Thursday, August 02, 2012

யுபிஎசார் தேர்வுத்தாள் தொகுப்பு:- புதிய வெளியீடு



ஜாலான் செராஸ் தமிழ்ப்பள்ளியில் யூ.பி.எஸ்.ஆர் தேர்வை நோக்கி ஐம்பது நாட்கள் என்னும் நிகழ்ச்சி 22.7.2012 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதே நிகழ்ச்சியில் யூ.பி.எஸ்.ஆர் தேர்வுத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவும் நடந்தது.  முன்னாள் மாணவர் சங்கத் தேசியப் பேரவையின் தலைவர் இராஜரத்தினம் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பு செய்தார்.


தொடக்கப் பள்ளிகளில் ஆறாம் ஆண்டில் பயிலும் மாணவர்கள் எதிர்வரும் செப்டெம்பர் 11 தொடங்கி 13ஆம் நாள் வரையில் மூன்று நாட்களுக்கு யூ.பி.எஸ்.ஆர் என்னும் அரசுத் தேர்வை எழுதவுள்ளனர். அதனை முன்னிட்டு மாணவர்களைத் தயார்படுத்தி ஊக்கமூட்டும் வகையில் ஜாலான் செராய் தமிழ்ப்பள்ளியில் ‘யூ.பி.எஸ்.ஆர் தேர்வை நோக்கி ஐம்பது நாட்கள்’ என்னும் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யபட்டிருந்தது.

தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்குத் தன்முனைப்பையும் ஊக்கத்தையும் வழங்கும் பொருட்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்பெற்றது. மாணவர்களின் தேர்வுக்கு உதவும் வகையில் ஒவ்வொருவருக்கும் 5 புத்தகங்கள் கொண்ட தேர்வுத்தாள் தொகுப்பு வழங்கப்பட்டது. யூ.பி.எஸ்.ஆர் தேர்வுக்குரிய 7 சோதனைத் தாள்கள் இந்தத் தொகுப்பில் அடங்கியுள்ளன.

இவ்வாண்டு யூ.பி.எஸ்.ஆர் எழுதவுள்ள மாணவர்களுக்கு உதவியாக ‘ரீட் ரிசோர்சஸ்’ நிறுவனம் இந்தத் தேர்வுத் தாள் தொகுப்பைச் சிறப்பாக வெளியிட்டுள்ளது. யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் இடம்பெறும் 7 பாடங்களுக்கும் தலா 7 தேர்வுத் தாள்களை இந்த நிறுவனம் மிக தரமான முறையில் உருவாக்கி வெளியிட்டிருப்பதாக சுப.நற்குணன் பேசுகையில் தெரிவித்தார். இவர் தமிழ்மொழிக்குரிய தேர்வுத் தாள் தொகுப்பினை எழுதிய ஆசிரியராவார்.

சுப.நற்குணனுக்குப் பொன்னாடை அணிவிக்கும் திரு.பாலன்
மேலும் பேசுகையில், நம் நாட்டில் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பயனுக்கும் பயன்பாட்டிற்கும் சில புத்தக நிறுவனங்கள் தொடர்ந்து துணை நூல்கள், பயிற்சி நூல்கள், வழிகாட்டி நூல்கள், தேர்வுத் தாள் தொகுப்பு போன்றவற்றை வெளியிட்டு வருகின்றன. இவற்றைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களும் வாங்கிப் பேராதரவு கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் மலாய், சீன நிறுவனங்கள் போல் நமது நிறுவனங்களும் தரமிக்க நூல்களை வெளியிட முடியும்.

