Tuesday, June 04, 2013

உலகத் தமிழாசிரியர் மாநாடு 2013 - கோலாலும்பூர், மலேசியா

கோலாலம்பூர் பெர்ல் இண்டர்நேசனல் விடுதியில், உலகத் தமிழசிரியர் மாநாடு கோலாகலமாகக் தொடங்கி நடைபெறுகின்றது. இம்மாநாடு சூன் திங்கள் 3 - 5 வரை நடைபெறுகின்றது. "உலகத்தரக் கற்றல் கற்பித்தலை நோக்கி தமிழ் ஆசிரியர்கள்" எனும் கருப்பொருளில் நடைபெறும்  இம்மாநாட்டில் 10 நாடுகளைச் சேர்ந்த 500 பேராளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.


1992ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் தொடங்கிய 'உலகத் தமிழாசிரியர் மாநாட்டு" இடையறாது நடைபெற்று வருவது பாராட்டுக்குரியது. பெருமைக்குரிய நல்லார் சிலர் முயற்சியால், குறிப்பாக அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் பொதுச் செயலாளர் நல்லாசிரிய மாமணி ஈஸ்வரன் ஐயா அவர்கள், அனைத்துலக ஆசிரியர் பேரவைப் பேராளர் இராமநாதன் ஐயா, சிங்கை மாணிக்கம், சாமிக்கண்ணு, கோலாலம்பூர் கோ.இராதாகிருஷ்ணன், பேராசிரியர் முனைவர் என்.எஸ்.இராஜேந்திரன், மலேசியா ஏ.சகாதேவன், நாகரத்தினம், மொரிசியசு புஷ்பரதம், தென்னாப்பிரிக்கா முனுசாமி முதலான எண்ணற்ற ஆசிரியப் பெருந்தகைகளால் வளர்க்கப்பட்ட உலகத் தமிழாசிரியர் மாநாடு இன்று ஆல்போல் வளர்ந்து பரந்து விரிந்து பயந்தருவதைக் காண முடிகின்றது.

தொடர்ந்து 10 தடவை நடந்துவரும் இம்மாநாட்டின் விளைவாகப் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில ஐரோப்பிய நாடுகளில் பண்பாட்டு விழுமியங்கள், தமிழ்க் கல்வி கற்றல் கற்பித்தல் தொடர்பான பயிற்சி வகுப்புகள் - ஒன்றிய அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டு இன்று சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக,உலகத் தரத்தை நோக்கி தமிழ்க்கல்வியை உயர்த்தவும், கணினி தகவல் தொழில்நுட்பம் வழி தமிழ்க்கல்வி பயணிக்கவும் பல்வேறு ஆய்வுப்பணிகள் நடந்துவருகின்றன.

ஏற்கனவே 2ஆம், 6ஆம் மாநாடுகளை ஏற்று நடத்திய மலேசியாவில் இப்பொழுது 10ஆம் மாநாடு வெகு சிறப்புடன் நடைபெறுகின்றது. மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடர்பான புதிய சிந்தனைகள் மிளிரவும் தமிழ்க் கற்றல் கற்பித்தல் புதுப்பொழிவுடன் வளரவும் இம்மாநாடு உதவும் என நம்பப்படுகிறது.
மன்னர் மன்னன்

இன்று நம் தமிழ்மொழியும் தமிழ் ஆசிரியர்களும் தமிழ்க்கல்வியும் எதிர்கொள்ளும் வெல்விளிகள் மிகப் பெரியது. தமிழை முதன்மொழியாகக் கற்கும் காலம் மெல்லென தூர்ந்துகொண்டிருக்கிறது. தமிழர்களே தமிழை இரண்டாம் மொழியாகவோ அல்லது மூன்றாம் மொழியாகவோ கற்க வேண்டிய இக்கட்டான சூழல் உலகம் முழுவதும் உருவாகிக் கொண்டிருக்கிறது. மலேசியாவில் தமிழை முதன்மொழியாகக் கற்கும் வாய்ப்பு கடல்போல் விரிந்து இருந்தாலும், தமிழின் மீதான தமிழ் மக்களின் எண்ணப்போக்கும் எதிர்பார்ப்பும் எதிர்மறையாக இருப்பதைக் காண முடிகிறது. தமிழகத்தில் தமிழ்வழிக் கல்விக்கான வாய்ப்புகள் இந்தித் திணிப்பின் வழியாகவும் ஆங்கில வழிக்கல்வி தாக்கத்தினாலும் சிதைந்து கொண்டிருக்கிறது. இன்னுஞ்சில நாடுகளில் தமிழைப் பேச்சுமொழி என்னும் அளவில் கற்றுக்கொண்டாலே போதுமென்ற சிந்தனைகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன.




 
இப்படியான வெல்விளிகளுக்கு இடையிலும் நெருக்கடிகளுக்கு நடுவிலும் தமிழையும் தமிழ்க்கல்வியையும் வென்றெடுக்கும் தலைமையான திட்டங்களும் தூய்மையான பணிகளும் முன்னெடுக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதற்கு உலகத் தமிழாசிரியர் மாநாடு பெரும் பங்களிக்க முடியும். மேலும், பன்னாட்டுத் தமிழ்க் கல்வியாளர்களிடையே அணுக்கத் தொடர்பும் நுட்பத்திற ஒத்துழைப்பும் ஏற்பட இதுபோன்ற மாநாடுகள் உதவ முடியும். 













முனைவர்  மு.இளங்கோவன், மன்னர் மன்னன், முத்து நெடுமாறன்,  சுப.நற்குணன், இல.வாசுதேவன், கோவி.சந்திரன்     
விரிவுரைஞர் மன்னர் மன்னன் தலைமையில் அமைந்த ஏற்பாட்டுக் குழுவினர் இந்த மாநாட்டை நன்முறையில் நெறிபடுத்தியுள்ளனர். ஏற்பாட்டுக் குழுவினருக்கும் மாநாட்டுப் பேராளர்களுக்கும் 'திருத்தமிழ்' தன் நெஞ்சார்ந்த நல்வாழ்த்தினை அன்பளிக்கின்றது.

@சுப.நற்குணன், திருத்தமிழ்

No comments:

Blog Widget by LinkWithin