Monday, January 28, 2013

மலேசியாவில் உலகத் தமிழாசிரியர் மாநாடு

சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில், 1992-ஆம் ஆண்டில் முதன் முதலாகத் 'உலகத் தமிழாசிரியர் மாநாடு' நடைபெற்றது. இதுவரை ஒன்பது உலகத் தமிழாசிரியர் மாநாடுகள் சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, மொரிசியசு, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் சிறப்பாக நடந்தேறியுள்ளன.

இந்த நிலையில், பத்தாம் உலகத் தமிழாசிரியர் மாநாடு 2013 ஆம் ஆண்டு, சூன் திங்கள் 3 - 5ஆம் நாள் வரை மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் மிகச்சிறப்பாக நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

மாநாட்டின் நோக்கம்:- 
1. தமிழ் கற்றல் கற்பித்தல் ஆகியவற்றில் மேம்பாடு காணத் திட்டமிடுதல்.
2. தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள், தகவல் தொடர்பு தொழில்நுட்ப வளமைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தும் வழிவகைகளை ஆராய்தல்.
3. உலகத் தமிழாசிரியர்களிடையே தமிழ் கற்றல் கற்பித்தல் தொடர்பான கருத்துப் பரிமாற்றங்களும் பகிர்வுகளும் நிகழ வகை செய்தல்.
4. பல நாடுகளைச் சேர்ந்த தமிழாசிரியர்களிடையே அணுக்கத் தொடர்பும் நிபுணத்துவ ஒத்துழைப்பும் ஏற்பட வழிவகுத்தல்.

ஆய்வுக் கட்டுரைகள் கட்டுரைகள் 20 நிமிடங்களுக்குள் படைக்கப்படும் வண்ணம் அமைந்திருக்க வேண்டும். ஒருங்குறி (Unicode) முறையில் தட்டச்சு செய்து  28.02.2013 தேதிக்குள் மாநாட்டுக் குழுவினருக்குக் கிடைக்குமாறு அனுப்பி வைக்கவும்.

பின்வரும் தலைப்புகளைத் தழுவியமைந்த கட்டுரைகள் பெரிதும் வரவேற்கப்படுகின்றன. 
1. கற்றல் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள்
 - ஊடகங்களின் தாக்கம் 
- தகவல் தொழில்நுட்பப் பயன்பாடு 
- புதுக்கோட்பாடுகள் , Language Teaching Learning Methods ( LTLM )
2. தமிழை இரண்டாம் மொழியாகப் பயில்வோர்க்கான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
3. பிறமொழி மாணவர்கள் தமிழை எளிமையாக கற்றுக் கொள்வதற்கான பயிற்று முறைகள்/நடவடிக்கைகள்
4. புலம்பெயர்ந்த நாடுகளில்/சூழலில் தமிழ்க் கல்வி
5. பண்பாட்டு விழுமியங்களைப் பேணுவதில் தமிழ்க் கல்வியின் பங்கும் பணியும்
6. தமிழ்மொழி கற்றல் கற்பித்தல் மதீப்பீட்டில் புதிய அணுகுமுறை
7. தமிழ்மொழிப் பயன்பாட்டில் கருத்தாடல் திறன் வளர்த்தல்




கட்டுரைகளைப் பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்:-
Email : mail@worldtamilteachersconf.org 
தொடர்பு முகவரி: 
10 th World Tamil Teachers Conference, 
C/O Department of Malaysian Languages & Applied Linguistics,
Faculty of Languages and Linguistics University of Malaya, 
50603,Kuala Lumpur
தொடர்புத் தகவல்கள்:- 
தலைவர்: 03-79673142 
செயலாளர்: 03-87331590 Tel: 603-7772 1 714 
தொலைப்படி (Fax): 603-7967 3 142
மேலும் விவரங்களுக்கு:- 

Saturday, December 08, 2012

பச்சை, கொச்சை பிறமொழிப் பிச்சை இவைதாம் ‘யதார்த்தமா?’




பேரா, சுங்கை சிப்புட்டில் கடந்த 2-12-2012ஆம் நாள் ஞாயிறு பிற்பகல் மணி 2:00 தொடங்கி 4:30 வரையில் சிறுகதைப் பட்டறையை வழிநடத்தினேன். தமிழ் இலக்கியக் கழகம், சுங்கை சிப்புட் வட்டாரக் கிளை இந்தப் பட்டறைக்கு ஏற்பாடு செய்திருந்தது.