பெற்றோர்களின் நல்ல ஆதரவும் நல்ல சந்தை வாய்ப்பும் இருந்தால் தரமான நூல்களைக் குறைந்த விலையில் வெளியிடுவதற்குப் பல நிறுவனங்கள் முன்வருவார்கள். தவிர, பல நிறுவங்களிடையே வணிகப் போட்டாப்போட்டி இருந்தால்தான் சிறப்பான நூல்கள் வெளிவர முடியும். ஆகவே, பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களும் சந்தையில் உள்ள தேர்வுத் துணை நூல்களை வாங்கி ஆதரிக்க வேண்டும். ஒரே ஒரு புத்தகத்தை வாங்கி பல படிகள் (Photostat) எடுத்துப் பயன்படுத்தும் நிலைமையை மாற்ற வேண்டும். எல்லாரும் மூலப்படி நூல்களை வாங்கினால் நம் சமுதாயத்தில் தமிழ்க்கல்வி சம்பந்தமான நூல்கள் இன்னும் அதிக அளவில் வெளிவரும் வாய்ப்பு உண்டாகும் என அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியினைத் தொடக்கிவைத்து சிறப்புரை ஆற்றிய முன்னாள் மாணவர் சங்கத் தேசியப் பேரவையின் தலைவர் இராஜரத்தினம் பேசுகையில், இந்த நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் நிலைத்திருக்க வேண்டும். அப்பொழுதான் நமது மொழி, பண்பாடு, கலை, இலக்கியம், சமயம் என அனைத்தும் நிலைத்து இருக்கும். இன்னும் ஐம்பது, நூறு ஆண்டுகளுக்குப் பிறகு நமது அடுத்த தலைமுறையினர் நமது சொந்த அடையாளத்தோடு வாழ்வதற்குத் தமிழ்ப்பள்ளிகள் கண்டிப்பாகக் காப்பாற்றப்பட வேண்டும் என்றார்.

திரு.இராஜரத்தினம் யுபிஎசார் தேர்வுநூலை வெளியிடுகிறார்

மாணவர்களுக்குத் தேர்வுத் தொகுப்பு வழங்கப்படுகிறது
தமிழ்ப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மிகச் சிறப்பாகக் கல்விப் பணிகளை செய்து வருகிறார்கள். ஆசிரியர்களின் கடுமையான உழைப்பால் இன்று தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மிகச் சிறப்பாகத் தேர்ச்சிபெற்று வருகிறார்கள். அதேபோல், ஆசிரியர்கள் நமது கலை, பண்பாடு, பழக்க வழக்கம், மரபுகளை நமது மாணவர்களுக்கு ஊட்டி வர வேண்டும் என்று அவர் தமதுரையில் குறிப்பிட்டார்.

இப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதோடு, பள்ளியில் பயிலும் 55 யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் வெளியீடு கண்ட தேர்வுத் தாள் தொகுப்பு இலவசமாக வழங்கப்பட்டது. இந்தத் தொகுப்பு மாணவர்கள் தேர்வினைத் துணிச்சலுடன் எதிர்கொள்ள துணைபுரியும் என முன்னாள் மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் கேசவன் குறிப்பிட்டார்.


பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் நாகேஸ்வரராவ், மாணவர்கள், ‘ரீட் ரிசோர்சஸ்’ புத்தக நிறுவன அதிகாரிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.

இந்தத் தேர்வுத் தொகுப்பு நாட்டில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் பயன்பட வேண்டும். இதனை நியாயமான விலையில் விற்பனை செய்வதாகவும், இதனை வாங்க விரும்புவோர் 012-6514683 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் எனவும் ‘ரீட் ரிசோர்சஸ்’ புத்தக நிறுவனத்தின் சார்பில் பாலன் தெரிவித்தார்.


                                                                                           @சுப.நற்குணன், திருத்தமிழ்



Friday, July 13, 2012

தமிழ்க்கணினி வல்லுநர் ஆண்டோ பீட்டர் மறைவு

கணினி, இணையம், அச்சுத்துறை சார்ந்த பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் ஆண்டோ பீட்டர். மென்பொருள் தயாரிப்பு, இணையப் பக்கம் வடிவமைப்பில் ஈடுபட்டவர். கணித்தமிழ் வளர்ச்சியின் முன்னோடியும், சி.எஸ்.சி, சாப்டுவியூ நிறுவனத்தின்  நிறுவனரும், கணித்தமிழ்ச்சங்கத்தை நிறுவிப் பணிபுரிந்தவரும், பல கணினி நூல்களின் ஆசிரியருமான மா.ஆண்டோபீட்டர் 12.07.2012 வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் காலமானார். இவரின் மறைவு தமிழ் இணையத்துறைக்குப் பேரிழப்பு.

 தமிழ்க் கணினி குறித்த விழிப்புணர்வைத் தமிழர்களிடையே அதிகப்படுத்தியவர் ஆண்டோ பீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் முதன்முதலாகப் பல்லூடகக் கல்வியை அறிமுகப் படுத்திய இவர் இளைஞர்கள் வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்காக 500க்கும் மேற்பட்ட இலவச கருத்தரங்குகளை நடத்தியுள்ளார்.

