Saturday, August 24, 2013

முத்து நெடுமாறன்: திறன் கருவிகளில் தமிழின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்

உலகத் தமிழ் தகவல், தொழில் நுட்ப மன்றம் (‘உத்தமம்’) என்ற பெயரில் இயங்கும் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறும் உலகத் தமிழ் இணைய 12ஆம் மாநாடு ஆகத்து 15 - 18 வரையில் நடந்தது. கோலாலும்பூர், மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இம்மாநாட்டில் சுமார் 1,000 பேர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதன்மைப் பொழிவாற்றும் முத்து நெடுமாறன்

மாநாட்டின் தொடக்க விழாவில், சிறப்பு அங்கமாக உத்தமம் அமைப்பின் நிறுவநர்களில் ஒருவரும், அந்த அமைப்பின் முன்னாள் தலைவரும், முரசு மென்பொருள், மற்றும் செல்லினம், செல்லியல் ஆகிய செயலிகளின் வடிவமைப்பாளருமான முத்து நெடுமாறன் முதன்மைப் பொழிவு வழங்கினார்.
.
இந்த ஆண்டு மாநாட்டின்  கருப்பொருளான ‘கையடக்கக் கணினிகளில் தமிழ்க் கணிமை’ குறித்து முத்து நெடுமாறன் அவர்கள் ஆற்றிய உரை பேராளர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்ததோடு தமிழ்க் கணிமையின் வளர்ச்சியைக் கண்டு அனைவரும் வியந்து பார்க்கும் அளவுக்கு இருந்தது. 

முத்து நெடுமாறன் உரை பின்வருமாறு:-

“இந்த மாநாட்டின் முக்கிய கருப்பொருளே கையடக்கக் கருவிகளில் தமிழ்க் கணிமை. அதாவது தமிழ் கணிமை கையடக்கக் கருவிகளில் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்பதைப் பற்றியும், அதன் அடுத்தகட்ட நிலை என்ன என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்வது தான் இதன் முக்கிய நோக்கம்.”

“தொழில்நுட்ப கருவிகளில் தமிழை எப்படி உள்ளிடுவது என்பது தான் எங்களின் முதல் முயற்சியாக இருந்தது. அதில் தற்போது வெற்றியும் அடைந்துள்ளோம் என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தற்போது மிகவும் புகழ்பெற்று  இருக்கும் பெரும்பாலான கருவிகளில் இயல்பாகவே தமிழை உள்ளிட முடியும் அது இன்னொரு வெற்றி.” என்று சொல்லி முடித்த பொழுது அரங்கம் அதிரும் வகையில் பேராளர்கள் கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 “எனினும், இது போன்ற பெரிய நிறுவனங்கள் தமிழை கட்டாயம் பயன்பாட்டில் வைக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. தமிழைப் பயன்பாட்டில் வைக்கவில்லை என்றாலும் அவர்களது விற்பனை எண்ணிக்கை அதிகமாகத் தான் இருக்கும். தமிழ் பயன்பாடு அதிகம் இருக்கிறது என்று அவர்களுக்குத் தெரிய வந்தால் மட்டுமே அந்த நிறுவனங்கள் தமிழின் பயன்பாட்டை அதிகரிப்பார்கள். எனவே கையடக்கக் கருவிகளில் தமிழின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் பயன்பாட்டில் வைக்கும் தமிழ் எழுத்துக்களின் தரமும் அதிகரிக்கும்” என்று தெரிவித்தார்.

செல்லினம் புதிய பதிப்பைப் பற்றி விளக்குகிறார் முத்து நெடுமாறன்.
அவருடன் செம்மல் மணவை முஸ்தப்பா, சுப.நற்குணன், இராணி, செண்பகவள்ளி

