Thursday, October 31, 2013

தமிழ் இலக்கியப் பாடத்தை எடுக்க மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்

12.10.2013ஆம் நாள் நடந்த 'எசுபிஎம் தமிழ் இலக்கியக் கருத்தரங்கம்' தொடர்பாக வெளிவந்த நாளிதழ் செய்தி இது. நன்றி: மக்கள் ஓசை (28.10.2013)

***************
 

தமிழ் இலக்கியப் பாடம் கடுமையான பாடமல்ல. மலேசியக் கல்வி சான்றிதழ் (எசுபிஎம்) தேர்வுப் பாடமாகத் தெரிவு செய்யும் ஒவ்வொரு மாணவரும் தமிழ் இலக்கியப் பாடத்தையும் கண்டிப்பாகத் தேர்வு செய்ய வேண்டுமென்று தமிழ் வாழ்வியல் இயக்கச் செயலாளர் சுப.நற்குணன் வேண்டுகோள் விடுத்தார். 

தமிழ் வாழ்வியல் இயக்க ஏற்பாட்டில் தமிழியல் நடுவத்தில் நடைப்பெற்ற எசுபிஎம் மாணவர்களுக்கான தமிழ் இலக்கியப் பாடக் கருத்தரங்கு நிகழ்ச்சியில் பேசிய அவர் மேற்கண்ட கருத்தை வலியுறுத்தினார்.

தமிழ் இலக்கியப் பாடத்தில் நமது மாணவர்கள் பெறும் புள்ளிகள் அவர்கள் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் சேர உதவியாக இருப்பதுடன் தங்களின் வாழ்க்கையில் நல்ல வழிகாட்டுதலையும் தரவல்லதாக உள்ளது.

எனவே, நம் மாணவர்கள் தமிழ் மொழியுடன், தமிழ் இலக்கியப் பாடத்தையும் தேர்வு செய்ய பெற்றோர்களும், இடைநிலைப்பள்ளி தமிழாசிரியர்களும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். தமிழ் இலக்கியங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லத் தமிழ் இலக்கியப் பாடங்களை நமது மாணவர்கள் கற்பது அவசியமாகும்.

மாணவர்களுக்குப் போதிப்பதற்குத் தேவையான வழிகாட்டி நூல்கள் தற்போது கடைகளில் கிடைப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இங்கு நடைப்பெற்ற கருத்தரங்கில் அனுபவமிக்க ஆசிரியர்கள் மாணவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களையும் தேர்வு அணுகுமுறைகளையும் மாதிரி வினாக்களும் விடை அமைப்பு முறைகளையும் எளிய முறையில் விளக்கப்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் செலாமா, பேரா, நிபோங் டிபால், சிம்பாங் அம்பாட், பாரிட் புந்தார் நடுவங்களைச் சேர்ந்த 80 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

@நன்றி: மக்கள் ஓசை
 

No comments:

Blog Widget by LinkWithin