Thursday, October 30, 2008

தமிழ் சோறு போட வேண்டுமா? (பகுதி 1)


(மலேசியாவில் நல்லதமிழை முன்னெடுக்கும் ஏடாகிய 'உங்கள் குரல்' திங்களிதழில் அதன் ஆசிரியர் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது அவர்கள் எழுதிய கட்டுரை)


தமிழ் சோறு போடுமா? இப்போதெல்லாம் இப்படி வினவுவது தமிழரில் பலருக்குப் புது மரபாகி(Trend) விட்டது.

தங்களை முற்போக்குச் சிந்தனையாளர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கின்ற சிலர், தங்களின் 'முன்போக்கை' வெளிப்படுத்தும் முயற்சியில், வாயினிக்க எழுப்பும் வழக்கமான வினா இது. இவர்கள் சோறு உண்பது மட்டுமே வாழ்க்கை என்றும், எது சோறு போடுமென்று தோன்றுகிறதோ அதை மட்டுமே செய்வதுதான் வெற்றிக்கு வழி என்றும் கருதுபவர்கள்.

இன்னும் கொஞ்சம் நாளில் இவர்கள், சமயம் சோறு போடுமா? பண்பாடு சோறு போடுமா? உண்மை சோறு போடுமா? ஒழுக்கம் சோறு போடுமா? என்று வரிசையாக வினாக்களை எழுப்பி இவற்றுள் எதுவுமே சோறு போடாது என்றும், எனவே இவையெல்லாம் தேவையில்லை என்றும் கூறத் தொடங்கினாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

இந்தச் சோற்றுப் பட்டாளத்தை நோக்கி நாமும் சில வினாக்களை எழுப்பலாம்.

1.தமிழ் என்பது மொழி. மொழியின் முதற்பயன் நம் கருத்தைப் புரிந்து கொள்ளுமாறு வெளிப்படுத்தவும் பிறர் கருத்தை நாம் சரியாகப் புரிந்து கொள்ளவும் கருவியாக இருப்பது. இந்தப் பணியைச் சரியாகவும் திறம்படவும் செய்வதில் வேறு எந்த மொழியையும் விடத் தமிழ் தாழ்ந்ததன்று.

2.இன்று அனைத்துலக மொழியாக முதனிலை பெற்றுள்ள ஆங்கிலத்தையும் மிஞ்சிய கருத்துக் தெளிவு கொண்டது தமிழ். எடுத்துக் காட்டுகள் எத்தனையோ உள. ஆங்கில வாக்கியத்தில் "யூ" (You) என்னும் சொல் ஒருவரைக் குறிக்கிறதா பலரைக் குறிக்கிறதா என்பதை நாம் புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் ஆங்கிலத்தில் ஒருவருக்கும் பலருக்கும் அந்த ஒரே சொல்தான் பயனீட்டில் உண்டு. தமிழில் நீ என்றும் நீங்கள் என்றும் தனித்தனி சொல் உண்டு. அ•றிணையான 'அவை'க்கும் உயர்திணையான 'அவர்'களுக்கும் ஆங்கிலத்தில் 'தேய்' (They) என்னும் ஒரே சொல்தான். மாமாவும் 'அங்கிள்'தான் சிற்றப்பாவும் 'அங்கிள்'தான். அத்தையும் 'ஆண்டி'தான். சிற்றன்னையும் 'ஆண்டி'தான்.

3.மலேசியாவில் நடந்த முதலாவது தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் மறைந்த பேராசிரியர் தனிநாயக அடிகள் ஒரு வினா எழுப்பினார். "நீ உன் தந்தைக்கு எத்தனையாவது பிள்ளை?" என்றும் வினாவை ஆங்கிலத்தில் ஒரே வாக்கியத்தில் கூற இயலுமா என்றார். இன்று வரை முடியும் என்று யாரும் முன்வந்து விளக்கக் காணோம்.