25 பேர் கலந்துகொண்ட இந்தப் பட்டறையில் சிறுகதை ஆர்வலர்கள், இல்லத்தரசிகள், மாணவர்கள் ஆகியோர் இருந்தனர். அவர்களில் எவரும் இதுவரை சிறுகதை எழுதிய பட்டறிவு இல்லாதவர்கள். இருந்தாலும், சிறுகதை வாசகர்களாகவும் சிறுகதை எழுதும் ஆர்வம் கொண்டவர்களாகவும் இருந்தனர்.

இவர்களிடையே என்னை மிகவும் கவர்ந்த தனிச்சிறப்பு என்னவெனில் தமிழ்மொழியின் மீது ஆழந்த பற்றுதல் கொண்டவர்களாக இருந்தனர். மேலும், தமிழ்ப் படைப்பிலக்கியத்தில் பிறமொழிக் கலப்புகளை அறவே விரும்பாதவர்களாக இருந்தனர். பிறமொழிக் கலந்து தமிழைச் சிதைத்து படைப்பிலக்கியம் செய்பவர்கள் மீது  கண்டனப் பார்வை கொண்டவர்களாவும் இவர்களைக் காண முடிந்தது.

பட்டறையின் தொடக்கத்தில் தமிழியல் ஆய்வுக் களத்தின் தலைவர் தமிழ்த்திரு இர.திருச்செல்வம் அவர்கள் என்னை அறிமுகப்படுத்திப் பேசினார். பின்னர், சிறுகதைப் பட்டறையை நான் தொடர்ந்து வழிநடத்தினேன். எனது விளக்கம் கீழ்க்காணும் கோணங்களில் அமைந்தது.

1.    சிறுகதை என்றால் என்ன?
2.    எவை சிறுகதை ஆகலாம்?
3.    சிறுகதையின் கூறுகள் :- கரு, பாத்திரப் படைப்பு, பின்புலம், கதைப் பின்னல், போராட்டம், கதை அமைப்பு, ஒருமைப்பாடு, உரையாடல், வருணனை, தலைப்பு

இற்றை நிலையில் சிறுகதை இலக்கியம் பல்வேறு பரிணாமங்களைக் கண்டு வளர்ந்திருக்கிறது. கதையின் கரு, பாத்திரப்படைப்பு, போராட்டம், வருணனை, உரையாடல் ஆகியவற்றில் பல மாற்றங்களையும் புதுமைகளையும் காணமுடிகிறது. மாற்றங்களும் புதுமைகளும் வரவேற்கப்பட வேண்டும். மேலும், இன்றையக் காலச் சூழலுக்கு ஏற்ப கதைக் களங்களும் புதிய கோணத்தில் அமைந்தால்தான் சிறுகதைகள் வெற்றிபெறும்.
திருவாட்டி சு.நாகேசுவரி, இர.திருச்செல்வம், ம.இ.கா தொகுதித் தலைவர் திரு. கணேசன், சுப.நற்குணன், இறையருள்

மாற்றங்களுக்கும் புதுமைகளுக்கும் வரவேற்பு கூறும் அதே வேளையில் அவை நமது மொழிநலத்தைச் சிதைக்காமல் இருக்க வேண்டும். மொழிநலத்தைக் கெடுத்து; மொழிவளத்தைச் சிதைத்துச் செய்யப்படும் படைப்புகள் சிறந்த படைப்புகள் ஆகா. ஒரு மொழியின் படைப்பு அந்த மொழியின் தன்மைகளை எதிரொலிக்க வேண்டும்.

