Wednesday, April 07, 2010

0:- இது சுழியமா? பூச்சியமா?

“0” இந்த வடிவத்தில் ஓர் எண்ணை எழுதுகிறோமே, அதற்குத் தமிழில் என்ன பெயர்?

பூச்சியம் – சுன்னம் – சுழி – சுழியம் இப்படி பல பெயர்கள் சொல்லுகிறோம். கிரந்த ஆர்வலர்கள் வேறு விதமாகச் சொல்லுகிறார்கள்.

அதனை எப்படி எழுத்தில் கொண்டுவருவது என்று குழப்பமாக உள்ளது. பூஜ்யம் – பூஜியம் – பூஜ்ஜியம் ஆகிய மூன்றில் எது சரி என்று அவர்களேதான் சொல்ல வேண்டும்.


எது எப்படி இருப்பினும் “0”ஐ சுழியம் என்று தமிழில் சொல்லுவதே இனிதாகவும் எளிதாகவும் இருப்பதாக எனக்குப் படுகிறது.

சுழி, சுன்னம் அல்லது பூச்சியம் ஆகிய மூன்றையும்விட சுழியம் என்பது ஏற்புடையதாக இருக்கிறது.

நம் நாட்டில் இந்தச் “சுழியம” பட்ட பெரும் பாடு அறிவீர்களா?

தமிழ் அறிஞர்கள் ஒரு பக்கம் கூடிநின்று “சுழியம்”தான் சரி என்றும், கிரந்தப் பற்றுள்ள அன்பர்கள் “பூ” என்ற எழுத்தில் தொடங்கும் வடிவம்தான் (எது சரியானது என்று தெரியாததால் முதல் எழுத்தை மட்டும் குறிப்பிட்டுள்ளேன்) சரி என்றும் மல்லுக்கு நின்ற காலம் உண்டு.

கல்வித் துறை சார்ந்த ஆசிரியர்கள் “பூ” என்று தொடங்கும் வடிவத்தையே பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் சிலர் எழுதப்படாத சட்டத்தைப் பல கூட்டங்களில் அறிவிப்பு செய்ததாக சிலர் சொல்லிய கதையும் உண்டு.

தமிழ் நாளிதழ்கள் மக்களுக்குப் புரியும்படி எழுதுவதாகப் பறைசாற்றிக்கொண்டு “பூ” என்று தொடங்கும் சொல்லையே பயன்படுத்தினர். இன்றும் அதுதான் நிலைமை. அவர்கள் சுழியத்திற்கு மாறுவதாக இல்லை. காரணம் மக்களுக்குப் புரியாதாம். (ஆனால், அதே நாளிதழ்கள் கடப்பிதழ், அகன்ற அலைவரிசை, இணையம், கையூட்டு போன்ற பற்பல நற்றமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். இவை வாசகர்களுக்கு எப்படி புரிகிறது என்று சத்தியமாக எனக்குத் தெரியாது)

இதுமட்டுமா? இந்தச் சுழியத்தால் நமது மின்னல் பண்பலை வானொலி நிலையத்தில் சுனாமியே ஏற்பட்ட கதையும் இருக்கிறது. சுழியம் என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்திய “மிகக் கடுமையான” குற்றத்திற்காக அதன் ஊழியர்களாக இருந்த அருமையான – ஆற்றல்மிக்க இளம் அறிவிப்பாளர்கள் சிலர் தண்டிக்கப்பட்டார்கள் – அங்கிருந்து தூக்கியெறியப்பட்டார்கள்.

வானொலி நிலைய ஒலிக்கூடத்தில் “சுழியம் என்று அறிவிப்புச் செய்யக்கூடாது” என்று கொட்டை எழுத்தில் சுவரொட்டி எழுதி வைக்கப்பட்டதாக அப்போது கேள்விப்பட்டதுண்டு.

