Tuesday, June 01, 2010

வள்ளலார் வழி குடும்பங்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி



திருவருட்பேரொளி வள்ளலார் அருளிய வழியில், தங்கள் வாழ்வை அமைத்துக்கொண்டுள்ள அல்லது அமைத்துக்கொள்ள விரும்பும் குடும்பங்கள் ஒன்றுகூடி மனம் மகிழும் வகையில் ‘குடும்ப ஒன்றுகூடல் நிகழ்ச்சி’ நடைபெறவிருக்கிறது. மலேசிய சமரச சுத்த சன்மார்க்க சத்தியப் பேரவையின் ஆதரவோடு இந்த அருமை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

மலேசியா அளவில் முதன்முறையாக நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சி ஆன்மிக ஈடுபாட்டை ஏற்படுத்தும் வகையில் அமைவதோடு குடும்ப உறவை வலுப்படுத்தவும், மனமகிழ்ச்சியுடன் ஒன்றுகூடி மகிழவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின்வழியாக நாடு முழுவதும் உள்ள வள்ளலார் வழி குடும்பங்கள் ஒன்றிணைந்து பழகவும் குடும்ப நல்லுறவை வளர்த்துக்கொள்ளவும் வழி உண்டாகும்.

எனவே, அகத்தே கறுத்துப் புறத்தே வெளுத்திருக்கும் உலகர் அனைவரையும் சகத்தே திருத்தி சன்மார்க்க வழிகாட்டும் திருவருட்பேரொளி வள்ளலார் வழியில் அருட்பெரும் வாழ்வும் தனிப்பெரும் நலமும் பெற்று, வையத்துள் வாழ்வாங்கு வாழ அருட்சோதி அன்பர்கள் அனைவரும் அழைக்கப்படுகிறார்கள்.

நாள்:- 5-6-2010 (காரிக்கிழமை)
நேரம்:- காலை மணி 7.00 தொடங்கி, இரவு மணி 7.00 வரை
இடம்:- சிங்கமுகக் காளியம்மன் திருக்கோயில் வளாகம், தெலுக் பகாங், பினாங்கு

நிகழ்வன:- அகவல் ஓதுதல், வரவேற்புரை, தொடக்க விழா, சன்மார்க்க கேள்வி பதில், மனமகிழ் விளையாட்டு, மதிய உணவு, வண்ணம் தீட்டும் போட்டி, சமையல் போட்டி, கோலப் போட்டி, பூச்சரம் தொடுத்தல், திருவருட்பா இசை பரத நாட்டியம், திருவருட்பா பாடல் போட்டி, சன்மார்க்க சொற்பொழிவு, சன்மார்கக் கலந்துரையாடல் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகள் காலை முதல் இரவு வரை நடைபெறும்.

இதில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். பதிவு செய்யும் குடும்பங்களுக்குத் தங்கும் வசதி ஏற்பாடு செய்து தரப்படும்.

ஒரு முழுநாள் நிகழ்வாக நடைபெறும் இந்தக் குடும்ப ஒன்றுகூடல் நிகழ்ச்சியைப் பினாங்கில் செயல்படும் ஒளிபொருந்திய இல்லம் ஏற்பாடு செய்துள்ளது. ஒளிபொருந்திய இல்லம் ஆன்மிகச் சேவையோடு ஆதரவற்றோருக்கு அன்புவழிச் சேவையையும் வழங்கி வருகின்ற ஓர் அமைப்பாகும். இவ்வில்லம் பினாங்கு, பத்து மவுங்கில் செயல்பட்டு வருகின்றது.

வள்ளற் பெருமான் அருளிய அருட்பெருஞ் சோதி தனிப்பெருங்கருணை எனும் மகா மந்திரத்தை உள்ளுணர்ந்து, உண்மை ஆன்மிக நெறியில் வாழ்வியலை அமைத்துக்கொண்டுள்ள அன்பர்கள் அனைவரும் இந்த அரிய நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்கலாம்.

தொடர்புக்கும் மேல் விளக்கம் பெறவும்:-
திரு.கிருஷ்ணன் (019-4740959) / திரு.மாறன் (013-4922223)
திருமதி.காளியம்மாள் (04-6265101) / செல்வன் கோபுர கலசம் (013-4050607)

No comments:

Blog Widget by LinkWithin