கணினி, தமிழ் தொடர்பான பல்வேறு மாநாடுகளில் கலந்து கொண்டிருப்பதுடன் 26 ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார்.

முதல் தமிழ் இணைய இதழ் தொடங்கியவர்

அச்சு வடிவில் வந்து கொண்டிருக்கும் இதழ்களில் இருக்கும் படங்கள், செய்திகள் மற்றும் அனைத்துவிதமான படைப்புகளையும் இணைய தளங்களில் அச்சு இதழ்களைப் போன்று பகுதிகளாகவும், பக்கங்களாகவும் அனைவரும் பார்க்கவும் படிக்கவும் உருவாக்கப்பட்ட இணைய இதழ்களில் முதல் தமிழ் இணைய இதழான "தமிழ் சினிமா" எனும் பெயரில் முதல் தமிழ் இணைய இதழைத் தொடங்கியவர்.  

தமிழ்நாட்டில் இணைய இதழ்கள் குறித்த அறிமுகமில்லாத நிலையில், 31-01-1997 இல் தொடங்கப்பட்ட தமிழ் சினிமா இதழுக்கு அச்சிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் அதிக அளவு விளம்பரம் செய்யப்பட்டது. தமிழ் இணைய இதழ்களில் முதன் முதலாக அதிக அளவில் விளம்பரம் செய்யப்பட்டு தொடங்கப்பட்ட இதழ் தமிழ் சினிமா என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கணினித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் தமிழ் மரபு அறக் கட்டளையின் செயலாளராகவும் இருந்துவந்த இவர் இந்திய அரசு, தமிழ்நாடு அரசு அமைத்துள்ள சில குழுக்களில் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

பெற்ற விருதுகளும் பாராட்டுகளும்
 
‘தமிழும் கணிப்பொறியும்’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு - 2004. நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் சிறந்த எழுத்தாளருக்கான விருது 2007.

ஸ்ரீராம் நிறுவனத்தின் ‘பாரதி இலக்கியச் செல்வர் விருது’, தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் ‘பெரியார் விருது’.

குடும்பம்

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் 26.04.1967 இல் பிறந்த இவர் பெற்றோர் : மார்சீலீன் பர்னாந்து, ராசாத்தி பர்னாந்து. வாழ்க்கைத் துணைவி : ஸ்டெல்லா. பிள்ளைகள் : அமுதன் (மகன்), அமுதினி (மகள்).

அரும்பெறல் தமிழ்க் கணிஞராக நற்பணிகள் ஆற்றி இன்று நம்மைவிட்டு மீளாத்துயிலில் ஆழ்ந்துவிட்ட மா.ஆண்டோபீட்டர் அவர்களின் ஆதன் அமைதிபெற இறைமைத் திருவருளை வேண்டுவோம்.

மலேசியத் தமிழ்க் கணினி ஆர்வலர்கள் சார்பில் அன்னாரின் அன்புக் குடும்பத்தாருக்கு ஆழந்த இரங்களை தெரிவிக்க்கின்றோம்.


@சுப.நற்குணன், திருத்தமிழ்.



Saturday, June 16, 2012

தமிழின் தனித்தன்மை + தெய்வத்தன்மை

ஓர் இனம் அழியாமல் ‏இருக்க அந்த இனத்தி‎ன் மொழி உயிரோடும் - உயிர்ப்போடும் இருத்தல் வேண்டும். அந்த வகையில், பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு வகையான தடைகளைக் கடந்து தமிழ் இன்றளவும் உயிரோடு இருப்பதே நமக்குப் பெருமைதரக்கூடிய வரலாறாகும். காலத்தால் தொ‎ன்மையும் தெய்வத்தன்மையும் பெற்று ‏இருப்பதால்தான், நாடோ - அரசோ - ஆட்சியாளரோ இல்லாத நிலையிலும் தமிழும் தமிழினமும் இ‎ன்றும் நிலைத்திருக்கி‎ன்றன.

தமிழின் தனித்தன்மைக்கும் அதனுடைய தொன்மைக்கும் மட்டுமல்லாது தமிழ்மொழியின் தெய்வத்தன்மைக்கும் இந்தப் படக்காட்சி 
ஒரு நற்சான்று.  


