Wednesday, April 10, 2013

செர்சோனீசு தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் சாதனை

தமிழ்ப்பள்ளிகளின் புறவளர்ச்சிக்கு முன்னாள் மாணவர் சங்கம் சிறந்த பங்களிப்பை வழங்க முடியும் என்பதற்குச் செர்சோனீசு தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் நல்லதொரு முன்மாதிரியாக விளங்குகிறது என்று அச்சங்கத்தின் தலைவர் சுப.நற்குணன் தெரிவித்தார்.

கடந்த 30-03-2013ஆம் நாள் காரிக்கிழமை, பேரா, கோலக் குராவ், செர்சோனீசு தோட்டத் தமிழ்ப்பள்ளியில் நடந்த முன்னாள் மாணவர் சங்கத்தின் முதலாம் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார்.

கடந்த 2011ஆம் ஆண்டில் 7 மாணவர்களுடன் தள்ளாடிக்கொண்டிருந்த செர்சோனீசு தோட்டத் தமிழ்ப்பள்ளி முடப்படக்கூடிய நெருக்கடிக்கு ஆளாகி இருந்தது. மூடப்படும் அபாயத்திலிருந்து பள்ளியைக் காப்பாற்ற வேண்டி, பள்ளி நிருவாகம், பெ.ஆ.சங்கம், பள்ளி மேலாளர் வாரியம் ஆகியவற்றுடன் இணைந்து முன்னாள் மாணவர் சங்கம் மும்முரமாகவும் முழுமூச்சாகவும் செயல்பட்டது. இதன் பயனாக, பள்ளியின் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

5-5-2012ஆம் நாள் முன்னாள் மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஒன்றுகூடல் நிகழ்ச்சியும் கல்விநிதி விருந்தோம்பலும் மிகப் பெரிய அளவில் ஏற்பாடு நடைபெற்றது. இப்பள்ளியில் பயின்ற ஏறக்குறைய 300 முன்னாள் மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் திரட்டப்பட்ட நிதிவளத்தைக் கொண்டு பள்ளியில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, மாணவர்களின் போக்குவரத்துக்கு உதவியாகப் பள்ளிப் பேருந்து வாங்குவதற்குத் திட்டம் வகுக்கப்பட்டது. அதற்காக, மு.மா.சங்கத் துணைத்தலைவர் இராம.பாலமுரளி தலைமையில் பள்ளிப் பேருந்து குழு அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் பயனாக, தற்பொழுது பள்ளிக்கென ஒரு பேருந்து வாங்கப்பட்டுள்ளது எனப் பலத்த கரவொலிக்கு இடையில் சுப.நற்குணன் அறிவித்தார். செர்சோனீசு பள்ளி வரலாற்றில் இதுவொரு மாபெரும் வெற்றி மட்டுமன்று புது வரலாறும்கூட என்றாரவர்.

மேலும் பேசுகையில், செர்சோனீசு தமிழ்ப்பள்ளியை கிரியான் மாவட்டத்திலும் பேரா மாநில அளவிலும் மிகச் சிறந்த தமிழ்ப்பள்ளியாக உருவாக்கிட மு.மா.சங்கம் பாடாற்றும் என்று தெரிவித்தார். அதற்கு, முன்னாள் மாணவர்கள் அனைவரும் உறுதியான ஆதரவினை வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய பள்ளி மேலாளர் வாரியக்குழுத் துணைத்தலைவர் திரு.இரா.பாலு, செர்சோனீசு தமிழ்ப்பள்ளி மு.மா.சங்கம் மிகச் சிறப்பான முறையில் செயல்படுகிறது என்றார். அதனுடைய பணிகளும் சேவைகளும் மற்றவர்களுக்கு நல்லதொரு முன்மாதிரியாக விளங்குகின்றது என்று புகழாரம் சூட்டினார்.

பள்ளியின் தலைமையாசிரியரும் மு.மா.சங்கத்தின் ஏடலுருமாகிய இர.முனுசாமி பேசுகையில், இந்த முன்னாள் மாணவர் சங்கம் அரிய செயல்களைச் சரியாகத் திட்டமிடுவதோடு அவற்றைச் சாதிப்பதிலும் முனைப்பாக இருக்கின்றது. மு.மா.சங்கக் குழுவினர் ஒவ்வொருவரும் பள்ளியின்மீது மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டு செயல்படுகின்றனர். இவர்களின் ஆதரவினால் பள்ளியில் பல மாற்றங்களும் முன்னேற்றங்களும் சீராக நடந்து வருகின்றன. குறிப்பாக, கடந்த ஆண்டில் வாக்குறுதி அளித்தது போல இவ்வாண்டில் பள்ளிக்குப் பேருந்து ஒன்றினை வாங்கி பெரும் சாதனை படைத்துள்ள மு.மா.சங்கத்திற்குத் தமது பாராட்டைத் தெரிவித்துக்கொண்டார்.

இந்த ஆண்டுப் பொதுக்கூட்டத்தில், மு.மா.சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். சங்கத்தின் நிதி வளத்தை அதிகரிப்பதற்காக சோமன் பாபு ஆயிரம் ரிங்கிட்டையும் செல்வம் ஶ்ரீ ஐந்நூறு ரிங்கிட்டையும் அன்பளிப்பு செய்தனர். மற்றொரு முன்னாள் மாணவராகிய யுவராஜ் நூறு ரிங்கிட் நன்கொடையளித்தார். சங்கத்தின் செயலாளர் இராஜேஸ்  ஒவ்வொரு மாதமும் 136.00 ரிங்கிட்டை மாத நன்கொடையாகப் பெற்றுத்தருவதாக உறுதியளித்தார். பள்ளியின் ஆசிரியர்களும் ஊழியர்களும் ஆளுக்குப் பத்து ரிங்கிடை ஒவ்வொரு மாதமும் நன்கொடையாக வழங்குவதாகத் தலைமையாசிரியர் தெரிவித்தார்.



இந்த ஆண்டுப் பொதுக்கூட்டத்தின் இறுதியில் பள்ளிக்காக வாங்கப்பட்டுள்ள பேருந்தின் வெள்ளோட்ட நிகழ்ச்சியும் சிறப்புடன் நடந்தது. பள்ளி மேலாளர் வாரியக்குழுவின் துணைத் தலைவர் திரு.இரா.பாலு பேருந்தை ஓட்டி வெள்ளோட்டம் விட்டார். வருகையளித்த உறுப்பினர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். செர்சோனீசு தோட்டத் தமிழ்ப்பள்ளி வரலாற்றில் இதுவொரு பெரும் சாதனை என அனைவரும் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டனர்.

                                                                                                                  @சுப.நற்குணன், திருத்தமிழ்

No comments:

Blog Widget by LinkWithin