 தமிழ் அறிந்தவர்களும் தமிழைக் கற்றவர்களும் கையடக்கக் கருவிகள், திறன்பேசிகள், திறன்கருவிகள், ஆண்டிரோய்டு கருவிகள் ஆகியவற்றில் தமிழை அதிகமாகப் பயன்படுத்தும் காலம் விரைவில் வரவேண்டும். இன்றையச் சூழலில் திறன்பேசிகளில் தமிழில் குறுஞ்செய்தி அனுப்புவது மிக இயல்பாகிவிட்டது. மேலும் தமிழ் இணையத்தளங்களை வாசிக்க முடியும். அதுமட்டுமல்லாது புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நூல்களைத் தரவிறக்கம் செய்து வாசிக்க இயலும். இதில் இன்னொரு சிறப்பு என்னவெனில் ஒரு செய்தியில் அல்லது நூலில் குறிப்பிட்ட ஒரு சொல்லையோ அல்லது ஒரு தகவலையோ நொடிப்பொழுதில் தேடிவிடலாம்; அதனை நண்பர்களுடன் உடனடியாகப் பகிர்ந்துகொள்ளலாம். தொடர்பாளர் பெயர்களைத் தமிழிலேயே பதிவு செய்யலாம். அழைப்புகள் வரும் பொழுது அழைப்பாளர் பெயர் தமிழிலேயே வெளித்தோன்றும். பாடல் பட்டியல்களைத் தமிழிலேயே பதிவு செய்துகொள்ள முடியும் என்றெல்லாம் முத்துநெடுமாறன் ஒவ்வொன்றையும் செய்முறையோடு விளக்கிக் காட்டியபொழுது, தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்மொழியின் வளர்ச்சி குறித்து பெருமிதம் அடையாமல் இருக்க முடியவில்லை. பேராளர்களின் கரவொலியும் ஆரவாரமும் இதனை உறுதிபடுத்துவதாய் அமைந்தன.

மேலும், தற்போது உலக அளவில் பயன்பாட்டில் இருக்கும் தமிழ் உள்ளீட்டு செயலியான செல்லினம் மென்பொருளின் அடுத்த கட்ட நிலை குறித்தும் முத்து நெடுமாறன் அவர்கள் விளக்கமளித்தார். இனி வரவிருக்கும் முரசு மற்றும் செல்லினம் புதிய பதிப்புகள் மேலும் பல புதுமைகளோடு வரவிருப்பதாகத் தெரிவித்தார்.

முத்து நெடுமாறன்

அடுத்து, மாநாட்டின் இறுதி நாளில் முத்து நெடுமாறனின் சிறப்புரை ஒன்றும் இடம்பெற்றது. இதில், தென்கிழக்காசிய மற்றும் இந்திய எழுத்துருக்களிடையே காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகள் பற்றி விரிவாகப் பேசினார். கணினிக்கு ஒரு மொழியைக் கற்றுக்கொடுப்பதில் உள்ள நெளிவுசுழிவுகளைப் பற்றி எடுத்துரைத்தார். கணினியில் தமிழ் மொழி எந்த அளவுக்குச் சிறப்பாக இயங்க முடியும் அதனை வளர்ச்சிகள் எவ்வாறு இருக்கின்றன முதலான செய்திகளைக் கூறுனார். அவையோர் அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் கூர்ந்து கவனிக்கும் அளவுக்கு அவருடைய விளக்கங்கள் அமைந்திருந்தன.
முத்து நெடுமாறானுடன் இல.வாசுதேவன்

சுப.நற்குணன், முத்து நெடுமாறன், செல்வன் சுப.ந.சரணமுதன்

கணினி, இணையம், தகவல் தொழில்நுட்பம், திறன்கருவி (Smart Device) , தட்டை (Tablet) ஆகியவற்றில் தமிழ்மொழி குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டிருக்கிறது; வியக்கத்தகு உயர்ச்சியை அடைந்திருக்கிறது என்பதை இந்த இணைய மாநாடு வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது. தமிழின் இந்த வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் பங்காற்றிய பற்பலரில் நம் மலேசியக் கணிஞர் முத்து நெடுமாறனின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது - முகாமையானது என்றால் மிகையன்று. 

முத்து மலேசியத் தமிழர்களின் சொத்து! முத்து தமிழன்னையின் தவமுத்து!


@சுப.நற்குணன், திருத்தமிழ்



No comments:

Blog Widget by LinkWithin