தமிழில் பார்க்க - படிக்க.



ஆங்கிலத்தில் பார்க்க - படிக்க.



கற்காலம் தொடங்கி இன்றைய கணினி, இணைய, கைபேசி, கையடக்கக் கருவிக் காலம் வரையில்  உலகில் தமிழ்மொழி அடைந்துள்ள வெற்றிகளை வைத்துப் பார்க்குமிடத்து, உலகம் ஒருநாள் தமிழை நிச்சயமாகத் திரும்பிப்பார்க்கும் என நம்பலாம். தமிழ்மொழியில் புதைந்துள்ள எண்ணிலடங்காச் சிறப்புகளும் உண்மைகளும் மெய்ம்மங்களும் வெளிப்பட்டுத் தோன்றும் காலம் விரைவிலேயே மலரும் என்ற நம்பிக்கை நம்மிடையே பிறக்கிறது. உலக வரலாற்றின் ஒரு சிறுமுனையளவு பகுதி ஆனால், முகாமையான பகுதியைத் தம்முள் கொண்டுள்ள தமிழ்மொழியானது வெல்லும் காலம் வெகுதொலைவில் இல்லை என்ற தன்னம்பிக்கை துளிர்க்கிறது.

@சுப.நற்குணன், திருத்தமிழ்


Tuesday, June 05, 2012

2012 உலக சதுரங்க வீரர் - ஒரு தமிழன்!

இந்தியாவின் விசுவநாதன் ஆனந்த் உலக சதுரங்க வாகையர் (சாம்பியன்) பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

கடந்த புதனன்று (30.05.2012) மாசுகோவில் முடிவடைந்த இப்போட்டியில் 'டை பிரேக்கர்' முறையில் இசுரேலின் போரிசு கெல்ஃபாண்டை 2.5-1.5 என்கிற கணக்கில் வென்றார்

உலகப் பட்டத்தை முடிவுசெய்ய நடைபெற்ற 12 போட்டிகள் மாசுகோவின் இட்ரெட்யகோவ் அரங்கில் இருவருக்கும் இடையில் நடந்த போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த நிலையில், யார் உலகப் பட்டத்தை வெல்வார் என்பது 'டை பிரேக்கர்' முறையில் தீர்மானிக்கப்பட்டது.

மிக விரைவாக குறிப்பிட்ட நேரத்துக்குள் காய்களை நகர்த்தும் நான்கு 'டை-பிரேக்கர்' போட்டிகளின் இரண்டாவது ஆட்டத்தில் ஆனந்த் வெற்றி பெற்றதன் மூலம் உலக சதுரங்க வாகையர் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டார். இதர மூன்று போட்டிகளும் சமநிலையில் முடிவடைந்தன.

சென்னையில் பிறந்த ஒரு தமிழரான விசுவநாதன் ஆனந்த் ஐந்தாவது முறையாக உலக சதுரங்கப் பட்டத்தை வென்றுள்ளார். அதிலும் குறிப்பாக நான்கு முறை தொடர்ச்சியாக வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

நான்கு ஆட்டங்களை கொண்ட 'டை பிரேக்கரின்' முதல் ஆட்டத்தில் 33 நகர்வுகள் இடம்பெற்ற பிறகு இருவரும் அந்த ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தனர்.

அடுத்து நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் மொத்தமாக 77 நகர்வுகள் இடம்பெற்றன. இதில் ஆனந்த் வெற்றி பெற்று முன்னிலை வகித்தார். அதன் பிறகு இடம்பெற்ற மற்ற இரண்டு ஆட்டங்களும் சமநிலையில் முடிவடைந்த காரணத்தால் ஆனந்த் வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்பட்டது.

விசுவநாதன் முதல் முறையாக 2000ஆம் ஆண்டு உலக சதுரங்க வாகையர் பட்டத்தை வென்றார். அதன் பிறகு தொடர்ச்சியாக 2007, 2008, 2010 ஆகிய ஆண்டுகளிலும் இந்தப் பட்டத்தை வென்றிருந்தார்.

அடுத்த உலக சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டி 2014 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது.

விசுவநாதன் ஆனந்த் பற்றி மேலும் அறிந்துகொள்ள இங்குச் சொடுக்கவும்.

