Thursday, October 04, 2007

தமிழர்க் குமுகாயக் குறைபாடுகள்

அருட்பெரும் சோதி! அருட்பெரும் சோதி!
தனிப்பெருங் கருணை! அருட்பெரும் சோதி!
5-10-2007ஆம் நாள் அருட்பேரொளி வள்ளற் பெருமான் அருள்வருகைத் திருநாள். ஆருயிர்க்கெல்லாம் அன்புசெய்ய இப்பூவுலகம் வருவிக்கவுற்ற வள்ளலாரின் நினைவாக இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது.

வள்ளலார் வாழ்ந்த காலத்தில் தாம் சார்ந்திருந்த சமயமும், தாம் வாழ்ந்துவந்த குமுகாயமும் குறையுடையவை என்பதையும், அவற்றின் கொள்கைகளும் பணியும் அன்றையத் தேவைகளை ஈடுசெய்வதுபோல் அமையவில்லை என்பதையும் உணர்ந்தார். அடிகளார் குமுகாயத்திலும் சமயத்திலும் கண்ட மிகப்பெரும் குறைகள் மூன்றாகும். அவற்றை இனி காண்போம்.

1. அவர் காலத்தில் கண்ட முழுமுதற் குறைபாடு சமயப்பூசல் ஆகும். அன்று சமயங்கள் பலவாக இருந்தன. சமயங்களிடையே உட்பூசலும் வெளிப்பூசலுமாக பெரும்போர் நடைபெற்று வந்தது. சைவ சமயத்தார்க்கும் வைணவ சமயத்தார்க்கும் இடையே கருத்து முரண்பாடு; சைவ வேதாந்திகளுக்கும் சித்தாந்திகளுக்கும் இடையே பிணக்கு; சைவ வடகலையாளர்களுக்கும் தென்கலையாளர்களுக்கும் இடையே போராட்டம்; இந்துக்களுக்கும் கிறித்துவர்களுக்கும், இந்துக்களுக்கும் முகமதியர்களுக்கும் இடையே கடும் எதிர்ப்புணர்வு; கடவுளை நம்புவோர்க்கும் கடவுள் மறுப்பாளர்களுக்கும் இடையே தகராறு. இவற்றையெல்லாம் கண்ணுற்ற வள்ளலார் இந்தப் போர்களும் பிணக்குகளும் பொருளற்றவை என்று உணர்ந்தார்.

2. இந்தச் சமயங்களுக்கும் மதங்களுக்கும் அடிப்படை அவற்றின் தத்துவ நூல்களான சாத்திரங்கள், புராணங்கள்; இதிகாசங்கள்தாம். எனவேதான், சமயம் சார்ந்த நூல்களில் அவருக்கு நம்பிக்கை குறைந்தது. அவை நன்மை செய்வதற்குப் பதிலாகப் பெரும் தீமையே செய்கின்றன என்று வள்ளலார் கருதினார்.

3. அடிகளார் கண்ட அடுத்த குறை, குமுகாய அமைப்பில் நிலவிய குறையாகும். சாதி உயர்வு தாழ்வுகள் தலைவிரித்தாடின. சாதிச் சண்டைகளும் தீண்டாமையும் பெருகிய அளவில் இருந்தன. சாதிக்குள்ளும் கோத்திர குலப் பிரிவுகள் மக்களுக்குள் மேலும் பிளவுகளை ஏற்படுத்தின. இவற்றால் இழப்புகள்தாம் அதிகமே தவிர நலமிக்க வாழ்க்கை இல்லை; ஒற்றுமை இல்லை; மாந்தநேயம் இல்லை. இதன் காரணத்தினால் மக்களிடையே முன்னேற்றமும் இல்லை. மாறாகக் கலகமும், சண்டையும், பகைமையும், காழ்ப்பும் வளர்ந்தன.

மொத்தத்தில், அன்று வழக்கில் இருந்த சமயங்கள், அவற்றைத் தாங்கிநின்ற நூல்கள்; அவைகளை ஆதரித்து நின்ற குமுகாய அமைப்பு ஆகிய இவைஅ அனைத்தையும் அடிகளார் கண்டு மனம் வருந்தினார். வாடிய பயிரைக் கண்டதும் தம்முடைய மனம் வாடிப்போன வள்ளலார் மக்கள் வாடுவதைக் கண்டு எவ்வளவு மனவேதனைக்கு ஆளாகியிருப்பார் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

அவர்க்கு இயல்பாக அமைந்திருந்த இறைநம்பிக்கை மட்டும் எந்தச் சூழலிலும் ஆட்டம் காணவில்லை. எனவே தெய்வநம்பிக்கையோடு கூடிய சீர்திருத்தப் பணிசெய்ய அவர் முன்வந்தார். ஆகையால், அவர் சமயவாதியாக மட்டும் இல்லாமல் சீர்திருத்தவாதியாகவும்; தெய்வ நம்பிக்கையற்ற வெற்றுச் சீர்திருத்தவாதியாக இல்லாமல் தெய்வ நம்பிக்கையோடு இணைந்த சீர்திருத்தக்காரராகவும் அவரால் திகழ முடிந்தது.

வள்ளலார் காலத்தில் இருந்த இந்தக் குறைபாடுகள் தற்காலத்தில் சற்றே குறைந்திருந்தாலும் முற்றிலுமாக அழிந்துவிடவில்லை. தமிழினத்தின் இந்தக் குறைபாடுகள் நீங்கவேண்டுமானால், தமிழ் மக்கள் வள்ளலார் காட்டியுள்ள வழிநடந்து தெய்வநம்பிக்கையுடன் இணைந்த சீர்திருத்தக் கொள்கைகளைக் கொண்டிருக்க வேண்டும்.
மூலம்:- வள்ளலாரின் இறைமைக் கோட்பாடு
இணைய இணைப்பு:- http://www.vallalar.org/

No comments:

Blog Widget by LinkWithin