யதார்த்தம் என்னும் பெயரில் பச்சைகளையும், கொச்சைகளையும் அளவுக்கு அதிகமான பிறமொழிப் பிச்சைகளையும்  கலந்து எழுதி தமிழைச் சிதைக்கும் போக்குத் தடுக்கப்பட வேண்டும். மலேசியாவில் எழுதப்படும் சிறுகத்தகளில் அதிகமான மலாய்ச் சொற்களைத் திணிக்கிறார்கள்; சிங்கப்பூரில் ஆங்கிலம் தலைவிரித்து ஆடுகிறது; தமிழகச் சிறுகதைகளில் வட்டார வழக்குகள் மேலோங்கி இருக்கின்றன; அதைவிட அதிகமாக அம்மாமித் தமிழின் ஆக்கிரமிப்பு கொடிகட்டிப் பறக்கிறது; புலம்பெயர் ஈழத்தமிழரின் படைப்புகளில் ஈழமணம் விரவிக்கிடக்கிறது. இந்த நிலமையில் தமிழ்ச் சிறுகதைகளைப் பார்ப்பதும் சிறுகதையில் தமிழைப் பார்ப்பதும் அரிதாகிக்கொண்டே போகிறது.

அதிகமான பிறமொழிச் சொற்களைக் கலந்து எழுதி அதனையதார்த்தம்என்று சொல்லியும்; கதை காலத்திற்கு ஏற்ப இருக்கிறது என்று புகழ்ந்தும்; மிகச் சிறந்த தமிழ்ச் சிறுகதை என்று பாராட்டிப் பரிசு வழங்குவதும் சகித்துக்கொள்ள இயலாத செயல்களாகும். பொதுவாகவே, படைப்பிலக்கியத்தில் மொழித்தூய்மையைப் புறக்கணிக்கும் நிலைமை இன்று மிக இயல்பான ஒன்றாகிவிட்டது. இதனை தடுத்துநிறுத்தாவிடில் காலப்போக்கில் நிலைமை மிக மோசமாகிவிடும். தமிழின் நிலைமை மிகக் கவலைக்குரியதாகிவிடும்.

இலக்கியம் பற்றி கூறுகையில், “இலக்கியம் இரண்டு வகை, நல்ல இலக்கியம், நச்சு இலக்கியம். எந்த உணர்வோடு நாம் எழுதுகிறோமோ, அந்த உணர்வு வாசகன் மனதில் பதிந்தால் அது இலக்கியம். நல்ல உணர்வு பதிந்தால் அது நல்ல இலக்கியம். நச்சு உணர்வு பதிந்தால் அது நச்சு இலக்கியம்.என்று கூறுகிறார் லியோ தால்சுடாய்.  
 
ஆகவே, எந்த ஓர் இலக்கியமும் நல்ல நோக்கத்தைக் கொண்டதாக இருக்க வேண்டும். மக்கள் மனதையும் உணர்வையும் கெடுக்காததாக இருக்க வேண்டும். நம் நாட்டில் மகிழுந்து பழுதுபார்க்கும் பட்டறைக்குச் சென்று ஒரு மாற்றுப்பாகத்தை (Sparepart) மாற்ற விரும்பினால், கடைக்காரன் கேட்கும் முதல் கேள்விஉங்களுக்கு உண்மையானது (Original) வேண்டுமா? அல்லது போலியானது (Local) வேண்டுமா?” என்பதுதான். தரத்தை விரும்புபவர்களும் மகிழுந்தின் பாதுகாப்பை விரும்புபவர்களும் உண்மையான மாற்றுப்பாகத்தைப் பொருத்திக்கொள்கிறார்கள். மற்றவர்கள் போலியான மாற்றுப்பாகத்தைப் பொறுத்தச் சொல்கிறார்கள். போலியானவை தரத்தில் தாழ்ந்தவை; விலையில் மலிவானவை; பாதுகாப்பு குறைந்தவை; விரைவில் கெடக்கூடியவை என்பதை எல்லாம் நன்றாக அறிந்தும் இந்தத் தவற்றைப் பலர் செய்கிறார்கள்.

அப்படித்தான் இலக்கியத்திலும். நல்ல இலக்கியத்தைவிட நச்சு இலக்கியத்தைதான் பலரும் விரும்புகிறார்கள், இதற்கான காரணம் மிக எளிமையானதுதான்; இயல்பானதுதான். உள்ளத்தாலும் உணர்வாலும் தரமற்ற மனிதர்கள் தரமற்றதைத் தானே விரும்புவார்கள்.

