Wednesday, May 05, 2010

முத்தமிழ் வளர்த்தெடுத்த மலையகத் தமிழறிஞர்

இன்று 5.5.2010, முதுபெரும் பாவலர் சா.சி.குறிஞ்சிக்குமரனார் பிறந்தநாள். வாழும் காலமெல்லாம் தமிழுக்காகவே வாழ்ந்து 18.10.1997இல் அதிகாலை மணி 5.55க்கு இறைவனடி சேர்ந்த அமரர் முதுபெரும் பாவலர் ஐயா அவர்களை இந்தத் தருணத்தில் நினைத்துப்பார்த்து இப்பதிவினை எழுதுகிறேன்.

சா.சி.சுப்பையா என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர் 5.5.1925இல் தமிழகம், இராமநாதபுற மாவட்டத்தில் இரணசிங்கபுரம் என்னும் ஊரில் பிறந்தவர். காதர்மீரான், பிரான்மலை ஆகிய புலவர் பெருமக்களிடம் தமிழ் இலக்கியம், இலக்கணம், கவனகம், கணியம், கணிதம் முதலியவறைக் கற்றுத் தேர்ந்தார். தம்முடைய தந்தை வழியில் மருத்துவம், வர்மக்கலை, சிலம்பம் முதலிய கலைகளிலும் தேர்ந்தவராக விளங்கினார்.

1938இல் தமிழகத்திலிருந்து மலேசியாவுக்குக் குடிபெயர்ந்த பாவலர் ஐயா, பேரா மாநிலத்தில் உள்ள ஈப்போ என்னும் ஊரில் வாழ்ந்தார். தொடக்கக் காலத்தில் தமிழவேள் கோ.சாரங்கபாணி ஐயாவின் “தமிழ் முரசு” நாளிதழ் ஏற்படுத்திய எழுச்சியால் தமிழ் உணர்வாளராகவும், பற்றாளராகவும் பகுத்தறிவுச் சிந்தனையாளராகவும் விளங்கினார்.

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் போன்ற தனித்தமிழ் அறிஞர்களின் மீது ஏற்பற்ற அளவிறந்த பற்றுதலால், 1960இல் மலேசியாவில் தனித்தமிழ் இயக்கம் கண்டார். பாவாணர் மன்றம் என்றே அதற்குப் பெயரும் சூட்டினார். பாவாணரின் பணிகளுக்குப் பல்லாற்றானும் துணையாக இருந்துள்ளார். பாவாணரின் குமரிக்கண்ட கொள்கைகள், வேர்ச்சொல்லாய்வுகள், தமிழின் தனித்திறங்கள் யாவும் மலேசியாவில் பரவுவதற்கு கரணியமாக இருந்தவர் இவர்.

அதேபோல் 1974இல் பெருஞ்சித்திரனார் மலேசியாவுக்கு வந்தபொழுது அவருடைய சுற்றுச்செலவை ஏற்பாடு செய்து நாடு முழுமைக்கும் தமிழ்வெள்ளம் பெருக்கெடுக்கச் செய்தவர்களில் முக்கியமானவராக இருந்தார்.

துளியும் அரசியல் ஈடுபாடு இல்லாமல் மொழி, இன, சமயம், பண்பாடு, இலக்கியம் சார்ந்த அரும்பணிகளை அயராது செய்தார். மலேசியாவில் தென்மொழி இதழ்களைப் பரப்புவதன் வாயிலாகத் தனித்தமிழ் உணர்வைச் செழிக்கச் செய்தார். பலரைத் தனித்தமிழ் பற்றாளர்களாக வளர்த்தெடுத்தார். அதுமட்டுமல்லாமல் இவர் பன்னூலாசியராகவும் விளங்கினார். தம்மை நாடிவருவோருக்கு மனமுவந்து சித்த மருத்துவம் செய்து வந்தார்.

பாவலர் ஐயா சிறந்த பாடகராகவும் விளங்கினார். தமிழ்ப் புலமையின் காரணமாக இலக்கிய வகுப்புகளை நடத்தும் ஆசிரியராகவும் இருந்தார். நிலைபெற்ற தலைவன், தமிழருவி போன்ற நூல்களை எழுதி இருப்பதால் இவர் நூலாசிரியராகவும் பரிணமித்து இருக்கிறார்.