4.இன்றைய அறிவியலுக்குத் தேவையான பல சொற்கள் தமிழில் இல்லையே என அலுத்துக் கொள்கிறார்கள் சிலர். அன்றைய அறிவியல் ஆக்கங்களுக்கான சொற்கள் எல்லாம் ஆங்கிலத்தில் மட்டும் முன்னரே இருந்தனவா என்ன? ஆய்வுகளும் கண்டு பிடிப்புகளும் ஆங்கிலத்திலேயே செய்யப்படுவதால் அவற்றுக்கான புதிய சொற்களும் அதிலேயே உருவாக்கப்படுகின்றன.

5.பாதிக்குமேல் பிறமொழிச் சொற்களை வைத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் ஆங்கிலத்தில் புதிய சொற்களை உருவாக்க முடியும்போது தன்காலிலேயே நிற்கவல்ல தமிழில் அதைச் செய்ய முடியும். அப்படிச் செய்யாமலிருப்பது தமிழரின் குறையே அன்றித் தமிழின் குறையன்று.

1.தமிழ் சோறு போட வேண்டுமா? (பகுதி 1)

Sunday, October 26, 2008

திருத்தமிழின் தீபாவளி வாழ்த்து


Friday, October 24, 2008

குழந்தையின் கல்லறையில் கோட்டை எழுப்பாதீர்


முக்கிய அறிவிப்பு:-
இந்தக் கட்டுரை பெற்றோராக இருப்பவர்களுக்கும் அறிவுப் புகட்டும் ஆசிரியர்களுக்கும் மட்டுமே..!

****************************
“டேய் மார்ட்டினைப் பார்த்தியாடா அவன் 95 மார்க்கு வாங்கியிருக்கான். இத்தனைக்கும் அவனோட அப்பா, அம்மா ரெண்டு பேருமே நல்லா படிச்சவங்க இல்ல. அவ்வளவா வசதிவேறு இல்லாதவங்க. கிராமத்துல இருந்து வந்தவன். பள்ளிக் கூடத்திற்கு நல்ல சாப்பாடு கூட அவன் கொண்டுவர்றதில்லை. யாரோ அவனோட மாமா அவனை படிக்க வைக்கிறாராம். அப்படியிருந்தும் அந்தப் பையன் நல்லா படிக்கிறான். நல்லா படிச்ச எங்களுக்கு பொறந்துட்டு ஏண்டா எங்க மானத்தை வாங்குற? அடுத்த முறை அவனை விட நீ ஒரு மார்க்காவது கூட வாங்கனும் இல்லாட்டி செமத்தியா அடி விழும்” என்று அந்தப் பிஞ்சின் நெஞ்சில் தாழ்வு மனப்பான்மையையும் சக மாணவனைப் பற்றியான பொறாமை எனும் நஞ்சையும் கலக்கின்றனர் பெற்றோர்கள்...

தொடர்ந்து படிக்க இங்கே சொடுக்கவும்

நன்றி: வே.மதிமாறன் வலைப்பதிவு

Friday, October 17, 2008

தமிழ்நெறி – தமிழ்மீட்புத் திங்களிதழ்


தமிழைக் காக்கவும் தமிழ்த்தேசியத்தை வென்றெடுக்கவும் மலேசியாவில் வெளிவரும் ஒரே திங்களிதழ் தமிழ்நெறி.

தமிழர் ஒவ்வொருவரும் கட்டாயம் வாங்கிப்படிக்க வேண்டிய திங்களிதழ் தமிழ்நெறி!

தமிழ்நெறி அத்தோபர் திங்களிதழ் வந்துவிட்டது! அதன் உள்ளடக்கங்கள்...