நீங்கள் தரமான உள்ளம் படைத்தவரா? தரமிக்க உணர்வு கொண்டவரா? நல்ல இலக்கியத்தை விரும்புபவரா? அப்படியானால் நல்ல இலக்கியத்தைத் தேடிப் படியுங்கள்! நல்ல இலக்கியத்தைப் படையுங்கள்! நச்சு இலக்கியங்களைப் புறக்கணியுங்கள்! வாசகர்கள் தரமானாவர்களாக மாறினால் இலக்கியப் படைப்புகளும் தரமானதாக இருக்கும். என்று கூறி எனது பட்டறையை நிறைவு செய்தேன்.

இந்த நிகழ்ச்சியில் சுங்கை சிப்புட் ம.இ.கா தொகுதித் தலைவர் திரு.கணேசன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பங்கேற்பாளர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார். இலக்கியக் கழகப் பொறுப்பாளர் திருவாட்டி நாகேசுவரி நன்றியுரை என்ற பெயரில் அனைவரின் மனதையும் நெகிழச்செய்யும் அளவுக்கு உரையாற்றினார். மேலும், நம் நாட்டில் நல்ல தமிழில் நல்ல இலக்கியப் படைப்புகள் வெளிவர தமிழ்ப்பற்றாளர்கள் எழுத்துத்துறைக்கு வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியை தம்முடைய கவிதைத் தமிழில் மிகச் செப்பமாக வழநடத்தி அனைவருடைய உள்ளத்தையும் கவர்ந்தார் பாலசுப்பிரமணியம். 

@சுப.நற்குணன், திருத்தமிழ்

Monday, October 29, 2012

11ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு - 2012


உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்) அமைப்பின் சார்பில் இந்த ஆண்டின் இறுதியில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மொழியியல் உயராய்வு மையத்தோடு இணைந்து பதினொன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு – 2012 நடக்கவிருக்கிறது என்னும் செய்தியை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்வுகொள்கிறோம். உத்தம நிறுவனம் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு பன்னாட்டு அமைப்பு ஆகும்.

கணினி, இணையம் ஆகியன தொடர்பாகத் தமிழின் பயன்பாடுகள் பற்றிய ஆய்வுகள் உலகெங்கிலும் தமிழர்களிடையே பரவும் வகையில் உலகத் தமிழ் இணைய மாநாடுகளைக் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உத்தம நிறுவனம் நடத்திவருகிறது என்னும் தகவலை உங்களோடு பகிர்ந்துகொள்ள விழைகிறோம். உத்தம நிறுவனம் உலகத் தமிழர்களைக் கணினி வாயிலாக இணைப்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்றால் அது மிகையாகாது.

இது வரை ஏழு மாநாடுகளை அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மனி, ஆகிய நாடுகளில் முன்னனிப் பல்கலைக் கழகங்களோடு இணைந்தும், தமிழகத்தில் மூன்று மாநாடுகளைத் தமிழக அரசின் முழு ஆதரவோடும் உத்தம நிறுவனம் நடந்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.. தமிழ்த் தொடர்பான கணினி சார் மொழியியல் துறையில் குறிப்பிடத்தக்க ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மொழியியல் உயராய்வு மையத்தில் வரும் டிசம்பர் 28 முதல் 30 வரை “உலகத் தமிழ் இணைய மாநாடு 2012-ஐ நடத்த உத்தமத்தின் செயற்குழு முடிவெடுத்துள்ளது. அண்ணாமலைப் பல்கலைக் கழக மொழியியல் பேராசிரியர் மா. கணேசன் அவர்கள், மாநாட்டின் உள்ளூர்க் குழுவுக்குத் தலைமை தாங்கவிருக்கிறார். உத்தமம் அமைப்பின் துணைத்தலைவர் திரு. இளந்தமிழ் அவர்கள் மாநாட்டின் பன்னாட்டுக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.முந்தைய இணைய மாநாடுகளைப் போலவே வரும் 2012 மாநாடும் கருத்தரங்கு, கண்காட்சி, மக்கள் கூடம் என்று மூன்று முனைகளில் செயல்படும். ஆய்வுக் கருத்தரங்கு நிகழ்வுகள் டிசம்பர் 28,29 ஆகிய இரண்டு நாட்களில் நடக்கவிருக்கிறது. கண்காட்சியும் மக்கள் கூடமும் டிசம்பர் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்களில் நடக்கும். மாநாட்டுக்குப் பதிவு செய்த பேராளர்கள் மட்டுமே கருத்தரங்கு மற்றும் பயிலரங்கில் கலந்து கொள்ளலாம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். [மேலும் படிக்க..]