(சுழியம் என்று உச்சரித்த இளம் அறிவிப்பாளர்களுக்குத் தண்டனை வழங்கிய அதிகாரி பிறகு, இருக்கிறாரா? இல்லையா? என்று அரவமே இல்லாமல் காணாமல் போய்விட்டார் என்பது வேறு செய்தி)

இப்படியெல்லாம் சுழியம் சம்பந்தமாக நடந்த கூத்துகள் ஏராளம். அஃது ஒரு காலம். ஆனால், இன்று நிலைமை முற்றிலும் மாறி இருக்கிறது.

“சுழியம்” என்ற சொல் இன்று மக்கள் வழக்கில் மிக இயல்பாக ஆகியிருக்கிறது. முன்பு முடியாது என்று தடைபோட்ட அதே மின்னல் வானொலி இன்று நாள்தோறும் சுழியம்.. சுழியம்.. சுழியம் என்று முழங்கி காற்றலையில் தமிழ்மணம் பரப்புகிறது.

தி.எச்.ஆர் ராகா தனியார் தமிழ் வானொலிகூட சமயங்களில் சுழியம் என்று முழங்குகிறது. குறிப்பாக, சில விளம்பரங்களில் சுழியத்தைக் கேட்க முடிகிறது.

அசுட்ரோ வானவில் பல நிகழ்ச்சிகளில் சுழியத்தைச் சொல்லி பெரிய அளவில் விளம்பரத்தைக் கொடுத்துள்ளது.

இப்படியாக, ஊடகங்கள் முழங்கிய சுழியம் எனும் நற்றமிழை இன்று நாட்டில் மாணவர்கள் தொடங்கி மாண்புமிகு (சிலர்) வரையில் தாராளமாகப் புழங்கி வருகின்றனர். நாளிதழ்களில் சிலர் எழுத்தும் கட்டுரைகளில், குயில், உங்கள் குரல், மயில் முதலான மாத இதழ்களில், கவிஞர்கள் சிலருடைய பாக்களில், உள்நாட்டு நூல்களில், நம் நாட்டிலேயே உருவான கலைச்சொல் அகராதியில், தமிழ் இலக்கிய மேடைகளில் என பல இடங்களில் சுழியத்தைப் பரவலாகக் காண முடிகிறது.

(1992இல் கோலாலம்பூர், ஸ்ரீ கோத்தா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி வெளியிட்ட 'கலைச்சொல் அகர முதலியிலிருந்து எடுக்கப்பட்டது )


இது மிகவும் மகிழ்ச்சிக்குரிய ஒரு வளர்ச்சி எனலாம். இதேபோல இன்னும் முயன்றால் பல நல்லதமிழ்ச் சொற்களை மக்கள் வழக்கில் கொண்டுவர முடியும் என்பதற்கு இது நல்ல சான்றாகும்.

சரி, இந்தச் சுழியம் என்பது பொருத்தமான சொல்தானா? என்று பார்ப்போமா?

சுழி என்ற அடிச்சொல்லுடன் ‘அம்’ என்ற விகுதி சேர்ந்து உருவானதுதான் “சுழியம்”. இது புதிய சொல்லாட்சியாக இருந்தாலும் “சுழி” பழங்காலமாக மக்கள் வழக்கில் உள்ள சொல்தான்.

பிறந்த குழந்தையின் தலையைப் பார்த்து, “இவன் ரெண்டு சுழிக்காரன்; ரெண்டு பெண்டாட்டி கட்டுவான்” என்று பாமர மக்கள் இன்றும் பேசிக்கொள்வதைக் காணலாம். அதேபோல் சுற்றி எழுதும் எழுத்துகளைச் “சுழி” என்று சொல்கிறோம். இரண்டு சுழி “ன”, மூன்று சுழி “ண” என்பது மக்கள் வழக்கு. சுற்றுவதை “சுழல்” என்கிறோம். சுற்றி அடிக்கும் காற்றைச் சுழல் காற்று என்கிறோம். பம்பரம் சுழலும் என்கிறோம்.

ஆக, சுழி என்பது வளைவுக் கருத்துகொண்ட ஒரு சொல் என்பது தெளிவு. ஒரு புள்ளியில் தொடங்கி அப்படியே சுற்றிவந்து அதே புள்ளியை வந்து மீண்டும் அடைவதைச் “சுழி” எனக் குறிப்பிடுகிறோம்.