1.அறிவியலையும் கணிதத்தையும் மீண்டும் தாய்மொழியில் பயிற்றுவிக்க வேண்டும்.
2.மனித வளர்ச்சியும் விருத்தியும் தொடர்பான கோட்பாடுகள்.
3.வீழ்ச்சியுறும் தமிழினத்தில் எழுச்சி வேண்டும்.
4.'மக்கள் ஓசை' திருமாவளவனைச் சீண்டியது தமிழ் இனமான உணர்வாளர்களைச் சீண்டியதாகும்.
5.பாலகோபாலன் நம்பியார் இப்படிச் செய்யலாமா?
6.நடிகை தொப்புளில் ஓடுகிறது நாளிதழ்
7.பூச்சார் பூச் பூச் பூக்கா! நாக்கா!
8.தமிழர்களுக்குத் தமிழ்மொழி தாய்ப்பாலுக்கு நிகரானது
9.யாருக்கும் தமிழர்கள் அஞ்சத் தேவையில்லை!
10.புரட்சித் துறவி வள்ளலார்.

இன்னும், சொல்லும் பொருளும், தமிழ்நெறிக் கல்வி, தமிழ்நெறித் தெளிவு, சிறுகதை, தமிழ்க் கலைச்சொற்கள், இலக்கணம், பண்டார் பாரு செந்தூல் இடநிலைப்பள்ளி மாணவர்களின் தமிழ்நெறிக் கலந்துரயாடல்

என பல சூடான, சுவையான, இனமான உணர்வூட்டும் கட்டுரைகள்; செய்திகள்; துணுக்குகளைத் தாங்கி மலர்ந்துள்ளது. தவறாமல் உடனே வாங்கவும்..!

மேல்விளக்கம் பெற:- தமிழ்நெறி, Lot 274, Kampong Bendahara Baru, Jalan Sungai Tua, 68100 Batu Caves, Selangor. தொ.பேசி:- 03-61874103

Thursday, October 09, 2008

களவைக் கற்கலாமா? (தமிழமுது 4)

நாம் அடிக்கடி கேட்கும் அல்லது பயன்படுத்தும் பழமொழிகளில் "களவும் கற்று மற" என்ற ஒரு பழமொழி உண்டு.

களவு என்றால் திருட்டு. அப்படியானால், இந்தப் பழமொழியின் பொருள் திருட்டையும் கற்றுக்கொண்டு பிறகு மறந்துவிட வேண்டும் என்றாகும். களவை எதற்குக் கற்க வேண்டும்; கற்ற பிறகு எதற்காக மறக்க வேண்டும்?

'களவும் கற்று மற' என்பது தவறு.
'களவும் கத்தும் மற' என்பதே சரி.

களவு கத்து(சூது) இரண்டையும் நாடக்கூடாது என்பதே இதன் பொருள். பேச்சு வழக்கில் பிழையாகிப் போய்விட்ட இந்தப் பழமொழியை இனிச் சரியாகப் பயன்படுத்துவோம்.

நாட்டுபுறப் பாடல்(1): தாலாட்டுப் பாட்டு

மிழர்களின் வாய்மொழி இலக்கியமாக சிறப்புப் பெற்றவை நாட்டுப்புறப் பாடல்கள். ஏட்டிலும் எழுத்திலும் எழுதிவைக்காத கரணியத்தால், இன்று நாட்டுப்புறப் பாடல்கள் மெல்ல மறைந்து வருகின்றன.

தமிழரின் வாழ்வோடு இணைந்து இயங்கிய நாட்டுப்புறப் பாடல்கள் அழிந்துவிட்டால் கூடவே, தமிழர்களின் வரலாற்று, பண்பாட்டு, பாரம்பரிய, கலை, வாழ்வியல் தடங்களும் சுவடுகள் தெரியாமல் அழிந்து போய்விடும்.

ஆகவே, தமிழர் மண்ணிசையாகிய நாட்டுப்புறப் பாடலை மீட்டெடுக்க வேண்டிய முகமையான கடமை தமிழர்க்கு உண்டு. அத்தகு மீட்டெடுப்பு பணிக்குத் துணையாக இந்த நாட்டுப்புறப் பாடல் கட்டுரைத் தொடர் அமையுமானால் அடியேன் மிகவும் பெருமையடைவேன்.