@சுப.நற்குணன், திருத்தமிழ்

Wednesday, May 30, 2012

ஈப்போவில் தமிழ்க்கல்வி ஆராய்ச்சி மாநாடு


பேரா மாநிலத்தில் உள்ள சுல்தான் இதுரீசு கல்வியியல் பல்கலைகழகத்தின் ஏற்பாட்டில், மலேசியாவில் முதன் முறையாக ‘தமிழ்க்கல்வி ஆராய்ச்சி மாநாடு’ ஈப்போவில் இன்று 30.5.2012ஆம் தொடங்கியது. 30 - 31 மே 2012 ஆகிய இரண்டு நாட்களுக்கு இந்த மாநாடு நடைபெறுகின்றது.

மலேசியா மட்டுமின்றி இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து ஏறக்குறைய 200 பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர். தமிழ்க்கல்வி, தமிழ்மொழி கற்றல் கற்பித்தல் தொடர்பாக ஏறக்குறைய 32 ஆய்வுக் கட்டுரைகள் இந்த மாநாட்டில் படைக்கப்படுகின்றன.

மலேசியாவில் தமிழ்க்கல்வியை முன்படுத்தி முதன் முறையாக நடைபெறுகின்ற இந்த மாநாட்டில் ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், பேராசியர்கள் ஆகியோர் திரளாக வந்து கலந்துகொண்டுள்ளது மகிழ்ச்சியளிக்கும் வளர்ச்சியாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, தமிழ் ஆசிரியர்களிடையே நல்லதொரு சிந்தனை மாற்றம் ஏற்பட்டு வருவதை இதன்வழி அறியமுடிகிறது.

முனைவர் சாமிக்கண்ணு ஜபமணி
ஆசிரியர்கள், மாணவர்களின் கற்றல் சிக்கலைக் களையவும், தங்கள் பணித்திறனை மேம்படுத்திக்கொள்ளவும் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்னும் நோக்கத்தை முன்வைத்து இந்த மாநாடு நடைபெறுவதாக இதன் ஏற்பாட்டுக்குழுச் செயலாளர் முனைவர் சாமிக்கண்ணு ஜபமணி தெரிவித்தார்.

தொடக்க நாளான இன்று முதலாவதாக முனைவர் என்.எஸ்.இராஜேந்திரன் ‘கற்றல் கற்பித்தலில் புத்தாக்கம்’ என்ற தலைப்பில் சிறப்புக் கட்டுரை படைத்தார். அவரைத் தொடர்ந்து உப்சி (UPSI) பல்கலைக்கழக விரிவுரைஞர் முனைவர் சாமிக்கண்ணு ஜபமணி ‘ஒவ்வோர் ஆசிரியரும் ஓர் ஆய்வாளர்’ என்ற தலைப்பில் கட்டுரை வாசித்தளித்தார்.

இன்றைய நாளில் மட்டும் மூன்று அரங்குகளில் மொத்தம் 15 ஆய்வுக் கட்டுரைகள் படைக்கப்பட்டன. மாநாட்டில் படைக்கப்படும் கட்டுரைகள் அனைத்து நூல்வடிவில் ஆய்வடங்கலாக அனைத்துப் பேராளர்களும் வழங்கப்பட்டுள்ளது.






தமிழ்நாடு, சிங்கப்பூர் பேராளர்கள் படைத்த கட்டுரைகள் பலருடைய கவனத்தை ஈர்க்கும் வண்ணமாக அமைந்த தருணத்தில், மலேசியக் கல்வியாளர்களின் கட்டுரைகளும் கற்றல் கற்பித்தல் தொடர்பான பல்வேறு கூறுகளை அலசி ஆராயும் வகையில் அமைந்திருந்தன.

நமது நாட்டுச் சூழலில் தமிழ்க் கல்வியாளர்கள் தமிழ்க்கல்வி வளர்ச்சி, தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில் புத்தாக்கம் ஆகியவை பற்றியெல்லாம் ஆய்வுகளை நடத்தி சிறப்பாகப் படைத்தளிக்க முடியும் என்பதை இந்த மாநாடு உறுதிபடுத்தியுள்ளது என்றால் மிகையன்று.

கல்வியியல் துறையில் சிகரங்களைத் தொடுவதற்கு நமது ஆசிரியர்கள் தங்கள் கரங்களை நீட்டி மேலெறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த மாநாட்டில் நேரடியாகக் காண முடிந்தது.