அந்த வகையில் “சுழியம்” என்பது மிகவும் சரியான சொல்லாட்சியாகவே இருக்கிறது. “0” என்பது ஒரு புள்ளியில் தொடங்கி சுற்றிவந்து அதே புள்ளியில் சேரும் வடிவம்தான். ஆகவே, ‘சுழியத்தையே” அனைவரும் பயன்படுத்துவது நன்று.

ஆயினும், சிலர் இன்னும் விடாப்பிடியாக “பூ” என்று தொடங்கும் சொல்லையே பிடித்துக்கொண்டு தொங்குவதைப் பார்க்கும்போது வருத்தமாகத்தான் உள்ளது.

அதே வேளையில், அந்தப் “பூ” என்று தொடங்கும் சொல்லைப் பயப்படுத்த வேண்டியதற்கான ஏரணமான (Logical) கரணியத்தை (Rational) சொல்லுவதற்கு இயலாமல், தடுமாறும் அவர்களை – நா தளுதளுக்கும் அவர்களை – குரல் கம்மிப்போகும் அவர்களை – திருட்டு முழி முழிக்கும் அவர்களைப் பார்க்கும்போது நம்மால் சிரிப்பை அடக்க முடிவதில்லை.

இப்படிப் பட்டவர்களுக்காக நம் மலேசியப் பாவலர் ஒருவர் எழுதியுள்ள ஒரு பாடலின் சில வரிகளை உங்களுக்கு வாசிக்கத் தருகிறேன்.

பூச்சியந்தான் எல்லாருக்கும் புரியுமாம் – அதைப்
பூந்தமிழில் சுழியமென்றால் சிலருக்குள்ளே எரியுமாம்!
பூச்சியத்தைச் சுழியமென்ற *வானொலி – சில
பூச்சியங்கள் பேச்சைக் கேட்டு மாற்றியதாம் மறுபடி!

தமிழனென்றால் பிறமொழிதான் பிடிக்குமோ – பிள்ளை
தாயைவிட்டு வேறொருத்தி தாள்பணிந்து கிடக்குமோ?
அமிழ்தைவிட அடுப்புக்கரி சுவைக்குமோ – அட
அடுத்தவரின் சரக்கினில்தான் இவனுக்கென்றும் மயக்கமோ!

பிழைப்புக்காகத் தமிழுங்கொஞ்சம் படிக்கிறான் – நல்ல
பெரியவேலை கிடைக்கும்வரை திறமையாக நடிக்கிறான்!
குழப்பம்பண்ணித் தாய்மொழியைக் கெடுக்கிறான் – வெளிக்
குப்பையெல்லாம் தமிழுக்குள்ளே திணிப்பதற்கே துடிக்கிறான்!

வடமொழிதான் இவனையின்னும் ஆளுது – பின்னர்
வந்துசேர்ந்த ஆங்கிலமும் கூடியாட்டம் போடுது!
விடுதலையே இவனுக்கென்றும் இல்லையோ! – இவன்
வேற்றுமொழி அடிமைசெய்ய வேண்டிவந்த பிள்ளையோ!

-கவிஞர் செ.சீனி நைனா முகம்மது

(*) முன்பு வானொலியில் “சுழியம்” தடைசெய்யப்பட்டபோது எழுதியது.

9 comments:

Sathis Kumar said...

சுழியம் என்று கூறாத ஒவ்வொரு தடவையும் தலையில் ’நச்’சென்று என் வகுப்பாசிரியர் தமிழ்க்குயில் ஐயா க.கலியபெருமாள் கைகளில் குட்டுகள் வாங்கிய நினைவு இந்தப் பதிவைப் படித்ததும் வருகிறது.. :)

சுப.நற்குணன்,மலேசியா. said...

@திருத்தமிழ் அன்பர் ஒற்றன்,

உங்கள் பகிர்வுக்கு நன்றி ஒற்றரே..!

தமிழ்க்குயிலார் மாணவரா நீங்கள்? மோதிரக் கையால் குட்டுப்பட்டதால் தான் இன்று இப்படி சொலிக்கிறீர்கள்.

