவெளி நாகரிகம் (மொகஞ்சதாரோ - அராப்பா), பழந்தமிழ்ப் பாண்டிய அரசின் நாகரிகத்தோடு பெருமளவில் ஒத்திருப்பது ஒன்றே சிந்துவெளி நாகரிகம் தமிழருடையது என்பதற்கான சான்றாக அமைந்திருக்கிறது.

வடக்கில் இமயம் முதல் தெற்கில் கடலில் மூழ்கிப்போன குமரி வரையில் பரந்துவிரிந்து ஆட்சிசெய்த தமிழ், காலத்தின் கட்டாயத்தினால் சிறுகச் சிறுகக் குறுகிப்போனது. தெற்கில் கடற்கோளால் தமிழ் நிலம் மூழ்கிப்போனது; வடக்கில் ஆரியர் என்ற இனத்தாரின் வருகையால் தமிழ்நிலம் சுருங்கிப் போனது. கடற்கோளுக்கு அடுத்த நிலையில் தமிழுக்குப் பெரும் கேடுகள் நடந்தது ஆரியர்களால்தாம் என்றால் பொய்யில்லை.

ஆரியர்கள், பாரசீகத்திலிருந்து 'கைபர் கணவாய்' வழியாக இந்தியத் துணைக்கண்டத்திற்குள் நுழைந்தார்கள் என்பது வரலாற்று ஆசிரியர்கள் ஒருமனதாக ஒப்புக்கொண்ட செய்தியாகும். அவர்கள் சிந்துவெளியில் குடியேறிய காலம் கி.மு.1500 முதல் 1200க்குள் இருக்கலாம். இவர்கள், காலங்காலமாகத் தமிழ்மக்கள் பின்பற்றிவந்த மொழி, சமய, பண்பாட்டுக் கூறுகளில் மிகப்பெரும் மாற்றங்களையும் தலைகீழ்த் திரிபுகளையும் ஏற்படுத்தினர். தமிழ்ச் சமுதாயத்தில் ஊடுருவி ஆதிக்கம் செய்யத் தொடங்கினர்.

ஆரியர் வருகையினால் பெருமளவில் பாதிப்புக்குள்ளான தமிழ் தன்னை மீண்டும் நிலைப்படுத்திக் கொள்ள பல நூற்றாண்டுகளை விலையாகக் கொடுக்க வேண்டியதாகிவிட்டது. ஆனாலும், இன்றளவும் ஆரியத் தாக்கத்திலிருந்து தமிழால் முழு விடுதலை பெறமுடியாத நிலையே இருந்து வருகின்றது. தமிழின் அடித்தளமாக இருக்கும் மொழி, இன, சமய, பண்பாட்டு, வாழ்வியல், வரலாற்றுக் கூறுகளில் அழிக்க முடியாத அளவுக்கு ஆரியக்கலப்புகள் ஏற்பட்டுவிட்டதும்; அந்தக் கலப்புநிலைக்குச் சமுதாய அங்கீகாரம் கிடைத்துவிட்டதுமே இதற்கு முக்கியக் காரணங்கள் எனலாம்.

மறைந்த குமரிக்கண்டத்தில் ஏற்பட்ட மூன்று கடற்கோள்களும் அதன் பிறகு ஏற்பட்ட ஆரியச் சூழ்ச்சிகளும் தமிழில் மறுக்கவோ மறைக்கவோ முடியாத பெரும் சேதங்களை ஏற்படுத்திவிட்டன என்பது உண்மை. இருந்தபோதிலும், தமிழ்மொழி மட்டும் மண்ணைவிட்டு மறைந்துவிடவில்லை என்பதே இதில் எண்ணிப்பார்க்கத்தக்கச் செய்தியாகும். கடல்போல் இருந்த தமிழ் கடுகுபோல் சிறுத்து போய் விட்டது என்பது உண்மை. ஆயினும் காரத்தை மட்டும் இழந்துவிடவில்லை.

No comments:

Blog Widget by LinkWithin