இவருடைய அரும்பணிகளைப் பாராட்டி ‘தமிழ்ச்செல்வர்’ என்னும் விருதும் பொற்பதக்கமும் வழங்கப்பட்டுள்ளது. 1971இல் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் “சித்த மருத்துவர் செந்தமிழ்ப்ப்புலவர்” என்னும் விருது வழங்கி பாவலர் ஐயாவைச் சிறப்பித்துள்ளார். அதே 1971-ஆம் ஆண்டு “பாவலர் செந்தமிழ்க்குறிஞ்சி” என்ற விருதையும் பெற்றுள்ளார். மேலும் 1976இல் “செந்தமிழ்க் கவிமணி” என்ற விருதையும் 1989இல் மலேசியத் திராவிடர் கழகம், பேராசிரியர் தமிழண்ணல் தலைமையில் நடத்திய ஒரு விழாவில் “தமிழனல்” என்ற விருதையும் வழங்கிச் சிறப்பித்தது.

பாவலர் ஐயா போன்ற நற்றமிழ் அறிஞர் வாழ்ந்த பேரா மாநிலமானது இன்றளவும் தமிழ்வளம் நிறைந்த மாநிலமாக விளங்கி வருகின்றது. அன்னாருடைய அருந்தமிழ் பணிகள் காலத்தால் போற்றத்தக்கவை என்றால் மிகையன்று. மலேசியாவில் தமிழ் வளர்த்த முதுபெரும் பாவலர் சா.சி.குறிஞ்சிக்குமரனார் தமிழ்க்கூறு நல்லுலகம் போற்றும் தமிழறிஞராக நிலைபெற்றிருப்பார் என்பது உண்மை.

மேலே இதுவரை சொன்ன முதுபெரும் பாவலர் ஐயா அவர்களைப் போல, அவர் காலத்தில் வாழ்ந்து மலேசியாவில் தமிழைக் காத்து – வளர்த்து – போற்றியவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுடைய ஈகத்தினால் இன்று மலேசியாவில் தமிழ் நிலைபெற்றிருக்கிறது என்றால் அதை யாரும் மறுத்துவிட முடியாது.

அத்தகையவர்களுள் சிலரைக் கீழே காணலாம்.






தமிழ் ஞாயிறு பாவலர் அ.பு.திருமாலனார்
மலேசியத் தமிழ்நெறிக்கழகத் தோற்றுநர்.
மொழி – இனம் – சமயம் என்ற முப்பெரும் கோட்பாட்டை மலையகத்தில் உருவாக்கி மாபெரும் தமிழ் எழுச்சிக்கு வித்திட்டவர். (மேலும் படிக்க)




  • தமிழவேள் கோ.சாரங்கபாணி
    தமிழ் எங்கள் உயிர் என்ற முழக்கத்துடன் மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழை நிலைநிறுத்தியவர். நாட்டிலேயே மிகப்பெரிய தமிழ் நூலகத்தை மலாயாப் பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தியவர். தமிழ் இளைஞர் மணிமன்றம் என்னும் பேரியக்கம் கண்டு, நாடு முழுவதும் தமிழர் திருநாள் விழாக்களை நடத்தி தமிழ் உணர்வைச் செழிக்கச் செய்தவர். (மேலும் படிக்க)





உலகத் தமிழர் இர.ந.வீரப்பனார்,
உலகம் முழுவதும் தமிழர் வாழும் நாடுகளுக்கெல்லாம் ஆய்வுப் பயணம் மேற்கொண்டு உலகத் தமிழருக்காக இயக்கம் கண்டவர். (மேலும் படிக்க)





முத்தமிழ் வித்தகர் முருகு.சுப்பிரமணியம்,
மலேசியாவில் தமிழ் நேசன், தமிழ் முரசு ஆகிய நாளிதழின் ஆசிரியராகப் பணியாற்றி தமிழுக்கும், தமிழர்க்கும் அளப்பரிய தொண்டு செய்தவர். எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்து மலேசியத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு அரும் பாடாற்றியவர். தமிழ்ப் பள்ளிகளை வளர்த்தெடுக்கும் நோக்கத்தில் நிதித்திட்டத்தை உருவாக்கியவர்.

  • நனிநன்றியுடன்:-











2 comments:

கிளியனூர் இஸ்மத் said...

பயனுள்ள அறிமுகங்கள்...வாழ்த்துக்கள் ஐயா...

தமிழ் said...

நன்றி அய்யா

Blog Widget by LinkWithin