Tuesday, August 16, 2011

மலாயாப் பல்கலையில் கற்றல் கற்பித்தல் மாநாடு

ஆகத்து 12, 13 & 14, 2011 ஆகிய மூன்று நாட்களில், கோலாலம்பூர் மலாயாப் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு மாநாடு ஒன்று சத்தமில்லாமல் நடந்து முடிந்திருக்கிறது. மலேசியா, இந்தியா, இலங்கை, சிங்கை, கனடா முதலான நாடுகளிலிருந்து ஏறக்குறைய 200 பேர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

இப்படியொரு மாநாட்டை மலேசியாவில் நடத்திய பெருமை, மலாயாப் பல்கலை முனைவர் சு.குமரன் அவர்களையும், சென்னை கலைஞன் பதிப்பகத்தின் நிறுவனர் திரு.நந்தன் மாசிலாமணி ஆகிய இருவரையே சாரும்.

‘கற்றல் கற்பித்தலில் புதிய சிந்தனைகள் - பன்னாட்டு மாநாடு’

இதுதான் மாநாட்டிற்குச் சூட்டப்பட்டிருந்த பெயர். மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையும் தமிழகத்தின் கலைஞன் பதிப்பகமும் கூட்டாக இணைந்து இந்த மாநாட்டினை ஏற்பாடு செய்திருந்தனர்.

முழுக்க முழுக்க கல்வியாளர்களுக்காக கூட்டப்பட்ட மாநாடாக இஃது அமைந்திருந்தது. பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், உயர்க்கல்வி மாணவர்கள் என கல்வித்துறை சார்ந்தவர்கள் இதில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

மூன்று நாட்களாக நடந்த இந்த மாநாட்டில் மொத்தம் 105 கட்டுரைகள் படைக்கப்பட்டன. இவை தமிழிலும் ஆங்கிலத்திலும் அமைந்திருந்தன. தமிழில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் அனைத்தும் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலோடு தொடர்புள்ளவையாக இருந்தன.

மூன்று நட்களில் நான்கு பொது அமர்வுகள் இடம்பெற்றன. இவை மாநாட்டிற்கு முத்தாய்ப்பு அரங்கங்களாக அமைந்தன. அவையாவன:-

1)பேராசிரியர் செ.இரா செல்வக்குமார் (கனடா) - மின்வழிக் கல்வியிலொரு கூறாக விக்கி மென்கல நுட்பம் வழி தமிழில் அறிவியல், கணிதம், பயன்முக அறிவியல் பாடங்கள் கற்றல் கற்பித்தல்.

2)முத்து நெடுமாறன் (மலேசியா) - கையடக்கக் கருவிகளில் தமிழ் மின்னூல் உருவாக்கம்

3)விஜய இராஜேஸ்வரி (இலங்கை) - தமிழ்க் கற்றல் கற்பித்தலில் விக்கி (Wiki) தொழில்நுட்பம்

4)சுப.நற்குணன் (மலேசியா) - தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில் இணையத்தின் பங்களிப்பும் பயன்பாடும்

[படம்:- (இ-வ) சுப.நற்குணன், முத்தெழிலன், தமிழரசி, பேரா.செல்வா, பிரேமா, சிங்கை ஜெயந்தி, இலங்கை விஜய இராஜேஸ்வரி]

மாநாட்டின் தொடக்க விழாவில் மனிதவள அமைச்சர் டத்தோ டாக்டர் சுப்பிரமணியம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்த வேளையில், நிறைவு விழாவில் தான் ஸ்ரீ குமரன் அவர்கள் கலந்துகொண்டார்.

முனைவர் கிருஷ்ணன் மணியம் தம்முடைய கலகலப்பான அறிவிப்பால் மாநாட்டை வழிநடத்த, திருமதி தமிழரசி தமிழ் வாழ்த்து பாடினார்.

மலேசியக் கல்வியாளர்கள் பலர் இந்த மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை படைத்தனர். அவர்களின் விவரம் பின்வருமாறு:-

1)கற்றல் கற்பித்தல் நடவடிக்கையில் இலக்கியக் கூறுகளின் வழி பண்பாடுமிக்க சமூகத்தை உருவாக்குதல் (முனைவர் கிருஷ்ணன் மணியம், மலாயாப் பல்கலை)

2)வலிமிகுமா? - வலிமிகாதா? ஒரு புதிய பார்வை (முனைவர் மோகனதாஸ் இராமசாமி)

3)மொழிக் கற்பித்தலில் கேட்டல் திறன் (கோ.மணிமாறன், துவான்கு பைனூன் ஆசிரியர் பயிற்சிக் கழகம்)

4)மலேசியச் சூழலில் தமிழரல்லாதவர்களுக்குத் தமிழ்ப் பயிற்றுவதில் எழும் வேற்றுமைச் சிக்கல்கள் (முனைவர் அருள்செல்வன் ராஜூ, சபா பல்கலைக்கழகம்)

5)மலேசியாவில் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில் புதிய சிந்தனைகள் (பன்னீர் செல்வம் அந்தோணி, சுல்தான் அப்துல் அலிம், ஆசிரியர் பயிற்சிக் கழகம்)

6)கற்றல் கற்பித்தலின் மேம்பாட்டில் மதிப்பீட்டின் பங்கு (இளங்குமரன் சிவாநந்தன், சுல்தான் இட்ரிஸ் கல்விக் கழகம்)

7)மன உளைச்சலைத் தவிர்ப்பதற்கு வகுப்பறை மேலாண்மையில் புதிய அணுகுமுறை (முனைவர் சேகர் நாராயணன், ஈப்போ ஆசிரியர் பயிற்சிக் கழகம்)

8)வலைத்தளத் தமிழகராதிகள் (மணியரசன் முனியாண்டி, துவான்கு பைனூன் ஆசிரியர் பயிற்சிக் கழகம்)

9)திருக்குறள் காட்டும் கற்றல் அறிவுநெறி (மோகன்குமார் செல்லையா, ஈப்போ, ஆசிரியர் பயிற்சிக் கழகம்)

10)வகுப்பறைக் கற்றல் கற்பித்தலில் சிக்கல்கள் களைவதில் செயலாய்வு அணுகுமுறை ஒரு தீர்வு (முனைவர் சாமிக்கண்ணு ஜெபமணி, சுல்தான் இட்ரிஸ் கல்விக் கழகம்)

தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில் புதிய சிந்தனைகளைப் பாய்ச்சி, தமிழ்க்கல்வியைச் செழிக்கச் செய்யும் ஆற்றலும் தகுதியும் வாய்ந்த கல்வியாளர்கள் மலேசியாவிலும் இருக்கின்றனர் என்பதை இந்த மாநாடு முரசறைந்து அறிவித்துள்ளது என்றால் மிகையாகாது.

@சுப.நற்குணன்


2 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

மிக்க மகிழ்ச்சி அன்பரே.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

சிங்கை, மலேசியாவில் பல தமிழ் சார் நிகழ்வுகள் நடப்பது கண்டு மகிழ்கிறேன். வாழ்த்துகள்.

Blog Widget by LinkWithin