மிக்க மகிழ்ச்சி நண்பரே.

SUMAN said...

சுழியம் என்பதை ஒட்டுமொத் தமிழர்களும் ஏற்றுக்கொள்வதாக இருந்தால் மகிழ்ச்சி

கனடாவிலுள்ள தமிழ் வானொலிகளில் சுழியம் என்றசொல்லே பயன்படுத்தப்படுகிறது.

ஆயினும் சைபர் (சைவர்) என்ற சொல் பயன்படுத்தப்பட்டமைக்கு காரணம் சைவர்கள்தான் அந்த இலக்கத்தை உலகிற்கு வழங்கினார்கள் என்பதற்காகத்தான்..

சுப.நற்குணன்,மலேசியா. said...

@திருத்தமிழ் அன்பர் சுமன்,

//கனடாவிலுள்ள தமிழ் வானொலிகளில் சுழியம் என்றசொல்லே பயன்படுத்தப்படுகிறது.//

கனடாவிலிருந்து மகிழ்ச்சியான தகவலை அளித்தமைக்கு நன்றி.

இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே அன்பரே..!

Vignes Krishnan விக்கினேசு கிருட்டிணன் said...

மக்களுக்குப் புரியும் புரியாது என்று சொல்வதெல்லாம் வெறும் சாக்கு. வேறு ஏதோ காரணம் இருக்கலாம். நல்லதை, சரியானதை மக்களிடம் போய் சேர்க்க வேண்டிய பொறுப்பு இவர்களது. பொதுமக்கள் எல்லாம் பள்ளியில் இருந்தே உருவாகியவர்கள் இல்லையா! ஆக நல்ல தமிழை மாணவச் செல்வங்கள் கற்று விட்டால், இனி புரியும் புரியாது என்ற சிக்கலே இல்லையே!

சாமக்கோடங்கி said...

ஒரு அழகான சொல்லை உபயோகப் படுத்த இவர்களுக்கு என்ன பிரச்சினை..?

சுழியம் - எவ்வளவு அழகான ஆழமான வார்த்தை...

கண்டிப்பாக இது வழக்கிற்கு வரும்.. சிறுவயதில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.. வெட்கமாக இருக்கிறது..

PSS SJK(T) LDG CHERSONESE said...

வணக்கம் ஐயா,

எங்கள் பள்ளியில் எல்லா மாணவர்களும் இயல்பாகவே சுழியம் என்று கூறுகின்றார்கள். எந்த மாணவரும் எழுந்து ' ஐயா சுழியம் என்றால் எனக்குப் புரியாது, அதனால் பூச்சியம் என்றே சொல்லுங்களேன்" என்று கூறியதில்லை.மாணவர்களுக்கே விளங்கும் போது கல்வி அதிகாரிகள் என்ன 'விளங்காதவர்களா' என்ன??

g.mahan said...

வணக்கம். நான் ஒரு கணித ஆசிரியன் என்ற முறையில், சுழியம் என்ற சொல்லின் பயன்பாடு மாணவர் மத்தியில் அதிகமாகவே காணப்படுகின்றது. ஆசிரியர்களும் சுழியம் என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்துவதையும் நம்மால் கேட்க முடிகின்றது. மின்னல் வானொலியிலும் சுழியம் ஒவ்வொரு நாளும் உலா வருகின்றது. ஒரு வேளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதைக் கேட்டிருக்க மாட்டார்கள் போலும்.மொழிக்கு இழுக்கு வாரா புதுமையை ஏற்றுக்கொண்டு தாய்மொழியைப் பாதுகாப்போம்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

@திருத்தமிழ் அன்பர் மகான்,

முதன்முறையாக உங்கள் மறுமொழியைப் பார்க்கிறேன். உங்கள் வருகைக்கு நன்றி.

//.மொழிக்கு இழுக்கு வாரா புதுமையை ஏற்றுக்கொண்டு தாய்மொழியைப் பாதுகாப்போம்.//

சரியான கருத்து; உடன்படுகிறேன்.

தொடர்ந்து வருக.

Blog Widget by LinkWithin