இந்தக் கட்டுரைத் தொடர், திருத்தமிழ் வலைப்பதிவில் அவ்வப்போது இடம்பெறும். ஆகவே, திருத்தமிழ் அன்பர்கள் தவறாமல் படிக்குமாறும் பரப்புமாறும் அன்புடன் வேண்டுகிறேன்.

*******************

நாட்டுப்புறப் பாடல் வரிசையில் முதலாக 'தாலாட்டுப் பாட்டு' பற்றி தெரிந்து கொள்வோம்.

தாலாட்டுப் பாட்டு என்பது குழந்தையைத் தொட்டிலில் போட்டு தூங்க வைக்கும் போது பாடப்படுவது. மிகப் பழங்காலம் தொடங்கி இந்தத் தாலாட்டுப் பாட்டு தமிழரிடையே இருந்து வந்துள்ளது. படிப்பறிவு இல்லாத சிற்றூர்(கிராம) தாய்மார்கள் தாங்களாகவே சொற்களை அடுக்கியும் இட்டுக்கட்டியும் பாடுவது 'தாலாட்டுப் பாட்டு'. தாலாட்டுப் பாட்டிலே குழந்தைக்கு அன்பைக் காட்டும் வேளையில் தேவையான கருத்துகளும் சொல்லப்படும்.

தாலாட்டுப் பாட்டு பற்றிய குறிப்பு முத்தொள்ளாயிரம் என்னும் இலக்கியத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:-

இரியல் மகளி ரிலைஞெமலு ளீன்ற
வரியிளஞ் செங்காற் குருவி – அரையிரவின்
ஊமன்பா ராட்ட வுறங்கிற்றே செம்பியன்றன்
நாமம்பா ராட்டாதார் நாடு (முத்தொள்ளாயிரம்-77)

அதாவது, "போர் தொடங்கிவிட்டது. பெண்கள் அனைவரும் ஊருக்கு வெளியே உள்ள சோலைகளில் போய் மறைந்து கொண்டார்கள். அவர்களுடன் கருவுற்ற மகளிரும் உடன் தங்கி இருந்தார்கள். அங்கே, அவர்கள் ஈன்றெடுத்த குழந்தைகள் இலைகள், சருகுகளின் மேல் கிடந்து அழுகின்றன. அச்சமயத்தில், (ஊமன் பாராட்ட உறங்கிற்றுக் குழவி) தாலாட்டுப் பாடல் கேட்டு குழந்தைகள் தூங்கிவிட்டன" என்கிறது அந்தப் பாடல்.

தால் + ஆட்டு என்பதே தாலாட்டு என்றாகும். தால் என்றால் நாக்கு. தால் + ஆட்டு என்றால் நாவை அசைத்துப் பாடுவது எனப் பொருளாகும். "ஆராரோ... ஆரிரரோ..." என்றுதான் தாலாட்டுப் பாட்டு தொடங்கும். "ஆராரோ... ஆரிரரோ..." ஓசை பாடலில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். இந்த இனிய ஓசையைக் கேட்டுக்கொண்டே குழந்தை தூங்கிவிடும்.

வாருங்கள் நாமும் ஒருமுறை தாலாட்டுப் பாடுவோம்!

ஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
மானே மரகதமே - என் கண்ணே
மாசிலாக் கண்மணியே!

ஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
அப்பா வருவாரே – என் கண்ணே
ஆசமுத்தம் தருவாரே!

ஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
மாமன் வருவாரே – என் கண்ணே
மாங்கனிகள் தருவாரே!

ஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
அத்த வந்தாக்கா – என் கண்ணே
அல்லிப்பூ தருவாளே!

Sunday, October 05, 2008

திருவருட்பேரொளி வள்ளலார்

இன்று அத்தோபர் 5ஆம் நாள், திருவருட்பேரொளி வள்ளல் பெருமானாரின் அருள்வருகைத் திருநாள்.
வள்ளற் பெருமான்
திருவருள் பெருமைக்கு வந்தனம்! வந்தனம்!

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
*************************************


Blog Widget by LinkWithin