இந்த மாநாட்டில் கட்டுரை படைத்த மலேசியக் கல்வியாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ‘திருத்தமிழ்’ மனமார்ந்த பாராட்டையும் நல்வாழ்த்தையும் பதிவுசெய்வதில் மகிழ்ச்சி கொள்கிறது.

விரிவுரைஞர் மன்னர் மன்னன்
திரு.வேல்முருகன் - சிங்கை
திருமதி தனலெட்சுமி
விரிவுரைஞர் திரு.மோகன் குமார்
ஆசிரியர் திரு.வாசுதேவன் இலெட்சுமணன்
 
@சுப.நற்குணன், திருத்தமிழ்
 

Monday, May 28, 2012

உலகத்தின் முதல் மொழி எதுவாக இருக்கும்?


பிலேடியன்  (Pleaidians) என்னும் அயல்கிரக வாசிகள் உலகத்தோடு பல காலமாக தொடர்பில் உள்ளனர் என்று அமெரிக்கர்கள் சிலர் நம்புகின்றனர். இவர்கள் நேரடியாக இந்தப் பிலேடியன் என்னும் வேற்றுலக வாசிகளோடு தொடர்பில் உள்ளவர்கள் என்று அறிவித்துள்ளனர். 

உலகில் உள்ள பல விஞ்ஞான முன்னேற்றங்களுக்கு இந்த அயல் கிரக வாசிகள் தான் காரணம் என்று இந்தக் குழு நம்புகின்றது. மொழி, வரலாறு ஆகியவற்றை உலகிற்கு அறியப்படுத்தியது இந்த பிலேடியன்கள் தான் என்று உறுதியாகக் கூறுகின்றனர் இந்த அமெரிக்கர்கள். 

மேலும் உலகில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களுக்கும் இந்த அயல் கிரக வாசிகள் தான் காரணம் என்று சொல்கின்றனர். உலகில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வும் இந்தப் பிலேடியன்கள் சொல்கிறார்கள் என்று இந்த அமெரிக்கக் குழு சொல்கிறது. இந்த குழுவில் உள்ளவர்கள் நூல்கள் படிப்தில்லை. ஆனால் பிலேடியன்கள் உதவியுடன் பல தகவல்கள் அறியத் தந்துள்ளனர். பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வு வழங்கி உள்ளனர். இவர்கள் அயல்கிரக வாசிகளோடு தொடர்பு கொண்டு ஏராளமான தகவல்களை உலகிற்குச் சொல்லி வருகின்றனர்.

அந்த வகையில் 1995 ஆம் ஆண்டு இந்த ப்லேடியன்களோடு தொடர்பு உள்ள பேராசிரியர் அலெக்சு காலியர் தனது குழுவிற்கு பாடம் நடத்துகையில் திடீரென்று உலகின் மொழிகளைப் பற்றி பாடம் நடத்துகிறார். அப்போது அவர் உலகின் முதலில் பேசப்பட்ட மொழி தமிழ் மொழி தான் எனக் கூறியுள்ளார். பின்பு தான் பிலேடியன்கள் உதவியுடன் பல மொழிகள் பல்வேறு நாடுகளுக்குப் பரப்பட்டது என்று பிலேடியன்கள் சொல்வதாக இவர் சொல்கிறார். நிகழ்ப்பட  இணைப்பைப் பாருங்கள்.



தமிழே இந்தியாவின் மூத்த மொழி என்பதோடு மட்டுமல்லாமல், உலக மொழிகளுக்கே தாய்மொழி என்ற அளவுக்குத் தகுதிபடைத்திருக்கிறது என்பது பல அறிஞர் பெருமக்களின் நடுநிலையான முடிவாகும்.

“உலக மொழிகளில் மூத்த முதல்மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும்” என்று ஆகக் கடைசியாக மொழியியல் அறிஞர் நோவாம் சோம்சுகி (Noam Chomsky) அறிவித்துள்ளார்.  

நோவாம் சோம்சுகியின் கருத்தை அவருக்கு முன்னாலேயே மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் உறுதிபட நிறுவியுள்ளார். அவருடைய அயராத மொழியியல் ஆய்வின் பயனாக அவர் கண்டுசொன்ன அரிய உண்மைகள் பற்பல. அவற்றில் ஒன்றுதான் தமிழே உலகின் மூத்தமொழி என்பது.