                                                                                                                                                          @சுப.நற்குணன், திருத்தமிழ்

Friday, September 21, 2012

STPM தமிழ்மொழி - இலக்கியப் பாடநூல் வந்துவிட்டது




இவ்வாண்டில் எசுடிபிஎம் (STPM) தேர்வில் தமிழ்மொழி - தமிழ் இலக்கியம் எடுக்கும் மாணவர்கள் பாடநூல்கள் இல்லாமல் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். அவர்களுக்கு இஃது ஒரு நல்ல செய்தியாகும்.

தமிழ் தன் தாய்மொழி;
நான் தமிழ்ப்பள்ளியில் படித்தேன்;
தமிழ்மொழி மீது கொண்ட பற்றுதல்;
தமிழ் படித்தால் கண்டிப்பாகச் ‘சோறு போடும்’;
தமிழ் படித்து வாழ்க்கையில் முன்னேற முடியும்..

போன்ற காரணங்களின் அடிப்படையில் எசுபிஎம், எசுடிபிஎம் போன்ற அரசாங்கத் தேர்வுகளில் நமது மாணவர்கள் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் ஆகிய தேர்வுகளை எழுதுகின்றனர். இவர்களின் தாய்மொழி உணர்வும், தமிழ்மொழிப் பற்றுதலும், தமிழ்க்கல்வியின் மீதுள்ள நம்பிக்கையும் பாராட்டத்தக்கது.

எனினும், மிகுந்த ஆர்வத்தோடு தமிழ்மொழி, தமிழ் இலக்கியப் பாடங்களைத் தேர்வில் எடுக்கும் மாணவர்களைப் பல்வேறு நெருக்கடிகளும் சிக்கல்களும் சூழ்ந்துகொள்கின்றன. இதனால், மாணவர்கள் பெரிதும் மன உலைச்சளுக்கு ஆளாகின்றனர்.

அப்படிப்பட்ட நெருக்கடிகளில் ஒன்றுதான், தமிழ் இலக்கியப் பாட நூல்கள் இல்லாமை. 2012 இறுதி காலாண்டில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பாடநூல்கள் இல்லை என்றால் அதனை மிக எளிமையாக எண்ணிவிட முடியாது. எசுடிபிஎம் தமிழ் இலக்கியப் பாடநூல் இல்லாத குறையை நீக்குவதற்கு யாருமே அல்லது எந்தத் தரப்பினருமே அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை என்பதை நினைத்தால் மனம் வேதனையாக உள்ளது. அதைவிட பெரிய வேதனையும் வருத்தமும் தமிழ் இலக்கியத்தைத் தேர்வுப்பாடமாக எடுக்கும் மாணவர்களை நினைத்தால் நமக்கு ஏற்படுகிறது.

எனினும், கடந்த ஏழெட்டு மாதங்களாகப் பாடநூல்கள் இல்லாமல் மன உலைச்சளுக்கு ஆளாகிப் போன எசுடிபிஎம் மாணவர்களுக்கு இப்பொழுது ஒரு நற்செய்தி வந்திருக்கிறது.

முனைவர் குமரன்
இவ்வாண்டு எசுடிபிஎம் தமிழ்மொழி இலக்கியத்திற்கான முதல் பருவ பாடநூல் அணியமாகிவிட்டது. மலேசியத் தமிழாராய்ச்சி நிறுவனம் இந்தப் பாடநூலை வெளியீடு செய்துள்ளது.

எசுடிபிஎம் தேர்வில் தமிழ்மொழி - தமிழ் இலக்கியம் எழுதவுள்ள மாணவர்களும் இப்பாட ஆசிரியர்களும்  இந்த நூலை விரைந்து பெற்றுக்கொள்ளலாம்.

முதல் பருவத்திற்கான இந்நூலின் விலை RM10.00 (பத்து வெள்ளி மட்டுமே)

நூலைப் பெற விரும்புவோர் கீழ்க்காணும் அதிகாரிகளைத் தொடர்புகொள்ளலாம்.