இதனை நிறுவும் வகையில் அவர் கொடுத்திருக்கும் ஆய்வின் அடிப்படையிலான சில ஆதாரங்களின் பட்டியலை இதோ:-
1.மாந்தன் பிறந்தகமாகிய குமரிக்கண்டத்தில் தமிழ் தோன்றி இருத்தல்.

2.இப்போது இருக்கும் மொழிகளுள் தமிழ் மிகப் பழைமையானதாக இருத்தல்.

3.தமிழ் எளிய ஒலிகளைக் கொண்டிருத்தல்.

4.தமிழில் சிறப்புப் பொருள்தரும் சொற்கள் பிறமொழிகளில் பொதுப்பொருள் தருதல் [எ.கா: செப்பு(தெலுங்கு), தா(இலத்தின்)]
5.தமிழ் இயற்கையான சொல்வளர்ச்சி கொண்டதாக இருத்தல். (செயற்கையான சொல்வளர்ச்சி இல்லை)

6.ஆரிய சேமியமொழிச் சொற்கள் பலவற்றின் வேரைத் தமிழ் தன்னகத்தே கொண்டிருத்தல்.

7.பல மொழிகளின் மூவிடப் பதிற்பெயர்கள் தமிழ்ப் பெயர்களைப் பெரிதும் சிறுதும் ஒத்திருத்தல்.

8.தாய் தந்தையரைக் குறிக்கும் தமிழ் முறைப்பெயர்கள், ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் திரிந்தும் திரியாதும் வழங்கி வருதல்.

9.தமிழ்ச்சொற்கள் வழங்காப் பெருமொழி உலகத்தில் இல்லாமை.

10.ஒரு தனிமொழிக்குரிய தோற்ற வளர்ச்சி முறைகளைத் தமிழே தெரிவித்தல்.

11.சில பல இலக்கண நெறிமுறைகள் தமிழுக்கும் பிற மொழிகளுக்கும் பொதுவாக இருத்தல்.

12.பல மொழிகள் தமிழிலுள்ள ஒருபொருட் பலசொற்களுள் ஒவ்வொன்றைத் தெரிந்துகொண்டிருத்தல். [எ.கா: இல்(தெலுங்கு)), மனை(கன்னடம்), அகம்(கிரேக்கம்), குடி(பின்னியம்)]13.பிறமொழிகளுக்குச் சிறப்பாகக் கூறப்படும் இயல்களில் மூல நிலைகள் தமிழில் இருத்தல். [எ.கா: ஆரிய மொழிகளின் அசை அழுத்தமும் சிந்திய மொழிகளின் உயிரிசைவு மாற்றமும் அமெரிக்க மொழிகளின் பல்தொகை நிலையும் போன்றன]

இப்படியான, பல்வேறு உறுதியான காரனங்களின் அடிப்படையில் இந்தியா மட்டுமல்ல.. உலகத்திற்கே மூத்தமொழி.. முதல்மொழி தமிழாகத்தான் இருக்க முடியும் என்பது  அறிஞர்களின் தெளிவும் முடிபும் ஆகும்.  

@சுப.நற்குணன், திருத்தமிழ்

Thursday, May 24, 2012

UPSI:- தமிழ்க்கல்வி ஆராய்ச்சி மாநாடு


பேரா, தஞ்சோங் மாலிம் சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைகழக மொழி தொடர்புத்துறை புலம், மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழக ஆதரவோடு மலேசிய நாட்டில் முதன் முறையாக ‘தமிழ்க்கல்வி ஆராய்ச்சி மாநாடு’ நடத்தவுள்ளது.

இம்மாநாடு எதிர்வரும் 2012, மே திங்கள் 30 - 31 ஆகிய இரண்டு நாட்களுக்கு ஈப்போ மாநகரில் உள்ள இல் சிட்டி தங்கும் விடுதியில் (Hillcity Hotel) நடைபெறும்.