1.திரு.அ.இராமன் (தமிழ்மொழித் துணை இயக்குநர், சிலாங்கூர் மாநிலம்) 019-2307765

2.திரு.முனுசாமி (ஆசிரியர், சிலாங்கூர் மாநிலம்) 016-2084250

3.திரு.இரா.விஜயன் (தமிழ்மொழித் துணை இயக்குநர், சொகூர் மாநிலம்) 012-7552107

4.திரு.மா.பூபாலன் (தமிழ்மொழித் துணை இயக்குநர், பகாங் மாநிலம்) 09-5715700

5.திரு.தமிழ்ச்செல்வம் (தமிழ்மொழித் துணை இயக்குநர், கெடா மாநிலம்) 019-4807012

6.திரு.நாராயனராவ் (ஆசிரியர், கெடா மாநிலம்) 012-4075529

7.திரு.சபா.கணேசு (ஆசிரியர், பேரா மாநிலம்) 012-5615115

8.திரு.கார்த்திகேசு (ஆசிரியர், பேரா மாநிலம்) 012-4673141

9.திரு.இரா.அவடயான் (ஆசிரியர், நெகிரி செம்பிலாம் மாநிலம்) 019-6456349

10.முனைவர் குமரன் சுப்பிரமணியம் 012-3123753

11.முனைவர் கிருஷ்ணன் மணியம் 016-3164801

12.முனைவர் இரா.மேகனதாஸ் 012-2806345

மேற்கண்ட விவரங்களை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் செயலாளர் இணைப்பேராசிரியர் முனைவர் குமரன் சுப்பிரமணியம் வெளியிடுள்ள ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

@சுப.நற்குணன், திருத்தமிழ்

Thursday, September 06, 2012

சிவா ஐயாதுரை: முதன்முதலில் மின்னஞ்சலைக் கண்டுபிடித்த தமிழன்




இன்று உலக மக்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒரு முகவரி இருக்கிறது. அவரவர் வீட்டு முகவரி என நினைத்துவிடாதீர்கள். ஒரே வீட்டில் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒரு முகவரி இருக்கிறது. அதுதான் மின்னஞ்சல்(e-mail) முகவரி. இன்றைய நவின காலத்தில் எல்லாருக்கும் எல்லாவற்றுக்கும் மின்னஞ்சல் கண்டிப்பாகத் தேவை என்று ஆகிவிட்டது.

இந்த மின்னஞ்சலைக் கண்டுபிடித்தவர் ஒரு ‘தமிழன்’ என அறியும்போது ‘தமிழன் என்று சொல்லடா; தலைநிமிர்ந்து நில்லடா’ என்று நெற்றிப் புருவம் மேலே ஏறுகின்றது! நரம்புகளில் ஏதோ ஓர் உணர்வு முறுக்கேறுகின்றது.

வெள்ளைத் தாளில் தூவலைப்(பேனா)  பிடித்து கடிதம் எழுதிய பாரம்பரிய முறையை மாற்றிப்போட்டு மின்னியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்மடல் எழுதும் புதிய பரிணாமம்தான் இந்த மின்னஞ்சல். ஆனால், இன்றோ அதனுடைய பயன்பாடு பல்வகைப்பட்டதாக மாறிவிட்டது. நவின உலகத்தில் மின்சாரம் இல்லாமல் எப்படி வாழ முடியாதோ அப்படி ஆகிவிட்டது இந்த மின்னஞ்சல். இ-மெயில் எனப்படும் மின்னஞ்சல் இல்லாமல் இன்றைய உலகத்தில் வாழ முடியாது என்னும் நிலைமை வந்துவிட்டது.   

ஆகக் கடைசியாக வந்திருக்கும் முகநூல் (Facebook), டுவிட்டர் (Twitter), கூகிள் + (g+) யூ டியூப் (You Tube) என்று எந்தத் தொழில்நுட்பத்தை எடுத்துக்கொண்டாலும் இந்த மின்னஞ்சல் இல்லாமல் எதுவும் செயல்படாது; எதிலும் நாம் செயல்பட முடியாது.