மாநாட்டு நோக்கம்:-

தமிழ்க் கல்வியாளர்களும் ஆய்வாளர்களும் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை முன்வைக்கும் ஒரு தளமாக இந்த மாநாடு அமையவுள்ளது. தமிழ் ஆசிரியர்களும் கல்வியாளர்களும் தங்கள் புலமைத் திறம், பட்டறிவு, கற்றல் கற்பித்தல் திறன் முதலானவை தொடர்பில் கலந்துரையாடி தங்களுக்குள் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு, புதிய இலக்குகளை நோக்கி இணைந்து செயல்பட ஊக்குவிக்கும் நோக்கத்திலும் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டில் படைக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தும் ‘தமிழ்க் கற்றல் கற்பித்தலில் புத்தாக்கம்’ எனும் கருப்பொருளில் அமைந்திருக்கும். மொத்தம் 32 ஆய்வுக் கட்டுரைகள் படைக்கப்படவுள்ளன. வெளிநாட்டு ஆய்வாளர்களோடு உள்நாட்டுக் கல்வியாளர்களும் அருமைவாய்ந்த கட்டுரைகளைப் படைப்பார்கள்.

தமிழ்க்கல்வி வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பங்காற்றும் வகையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் கலந்துகொள்ள மலேசியத் தமிழ்க் கவியாளர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் ஆகிய அனைவரும் அழைக்கப்படுகிறார்கள்.

மாநாட்டுக் கட்டணம் :-

உள்நாட்டுப் பேராளர்கள்:- RM200.00 (தங்கும் வசதி உண்டு) / RM150.00 (தங்கும் வசதி இல்லை )

வெளிநாட்டுப் பேராளர்கள்:- USD100.00

மாநாட்டுக் கட்டணத்தை உப்சி பல்கலைகழகப் பொருளகக் கணக்கில் செலுத்திப் பதிவு செய்து கொள்ளலாம். அதன் விவரம் பின்வருமாறு:-

 Bank Islam - Account Number:- 08068010003264

பொருளகத்தில் பணத்தைச் சேர்த்தவுடன் அதன் சான்றுச் சீட்டை (Bank Slip) பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

TERC 2012 Secritariat, Faculty Of Languages and Communication,
Sultan Idris Education University, 35900 Tanjung Malim, Perak, Malaysia.
(Attn: Dr.S.Samikkanu Jabamoney) Fax:-6054583603

பேராளர்களுக்கு மாநாட்டுப் பை, மாநாட்டு மலர், தங்கும் வசதி, உணவு ஆகிய அனைத்தும் செய்து தரப்படும்.

மாநாடு தொடர்பான மேல்விவரங்களுக்கும் தொடர்புக்கும்:
முனைவர் சாமிக்கண்ணு ஜெபமணி (கைபேசி:- 6012-5275943) மின்னஞ்சல்:- samjabarose@yahoo.com.my

தமிழ்க்கல்வியையும் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலையும் முன்னிருத்தி மலேசியாவில் முதன்முறையாக  நடைபெறும் இந்த மாநாட்டில் மலேசியக் கல்வியாளர்களும் ஆசிரியர்களும் திரளாகக் கலந்துகொண்டு ஆதரவு செய்ய வேண்டும். அறிவு சார்ந்த மாநாடுகளும் கல்வியியல் தொடர்பான மாநாடுகளும் தொடர்ந்து நடைபெறுவதற்கு இந்த மாநாடு ஒரு படிக்கல்லாக அமையட்டும். மலேசியத் தமிழ்க் கல்வியாளர் சமூகத்தில் ஆய்வுப்  பண்பாடும் ஆராய்ச்சிக் கண்ணோட்டமும் உருவாகி வளர்ச்சிபெற இந்த மாநாடு ஒரு தொடக்கமாக - தோற்றுவாயாக இருக்கட்டும்.

வாருங்கள் நண்பர்களே, ஆசிரியர்களே, மலேசியத் தமிழ்க் கல்வியாளர்களே.. மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடர்பாக அனைவரும் ஒன்றுகூடி அறிவு சார்ந்த நிலையில் பேசுவோம்; ஆய்வு சார்ந்த நிலையில் சிந்திப்போம்; ஆராய்ச்சி நோக்கோடு முன்னேறுவோம். சமூகம் மாற முதலில் நாம் மாறுவோம். தமிழ்ச் சமூகத்தின் மறுமலர்ச்சி  நம்மிடமிருந்து தொடங்கட்டும்.

@சுப.நற்குணன், திருத்தமிழ்

Blog Widget by LinkWithin