அந்த அளவுக்கு முகமைத்தன்மை வாய்ந்த மின்னஞ்சலை முதன் முதலாகக் கண்டுபிடித்து உலகத்திற்கு வழங்கிய அறிவியலாளர் - தொழில்நுட்பர் வி.ஏ.சிவா ஐயாதுரை என்பவராவார். மின்னஞ்சல் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்ததற்கான காப்புரிமையையும் (copyright) இவர் பெற்றிருக்கிறார். இவர் தமிழ்நாட்டில், தமிழ்க் குடும்பத்தில் பிறந்து பின்னர் அமெரிக்காவில் குடியேறிய தமிழர். 

இளவயதில் சிவா ஐயாதுரை
தற்பொழுது 49 அகவை நிரம்பிய சிவா ஐயாதுரை, மின்னஞ்சலைக் கண்டுபிடித்த பொழுது 14 வயது இளைஞராக இருந்தார் என்னும் செய்தியை அறியும்போது நமக்குப் பெரும் வியப்பும் பெருமிதமும் ஏற்படுகிறது.

30 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் மின்னஞ்சல் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து உலகத்திற்கு அறிமுகப்படுத்திய பொழுது அதனை அமெரிக்க அரசாங்கம் அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை. குடியேற்ற சிறுபான்மை இனத்தவர் என்ற காரணத்தினாலோ என்னவோ இவருக்கு உரிய உறுதிபாட்டையும் காப்புரிமையையும் கொடுக்கவில்லை. இதனால், மின்னஞ்சலுக்குப் பலரும் சொந்தம் கொண்டாடினர்.

ஆனாலும், 4 ஆண்டுகள் கழித்து 1982ஆம் ஆண்டு ஆகத்து 30ஆம் நாள் சிவா ஐயாதுரையின் அரிய கண்டுபிடிப்புக்கு உரிய உறுதிப்பாடும் மின்னஞ்சல் காப்புரிமையும் (e-mail copyright)  வழங்கப்பட்டது.
காப்புரிமை ஆவணம்

இ-மெயில் (e-mail) என்ற பெயரை உருவாக்கியவரும் இவர்தான். அதோடு, மின்னஞ்சலின் உள்ளடக்கங்கள் (inbox, outbox, draft), செயல்முறைகள் (reply, forward, attachment, broadcasting), குறிப்பான்கள் (to, from, subject, Cc, Bcc, Date, Body) ஆகிய எல்லாவற்றையும் உருவாக்கியவரும் பெயரிட்டவரும் இவரேதான்.

சிவா ஐயாதுரை தற்பொழுது அமெரிக்காவின் புகழ்பெற்ற எம்.ஐ.டி பல்கலையில் விரிவுரையாளராக பணியாற்றுகிறார். முன்பு மாணவனாக இருந்தபொழுது தன்னுடைய கண்டுபிடிப்புக்கு சரியான உறுதிப்பாடு கிடைக்காமல் போனதால் மிகவும் மனமுடைந்து போனதன் காரணமாக, தன்னைப்போல் எந்தவொரு மாணவரும் உரிய மதிப்பு கிடைக்காமல் வருத்தமடைய கூடாது என்னும் எண்ணத்தில் இன்னோவேசன் கார்ப்சு (Innovation Corps) என்ற ஒரு நிறுவனத்தை நிறுவியுள்ளார். இந்த நிறுவனம் மாணவர்களின் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தவும் அவற்றைத் தொழில்படுத்தவும் உதவும் என அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் நோவார்க்கு நகர உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும் வகையில் ஒரு இலக்கம் அமெரிக்க டாலர் (USD100,000) பரிசுத் தொகையை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்க நாளிகை செய்தி - 30.10.1980

சிவா ஐயாத்துரையின் கண்டுபிடிப்பு இன்று உலகத்தையே கட்டிப்போட்டுத் தன் வயப்படுத்தி இருக்கிறது. தமிழனால் முடியும்! தமிழன் சாதிக்கப் பிறந்தவன்! என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் சாதனைத் தமிழன் சிவா ஐயாதுரை.

சிவா ஐயாதுரை பேசுகிறார்:-

 

சிவா ஐயாதுரை பற்றி மேலும் அறிய பின்வரும் தொடுப்புகளைச் சொடுக்கவும்.




@சுப.நற்குணன், திருத்தமிழ்


Blog Widget by LinkWithin